வியாழன், 13 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக் கொள்கையில் உள்ள கருத்துக்கள்:


(பேராசிரியர் அ.இராமசாமி)

1.மும்மொழித் திட்டம்" என்ற பெயரில் இந்தித் திணிப்பு.

2. மாணவர்களுக்கு எவ்வகையிலும் பயன்தராத மொழியான
சமஸ்கிருதம் திணிப்பு.

3.தொடக்க நிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரையில் தேவையற்ற
நிலையிலான தேசிய அளவிலான தேர்வு.

4.கலை, அறிவியல் பாடங்களுடன், 'தொழிற்கல்வி' என்ற பெயரில் குலக்கல்வித் திணிப்பு.

5.பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம். முதலியனவற்றில் சேர்ந்து படிக்க நுழைவத்தேர்வு!

6.கல்லூரிகளுக்குத் தரத்தின் அடிப்படையில் ‘நிதி உதவி' என்ற
பெயரில், பின்தங்கிய பகுதிகளில் உள்ள கல்லூரிகள் புறக்கணிப்பு.

7) சுமார் 5000 மாணவர்களுக்கு மேல் உள்ள கல்லூரிகள் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலையில், கிராமப்புறக் கல்லூரிகள் ஒழிப்பு.

8.நீண்ட காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரிகள் மூடப்படும்.

9.பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றை நிர்வகிக்கப் பிரதமர்
தலைமையில் டில்லியில் ஒரு உயர்கல்விக் குழு அமைக்கப்படும்.

10. பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் உருவாக்கவும், நடத்தவும் மாநில
அரசே நிதி வழங்க வேண்டும். ஆனால், நிர்வகிக்க உரிமை கிடையாது.

11) மாநில அரசின் அதிகாரம் பறிப்பு.

12. பல்கலைக் கழகத் துணைவேந்தரை டில்லியே நியமிக்கும்; மாநிலஅரசுக்கு உரிமை கிடையாது.

13. டில்லியால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள், அவர்களுக்கு வேண்டிய
வர்களையே பல்கலைக் கழகத்தில் உள்ள மற்ற பதவிகளுக்கும்
ஆசிரியர் பணியிடங்களுக்கும் நியமிப்பர்.

14. எனவே, பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எந்தப் பதவி
களுக்கும் வர முடியாது.

15.வகுப்புவாரி இடஒதுக்கீடு பற்றித் தெரிவிக்கப்படவில்லை.

16.அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை மதிப்பெண்கள்
அடிப்படையிலேயே வழங்கப்படும். அதனால் ஒடுக்கப்பட்ட சமுதாய
மாணவர் உரிமை பறிக்கப்படும்

17.இந்தியா முழுவதற்கும் ‘ஒரே பாடத்திட்டம்' என்ற பெயரில் 'ஆரிய பாடத்
திட்டம்' கொண்டு வர முயற்சி ஆரிய நாகரீகம், வரலாறு ஆகியவற்றைத் திணித்துத் தென்னிந்திய நாகரீகம், வரலாற்றைப் புறக்கணிக்க முயற்சி.

19.பாரம்பரியக் கல்வி அறிமுகம்' என்ற பெயரில் அறிவியல் சோதனையில்
நிற்காத கல்வித் திணிப்பு.

20.ஆக்ஸ்போர்டு, ஹார்வேர்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை
முன்மாதிரியாகக் கொள்ளாமல்; நாளந்தா, தட்சசீலம் போன்ற
பிற்போக்கான பாடத் திட்டங்களைக் கொண்ட பல்கலைக்கழகங்களை
முன்மாதிரியாகக் கொண்டது.

21.மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு 5ஆம் வகுப்பு வரையில்மட்டுமே தரப்படும்.

22.ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் இல்லாமல் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படும்.

23. தன்னார்வத் தொண்டர்கள்' என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்
அமைப்பைச் சேர்ந்தவர்களும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பர்.

24. முதலாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் கூட தேசிய முகாம்களில் கலந்து கொள்ள வேண்டும்.

25) பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பாடத்திட்டம் (Sylabus) உண்டு மாணவர்கள் எதிர்கொள்ளும் அனைத்துத் தேர்வுகளையும் நடத்த
தனியார் தேர்வு வாரியம் அமைக்கப்படும்.
பெண்கள் கல்வியைப் பற்றி எவ்வகைக் குறிப்பும் இல்லை.

நன்றி :- தங்கதுரை

புதன், 12 ஆகஸ்ட், 2020

புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுப்போம்!

#மத்திய #அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கைத் திட்டத்தில் சமூகநீதியை வலியுறுத்தியோ - இட ஒதுக்கீட்டிற்கான உறுதி என்பதோ எங்கும் இடம்பெறவில்லை!

சமூகநீதியாளர்கள் அனைவரும் ஒரே குரலில், ஒரே அணியில் நின்று

புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுப்போம்!

மத்திய அரசின் தேசிய புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தில் சமூகநீதியை வலியுறுத்தியோ - இட ஒதுக்கீட்டிற்கான உறுதி என்பதோ எங்கும் இடம்பெற வில்லை; சமூகநீதியாளர்கள் அனை வரும் ஒரே குரலில், ஒரே அணியில் நின்று அதனை ஏற்க மறுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பது மாநிலங்களின் கல்வி உரிமைகளை - அதிகாரங்களைப் பறிப்பது என்பது மட்டுமல்ல; பன் மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்களைக் கொண்ட இந்திய நாடு - ஒரே கல்வித் திட்டத்தின்கீழ்தான் இயங்கவேண்டும் என்பதே ‘‘திணிப்பு’’ அல்லாமல் வேறு என்ன?

சமூகநீதி என்னும் இட ஒதுக்கீடு என்ற கருத்தோ, உறுதியோ எங்கும் இடம்பெறவே இல்லை

அவற்றைவிட மிக முக்கியமான உரிமைப் பறிப்பு என்னவென்றால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் தொடங்கி, அதன் பல சட்டப் பிரிவுகள் - பல திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டு, பல்வேறு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளாலும் உறுதி செய்யப்பட்ட நடை முறையில், இட ஒதுக்கீட்டால் இன்று பெறப்படும் சமூகநீதி (Social Justice) என்னும் கருத்தோ, இட ஒதுக்கீட்டுக்கான உறுதியோ எங்கும் இடம்பெறவே இல்லை - பள்ளிக் கல்வித் தொடங்கி பல்கலைக் கழக கல்வித் திட்டங்கள்வரை! அதாவது இடஒதுக்கீடு பற்றி எங்குமே குறிப்பிடப்பட வில்லை.

Introduction எனப்படும் முகப்பிலும், 6.1 எனும் பகுதியிலும் மட்டுமே சமூகநீதி என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் 6.1 Education is the single greatest tool for achieving social justice and equality என்று குறிப்பிட்டுவிட்டு, அதை அடைவதற்கு வழிமுறையான இட ஒதுக்கீட்டைப்பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடாதது ஏன்?

போராடிப் பெற்ற சமூகநீதி!

சமூகநீதி - இடஒதுக்கீட்டு உரிமைகள் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துவதற்காக காலங்காலமாக சமூகப் போராளிகளாக களங்களில் நின்று, நமது தலைவர்கள் வென்றெடுத்த உரிமைகளாகும்.

மனுதர்மம் இன்னமும் கோலோச்சும் ‘இந்து லா' என்பதில் - ஜாதி வருணமுறை சமூக வாழ்வில் எங்கும் படமெடுத்தாடும் நிலையில், அதனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கல்வி மறுக்கப்பட்ட  கோடானு கோடி மக்களுக்குக் கல்வி வாய்ப்புகள், இட ஒதுக்கீட்டின்மூலம் ஓரளவு இப்போது தான் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு கிட்டத் தொடங்கியிருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் மக்கள் தொகையில் பெரும்பாலானவர் களாக இருந்தும்கூட, உயர்ஜாதிப் பார்ப்ப னியத்தின் கல்வி ஏகபோகத்திற்கு முன் இன்னமும் விகிதாசாரப்படி, சமத்துவ நிலை அடையாத நிலையே இன்றும் உள்ளது.

சமூகநீதி என்பது ஒடுக்கப்பட்ட மக்களை  கைதூக்கி விடுவதற்கான உதவிக்குரிய

ஒரு கருவி

இந்நிலையை மாற்றத் தான், சமூகநீதி என்னும் இட ஒதுக்கீடு - கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களான  S.C., S.T., OBC  மற்றும் சிறு பான்மையினர் ஆகியோருக்கு தரப்படு கிறது.

சமூகநீதி - இட ஒதுக்கீடு என்பது அவர்களைக் கைதூக்கி விடுவதற்கான உதவிக்குரிய ஒரு கருவியாகும்!

காலங்காலமாக கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், கல்விக்கான இடங்களுக்கு, வேலை வாய்ப்புகளுக்குப் போட்டியிடும் நிலையில், சம போட்டி என்பதற்கே இடமில்லாத நிலையே யதார்த்தம்!

சம பலம் உள்ளவர்களிடையே போட்டி ஏற்படுத்தினால்தான் அது சம வாய்ப்பு என்பது பொருள் உள்ளதாகும். கொழுத்த வனுக்கும், இளைத்தவனுக்கும் போட்டி என்றால், அது ஒருபோதும் சம போட்டி யாகாது. இதையும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்கூட தெளிவுபடுத்தியுள்ளன.

‘‘தகுதி திறமை’’ என்ற மோசடி!

ஒரு வழக்கில், அன்றைய தலைமை நீதிபதி  ஜஸ்டீஸ் கே.சுப்பாராவ் அவர்கள் மிக அருமையான ஓர் உதாரணத்தின்மூலம் ‘‘தகுதி திறமை’’ - ‘அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு நடத்தி எடுத்தல் வேண்டும்’ என்பதில் உள்ள மோசடியை விளக்கினார்.

குதிரைப் பந்தயத்தில், ஓடுவதற்கு விடப் படும் குதிரைகள் எல்லாம் ரேஸ் குதிரை களாகவே இருந்தால்தான் அது சமப் போட்டி.

ரேஸ் குதிரையுடன் ஜட்கா வண்டி குதிரையைப் போட்டியிட வைத்தால், அது எப்படி சம போட்டியாக இருக்க முடியாதோ, அதேபோல, காலங்காலமாய் கல்வியில் பல தலைமுறைகள் முன்னேறிய ஜாதி மாணவர் களுடன், பல்லாயிரக்கணக்கான ஆண்டு கள் கல்வி மறுக்கப்பட்டதன் (கீழ்ஜாதி காரர்களுக்கு ‘சூத்திர - பஞ்சம’ மக்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கலாகாது என்ற மனுததர்மம்தானே கோலோச்சியது) விளைவாக, இப்போது தான் முதல், இரண்டாம் தலைமுறையாகப் பயிலும் மாணவர்கள், முன்னேறிய ஜாதி மாணவர்களுடன் எப்படி சமமாகப் போட்டி யிட முடியும்? எனவேதான், இட ஒதுக்கீடு கல்வியில் மிகவும் தேவைப்பட்டது.

ஏற்கெனவே, 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் மண்டல் வழக்கான இந்திரா சகானி வழக்கு வரை பலவும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி உள்ளன!

இந்திய அரசமைப்புச் சட்டம், நாடாளு மன்றத்தில் இந்த சமூகநீதிக்காகவே பலமுறை திருத்தப்பட்டு, பல்கலைக் கழகங்களிலும், தொழிற்படிப்புகளான என்ஜினியரிங், மெடிக்கல், வேளாண்மை முதலிய பலவற்றிலும் இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடித்து வருவதால்தான் ஒடுக்கப் பட்ட மக்களின் (Depressed and the downtrodden) சந்ததியினர் இன்று கல்விக் கண்ணை ஓரளவு பெறுகிறார்கள்.

சமூகப் புரட்சியாளர்களின் முயற்சியால்தான்....

இதற்காகவே சமூகப் புரட்சியாளர்களான தலைவர்கள் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், சமூகநீதியாளர்களான கல்வி வள்ளல் காமராசர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், திராவிட இயக்கத் தலைவர்கள் அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், அதன்பின் ஆட்சித் தலைவர் களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரை பலரது முயற்சிகளும், சாதனைகளும்தான் இன்று ஏராளமான ஒடுக்கப்பட்டோர் கல்வி பெற வாய்ப்பு ஏற்படுத்தியது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சமூக நீதி - இட ஒதுக்கீடு பற்றி எங்கும் குறிப் பிடப்படவே இல்லை என்பது அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானதாகும்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி வாய்ப்புகளைப் பறிமுதல் செய்வதற்கான திட்டமிட்ட மோசடி அல்லவா இது?

65 பக்கங்கள் கொண்ட புதிய “தேசியக் கல்விக் கொள்கை 2020” ஆங்கில விளக்கம் இணையத்தில் வெளிவந்துள்ளது.

பாராக்கள் 6.22, 6.23, 6.24 ஆகியவற்றில் இந்த வகுப்புகள் (SC/ST, OBC) பற்றி ஓரிரு வரிகள் வந்துள்ளன.

அந்த விளக்கத்தின்படி, இட ஒதுக் கீட்டுக்குப் பதில், அவர்களுக்கு வெறும் பண உதவி ‘‘ஸ்காலர்ஷிப்’’ பற்றி - அதுவும் தகுதி (Merit) அடிப்படையில் தரப்படும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

கோத்தாரி கல்விக் கமிஷன்

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கோத்தாரி கல்விக் கமிஷனில் இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் கல்வி இட ஒதுக்கீடுபற்றி மிகவும் தெளிவாக வற்புறுத்திய பகுதி இதோ:

‘‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் தகுதிகள், சலுகைகள் மறுக்கப்பட் டுள்ள சமூகத்தினருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பது கல்வியின் பிரதான நோக்கங்களுள் ஒன்றாகும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதி வழங்குவதே கல்வியின் முக்கியமான நோக்கம். கல்வியை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை அவர்கள் உயர்த்திக் கொள்ள வழிவகுக்கப்படவேண்டும்.

சமூகநீதியின்பால் உண்மை யான அக்கறை கொண்டவர்களும், ஏழை,எளியமக்களின் வாழ்வு வளம் பெறவேண்டும் என்று நினைப்பவர்களும், ‘எல்லோருக்கும் எல்லாமே கிடைக்கவேண்டும்’ என்ற நோக் கத்துடன் செயல்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் திறமையும், ஆற்றலும் கல்வி யின் மூலம் வெளிப்படவும், முன் னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைக்கவும் சமுதாயம் வழிவகுக்கவேண்டும். சமத்துவம் மனித சமுதாயத்தில் முழுமையாகத் தழைக்க இது ஒன்றே சிறந்த வழி.

எளிய மக்கள் வஞ்சிக்கப்படுதல் குறைந்து, சுரண்டல் சமுதாயமே இல்லாத நிலை இதனால் நிச்சயம் ஏற்படும்.’’

பல்வேறு ஜாதியினர் மற்றும் சமூகத்தி னரிடையே நிலவும் கல்வி சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை கருத்தில் கொண்டு கோத்தாரி ஆணையம் பரிசீலித்தது. உண்மையான ஜனநாயகம் நீடித்திருக்க கோத்தாரி ஆணையம் கீழ்க்கண்ட ஆலோசனையை தெரிவித்திருந்தது.

‘‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிள்ளைகளுடைய கல்வி வளர்ச்சிக்கு விசேஷ கவனம் செலுத்தப்படவேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடி மக்கள், சீர் மரபினர், நாடோடி இனத்தினர் மற்றும் ஏறத்தாழ நாடோடிகள் என்று கருதப்படக் கூடியவர்கள் அனைவரும் அடங்குவார்கள் என்பது இந்த ஆணையத்தின் ஆணித்தரமான கருத்து.

கல்வி சார்ந்த அனைத்துத் தீர்மானங்களின்போதும், மேற்கண்ட வகுப்பினர் எல்லோருமே பிற்படுத்தபட்டவர்களாகவே கருதப்படவேண்டும் என்பதே இந்த ஆணையத்தின் நிலைப்பாடு.”

இதுபோல் எதுவும் மத்திய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசின் கல்விக் கொள் கையில் இல்லை என்பதே இது ஒடுக்கப் பட்டோரின் சமூகநீதி உரிமை பறிக்கும் கல்வித் திட்டம் என்பது புரிய

வில்லையா?

சமூகநீதியாளர்கள் அனைவரும்

ஒரே குரலில்,

ஒரே அணியில் நின்று...

இதுபற்றி திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு பெரும் முயற் சியை எடுத்து, இந்தக் கல்வித் திட்டத்தினால் விளையக்கூடிய ஆபத்துகளைத் தடுத்து நிறுத்திட எடுத்திருக்கும் முயற்சிகள் வரவேற்கத்தகுந்தது.

எனவே, மக்கள் - குறிப்பாக ஒடுக்கப்பட்டோர், கல்வி  வாய்ப்புகள் மறுக்கப்பட்டோர் எப்படி இந்தக் கல்வித் திட்டத்தினை ஏற்க முடியும்?

எனவே,  சமூகநீதியாளர்கள், முற் போக்குக் கல்வியாளர்கள், எதிர்க்கும் கட்சிகள், இயக்கங்கள், சமூக அமைப்புகள் அனைவரும் ஒரே குரலில், ஒரே அணியில் நின்று இந்த தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதுதானே சமூகநீதி அடிப் படையில் தேவையான ஒன்று.

சிந்திப்பீர், செயல்படுவீர் -  இதில் தாமதிக்கவே கூடாது!

 #புதியதேசியக்கல்விக்கொள்கை

கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

2.8.2020

தமிழக மக்களின் நலனுக்கும் - மாணவர் சமுதாயத்தின் நலனுக்கும் எதிரான புதிய கல்விக் கொள்கை

தமிழக மக்களின் நலனுக்கும் - மாணவர் சமுதாயத்தின் நலனுக்கும் எதிரான புதிய கல்விக் கொள்கை -2020-அய் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது

தமிழக அமைச்சரவையைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுக!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சருக்குக் கடிதம்!

சென்னை, ஆக.3 தமிழக மக்களின் நலனுக்கும் - மாணவர் சமுதாயத்தின் நலனுக்கும் எதிரான - வருங்காலத் தலைமுறைக்கும் - பண்பட்ட நமது பன்முகக் கலாச்சாரத்திற்கும் ஊறுவிளைவிக்கும் உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த புதிய கல்வி கொள்கை -2020-அய் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது; தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையும் - தமிழ்நாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ள தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006 ஆகியவையே தொடரும் என்றும் பகிரங்கமாக அறிவித்து; அது தொடர்பாக தமிழக அமைச்சரவை யைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தமிழக  முதலமைச்சருக்குக்  கடிதம் எழுதியுள்ளனர்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்

தமிழக முதலமைச்சருக்குக் கடிதம்!

மும்மொழித்திட்டத்தைத் திணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கை-2020-அய் தமிழக அரசு முழுமையாக எதிர்க்க - செயல்படுத்திட மறுக்க - அனைத்துக் கட்சிகள் சார்பில் கோரிக்கை - தொடர்பாக - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்ட ணிக் கட்சித் தலைவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எழுதும் கடிதம் வருமாறு:

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்ட வணையில் உள்ள தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கு எதிராகவும் - தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்டு, தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளாக நடை முறையில் இருந்துவரும் இருமொழிக் கொள்கையை நிராகரித்து, மும்மொழிக் கல்வித்திட்டத்தை முன் னிறுத்தும் வகையிலும் அமைந்துள்ள புதிய கல்விக் கொள்கை-2020 க்கு அனைத்துக் கட்சிகளும், எவ்வித மறு சிந்தனையுமின்றி, கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது.

கரோனா பேரிடர் இந்திய மக்களை வாட்டி அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தேசத்தின் இறுக்க மான இந்த வேளையில், புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய பாஜக அமைச்சரவை ஒப்புதல் அளித் திருப்பதில் இருந்தே, அவர்களின் மன நிலையைப் புரிந்து கொள்ளலாம்.

புதிய கல்விக் கொள்கையில், 

சமஸ்கிருதம் - இந்திக்கு முக்கியத்துவம்!

2016 இல் தொடங்கி- திரு.டி.எஸ்.ஆர். சுப்பிர மணியம் குழு, திரு கஸ்தூரி ரங்கன் குழு, என்றெல்லாம் அமைத்து - உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை, கல்வியில் மதச்சாயம் பூசி - வணிக மயப்படுத்தி - சமஸ்கிருதம், இந்திக்கு முக்கியத்துவம் அளித்து - கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, பெண் ணுரிமை, சமத்துவம், சம வாய்ப்பு, பன்முகத்தன்மை ஆகிய அனைத்திற்கும் விரோதமாக அமைந் திருக்கிறது.

66 பக்கம் கொண்ட ‘‘புதிய கல்விக் கொள்கை 2020”-ன் முகவுரையின் பக்கம் 5-இல் ‘‘கற்பித்தலிலும், கற்பதிலும் பன்மொழியையும், மொழித் திறனையும் ஊக்குவிப்பதுதான் கல்விக் கொள்கையின் அடிப் படைத் தத்துவம்'' (Promoting multilingualism and the power of language in teaching and learning)  என்று கூறியிருப்பதற்கு மாறாக, மீதியுள்ள அனைத்துப் பக்கங்களிலும் நம் தமிழ் மொழிக்கு எதிரான எண்ணவோட்டமே பிரதிபலிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

உதாரணமாக:

1.பாரா 4.11-இல், ‘‘எங்கெல்லாம் முடிகிறதோ'' (Wherever possible) அய்ந்தாம் வகுப்பு வரையாவது பயிற்றுமொழி தாய்மொழியாக இருக்க வேண்டும்'' என்பதும், ‘‘முடிந்தால் 8 ஆம் வகுப்பு வரையிலும் தொடரலாம்'' என்பதும் மத்திய அரசுக்கு மும் மொழித்திட்டத்தின் மீது இருக்கும்  ஆர்வத்தையே அதிகம் வெளிப்படுத்துகிறது.

2. அதே பாராவில், ‘‘ஒரு மொழியைக் கற்பிக்கவும், கற்றுக் கொள்ளவும் அந்த மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டியதில்லை'' என்று கூறுவதிலிருந்து, எப்பாடு பட்டாவது இந்தி மொழியைத் தமிழகத்தில் திணித்துவிட வேண்டும் என்பதில் மத்திய பா.ஜ.க. அரசு முனைப்புடன் செயல்படுவதாகவே தெரிகிறது.

3. ‘‘மூன்று மொழித்திட்டத்தை நிறைவேற்ற மற்ற மாநிலங்களில் இருந்து ஆசிரியர்களை ஒப்பந்த  அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்'' என்று பாரா 4.12-இல்  அறிவுறுத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

4. பாரா 4.13-இல், “மூன்று மொழித்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது, தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968-இல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு - அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் இரு மொழிக் கொள்கைக்கும், ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ்மொழிப் பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டு - நடைமுறையில் உள்ள 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்திற்கும் முற்றிலும் எதிரானது.

5.பாரா 4.17 இல், “பள்ளி முதல் உயர் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் - அறிவைப் பெற மிக முக்கியமானதாகக் கருதி - சமஸ்கிருதம் கற்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக மும்மொழித் திட்டத்தில் ஒன்றாக சமஸ்கிருதத்திற்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்'' (Sanskrit  will  thus be offered at all levels of School and higher education as an important enriching options for students, including as an option in the three language formula) என்பது இருமொழிக் கொள்கையை அடியோடு புறக்கணித்து - சமஸ்கிருதத்தை தமிழ்நாட்டில் திணிக்கும் பகிரங்க முயற்சியாகும்.

6.ஆனால், தமிழக மக்கள் அதிர்ச்சியடையும் வகையில் - அடுத்த பாரா 4.18 இல், ‘‘தமிழ் இலக்கியத்தைப் பாதுகாத்து வைக்கலாம்; இந்தியா முழுமையாக வளர்ச்சி பெற்ற பிறகு நாளைய தலைமுறை அந்த மொழி பற்றி பிற்காலத்தில் அறிவு பெற உதவும்'' (tamil literature must be preserved...  As India becomes a fully developed country, the next generation will want to partake in and be enriched) என்று கூறியிருப்பது தமிழ் மொழியை - தமிழர்களை - ஏன் தமிழ்நாட்டையே  நாக்கில் தேன் தடவி ஏமாற்றும் அடாவடிச் செயல்.

செம்மொழியாம் தமிழ்மொழியை, புதிய கல்விக் கொள்கையில் இவ்வாறு சிறுமைப்படுத்தி - சமஸ்கிருதத்தைத் திணித்திடும் உள்நோக்கில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கல்விக் கொள்கை, தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடைமுறையில் இருந்து வரும் கல்வி முறையைச் சிதைத்துப் பின்னடைவை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. அதில் மேலும் தமிழகக் கல்விக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழகக் கல்விக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்கள் சில:

அவற்றுள்:

1.கல்வியில் வேதக் கலாச்சாரத்தை திணிப்பது.

2.இடஒதுக்கீடு குறித்து எதுவும் சொல்லாமல் சமூக நீதியைப் புறக்கணிப்பது.

3.பெண் கல்வி குறித்து கவலைப்படாது - பெண்ணுரிமையைக் காவு கொடுத்திருப்பது.

4.மூன்று வயது குழந்தையை முறைசார்ந்த பள்ளியில் சேர்த்து குழந்தைகளின் உரிமையைப் பறிப்பது.

5.தொழில் கல்வி என்ற பெயரால், தமிழகத்தில் பல்லாண்டுகளுக்கு முன்னரே தோல்வி கண்ட குலக் கல்வியை மீண்டும் அமல்படுத்துவது.

6.மதிய உணவு வழங்கும் திட்டத்தை மாற்றியமைப்பது.

7.மாநில அளவில் 3,5,8 - ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு. 10+2 என்று  இருக்கின்ற வெற்றிகரமான பிளஸ் டூ ' கல்வி முறையை 5+3+3+4 என்று மாற்றியமைப்பது.

8.கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு.

9.பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பறிக்கும் விதத்திலும் - மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் விதத்திலும் உயர் கல்வியை வகுத்திருப்பது.

10.தன்னாட்சியுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது; ஆகியவற்றை இப்போது அலட்சியப் படுத்தினால், எதிர்காலத் தமிழ்ச் சமூகம் தரந் தாழ்ந்து வீழ்ந்து விடும்.
எந்தக் கோணத்தில் பார்த்தாலும்- இந்தப் புதிய கல்விக் கொள்கை-2020 தமிழ்நாட்டில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைபெற்று வரும் கல்வி முறைக்கு சற்றும் பொருந்தாத - நமது தாய் மொழியாம் தமிழ் மொழியை பின்னுக்குத் தள்ளி - சமஸ்கிருதத்தை முன்னிறுத்துவதாக அமைந்துள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது

தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கைக்கு விரோதமான மும்மொழித் திட்டத்தைத் திணிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஆகவே தமிழக மக்களின் நலனுக்கும் - மாணவர் சமுதாயத்தின் நலனுக்கும் எதிரான - வருங்காலத் தலைமுறைக்கும் - பண்பட்ட நமது பன்முகக் கலாச்சாரத்திற்கும் ஊறுவிளைவிக்கும் உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த புதிய கல்வி கொள்கை -2020-அய் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அனைத்துக் கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

அனைத்துக் கட்சிகளின் சார்பில்....

இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட தமிழக மாணவர் சமுதாயத்தை - காவி மயக் கல்வியின் பக்கமும், பன்முகக் கலாச்சாரத்திற்கு எதிராக திசை திருப்பும் இந்தப் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையும் - தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006 ஆகியவையே தொடரும் என்றும் பகிரங்கமாக அறிவித்து; அது தொடர்பாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

- இவ்வாறு  கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலின்,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல். திருமாவளவன்,

மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர்  எம். எச். ஜவாஹிருல்லா,

மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்,

இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
#RejectNEP2020
- விடுதலை நாளேடு, 3.8.20