சனி, 16 மே, 2020

மருத்துவப் பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்குப் பூஜ்ஜியமா?


சமூகநீதி அணி- சமூக அநீதி அணி என்று
இந்தியா இரண்டாகப் பிளவுபட வேண்டுமா?
முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்?
------------------------------------------------------------------------
கடந்த 8.5.2020 அன்று மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாதது குறித்து விரிவாக எழுதியிருந்தோம்.

மாநிலத்துக்கான இடங்களை அபகரிப்பதா?

மாநிலங்ளிலிருந்து 50 விழுக்காடு இடங்களை அபகரித்துக் கொண்டு, அந்த இடங்களில் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாது என்பது  அரசமைப்புச் சட்டத்துக்கும், சமூகநீதிக்கும் முற்றிலும் எதிரானது என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

தமிழகத் தலைவர்கள் கண்டனம்

அதனைத் தொடர்ந்து தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சமூகநீதியை வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசுக்குக் கடிதங்களை எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது.
சமூகநீதிப் பிரச்சினை என்று வருகிறபோது, தந்தை பெரியாரின் சமூகநீதி மண்ணான தமிழ்நாடுதான் வழிகாட்ட வேண்டிய நிலையிலும், இடத்திலும் உள்ளது.

இந்தப் பிரச்சினையில் இங்கு வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, எந்த அளவுக்கு அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகும்.

மக்கள் தொகையில் 52 விழுக்காடு  மக்களின் கதி இதுதானா?

மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது சட்டப்படியான நிலையாகும். தமிழ்நாட்டிலோ 50 விழுக்காடாகும்.
கண்ணுக்குத் தெரிந்தே திட்டமிட்டே பிற்படுத்தப்பட்ட மக்கள் புறக்கணிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

26 மாநிலங்கள் - 172 கல்லூரிகள் மொத்தம் உள்ள 7981 இடங்களில் (மருத்துவப் பட்ட மேற்படிப்பு) பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு பூஜ்ஜியம் என்பது எவ்வளவுப் பெரிய அநீதி? 52 விழுக்காடு எண்ணிக்கையில் உள்ள பிற்படுத்தப்பட்டோரை கிள்ளுக் கீரையாக பிள்ளைப் பூச்சியாக காலில் போட்டு மிதிப்பதை அனுமதிக்க முடியுமா?
அனைத்து மாநில அரசுகளிடமிருந்தும் மருத்துவ மேற்படிப்புக்கு பெறப்பட்ட இடங்களில் (பிஜி மருத்துவம் 7981 + பிஜி பல் மருத்துவும் 274) இவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்குப் பட்டை நாமமா?

மத்திய அரசுக்கு அளிக்காமல் இருந்தால்...

மாநில அரசுக்கான இடங்களை மத்திய அரசுக்கு அளிக்காமல் இருந்தால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடங்கள் - அதாவது 470 இடங்கள் கிடைத்திருக்குமே!

இந்த இழப்பு சாதாரணமானதுதானா? இதனை அனுமதிக்கலாமா? தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரிடம் இது குறித்து கேட்டபோது, ‘‘மத்திய அமைச்சரைக் கேளுங்கள்’’ என்று சொல்லியிருக்கிறாரே - இப்படி சொல்லுவதற்கு தமிழ்நாட்டில் ஓர் அமைச்சர் தேவையா?
தமிழ்நாட்டில் 50 விழுக்காடு இடங்களையும் மற்ற மற்ற மாநிலங்களில் 27 விழுக்காடு இடங்களையும் பிற்படுத்தப்பட்டோர் இழந்துள்ளனர் என்பதைவிட, அவர்களுக்கு வேறு எந்த வகையான துரோகத்தை, வஞ்சனையை இழைத்திருக்க முடியும்?

இந்தியா இரண்டாகப் பிளவுபடும் - எச்சரிக்கை!

மதச்சார்பு அணி - மதச் சார்பற்ற அணி என்பதுபோல - சமூகநீதி அணி - சமூகநீதிக்கு எதிரான அணி என்று இந்தியா இரண்டாகப் பிளவுபடவேண்டுமா?

மத்திய அரசே மறுபரிசீலனை செய்க!

இதுபற்றி தமிழக முதல்வரோ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரோ இதுவரை வாய்த் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? தமிழ்நாட்டு உரிமைகள் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளும் பறிபோகின்றன. 69 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வந்த தமிழ்நாடும், அதற்குரிய ‘அம்மா ஆட்சி’ என்று சொல்லிக் கொள்கின்ற ஆட்சியினரும் இப்பிரச்சினையில் ஏன், எந்தவிதமான கோரிக்கையையும் வைக்கத் தவறவேண்டும்?
தமிழக அரசே சமூகநீதியைப் பலி கொடுக்கும் எந்த ஆட்சியையும் தமிழ்நாடு அனுமதிக்காது, அனுமதிக்காது - இது கடந்த கால வரலாறு-  எச்சரிக்கை!!

- கி.வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்

16.5.2020 
சென்னை.

புதன், 13 மே, 2020

செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகளை கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்காதது ஏன்?


கலைஞர் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் வழங்கவேண்டிய விருதையும் கடந்த 9 ஆண்டுகளாக வழங்காதது ஏன்?  
-------------------------------------------------------
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச் சகத்தின் சார்பில் கடந்த 9 ஆம் தேதி விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழுக்கு இடம் இல்லையே, ஏன்?

இந்தியாவில் உள்ள பல மொழிகளைச் சேர்ந்த அறிஞர்களுக்குக் கவுரவச் சான்றிதழ், குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுவது தொடர்பான விளம்பரம் இது.

சமஸ்கிருதத்தில் தொடங்கி பல மொழிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதில் செம்மொழியான தமிழ் மட்டும் இடம்பெறவில்லை.
12.10.2004 இல் தமிழ் செம்மொழியாக அறிவிக் கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை செம்மொழித் தமிழ் உயராய்வு மய்யத்தை மைசூரில் உள்ள இந்திய மொழிகளில் நடுவண் நிறுவனத்தில் தொடங்கியது. 2008 மே 19 அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தன்னாட்சி நிறுவனமாக சென்னையில் நிறுவப்பட்டது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடு யாது?

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமாக செயல்படுவதால், குடியரசுத் தலைவருக்கான விருது விளம்பரத்தை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமே அறிவிக்கும் என்று தோழர் இரவிக்குமார் எம்.பி.,  (விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர்) அவர்களுக்கு, இந்நிறுவனத்தின் இயக்குநர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு, நேற்று (12.5.2020)  2019-2020-க்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், செம்மொழித் தமிழுக்கு - 2016-2017, 2017-2018, 2018-2019 ஆகிய மூன்றாண்டுகளுக்கான குடியரசுத் தலைவரின் விருதுகளுக்கான விளம்பரம் வெளியிடப்பட்டு, குழு கூடி முடிவெடுக்கப்பட்ட பின்பும், இதுவரை அறிவிக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையே 2019-2020 ஆம் ஆண்டுக்கு மற்ற மொழிகளுக்கான விளம்பரத்தையும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்டு விட்டது.

கலைஞர் உருவாக்கிய அறக்கட்டளை சார்பில் வழங்கவேண்டிய விருது என்னாயிற்று?

அதேபோல, தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தம் சொந்த நிதியாக ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையினை அளித்தார் (24.7.2008).
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை என்று அதற்குப் பெயரும் சூட்டப் பட்டது.

இந்தியாவிலேயே இது மிக உயரிய விருது என்று கருதப்படுகிறது. ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும், அய்ம்பொன்னாலான திருவள்ளுவர் சிலையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் உருவம் பொறித்த தங்கப் பதக்கமும் - செம்மொழித் தமிழுக்குச் சிறந்த பங்களிப்பைத் தந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படுவதாகும்.

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழி பெயர்ப்பு, நுண்கலைகள் இவற்றில் பெரும் புலமை வாய்ந்த தனியொரு படைப்புக்கோ, தனித்தன்மை வாய்ந்த சிறப்புமிக்க பன்னாட்டு ஏற்புப் பெற்ற ஒருவரின் வாழ்நாள் பங்களிப்பிற்கோ இவ்விருது வழங்கப்படும்.

முதல் விருது கோவை செம்மொழி  மாநாட்டில் வழங்கப்பட்டது

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 அன்று இந்த விருது வழங்கப்படும் என்றும் வரையறுக்கப்பட்டது. முதல் விருது கோவையில் 2010 ஜூன் மாதம் நடத்தப் பெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது பேராசிரியர் அஸ்கோ பார்ப்போலோ என்னும் பின்லாந்து நாட்டுக்காரருக்கு வழங்கப்பட்டது.

அதற்குப் பிறகு 2010 ஆம் ஆண்டுமுதல் 2019 ஆம் ஆண்டுவரைக்கான விருதுகள் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஏனிந்த தாமதம் - முடக்கம்? 

ஏனிந்த தாமதம்? தமிழ் செம்மொழிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளிக்கப்படவில்லை. அதேபோல, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஒரு கோடி ரூபாய் தந்து உருவாக்கிய அறக்கட்டளை சார்பில் வழங்கப் படும் விருதும் கடந்த 9 ஆண்டுகளாக அளிக்கப்பட வில்லை.
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றாலே ஒரு புறக் கணிப்புதான் என்ற எண்ணத்தைத்தானே இது காட்டுகிறது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்  பெயர் அளவுக்குத்தானா? 

சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்பது பெயரளவுக்குத்தான் நடைபெறு கிறது. மாதம் 12 லட்சம் ரூபாய் வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறது. ஆனால், செயல்பாட்டைத்தான் காணோம்.

வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக நாம் சுட்டிக்காட்டிய தவறுகள் திருத்தப்பட்டு,  தமிழ் மொழிக்கான முந்தைய ஆண்டு விருதுகளும், நடப்பாண்டிற்கான விருதுகளும், கலைஞரின் பெயரிலான விருதுகளும் அறிவிக்கப்பட்டு, விருது வழங்கும் விழா -  மத்திய அரசால் நடத்தப்படவேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு இதுபற்றிய  கவலையும், பொறுப்பும் இருப்பதாகவும் தெரியவில்லை. செம்மொழிப் பிரச்சினையில்கூட  வெறும் அரசியல் பார்வைதானா? அதனைத் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. இன்றைய அ.தி.மு.க. அரசு அதற்குரிய விலையை உரிய நேரத்தில் கொடுக்கவேண்டி இருக்கும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
13.5.2020