வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 செப்டம்பர், 2024

திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மூடப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூற முடியுமா? – தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

 

விடுதலை நாளேடு

தமிழ்நாட்டிற்குள் ‘‘பிள்ளையார்’’ வந்தது எப்போது?

திராவிடர்களைக் கொன்றொழித்த கதைகளைக் கொண்டதுதானே ஆரியப் பண்டிகைகள்!
பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும்

ஹிந்து மதப் பண்டிகைகள் எல்லாம் திராவிடர்களைக் கொன்றொழித்த ஆரியப் புராணக் கதைகளின் அடிப்படையில்தானே! தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் பகுத்தறிவுக் கொள்கையைக் கொண்ட ‘திராவிட மாடல்‘ அரசு, இந்த மூடப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூற முடியுமா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று (7.9.2024) விநாயகர் சதுர்த்தியாம்! பிள்ளையார் பிறந்த நாளாம்!
தமிழ்நாட்டுக்குள் ‘‘பிள்ளையார்’’ வந்தது எப்படி?
சில நூற்றாண்டுகளுக்கு முன்தான் வடக்கே இருந்து பிள்ளையார் – விநாயகர் என்று தமிழ்நாட்டிற்குள் பண்பாட்டுப் படையெடுப்பாக உள்ளே திணிக்கப்பட்டது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு காலப்போக்கில் வாதாபியி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘கடவுள்’தான் விநாயகன் – ‘பிறந்தது எப்படியோ?’ (நூல் ஆதாரம்: தமிழறிஞர் – மேனாள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் – பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் நூல்)
‘முருகன்’ (கந்தன்) எப்படி ஸ்கந்தன் ஆக்கப்பட்டு, ‘சுப்ரமணியக் கடவுளாக’ மாற்றப்பட்டான் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் போன்ற கற்றுத் துறைபோகிய தனித்தமிழ் பண்பாட்டுப் பாதுகாவலர்களிின் கருத்தியலை எளிதில் புறந்தள்ள முடியாதே!
அதுமட்டுமா?

வேதங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும்
பிள்ளையார் உண்டா?
‘‘வேதங்களிலும், பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம்பெறவில்லை’’ என்று அனிதா ரெய்னாதாப்பன் (1992:31) குறிப்பிடுகிறார்.
குப்தர் காலத்து முந்தைய சிற்றூர்களிலும் பிள்ளையார் வடிவம் இல்லையென்று கூறும் ஆய்வாளர் ஆனந்த குமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
‘விநாயகர்’ என்பது விண்–நாயகர்–தலைவர் – புத்தருக்கு உள்ள பெயர். அது ஹிந்துக் கடவுளுக்கு வந்தது எப்படி என்று மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறாரே! (‘பெளத்தமும் தமிழும்’) இதற்கு என்ன பதில்?
பிறகு பிள்ளையாரை வைத்து மராத்திப் பார்ப்பனர் திலகர் போன்றவர்கள், பம்பாய் – மராத்திய மாநிலத்தில், அரசியல் ஆயுதமாக்கி, பக்திப் போதையைப் பயன்படுத்தி தங்களது தேசியப் போர்வைக்கு இந்த வர்ணாசிரமவாதிகள் வழிமுறை வகுத்தனர். அதைப் பெருங்கொண்டாட்டமாக்கி, பண்பாட்டுப் படையெடுப்பை வளர்த்தனர்!
முன்பெல்லாம் சிறுசிறு களிமண் பொம்மைகள் ஓரிரு ரூபாய்க்கு வாங்கப்பட்டு, வழிபாடு முடிந்தவுடன் கிணற்றிலோ, ஆற்றிலோ போடப்படும்!

மதக் கலவரத்தை ஏற்படுத்த பிள்ளையாரும் – ஊர்வலமும்!
இப்பொழுது அந்த ஆயுதத்தை மதக் கலவரத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி, அரசியல் லாபம் ஈட்ட
ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்துபரிஷத், வடநாட்டு மார்வாரி – பனியாக்களின் பண வீச்சுடன் நடைபெறும் நிலை தமிழ்நாட்டிற்குள்ளும் ஏற்பட்டுள்ளது!
அப்படி விநாயகருக்கு எந்த சக்தியும் கிடையாது என்று பாமர மூடநம்பிக்கையாளர்களுக்கு நிரூபித்துக் காட்டவே 1953 ஆம் ஆண்டு பிள்ளையார் சிலைகளை பொது இடங்களில் உடைத்துக் காட்டினர் தந்தை பெரியாரும், அவர்தம் தொண்டர்களும்!
அது புண்படுத்த அல்ல; மக்களைப் பண்படுத்தவே! அறியாமையிலிருந்து அவர்களை விடுதலை பெறச் செய்யவே!
‘விக்னத்தைப் போக்குவான்’ என்று கதை அளப்பார்கள் – மக்களின் எந்த ‘விக்னத்தை’, கோணலை அவர் நிமிர்த்தியிருக்கிறார்? சிந்திக்க மறுக்கும் மூடர்களால் இதுபோன்று பக்தியைப் பயன்படுத்தி, பலர் பிழைப்புத் தேடுவதுதான் ‘மிச்சம்!’

பிள்ளையாருக்குப் பூணூல் வந்தது எப்படி?
பிள்ளையார் உற்பத்திபற்றிய கதைகளோ நம்ப முடியாத புளுகு மூட்டைகள் என்பது ஒருபுறம் இருந்தா லும், அருவருப்பு ஆபாசத்தின் தொகுப்பாகவே காட்சி அளிக்கும் பரிதாபம்தானே மிச்சம்!
அக்கடவுளுக்கு ‘‘பூணூல் முக்கியமாம்!’’
எப்படி வந்தது இது?
யாராவது யோசித்தார்களா? சுட்டிக்காட்டுபவர்கள்மீது வசை மாரி பொழிவதுதான் ஒரே வழியா? பதிலா? என்னே, அறியாமை!
இந்த லட்சணத்தில் சில அரசியல் அவலட்சணங்கள் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஏன் தமிழ்நாடு முதல மைச்சர் வாழ்த்துச் சொல்லவில்லை என்று வக்கணை பேசுகின்றன!
தந்தை பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரசு உண்மையான ‘திராவிட மாடல்’ அரசு – அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆட்சிகள்.
மக்களை ‘‘சூத்திரரர்களாக்கி’’, ‘‘பஞ்சமர்களாக்கி’’டும் பண்டிகைகள், அசுரர்கள் என்ற திராவிடர்களைக் கொன்று அழிக்கவேண்டும் என்ற தத்துவத்தை – உட்கருத்தை வைத்தே உருவாக்கப்பட்ட பண்டிகைகள்தான் ஹிந்து மதத்தின் ஆரியப் பண்டிகைகள்!

திராவிடர்களைக் கொன்றொழித்த கதைகளைக் கொண்டதுதானே ஆரியப் பண்டிகைகள்!
மனிதநேயத்திற்கிடமில்லாமல், நம் இனத்தவரை சூழ்ச்சியால் கொன்றதாகக் கதைகளை உள்ளடக்கிய – பண்பாட்டுப் படையெடுப்புமூலம் தமிழ்நாட்டிற்குள் புகுந்த ஜாதி, வர்ணாசிரமத்தை மறைமுகமாக வாழ வைக்கும் பக்திப் போதைக் கருத்துகள்தான் இவை.
இருமொழிக் கொள்கை உடைய திராவிட அரசினை – ஹிந்தித் திணிப்பு விழாவிற்கு அழைத்து வர முடியுமா? அதுபோலத்தான் ‘சூத்திர, பஞ்சம, பெண்ணடிமை ஒழிந்த ஒரு புது சமுதாயம் – சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முனையும்’ கொள்கையுடன் செயல்படும் தி.மு.க. அரசு அதற்கு நேர் முரணான மனுதர்ம, வர்ண தர்மத் திணிப்பு, ‘அசுரர் அரக்கர்’ என்று திராவிடர்களை இழிவுபடுத்திய கதைகளைப் பரப்பும் நிகழ்வுகளுக்கு எப்படி வாழ்த்துக் கூற முடியும்?
மல்லாந்து படுத்துத் தன் மார்புமீதே எச்சில் துப்பும் வேலை ஆகாதா அது? அதை உணர்ந்த பகுத்தறிவுத் தெளிவுதான் நம் அரசுக்கு உரிய தனிச் சிறப்பாகும்!
தனிப்பட்ட வெறுப்பு அல்ல – அதன் அடிப்படை!

அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும்
‘திராவிட மாடல்’ அரசு ஹிந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூற முடியுமா?
ஜாதி, வருணம் ஒழிந்த, சமத்துவ, சமதர்ம, சமூக நீதிக் கொள்கை உடைய ஓர் அரசு – அறிவியல் மனப்பான்மைக்கும், மனிதநேயத்திற்கும் தடை ஏற்படுத்தி, கேள்வி கேட்கும் தன்மையைக் குழிதோண்டிப் புதைத்திடும் வெறும் மூடநம்பிக்கைகளை எப்படி அரசு வளர்க்கும்?
வாழ்த்துச் சொல்லவில்லையே என்று வகைகெட்டுக் கேட்போர், சிந்திக்கவேண்டும்!
அப்படி கேள்வி கேட்கும் ‘சீலர்கள்!’ சீறிப் பாய்வ தற்குப் பதிலாக – ‘அசுரர்களைக்’ கொல்லாத ஹிந்துப் பண்டிகை ஒன்று உண்டா? விரலை மடக்க முடியுமா? பதில் சொல்லுங்கள், ‘‘சதுர்த்தி’’ தமிழ்ச் சொல்லா?
‘நவமி’ தமிழ்ச் சொல்லா? ‘சஷ்டி’, ‘தீபாவளி’ தமிழ்ச் சொற்களா?
அடையாளம் போதாதா?

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
7.9.2024

புதன், 28 ஜூன், 2023

ஒருங்கிணைப்புக்கும், வெற்றிகரமான முன்னெடுப்புகளுக்கும் ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிகமிக அவசியம்! தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி!

 நெருக்கடி நிலை காலத்தில் மட்டுமல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா!

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி!

1

சென்னை, ஜூன் 28 நெருக்கடி நிலை காலத்தில் மட்டு மல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா! வலிமையான ஒருங்கிணைப்புக்கும், முன்னெடுப்புகளுக்கும் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிகமிக அவசியம் என்று தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அவருடைய வாழ்த்துக் கடிதம் வருமாறு:

சுயமரியாதை என்று சொல்லப்படும் தன்மானத் துடன், ஒவ்வொரு மனிதரும் வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் இலட்சியம். தனி மனிதர்களுக்குத் தன்மானம் கிடைக்கப் பெற வேண்டும் என்றால், இயக்கத்தை வழிநடத்துபவர் களுக்குத் தன்மானத்தைவிட இனமானமே பெரிதாக இருக்கும். இருக்க வேண்டும்.

தலைமைப் பண்புக்கு இலக்கணமாகத் திகழும், நீண்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!

தன் மீது வீசப்படும் சொற்களையும், கற்களையும் எதிர்கொண்டு, எதிரிகளின் வசவுகளை உரமாக்கிக் கொண்டு, உயர்ந்து வளர்ந்து, பழமும், நிழலும் தரும் மரமாக நிலைத்து நிற்பதே திராவிட இயக்கத்திற்கான தலைமைப் பண்பு. அத்தகைய தலைமைப் பண்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, நீண்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரராக இருப்பவர்தான் நம் மதிப்பிற்குரிய மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள். 

2

90 வயதில் 80 ஆண்டு பொதுவாழ்வு என்கிற பெருமையைத் திராவிட இயக்கத்தில் அன்றி, வேறு எந்த இயக்கத்திலும் காண்பது அரிது! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது 94 ஆண்டு கால வாழ்வில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்கார ராகத் திகழ்ந்தவர். இனமானப் பேராசிரியர் அவர்கள் தனது 96 ஆண்டு கால வாழ்வில் ஏறத்தாழ அதே அளவிலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இன்று நம் மதிப்பிற்குரிய மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களும் அத்தகைய பெருமைக்குச் சொந்தக்கார ராகத் திகழ்கிறார்.

நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தில் முக்கால் நூற்றாண்டைக் கடந்த பொது வாழ்வு என்பது நம் தலைவர்களுக்கு வாய்த்தது என்பது, நமக்குப் பெரு மையாக மட்டுமல்ல, இந்தச் சமுதாயத்திற்குப் பெரும் பயனாகவும் அமைந்துள்ளது.

மிகப் பெரும் மாற்றத்தை, தான் வாழும் காலத்திலேயே நிகழ்த்திக் காட்டியவர் 

புரட்சியாளர் தந்தை பெரியார்

தன்னலமற்ற தொண்டறத்தால்தான் சமுதாயச் சீர் திருத்தத்தை உருவாக்க முடியும் என்று தனது 95 வயது வரை ஓயாமல் பயணித்து, மக்களிடம் பரப்புரை மேற்கொண்டு, மிகப் பெரும் மாற்றத்தை, தான் வாழும் காலத்திலேயே நிகழ்த்திக் காட்டியவர் புரட்சியாளர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் சிந்தனைகளை அவர் கண் முன்னாலேயே சட்ட வடிவமாக்கிக் காட்டியவர் பேரறி ஞர் அண்ணா. தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலும், பெரியாருக்குப் பிறகும் அவரது சிந்தனைகளைச் சட்டங்களாகத் திட்டங்களாகத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

சுயமரியாதை - சமூகநீதி என்ற தண்டவாளங்களின் மீது வேகம் குறையாமல் ஓடுகின்ற இரயில்கள்!

திராவிடர் கழகத்திற்கும் திராவிட முன்னேற்றத் திற்கும் பாதை சற்று மாறுபட்டாலும் இலக்கு ஒன்றுதான். இரு இயக்கங்களுமே சுயமரியாதை - சமூகநீதி என்ற தண்டவாளங்களின் மீது வேகம் குறையாமல் ஓடுகின்ற இரயில்கள்.

10 வயதிலேயே, திராவிடர் கழக மேடை மீது போடப்பட்டிருந்த மேசை மீது ஏறி நின்று பகுத்தறிவை முழங்கிய மாணவரான ஆசிரியர் அய்யாவின் முழக்கம் இன்று வரை ஓயாமல் தொடர்கிறது. அது என்றும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். நம் விருப்பம்.

தந்தை பெரியாரின் 

முழு நம்பிக்கையைப் பெற்றவர்!

நமது இயக்கத்திலே, தந்தை பெரியாரிடம் இருந்து நற்சான்றை மட்டுமல்ல, அவரது முழுமையான நம்பிக் கையையும் பெற்றவர் ஆசிரியர் அய்யா அவர்கள். பெற்ற நம்பிக்கையை இன்றளவிலும் முழுமையாகக் காப்பாற்றி வருகிறார்.

தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் எனும் ஆலமரத்தை பாதுகாப்பதுடன் பல புதிய விழுது களையும் உருவாக்கி, இந்தக் கொள்கை ஆலமரம் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் தொண்டாற்றி வருபவர் நம் ஆசிரியர் அய்யா அவர்கள்.

ஆசிரியர் அய்யா அவர்களின் பெரும்பணி என்பது ஒரு பெரும் சாதனை!

பேரறிஞர் அண்ணா பொறுப்பு வகித்த, குத்தூசி குருசாமி போன்றவர்கள் பொறுப்பு வகித்த ‘விடுதலை' நாளேட்டின் ஆசிரியராக 60 ஆண்டுகளைக் கடந்து பணியாற்றி வரும் ஆசிரியர் அய்யா அவர்களின் இந்தப் பெரும்பணி என்பது ஒரு பெரும் சாதனை!

தன்னிடம் தந்தை பெரியார் ஒப்படைத்த இயக் கத்தை, பத்திரிகையை, நிறுவனங்களை பன்மடங்கு பெருக்கி, பகுத்தறிவுப் பயணத்தைப் பழுதறத் தொடர்ந்து, தொண்டால் பொழுதளக்கும் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு என் வாழ்த்துகளை மட்டுமல்ல, வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர்!

நெருக்கடி நிலைக்கால ‘மிசா' சிறைவாசத்தில் நான் சித்திரவதைகளை எதிர்கொண்ட போது, என் தோள் பற்றித் துணைநின்ற தோழமைத் தலைவர் நம் ஆசிரியர் அய்யா. அந்த நெருக்கடி நிலைகாலத்தில் மட்டுமல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லா சானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா அவர்கள்.

இன்று அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை இந்திய ஒன்றியம் சந்தித்து வரும் நிலையில், வலிமையான ஒருங்கிணைப்புக்கும், வெற்றிகரமான முன்னெடுப்புகளுக்கும் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிக மிக அவசியம்.

அரசியல் குறித்த ஆலோசனைகள் மட்டுமல்ல, வாழ்வியலுக்கான ஆலோசனைகளையும் அவரிட மிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். 90 வயதிலும் இளைஞருக்குரிய வேகத்துடனும், சுறுசுறுப்புடனும் அவர் செயலாற்றுவதை வியப்புடன் பார்க்கிறேன்.

'பெரியார் உலகம்' முழுமை பெற்று  அவர் தலைமையில் திறப்பு விழா காண வேண்டும்!

