ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

உலகத் தமிழர்களின் ஒருமித்த குரல்! புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளை உலகத் தமிழ் மொழி நாளாக அறிவித்திடுக!

  

புரட்சிக்கவிஞர் பிறந்தநாளில் ‘திராவிட மாடல்' அரசுக்கு நமது வேண்டுகோள்!

1

புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளை ‘உலகத் தமிழ் மொழி நாளாக' அறிவிக்கவேண்டும் என்பது புரட்சிக்கவிஞர் பிறந்தநாளில் ‘திராவிட மாடல்' அரசுக்கு நமது வேண்டுகோளும், உலகத் தமிழர்களின் வேண்டுகோளுமாகும் என்று  திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று (29.4.2023) நமது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களது 133 ஆவது ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

திராவிடர்தம் ஒப்பற்ற திருவிழா! இலக்கியப் பேரின்ப விழா!!

 தமிழ் மொழியும், இலக்கியமும் எத்தனையோ கவிஞர்களையும், ‘பாவேந்தர்களையும்‘, ‘கவிச்சக்ர வர்த்திகளையும்' கண்டுள்ளது.

சுயமரியாதை சூறாவளிக் கவிஞர்

ஆனால், இவரின் தனித்தன்மை, புரட்சிக்கவிஞர் என்பதே! 

தந்தை பெரியார்போல மற்றவர் நுழைய அஞ்சிய ஜாதி, மத, மூடநம்பிக்கைகளை எதிர்த்து தமது ஆற்றலை, அறிவை, ஆளுமையை எழுச்சி பெற இறுதி வரை வருமானம், புகழ்வேட்டை இவற்றைத் துறந்து, தந்தை பெரியார்தம் இலக்கியக் குரலாய் இறுதிவரை வாழ்ந்த சுயமரியாதை சூறாவளிக் கவிஞர் இவர்!

அடர்ந்த மூடநம்பிக்கைக் காட்டை அழிக்க, ஜாதி விஷ மரங்களை வெட்டிச் சாய்க்க, பெண்ணடிமையை அறுத்தெறிய, மானுடம் தழைத்தோங்கி புது உலகம் காண, தனது கவித்திறனை முனை மழுங்காத போர்க் கருவியாக, புரட்சி ஆயுதங்களாக ஆக்கி, புதுத்தடம் பதித்த முற்போக்குக் கவிஞர் இவர்!

எனவேதான் இவர் ‘புரட்சிக்கவிஞர்!'

மற்றவர் எளிதில் எட்ட முடியாத புரட்சியின் உச்சம் இவர்!

புகழும் பெயரும் அவருக்குத் துச்சம்!

திராவிடர் இயக்கத்தின் தனித்த 

‘தகைசால்' பெருமை!

தந்தை பெரியார் கொள்கைகளை, லட்சியங்களை சாகா இலக்கியங்களாக்கி சரித்திரம் படைத்த மேதை இவர்!

அச்சம் அவரைக் கண்டு அச்சப்பட்டே ஓடும்!

அப்படிப்பட்ட ஒப்பற்ற கவிஞரைப் பெற்ற பெருமை, திராவிடர் இயக்கத்தின் தனித்த ‘தகைசால்' பெரு வெளிச்சம்!

புரட்சிக்கவிஞருக்கு இணை ஏது?

மானுடப் பார்வையோடு மண்ணின் சுயமரி யாதையை விளைச்சல் நிலமாக்கிய மகத்தான புரட்சிக் கவிஞருக்கு இணை ஏது?

கூலிக்குப் பாடிய கவிஞன் அல்ல அவர்!

குவலயத்தையே புரட்டிப் போட ஏடெடுத்த ஏந்தல் அவர்!

‘உலகத் தமிழ் மொழி நாளாக' பிரகடனப்படுத்தி வரலாறு படைக்கவேண்டும் ‘திராவிட மாடல்' அரசு!

அவரது இந்த நாளை - உலக  மொழிகள் எல்லாம் தாய்மொழி நாளாக ஒவ்வொரு நாளைக் கொண்டாடி மகிழும் வாய்ப்புப் பெற்ற நிலையில், நமது ‘திராவிட மாடல்' அரசு, புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை ‘உலகத் தமிழ் மொழி நாளாக' பிரகடனப்படுத்தி, வரலாறு படைக்கவேண்டுமென்ற கோரிக்கை உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கின்ற காரணத்தால், அவர்களது விருப்ப விழைவை - வேண்டுகோளை நமது முதலமைச்சர் பரிசீலித்து, அறிவித்து, வரலாறு படைத்தால், அதைவிட ‘திராவிட மாடல்' ஆட்சி சாதனைக்கு வேறு ஏது சிகரம்?

அன்புடன் வேண்டுகிறோம்!

வாழ்க புரட்சிக்கவிஞர்!

வருக அவர் காண விரும்பிய உலகு!!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

29.4.2023 

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு ஜனநாயக முறையில் ஏற்றுக் கொண்டு சட்டமுன்வடிவு செயலாக்கத்தை நிறுத்திவைத்த முதலமைச்சருக்கு நன்றி!


கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு ஜனநாயக முறையில் ஏற்றுக் கொண்டு சட்டமுன்வடிவு செயலாக்கத்தை நிறுத்திவைத்த முதலமைச்சருக்கு நன்றி!

 *12 மணி நேர வேலை என்ற சர்ச்சை

*போராடிப் பெற்ற உரிமைகளை இழக்க முடியுமா? 

1

கடந்த 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தொழி லாளர்கள் பணி, உரிமைகள், சலுகைகளுக்கு எதிரான அம்சங்களைக் கொண்ட சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்ற அனைத் துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் கோரிக்கையை ஜனநாயகப் பண்போடு நிறுத்தி வைத்த முதல் அமைச்சருக்குப் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து, 12 மணி நேரம் உள்ளிட்ட, ஏற்கெனவே தொழிலாளர்களுக்கு என்று இருந்த உரிமைகள், சலுகைகள் பறிப்பு உள்ளிட்ட சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டப் பேரவையில் 21.4.2023 அன்று நிறைவேற்றப்பட்டது.

அன்றே எதிர்த்தோம்!

அந்த சட்டமுன் வடிவில் இடம் பெற்றிருந்த தொழிலாளர் நலனுக்கு விரோதமான அம்சங்களைச் சுட்டிக்காட்டி, இதனை விலக்கிக் கொள்ள வேண்டும், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அன்றே (21.4.2023) அறிக்கை மூலம் தெரிவித்திருந்தேன்.

கூட்டணிக் கட்சிகள் உள்பட இந்த சட்டமுன் வடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

இது தொடர்பாக நேற்று பிற்பகல் (24.4.2023) தொழிற்சங்கங்களின் கூட்டம் மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்றது; தி.மு.க. தொழிற்சங்கம் உள்பட அந்த சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.  

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 7 மணிக்கு முதல் அமைச்சர் தலைமையில்  கூட்டணிக் கட்சி களின் கலந்துரையாடல் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. (விவரம் தனியே காண்க). 

அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சட்ட முன்வடிவின் நோக்கம் குறித்து விளக்கினார்.

தோழர்களின் கருத்துகள்

சி.பி.எம். மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ் ணன், இந்த சட்டமுன் வடிவினால் எந்தெந்த வகைகளில்   தொழிலாளர் நலன் பாதிக்கப்படுகிறது. போராடிப் பெற்ற உரிமைகள் பறி போகின்றன என்பதை விளக்கமாக எடுத்துக் கூறினார். மற்ற கட்சித்தலைவர்கள் தங்கள் கருத்துகளை சுருக்கமாகக் கூறினர்.

இறுதியாக திராவிடர் கழகத்தின் சார்பில்  இந்த சட்ட முன்வடிவு குறித்து விளக்கிக் கூறினேன்.

போராடிப் பெற்ற உரிமைகளை 

இழக்க முடியாது!

"இந்தசட்ட முன் வடிவு நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற நல்ல முடிவோடு இங்கே வருகை தந்துள்ள முதல் அமைச்சருக்கு அனைத்துக் கட்சி சார்பில் பாராட் டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வரும் மே தினம் நூற்றாண்டைக் காணவிருக்கிறது. மே தினத்திற்கு விடுமுறை அளித்தவர்  முதல் அமைச்சர் முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் ஆவார்.

இந்தச் சூழலில் போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் பறி போகும் வகையிலும், தொழிலாளர்கள், வெகு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு அம்சங்களைக் கொண்ட சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெகு மக்கள் மத்தியில்....

பல்வேறு காரணங்களை சமாதானமாகக் கூறினாலும் இதுவரை எட்டு மணி நேரம் வேலை என்பது 12 மணி நேரமாகப் போகிறது என்ற பிரச்சாரமும், மக்கள் மத்தியில் வேகமாகப் பரவிஅது போன்ற எண்ணமும் தான் மேலோங்கி நிற்கும்.

இது திராவிட மாடல் அரசுக்குத் தேவையில்லாத ஒன்று. நாள்தோறும் மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு  சாதனைகளைக் குவித்து வரும் அரசுக்குக் கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தும்.

ஊடகங்களும் பெரும் அளவில் ஊதிப் பெருக்கிப் பிரச்சாரம் செய்யும் - போராட்டங்கள் பல வடிவங்களில் கிளர்ந்து எழ வாய்ப்புண்டு. 

எதிர்க்கட்சிகள் வாய்க்குக் கிடைத்த அவல்!

வெறும் வாயை மெல்லும் எதிர்க்கட்சிகளுக்கு அவலைக் கொடுக்கும் நிலையை அரசு ஏற்படுத் தலாமா?

கூட்டணிக் கட்சிகளும் திமுக அரசை ஆதரித்தாலும் கொள்கை என்று வரும்போது விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை உரிமையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல் அமைச்சரின் 

அணுகுமுறை வெகு சிறப்பு!

பிடிவாதம் காட்டாமல் எதிர்ப்பு என்று வரும்போது அதில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டு, உரிய வகையில் நமது முதல் அமைச்சரின் சட்ட முன் வடிவை நிறுத்தி வைக்கும் முடிவு, முதல் அமைச்சரின் பரந்த ஜனநாயக உணர்வை வெளிப்படுத்துகிறது. வெகு மக்கள் உணர்வை மதிப்பது பெரும் பண்பா டாகும். 'A Win - Win Situation' என்ற சொலவடை உண்டு. 'யாருக்கும் தோல்வி இல்லை' என்பதையே முதலமைச்சரின் முடிவு பறைசாற்றுகிறது.

முழுமையாக ரத்து செய்ய வேண்டும்

நிறுத்தி வைப்பது என்பதையும் தாண்டி ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பை நாடு எதிர்பார்க்கிறது" என்று அக்கூட்டத்தில் குறிப்பிட்டேன்.

இதனை வழிமொழிவதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் குறிப்பிட்டனர்.

முதல் அமைச்சரின் நல்ல முடிவை ஏற்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் விடை பெற்றனர். நான்கு நாள்களாக ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் எழுந்த அலைகள் ஓய்ந்ததில் நமக்கு முழுத் திருப்தியே!


கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை 

25.4.2023