மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட
பரப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 26 அக்டோபர், 2023
ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023
ஓசூரில் தமிழர் தலைவர்!
February 19, 2023 • Viduthalai
ஆளுநர்கள், அரசியலில் தலையிடக் கூடாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
காதலர் தினத்தன்று பசுவை அரவணைத்தவர்கள், மருத்துவமனையில் இருக்கிறார்கள்!
ஓசூர், ஊற்றங்கரை பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆதாரங்களுடன் கருத்துரை!
ஓசூர், பிப்.19 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்ற பரப்புரைப் பயணத்தில் ஓசூர், ஊற்றங்கரை பகுதி களில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகில் 18.02.2023 அன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்
சு.வனவேந்தன் தலைமை வகித்தார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் கோ.கண்மணி, மாவட்ட மகளிரணி செயலாளர் லதாமணி, மாவட்ட மகளிரணி தலைவர் செ.செல்வி, மாவட்ட அமைப்பாளர் முனுசாமி, ப.க. மாவட்ட செயலாளர் சிவந்தி அருணாசலம், மாநகர செயலாளர் சின்னராசு, மாநகர தலைவர் கார்த்திக், ஒன்றிய அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ப.க.தலைவர் கு.வணங்காமுடி தொடக்க உரையாற்றி னார். முன்னதாக பறைஇசை நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி உரையாற்றினார்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
சனாதன மதம் பார்ப்பனர்களுக்கானது!
தமிழர் தலைவர் தனது உரையில், “இது முழு தனிக் கூட்டமல்ல, ஆகவே, தந்தை பெரியார் காலத்திலிருந்து புத்தகங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிற இயக்கம் இது! எதற்கென்றால், நாங்கள் பேசுவதற்கான ஆதாரங்கள் புத்தகங்களில்தான் உள்ளன. ஆகவே, வாங்கிப் படித்து பயன்பெறுங்கள்’’ என்று சொல்லிவிட்டு, சமூக நீதி என்றால் என்ன? என்று கேட்டு, ''பார்ப்பனர்கள் நூற்றுக்கு 3 பேராக இருந்துகொண்டு நூற்றுக்கு நூறு அனுபவித்தார்கள். இதையெல்லாம் மனதில் கொண்டு அம்பேத்கர் மிகுந்த சிரமங்களுக்கிடையே இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு மீண்டும் மனுதர்மத்தை இந்தியாவின் சட்டமாக கொண்டு வரத் துடிக்கிறார்கள். 2024 இல் மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக மனுதர்மம் இந்திய அரசமைப்புச் சட்டமாக வரும்'' என்று சொல்லிவிட்டு, 1928 இல் திராவிட மாடல் ஆட்சியின் தொடக்கமாக இருந்த நீதிக்கட்சி ஆட்சியில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று பார்ப்பனருக்கும் சேர்த்து இட ஒதுக்கீடு அமலில் இருந்ததை நினைவு கூர்ந்தார். சனாதனத்தைப் பற்றி பேசி வந்தார், ஆளுநர் நினைவு வந்து, ”ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது” உச்சநீதிமன்றத் தீர்ப்பை செய்தித்தாளிலிருந்து படித்துக் காட்டினார். தொடர்ந்து சனாதனம் என்றால் என்ன? என்பது பற்றி விளக்க முனைந்தார். அதாவது, சனாதனம் என்றால், அதுவொரு மதம்தான்! ஆனால், யாருக்கு? என்று கேள்வி கேட்டு, “உங்களுக்கும், எனக்கும் இல்லை. முதலாம் வர்ணத்தாருக்கு” என்று ஹிந்து பனாரஸ் பல்கலைக்கழகம் 100 ஆண்டுகளுக்கு முன்பு காசி இந்து கல்லூரியாக இருந்தபோது, பி.ஏ. பாடமாக அது இருந்ததை படித்துக் காட்டினார். முதலாம் வர்ணம் என்றால் தலையில் பிறந்தவர்கள், அதாவது பார்ப்பனர்கள் என்று பளிச்சென்று விளக்கினார்.
சேது சமுத்திரத் திட்டம் மறுபடியும் வரவேண்டும்!
''2014 இல் பிரதமராக வந்த மோடி அவர்கள் கொடுத்த வாக்குறுதி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத்தருவோம் என்பதாகும். அதை கணக்கு போட்டால் இதுவரை 9 ஆண்டுகள் ஆயிற்று. 9❌2 கோடி = 18 கோடி! இதுவரை 18 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்கணும். கொடுத்திருக்கிறாரா?'' என்று மக்களைப் பார்த்து கேட்டார். இல்லை என்பது போல் மக்கள் வேகமாக தலையாட்டினர். தொடர்ந்து, உலகத்தில் இருக்கும் கருப்புப் பணத்தையெல்லாம் கண்டுபிடித்து எடுத்துட்டு வருவோம், அது ஒவ்வொரு வர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என பொத்து, பொத்துன்னு விழும் என்று சொன்னார்; விழுந்ததா? என்றார். மக்கள் இல்லையென்பது போல் தலை யாட்டினர்.
கேட்டால் அமித்ஷா 'ஜூம்லா' (சும்மா) என்கிறார். இதுதான் குஜராத் மாடல் என்று கூறிவிட்டு, திராவிட மாடல் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உண்மை யிலேயே வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும். அதுதான் சேது சமுத்திரத்திட்டம் என்றார். கைதட்டல் பலமாகக் கேட்டது. தொடர்ந்து அதைப்பற்றி சற்று விரிவாகப் பேசினார். நீதிக்கட்சி காலத்தில் இருந்த சர்.ஏ.ராமசாமி (முதலியார்) தமிழ்நாட்டு வளத்தைப் பெருக்க சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் அறிக்கை கொடுத்ததை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து சேது சமுத்திரத் திட்ட செயலாக்கத்தில் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காட்டிய அக்கறை கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் சம்மதத்தோடு தீர்மானம் நிறைவேற்றியது வரையிலான ஒட்டுமொத்த திராவிடர் இயக்கத்தின் பங்களிப்பு என்னவென்பதை எடுத்துரைத்தார். இந்தத் திட்டம் 2008 இல் நிறைவேறியிருக்கும், மூன்று பார்ப் பனர்களின் சூழ்ச்சியால் நின்று போனதை நினைவூட்டினார். பா.ஜ.க.வின் இரட்டை நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தினார். ''தமிழ்நாடு செழுமை பெற, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புப் பெற சேது சமுத்திரத்திட்டம் மறுபடியும் வரவேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு!'' என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்தப் பரப்புரை கூட்டத்தில் தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் (சி.பி.அய்), கழக அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி, வி.சி.க. அமைப்புச் செயலாளர் கோவேந்தன், சி.பி.அய். மாநகர செயலாளர் சங்கரய்யா, வி.சி.க. மாவட்ட செயலாளர் மாயவன், வி.சி.க. தொகுதி செயலாளர் இராமச்சந்திரன், ம.ஜ.க. பொறுப்பாளர் நவுசாத், தி.மு.க. மாநகராட்சி சுகாதார குழுத் தலைவர் மாதேஸ்வரன், கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் மு.ஜானகிராமன், திராவிடர் கழக மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, ப.க. எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் ம.கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் சின்னச்சாமி நன்றி கூறினார். அதைத் தொடர்ந்து தோழர்களின் அன்பு மழையில் நனைந்தபடியே ஓசூரிலிருந்து 100 கி.மீ தூரமுள்ள ஊற்றங்கரைக்கு பயணக்குழுவுடன் புறப்பட்டார்.
ஊற்றங்கரையில் தமிழர் தலைவர்!
ஊற்றங்கரையில் கழகக் கொடிகள், தொடர் வண்ண விளக்குகள், பதாகைகள் என்று ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. அங்கே பெரியார் சிலை அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அறிவரசன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் பொன்முடி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் மாணிக்கம், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பி.கலைவாணன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை ஜி.கருணாநிதி, மாவட்ட துணை தலைவர் வண்டி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக கொடியினை ஏற்றி வைத்து மண்டல தலைவர் பழ.பிரபு உரை நிகழ்த்திட திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தொடக்க உரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
பெண்கள் பாலியல் உரிமை கோரும் மாநாடு!
தமிழர் தலைவர் தனது உரையில், “இது 27 ஆவது கூட்டம் என்று கருதுகிறேன். கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்கும் உங்களுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று சொல்லிவிட்டு, இங்கே மாவட்ட செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றிய பழனியப்பன் காலத்தில் தான் பெண்கள் பாலியல் உரிமை கோரும் மாநாடு நடைபெற்றது. பிறகு காங்கிரஸ்காரராக இருந்து பின்னர் நம்முடன் இணைந்த பெருமாள் (ரெட்டியார்) ஆகியோர் நினைவுக்கு வருகின்றனர் என்று பழைய நினைவுகளில் மூழ்கி விட்டு, எடுத்த எடுப்பிலேயே சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேசினார். அவர் பொதுவாக சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம் என்பதைப் பேசிவிட்டு சேது சமுத்திரத்திட்டம் பற்றி பேசுவதை வரையறையாக வைத்துக்கொண்டிருந்தார். ஆனால், இளைஞர்களின் வேலை வாய்ப்போடு தொடர்புடையது என்பதால், அதற்கான முக்கியத்துவம் கூடிக்கொண்டே வந்தது. எனவே, அதை இன்று முதலில் பேசினார்.
கல்வி தொடர்பாக பேசவந்தவர் அதனோடு தொடர்புடைய ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு பற்றி பேசினார். 100 ஆண்டுகளாக திராவிடர் இயக்கம் பாடுபட்டதில் கற்றோரின் எண்ணிக்கை 70% க்கும் மேல் இருப்பதாகவும், ஒரு பக்கம் படிப்பைத் தடுக்கவும், இன்னொரு பக்கம் பண்பாட்டுத் திணிப்புக்கும் சதிச் செயல் நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.
ஒரே ஜாதி! ஒரே சுடுகாடு வருமா?
மேலும் அவர், ''சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது ஒரே ஜாதியாக மாற்ற முயலவில்லை, ஒரே சுடுகாடு இல்லை? சுடுகாட்டுக்கு போவதற்கும் பல இடங்களில் பாதை இல்லை. இதையெல்லாம் விட்டு விட்டு ஒன்றிய அரசு என்ன செய்கிறது? பிப்.14 காதலர் தினத்தில் விலங்குகள் நல வாரியம் பசு அரவணைப்பு தினம் கொண்டாடச் சொல்கிறது. இது அரசமைப்புச் சட்ட விரோதம்'' எனக் கண்டித்தார். அப்படியே பசுவை அரவணைக்கச் சென்ற பலரும் மருத்துவமனையில் இருக்கின்றனர் என்பதைச் சொன்னதும், சமூக ஊட கங்களில் அவர்களும் பார்த்திருந்ததால், மக்களிடையே வெடிச்சிரிப்பு எழுந்தது.
அடுத்து ஒரு முக்கியமான கருத்தை வலியுறுத்திச் சொன்னார். அதாவது, “இறையாண்மையுள்ள, சமத் துவமான, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு இந்த அய்ந்தும்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக் கட்டுமானங்கள். இதை எந்த அரசாலும் திருத்தவோ, மாற்றவோ முடியாது. அப்படியிருக்கையில், பா.ஜ.க. அரசு இந்த அடிக்கட்டுமானத்தையே செல்லரிக்கச் செய்து கொண்டிருக்கிறது'' என்று குற்றம் சுமத்தினார். அதைவிட இன்னும் ஒரு படி மேலே சென்று மனுதர்மத்தையே அரசமைப்புச் சட்டமாகக் கொண்டு வரவும் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் சொல்லி எச்சரிக்கை மணியடித்தார். தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சி பற்றியும், பா.ஜ.க. எவ்வளவோ முயன்றும் தமிழ்நாட்டில் அது வெற்றி பெற முடியவில்லை என்பதை காங்கிரஸ் கட்சியின் முகமாக இருக்கும் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் மோடியைப் பார்த்தே கூறியதையும் நினைவுபடுத்தினார். திராவிட மாடலின் ஒரு கூறான தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை புள்ளி விவரங்களுடன் கூறி, இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதை விவரித்தார். இதெல்லாம் கல்விக் கடவுள் சரஸ்வதியால் வந்ததா? சத்யசாயி கையை ஆட்டியதால் பொத்துன்னு விழுந்ததா? இல்லை இன்றைக்கு (18.02.2023) சிவராத்திரியில் அப்படியும், இப்படியும் ஆடுகிறாரே அவரால் வந்ததா? என்று கேள்விகளை அடுக்கினார். மக்களுக்கு கோபம் வரவில்லை மாறாக குபீரென்று சிரித்தனர். அந்த இடைவெளியில் ஆசிரியர், திராவிடர் இயக்கத்தால் வந்தது! தந்தை பெரியாரால் வந்தது என்றதும் மக்கள் உணர்வு வயப்பட்டு பலமாக கையொலி செய்தனர்.
இறுதியாக சேது சமுத்திரத் திட்டத்தின் அவசியம் பற்றியும், அதற்காக திராவிடர் இயக்கம் 100 ஆண்டு களாக என்னென்ன முயற்சிகள் செய்துள்ளது என்பதைப் பற்றியும் விவரித்து, வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு என்று கூறி உரையை நிறைவு செய்தார். பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளில் ஈரோட்டில் தொடங்கிய இந்த பரப்புரைப் பெரும் பயணம் நான்கு கட்டங்களாக 29 நாள்கள் நடைபெறக்கூடிய வகையில் திட்டமிடப் பட்டிருந்தது. 18.02.2023 அன்று 14 நாள்களையும் 27 கூட்டங்களையும் நிறைவு செய்துள்ளது.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்தப் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம், தி.மு.க. பேரூராட்சி தலைவர் அமானுல்லா, தி.மு.க. அவைத்தலைவர் தணிகை குமார், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, வி.சி.க. மாநில பொறுப்பாளர் அசோகன், சி.பி.அய். மாவட்ட செயலாளர் மகாலிங்கம், சி.பி.அய். மாவட்ட குழு உறுப்பினர் சேகர், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், கழக மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, ப.க. கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முடிவில் நகர செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரைப் பயணத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
புற்று நோய் வந்த யானை இந்தியா?
“என்ன செஞ்சிட்டாரு பெரியார்? என்று நீங்கள் கேட்கலாம். ஜெயரி கோஷ் என்ற பொருளாதார பேராசிரியர். ஜே.என்.யூ.வில் நீண்ட காலம் பணியாற்றிய பேராசிரியர், அய்க்கிய நாடுகள் சபையில் எல்லா நாடுகளைப் பற்றியும் ஆய்வு செய்கிறார். இப்போது அமெரிக்காவில் பணியாற்று கிறார். அப்படிப்பட்டவர் சென்னை அண்ணா நூலகத்திற்கு வந்திருந்தார். அவரிடம் செய்தியாளர், இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அவர், “இந்தியா யானை பலத்துடன் இருக்கிறது.” என்றார்.
முழுவதும் கேளுங்கள்.
“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 90% உயர்ஜாதி வகுப்பினரிடம் இருக்கிறது..10% ஏழை நடுத்தர மக்களிடம் இருக்கிறது என்று சொல்லியிருக்காங்க. அதனுடைய உட்பொருளையும் அவரே விளக்குகிறார். “இந்தியாவின் பொருளாதாரம் யானையைப் போல் இருக்கிறது. ஆனால் அந்த யானை புற்றுநோய் வந்த யானையைப் போல் இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார்.
இன்னும் முடியவில்லை. “நீங்கள் தமிழ்நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று அடுத்த கேள்வி கேட்கப்படுகிறது. அவர், “இந்தியாவில் இன்னும் வாழ்வதற்கான சூழ்நிலை இருக்கிறது என்பதை இரண்டு மாநிலங்கள் சொல்கின்றன. ஒன்று தமிழ்நாடு! மற்றொன்று கேரளா! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது. தமிழ்நாடுதான் 4,500 பொது நூலகங்களை கொண்டுள்ளது” என்று கூறியிருக்கிறார். இப்போது தமிழ்நாட்டில், ‘எனக்குக் கிடைக்காத கல்வி என் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்காத பெற்றோர் உண்டா?’ இந்த சூழலை உருவாக்கியது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை! ஆனாலும், தலைமுறை தலைமுறையாக பார்ப் பனர்கள் படிக்கின்றனர். பார்ப்பான் 10% இடஒதுக்கீடு வேணுங்கிறான். நம்மாளு முதல் தலைமுறையாக படிக்கிறான். எதுக்கு இந்த இடஒதுக்கீடு அப்பிடிங்கிறான். இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல, பிச்சை யல்ல, பிறப்புரிமை!
- சே.மெ.மதிவதனி
திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்
ஒசூர், 18.02.2023
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
February 19, 2023 • Viduthalai
🔅 வடமாநிலத்தவர்களின் அதிக வருகை - கவனிக்கத்தக்கது
🔅 தனிப்பட்ட இருவரின் சண்டை இரு குழுக்களாகப் பிரிந்து கலவரமாக மாறுவது- வழக்கமாகிவிட்டது
🔅 காவல்துறை கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி!
கிருஷ்ணகிரி, பிப்.19 வடமாநிலத்தவர்களின் அதிக வருகை கவனிக்கத்தக்கது; தனிப்பட்ட இருவரின் சண்டை இரு குழுக்களாகப் பிரிந்து கலவரமாக மாறுவது வழக்கமாகிவிட்டது காவல்துறை கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
நேற்று (18.2.2023) சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க கிருஷ்ணகிரி சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
நாகரசம்பட்டியில் ஒரு கொலை!
செய்தியாளர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாகரசம்பட்டி என்ற இடத்தில், ராணுவ வீரரைத் தாக்கி கொலை செய்ததாக, தி.மு.க.வினர்மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்களே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: பிடிபட்டவர்களின்மீது நடவடிக்கைகளை எடுப்பதைக் கண்காணிக்கவேண்டியது அரசினுடைய இயல்பான கடமை. அதன்படி காவல்துறை நடவடிக்கை எடுத்து விசாரணை செய்வார்கள்.
அதிலும் குறிப்பாக, நம்முடைய முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, அம்மாவட்டங்களின் ஆட்சியர்களோடு கலந்தாலோசித்து வருகிறார்.
காவல் நிலையத்திற்கே சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் இவர் ஒருவராகத்தான் இருப்பாரே தவிர, வேறு யாரும் இருக்கமாட்டார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், தயவு தாட்சண்யமின்றி, குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில், சொந்தக்கட்சியா, எதிர்க்கட்சியா என்று பார்ப்பது இல்லை. நிலைமை இப்படி இருக்கும்பொழுது, இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை.
வேறு குற்றம் சொல்வதற்கு, அரசியல் செய்வதற்கு எந்த சரக்கும் கிடைக்கவில்லை என்பவர்கள்தான் இதை வைத்து அரசியல் நடத்தலாம் என்று நினைக்கிறார்கள்.
தனிப்பட்டவர் தகராறு குழுத் தகராறாக மாறுகிறதே!
பொதுவாகவே நம்முடைய நாட்டில், இயல்பான ஒரு பழக்கம் என்னவென்றால், தனிப்பட்ட இரண்டு நபர்களுக்குள் நடைபெறும் மோதலை வைத்து, இரு குழுவினருக்கு ஏற்பட்ட மோதல் போல் அதைப் பெரிதாக்கி விடுவதுதான்.
உதாரணத்திற்குச் சொல்கிறேன், ஒரு மாணவனுக்கும், பேருந்து நடத்துநருக்கும் ஓரிடத்தில் ஏதோ பிரச்சினை என்றால், உடனே மாணவர்கள் எல்லாம் ஒருபக்கம் - அரசு நடத்துநர்கள் எல்லாம் இன்னொரு பக்கம் நின்று பிரச்சினை செய்வதுபோன்று; அதிலும் இடையிலே ஜாதியையோ, மதத்தையோ கொண்டு வருவது போன்று இல்லாமல், குற்றங்கள் யார் செய்தாலும், குற்றத்திற்குரிய சட்ட நடவடிக்கைகள் இருக்கவேண்டும். அதுவும் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டுமே தவிர, தேவையில்லாமல் அதில் அரசியலைப் புகுத்துவதோ அல்லது வேறு வகையான சிந்தனைகளுக்கு அது பயன்படுமா என்று பார்ப்பதோ பொதுநலத்திற்கு உகந்ததல்ல.
ஆள் மாறி தேர்வு எழுதிய சம்பவம்
செய்தியாளர்: குறிப்பாக பா.ஜ.க. இந்த விஷயத்தில் ராணுவ வீரர்களுக்குத் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்கிற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறதே?
தமிழர் தலைவர்: பா.ஜ.க.விற்கு சரக்கு இல்லை; எங்கேயாவது யாராவது இருமமாட்டார்களா? என்று பார்க்கிறார்கள்; யாராவது இருமினால், அந்த இருமல், தமிழ்நாடு முதலமைச்சரால்தான் வந்தது; தி.மு.க.வினரால்தான் இருமல் வந்தது என்று சொல்வதுதான் அவர்களுடைய வழக்கம். எதற்காக வேண்டுமானாலும் அவர்கள் போராட்டம் நடத்துவார்கள்.
திருவாரூர் மாவட்ட பா.ஜ.க.வின் தலைவருக்காக, இன்னொருவர் தேர்வு எழுதுகிறார்; அவரைக் கைது செய்தால், அதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள்.
அவர்களுக்கு சரக்கு ஏதுமில்லாததால், எதையாவது வைத்து, எதையாவது சொல்லலாமா? என்று நினைக்கிறார்கள். அதை நாம் பொருட்படுத்த முடியாது.
நிச்சயமாக மின்மினிகள் மின்சாரமாக முடியாது.
மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் நடத்தும் ஆலோசனைக் கூட்டம்!
செய்தியாளர்: அண்மைக்காலமாக தமிழ்நாட்டில், திருவண்ணாமலையில் ஏ.டி.எம்.மில் கொள்ளை; கோயம்புத்தூரில் நீதிமன்ற வளாகத்திற்குப் பின்புறம் கொலை போன்ற நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுகின்றன; சட்டம்- ஒழுங்கு பிரச்சினையில் முதலமைச்சர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார்களே?
வெளிமாநிலத்தவர்களின் செயல்பாடுகள்!
தமிழர் தலைவர்: அதனால்தான் முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசிப்பது மட்டுமல்ல; அந்தந்த மாவட்டங்களுக்குத் தேவையானவற்றை செய்கிறார்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி செய்யவேண்டியது என்னவென்பதை நான் பொதுக்கூட்டங்களில்கூட பேசியிருக்கிறேன்.
வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வேலைக்கு வரக்கூடிய ஆட்கள், மலிவான சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள் அல்லது அதிக நேரம் வேலை செய்கிறார்கள் என்பதற்காக, அவர்களை அந்தப் பணிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்; அது வசதியாக இருக்கும் என்கின்ற எண்ணம் பெருகிக் கொண்டே வருவதினால், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்வதோடு நிறுத்தாமல், ஒவ்வொரு இடங்களையும் கண்காணித்து, பிறகு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பெருகி வருகின்றன.
வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களை ஒழுங்குபடுத்துவது அரசினுடைய கடமையாகும். ஏற்கெனவே அவர்கள் குறித்து பதிவுகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள் என்றாலும்கூட, இன்னும் அதில், அதிகக் கவனம் செலுத்தி, அவர்களுடைய செயல்முறைகளையும் கண்காணிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.
ஏனென்றால், தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பாலான கொள்ளைகள், சட்டம்- ஒழுங்குப் பிரச்சினைகளை வெளிமாநிலத்தவர்கள் உருவாக்குகிறார்கள். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை, கூலிப்படைகளாகவும் ஆக்குகிறார்கள்.
எனவே, இதை மிக முக்கியமாகக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
காவல்துறையின் கடமை!
கூலிப்படைகளை அறவே ஒழிக்கவேண்டிய கடமையும் காவல்துறைக்கு உண்டு. காவல்துறை இதில் இன்னும் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
ஒரே நாடு, ஒரே மதம் என்பதே ஒன்றிய அரசின் கூப்பாடு!
செய்தியாளர்: இப்படிப்பட்ட ஒரு சூழலில், வடமாநிலத்தவர்களால், தமிழ்நாட்டில் சில சமூகக் குற்றங்கள் நடைபெறுகின்றன என்று சொல்கிறீர்கள்; ஆனால், ஒன்றிய அரசு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேசன் கார்டு, ஒரே தேர்தல் என்று சொல்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம் இது.
ஒரே ஒரு கேள்வி நாங்கள் கேட்டோம்; அதற்கு இதுவரை பதில் இல்லை.
அந்தக் கேள்வி என்னவென்றால், எல்லாவற்றிற்கும், ''ஒரே, ஒரே'' என்று சொல்கிறார்களே, ஒரே ஜாதி என்று சொல்வார்களா? ஒரே சுடுகாடு என்று சொல்வார்களா? என்று கேட்டோம். இதுவரை எங்கள் கேள்விக்குப் பதில் இல்லை.
இதை செய்தால்தானே, மக்கள் சமத்துவம் வரும். யாரும், எந்த மாநிலத்தினுடைய உரிமைகளையோ, எல்லைகளையோ மாற்ற முடியாது.
ஒரு குறிப்பிட்ட மாநில எல்லைப் பிரச்சினை தீர்ந்திருக்கிறதா? என்றால், இல்லவே இல்லை.
ஆகவே, தாயும், பிள்ளையும் ஒன்று என்றாலும், வாயும், வயிறும் வேறு என்று ஒரு பழமொழி உண்டு.
எனவே, ஒரே மொழி என்பது நடைமுறைக்குச் சாத்தியமும் கிடையாது. அது அரசமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது.
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதம்!
இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது கூட்டாட்சி முறையைப்பற்றி சொல்வது. அதற்கு விரோதமாக ஒன்றிய அரசினை ஆள்பவர்கள் சொல்கிறார்கள்.
எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதில், மனுதர்மத்தைக் கொண்டு வரவேண்டும் என்கிற முயற்சிக்கு வித்திடுகிறார்கள்.
சமஸ்கிருத கலாச்சாரம் அது; ஆர்.எஸ்.எஸ்.சினு டைய கொள்கை அது; ஆர்.எஸ்.எஸ். கொள்கையை நாடு முழுவதும் கொண்டுவரவேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம்.
இதற்கெல்லாம் ஒரே பதில், 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள்.
ஈரோடு: இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு?
செய்தியாளர்: ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெறப் போகும் இடைத்தேர்தல் குறித்து?
தமிழர் தலைவர்: இடைத்தேர்தலில், பெரிய அளவிற்கு வெற்றி பெறும் தி.மு.க. - மதச்சார்பற்ற கூட்டணி. அதற்கு என்ன அடையாளம் என்றால், நிலைகுலைந்த மேனாள் முதலமைச்சராகவும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கக்கூடிய எடப்பாடியாருடைய பேச்சு ஒன்றே போதும்.
அவருடைய பேச்சே, நாளுக்கு நாள் தி.மு.க. கூட் டணியின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாகும்.
ஏனென்றால், அவர் என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவிற்கு, மிகக் கீழறிக்கமாகப் போய் பேசுகிறார். அவருக்குத் தேர்தல் ஜன்னி வந்திருக்கிறது என்று மிகத் தெளிவாகத் தெரிகிறது.
அவருடைய பேச்சினுடைய வேகம், தரம் தாழ்ந்த நிலை, கோபம், எரிச்சல் எல்லாம், தி.மு.க. கூட்டணியினுடைய வெற்றியை நாளுக்கு நாள் பிரகாசமாக ஆக்கிக் கொண்டிருக்கிறது.
அவருடைய பேச்சும், தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு உதவிகரமாக இருக்கும்.
ஈரோடு கிழக்குத் தேர்தல் முடிந்தால், சில கட்சிகள் காணாமல் போகும்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
லேபிள்கள்:
கிருஷ்ணகிரி,
பரப்புரை,
பேட்டி
வியாழன், 16 பிப்ரவரி, 2023
மக்களை படிக்காதேன்னு சொல்றதுக்கு ஒரு கட்சியா? ஒரு மதமா? யார் அந்நியன்? - வெள்ளைக்காரனா? பார்ப்பானா? புழல், அம்பத்தூர் பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!
February 15, 2023 • Viduthalai
புழல்,பிப்.15, சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரையில் புழல், அம்பத்தூர் பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
புழல் காவாங்கரை பகுதியில் 14-02-2023 அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்ற திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெ.பாஸ்கர் அனைவரையும் வர வேற்று பேசினார். மண்டல தலைவர் தி.இரா.இரத் தினசாமி, மண்டல செயலாளர் தே.செ.கோபால், பொதுக்குழு உறுப்பினர்கள் விசயகுமார், கஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் சக்கரவர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் இரணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி கேயன், மாவட்ட மகளிரணி தலைவர் ராணி, மாவட்ட மகளிரணி செயலாளர் நதியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரா விடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற் றினார்.
திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கருத்துரையாற்றிட நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
விடுதலைக்கு 20 ஆயுள் சந்தாக்கள்!
ஆசிரியர் தனது உரையில், முன்னதாக தி.மு.க. மாவட்டச் செயலாளர் சுதர் சனம் விடுதலைக்கு 20 ஆயுள் சந்தாக்களை சேர்த் துக் கொடுத்துவிட்டு ஈரோடு பரப்புரைக்கு சென்றுவிட்ட தாக பேசியதால், அதை நினைவுபடுத்தி, ஏன் விடுதலை முக்கியம்? ஏன் விடுதலை நமது கொள்கை போர்வாள்? என்று பேசினார். அதற்கு எதிராக இருக்கும் பா.ஜ.க. பற்றி சொல்ல வந்தவர், ’கொள்கையை புரிந்து கொண்டு மக்கள் அந்தக் கட்சிக்கு செல்லவில்லை. பணபலத்தினால் செல் கிறார்கள். அங்குதான் இடங்களும் காலியாக இருக்கின்றன. தேடப்படும் குற்றவாளிகள் எல்லாம் இப்போது அங்குதான் இருக்கிறார்கள்’ என்றார். தொடர்ந்து எங்களை பொறுத்தவரையில் பஞ்சாயத்து உறுப்பினருக்கு நிற்க அனு மதிக்காதவர்கள். ஆகவே நாங்க புழலில் இருப்பதும் ஒன்றுதான். புழல் சிறையில் இருப்பதும் ஒன்றுதான்! என்று குறிப்பிட்டார். மேலும், ’இங்கு 11 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு வந்தி ருக்கிறோம்’ என்று முன்னோட்டமாக சில கருத்துகளைக் கூறி விட்டு, கூட்டத்தின் மய்யக்கருத்துக்கு வந்தார்.
திராவிடர் இயக்கம் 100 ஆண்டு களுக்கு முன்பிருந்த நிலையை எப்படி மாற்றியது? கல்வியைப் பெற்றுத் தரு வதற்கு எப்படியெல்லாம் போராடியது. வேலைவாய்ப்பு பெறுவதற்கு சமூக நீதி தத்துவத்தை கொடையாக கொடுத்து அதன் மூலம் கல்வி கற்றவர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பைப் பெற்றுத்தந்தது? இப்போது ஒன்றிய அரசு என்ன செய்து கொண்டுள்ளது? திராவிட மாடல் அரசு சொன்ன வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றிக் கொண்டு வருகிறது? இன்றைய சூழலில் வேலை வாய்ப்புக்கு தொழிற்சாலைகள் பல கொண்டுவந்தாலும் ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்பைக் கொடுப் பதற்கு இப்போதிருக்கும் வாய்ப்பு என்ன? என்கிற கருத்தமையத்தான் பேசி வருகிறார்.
சுதந்திர நாடா? சமத்துவ நாடா?
அந்த வகையில், ‘சுதந்திர நாடு என்கிறோம். ஆனால் சமத்துவ நாடாக இல்லையே’ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதை எடுத்துரைத்தார். இதன் மூலம் இன்னும் மக்களுக்கு சமத்துவம் வரவில்லை என்பதை எடுத்துரைத்துவிட்டு, ஒன்றிய அரசு இப்போதும் செய்வதென்ன என் பதைச் சொன்னார். அதாவது, காதலர் தினமான பிப்ரவரி 14 க்கு எதிராக பரப்புரை செய்ய வேண்டும் என்ற கருத்தில் அரசு நிறுவனமான அனிமல் வெல்ஃபேர் வாரியமே “பசு அரவ ணைப்பு தினம் கொண்டாட வேண்டுமென்று ஆணை பிறப்பித்ததைச் சொல்லி, பசுவை அரவ ணைக்கிறான். ஆனால் மனிதனை தொடமாட் டேங்கிறான். ஆனால், சமூக ஊடகங்களில் எதிர்ப்பு அதிகமானதும் அந்த ஆணையை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இந்த வெற்றி 2024 லிலும் தொடர வேண்டும் என்றதும் மக்கள் பலத்த கையொலி கொடுத்து அதற்கு ஏற்பளித்தனர். அதைத் தொடர்ந்து தான், ‘படிக்காதேன்னு சொல்ல ஒரு மதம்! ஒரு கட்சி! என்னய்யா கொடுமை இது? என்று வேதனையோடு கேட்டார். இதற்கு ஆதாரமாக கோல்வால்கர் எழுதிய பார்ப்பன மதத்தின் வேதப்புத்தகமான மனுஸ்மிருதியில் உள்ளவற்றை பக்கம் சொல்லி படித்துக் காட்டினார். அத்தோடு விட்டுவிடவில்லை. மனுஸ்மிருதிக்கு எதிராக நாம் செய்திருக்கும் பரப்புரை ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளை எடுத்துரைத்தார்.
மக்களை வஞ்சிக்கும் பா.ஜ.க.!
திராவிட மாடலைப் பற்றி பேசும் போது, ’கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் திராவிட மாடல்’ என்றார். அதை நீதிக்கட்சியின் சர்.பிட்டி தியாகராயரை துணைக்கழைத்து பகலுணவு கொண்டு வந்தது எதற்காக என்பதைப் பற்றி சொன்னார். அந்தத் திட்டம் எப்படிப்பட்டது. அதையே கல்வி வள்ளல் காமராசர் எப்படிக் கையாண்டார். கலைஞர் அதில் பதித்த முத்திரை! இப்போது தளபதி மு.க. ஸ்டாலின் செய்துள்ள மகத்தான சாதனை! என்பவற்றை எல்லாம் பட்டியலிட்டார். இதனால் கல்வியில் நாம் எட்டியுள்ள உயரத்தை சுட்டிக்காட்டினார். மேலும், பெண் விடுதலையில் 1929 லிருந்து தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துள்ளதை சாதனையாகக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை வஞ்சித்த பா.ஜ.க. அரசை, அவர்கள் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் முன் எடுத்துவைத்து அம்பலத்திப்படுத்தினார். அதற்கு திராவிட மாடல் அரசு முன்வைக்கும் சேது கால்வாய் எனும் தமிழன் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தி தமிழ் நாடு மட்டுமல்ல, இந்திய ஒன்றியமே பயன்பெறும் என்று கூறு உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்த பரப்புரை கூட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் இராஜேந்திரன், தி.மு.க.வட்ட செயலாளர் சந்துரு, தி.மு.க.24 ஆவது வட்ட செயலாளர் சுந்தரேசன், ம.ம.க.மாநில அமைப்பு செயலாளர் ஷேக் முகமது அலி, சி.பி.அய். மாதவரம் பகுதி செயலாளர் கமலநாதன், சி.பி.அய். பகுதி குழு உறுப்பினர் மோகன், புழல் ஒன்றிய செயலாளர் உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, அம்பேத்கர் மக்கள் இயக்கம் பொறுப்பாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் புழல் நகர கழக தலைவர் சோமு நன்றி கூறினார்.
அம்பத்தூர்
அங்கிருந்து புறப்பட்டு அம்பத்தூர் வந்தடைந்தது பயணக்குழு. நிகழ்ச்சி அம்பத்தூர் பழைய நகரம் பேருந்து நிலையம் அருகில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்விற்கு அம்பத்தூர் நகரச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். அம்பத்தூர் பகுதி கழக தலைவர் இராமலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கழக அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்வேந்தன்,மண்டல செயலாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கத்தில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி உரையாற்றிய பின்னர் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேரா.சுப.வீரபாண்டியன் கருத்துரை வழங்கிய பிறகு நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
நாங்கள் கொள்கைக்காக வாழ்கிறோம்!
ஆசிரியர் தனது உரையில், ’காலித்தனம், காவித்தனம் பேதமில்லாமல் நடந்து கொண்டு இருப்பதற்கு என்ன காரணம்’ என்று தொடங்கி, ‘அதற்கு ஜாதி தான் காரணம்’ என்றார். இந்த ஜாதித்தன்மையை வெளிநாட்டுக்காரர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை’ என்றொரு கருத்தைச் சொல்லி, ஜாதியற்ற நாடுகளின் சிறப்பை சொல்லாமல் சொன்னார். அதேபோல இந்த ஜாதியை பாதுகாக்க எண்ணுகிற பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார். அதை இன்னும் அழுத்தமாக சொல்வதற்காக, “நாங்கள் உயிருக்காக வாழவில்லை! கொள்கைக்காக வாழ்கிறோம்” என்றார். மக்கள் அது தி.க.காரர்களைப் பொறுத்து உண்மைதான் என்பதை ஏற்பது போல், பலத்த கையொலி செய்தனர். என்ன துணிச்சலில் இப்படிச் சொல்கிறோம் என்று கேட்டு, “பெரியார் என்ற பேராயுதம் எங்கள் கையில் இருப்பதுதான்” என்பதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஒரு முக்கியமான கருத்தை, ”யார் அந்நியன்?” என்று பெரியார் சொன்னதைச் சொல்லி விளக்கினார். அதாவது, 10,000 மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளைக்காரன் அருகில் வந்தால், “ஹலோ” என்று நம்மிடம் கைகுலுக்குகிறான். பக்கத்து வீட்டுக்காரன் நாம் வருவது தெரிந்தாலே காத தூரம் விலகுகிறான். யார் அந்நியன்? என்னுடன் கை குலுக்குகிற வெள்ளைக்காரனா? அந்நியனா? எட்டி நில் என்று சொல்லும் பார்ப்பானா? என்று சொல்லி நிறுத்தியதும் இப்படியொரு பார்வையை அறிந்திராத மக்கள் அனிச்சையாக அதை வரவேற்று பலத்த கையொலி செய்தனர். தொடர்ந்து, ஜாதி நல்ல ஏற்பாடு என்று கோல்வால்கர் சொன்னதை ’ஞானகங்கை’ எனும் புத்தகத்திலிருந்து படித்துக் காட்டி, நமது பண்பாடு என்ன? என்றொரு கேள்வி கேட்டு, “யாயும் ஞாயும் யாராகியரோ” என்ற குறுந்தொகைப் பாடலையும், ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பதினெண் கீழ்க்கணக்கு நூலான திருக்குறளையும் பதிலாக சுட்டிக்காட்டினார்.
பசுப் பாதுகாப்பை பந்தாடிய விவேகானந்தர்!
தொடர்ந்து, ஜாதி தர்மமான சனாதன தர்மம் என்றால், நித்தியமான மதம் - புராதன மதம் சனாதனத்திற்கு ஆதாரம் வேதம். அதனால் இதற்கு வேத மதம் - ஆரிய மதம் - ஹிந்து மதம் என்று வெள்ளைக்காரர்கள் பெயர் வைத்தனர் என்று குறிப்பிட்டார். இதை பெரிய சங்கராச்சாரியார் ஒத்துக்கொண்டுள்ளார். மேலும், சனாதன மதம் யாருக்காக? என்பதற்கு முதலாம் ஜாதியாருக்காகத்தான் என்பதை கோல்வால்கர் புத்தகத்தையே ஆதாராமாக்கினார். அதே புத்தகத்தில் பார்ப்பனர்கள் ஆரிய வந்தேறிகள் என்பதையும் படித்துக் காட்டினார். பசு அரவணைப்பு தினம் பற்றி பேச வந்தவர், விவேகானந்தர் பசு பாதுகாப்பு பற்றி கடுமையாக விமர்சனம் செய்தது என்ன என்பதை விவேகானந்தர் உரைகள் தொகுப்பிலிருந்து படித்துக் காட்டினார். இதற்கு மாறாக திராவிட மாடல் அரசு, கல்விக்கும், சுகாதாரத்துக்கும் செய்து வரும் சாதனைகளை வீடு தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம் பட்டியலிட்டார். மதவாத அரசு மாடுகளைப் பற்றி கவலைப் படுகிறது; திராவிட மாடல் அரசு மக்களைப் பற்றி கவலைப் படுகிறது என்பதை மக்களுக்கு புரியவைத்தார். இறுதியில் சேது சமுத்திரம் திட்டம் அவசியம் பற்றியும், திட்டம் முடியும் போது மூன்று பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து அதை முடக்கியதையும், பா.ஜ.க.வின் இரட்டை நாக்கையும் அம்பலப்படுத்தி, வாழ்க பெரியார்! தமிழ்நாடு வாழ்க! என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்த பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், சி.பி.அய்.மாவட்ட செயலாளர் கருணாநிதி, வி.சி.க.மாநில செயலாளர் திராவிடமணி, சி.பி.எம்.மாவட்ட செயலாளர் லெனின் சுந்தர், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் இராசா.திருநாவுக்கரசு,
ம.தி.மு.க.அம்பத்தூர் பகுதி செயலாளர் சுரேஷ், மே-17 இயக்க பொறுப்பாளர் கனகவேல், தமிழர் விடுதலைக் கழக பொறுப்பாளர் சுந்தரமூர்த்தி, திராவிட இயக்க தமிழர் பேரவை நிர்வாகிகள் ராஜ், மோகன்ராம், ராமகிருஷ்ணன், ம.ம.க. பொறுப்பாளர் அசன் அலியார், சி.பி.அய். அம்பத்தூர் பகுதி செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் அம்பத்தூர் கழக இளைஞரணி செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
தந்தை பெரியாரின்
கனவு நனவாயிற்று!
இந்த பரப்புரைப் பயணம் ஈரோட்டில் தொடங்கி, கடலூரில் முடிகிறது. ஈரோடு என்றால் தந்தை பெரியார்! கடலூர் என்றால் நம்முடைய தமிழர் தலைவர்! திராவிடர் கழகத்தைப் போன்று ஒரு சமூகப் புரட்சி இயக்கம் உலகத்திலேயே காணமுடியாது. மனிதனுக்கு முக்கியமானது கல்வி! இந்த நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமை இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. தந்தை பெரியார் நினைத்திருந்தால் எவ்வளவு பெரிய பதவிக்கு வேண்டுமானாலும் போயிருக்கலாம். அவருடைய சீடர்களெல்லாம் ஆட்சிக்கு வந்தார்கள். அதே நேரம் தந்தை பெரியார், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதற்கான விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டிக் கொண்டே இருந்தார். வெள்ளைக்காரன் ஆட்சியில் இட ஒதுக்கீடு பாதுகாப்பாக இருந்தது. சுதந்திர இந்தியாவில்தான் இட ஒதுக்கீடு பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. அரசியலுக்கு போகாத பெரியார்தான் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி முதல் முதலில் அரசியல் சட்டத்தை திருத்தத்தைக் கொண்டு வந்தார். ராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு வந்த போதும் பெரியார் பொங்கி எழுந்தார். ராஜாஜி ராஜினாமா செய்து விட்டு சென்றார். 69% த்துக்கு ஆபத்து வந்தபோது, நமது தமிழர் தலைவர் பொங்கி எழுந்து பாதுகாத்தார். மண்டல் கமிசன் அமலுக்கு வந்ததற்கும் திராவிடர் கழகமும், தமிழர் தலைவர் தான் காரணம்! இதை நிறைவேற்றும் போது நாடாளுமன்றத்தில் பிரதமர் வி.பி.சிங், “தந்தை பெரியார் கனவு நனவாயிற்று! அம்பேத்கர் கனவு நனவாயிற்று! ராம் மனோகர் லோகியா கனவு நனவாயிற்று” என்று சொன்னார். இப்படியொரு இயக்கத்தை வேறெங்கும் பார்க்க முடியாது. இப்போது சமூகநீதிக்கு ஆபத்து வந்திருக்கிறது. எஸ்பிஅய் வங்கியில், எஸ்சி 61.25, எஸ்டி 53.75, ஓபிசி 61.25, பார்ப்பனர்கள் 28.7. பார்ப்பான 28 மதிப்பெண் வாங்கினால் தேர்வாகலாம். நமது தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்ததைக் கொல் லைப்புற வழியாக பார்ப்பனர்களுக்குரிய சூழ்ச்சியுடன் பறித்துச் செல்கிறார்கள். 2024 இல் அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் எதேச்சதிகாரம்தான். தமிழ்நாட்டில் முழு வெற்றியைப் பெற்றுத்தந்தால் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கவிஞர் கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
புழல், 14-02-2023
மனிதர்கள் மனிதர்களுக்காக நடத்துகிற கூட்டம்!
நம்ம தோழர்கள் சொன்னாங்க, நிகழ்ச்சி நடத்து வதற்கு இடையூறுகள் இருந்துச்சுன்னு. ஒன்னுமில்ல, இங்கே மனிதர்கள் பேசறதுக்குதான் இந்த எதிர்ப்பு. இங்கே ஒரு பிள்ளையார் சிலையை வைத்து ஒரு மேடை போட்டுப்பாருங்க, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தறோம் அப்பிடின்னு டான்சும், பாட்டும் வைத்துப் பாருங்க. அதை யாரும் எதிர்க்க மாட்டாங்க அப்படின்னு இல்லை. எதிர்க்க முடியாது. ஏன்னா? அது கடவுள் சமாச்சாரம். எதிர்க்கிறதுக்கு பயப்படுவாங்க. ஆனால், மனிதர்கள் மனிதர்களுக்காக நடத்துகிற கூட்டம். இது கோயிலுக்காகவோ அல்லது வேறு மதத்தை சண்டைக்கு கூப்பிடுறதுக்காகவோ, பக்கத்து வீட்டுல ஆட்டுக்கறி வேகுதா? மாட்டுக்கறி வேகுதா? அப்பிடின்னு மோப்பம் பிடிக்கறதுக்காகவோ நடத்துகிற கூட்டம் அல்ல. இது மக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கும், கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெற்று முன்னேறி மற்ற நாட்டில் உள்ளவர்களைப் போல, உயர்வதுக்குமான கூட்டம். இந்த கூட்டத்தை எதுக்கு நடத்தறாங்க? ஏன் நடத்தறாங்க அப்பிடின்னு புரிந்துகொண்டு ஆதரிப்பதற்கு கோடி பேர் இருக்கலாம். ஆனால், புரியாதவர்களும் சிலர் இருப்பார்கள். அந்தப்புரியாதவர்களுக்காகத்தான் நாம் கூட்டம் நடத்தறோம். நமது கொள்கையை விரும்புகிறவர்களுக்கு நாம் பேசுவதற்கு அரங்கக் கூட்டம் இருக்கிறது; மாநாடுகள் இருக்கின்றன. புரியாதவர்களுக்கு இது போன்ற இடங்களில் கூட்டம் நடத்தி புரிய வைக்க வேண்டியதுதான் நமது வேலை! இந்த மாதிரி எதிர்ப்பு வரலைன்னா, நம்ம கூட்டம் கலகலன்னு இருக்காது. இந்த எதிர்ப்பு வந்தாதான் நம்மால் நமது கருத்துகளைச் சொல்ல முடியும்.
வழக்குரைஞர் அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர் - திராவிடர் கழகம்
புழல், 14-02-2023
தமிழர் தலைவர் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் பரப்புரை!
February 16, 2023 • Viduthalai
மதவெறிக்காக மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான்!
மூன்று பார்ப்பனர்களால் முடக்கப்பட்ட சேதுக்கால்வாய், மீண்டும் தொடங்கப்பட வேண்டும்!
திருவள்ளூர், பிப்.16, சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரையில் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் 15-02-2023 அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்ற பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் மணி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி,மேனாள் மாவட்ட தலைவர் மோகனவேல், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் டில்லி பாபு, மண்டல செயலாளர் காஞ்சி கதிரவன், அமைப்பு செயலாளர் பொன்னேரி பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் பொதட்டூர்பேட்டை புவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்கவுரை ஆற்றிட நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
திராவிடர் இயக்கத்தின் மகத்தான சாதனை!
ஆசிரியர் தனது உரையின் தொடக்கத்தில், தனக்கு முன்னதாக பேசிய தி.மு.க. மேனாள் நகர்மன்றத் தலைவர் பாண்டியன், திருவள்ளூர் மாவட்டத்தின் நகர் மன்ற தலைவராக இருந்ததையும், தற்போது அந்த வாய்ப்பு அவரது இணையருக்கு கிடைத்திருக்கிறது. இது தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி! இது திராவிடர் இயக்கத்தின் சாதனை என்று பேசியிருந்ததை சுட்டிக்காட்டிப் பேசினார். அதாவது, ”இது செங்கல்பட்டு மாவட்டமாக இருந்தது. இந்த மாவட்டத்தில்தான் 1929 இல், முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது. அதில்தான், ’எல்லா துறைகளிலும் பெண்கள் தலைமை தாங்க வேண்டும்’ என்று தந்தை பெரியார் தீர்மானம் போட்டார். இதோ, இங்கே ஒரு நகர் மன்றத் தலைவராக ஒரு பெண் வந்திருக்கிறார். அதுதான் திராவிடர் இயக்கத்தின் மகத்தான சாதனை!” என்று அழுத்தமாக குறிப்பிட்டதும் கூட்டத்தினர் உணர்வு வயப்பட்டு கைதட்டினர்.
அதென்ன பசு மாடு? எருமை மாடு என்னாச்சு?
தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்கு முன்னா லேயே தந்தை பெரியார் இங்கே பேசியிருக்கிறார் என்று குறிப்பிட்டு, தோழர் சந்திரன், விமல்ராஜ், தந்தை பெரியாருக்கு உதவியாளராக இருந்த திருவள்ளூர் சீனிவாசன் ஆகியோரை நினைவு கூர்ந்தார். மேலும் அவர், நேற்று முன்தினம் (பிப் 14) செய்திகளில் ஒன்றை நினைவூட்டிப் பேசினார். அதாவது, காதலர் தினத்தின் தாக்கத்தை குறைப்பதாக எண்ணிக் கொண்டு ”பசு அரவணைப்பு தினம்” என்று கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோளை ஒன்றிய அரசின் ’மிருகங்கள் பராமரிப்பு வாரியம்’ வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அது அரசமைப்புச் சட்ட விரோதம் என்பதையும் தாண்டி, காதலர்களுக்கிடையே மூன்றாம் நபருக்கு என்ன வேலை? என்று கேட்டுவிட்டு, நமது தமிழ்ப்பண்பாட்டில் காதல் திருமணம் உண்டு. ஆரியம் நுழைந்த பின்னர் குழந்தைத் திருமணம் வந்தது. ”பெரியார்” திரைப்படத்தில் இது ஒரு காட்சியாகவே காட்டியிருப்பார்கள். பெண்கள் இன்று நகர்மன்றத் தலைவராக, சட்டமன்றத் தலைவராக, வழக்குரைஞராக, நீதிபதிகளாக வந்திருக்கிறார்களே! என்று அடுக்கிக் கொண்டே போனார். தொடர்ந்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் 14 பெண் நீதிகள் இருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? இதைத்தானே 'திராவிட மாடல்' என்று சொல்கிறோம். இது ஒரு பக்கம் இருக்கட்டும். காதலர் தினத்தில், பசு அரவணைப்பு தினமா? அதென்ன பசு மாடு? எருமை மாடு என்னாச்சு? எல்லா மிருகங்களும் ஒன்று தானே? கேட்டால் பசு மாடு பால் கொடுக்கிறதாம். எருமை மாடு அதைவிட அதிகம் பால் கொடுக்கவில்லையா? என்று சரமாரியாக கேள்விக் கணைகளை தொடுத்து காவித் தத்துவத்தை துளைத் தெடுத்தார். இறுதியாக, ”பசுவை கட்டிப்புடிக் கணும்னு போனவன் இப்போது மருத்துவ மனையில் இருக்கிறான்” என்று ஒரு பஞ்ச் வைத்தார். வெடிச்சிரிப்புடன் கைதட்டலும் சேர்ந்து கொண்டது.
பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு!
1899 இல் சென்னையில் பஞ்சமர்களின் நிலை என்ன என்பதை, 124 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ஒரு துண்டறிக்கையின் நகலை கையில் வைத்து படித்துக் காட்டி, "இன் றைக்கு பஞ்சமர்களுக்கு இடமில்லை சொல்லிப் பாரு, சொல்றவன் சிறையில் இருப்பான்” என்று சீற்றத்துடன் சொன்னதும் அதே சீற்றம் மக்களின் கைதட்டலிலும் எதிரொலித்தது. ஓயவில்லை அவரது சீற்றம். “இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆயாச்சே! என்ன வானம் இடிஞ்சு போச்சா?” என்று ஒரு போடு போட்டார். ஓயாத கைதட்டல்தான்! "கால் நூற்றாண்டுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடக்கிறதே? இதுவரை 10 பிரதமரைப் பார்த்தாயிற்றே? இதோ திராவிட மாடல் ஆட்சியின் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% கொடுத்துட்டாரே! இது அமைதிப் புரட்சி அல்லவா? அறிவுப்புரட்சி அல்லவா?" என்று முடிக்கும் முன்னே கைதட்டல் தொடங்கிவிட்டது. "பா.ஜ.க. கொள்கை பெண்களுக்கு எதிராக அல்லவா இருக்கிறது என்று புதிய கல்விக் கொள்கை பற்றி தொடர்ந்து பேசினார். பா.ஜ.க. என்பது எல்லா கட்சிகளையும் போல தனித்து முடிவெடுக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். சின் கொள்கையைத்தான் செயல்படுத் துகிறது. அந்த ஆர்.எஸ்.எஸ். எப்படிப்பட்டது? இந்தியாவில் மூன்று முறை மதவெறிக்காக தடை செய்யப்பட்ட ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.தான். இதை மறுக்க முடியுமா?" என்று கேட்டுவிட்டு, தொடர்ந்து சேது சமுத்திரத்திட்டம் பற்றி விளக்கிப் பேசினார். "சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்பதற் காகத்தான் இந்தப் பயணம். வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு!" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்த பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தி.மு.க. மேனாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன், டாக்டர் வளர்மதி, ஆசிரியர் நாவுக்கரசு, தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் தனலட்சுமி, வி.சி.க. மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், வி.சி.க. அரசியல் குழு தலைவர் நீலவானத்து நிலவன், சி.பி.எம்.நகர செயலாளர் உதய நிலா,சி.பி.அய்.மாவட்ட செயலாளர் கஜேந்திரன், இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாநில துணைத் தளபதி சுந்தர், நகர கழக அமைப்பாளர் யுவராஜ், தி.மு.க.9 ஆவது வார்டு செயலாளர் அயூப்அலி, சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பொருளாளர் பாஸ்கரன், ப.க. பொறுப்பாளர் எழில் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். முடிவில் மாவட்ட செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
அரக்கோணத்தில் தமிழர் தலைவர்!
திருவள்ளூர் தோழர்களின் அன்பு மழையிலிருந்து விடுபட்டு, தமிழர் தலைவர் அரக் கோணம் புறப்பட்டார். வழியில் அவருடைய பால்ய நண்பர் சரோஜா ஏகாம்பரம் இல்லம் சென்று சில மணித்துளிகள் இருந்துவிட்டு மறு படியும் புறப்பட்டார். அரக்கோணத்தில் ஆசிரி யருக்கு எழுச்சிகரமான தீப்பந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்றுக்கொண்டு மேடை யேறினார். அரக்கோணம் அம்பேத்கர் வளைவு முன்பு நடைபெற்ற 'திராவிட மாடல்' விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் எல்லப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல செயலாளர் காஞ்சி கதிரவன், மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட அமைப்பாளர் ஜீவன்தாசு, பொதுக்குழு உறுப்பினர் சூரியகுமார், நகர் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் தீனதயாளன், மாவட்ட துணைத் தலைவர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக பிரச்சார அணி செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
ஆளுநரின் சட்ட விரோதப் போக்கு
தமிழர் தலைவர் உரையாற்றுகையில், அவருக்கு பக்கத்தில் இருந்த பெண் நகர்மன்றத் தலைவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதிலிருந்து உரையைத் தொடங்கினார். அதாவது, "நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தால் கங்கையில் மூழ்கடித்து கொலை செய்தனர்; வங்காளத்தில் பெண் குழந்தை பிறந்தால் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொன்றனர்; வெள்ளைக்காரன் வந்துதானே இதையெல்லாம் தடை செய்தான். குழந்தைத் திருமணம் இருந்ததே. தமிழ்நாட் டிலும் உண்டே. இன்றும் சிதம்பரத்தில் தீட்சி தர்கள் மட்டும் நடத்துகின்றரே" என்று குறிப் பிட்டுவிட்டு, இந்த நிலைமை மாறியிருக்கிறதா? இல்லையா? என்றார். தொடர்ந்து, "பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, அரசுக் கல்லூரிக்கு பெண் படிக்கச் சென்றால் மாதம் 1000 ரூபாய் கொடுக் கப்படுகிறதே! வேறு மாநிலத்தில் இது இருக் கிறதா?" என்று கேள்வி கேட்டார். மக்கள் இல்லை என்பதையே கைதட்டல் மூலம் பதி லாகத் தந்தனர். "இந்த ஆட்சியைத்தானே கலைக்கலாம் என்று பார்க்கிறார்கள். யார் மூலமாக? ஆளுநர் மூலமாக" என்று பதிலுடன் பெண் விடுதலையிலிருந்து மாநில உரிமைகள் பக்கமாக பேச்சைத் திருப்பினார். அப்படியே ஆன்லைன் ரம்மி, அதன் மூலம் நாளும் தற் கொலைகள் நடப்பதை வேதனை யுடன் எடுத் துரைத்து, ஆளுநரின் அரசியல் சட்ட விரோதப் போக்கைச் சொல்லி, இதையெல்லாம் மக்க ளுக்கு விளக்கத்தான் இந்தப் பயணம் என்றார்.
சேது கால்வாய் திட்டத்தை முடக்கிய மூன்று பார்ப்பனர்கள்
தொடர்ந்து ஒன்றிய அரசின் யோக்கி யதையை தோலுரித்தார். அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியைக் குறைத்தது. 2014 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றி கேட்டால், ஜூம்லா என்று சொல்வது, ஒரு பக்கம் சேது சமுத்திரத் திட்டத்தில் வாய்தா வாங்கிக் கொண்டே, இராமன் பாலம் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்று நாடாளுமன்றத் திலேயே சொல்வது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாகச் சொல்லி விட்டு, இருக்கிற வேலைகளையும் பறித்தது என்று பட்டியலிட்டார். அதற்கு மாறாக 'திராவிட மாடல்' ஆட்சி பற்றியும் கோடிட்டுக் காட்டினார். ஒரு மனிதனுக்கு கல்வியும் சுகாதாரமும்தான் முக்கியம் என்று கூறிவிட்டு, தமிழ்நாடு அரசின் வீடு தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டங்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார். சேது கால்வாய் திட்டம் பற்றி பேச வந்தவர், “இருக்கின்ற பாபர் மசூதியை இல்லை என்று சொல்லி இடித்தனர். இல்லாத ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்கின்றனர்” என்ற மதவாதிகளின் புரட்டை புதுக்கவிதை ஒன்றை நினைவுபடுத்தி, அவர்கள் எவ்வளவு ஆபத் தானவர்கள் என்பதை புரிய வைத்தார். சேது சமுத்திரத்திட்டம் முடக்கப்பட்ட தற்கு மூன்று பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி தான் காரணம் என்பதைக் குறிப்பிட்டார். தொடர்ந்து, மேனாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சோ ராமசாமி, சுப்பிரமணிசாமி ஆகியோர் அந்த பார்ப்பனர்கள் என்பதையும் அம்பலப்படுத் தினார். ஏன் அப்படிச் செய்தனர்? என்றொரு கேள்வி கேட்டு, இந்தத் திட்டம் நிறைவேறிவிட்டால், கலைஞருக்கு புகழ் வந்துவிடும். தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்து விடுவர் என்ற அற்ப அரசியல்தான் என்று பதிலளித்தார். அதற்காக உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றனர் என்று கூறிவிட்டு, "உங்களுக்கு தெரியும் உச்ச நீதிமன்றத்தில் சமூக நீதி இல்லை. ஆகவே மீண்டும் சேது சமுத்திரத்திட்டம் வரவேண்டும். அது வெகு மக்களின் கருத்தாக மலர வேண்டும். அதற்காகத்தான் இந்தப் பயணம். வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு!" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, அடுத்த நாள் பயணத்திட்டத்துடன் நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்பினார் தமிழர் தலைவர்!
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்த பரப்புரை கூட்டத்தில் அமைப்பு செயலாளர் பொன்னேரி பன்னீர்செல்வம், நகர்மன்ற தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகர தி.மு.க.துணை செயலாளர் அன்பு லாரன்ஸ், வி.சி.க.ஒன்றிய செயலாளர் சந்தர், வி.சி.க. நகர செயலாளர் அப்பல்ராஜ், ம.தி.மு.க. பொறுப் பாளர்கள் ஆறுமுகம், ஞானப்பிரகாசம், ம.த. கட்சி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், சி.பி.அய்.எம். பொறுப்பாளர்கள் சீனிவாசன், துரைராஜ், வெங்கடேசன்,எஸ்.சி.எஸ்.டி.யூனியன் நிர்வாகிகள் எஸ்.வந்தராவ்,கலைநேசன், தலித் மக்கள் முன்னணி நிர்வாகி மோகன், ம.ம.க. நிர்வாகி முகம்மது அலி, வி.சி.க. நிர் வாகிகள் பெருமாள், பாக்கியராஜ், நரேஷ், கதிர்வேல், நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முடிவில் நகர கழக செயலாளர் பெரியார் நேசன் நன்றி கூறினார். கழகத் தலைவர் மேற் கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், திரா விட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
கடவுள் நம்பிக்கையோடு கழுத்தில் மாலையணிந்து கோயிலுக்கு செல்லும் மகளிர் ஆசிரியர் அவர்களின் பகுத்தறிவு கருத்துகளை கேட்டு தங்கள் கைப்பேசிகளில் படம் எடுத்து பதிவு
February 16, 2023 • Viduthalai
கடவுள் நம்பிக்கையோடு கழுத்தில் மாலையணிந்து கோயிலுக்கு
செல்லும் மகளிர் ஆசிரியர் அவர்களின் பகுத்தறிவு கருத்துகளை
கேட்டு தங்கள் கைப்பேசிகளில் படம் எடுத்து பதிவு செய்தனர்
- இதுதான் பெரியார் மண்! (அரக்கோணம்)
லேபிள்கள்:
அரக்கோணம்,
திருவள்ளூர்,
பரப்புரை
ஞாயிறு, 8 மே, 2022
குமரி முதல் சென்னை வரை ஒலித்திட்ட வீரமணியோசை
May 05, 2022 • Viduthalai
தமிழர் தலைவரின் பெரும் பரப்புரைப் பயணம்
முனைவர்
பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
தமிழக வரலாற்றிலும் சரி, இந்திய வரலாற்றிலும் சரி, இப்படி ஒரு பரப்புரைப் பயணம், புரட்சிப்பயணம், போர் அறிவிப்புப் பயணம் எந்தத் தலைவர் பெருமக்களும் நடத்தியதில்லை.
தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆதித்தனார் தொடர் வண்டியில் பயணித்துப் பரப்புரைப் பயணம் மேற்கொண்ட அறுபதுகளில் நிகழ்ந்ததுண்டு.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நீதி கேட்டு நெடிய பயணம் கால்நடையாகக் - கால்கள் கன்றிப் போய் கொப்பளிக்க நடந்த வரலாறும் அறிவோம். ஆனால்... ஆனால்.... என்ன?
தந்தை பெரியாரையும் தமிழினத் தலைவர் கலைஞரையும் விஞ்சி விட்டார் தனயன், உடன்பிறப்பு தமிழர் தலைவர் பகுத்தறிவுப் போராளி.
படிக்கக் கேட்கப் படங்களைப் பார்க்க வியப்பாக இருக்கிறது ஒருபக்கம் என்றாலும் உண்மையாகச் சொல்லப் போனால் வேதனையாக இருக்கிறது - அவர் மேற்கொண்ட வேதனைப் பயணத்தை அறிகையில்,
அதே வேளையில் இங்கே ஆளவந்த மேனாள் காவல்துறை அலுவல் கரார் மற்றும் ஒன்றிய அரசு ஆளும் காவி அரசு ஆகியோர் மீது சினம் பூக்கிறது, சிந்தையில் இப்படி மானிட நேயமற்ற மானிடரும் ஆளவந்தனரே என எண்ணக்குவியல் நிறைகிறது.
இந்தப் பயணம் - இந்த 89 வயது மனிதரின் போர்ப்பரணி கூட்டி வரும் பயணம் - கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறவோ, புதிய எழுத்தைச் சாதனை மகுடத்தில் பதிக்கவோ இல்லை. நிச்சயமாக இல்லை.
தந்தை பெரியார் தாம் வாழ்ந்த காலத்தில் சமூகநீதி இயக்கத்தைச் தோள்மீது சுமந்த போது, மூத்திரச் சட்டி சுமந்த போது, அவ்வப்போது உடல் உபாதைகள் உறுத்திய போது உம்.... உம்.... என்று, அம்மா.. அம்மா என்று வலி பொறுக்காமல் முனங்கிய வாறே, வேறு யாரும் முன் வராததாலே நான் சுமக்கிறேன் என்றுணர்ந்ததை நினைவுறுத்துகிறது இந்த உற்றார் தொடர் பயணம்.
21 நாள்கள் நாகர்கோயில் முதல் நம் தலைநகர் சென்னை வரை தொடர் பெரும் பரப்புரை பயணம் மேற்கொண்ட தமிழர் தலைவர் 21 வயதாகிய இளைஞரா, கட்டுமஸ்தான உடல் கொண்ட கட்டிளம் காளையரா. இவ்வாறு பயணம் மேற்கொண்டால் இந்தியாவின் தலைமை அமைச்சர், குடியரசுத் தலைவர் பதவி ஏதேனும் கிட்டப் போகிறதா இல்லையே.
அகவை 89, ஆசிரியர் அவர் உடலில் மருத்துவரின் கத்தி படாத இடமே இல்லை. இந்திய வரலாற்றில் ராணா பிரதாப் சிங் என்ற ரஜபுத்திர மாவீரரைப் பற்றி எழுதுகையில் கர்னல் டாப், Fragement of a Soldier என்று குறிப்பிடுவார்.
அது போல் கண், காது, கை, கால், இதயம், வயிறு என்று உடலின் உறுப்புகள் பலவற்றிற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டவர். ஒரு முறை அல்ல, நான்குமுறை திறந்தநிலை இதயச் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்.
ஒரு முறை அல்ல இரண்டு முறை கரோனா தாக்குதலுக்கு ஆட்பட்டவர். எனவே, வியப்பின் மறுபெயர் வீரமணி என்று விதந்து போர்த்தப்பட்டவர். வேறு எவராயினும் இப்படித் தொல்லை சுமந்து செல்ல விழையார்.
அவரின் துணிச்சலான இந்த முயற்சிகளுக்கு உண்மையிலேயே படபடப்போடு கவலையோடு அப்பாடா பயணம் முடித்து வெற்றிமணி ஒலித்துத் திரும்பினாரே என நிம்மதிப் பெருமூச்சு விடுபவர். - அவர் உடல் நிலையை நன்கு அறிந்தவர்களில் ஒருவரான வீரப் பெண்மணி மோகனா அம்மையார். என்கிற அவர்தம் வாழ்விணையர் ஒருவர் மட்டுமே எனலாம்.
உண்மையில் அவருடைய இப்பயணம் - சமூக நீதிகாக்க மேற்கொண்ட பயணம். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பெருந்தலைவர் காமராசர் காலமெல்லாம் கல்விப் பயிரைத் தமிழகத்தில் செழிக்க வைத்த மண்ணில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வாயில் மண்ணைத் திணிக்கும் மய்ய ஒன்றிய அரசின் முரட்டுப்பிடிவாதக் காளைக்கு மூக்கணாங் கயிறு போட மேற்கொண்ட விழிப்புணர்வு வித்தை ஆழமாக விதைத்திட மேற்கொண்ட பயணம்.
மூன்று முதன்மைச் சிக்கல்கள் தமிழ் மண்ணை மட்டுமல்ல - இந்திய மண்ணையே பாதித்திடும் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வுப் பயணம் தமிழகம் போல - இந்தியாவின் மாநிலங்கள் அனைத்தையுமே விழிபிதுங்க வைத்திடும், எதிர்கால இந்திய நாட்டைப் பாதிக்கும்.
உண்மையாகச் சொன்னால் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிய அரசுக்கு எதிராகப் புரட்சிக் கொடி தீப்பந்தம் ஏந்த வேண்டிய சிக்கல்கள். சுருக்கமாக ஒரே வரியில் சொல்வதெனில் மூன்று சிக்கல்களுமே மாநிலங்களின் உரிமையைப் பாதிக்கும் மூட மனிதர்களின் சிக்கல்கள்.
ஆனால் பாவம் இந்த மாநிலங்கள் எதை எதை எண்ணி கவலைப்படுவார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் குறித்து கவலைப்படுவார்களா? மாநிலங்களுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. வரவில்லை எனக் கவலைப்படுவார்களா? அந்தக் கவலை, இந்தக் கவலைகளைச் சிந்திக்க விடாமல் இந்த அடிப்படையில் பிரச்சினைகளை அமுக்கி விடுகிறதேன்?
எல்லையிலே அயலவரால் ஏற்படுவது மட்டுமல்ல இந்நாட்டிற்கு ஆபத்து, இந்திய ஒன்றிய அரசின் கரம் அரசின் இந்துத்துவாக் கொள்கையால், இவையும் நீட் தேர்வு, புதிய தேசியக் கல்விக் கொள்கையும் மாநில உரிமைப் பறிப்பு என்றும், ஒன்றிய அரசின் கொள்கை ஆகியனவும் தான் என்ற தொலைநோக்குப் பார்வை இந்த மாமனிதர் நம் தமிழர் தலைவருக்கு இருந்ததாலே தன் உடல் நலனையும் பொருட்படுத்தாது பயணம் புறப்பட்டு விட்டார். பதவி சுகம் எதவுமே இல்லாத இயக்கத் தலைவர்.
இதில் ஓர் ஆறுதல் ஒரு மகிழ்ச்சி, ஒரு நிறைவு. ஆசிரியரின் கொள்கைப் பயணத்திற்குத் தமிழ்நாட்டில் தி.மு.க., அதன் தோழமைக் கட்சிகள் ஒதுங்கி விடாமல் துணை நிற்பதே.
வழக்கம் போல் அடிமைகளான அ.தி.மு.க.வினர் கண்டு கொள்ளாமல் அடிமைப் பல்லக்குத் தூக்கிகளாக இருக்கின்றனர்.
இந்தப் பயணத்தில் 21 நாட்களில் 40 நகர்களில் வீரமணி ஓசை ஒலித்தது.
3.4.2022 அன்றும் 25.4.2022 அன்றும் இரண்டு நாட்கள் மட்டுமே ஒரே ஒரு ஊரில் பரப்புரை. மற்ற நாட்களில் எல்லா நாள்களும் இரண்டு ஊர்களில் பரப்புரை. மாலை 6 மணிக்கு ஒரு நகரம் என்றால் அதே இரவில் 7 மணிக்கு மற்றொரு ஊரில். எப்படித்தான் திட்டமிட்டாரோ, எவ்வாறு சிந்தனையைச் செலுத்தி திட்டமிட்டாரோ என்று வியக்க வைக்கிறது.
இந்த பயணத்துக்கு இடையே 14.4.2022 அன்று சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டுச் சிறப்பிக்க வருகை புரிந்ததையும் குறிப்பிட வேண்டும்.
பரப்புரைப் பயண வெற்றிக்கு வெற்றிமணி ஒலிக்கச் செய்வதற்குப் பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ் அவர்களும், இரா.ஜெயக்குமார் அவர்களும் மற்றும் பெ.சுப்பிரமணியன், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநிலத்தலைவர் ப.சுப்பிரமணியன் அவர்களும் ஆற்றிய அரும்பணி அளவிட இயலாத அற்புதப் பணி என்பதையும், பதிவு செய்தாக வேண்டும். ஒவ்வொரு ஊரிலுள்ள இயக்கத் தோழர்களும், தி.மு.க. அதன் கூட்டணிக்கட்சியினரும் ஆற்றிய அரிய பெரிய பணியும் சொல்லாமல் விளங்கும்.
கூட்டம் நடைபெறுவது ஏதோ ஒரு நகரில் ஆனால் உலகம் முழுவதும் வாழும் மனிதர்கள் உடனுக்குடன் கேட்டு மகிழ வகை செய்த சிறப்பும் குறிப்பிடத்தக்கது. அதிலும் ஒரு சிறப்பைச் சொல்லாமல் இருக்க இயலவில்லை. 40 ஊர்களிலும் தமிழர் தலைவரின் உரை வீச்சு தனித்தனிக் கோணத்தில் அமைந்திருந்தது ஒரு வியப்பு. பெரு வியப்பு.
ஏப்ரல் திங்கள் இரண்டாம் நாள் வெளிவந்த துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வெளியிட்ட தலைப்புச் செய்தியும், அறிவிப்புமே ஆற்றுப் பெருக்கை மட்டுமல்லாமல் சுண்டி இழுக்க மட்டுமல்லாமல் ஆர்வ ஊற்றை உருவாக்கியது.
புறப்படுகிறது பிரச்சாரப்படை பூமாலை வேண்டாம்! |
கூடுங்கள்! கூடுங்கள்!! பெருந்திரளாய்!!!
குஜராத் முதலமைச்சராக இருந்த போது நீட்டையும், ஜிஎஸ்டி, ஆதார் அட்டையையும் எதிர்த்து நெடுமுழக்கமிட்ட அதே நரேந்திர மோடி பிரதமரான பிறகு "ஒப்புத்தாளம்" வாசிக்கிறார்.
திராவிட இயக்கம் எடுத்த முடிவுகள் எல்லாம் வெற்றி பெற்றதற்குக்குக் காரணம் அது. மக்களிடம் செல்வது தான் - பிரச்சாரத்தின் வாயிலாகத்தான் என்ற திராவிடர் கழகப் போர்களின் வெற்றி இரகசியத்தைச் சொல்லி இப்பொழுதும் அதே அணுகுமுறையைக் கையில் எடுத்துக் கொண்டுதான் தமிழர் தலைவர் பகுத்தறிவுப் போராளி மானமிகு. கி.வீரமணி புறப்பட்டுள்ளார்.
நீட் தேர்வு எதிர்ப்பு, கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்புப் பரப்புரைப் பெரும் பயணக்கூட்டத்தொடக்க விழா 3.4.2022 அன்று நாகர்கோவிலில் தொடங்கிய தொடக்கமே களை கட்டியதால் இனிவரும் பரப்புரையும் வெற்றிக்கொடி பறக்கச் செய்யும் என்பதாய் அமைந்தது.
தமிழர் தலைவர் தம் உரையின் தொடக்கத்தில் நாகர்கோவில் காவிக்குரியது என்று சிலர் பேசிக் ªகி£ண்டிருக்கிறார்கள். அது வெறும் கானல் நீர் தான். பொய் மான் தான் எனக் காட்டியிருப்பதைக் எடுத்துக் காட்டினார்.
நாகர்கோயில் தான் திராவிட இயக்கத்தின் நாகரீக தொட்டில். முதன் முதலில் இங்குதான் வாசிப்பு சாலை தொடங்கப்பட்டது. அதற்குப் பெயர் சுயமரியாதை வாசிப்புச் சாலை என்று புதிய செய்திப் பூங்கொத்தை அறிய தந்தார். நாகர்கோயிலில் அனைத்துக் கட்சியினரும் பொதுமக்களும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரை கேட்கத் திரண்டிருந்தனர். பயண வழி நெடுகிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
ஒவவொரு இடத்திலும் முதன்மை நிகழ்வை மட்டும் குறிப்பிட்டுக் கூறவேண்டியதை எடுத்து வைப்போம். நாகர்கோயிலை அடுத்து தென்காசி, நெல்லையில் 4.4.2022 அன்று பரப்புரை பயணம் நடைபெற்றது.
தென்காசியில் அவருக்குமுன் உரை நிகழ்த்திய அனைவருமே தம் வயதைக் குறிப்பிட்டுப் பேசியதைச் சுட்டிக்காட்டி "தந்தை பெரியாரைப் போல முடியும் வரை பிரச்சாரம் செய்வேன்" என்று பேசி உரையை நிறைவு செய்தவர், அடுத்து நெல்லையில் சுயமரியாதை இயக்க முதல் கூட்டம் நடைபெற்றது. நெல்லையில் தம் உரையில் அனிதாவை நினைவூட்டினார். நெல்லையில் சிற்பூந்தூர சந்திப்பில் நடைபெற்றது.
மூன்றாம் நாள் பரப்புரை 5.4.2022 அன்று தூத்துக்குடி - சிவகாசியில் நடைபெற்றது. தூத்துக்குடியில் முதல் கூட்டத்தில் மோடி அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் சமூக நீதி என்னும், உயரிய சமத்துவக் கோட்பாட்டுச் சொல்லே இல்லை, எனத் தமிழர் தலைவர் ஒன்றிய அரசின் முகமூடியைக் கிழித்தார்.
அடுத்து தூத்துக்குடியில் இருந்து இரண்டு மணி நேரம் பயணம், ..... சிவகாசியில் பரப்புரை சிறப்புரை முடிந்ததும் மதுரை நோக்கி பயணித்தார் தமிழர் தலைவர், நாகர்கோயிலைப் போல் சிவகாசியில் நகர மேயர் வரவேற்றார்.
6.4.2022 அன்று தேனியில் பரப்புரை நிகழ்த்தியவர், நீட் தேர்வின் அவஸ்தையை விளக்கியவர் "சரி அவர்கள் சொன்னபடியே நீட் தேர்வின் நோக்கமாகச் சொல்வது நிறைவேறி இருக்கிறதா எனக் கேள்வி கேட்டு வரிசையாக ஒவ்வொன்றுக்கும் பதிலளித்து நோக்கம் நிறைவேறவில்லை என்பதைக் கடந்து ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் மலிந்து விட்டதைக் கவலையோடும் கவனத்தோடும் உதாரணங்களுடன் மெய்ப்பித்தார்.
தேனியில் கூட்டம் முடித்து இரண்டு மணி நேரம் பயணித்து மதுரை வந்து அடைந்தார். மதுரை சித்திரைத் திருவிழாக் கோலம் பூண்டிருந்ததோடு, தமிழர் தலைவர் வருகைக்கும் விழாக் கண்டது. இங்கே தமிழ்நாடு காங்கிரசுக் குழுத் தலைவர் கே.எஸ்.அழகிரியும் பங்கேற்றார்.
இராமநாதபுரத்தில் 7.4.2022 அன்று இராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்றது. விழாவில் மானாமதுரையில் வரவேற்பு நடைபெற்றது. கூட்டத்தை முடித்துக் கொண்டு மேடையிலேயே செய்தியாளர்களைச் சந்தித்து விட்டுக் காரைக்குடியில் பரப்புரைப் பெரும்பயணப் பொதுக்கூட்டத்தில் "எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது ஏன் இந்த மூன்று பிரச்சினைகளை மட்டும் மய்யப்படுத்தித் தீவிரப் பரப்புரை செய்வது ஏன்?" என்ற கேள்வியை மக்கள் சார்பாக அவரே கேட்டு இந்த விடையையும் இவ்வாறு உரியப் பிரச்சினையின் தீவிரத்தைப் பளிச்செனப் புரிய வைத்தார். தெள்ளென தெளிய வைத்தார்.
"ஒரு விபத்து ஏற்பட்டால் காயம் ஏற்படுவது எல்லார்க்கும் தெரியும். அதற்குப் பரிகாரம் செய்யப் பலரும் வருவார்கள். ஆனால் புற்றுநோய் வந்தால் அது முற்றிய பிறகுதான் தெரியும். நீட்டும், புதிய தேசியக் கல்விக் கொள்கையும் புற்றுநோயை விட ஆபத்தானவை. அதனாலேதான் இந்த மூன்றையும் நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம்" என்ற பதில்தான் ஆசிரியர் அளித்தது.
தொடர்ந்தவர் "கல்வி தான் நமது பிள்ளைகளின் வளர்ச்சிக்கு காரணம். அந்தக் கல்விக் கண்ணைக் குத்துவார்கள். அதற்குத் தான் உங்களை நேரில் சந்தித்துப் பேசி சிந்திக்க வைக்க வந்திருக்கிறோம்" எனவும் விளக்கினார்.
காரைக்குடியில் கூட்டம் முடிந்து இரவிலேயே திருச்சியில் தங்கிடப் பயணமானார். திருச்சியில் தங்கிய பின் 8.4.2022 வெள்ளியன்று புதுக்கோட்டை, தஞ்சாவூரை முடித்துக் கொண்டு சிறப்பான வரவேற்றைப் பெற்ற பின் அரியதோர் உரை நிகழ்த்தியவரின் அடுத்த பயணம் திருவாரூர், நாகையாகும்.
திராவிட இயக்க வரலாற்றில் குறிப்பாக திராவிடர் கழக வரலாற்றில் தஞ்சைக்கு மட்டும் தனி இடம் - தமிழர் தலைவர் எத்தனை முறை சென்றாலும் அத்தனை முறையும் தனிச்சிறப்பு வரவேற்புதான். எடைக்கு எடை கொடுத்துத் திராவிடர் கழகத் தலைவர்களை எடை போட்ட மண்.
21 நாள் பயணத்தில் ஒவ்வொரு நகரமும், நாகர்கோயிலில் இருந்து தஞ்சை வரை ஒவ்வொன்றிலும் ஒரு வகைச் சிறப்பு இருந்து. விழிப்புணர்வு பயணம் வெற்றிப் பயணம் தான். ஆனால் தஞ்சையில் ஒரு மாநாடு நடக்கப் போவது போன்ற தோற்றம்.
8.4.2022 அன்று மாலை 6 மணியளவில் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நடைபெற்றது. தஞ்சை மாநகர் முழுவதும் திரும்பும் திசையெல்லாம் இப்பிரச்சாரப் பெரும் பயணத்தை விளக்கி 15 நாளுக்கு முன்பாகவே சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்து இருந்தனர்.
திராவிடர் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், தஞ்சைக் கிராமம் பகுதி மக்கள், நகரத்தவர் என ஆபிரகாம் சாலை முழுவதும் மக்கள் வெள்ளம், காணும் இடம் எங்கும் கருஞ்சட்டை வீரர்கள். புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை நகருக்குள் நுழையும் புறவழிச் சாலையிலிருந்து பரப்புரைக் கூட்டம் நடைபெறும் ஆபிரகாம் பண்டிதர் சாலை வரை நூற்றுக்கணக்கில் கழகக் கொடிகள் கழக மாநாடோ என்று கட்டியம் கூறின.
AT HOME என்பார்களே அது போன்ற உணர்வு தஞ்சைத் தரணியிலே ஆசிரியரிடத்துக் காணப்பெற்றது எனலாம். இங்கே "நான் முதல் பட்டதாரி. இங்கே மேடையில் இருக்கின்றவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரிகள். ஏன்? எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மம் ஆண்ட நாடு இது. எப்படிப் படிச்சிருக்க முடியும் என்று கேட்டவர், இதை மாற்றிக் காட்டியது திராவிட இயக்கம்தான்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மேனாள் மாவட்டத் தலைவர் தோழர் இர.புட்பநாதன் வயதின் காரணத்தால் மேடைக்கு ஏறி வர இயலாது என்பதால் மேடையில் இருந்த ஆசிரியர் நாமே கீழே சென்று வாழ்த்த வேண்டும். ஏன்னா நான் இன்னும் இளைஞன் தான் எனக் கூறி 89 வயது இந்த இளைஞர் மேடையை விட்டிறங்கி இர.புட்பநாதனுக்குப் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்து மகிழ்ந்தார். இது நடந்தது தஞ்சைக் கூட்டம் முடித்து புதுக்கோட்டைக்குப் பயணித்து அங்கே சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்றப் பெரும் பயணக் கூட்டத்தில். இங்குத் திருக்கோகர்ணம் சந்திப்பில் முன்னர் தலைவரைச் சிறப்பாக வரவேற்றனர்.
9.4.2022 அன்று மாலை நாகப்பட்டினத்தில் உரையாற்று கையில், புதிய கல்விக்கொள்கை என்பது புதிய குலக்கல்விக் கொள்கை என்பதை எவ்வளவு அற்புதமாக எடுத்துரைத்து, நாகையில் கூடியிருந்த மக்களை வியக்கச் செய்த அவருடைய நினைவாற்றல் பொருத்தமான உரைப்பகுதி சுட்டிக்காட்டத் தக்கது.
"உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மூளை என்று சொல்லப்பட்ட வெள்ளைக்காரன் போன பிறகு முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் 'ஹிந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று சொன்னவர்களைச் சிறையிலடைக்கணும் என்றவர் - தந்தைப் பெரியாரைச் சிறையிலடைத்தவர் ராஜகோபாலாச்சாரி என்று சொல்லப் படக்கூடிய ராஜாஜி கொண்டு வந்த இதே குலக்கல்வியைக் சட்டப் போராட்டம் நடத்திச் சர்வ சக்தி வாய்ந்த இராஜ கோபாலாச்சாரியைத் தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்துச் சென்னை வரை நடைப் பயணம் செய்த வரலாறு இந்த நாகப்பட்டினத்திற்கு உண்டு. அப்படிப்பட்ட ராஜாஜியை விட இவர்கள் மதியூகிகளா? என்று கேள்வி எழுப்பி அப்படி இல்லை என்பவரைச் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ அறிவுப்பூர்வமான வரலாற்றைக் கூறி இந்தியாவில் மோடி அரசு ஏற்படுத்த முயலுவதும் ஹிந்தி திணிப்பு என்று புரிய வைத்தார்.
மேலும் அவர் பரப்புரைப் பயணத்துக்கு அடிப்படையான மூன்று பிரச்சினைகளும் அரசமைப்புச் சட்டப்படியே என்பதையும் விளக்கினார்.
தஞ்சையைப் போலவே திருவாரூர் நாகைக் கூட்டங்களிலும் சாலை வளைவுகள் சாலையின் இருபுறமும் கழகக் கொடிகள் ஏராளமாக தமிழர் தலைவரை வரவேற்றன.
திருவாரூரில் எடுத்த எடுப்பிலேயே "தளபதி தமிழக முதல்வர் ஆட்சி பத்து மாதத்தில் - பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளைச் செய்துள்ள நல்ல ஆட்சி. அதைத் தடுத்திடும் வகையில் டில்லியிலிருந்து அனுப்பப்பட்டவர்கள் சட்ட விரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
ஆசிரியரின் பெரும் பயணப் பொதுக்கூட்டம் 10.4.2022 அன்று சீர்காழி, அதனைத் தொடர்ந்து கடலூரில் நடைபெற்ற போது "உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டு வரலாறு தெரியாது. தந்தை பெரியாரோ திராவிடர் கழகமோ தோற்றதாக வரலாறு கிடையாது என ஆசிரியர் பாடம் நடத்தினார். ஆசிரியரின் சொல் மழையிடையே இயற்கை மழையும் தலை காட்டி கொண்டிருந்தது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவராக இருந்த போது சீர்காழியில் மாதத்திற்கு இருமுறையாவது கிராமப் பிரச்சாரத்திற்கு வந்துள்ளதாக நினைவு கூர்ந்தவர். அதே சமயம் இப்போது அப்படி வரஇயலாத சூழல் நிலவுவதையும் சுட்டிக் காட்டினார். மழையையும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் அமர்ந்து உரை கேட்டதைக் குறித்துக்
"குடி செய்வார்க்கில்லை பருவம்
மடிசெய்து மானம் கருதிக் கெடும்"
எனும் குறளை நினைவுபடுத்தினார்.
கடலூர் தமிழர் தலைவர் பிறந்தமண் அல்லவா? அங்கே அவருக்கு அளித்த வரவேற்பும் வித்தியாசமாகத் தானிருந்தது எப்படி? தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அங்கே தீப்பந்த வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துரை.சந்திரசேகரன் செய்திருந்த இந்த ஏற்பாடு மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கியது. கடலூரில் செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும் எனும் எதிர்நீச்சல் வரலாற்றை மிகுந்த மலர்ச்சியுடன் மீட்டிக்காட்டினார். ஆசிரியர் மண்ணின் மைந்தர், நீண்ட காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
புதுச்சேரி அண்டை மாநிலம் என்று பெயர் தானே தவிர முழுக்க முழுக்க தமிழ் மண்தான். இன்னும் சொல்வதானால் முறையற்ற வழியில் சங்கிகள், காவித்திருக்கூட்டம் ஆட்சியை கைப்பற்றி ஆளும் மாநிலம். அங்கேயும் தமிழக மாவட்டங்களுக்கு இணையான மிகுந்த உற்சாக வரவேற்பு. கலை நிகழ்ச்சியும் கூட நடைபெற்றது. புதுச்சேரியில் நடப்பது பொம்மலாட்ட அரசு என்று கூறிடவும் தயங்கிடவில்லை. "நாங்க போன முறையே சரியாகச் சொன்னோம். ஆனால் நீங்க பொய்யான வாக்குறுதிகளைக் கேட்டு ஏமாந்திட்டீங்க. இந்த முறை சரியாக இருக்கனும் என வழிகாட்டவும் செய்தார். தீயணைப்பு வீரர்கள் போல் ஒன்றுபட்டு பாசிச ஆட்சியை வீழ்த்தவும் வேண்டும் என்றார் பொருத்தமாக.
அடுத்துப் பயணித்துச் சேர்ந்த தமிழ் மண் திண்டிவனத்தில் கடலூரைப் போலவே தோழர்கள் வழியில் இரண்டு பக்கமும் தீப்பந்தம் ஏந்தி பேண்டு இசை முழங்கச் சென்னைக்குக் கூட கேட்கும் உரத்த குரலில் "தமிழர் தலைவர் வாழ்க! தந்தை பெரியார் புகழ் ஓங்குக! " என்று முழக்கமிட்ட மக்கள் வெள்ளத்தில் நீந்தி காந்தியார் திடல் அருகே இருந்த மேடைக்குச் சென்றார். இங்கே அமைச்சர் செஞ்சி மஸ்தானும், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவனும் உரையாற்றிய பின் நிறைவாகவே உரை ஆற்றினார் தமிழர் தலைவர்.
தமதுஉரையில், புதுவைக்கு அருகில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் வாழ்ந்த ஊர் அருகிலிருக்கும் ஊர் திண்டிவனம் என்பதை நினைவூட்டும் வகையில் பொதுக்கூட்டம் மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததை "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே" எனப்பலத்த கையொலி இடையே தொடங்கினார்.
திண்டிவனத்தில் தமிழ்நாடு வரலாற்றில் நிகழ்ந்த முதன்மை நிகழ்ச்சியைத் தொட்டுக் காட்டினார். நெருக்கடி நெருப்பாற்றில் தமிழகம் நீந்திய நிகழ்வு அது.
திண்டிவனத்தில் பொதுக்கூட்டத்தில் தான் பேசிக் கொண்டிருந்த போதுதான் தலைவர் கலைஞரின் கழக அரசு கலைக்கப் பெற்றதையும் அன்னை மணியம்மையார் பொறுப் புடன் நடந்து கொண்டதையும் தாங்கள் பெரியார் திடலுக்குத் திரும்பிச் சென்ற போதுதான் கைது செய்யப்பட்டதையும் அதையொட்டி நிகழ்ந்தவற்றையும் நினைவு கூர்ந்தார். திராவிட இயக்கத்தை எளிதாக வீழ்த்திடலாம் என எவரும் எண்ணிக் கனவு காண வேண்டாம் என எச்சரிக்கவும் செய்தார். திண்டிவம் பெரும்பயணக் கூட்டத்தைச் சிறப்பாக அனைவரும் இணைத்து அமைத்துக் கொடுத்ததைப் பாராட்டும் வகையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், திருமாவளவன், ரவிக்குமார், பெண் நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்குப் பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார். நிகழ்ச்சியை முடித்துச் சென்னை புறப்பட்டார். சென்னை சேர்ந்தாரே பயணம் நிறைவுற்றதா? தொடர்கிறது. இரண்டு நாட்களுக்குப் பின் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் தொடர்ந்து சந்திப்போம்.
லேபிள்கள்:
குமரி முதல்,
நீட் எதிர்ப்பு,
பரப்புரை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