தாய்க் கழகமான திராவிடர் கழகத்தைக் கட்டிக்காத்து வரும் ஆசிரியர் அய்யா அவர்கள் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தையும் தாண்டி, நூற்றாண்டு விழா கொண்டாடி, இன்னும் பலப்பல ஆண்டுகள் இதே சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் செயலாற்றி எங்களை வழிநடத்த வேண்டும். அவர் சிந்தனையில் உருவாகிச் செயல்வடிவம் பெற்று வரும் 'பெரியார் உலகம்' முழுமை பெற்று அவர் தலைமையில் திறப்பு விழா காண வேண்டும். பெரியாரையும் அவரது பகுத்தறிவுச் சிந்தனைகளையும் உலகமயமாக்கும் அவரது பெரும் பணி தொடரவேண்டும் எனத் தெரிவித்து, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

நன்றி! 

- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 23 ஜனவரி, 2023

பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து


ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில்  திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சி வேட்பாளராக ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.  இன்று (23.1.2023) சென்னை பெரியார் திடலுக்கு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வருகை தந்து, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் பயனாடை அணிவித்தார். அவருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி, இடைத்தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மு.கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, காங்கிரசு கட்சி செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, நாசே இராமச்சந்திரன், இதயதுல்லா, சட்டமன்ற காங்கிரசு கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை.


சனி, 3 டிசம்பர், 2022

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்து!


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.12.2022) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, அவருடைய வாழ்விணையர் மோகனா அம்மையாருக்கும் பொன்னாடை அணிவித்தார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், முரசொலி செல்வம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். உடன்  திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் (சென்னை, 2.12.2022).

-------++++---++-+---++ 

தாய்க் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா நீடு வாழ்க!

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!


நேரில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார் (சென்னை, 2.12.2022)

சென்னை, டிச.2- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.தலைவர் முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் "தாய்க் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா நீடு வாழ்க!" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

'திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர் என்ற பேரறிஞர் அண்ணாவின் புகழுரைக்கேற்ப, 10 வயது முதல் தந்தை பெரியாரின் இலட்சியத்தை முழங்கத் தொடங்கி, தொண்டறத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு, இளை யோருக்கு நிகராக சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, பகுத்தறிவு இனமான உணர்வினை ஊட்டி வரும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கு அகவை 90 என்பதில் அகம் மிக மகிழ்கிறேன். ‘திராவிட மாடல்' அரசின் சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்துத் திட்டங்களுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாய் வழிகாட்டியாய்த் திகழும் ஆசிரியர் அய்யா அவர்கள் நூறாண்டு கடந்தும் நலமோடு வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.

-இவ்வாறு திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 90ஆம் ஆண்டு பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து (சென்னை கலைவாணர் அரங்கம் - 2.12.2022)


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 90ஆம் ஆண்டு பிறந்த நாளன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 'திராவிட இயக்கப் போர்வாள்' மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத் தொடர்பு செயலாளர் கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்ட்   (மார்க்சிஸ்ட்) கட்சி மாநிலச் செயலாளர் 

கே. பாலகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்  ஆர். பிரியா, ஆகியோர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  அவர்களுக்கு பொன்னாடை  அணிவித்தும் புத்தகங்கள் வழங்கியும்  வாழ்த்துகளை  தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் மூத்த தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி மேலும் நீண்ட காலம் வாழ்ந்து எங்களுக்கும், நாட்டுக்கும் வழிகாட்ட வேண்டும். பல்வேறு கட்சித் தலைவர்களின் வாழ்த்தும் பாராட்டும்!

வெள்ளி, 31 டிசம்பர், 2021

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!


நகரும் ஆண்டில் நலிவுகள் ஏராளம்!

வரும் புத்தாண்டை வலியில்லா வளமை தரும் புத்தாண்டாக ஆக்க  பகுத்தறிவால் பயணிப்போம்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

31.12.2021

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்


 

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன் உள்ளனர் (சென்னை, 14.8.2021)

செவ்வாய், 19 ஜனவரி, 2021

தமிழக அரசின் ஜி.யூபோப் நினைவு விருது பெற்ற பேராசிரியர் உல்ரிக் நிக்கோலஸ்சுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

வியாழன், 5 மார்ச், 2020

ஊன்றிப் படித்து உண்மையை உணர்க! இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை!

(திராவிட இயக்கங்கள் இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை என்று பலரால் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. வாழ்த்துக் கூறாததற்கு என்ன அடிப்படைக் காரணம் என்பதை விளக்கும் அறிக்கை இது)

திராவிட முன்னேற்றக் கழகம், அதே உணர்வுடன் உள்ள மற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற திராவிட கட்சிகள், மற்ற கிறித்துவ, இஸ்லாமிய மத விழாக்களுக்கு வாழ்த்துகள் கூறும்போது, ஏன் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறக் கூடாது? அவர்களிடம் வாக்கு வாங்குகிறார்கள் அல்லவா? இந்து மத விழாக்களை மட்டும் ஏன் ஒதுக்குகிறார்கள்? இது நியாயமா? என்று ஒரு கேள்வி வைக்கப்படுகிறது.

நமது விரிவான, விளக்கமான, கொள்கைப்பூர்வ மான பதிலை அத்தகைய உணர்வாளர்கள் எந்த பொறுப்பு நிலையில் இருந்தாலும், அவர்கள் சற்று ஆழமாக ஊன்றிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறோம்.

ஒரு பழமொழி தெலுங்கில் உள்ளதை வைத்துக் கேட்பார்கள்.

குதிரைக்கு ‘குர்ரம்' என்றால், ஆனைக்கு ‘அர்ரம்' என்றா கூறுவது? அதுபோன்ற கேள்வி மேற்கண்ட கேள்வி.

திராவிடர் இயக்கம் என்பது - பார்ப்பனரல்லாதார் கல்வி, உத்தியோக உரிமையை, பார்ப்பனரின் ஏக போகத்திலிருந்து மீட்டெடுப்பதற்காகவே, சர் பிட்டி தியாகராயர், டாக்டர் நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியவர்களின் ‘‘பார்ப் பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம்'' (Non Brahmin Manifesto) மூலம் 1916 இல் உருவான ஓர் சமூகநீதி இயக்கம்.

வருண தருமத்தின் அடிப்படையில்

அடிமை ஜாதியாக ஆக்கப்பட்டனர்

100-க்கு 3 பேர்களான பார்ப்பனர்களே 100-க்கு 100 இடங்களை கல்வி, உத்தியோகத்தில் ஏகபோகம் கொண் டதற்கு மூலாதாரம் அவர்களது பார்ப்பனீய, சனாதன, வேத, புராண, இதிகாச, மனுதர்ம, சாஸ்திரங்கள் மூலமே! ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புதான் காரணமாகும். ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்'', ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'', ‘‘சமத்துவம், சகோதரத்துவம்'' என்பது வீழ்ச்சியுற்றது -  ஆரியத்தின் வர்ணாசிரமப் படைப்பின்மூலம் படிக்கட்டு ஜாதி - வர்ணதர்மத்தின் வாயிலாக அடிமை ஜாதிகளாக ஆக்கப்பட்டனர். (அம்பேத்கர், பழங்குடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையெல்லாம் இணைத்து ‘அடிமை ஜாதிகள் - வகுப்புகள்' என்று ஒரு பெயர் (Servile Class) என்று கூறினார்.

பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று நால்வருண முறையும், அதற்கும் கீழே, தாழ்த்தப்பட்டவர்களாக, பஞ்சமர்கள், என 5 ஆம் பிரிவையும், அதற்கும் கீழே அனைத்து ஜாதி பெண் மக்களும் பிரித்து வைக்கப்பட்டனர்.

கல்வி உரிமை - பிரம்மா முகத்தில் பிறந்த (மனுதர்மப்படி) பிராமணனுக்கே உரியது என்னும் ஒவ்வொரு வருணத் திற்கும் ஒரு தர்மம். சத்திரியனுக்கு ஆட்சி, வைசியனுக்கு வியாபாரம், விவசாயம்; சூத்திரனுக்கு மேலே கண்ட மூன்று ஜாதியினருக்கும் பொறாமையின்றி பணிவிடை செய்தல் (அடிமைத் தொழில்). இது மனிதர்கள் செய்தது அல்ல. கடவுளே செய்த ஏற்பாடு என்பது மனுநீதி - இந்து மதம்.

ரிக் வேத புருஷ சுத்தம் முதல் மனுவரை கூறப்பட்டு, அதன்மூலம் பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி, உத்தி யோகம் சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டு வந்தது.

சூத்திரர்கள், சுதந்திரத்தையோ, சமத்துவத்தையோ, சகோதரத்துவத்தையோ, உரிமைகளையோ எதிர்பார்க்காது அடிமைக் குற்றேவல் செய்யவேண்டியவர்கள் மட்டுமே!

கீதை என்ன கூறுகிறது?

‘‘சதுர்வணம் மயாசிருஷ்டம்'' - நான்கு வகை வருணங் களை ‘‘நானே உண்டாக்கினேன்'' என்று பகவத் கீதையில் விஷ்ணு அவதாரமான கிருஷ்ணன் கூறியதாக எழுதப் பட்டுள்ளது.

‘‘சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்'' (சுலோகம்  32; அத்தியாயம் 9) - வருணங் களையும், அதன் தர்மங்களையும் உண்டாக்கிய நானே நினைத்தாலும், என்னால்கூட  அவற்றை மாற்றவே முடி யாது  - இப்படி எழுதப்பட்டு இருக்கும் கீதையை அரசே முன்னின்று பரப்ப முயற்சிக்கிறது - திராவிடர்களாய்ப் பிறந்தவர்கள்கூட, இதுபோன்ற கீதைபற்றி புரிந்தோ, புரியாமலோ தலையாட்டினால், தமக்குப் பெருமை என்று எண்ணுவது நடைமுறையில் இன்றளவும் இருக்கிறது.

‘ஏன் வாழ்த்துச் சொல்லக்கூடாது - இந்து பண்டிகை களுக்கு?' என்று கேட்கும் நண்பர்களுக்கும் தெளிவு படுத்தவேண்டியது நமது முக்கிய கடமை என்பதால், இதை மூலாதாரத்திலிருந்தே விளக்கி, தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது! அதனால் விளக்கம் நீள்கிறது.

மதம் மாறியது ஏன்?

மற்ற மதங்கள் வெளிநாட்டிலிருந்த மதங்கள், இந்து மதத்திலிருந்து ஜாதி, தீண்டாமை, நெருங்காமை, தொடாமை, பாராமை என்ற Untouchability, Unseeability, Unapproachability  என்ற மனித உரிமைப் பறிப்பின் கொடுமையிலிருந்து தப்பிக்கவே, அந்த மதங்களுக்கு பல தலைமுறைகளுக்கு மாறியவர்கள் இங்குள்ளவர்கள்.

இந்து மதம் என்ற பெயர் 200 ஆண்டுகளுக்கு முன்பு அந்நியர் வெள்ளைக்காரன் கொடுத்த பெயர் என்பதை காஞ்சி சங்கராச்சாரியாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி (‘‘தெய்வத்தின் குரல்'' முதல் பகுதி, பக்கம் 264) உள்பட, அக்னிகோத்திரம்  இராமானுஜ தாத்தாச்சாரியார், வரலாற்று ஆசிரியர்கள், உயர்நீதிமன்றத் தீர்ப்புகள்வரை கூறும் நிலையில், அதன் வர்ணதர்மம் -  திராவிடக் கலாச்சாரமான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதற்கு எதிரானதாகும்.

இந்து மதம் என்பது, யாதும் ஊரே, யாவரும் கேளிர் - அனைவரும் உறவினர் என்ற திராவிடத்தின் மனித சமத்துவ மாண்புக்கும் மாறானது; பிராமண - சூத்திர - பஞ்சம சண்டாளர் என்று பிரித்து, மனித சமத்துவத்தை ஏற்காததாகும்! பிறவி இழிவைச் சுமத்தியதோடு இன்றளவும் பாதுகாத்து வருவதாகும்.

இழிவின் நீட்சியே இந்துப் பண்டிகைகள்

திராவிட மொழிகளுக்கே தாயாகிய, மூத்த மொழி செம்மொழியான தமிழையே ‘நீஷ பாஷை' என்றும், ஆரிய மொழியான வடமொழியான - சமஸ்கிருதத்தை ‘தேவ பாஷை' என்றும் கூறும் நிலை உள்ளதா இல்லையா? இன்றும் நமது பக்தர்கள் வணங்கும் கோவிலிலும், திருமணம் போன்ற நம் வீட்டு நிகழ்ச்சிகளிலும் பார்ப்பன ‘‘மேல்ஜாதி யினரை'' அழைத்து நடத்தி, நமது அடிமைத்தனத்தை - திராவிடர்களின் அடிமை முறிச் சீட்டை - அருவருப்பை - பார்ப்பனர்களின் வேசி மக்கள் எனும் இழிநிலையை அவர்கள் மனுதர்ம நூலில் அவர்கள் எழுதியுள்ளதை அவ்வப்போது புதுப்பித்து வந்துகொண்டே உள்ளனர்.

அதன் நீட்சிதான் இந்துப் பண்டிகைகள்.

தீபாவளியானாலும்,

சிறீராம நவமியானாலும்,

கோகுலாஷ்டமியானாலும் (கிருஷ்ண ஜெயந்தி)

விநாயகர் சதுர்த்தியானாலும்,

தமிழ் வருஷப் பிறப்பு என்ற ஆபாச அருவருப்புக் கதைகளைக் கொண்டதானாலும்,

இவையெல்லாம் மூடநம்பிக்கைகள், அறிவுக்கு ஒவ் வாத கதைகளாகப் புகுத்தப்பட்டன என்பது ஒருபுறம். மற்றொருபுறம் இது அடிப்படையில் இன இழிவைச் சுமத்துவதாகும். ‘அசுரர்களை' அழித்து, தேவர்கள் வெற்றி பெற்றதே விழாக்களின் மய்யக் கருத்தாகும். இதன் அவதார ரகசியம் - ஆரியர்கள் - திராவிடர்களைக் கொன்றதை, வென்றதை அடிப்படையாகக் கொண்டதே! ஒரு பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவே.

சூத்திரப்பட்டம் ஒழிய - தந்தை பெரியாரின் கட்டளைகள்

அதற்கும் மோசமாக, சூத்திரப் பட்டத்தை நம் மக்கள்மீது திணிப்பதாகவே ஒவ்வொரு இந்து பண்டிகைகள் மத விழாக்களின் கதைகளும், தாத்பரியங்களும், தத்துவங்களும் அமைந்துள்ளன.

எனவே, எதையும் ஆழ்ந்த அறிவுடன் ஆராய்ந்து, நம் மக்களின் சூத்திர அவமான இழிபட்டத்தை சட்டம், சம் பிரதாயம் நடைமுறையில் ஒழித்து, மானத்தையும், அறி வையும் மனிதர்க்குப் போதித்த தந்தை பெரியார் ரத்தினச் சுருக்கமாக ஒருமுறை அழகாக சில அறிவுரை வாசங்களைக் கூறினார்.

‘‘தமிழர்களே, உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய,

கோவிலுக்குப் போகாதீர்கள்!

நெற்றிக் குறிகளை இடாதீர்கள்!

மதப் பண்டிகைகளைக் கொண்டாடதீர்!

பார்ப்பானை ‘பிராமணன்' என அழையாதீர்!'' என்று கூறினார்.

மற்ற வெளி மதங்கள் நம்மை ‘‘சூத்திர - பஞ்சமர்களாக'' ஆக்குவதில்லை - படிக்காதே என்று சொல்லுவதில்லை. கணவன் இறந்தால், விதவையைத் தீயில் சுட்டுப் பொசுக்கப்படவேண்டும்; அல்லது விதவையாக எல்லா உரிமைகளையும் இழந்து ஜடமாக இருக்கவேண்டும் என்ற மனித அநாகரிகத் தத்துவங்கள் மற்ற மதங்களில் இல்லை.

இதனை எதிர்க்கத்தான் தந்தை பெரியார் தனியே காங்கிரசுக்குள்ளே 1920 முதல் 1925 வரை கல்வி, உத்தியோக உரிமை, பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கு - வகுப்புரிமையாகக் கிட்டவேண்டும் என்று போராடி, அதில் வெற்றி கிட்டாத நிலையில், வெளியேறினார். சமூகநீதிக்குப் போராடுவதுதான் தன் ஒரே பணி என்று உறுதியாகத் தெளிந்தறிந்து நம்மை அடக்கியாளும், இழிவுபடுத்தும் மூல வேர் - மதத்தில், சாஸ்திரத்தில் பண்டிகைகளில் உள்ளன என்று கண்டறிந்து - சுயமரியாதை இயக்கத்தைத் தொடங் கினார்.

திராவிடர் கழகம் -

கலாச்சார ரீதியாக வரலாற்றுப் பெட்டகம்

பிறகு அவர் நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட அரசியல் கட்சிக்கும், 1938 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூத்திரப் பட்டத்தை தொடக்க முதல் அந்த அமைப்பும் எதிர்த்து வந்துள்ளது. அறிஞர் அண்ணா போன்ற தளபதிகள் முன்னிலையில், 1944 இல் சேலத்தில் நீதிக்கட்சி + சுயமரியாதை இயக்கம் இணைந்து  - பார்ப்பனரல்லாதார் என்ற எதிர்மறை அடையாளப் பெயர் தேவையில்லை - கலாச்சார ரீதியாக வரலாற்றுப் பெயரான ‘திராவிடர்' என்று மாற்றத்தையும் செய்து ‘‘திராவிடர் கழகம்'' என்ற பெயர் சூட்டி, அறிஞர் அண்ணா பெயரில் அமைந்த தீர்மானமாக உருவெடுத்தது!

அதே கொள்கையுடன் அரசியலுக்குச் சென்றதால்தான், ஆட்சி மூலம் கொள்கைகளை செயல்படுத்தி வெற்றி காண முடியும் என்று கருதி, அண்ணா தலைமையில் தி.மு.க. உரு வானது 1949 இல். அப்போது உடனே அரசியலில் - தேர்த லில் அண்ணா குதித்துவிடவில்லை என்பதை இன்றைய இளைய தலைமுறை - வரலாறு படிப்பதன்மூலம் அறிய வேண்டும் - நிகழ்வுகளை அசை போடவேண்டும்.

தி.மு.க.வின் சட்ட திட்டம் என்ன சொல்லுகிறது?

1949 இலும் சரி, அதன் பிறகு 2009 இல் திருத்தப்பட்ட ‘‘தி.மு.க. கொள்கை -குறிக்கோளும் சட்டத் திட்டங்களும்‘‘ என்ற தலைப்பில் தி.மு.க. தலைமைக் கழக வெளியீட்டின்படி,

விதி 2 -  குறிக்கோள்:

அறிஞர் அண்ணா வகுத்தகுறிக்கோளுக்கு ஏற்ப, தமி ழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மொழி வழி மாநிலங்களிலும் இந்திய அரசுரிமை ஒருமைத்தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு, நெருங்கிய திராவிட கலாச்சார கூட்டுறவு நிலவப் பாடு படுவது; அரசியல் நிர்ணயச் சட்டத்தில் முழு நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டு சமதர்மம், சமயச் சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில் முழு ஈடுபாடும், பற்றும் கொண்டு இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கட்டிக் காப்பது என்பது தி.மு. கழகத்தின் குறிக்கோள் ஆகும்.

விதி 3 - கோட்பாடு:

அறிஞர் அண்ணா அறிவுறுத்திய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும்; பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச் சிக்கான சீர்திருத்தப் பணி ஆற்றிடவும்; பொருளாதாரத்  துறையில் வறுமையை வென்று, சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வு பெற வழிவகை கண்டிடவும்; பிறமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமல் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும், அவைகளுக்கான உரிய இடத் தைப் பெற்றுத் தரவும்; மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களில் சுயாட்சியும் - மத்தியில் கூட்டாட்சியும்  (Autonomy for States & Federation at Center) உருவாகிடவும் தொண்டாற்றுவது என்று கூறுகிறது தி.மு.க.வின் சட்டத் திட்டம்.

12 ஆண்டுகளுக்குமுன் (27.12.2008)  கலைஞர் தலை மையில் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானிக்கப் பட்டவைதான் இவை. இன்றும் அது தொடர்கிறது - தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில்.

இந்த நிலையில், அடிக்கட்டுமானத்திலிருந்து மாறிட எண்ணவேண்டிய அவசியமில்லை.

தமிழர் விழாவை சங்கராந்தி ஆக்கியது ஆரியமே!

அறிஞர் அண்ணா எழுதிய ‘ஆரிய மாயை' நூலில், ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு விழாக்களில் மட்டு மல்ல; தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் வருணத்தைப் புகுத்தியதை கண்டித்தே வந்திருக்கிறார்கள்!

அதிலும் நமக்குள்ள ஒரே  பொங்கல் திருநாள் - திராவிடர் திருநாள் - அறுவடைத் திருநாள் - அறிவுக்கு, உழைப்பிற்கு ஏற்ற திருவிழா!

இதையும் ஆரியம் ‘சங்கராந்தி' என்று அபகரித்துள்ளது.

‘‘தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு - சித்திரை அல்ல, நித்திரையில் உள்ள தமிழா'' என்று புரட்சிக்கவிஞர் பாடினார்.

தீபாவளியை எதிர்த்து நரகாசுரன் மலர் போட்ட இயக்கம். அசுரன் என்றால், குடிக்காதவன் என்ற பெரு மையைப் பெற்றவர்கள். சுராபானத்தைக் குடிப்பவர்கள் சுரர்கள் - குடிக்காதவர்கள் அசுரர்கள் - திருஷ்டம் - அதிருஷ்டம் என்பது போன்றே!

திராவிட அரசியல் கட்சி, பதவிக்குப்  போவது, வெறும் ஆட்சியைக் கடைப்பிடித்து பத்தோடு பதினொன்றாக அரசியல் கட்சியாக இருப்பதற்கல்ல - நாடாளுமன்றத்தில் ‘‘பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் - திராவிடம் முழக்கம்'' எப்படி ஒரு அதிர்வலைகளை வடக்கே  உரு வாக்கியதோ, அதனை உறுதிப்படுத்தும் தன்மையில், திராவிட இனத்தின்மீதான பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தி, மீட்டுருவாக்கத்தைச் செய்வதில் வெற்றி காணவேண்டும் - இது மிகவும் அவசியமாகும்.

ஜாதி ஒழிப்பு -  தீண்டாமை ஒழிப்பு - பெண்ணடிமை ஒழிப்பு - மூடநம்பிக்கை ஒழிப்பு - சமூகநீதி - அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் நமது கோட்பாடாகும்.

மனிதர்களுக்கு மானத்தையும், அறிவையும், உரிமை களையும் பெற்றுத்தரவேண்டும்.

அறிஞர் அண்ணா அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்த

சுயமரியாதைத் திருமணச் சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கை இவற்றின் தனித்தன்மை யான ஆழ்ந்த பொருள் என்ன? புரிந்துகொள்வீர்!

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சாதனைகளின் பின்னணி என்ன?

கலைஞரின்,

தமிழ் செம்மொழி,

தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம்,

பெண்களுக்குச் சொத்துரிமை,

அனைத்து ஜாதியினருக்குமான அர்ச்சகர் உரிமைச் சட்டம்

இவையே, ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து திராவிட உணர்வினை மீட்டுருவாக்கும் மறுமலர்ச்சிப் பணிகள் அல்லவா!

எனவேதான், அய்யா தத்துவங்களை, அண்ணாவும், கலைஞரும் நடைமுறைப்படுத்தினார்கள்.

எது நம்முடையது - எது பிறருடையது என்று வெளிப்படுத்திட - காட்டிட நமது தலைவர்கள் நிறுவியதை - உணரத் தவறினால்,  மாற்ற முனைந்தால், பாதை மாறும் பரிதாப நிலையே!

திராவிட இயக்கம் வெறும் அரசியல் கட்சியல்ல. சமு தாய மாற்றத்திற்கான அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்ட வரலாற்றுக் காரணத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதாகும்.

‘‘இந்து என்றால் இழிவை ஏற்பதே’’

அண்ணாவின் கருத்து

இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவது நமது இன இழிவை - நாம் நாலாஞ் ஜாதிக்காரர்கள் - சூத்திரர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதாகும். வெறும் மூடநம்பிக்கைக் காரணங்கள் மட்டுமல்ல என்பதைத் தெளிவாக, உறுதியாக, திட்டவட்டமாக உணர்தல் அவசியம்.

இதுபற்றி தி.மு.க. நிறுவனர் அறிஞர் அண்ணா கூறுவது என்ன?

‘‘நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மி டையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோகயாகப் புரட்டுகள் - மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை ‘இந்து’ என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக் கொள்ள எப்படித்தான் மனம் இடம்தரும்? எப்படித் தான் துணியும்? “இந்து மதம்“ என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் “இந்து” என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? மதிதுலங்கும் விஷயங்களை விட்டு, மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதைவிட்டு, மாள வழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழிபிறந்த பின்னர், அடிமை முறிச் சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும் போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் ‘இந்து மார்க்கத்தில்’, போய்ச்சேர இசை வாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச்சேரார்! இழிவைத் தேடார்!!''

(அண்ணாவின் ‘‘ஆரிய மாயை'' நூலிலிருந்து)

- இதற்கு மேலும் தெளிவான விளக்கமும் தேவையா?

ஏன் அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது தன்னை ‘இந்து' என்று பதிவு செய்யாமல், தன் மதம் ‘‘திராவிட மதம்'' என்றுதான் கூறி பதிலளித்தார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் எந்தக் காலத்திலும் தன்னை ‘மானமிகு சுயமரியாதைக்காரன்' என்று கூறிக் கொண்டதுடன், தமிழ்ப் புத்தாண்டு தைமுதல் நாள் என்று தனி ஒரு சட்டமே இயற்றினார் என்பதையெல்லாம் மறந்துவிட முடியுமா?

இந்துப் பண்டிகை வாழ்த்து எனும் பூச்சாண்டி

‘‘இந்துப் பண்டிகை வாழ்த்து, இந்து மதப் பூச்சாண்டி'' -  இவைகளுக்கு உண்மையான திராவிட அரசியல் கட்சிகள் பயப்படவேண்டியதே இல்லை.

ஆட்சிக்குச் செல்வோரின் நாணயம், கடும் உழைப்பு, வாக்குறுதி நிறைவேற்றம், நேர்மை - ஊழலுக்கு அப் பாற்பட்டு மக்கள் நலம் சார்ந்த ஆட்சித் திட்டங்கள் இவைகளுக்காகவே பெரிதும் வாக்களிக்கிறார்கள்.

அதைத் தாண்டி, பெரியார் மண்ணாகிய இத்தமிழ் நாட்டில் இன உணர்வு, மொழி உணர்வு, பண்பாட்டுப் பாதுகாப்பு, சமூகநீதி இவைகளுக்கு இன எதிரிகளால் ஆபத்து என்பதை உணரும்போது, உண்மையான திராவிட இயக்கமே அதனைப் பெற்றுத் தரும்; காப்பாற்றும் என்ற உறுதியுடன் நின்றால், திராவிட இயக்கம் பக்கமேதான் மக்கள் நிற்பர். எத்தனை மாயக் குதிரைகள், மகுடம் தரிக்க ஆசைப்பட்டாலும், கடைசியில் அவை பொய்க்கால் குதிரைகள் என்று புரிந்துகொள்வது என்பது உறுதி.

அண்மையில், டி.ஜே.எஸ்.ஜார்ஜ் என்ற மூத்த பத்திரி கையாளர் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ நாளேட்டில், கட்டுரை ஒன்றை  எழுதியுள்ளார்.

கடவுளைக் காட்டி சிலர் வாக்கு வங்கிகளைப் பெறலாம் என்ற நிலை, பொதுவாக வெற்றி பெறாது; தமிழ்நாட்டில் அது எடுபடாது என்பதைத் தெளிவுபடுத்திய கட்டுரை அது.

அப்படி ஒரு மாயையை ஆர்.எஸ்.எஸ்., இந்து வட் டாரங்கள் உருவாக்கி பயமுறுத்தும் ‘பாச்சா' முன்பும் பலிக்க வில்லை; இராமனும், கிருஷ்ணனும் இரண்டு தேர்தல்களிலும் (1971 ஆம் ஆண்டிலும், 2011 ஆம் ஆண்டிலும்) தோற் கடிக்கப்பட்டார்கள்.

இனியும் அவர்கள் தோற்பார்கள் - எந்தப் பூச்சாண்டியைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை - மக்கள் நம் பக்கம் - திராவிடத்தால்!

உறுதியான லட்சியப் பயணத்தில் தடுமாற்றம் - தடம் மாற்றம் தேவையில்லை.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

5.3.2020