உச்சநீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உச்சநீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 அக்டோபர், 2024

உச்சநீதிமன்றத்தின் இரு வேறு கருத்துகள் பற்றிய திராவிடர் கழகத் தலைவரின் முக்கிய அறிக்கை


Published October 22, 2024
விடுதலை நாளேடு

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள அடிக்கட்டுமான மதச் சார்பின்மை, சோசலிசம் ஆகியவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாதங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதைக் குறித்தும், கடவுளைக் கேட்டு தான் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்புக் கூறினேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ள கருத்து சட்டப்படி சரியானதல்ல – வருங்காலத்தில் கடும் விமர்சனத்துக்கு உரியது என்பதைச் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

அரசியல் சட்டத்தின் முகப்புரையில் உள்ள ‘மதச் சார்பின்மை‘ (Secular), ‘சமதர்மம்‘ (Socialist) போன்ற வார்த்தைகளை நீக்க வேண்டுமென்று சு.சாமி என்பவரும், மற்றிருவரும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு வந்து, ‘‘அச்சொற்கள் ஏற்கத்தக்கவையல்ல; காரணம் அரசியல் சட்டத் திருத்தத்தால் பிறகு சேர்க்கப்பட்ட சொற்கள்’’ என்ற அவர்களது வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்காமல் நிராகரித்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின்
மதச் சார்பின்மை பற்றி

உச்சநீதிமன்றத்தின் உறுதியான தீர்ப்பு!

அரசியல் சட்ட உருவாக்கக் குழுவில் அதன் தலைவர் டாக்டர் அம்பேத்கர், அவ்வார்த்தை இடம் பெறாவிட்டாலும் இந்திய அரசியல் அமைப்பு மதச்சார்பற்ற ஒன்று என்று தெளிவாகவே கூறியுள்ள பிறகும் – இம்மாதிரி வழக்காடிகள் வருங்காலத்தில் வரக் கூடும் என்பதை எதிர்பார்த்தே – பிறகு 42ஆவது சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டது மட்டுமல்ல; முன்கூட்டியே அது இருந்ததற்கான சட்டத் தகுதியும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத் திருத்தங்கள் சுமார் 100க்கு மேல் வந்து நிறைவேற்றப்பட்டு அமலாகி வரும் நிலையில், அவைதானே இன்றும் இனியும் சட்டமாகக் கருதப்பட வேண்டியது என்பது அரசியல் சட்டத்தின் பாலபாடமல்லவா?

அது மட்டுமா? முகப்புரை என்பது நமது அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானம் (Basic Structure of the Constitution) என்று உச்சநீதிமன்றம் முந்தைய தீர்ப்புகள் மூலம் உறுதி செய்துள்ளது.

‘மதச்சார்பின்மையை நீக்கி விட்டு, இந்திய அரசியல் அமைப்பினை – ஒரு மதச்சார்பான இந்து நாடாக்க முயலும் பேர்வழிகளே இப்படி குறுக்கு வழியில் முயற்சி எடுக்கின்றனர். இதுபற்றி விரிவான விவாதம் அரசியல் சட்ட அமைப்புக் குழுவில் பல முறை நடந்துள்ளது.
பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வோர் ‘கடவுள்‘ பேரால் எடுப்பது போல, ‘உளப்பூர்வமாக‘ (Affirm) எடுத்துக் கொள்ளும் உரிமையும் தரப்பட்டிருப்பதே அதற்கு ஒரு கூடுதல் சான்றாகும்!

பன்மதங்கள், பல கலாச்சாரம் – பண்பாடுகள், பல மொழிகள், பல நாகரிகங்கள் உள்ள ஒரு பரந்து, விரிந்த நாட்டில் ‘‘ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’’ என்பதே – அரசியல் சட்ட முகப்புரையில் குறிப்பிட்டுள்ள Democratic Republic என்பவற்றின் முக்கிய நோக்கத்தினைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்குவது அல்லவா? இது யதேச்சதிகாரத்திற்கும் மற்ற மக்களின் ஒடுக்கு முறைக்கும் தானே வழி வகுக்கும் – மதச் சார்பு நாடுகளில் மற்ற சிறுபான்மையினரின் உரிமைகள் காணாமற் போய் தானே உள்ளது.

மதச் சார்பற்ற நாட்டிலேயே சிறுபான்மையினர் தங்களது வாழ்வுரிமையை பாதுகாக்கப் போராட வேண்டித் தானே உள்ளது? எனவே மதச்சார்பின்மை முக்கியம்!

அதுபோலவே சோஷலிசத்தை வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆக்கி விட்டனர். இப்படி ஓர் அம்சம் அரசின் அடிக்கட்டுமானமாக உள்ளபோதே இந்நிலை என்றால் அதையும் நீக்கி விட்டால் எத்தனைப் பேரவலம்!

ஹிந்துத்துவா பேசுவோர், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் தானே, அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தகர்த்து விட்டு, எடுத்து எறிந்து விட்டு அந்த இடத்தில் மனுதர்மத்தை அமர வைக்கும் முயற்சியின் முன்னோட்டம் தான் இது என்பதை நாடும், உச்சநீதிமன்றமும் உணர்ந்து, தாங்கள் பிரமாணம் எடுத்த அரசியல் சட்டத்தை உருக்குலைக்க அனுமதிக்கக்கூடாது!

‘‘கடவுளைக் கேட்டுதான் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கினேன்‘‘ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியிருப்பது சட்டப்படி சரியானதா?

அதே நேரத்தில் வழக்காடிகள் இப்படி அரசியல் சட்டத்தைச் செயலற்றதாக்க முயற்சிக்கும் நிலையில் ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் தலைமை நீதிபதி திடீரென்று ‘‘நான் பாபர் மசூதி வழக்கைத் தீர்க்க கடவுளிடம் கேட்டு, வேண்டியே அதன்படி தீர்ப்பு தந்துள்ளேன்’’ என்ற கருத்துப்படக் கூறியது எவ்வளவு விசித்திரமும், அரசியல் அடிக்கட்டுமானத்திற்கு விரோதமான நகை முரணும் என்பதை இன்று பல பேரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். பதவி ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில் இப்படி ஒரு சார்பு நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போல நடந்து கொள்ளுதல் சரியா? பிள்ளையார் சதுர்த்திக்கு டில்லியில் பிரதமர் மோடியைத் தமது வீட்டுக்கு அழைத்து பூஜையில் கலந்து கொள்ளச் செய்தது – மற்றபடி திருப்பதி, மதுரை மீனாட்சி கோயில்களுக்கு செல்வதெல்லாம் அவர்களது தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். அவர்களது வழிபாட்டுரிமையில் நமக்கு ஆட்சேபனை இல்லை! –

ஆனால், அவர்களுக்கான அங்கே தரப்பட்ட வரவேற்பு, பாதுகாப்பு ஏற்பாடு எல்லாவற்றுக்கும் அவரது பதவிதானே காரணம் என்பது எதார்த்தம்.
பாபர் மசூதி – ராமர் கோயில் தீர்ப்பே ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பு – லட்சக்கணக்கான வழக்குகள் தேக்கத்தில் இருக்க, அதற்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமை, காட்டப்பட்ட வேகம் எல்லாம் எதிர்காலத்திலும் கேள்விக்கும், பரிசீலனைக்கும் உள்ளாகாமல் இருக்க முடியாத ஒன்று.

நீதித்துறை வேலிகள் வேலிகளாக இருக்க வேண்டும். வேலிகள் பயிரைக் காப்பதற்கே – வேலிகள் பயிரை மேய்வதற்கு அல்ல என்பது மறுக்க முடியாத உண்மை!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
22.10.2024

திங்கள், 8 ஜனவரி, 2024

உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு! தமிழர் தலைவர் வரவேற்பு


திங்கள், 15 பிப்ரவரி, 2021

தந்தை பெரியாரின் கருத்துகள் காலத்தை வென்றவை: ஜாதிக் கலவரங்களைக் குறைக்க, ஜாதியை ஒழிக்க ஜாதி மறுப்புத் திருமணங்களே - கலப்பு திருமணங்களே சிறந்த தீர்வு


உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை வரவேற்கிறோம் - பாராட்டுகிறோம்

ஜாதிக் கலவரங்களைக் குறைக்க, ஜாதியை ஒழிக்க ஜாதி மறுப்புத் திருமணங்களே -  கலப்புத் திருமணங்களே சிறந்த தீர்வு என்று உச்சநீதிமன்றத்தில்  வந்துள்ள இறுதித் தீர்ப்பை பாராட்டுகிறோம் - வரவேற்கிறோம் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்யும் இளைய தலைமுறைக்கு இனிப்பான, வரவேற்று மகிழத்தக்க இரண்டு செய்திகள் வெளி வந்துள்ளன இந்நாளில்!

ஒன்று: ஜாதிக் கலவரங்களைக் குறைக்க, ஜாதியை ஒழிக்க  ஜாதி மறுப்புத் திருமணங்களே - கலப்புத் திருமணங்களே சிறந்த தீர்வு என்று உச்சநீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு ஒன்று வெளியாகியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

பெங்களூருவிலிருந்து டில்லிக்கு வந்த ஒரு எம்.பி.ஏ. படித்த மாணவி, ஒரு எம்.டெக் படித்த உதவிப் பேராசிரியரை விரும்பி திருமணம் செய்து கொண்டது தொடர்பான வழக்கொன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்துத் தீர்ப்புக் கூறியவர் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் சஞ்சய்கிஷன்கவுல் அவர்கள் ஆவார்.  (அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் நீதிபதியாக இருந்தவர்; அத்துடன் தி.மு.க. ஆட்சியில் அறிஞர் அண்ணா முதலமைச்சராக வந்து நிறைவேற்றிய  தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாக்கும் இந்து சட்டத் திருத்தத்தை எதிர்த்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அச்சட்டம் செல்லாது என்று வழக்குரைஞர் ஒருவரை விட்டு வழக்குப் போட வைத்தனர். அச்சட்டம்  செல்லும் என்று தீர்ப்பு வழங்கி வரலாறு படைத்தவர் இதே நீதிபதி ஜஸ்டீஸ் சஞ்சய் கிஷன்கவுல் அவர்கள். அவருடன் அமர்வில் ஜஸ்டீஸ் சிவஞானம் அவர்களும் இடம் பெற்று அந்தத் தீர்ப்புக்குக் காரணமானவர் என்பது நினைவு கூரத்தக்கது).

புரட்சியாளர் அம்பேத்கர்  கருத்து....

"ஜாதி மறுப்புத் திருமணங்களால் மட்டுமே ஜாதியை ஒழிக்க முடியும்" என்ற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தை அத்தீர்ப்பில் வெளிப்படையாக நீதிபதி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

1936இல் பஞ்சாப்பில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு சங்க மாநாட்டில், ஜாதியை ஒழிக்க வழிகோலும் தமது தலைமை உரையை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. சில பகுதிகளை நீக்க, மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கூறியதால், அதனை டாக்டர் அம்பேத்கர் திட்டவட்டமக மறுத்து விட்டார்; தந்தை பெரியார் இதனைக் கேள்விப்பட்டு, அப்போதே அம்பேத்கருடன் கடிதப் போக்குவரத்து நடத்தி அந்த ஆங்கில உரையை வரவழைத்து, "ஜாதியை ஒழிக்க வழி" என்ற தலைப்பில் 4 அணாவுக்கு 1936இல் புத்தகத்தை வெளியிட்டார். இந்தியாவில் டாக்டர் அம்பேத்கரின் ஆங்கில நூல் தமிழில்தான் தந்தை பெரியாரின் முயற்சியில் முதல் பிறமொழி ஆக்க நூலாக வந்தது என்பது வரலாறு படைத்த செய்தியாகும்!

தீர்ப்பின் இரண்டு முக்கிய அம்சம்

இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இரண்டு முக்கிய அம் சத்தை மத்திய, மாநில அரசுகள் பார்க்கத் தவறக் கூடாது.

காவல்துறையும் வழக்கமான 'வழ வழ கொழ கொழா' கட்டப் பஞ்சாயத்து செய்வதுபோலவே நடந்து கொள்ளுகின்றது. வயது வந்தோர் தங்களது துணையைத் தாங்களே தேர்வு செய்யும் பக்குவம் பெற்றவரே என சட்டமே ஒப்புக் கொள்ளும் நிலையில், "உங்கள் பெற்றோர் சம்மதம் இருக்கிறதா?" என்று கேட்பதும், குறிப்பாக பெண்களிடம் "உங்கள் பெற்றோருடன் நீங்கள் சென்று விடுங்கள்" என்று காவல்துறை அதிகாரிகள் அறிவுரை என்று வழிகாட்டுவதும் அதிகப் பிரசங்கித்தனம் மட்டுமல்ல; சட்ட விரோத அடவாடித்தனமும் ஆகும்!

மனப்பக்குவ அறிவுரைப்

பயிற்சி அளிக்க வேண்டும்

 அதுபற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதோடு, அத்தகைய மனப்பாங்குள்ள காவல்துறையினருக்கு "நல்ல மன வளப் பயிற்சி தரும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விசாரணை அதிகாரிகளுக்கு மனப்பக்குவ அறிவுரைப் பயிற்சி அளிக்க வேண்டும். சமூக ரீதியான உணர்ச்சி பூர்வ வழக்குகளாக வரும் இவற்றை மனோதத்துவ ரீதியில் எப்படி சிறப்பாக எதிர் கொள்ளுவது என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

வயது வந்தோர் ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முழு உரிமை சட்டப்படி உள்ள நிலையில் - மண ஒப்பந்தத்தில் இருவர் முழு மனதோடு ஈடுபட்ட நிலையில் பெற்றோரின் ஒப்புதலோ, அந்த ஜாதியினரின் ஒப்புதலோ, குடும்பத்தின் ஒப்புதலோ தேவையற்ற ஒன்று என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு வலியுறுத்தியுள்ளது  - வைர வரிகள்.

தந்தை பெரியார் கருத்துகள்

சரித்திர சான்று!

தந்தை பெரியார் பல ஆண்டுகளுக்கு முன் ஆணியடித்தது மாதிரி சொன்னார்: 'மூன்றாம் நபர் இந்த ஒப்பந்தத்தில் குறுக்கிடுவதே அதிகப் பிரசங்கித்தனம்' என்றார். அக்கருத்து உச்சநீதிமன்றத்தில் அப்படியே இன்று தீர்ப்பாகப் பிரதிபலிக்கிறது. பெரியார் கருத்துகள் காலத்தை வென்றவை என்பதற்கு சரியான சரித்திர சான்று அல்லவா! இந்த தீர்ப்பை பாராட்டுகிறோம்; வரவேற்கிறோம்.

தமிழ்நாடு அரசும் ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய் அல்லது தந்தை ஜாதியை (இடஒதுக்கீடு அல்லது பிற வாய்ப்புகளுக்கு மட்டும் பயன்பட) தேர்ந்தெடுத்துக் கொள்ள ஓர் ஆணையின் மூலம் தேர்வு செய்யும் உரிமை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. (G.O. MS. No8 - dated 9.2.2021  பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை) இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

முன்பு தி.மு.க. ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோதே இப்படி ஒரு சுற்றறிக்கை வெளிவந்ததை புதுப்பிப்பதாகவே இது அமைந்துள்ளது.

இந்த கால கட்டத்தில்

இது முக்கியமானதும்கூட!

மேலே கண்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையே இனி மேலும் "ஜாதி ஆணவக் கொலைகள்" நடைபெற இடம் தராது. தமிழ்நாடு காவல்துறை ஒரு தனிப்பிரிவையே

(க்யூ பிரான்ஞ்ச் மாதிரி) உருவாக்குதல் அவசர, அவசியமானதாகும். ஜாதி மறுப்புத் திருமண வாழ்விணையர்களுக்குப் பாதுகாப்பும், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமையும் தருவது ஜாதிஒழிப்பை விரைவுபடுத்த மேலும் உதவக் கூடும் என்பதால் மத்திய - மாநில அரசுகள் இதனை முக்கியமாகக் கருதி செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.


கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

13-2-2021