திராவிடர் கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டம்
ஊத்துக்கோட்டை, பிப்.23 திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை ஆசிரமத்தில் மாணவி தற் கொலைக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று (23.2.2022) காலை ஊத்துக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
பில்லி சூனியம் நீக்குவதாகக் கூறி, இரவு பூஜைக்கு ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி ஹேமமாலினி சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று ஆசிரமத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில்
மாணவியின் உயிரிழப்பிற்குக் காரணமானவர்களை கைது செய்யக்கோரியும், மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் திராவிடர் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் இன்று (23.2.2022) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில அமைப்புச்செயலாளர் வி. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
காஞ்சி மண்டலத் தலைவர் பு. எல்லப்பன், சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர்ஆ.வெங்கடேசன், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் க.ஏ.மோகனவேலு, மாவட்டச் செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி, ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, மாவட்டச் செயலாளர் க. இளவரசன், கும்முடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் ஜே.அருள், புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் கே.எம்.விகந்தர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீலவானத்து நிலவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஒலிமுழக்கங்களை எழுப்பினர்.
மாணவியின் பெற்றோர் பங்கேற்பு
ஊத்துக்கோட்டை ஆசிரமத்திற்குச் சென்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாணவியின் பெற்றோர் கிருஷ்ணமூர்த்தி, நிர்மலா மற்றும் உறவினர்களும் பங்கேற்றனர்.
ஆசிரமத்திற்குச் சென்று வந்த தங்கள் மகள் சந்தேகத்திற்கிடமான முறையில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விவரங்களைப் பதிவு செய்தனர். (அவர்களின் நேர்காணல் நாளை).