பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டுக்காக வேளாண்மை வங்கிகள் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை விவசாயிகளுக்குக் கொடுக்காமல், அவர்கள் விவசாயத்துக்காக ஏற்கெனவே வாங்கிய கடனுக்காக வரவு வைப்பது மனிதாபிமானமற்ற செயல்! எனவே, தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சியின் முன்னணியினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித் துள்ளனர் (21.10.2019). மாவட்ட ஆட்சியர் சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் மனுவைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
கஜா புயலால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பயிர் காப்பீட்டுத் தொகை தொடக்க வேளாண்மை வங்கிகள்மூலமாக வழங்கப்படும் நிலையில், அந்தத் தொகை யைப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்காமல், ஏற்கெனவே விவசாயத்துக்காக விவசாயிகள் பெற்ற கடனுக்காக வரவு வைத்துள்ளனர் என்ற செய்தி உண்மை யிலேயே அதிர்ச்சிக்குரியது - இன்னும் சொல்லப்போனால், சிறிதும் மனிதாபி மானற்ற செயலாகும் இது.
இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன்களை இரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஒரு பக்கத்தில் எழுந்துள்ள நிலையில், இப்படி யொரு செயலை மேற்கொள்ள எப்படித்தான் அரசுக்கு மனம் வந்ததோ தெரியவில்லை.
விவசாய முதலமைச்சர் என்று ஒரு பக்கத்தில் பெருமையாகப் பேசிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் விவசாயிகளின் வயிற்றில் இப்படி அடிக்கலாமா?
இதனை ஒரு கட்சி பிரச்சினையாக, அரசியல் நோக்காகப் பார்க்காமல், அவதிப் படும் விவசாயிகளின் கண்ணீர்ப் பிரச்சினை என்பதை எண்ணி தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்று வலி யுறுத்துகிறோம்.
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
23.10.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக