வியாழன், 3 அக்டோபர், 2019

பாஸ்டனில் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் சார்பில் அய்யா விழா

‘‘என்னால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் விசையிலிருந்து உலகத்திற்கே அதன் பலாபலன்கள் பரவும்!''


தந்தை பெரியாரின் இந்தக் கருத்தை எடுத்துக்காட்டி  பாஸ்டனில் தமிழர் தலைவர் சங்கநாதம்




பாஸ்டன், அக்.3  தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் பலன்கள் உலகம் முழுவதும் சென்றடையும் என்று தந்தை பெரியார் கூறிய கருத்தினை எடுத்துக்காட்டி பாஸ்டனில் கடந்த 29.9.2019 ஆம் தேதி பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட விழாவில், ‘‘வாழ்நாள் சாதனை யாளர்'' விருது பெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

‘‘பெரியார் என்ற போர்க் கருவி''


29.9.2019 அன்று பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தில், ‘‘பெரியார் என்ற போர்க் கருவி'' என்ற தலைப்பில் உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர்.

அவரது உரை வருமாறு:

தமிழர் தலைவர் உரை


அருமைத் தோழர்களே, அனைவருக்கும் வணக்கம்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் நமக்கு புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல,

ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி

அவர் அணிந்திராத அணியாவார்

அறிந்திராத அறிவாவார்

என்று சொன்னார்.

எனவே, ஆயிரம் ஆண்டுகளில் கிடைக்க முடியாத ஒரு தனிப்பெரும் தலைவர், வழிகாட்டி, புரட்சியாளர் பெரியார் என்ற அந்த மாபெரும் அறிவாசான் தன்னு டைய வாழ்நாளிலே சாதித்துக் காட்டியது என்பது வியக்கத்தக்க ஒன்றாகும்.

சுயமரியாதை இயக்கம் கண்ட ஞானசூரியன்


மற்ற தலைவர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு தனிச் சிறப்பு தந்தை பெரியாரைப் பொறுத்தவரையில் அவர் கள் பெரிய அளவிற்கு பல்கலைக் கழகப் பட்டங்களைப் பெற்றவரல்ல. ஏன்? கல்லூரி வாசல்களுக்குக்கூட சென்றவரில்லை. அதைவிட, பள்ளிகளுக்கே செல் லாமல், திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்போடு முடித்துக்கொண்ட ஒரு மாமனிதர் ஒப்பற்ற சுயசிந்தனையாளராக தன்னை மாற்றிக்கொண்டு, தன்னை ஆக்கிக்கொண்டு, உருவாக்கிக்கொண்டு, தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு, தன் குடும்பம் என்ற அளவில் வாழாமல், உலகமே தன்னுடைய எல்லை - மானுடமே தன்னுடைய விரிந்த பார்வை - எனவேதான்,

அகண்ட பார்வையால் விழுங்கு உலகத்தை -

அறிவு விரிவு செய், அகண்ட மாக்கு

என்ற அந்தத் தத்துவத்தை, மனித குலத்திற்குப் போதிப்பதையே தன்னுடைய வாழ்நாள் பணியாக ஆக்கிக் கொண்டவர். அவர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். பெரிய அளவிற்கு உள்ளூரிலே மதிக்கப் பட்டவர்.

இதுவரையில், எந்தத் தலைவருடைய வாழ்நாளிலும் கேட்டிராத ஒரு அற்புதமான ஒரு வாய்ப்பை, நம்முடைய அறிவாசான் சுயமரியாதை இயக்கம் கண்ட ஞானசூரியன் தெளிவாகப் பெற்றார்கள்.

அந்த வாய்ப்பு என்னவென்றால், அவர்கள் ஈரோட்டிலே செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து, சிறந்த ஒரு வணிகராகத் திகழ்ந்து, வணிகர் சங்கத்திற்கே ஒரு பெரிய தலைவராகி, 1916 இல் ஒரு அறக்கட்டளை போன்று உருவாக்கித் தந்தவர் அந்தக் காலகட்டத்தில், ஒரு நிறுவனத்தை உருவாக்கித் தந்தவர்.

நாணயம் அவரது வாழ்க்கையின் நடைமுறையாக இருந்தது. அவர்கள் எதைச் சொன்னாலும், அதிலிருந்து அவர் மாறியதில்லை.

வயதில் அறிவில் முதியார்

வாய்மைப் போருக்கு என்றும் இளையார்

உயர் எண்ணங்கள் மலரும் சோலை

என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்கள் அல்லவா! வாய்மைப் போர் என்பது அவருக்குப் பொதுவாழ்க்கையில் வந்த பிறகு அமைந்ததில்லை. இயல்பாகவே, அதுதான் அவர் ஒரு விசித்திர மாமனிதர் என்று நாம் சொன்னோம். இயல்பாகவே, அவர் அதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

தன்னுடைய தந்தையாரை அவர் மிகப்பெரிய அளவிற்கு நேசித்தவர் என்றாலும், இவருடைய சிறந்த ஆற்றலினாலே, சிறுவயதிலே, தந்தை பெரியார் அவர்கள் ஈ.வெ.ராமசாமியாக இருந்த நேரத்தில், மஞ்சள் மண்டி வியாபாரம் செழித்தோங்கிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், தந்தையாரே பார்த்து, வெங்கட்ட நாயக்கர் மண்டி என்று பெயர் இருந்ததை, ராமசாமி மண்டி என்று இளைய பிள்ளைக்காக ஆக்கினார். மூத்த பிள்ளை கொஞ்சம் செலவாளி. அவ்வளவு அதிகமாக இவரைப் போல் பொறுப்பாகவும், அதேநேரத்தில், வாணிபத்தை மிகச் செழிப்பாகவும் நடத்தக்கூடிய ஆற்றல் இந்த அளவிற்கு இல்லை என்று அடையாளம் கண்டு சொன்ன நேரத்தில், தங்களுடைய சொத்துக் களையெல்லாம் பாதுகாக்க, பெருமுயற்சி எடுத்து, அதனை விரிவுபடுத்திய தந்தை பெரியார் அவர்களு டைய வாழ்நாளில் ஒரு செய்தி இருக்கிறது.

பெரியார்மீது மோசடிப் புகார்!




தந்தைக்குப் பதிலாக மகன் அந்தப் பணியை செய்கின்ற காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு என்ன வென்றால், தந்தையினுடைய கையெழுத்தை சில நேரங் களில், அவருடைய காசோலையில் கையெழுத்தைப் போடுவது வழக்கம்; அக்காலத்தில் அது சர்வ சாதாரணம்தான்.

ஆனால், அதை ஒருவர், இவருடைய அரசியல் எதிரியாக உள்ளூரில் இருக்கக்கூடிய ஒருவர் அதனைப் பயன்படுத்தி, கையெழுத்தை மாற்றிப் போட்டு இருக்கிறார்; மோசடி செய்திருக்கிறார் என்ற குற்றச் சாட்டை சுமத்தி, இவர்மீது புகார் கொடுத்தார்.

அதனால், இவர் நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது. கிரிமினல் குற்றத்திற்காக நீதிமன்றத்திற்கு, அதுவும் இவ்வளவு பெரிய செல் வந்தருடைய பிள்ளை, அதுவும் ஊரிலேயே எல்லோ ராலும் மதிக்கக்கப்படக்கூடிய பிள்ளை செல்கிறார் என்றவுடன், அவருடைய தந்தையார் கண்ணீர்விட்டு அழுகிறார். அது ஒரு அவமானம். எனவே, தங்களுடைய தகுதிக்கு மிகக்குறைவு. அதுவும் மோசடிக் குற்றத்திற்காக தன்னுடைய பிள்ளை நீதிமன்றத்திற்குச் சென்றார் என்றால், அது மிகப்பெரிய கொடுமை என்று சொல்லக் கூடிய அந்தக் காலகட்டத்தில்,

கையெழுத்து  என்னுடையது அல்ல


என்று மட்டும் சொன்னால் போதும்


ஒரு பிரபலமான வக்கீலை, ஒரு பார்ப்பன வக்கீலை, அந்தக் காலத்தில் அவர்கள்தான் வழக்குரைஞர்கள்; எனவே, அவரை அழைத்து இந்த வழக்கிலே வாதா டும்படி கேட்டுக்கொண்டவுடன், அவரும் அதற்குத் தயாராக வருகிறார்.

அந்த வழக்குரைஞர், தந்தை பெரியாரிடம், ‘‘அந்தக் கையெழுத்து  என்னுடையது அல்ல என்று மட்டும் சொன்னால் போதும்'' என்றார் அவர்.

இந்தக் காலத்தில் அரசியல்வாதிகள், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெளி வாகத் தெரியும். அதை நான் சொல்லி, நீங்கள் புரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை.

தந்தை பெரியார் அதுபோன்று சொல்ல மறுக்கிறார். இன்னுங்கேட்டால், சிறைச்சாலைக்குச் சென்றால், தனக்குக் களிதான் கொடுப்பார்கள்; கீழேதான் படுக்க வேண்டும் என்பதற்காக, வைரக் கடுக்கணும், தோடும் அணிந்து கொண்டிருப்பவர்; பெரிய செல்வந்தராக, வெல்வேட் மெத்தையிலேயே படுத்துப் பழக்கப்பட்ட வரான அவர், வெறும் தரையிலேயே படுத்து பழகிக் கொள்கிறார்; கஞ்சியையும், களியையும் சாப்பிட்டு தயாராகிக் கொண்டார்; தண்டனையை ஏற்கவேண்டும் என்ற அளவிற்கு வருகின்றபொழுது,

மோசடிக் குற்றத்திற்காகவோ, அல்லது யாரையும் ஏமாற்றுவதற்காகவோ போடவில்லை!


நீதிமன்றத்தில், பிரபலமான பார்ப்பன மூத்த வழக் குரைஞர்  வாதாட ஆரம்பித்த நேரத்தில்,

‘‘மன்னிக்கவும்; இவர் எனக்காக வாதாடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய கையெழுத்துதான் அது. நான் என்னுடைய தந்தையாருக்காக, அவருடைய கையெழுத்தை நான்தான் போட்டேன். இது வழமையாக நடக்கக்கூடிய ஒன்று. இதிலே யாருக்கும் எந்தவிதமான சங்கடமும் இல்லை. நான் எந்தவிதமான மோசடிக் குற்றத்திற்காகவோ, அல்லது யாரையும் ஏமாற்றுவ தற்காகவோ போடவில்லை. இது நீண்ட காலமாக வணிகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மரபான ஒரு செய்திதான்'' என்று திருச்சி நீதிமன்றத்தில் இருந்த வெள்ளைக்கார நீதிபதியிடம் சொல்கிறார்.

அந்த நீதிபதிக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

‘‘வழக்குரைஞர் சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட் டேன். உண்மையைச் சொல்கிறேன் உங்களிடம். அதற்காக நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்'' என்று நீதிபதியிடம் சொன்னவுடன்,

அந்த வழக்கை விசாரித்த வெள்ளைக்கார நீதிபதி வியப்படைகிறார், அதிர்ச்சி அடைகிறார்.

வியப்படைந்த வெள்ளைக்கார நீதிபதி


இப்படி ஒரு மனிதரா? ஒரு இளைஞன், அதுவும் செல்வாக்குள்ள ஒரு இளைஞன் இப்படி சொன்னவுடன், அவருக்கு அது வியப்பாக இருந்தது.

உடனடியாக தீர்ப்பு சொல்லும்பொழுது நீதிபதி சொன்னார், ‘‘அவர் உண்மையை ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல், அதனால் யாருக்கும் எந்தவிதமான இழப்பும் இல்லை. மோசடி என்பதற்கு, கிரிமினல் சட்டத்தில் இருக்கின்ற ஒரு அடிப்படை என்னவென்றால், மோசடி செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் செய்திருந்தால்தான், அது குற்றமாகுமே தவிர - வழமையாக நடப்பது, அதனால் மற்றவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. ஆகவே, இவரை விடுதலை செய்கிறேன்'' என்று சொன்னார்.

இப்படிப்பட்ட ஒரு நாணயத்தை தன்னுடைய வாழ்நாளில் கொண்ட ஒரு தலைவர், அதனையே வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். அவருடைய அச்சகத்திற்கு உண்மை என்று பெயரிட்டார். வாய்மைப் போர் என்பதாக.

அனுபவங்களை முழுக்க முழுக்க


அவர் பயன்படுத்திக் கொண்டார்




அந்த அளவிற்கு அவர் சமுதாயத்தில் சொந்தமாக சிந்தித்து, தன்னுடைய சுய சிந்தனையின்மூலமாக வந்தவர், தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தையே தத்துவமாகப் பெற்றவர்கள். அவர் எந்த நூலகத்திற்கும் சென்று ஆய்வு செய்யவில்லை; புத்தரைப் போல போதி மரத்தைத் தேடவில்லை. ஆனால், மாறாக மக்களோடு மக்களாக கலந்து பேசிய நேரத்தில், ஒவ்வொரு அனு பவமும், அவருடைய வீட்டு அனுபவமாக இருந்தாலும் சரி, நாட்டு அனுபவங்களாக இருந்தாலும், அந்த அனுபவங்களை முழுக்க முழுக்க அவர் பயன்படுத்திக் கொண்டார்.

எடுத்துக்காட்டாக, அவருடைய வீட்டில், 7, 8 வய திலே பெரியாருடைய தங்கை மகளுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்திருந்தார்கள். அதாவது 1908 ஆம் ஆண்டு. எண்ணிப் பார்க்க முடியாத காலகட்டம் அது. இன்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன்பாக நடை பெற்ற ஒரு சம்பவம். அவருடைய குடும்பம் மிகப்பெரிய வைதீகக் குடும்பம்; இன்னுங்கேட்டால், முத்திரை பெற்ற வைஷ்ணவர்கள் என்று தனித்தகுதி பெற்ற குடும்பம். அந்தக் குடும்பத்தில் நடைபெற்ற குழந்தை மணத்தால், அவருடைய தங்கை மகள் விதவையாகிறார்.

அந்த இடத்தில், பெரியார் காலில் விழுந்து கதறுகிறார் அந்தக் குழந்தை. ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற புத்தகத்தில், பெரியார் அவர்கள் இதைப்பற்றி சொல்லும் பொழுது, அதனை நாம் படிக்கும்பொழுது நம்முடைய கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிடும்.

பெரியார் நடத்தி வைத்த திருமணம்!


பெரியாருடைய காலில் விழுந்து, ‘‘மாமா, நான் இந்தத் திருமணத்தைக் கேட்டேனா? என்னை இப்படி ஆக்கி வைத்துவிட்டீர்களே?'' என்று சொன்னபொழுது,

பெரியார் அவர்கள் அவருடைய எழுத்திலேயே எழுதுகிறார்: ‘‘நான் அந்தக் குழந்தையைத் தூக்கி நிறுத்தும்பொழுதே அதற்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும்; புது வாழ்வு கொடுக்கவேண்டும் என்ற உறுதியுடன் தூக்கி நிறுத்தினேன், அந்த மன உறுதியோடு தூக்கி நிறுத்தினேன்'' என்று அவர் மிகத் தெளிவாக சொன்னதோடு மட்டுமல்லாமல், எல்லோருக்கும் தெரியும், வெவ்வேறு வழியிலே தான் இருந்துகொண்டு, அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு, ஈரோட்டிலே நான் இருந்தபொழுது, அந்த அம்மையார் ஒரு பாட்டியாக வந்து நின்ற நேரத்தில், ‘‘வீரமணி, பெரியாரைக் கவனித்துக் கொள்'' என்று சொன்னபொழுது, எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

‘‘பெண் ஏன் அடிமையானாள்?''


ஆகவே, விதவை மணத்திற்கு இன்றைக்கே கூட பல பேர் தயங்குகின்ற நேரத்தில், அன்றைக்கு அவர் துணிவோடு செய்தார்கள்.

எனவே, இந்த அனுபவம் அவருக்குக் கொள்கையாக, சுயமரியாதை இயக்கம் பரிமளிக்கத்தக்க அளவிற்கு, ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்று சிந்திக்கக் கூடிய அளவிற்கு, பிறவி பேதம், ஜாதி பேதம்; ஆண் உயர்ந்தவன் - பெண் தாழ்ந்தவள் என்ற பிறவி பேதம் இவை அத்தனையும் கூடாது என்பதை மிகத் தெளிவாகக் கொண்டுவரக் கூடிய அளவிற்கு அந்த வாய்ப்பைப் அவர்கள் பயன்படுத்தினார்கள்.

பெண்கள் சுதந்திரத்திற்கு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும்; கர்ப்ப ஆட்சி தேவை!


அதேபோல, மிகப்பெரிய அளவிற்கு, பெண் களுக்கு சுதந்திரம்  தேவை என்று சொல்லுகிற பொழுது,


ஒரு கணவன் குடித்துவிட்டு, தன்னுடைய மனை வியைக் கொடுமைப்படுத்தியபொழுது, இவருடைய வீட்டிற்கு வந்து அந்தப் பெண் அழுத நேரத்தில், அந்தக் கணவனைக் கண்டித்தார்.


பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்கிற எண்ணம் எப்படி  வந்தது? என்று ஒரு வானொலி பேட்டியில் கேட்டபொழுது, அய்யா அவர்கள் விளக்கிச் சொல்கிறார்.


‘‘குடித்துவிட்டு கணவன் அடித்த அந்தப் பெண் சொன்னார்,  கணவனுடைய கொடுமை தாங்க முடியவில்லை. 3, 4 குழந்தைகளைப் பெற்றிருக்கி றேனே, இந்தக் குழந்தைகளை யார் காப்பாற்று வார்கள் என்று சொன்னார்.


அப்பொழுதுதான் நினைத்தேன், தேவையில் லாமல், குழந்தைகள் என்பது இவருடைய சுதந் திரத்திற்கு, சுக வாழ்விற்கு எவ்வளவு பெரிய போட்டியாக இருக்கிறது'' என்று தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடிய நிலையில், அவரை உடனே தூக்கி நிறுத்தி ஆறுதல் சொன்னேன், கவலைப்படாதீர்கள் என்று சொன்னேன். அப்பொழுதுதான் அந்த எண்ணம் எனக்கு வந்தது - பெண்கள் சுதந்திரத்திற்கு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும்; கர்ப்ப ஆட்சி தேவை என்பதை எடுத்துச் சொல்லி விட்டு, இன்னொன்றையும் பொதுக்கூட்டத்தில் பேசும்போது சொல்வார்,


பகவான் என்ன முட்டாளா?


‘‘பகவான் கொடுத்தார், பகவான் கொடுத்தார் என்று சொல்கிறீர்களே, பகவான் என்ன முட்டாளா? அல்லது அயோக்கியனா? பிள்ளையை மட்டும் கொடுத்துவிட்டு, உணவைக் கொடுக்காமல், உடை யைக் கொடுக்காமல், அந்தக் குழந்தைகளுக்கு உரிய கல்வி வசதியைக் கொடுக்காமல் இருந்தால், அந்த பகவான் யோக்கியனா? அல்லது முட்டாளா?'' என்று தெளிவாகக் கேட்பார்; மக்கள் சிந்திப்பார்கள்.


ஆகவே, அவரால் ஒரு பெரிய சமுதாய மாற்றம் ஏற்பட்டது. இன்றைக்கு இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் மக்கள் தொகை  பெருக்கம் குறைவு என்று வந்திருக்கிறது என்றால், அய்.நா. சபையிலேயே அந்த வாய்ப்புகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய ஒரு கட்டத்தில், உலகளவில் அது பதிவாகியிருக்கிறது.

எனவே, சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய இயக்கம் என்பது மிகப்பெரிய ஒரு வாய்ப்பாகும்.

அடுத்தபடியாக, 1899  - சென்னையில் லட்சுமி விலாஸ் தியேட்டர் - ஒற்றைவாடை என்று பிறகு மாற்றப்பட்டது. அதிலே, அபிராம சுந்தரி சரித்திரம் என்ற ஒரு நாடகத்திற்காக மிகப்பெரிய விளம்பரம் செய்யப்பட்டது.  அந்த விளம்பரத்தில், கதையின் சுருக்கத்தைப் போட்டு, பெஞ்ச் ஒரு ரூபாய், தரைக்கு நாலணா என்றெல்லாம் போட்டுவிட்டு, அதற்குக் கீழே ‘‘பஞ்சமர்களுக்கு இடமில்லை'' என்று போட்டிருந்தார்கள்.

பெரியார் இயக்கம் செய்ததினுடைய விளைவு, இன்றைக்குத் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் வந்திருக்கிறது


பண வசதி இருந்தாலும்கூட, டிக்கெட் வாங்கக்கூடிய வசதி இருந்தாலும், சென்னையில், அதுவும் தலைநகராக இருக்கக்கூடிய ஒரு இடத்தில், ஏறத்தாழ 120 ஆண்டு களுக்கு முன்பாக, எப்படிப்பட்ட சூழல் இருந்தது நம்முடைய நாட்டில் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

பெரியார் என்ன செய்தார்?

திராவிட இயக்கம் என்ன செய்தது?

சுயமரியாதை இயக்கம் என்ன சாதித்தது? என்று கேட்கக்கூடியவர்கள், இந்த வரலாற்றினுடைய அடி களை, சுவடுகளைத் திரும்பிப் பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்குப் புரியும்.

உடனடியாக தந்தை பெரியார் அவர்கள், அவரு டைய இயக்கம் செய்ததினுடைய விளைவு, இன்றைக்குத் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் வந்திருக்கிறது. எப்பொழுது வருகிறது? 1950 இல் இந்திய அரசமைப்புச் சட்டம். சுயமரியாதை இயக்கம் எப்பொழுது தோன்றியது? 1925 ஆம் ஆண்டு.

காங்கிரசில் இருந்தபொழுதே அவர்கள், தீண்டாமை, நெருங்காமை, பாராமை, நடக்க உரிமையில்லை என்று சொன்ன நேரத்தில், காந்தியாருடன் வைக்கம் போராட் டத்திற்காக சண்டை போட்டவர் என்கிற வரலாறு இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவேண்டும்.

தந்தை பெரியாருக்கு


காந்தியார் எழுதிய கடிதம்!


வைக்கம் போராட்டத்தின்பொழுது, பெரியாருக்குக் காந்தியார் ஒரு கடிதம் எழுதுகிறார்.

‘‘நாயக்கரே, நீங்கள் ஏன் கேரளாவிற்குச் சென்று ரகளை செய்கிறீர்கள்; உயர்ஜாதிக்காரர்களான நம்பூதிரி கள் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் அங்கே செல்லவேண்டாம் என்று'' அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

காந்தியாருக்கு


தந்தை பெரியார் எழுதிய கடிதம்!


அதற்கு மிகவும் மரியாதையோடு, தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்ட காந்தியாருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் பெரியார்.

‘‘நான் ஒன்றைச் சொல்கிறேன். நான் இங்கே வந்து பார்க்கும்பொழுது, நாயும், பன்றியும், கழுதையும் தெருக் களில் ஓடுகின்றன. அவைகள் என்ன சத்தியாகிரகம் செய்தா அந்த உரிமையைப் பெற்றன. ஆனால், மனிதன், அதுவும் ஆறறிவு உள்ள மனிதன், அவன் கீழ்ஜாதி என்கிற ஒரே காரணத்திற்காக அந்தத் தெருவில் நடக்கக் கூடாது என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய கொடுமை? நீதிமன்றம் அந்தத் தெருவில் இருக்கும் பொழுது, அந்த சமுதாயத்தைச் சார்ந்த மாதவன் என்ற ஒரு வழக்குரைஞர் நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடச் சென்ற நேரத்தில்தான், அவர் தடுக்கப்படுகிறார், அடித்து விரட்டப்படுகிறார் என்று சொன்னார், அது எவ்வளவு பெரிய கொடுமை'' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் தந்தை பெரியார்.

ஒருமுறை அல்ல இரண்டு முறை போராட்டத்தினை நடத்தினார் தந்தை பெரியார், ஆறுமாதம் சிறைத் தண்டனை பெற்றபொழுது, இவரை ஒழிப்பதற்காக சத்ரு சங்காரம் யாகம் செய்த நேரத்தில், மன்னன் இறந்து விட்டார் என்றவுடன், மக்களுக்கே ஒரு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது - மக்கள் மூடநம்பிக்கையில் இருப்பதி னால், ராஜாவையே எதிர்த்து அந்த பூதம் கிளம்பிவிட்டது என்று நம்பினார்கள் என்று வேடிக்கையாக பெரியார் சொல்வார்.

இன்றைக்கு அதே வைக்கத்திலிருந்து, அதே ஈழவ சமுதாயத்தைச் சார்ந்த நாராயணன் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்து, பெரியாருடைய தொண்டைப் பாராட்டி, எங்களிடமெல்லாம் பேசினார். அவர்தான் அண்ணா அறிவாலயத்தைக்கூட திறந்து வைப்பதற்காக அழைக்கப்பட்டவர் என்பது இந்த நேரத்தில் குறிப் பிடத்தகுந்த ஒன்றாகும்.

ஆகவே, இப்படி பெரியார் அவர்கள் சிறப்பானவர் மட்டுமல்ல, சுய சிந்தனையாளர் மட்டுமல்ல, அவருடைய இயக்கம் சாதித்தது சாதாரணமானதல்ல.

மிகப்பெரும்பாலான மக்களுக்கு


படிப்பு கொடுக்கப்படவில்லை


சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னநேரத்தில், மிகப்பெரிய அளவிற்கு இந்த நாட்டில், சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் ஆகியோர் காலத்திலெல்லாம் வடமொழிப் படிப்பு கொடுக்கப்பட்டது, சமஸ்கிருத படிப்பு அதுவும் உயர்ஜாதிக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டதே தவிர, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு, மிகப்பெரும்பாலான மக்களுக்கு, பெண்களுக்கு அது கிடைக்கவேயில்லை.

ஆகவே, அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், அந்த இயக்கத்தைத் தொடங்கினார். தான் நேசித்த காந்தியாரிடம் அவருக்கு ஏற்பட்ட கருத்து மாறுபாடு  இரண்டு விஷயங்களில்.

காந்தியாருக்கும்,  பெரியாருக்கும்


கருத்து மாறுபாடு


வருணாசிரம தர்மத்தை காந்தியார் நம்பினார். அதுமட்டுமல்ல, தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொன்னாலும், அவருடைய அணுகுமுறை இருக்கிறதே, அது வேறுபட்டது. காந்தியாருக்கும்,  இவருக்கும் கருத்து மாறுபாடு - ஏறத்தாழ அம் பேத்கர் அவர்களுக்கும் அதே உணர்வுதான் வடபுலத்தில் ஏற்பட்டது.


காங்கிரசில் இருந்தபொழுது, அரிஜன நல நிதி என்று சொல்லி, தனிக் கிணறு, தனிக் குளம் வெட்டிக் கொடுங்கள் அவர்களுக்கு என்று காந்தியார் சொன் னார்.


பெரியார் அவர்கள் காங்கிரசிலிருந்தபொழுதே, காந்தியாரிடம் மாறுபட்டார்.


நீங்கள் தனிக் கிணறு, தனிக் குளம், தனித் தெரு என்று ஆக்கினால், மீண்டும் அதே ஜாதியை, அதே தீண்டாமையை, அதே சமூக இழிவை நிலை நாட்டுகிறீர்கள். ஆகவே, அதுபோன்று இருக்கக் கூடாது. பொதுக் குளம்தான் இருக்கவேண்டும்; பொதுக் கிணறுதான் இருக்கவேண்டும்; எல்லோரும் அதில் தண்ணீர் எடுக்கவேண்டும் என்று சொல்லக் கூடியதில்தான் வேறுபாடு.


அதேபோல, எல்லோரும் கல்வி கற்கவேண்டும் என்று வரும்பொழுது, உங்களுடைய வருணாசிரம தர்மத்தில் இப்படியெல்லாம் இருக்கிறது. உயர் ஜாதிக்காரர்கள் மட்டுமே படித்தவர்களாக இருக் கிறார்கள் என்று சொன்னபொழுது, காந்தியார் வருணதர்மம் நல்லது என்று சொன்னார்கள்.


பிறகு, வகுப்புவாரி உரிமையைப் பொறுத்தவரையில், மற்றவர்கள் எல்லாம் சுட்டிக்காட்டிய நேரத்தில், ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், பார்ப்பனர்கள் - ‘‘இப்படி எங்களை வதைக்கிறார்கள், வகுப்புவாரி உரிமையின்மூலம், எங்கள் வாய்ப்புகளை யெல்லாம் பறிக்கிறார்கள்'' என்று சொன்ன நேரத்தில்,

ஓமந்தூரார் புள்ளிவிவரங்களோடு


காந்தியாரிடம் சொன்னார்!




ஓமந்தூரார் தெளிவான புள்ளி விவரங்களைச் சொன்னார். வகுப்புவாரி உரிமைகள் மூலமாக நாங்கள் நடத்துவது, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறை, மூன்றாவது தலைமுறையாக இப்பொழுதுதான் வருகிறார்கள். ஆனால், பலதலைமுறைகளாக உயர்ஜாதிக்காரர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னபொழுதுதான்,

காந்தியாருக்கு 1947 காலகட்டத்தில் தெளிவான ஒரு சிந்தனை வந்தது; உண்மை புரிந்தது.

பிராமணர் சங்கம் என்ற பெயரில், பார்ப்பனர்கள் காந்தியாரை சந்தித்த நேரத்தில்,

கடுமையாகக் கோபித்துக்கொண்டு காந்தியார் சொன்னார், ‘‘வேதம் ஓதுவதுதானே வேதியர்க்கு அழகு; உங்களுக்கு எதற்கு டி-ஸ்கொயர்; நீங்கள் ஏன் மருத்துவக் கல்லூரிக்குப் போய் மருத்துவப் படிப்பு படிக்கவேண்டும்'' என்று கேட்டவுடன் கேட்ட ஒரு நூறு நாள்களுக்குள்ளாக காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தகவலை, தந்தை பெரியார் தன்னுடைய டைரியில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

வாழ்ந்த காந்தியார் வேறு;


மறைந்த காந்தியார் வேறு


‘‘மதச்சார்பின்மை என்பது தேவை என்று காந்தியார் சொன்னார்; வகுப்புரிமையை ஆதரித்தார். எனவே, நான் முதலில் எதிர்த்த காந்தியாரை, பின்னாளில் காந்தி நாடு, காந்தி தேசம் என்று இருக்கவேண்டும் என்று சொன்னேன் என்றால், அவருக்கு செல்வாக்கு இருந்தது என்பதால், நான் மாறிவிட்டேன் என்று நுனிப்புல் மேய்ந்தவர்கள் எழுதுகிறார்கள். அது உண்மையல்ல; வாழ்ந்த காந்தியார் வேறு; மறைந்த காந்தியார் வேறு.

வாழ்ந்த காந்தியார், வருணாசிரமத்தை வாழ வைக்க வேண்டும் என்று விரும்பினார்.

காந்தியாரை சுட்டுக் கொன்றது மதவெறி!


உணர்ந்த காந்தியார் பிறகு நம்முடைய சமூக வழிக்கு வந்தார். அந்த நேரத்தில், இனிமேல் இவரை விடக்கூடாது என்று கருதிய காரணத்தால்தான், அவரை சுட்டுக் கொன்றது மதவெறி. எனவே, காந்தியார் மதவெறிக்குப் பலியானார்'' என்று சொன்னார்.

அதேநேரத்தில், இன்னொன்றையும் சொல்லவேண் டும். இந்த இயக்கம் இப்படி எத்தனையோ சாதனைகள் - பெண்ணுரிமை, பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்களுக்குப் படிப்புரிமை, பெண்களுக்கு வாக் குரிமை, தெருவில் நடக்க உரிமை, படிக்க உரிமை, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒதுக் கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்புகளை யெல்லாம் ஆட்சி கொடுத்த ஒரு சூழ்நிலையில், மிகப்பெரிய அளவிற்கு  அந்த வாய்ப்பை அவர் நிர்ணயம் செய்தார்.

அதைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காகப் போராடினார்; பாலியல் நீதிக்காகப் போராடினார்.

ஆண்களை நம்பாதீர்கள் பெண்களே, நிச்சயமாக எலிகளுக்கு எங்கேயாவது பூனைகளால் விடுதலை கிடைக்குமா? என்று கேட்ட ஒரே தலைவர் அவர்.

பகுத்தறிவு என்பது வளர்ச்சி


கற்பு என்ற ஆயுதத்தை வைத்து, பெண்களை ஒரு வழிப் பாதையாக, அடிமைகளாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றபொழுது, நீங்கள் அதைப்பற்றி கவலைப் படாதீர்கள். எப்பொழுது அது ஆண்களுக்கும் பொது வாகிறதோ, அதுவரை அதனை தூக்கி எறிவதற்குத் தயாராக இருங்கள் என்று அவருடைய புரட்சிக் கருத்துகள் இருக்கிறதே,  அப்பொழுது அது அதிர்ச்சியை உண்டாக்கினாலும்கூட, பிற்காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு வந்தது.

அதுபோலவே, மூடநம்பிக்கைகள் விடுத்து - அறி வியல் நம்பிக்கையைப் பெறுங்கள் என்று சொன்னார். பகுத்தறிவு என்பது இருக்கிறதே, அது வளர்ச்சி.

திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ளவர்களாக நான் ஆக்குவேன் என்பதுதான் என்னுடைய லட்சியமே தவிர, வேறு எனக்கொன்றும் கிடையாது. வேறு யாரும் அந்தத் தொண்டை செய்ய முன்வரவில்லை. ஆகவே, நான் அதில் இறங்கியிருக்கிறேன் என்று சொன்னார்.

சுயமரியாதை இயக்கத்தைத்


தோற்றுவித்தது ஏன்?


தொடக்கம் திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்று  தொடங்கினாலும், அவரே சொன்னார், இன்றைக்கு இங்கே இது தொடங்கப்படுகிறது. ஒரு மருந்து ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்படுகிறது; ஒரு குறிப்பிட்ட நோய் அங்கே வருகிறபொழுது கண்டு பிடிக்கப்படுகிறது. உதாரணமாக அம்மை நோய்க்கான மருந்தை எட்வர்டு ஜென்னர் கண்டுபிடித்தார் என்று சொன்னால், அன்றைக்கு அந்த மருந்து அங்கே பயன்பட்டாலும், பிறகு உலகம் முழுவதும் அம்மை நோய் வருகிறபொழுது, அந்த மருந்து எப்படி பயன்படுகிறதோ, அதுபோல, பெரியார் சுயமரியாதை இயக்கத்தை, திராவிடர் இயக்கத்தை அங்கே இருக்கிற உரிமை பாதிப்புகள், மனித உரிமை பாதிப்புகளுக்கு எதிராகத் தொடங்கினாலும்கூட, சுயமரியாதை இயக்கத் தைத் தோற்றுவித்தது ஏன்? என்று சொல்லுகின்ற நேரத்தில், தந்தை பெரியார் மிகத் தெளிவாக, ஆழமாக சொல்லுகிறார்.

பெரியாருடைய கருத்துகள்


வெற்றி பெறுகின்றன


இது இன்றைக்கு இருந்தாலும், இந்த சுயமரியாதையை இயக்கத்தை தொடங்கிவிட்டேன். இனிமேல் இது வேகமாக உலகம் முழுவதும் சுற்றும். அதனுடைய விசையிலிருந்து பலன்கள் கிடைக்கும் என்றார்.

எனவேதான், அறிவியல் பெரியார் வெற்றி பெறுவார். பெரியாருடைய கருத்துகள் வெற்றி பெறுகின்றன.

அறிஞர் அண்ணா அவர்களின்


இரண்டு கருத்துகள்!


இன்னொரு சிறப்பு, வேறு எந்தத் தலைவருக்கும் இல்லாத ஒரு சிறப்பு - அறிஞர் அண்ணா அவர்கள் இரண்டு கருத்துகளை மிக அழகாக சொன்னார்கள். அமெரிக்காவில் அண்ணா அவர்கள் சிகிச்சை பெறும் நேரத்தில் சொன்னார்.

நீங்கள் சலிப்படைய தேவையில்லை தந்தை பெரியார் அவர்களே! நான் படித்த வரலாற்றில், உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவரும் தன்னுடைய வாழ்நாளிலேயே தன்னுடைய கொள்கை வெற்றி பெற்றதை தன் கண்களாலே பார்த்தவரில்லை. நீங்கள் சுயமரியாதைத் திருமண சட்டத்தைப் பார்த்தீர்கள்; உங்கள் நாட்டின் பெயர் மாற்றத்தைப் பார்த்தீர்கள். அதுமட்டுமல்ல, சமுதாயத்தில் ஜாதி, தொடக்கூடாத, நெருங்கக்கூடாத என்றிருந்த நிலையை மாற்றி, சமு தாயத்தில் பக்கத்தில் அமர வைக்கக்கூடிய நிலையைப் பார்த்தீர்கள்; உங்களுடைய தொண்டு பரவாத இடமில்லை. உங்களுடைய வெற்றியினுடைய களிப்பு ஏராளம் என்று சொல்லிவிட்டு,

செப்டம்பர் 17 ஆம் தேதி, திருச்சியில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுது அண்ணா அவர்கள் சொன்னார்,

‘‘பெரியாருடைய வேலை என்பது வியக்கத்தக்கது மட்டுமல்ல, நம்ப முடியாத ஒன்று.

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு - Put to the Century in a capsules  என்று சொல்வார்கள். அதாவது, பல நூற்றாண்டுகளை ஒரு சிறு குளிகைக்குள் அடைப்பதைப்போல ஒன்று - அவ்வளவு பெரிய சாதனை'' என்று சொன்னார்.

பெரியாரின் சிக்கனம்,


தமிழ்நாட்டின் பொக்கிஷம்!


எல்லாவற்றையும்விட, சிக்கனமானவர் என்பதைப் புரிந்துகொள்ளாமல், கஞ்சன் என்று அவர்களை சொன்னார்கள்.  கையெழுத்து போட வேண்டுமானால்  நாலணா காசு கொடுக்கவேண்டும் என்று வாங்கினார்கள்.

ஆனால், ஒவ்வொருவரும் சிக்கனத்தைக் கடைப் பிடிக்கவேண்டும் என்று சொன்ன பெரியார், பெரியாரின் சிக்கனம், தமிழ்நாட்டின் பொக்கிஷம் என்று ஒரு நண்பர் சொன்னார். அதேபோல, அது பொக்கிஷமாகி, அந்தக் கருவூலம், தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிற அத்தனை பேருக்கும் பயன்பட்டது.

தந்தை பெரியார் கடவுள், புராணம்,


இதிகாசத்தை எதிர்த்தது ஏன்?


கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார்,

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று சொன்ன தந்தை பெரியார்,

அதேநேரத்தில், மனிதனை நினை என்று சொன்னார். எதிர்மறையாக மட்டும் அவர் சொல்லி நிறுத்திவிடவில்லை. ஏனென்றால், அந்தக் கடவுளைக் காட்டி, ஜாதியை நிலைநிறுத்தினார்கள். நான்தான் ஜாதியை உருவாக்கினேன் என்று கடவுள்கள் கூறியதாக, புராணத்தில் எழுதி வைத்தார்கள். எனவே, தந்தை பெரியார் அவர்கள் புராணத்தை எதிர்த்தார்கள். இதிகாசத்தில் உயர்ந்த ஜாதிக்காரன்தான் கடவுளைப் பார்க்க முடியும்; கீழ்ஜாதிக்காரன் தலைகீழாக நின்றால் கூட, அவன் கடவுளைப் பார்க்க முடியாது என்று சொன்னால், அவன் கழுத்தை வெட்டு என்பதுதான் ராமராஜ்ஜியம் என்று சொன்ன நேரத்தில், அந்த ராமாயணத்தை அவர்கள் எதிர்க்கத் துணிந்தார்கள்.

தன்னுடைய மனைவியை சந்தேகப்பட்டு கடவுள் அவதாரமே நெருப்பில் குதி என்று சொன்னான் என்று சொன்னால், அப்படிப்பட்ட பெண் உரிமைக்கு எதிரான ஒன்று தேவையா? என்று கேட்டார் தந்தை பெரியார்.

எனவேதான் நண்பர்களே, நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். பெரியார் என்ற அந்த மாமனிதர், எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, கடைசியாக ஒன்றை சொன்னார். என்னை மகான் ஆக்கி விடாதீர்கள். நான் ஒரு மனிதன். மனிதத் தன்மைக்குமேல் எனக்கு எதுவும் கிடையாது என்றார்.

அறிவுப் பற்று, வளர்ச்சிப் பற்றைத் தவிர


வேறு எந்தப் பற்றும் எனக்குக் கிடையாது


எனவேதான், ‘‘என்னுடைய அறிவுக்கு எட்டியதை நான் சொல்கிறேன். நம்பினால் நம்புங்கள். ஏற்க விருப்பமில் லையானால், விட்டு விடுங்கள். என்னைப் பொருத்த வரையில், எனக்கு எந்த அபிமானமும் கிடையாது. தேசாபிமானம், மற்ற அபிமானங்கள் கிடையாது. ஆனால், மானாபிமானம் உண்டு.

அதுதான் மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று சொன்ன நான், உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு அறிவுப் பற்று, வளர்ச்சிப் பற்றைத் தவிர வேறு எந்தப் பற்றும் கிடையாது'' என்று சொன்னார்.

எனவேதான், நாங்கள் எல்லாம் பெருமைப் படுகிறோம்; நாமெல்லாம் பெருமைப்படவேண்டும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

என்று சொல்லக்கூடிய அந்தத் தத்துவத்திலே பெரியார் வழி நடப்போம்! பெரியாரு டைய கொள்கைகள் என்பது இருக்கிறதே, அது மிகப்பெரிய வெற்றியை தரும். அது ஒருபோதும் தோல்வி அடையாது. அவர் ஒரு போர்க் கருவியாக என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடியவர். அந்தப் போர்க் கருவி விசித்திரமான போர்க் கருவியாகும். பூமராங் போன்று சில நேரங்களில் இருக்கும்; சில நேரங்களில் ஊசியைக் குத்தி, அதன்மூலம் நோயைப் போக்கக்கூடிய அளவிற்கு அது மாறும். இது ஒரு விசித்திரமான போர்க்கருவி.

பெரியாரின் போர் முறை!


இன்னுங்கேட்டால், அண்ணா அவர்கள் அழகாகச் சொன்னதைப்போல,

மற்ற போர்க் கருவிகள் எல்லாம், போர்ப் படைகள் எல்லாம் எதிரே இருக்கின்ற எதிரிகளை மட்டும்தான் தாக்கும். மூல பலத்தைத் தெரிந்து, அதனை முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை என்று மிகத் தெளிவாக அண்ணா அவர்கள் சொன்னார்.

அந்த மூல பலம்தான், இன்றைக்கு எந்த ரூபத்தில் வந்தாலும், மதவெறியாக வந்தாலும், ஜாதி வெறியாக வந்தாலும், மாநில உரிமைகள் பறிப்பாக இருந்தாலும், மொழித் திணிப்பாக இருந்தாலும், வடமொழி ஆதிக்க மாக இருந்தாலும், கலாச்சாரத்தினுடைய படையெ டுப்பாக இருந்தாலும், அத்தனையையும் எதிர்க்கக்கூடிய போர்க் கருவியாக பெரியார் என்ற மருந்து இருக்கிறது.

நாடாளுமன்றத்தில்


‘‘பெரியார் வாழ்க!'' என்ற குரல்!


இதற்கு ஒரே ஒரு உதாரணம், அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் மற்றவர்கள் ஜெய்ராம் என்று சொன்னபொழுது, மற்றவர்களுக்கு எல்லாம் அஞ்சாமல், ‘‘பெரியார் வாழ்க!'' என்ற குரலை திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும், தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற அத்தனை உறுப்பினர்களும் சொன்னபொழுது, அது தான் அவர்களுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது. இன் றைக்கும் அந்தக் கலக்கத்தைக் கொடுத்ததின் காரண மாகத்தான், இந்திதான் இந்தியாவின் அடையாளம் என்று சொன்னவர்கள், இல்லை நான் வேறு கருத் தைத்தான் சொன்னேன் என்று பின்வாங்கவேண்டிய அளவிற்கு வந்திருக்கிறது.

எனவேதான், இது முனை மழுங்காத போர்க்கருவி

சமரசம் இல்லாத போர்க் கருவி

எதிரிகளின் மூலபலத்தைத் தெரிந்துகொண்டிருக்கிற போர்க் கருவி.

பெரியாரை வாசியுங்கள்!


பெரியாரை சுவாசியுங்கள்!!


பெரியார் என்ற போர்க் கருவி இருக்கின்ற வரையில், நம்முடைய பயணங்கள் தொடரும்; நம்முடைய எதிரிகளிடமிருந்து எதிர்நீச்சல் அடித்து நாம் வெற்றி பெறுவோம்.

எனவே, பெரியாரைப் புரிந்துகொள்ளுங்கள்,

பெரியாரை வாசியுங்கள் என்று சொல்வதைவிட, பெரியாரை சுவாசியுங்கள்.

பெரியாரை, வாழ்க்கை நெறியாகக் கொள்ளுங்கள்.

சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத் தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 3. 10. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக