செவ்வாய், 8 அக்டோபர், 2019

தமிழ் மண்ணை பெரியார் மண் என்று ஏன் சொல்கிறோம்? - திரு.மாவளவன்

புரட்சிகரமான கோரிக்கைகளை முன்வைத்து மக்களை அணி திரட்டுகிற வல்லமை தமிழ்நாட்டிற்குத்தான் உண்டு


அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்த பெருமை தந்தை பெரியாரையே சாரும்!


திராவிடர் கழகப் பவள விழா மாநாட்டில்  எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் விளக்கவுரை




சேலம், செப்.30 தமிழ்நாட்டில் வேறு எந்த மாநிலத் திலும் இல்லாத அளவிற்கு, புரட்சிகரமான கோரிக் கைகளை முன்வைத்து மக்களை அணி திரட்டுகிற வல்லமை தமிழ்நாட்டிற்கு உண்டு என்று சொன்னால், அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்த பெருமை தந்தை பெரியார் அவர்களை சாரும். அதனால்தான், தமிழ் மண்ணை பெரியார் மண் என்று நாம் சொல் கிறோம் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்.

திராவிடர் கழகப் பவள விழா மாநாடு


கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி அன்று சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பவள விழா மாநாட்டில்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

வரலாற்று சிறப்பு வாய்ந்த திராவிடர் கழகப் பவள விழா மாநாட்டின் நிறைவரங்கத்தை தலைமை வகித்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,

வெள்ளமெனத் திரண்டிருக்கின்ற இந்தத் தன்மான மறவர் படையினரை வரவேற்று சிறப்பித்திருக்கின்ற திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் மானமிகு அண்ணன் அன்புராஜ் அவர்களே,

முன்னிலை வகித்து இந்நிகழ்வை சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பி னருமான திரு.இராஜேந்திரன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புச்சகோதரர் பார்த்திபன் அவர்களே,

கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.இராஜா அவர்களே, மேற்கு மாவட்டப் பொறுப் பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்களே, தீர்மானங் களை முன்மொழிந்திருக்கின்ற திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்கள் உள்ளிட்ட, திராவிடர் கழகத்தின் முன்னணி தளபதிகளே,

இந்நிகழ்வில் பங்கேற்று நம்மிடையே உணர்ச்சிக ரமாக உரையாற்றி அமர்ந்திருக்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மதிப்புமிகு தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

திராவிட இயக்கப் போர்வாள் புரட்சிப் புயல் அண்ணன் வைகோ அவர்களின் சார்பாக இங்கே வரலாற்று குறிப்புகளையெல்லாம் நினைவூட்டி உரையாற்றி அமர்ந்திருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் அய்யா வழக்குரைஞர் துரைசாமி அவர்களே,

இந்த நிகழ்வில் நம்மிடையே சிறப்புரை ஆற்ற விருக்கின்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் அய்யா காதர் மொய்தீன் அவர்களே,

நிறைவாக நம்மிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையை வழங்கவிருக்கின்ற தலைவர் கலைஞர் அவர்களின் இடத்திலிருந்து, தன்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய தலைவர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே, நன்றியுரையாற்றவிருக்கின்ற கவிஞர் சுப்பிரமணியன் அவர்களே,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் அன்புச்சகோதரர் ஜெயச்சந்திரன் அவ ர்கள் உள்ளிட்ட கட்சியின் முன்னணிப் பொறுப்பா ளர்களே, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கடலென திரண்டிருக்கின்ற தமிழ்ச் சொந்தங்களே, என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகளே!

உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடர் கழகம் தோன்றி,


இன்றைக்கு 75 ஆண்டுகள் ஆகின்றன


திராவிடர் கழகத்தின் பவள விழா - 75 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது. இதே சேலம் மாநகரத்தில், திராவிடர் கழகம் தோன்றி, இன்றைக்கு 75 ஆண்டுகள் ஆகின்றன. ஆசிரியர் அவர்கள் சொன்னார், அந்தத் தீர்மானத்தை இங்கே நிறைவேற்றியபொழுது, 11 வயது சிறுவனாக நான் வந்து அம்மாநாட்டில் பங்கேற்றேன் என்று என்னிடத்திலே சொல்லிக் கொண்டிருந்தார்.

இன்றைக்கு அந்த இயக்கத்தினுடைய தலைவர் பொறுப்பை ஏற்று, தந்தை பெரியார் அவர்கள் இல்லா நிலையிலும், அந்த இயக்கத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வருவதோடு, அதற்கான பவள விழாவை யும் கொண்டாடுகிற ஆற்றல் வாய்ந்த ஒரு மகத்தான தலைவராக, நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் விளங்குவது பெருமையளிக்கிறது.

ஆசிரியர் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து உழைத்துக் கொண்டிருக்கின்ற நம்முடைய கவிஞர்


அத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த மாநாட்டில், நான் பங்கேற்கவேண்டும் என்று, தொலைபேசி மூலமாக திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து உழைத்துக் கொண்டிருக்கின்ற நம்முடைய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் என்னிடத்திலே கேட்டுக்கொண்டார்.

இதைவிட பெருமை திருமாவளவனுக்கு


வேறு என்ன இருக்கவேண்டும்?


உள்ளபடியே நான் ஒரு வார காலம் லண்டனில் சில நிகழ்ச்சிகளுக்கு ஒப்புதல் தந்திருந்தேன். நமது ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, ‘‘அமைப்பாய் திரள்வோம்'' நூல் வெளியீட்டு நிகழ்ச் சிக்காக சென்றிருந்த வேளையில்,  கவிஞர் அவர்கள் தொலைபேசி மூலமாக தமிழர் தலைவர் சொன்னதை என்னிடத்தில் குறிப்பிட்டார். இதைவிட பெருமை திருமாவளவனுக்கு வேறு என்ன இருக்கவேண்டும்? திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் பங்கேற்கின்ற பெருமை - எனவே, உடனடியாக நான் அதற்கு ஒப்புக் கொண்டேன். என்னுடைய நிகழ்ச்சிகள் பலவற்றை ரத்து செய்துவிட்டு, இன்றைக்கு ஓடோடி வந்து உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

அகில இந்திய அளவில் இன்றைக்குத் தமிழ்நாடு தனித்துவத்தோடு விளங்குகிறது என்று சொன்னால், தமிழ்நாட்டிற்கு என்று ஒரு பெருமை, சிறப்பு உள்ளது என்று சொன்னால், அந்த சிறப்புக்கும், பெருமைக்கும் வித்திட்ட பெருமை பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களை சாரும்.

நாடு போற்றும் ஒரு ஆற்றல் வாய்ந்த தலைவர் பேரறிஞர் அண்ணா தமிழ்ச் சமுதாயத்திற்குக் கிடைத் தார் என்றால், அந்தப் பொக்கிஷத்தை நமக்கு வழங்கி யவர் தந்தை பெரியார்.

பேரறிஞர் அண்ணா என்கிற ஒரு மகத்தான ஆளுமை மிக்க தலைவரை தமிழ்ச்  சமூகத்திற்கு அருளிய பெருமை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை சாரும்.

தமிழகத்தில் தன்மானமுள்ள


ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கிறது


அவர்தான், நீதிக்கட்சி மாநாட்டில் தீர்மானத்தை முன்மொழிந்தார் என்ற வரலாறு பதிவாகியிருக்கிறது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில்தான், திரா விடர் கழகம் உதயமானது. அந்தத் திராவிடர் கழகம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் தன்மானமுள்ள ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கிறது.

ஜாதி ஒழிப்புக் குரலா? அது தமிழ்நாட்டில்தான்

சமூகநீதிக் குரலா? அது தமிழ்நாட்டில்தான்

இந்தி எதிர்ப்புக் குரலா? அது தமிழ்நாட்டில்தான்

சமஸ்கிருத எதிர்ப்புக் குரலா? அது தமிழ்நாட்டில் தான்

இந்துத்துவா எதிர்ப்புக் குரலா? அது தமிழ்நாட்டில் தான்.

வட இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மாநில உரி மைக் குரலா? அது தமிழ்நாட்டில்தான்.

நீட் வேண்டாம் என்கிற குரலா? அது தமிழ் நாட்டில்தான்.

நெக்ஸ்ட் தேர்வு வேண்டாம் என்ற குரலா? அது தமிழ்நாட்டில்தான்.

தமிழ் மண்ணை பெரியார் மண் என்று


ஏன் சொல்கிறோம்?


இந்த அளவிற்குத் தமிழ்நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, புரட்சிகரமான கோரிக்கைகளை முன்வைத்து மக்களை அணி திரட்டுகிற வல்லமை தமிழ்நாட்டிற்கு உண்டு என்று சொன்னால், அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்த பெருமை தந்தை பெரியார் அவர்களை சாரும். அதனால்தான், தமிழ் மண்ணை பெரியார் மண் என்று நாம் சொல்கிறோம்.

தமிழ்நாட்டில் இன்னும் முற்றாக ஜாதி ஒழிந்து விடவில்லை.

தமிழ்நாட்டில் இன்னும் முற்றாக சமத்துவம் மலர்ந்துவிடவில்லை.

அதனால் பெரியாரியம் தோற்றுப் போனது -

திராவிடர் கழகம் தோற்றுப் போனது

என்று யாராவது வாதிட்டால், அவர்கள் அரசியல் அறியாமையில் இருக்கிறார்கள் என்றுதான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஜாதி, மத அரசியலை, 75 ஆண்டுகளில்


துடைத்து எறிந்துவிட முடியாது


எல்லாவற்றிற்கும் ஒரு கால இடைவெளி தேவைப் படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக புரை யோடிப் போயிருக்கிற, முடைநாற்றம் வீசிக் கொண் டிருக்கின்ற இந்த ஜாதி, மத அரசியலை, 75 ஆண்டு களில் துடைத்து எறிந்துவிட முடியாது என்பதுதான் நாம் அறியவேண்டிய அறிவியல் உண்மை.

அதற்கு இன்னும் காலம் தேவைப்படுகிறது; இன் னும் உழைப்புத் தேவைப்படுகிறது; இன்னும் போராட விருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ளவேண்டுமே தவிர, 75 ஆண்டுகளில், இது நிறைவேறவில்லையே, ஈடேறவில்லையே என்று திராவிடர் கழகத்தின்மீது நாம் விமர்சனம் வைக்க முடியாது. சிலர் அப்படிப்பட்ட விமர்சனங்களை, தன்னுடைய அரசியல் புரிதலில் இருந்து வைக்கிறார்கள். அது அவர்களின் அரசியல் புரிதலின் குறைபாட்டை உணர்த்துகிறதே தவிர, அது உண்மையாய் திராவிடர் கழகத்தின்மீதான விமர்ச னமாக இருக்க முடியாது. அது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் முன்வைக்கக்கூடிய அவதூறு என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

பொருளாதாரத்தால் தன்னிறைவு பெற்ற


ஒரு குடும்பத்திலிருந்து பிறந்தவர் தந்தை பெரியார்


தந்தை பெரியார் தோன்றியிருக்காவிட்டால்,

திராவிடர் கழகம் இல்லாமல் இருந்திருந்தால்,

கற்பனை செய்து பாருங்கள். ஒருவேளை பெரியார் அவர்கள் பதவி ஆசை பிடித்தவராக இருந்திருந்தால், காங்கிரசு கட்சியிலேயே நீடித்து இருந்திருக்க முடியும். காங்கிரசு கட்சியிலேயே இருந்திருந்தால், அவர் அடைய முடியாத பதவிகளையெல்லாம் அடைந் திருக்க முடியும்; தொட முடியாத உச்சத்தையெல்லாம் தொட்டிருக்க முடியும். நுகர முடியாத அதிகாரத்தை யெல்லாம் நுகர்ந்திருக்க முடியும். அதற்கான வாய்ப் புகள் ஏராளம் இருந்தன; ஏனென்றால், காங்கிரஸ் அப்பொழுது மேல்நோக்கி வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நேரம் அது. பிரிட்டிஷ் ஆட்சியை விரட்டிவிட்டு, தேசிய அளவிலான ஒரு தேசிய உளவியல் கட்டமைக்கப்பட்டு இருந்த வேளையில், காங்கிரஸ் ஒன்றுதான் இந்திய மக்களைப் பாதுகாக் கின்ற அரண் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளை யில், நம்பிக் கொண்டிருந்த வேளையில், எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் பேரியக்கம் ஓகோவென்று வளர்ந்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டி ருந்த வேளையில், பதவிதான் முக்கியம் என்று எண்ணியிருந்தால், கருதியிருந்தால், நம்பியிருந்தால், தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்தி ருக்க முடியும். ஒருவேளை அவர் காங்கிரஸ் கட்சியி லேயே நீடித்திருந்தால், இராஜாஜி அவர்களைப்போல, மிக உயர்ந்த பதவியை, அகில இந்திய அளவில்கூட அவரால் பெற்றிருக்க முடியும்.

ஏன்? பெருந்தலைவர் காமராசரைப் போல தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் கூட வந்திருக்க முடியும். எந்த உயர்ந்தப் பதவிக்கும் செல்லக்கூடிய அளவிற்கு அவருக்கு செல்வாக்கு இருந்தது. அவர் ஒரு ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. அவர் அன்றாடம் காய்ச்சியின் குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. அன்றன்றைக்கு ஓடியாடி உழைத்தால்தான், கஞ்சி காய்ச்சிக் குடிக்க முடியும் என்கிற நிலையிலே, ஒரு கூலி விவசாயின் குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. அல்லது ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின், சமூகக் கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் குடும் பத்தில் பிறந்தவர் அல்ல. தெளிவாகச் சொல்லவேண் டுமானால், தீண்டாமைப் போன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்ற குடும்பத்தில் இருந்துதோன்றி யவர் அல்ல.

அவர் பிறப்பால், ஒரு ஆதிக்கம் செய்யக்கூடிய குடும்பத்தில் பிறந்தவர். பொருளாதாரத்தால் தன்னி றைவு பெற்ற ஒரு குடும்பத்திலிருந்து பிறந்தவர். அதிகாரத்தை நுகரக் கூடிய அளவிற்கு அரசியலில் செல்வாக்குப் பெற்று விளங்கிய ஒரு நபராகவும் தன்னை பொதுவாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டவர்.

அடித்தட்டு மக்களுக்காக உழைப்பதற்கு என்று ஒரு இயக்கம் கண்டார்


இத்தனை இருந்தும் அவர் எல்லாவற்றையும் உதறி எறிந்துவிட்டு, அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, அடித்தட்டில் இருக்கின்றவர்களை உற்றுப் பார்க்கிறார்;  எளியவர்களின் வாழ்க்கையை உற்று நோக்குகிறார். சமூகக் கொடுமைகளுக்கு உள்ளாகக்கூடியவர்களின் விடுதலைக்கு என்ன வழி? என்று சிந்தித்துப் பார்க்கிறார். அதனால்தான், அதிகாரம் வேண்டாம்; பொருள் வேண்டாம்; புகழ் வேண்டாம்; ஆதிக்கம் வேண்டாம்; ஆணவம் வேண் டாம் என்று அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு, அடித்தட்டு மக்களுக்காக உழைப்பதற்கு என்று ஒரு இயக்கம் கண்டார் - அதுதான் திராவிடர் கழகம்.

அதுதான், இன்றைக்கு திருமாவளவன் என்கிற ஒரு மான உணர்ச்சியுள்ளவனை, தன்மான உணர்ச்சி உள்ளவனை உருவாக்குவதற்கான ஒரு களத்தை அமைத்தது என்று நான் பெருமையோடு சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

அடித்தளம் அமைத்தது திராவிடர் கழகம்


புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் என்கிற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளை உள்வாங்கிய ஒருவனாக நான் இந்தக் களத்தில் நின்றாலும், மார்க்சியம் போன்ற ஒரு மகத்தான சமூக  அறிவியலைப் புரிந்துகொள்ளக் கூடியவனாக நான் என்னை ஆளாக்கிக்கொண்டாலும், அவற்றையெல் லாம் அறிந்துகொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும்,  தேடிப் படிப்பதற்கும், கற்பதற்கும், தன்மானத்தைப் பெறுவதற்கும், துணிச்சலாய் நின்று தலைநிமிர்ந்து நடப்பதற்கும் எனக்கு இந்த மண்ணிலே ஒரு வழி உருவானது என்றால், அதற்கு அடித்தளம் அமைத்தது திராவிடர் கழகம். இந்த வரலாற்றை வேண்டுமென்றே திட்டமிட்டு மூடி மறைப்பதற்கு சிலர், இன்றைக்கு அல்ல, இது தோன்றிய காலத்திலிருந்து நடந்து வருகிறது.

தந்தை பெரியாரை வீழ்த்திவிட்டால், திராவிட உணர்ச்சியை வேரறுத்துவிட முடியும்; திராவிடத்தை வேரறுத்துவிட முடியும் என்பதுதான் மனுதர்ம வாதிகளின் கணக்கு. அதுதான் மனுதர்ம அரசியலின் கணக்கு. திராவிடம் என்பது ஒரு கோட்பாடு என்ற அடிப்படையிலே யாரும் முன்மொழியவில்லை.

பிரிட்டிஷ் இந்தியா வேறு;


சமஸ்டி இந்தியா வேறு


பிரிட்டிஷ் ஆண்டுகொண்டிருந்த காலத்தில், இந்த தேசம் ஒரே தேசமாக இருந்ததா? பிரிட்டிஷ் இந்தியா வேறு; சமஸ்டி இந்தியா வேறு. இந்தியா முழுவதும் பிரிட்டிஷ்காரனுடைய ஆட்சி நிர்வாகம் இல்லை. மதராஸ் பிரசிடென்சி, பாம்பே பிரசிடென்சி, கொல் கத்தா பிரசிடென்சி என்று வெள்ளைக்காரனின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை, சென்னை மாகாணம், மும்பை என்று அழைக்கப்படுகின்ற அன்றைய பம்பாய் மாகாணம், கொல்கத்தா என்று அழைக்கப்படுகின்ற அன்றைய கல்கத்தா மாகாணம், அந்த சென்னை மாகாணத்திற்குள்ளே தமிழர்கள் மட்டுமல்ல, தெலுங்கு பேசுகிற மக்களும் இருந்தார்கள்; கன்னடம் பேசுகின்ற மக்களும் இருந்தார்கள்; மலை யாளம் பேசுகின்ற மக்களும் இருந்தார்கள்.

இந்தியா முழுவதும் 640-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன


ஆகவே, மதராஸ் பிரசிடென்சி என்பதே, சென்னை மாகாணம் என்பதே, தென்னிந்திய மொழி களைப் பேசுகிற, திராவிட மொழிகளைப் பேசுகிற, மக்கள் அனைவரும் சேர்ந்து வாழ்ந்த பகுதி. இதற் குள்ளே திருவிதாங்கூர் மகாராஜாவின் கட்டுப்பாட் டிலிருந்த பகுதி, பிரிட்டிஷ் இந்திய பகுதியல்ல;  அய்தராபாத் நிஜாம் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி, பிரிட்டிஷ் இந்திய பகுதியல்ல; மைசூர் மகாராஜாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்குக் கீழே இருந்த பகுதியல்ல. இதுபோல, இந்தியா முழுவதும் 640-க்கும் மேற்பட்ட சமஸ் தானங்கள் இருந்தன.

எனவே, சமஸ்டி இந்தியா என்பது வேறு; அய்தராபாத்  நிஜாம் என்பது பிரிட்டிஷ் இந்தியா அல்ல, சமஸ்டி இந்தியா. திருவிதாங்கூர் மகாராஜாவின் கட்டுப்பாட்டில் இருந்ததே, இன்றைய நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் அவையெல்லாம் மகா ராஜாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி, அது சமஸ்டி இந்தியா பகுதி.

மைசூர் மகாராஜாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி, பிரிட்டிஷ் இந்தியா பகுதியல்ல, சமஸ்டி இந்தியப் பகுதி. இப்படி சொல்லிக் கொண்டே போக முடியும்.

640-க்கும் மேற்பட்ட அந்த சமஸ்தானங்கள் வேறு; பிரிட்டிஷ் ஆட்சி நிர்வாகத்தின்கீழ் கட்டுப்பட்டிருந்த பகுதிகள் வேறு.

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 30 .9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக