மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட
வியாழன், 25 பிப்ரவரி, 2021
கலைஞர் என்ன கிழித்துவிட்டார்?தெரிந்து கொள்ளுங்கள்
நூல் மதிப்புரை:தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்
நூல் மதிப்புரை:தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்
நூல்: தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்
ஆசிரியர்: முனைவர் கருவூர் கன்னல்
வெளியீடு: குறள்வீடு,3/3,பாரதிதாசன்நகர்,
கரூர்-639007.கரூர் மாவட்டம். பேசி:9952380033
விலை: ரூபாய் 80/- பக்கம்: 104
ஒரு புத்தகத்தில் தந்தை பெரியாரின் ஒட்டுமொத்தக் கருத்துகளையும், சிந்தனைகளையும் அடக்கிவிட முடியாது. தந்தை பெரியார் பற்றிய தாம் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து புத்தக வடிவில் கொடுத்துள்ள ஆசிரியர் கருவூர் கன்னல் அவர்களின் அரும்பணி பாராட்டத்தக்கதாகும். தந்தை பெரியாரின் சிந்தனைகளின் மொத்த சாரத்தையும் அய்ந்து இயலுக்குள் ஓரளவுக்கு அடக்கியுள்ளார்.
ஒவ்வொரு இயலும் இன்றைக்கும் என்றைக்கும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு புதிய வாழ்வியலைப் போதிக்கவல்லது. பெரியாரைப் பற்றி அவரே எழுதிய ‘நான் யார்?’ என்னும் ஒரு பகுதி மட்டுமே போதும் -_ அவரை இன்றைய இளைய சமுதாயம் புரிந்துகொள்ளவும், உள்வாங்கிச் செயல்படவும். அடித்தளமிடக்கூடிய சொற்பொழிவுகள் இதில் அடங்கி உள்ளன.
இந்தப் புத்தகத்தின் தலைப்பு ஒன்றே போதும் - புத்தகத்தின் அருமைகளை தமிழர்கள் உணர்ந்துகொள்ள. திராவிடத்தின் சுற்றுவட்டப் பாதை என்பது எப்போதும் தந்தை பெரியாரை மய்யமாகக் கொண்டது. இன்று நாட்டில் நிகழ்ந்துவரும் ஆணவக் கொலை, ஜாதி வெறிச் செயல், மதவாதப் போக்கு, பார்ப்பனர்களின் ஆதிக்கச் செயல்கள் போன்றவை தமிழ்நாட்டில் அடங்கி ஒடுங்கி இருப்பதற்கு தமிழ்நாடு பெரியாரைச் சுற்றிச் சுழல்கிறது என்பதுதான் உண்மை.
“புத்தருக்குப் பின்னர் ஜாதிகளை அழிக்கப் பாடுபட்ட ஒரே ஒருவர் நான்தானே எனப் பகிரங்கமாகப் பேட்டி கொடுத்தார் தந்தை பெரியார்.’’ (பக்.94) இந்தப் பேட்டி ஒன்று மட்டுமே போதுமானது _ பெரியார், தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாத கொள்கைப் பிடிப்பை உணர. புத்தக ஆசிரியர் ஆய்வுச் சொற்பொழிவுக்குப் பயன்பட்ட அறிஞர்களின் நூல் பட்டியலை பின் பக்கத்தில் பதிவு செய்திருப்பது வாசகர்களுக்கு மேலும் விரிவான வாசிப்புக்கு வழிவகுக்கும்.
- ச.குமார்
தைப்பொங்கல் - திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் திருவிழா!
தலையங்கம் :
‘‘இப்பொங்கல் பண்டிகையின் தத்துவம் என்னவென்றால் விவசாயத்தையும், வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகையென்று சொல்லப்படுவதாகும். ஆங்கிலத்தில் ‘‘ஹார்வெஸ்ட் ஃபெஸ்டிவல்’’ என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.’’
‘‘தமிழ் மக்களுக்குப் பாராட்டத்தக்க ஓர் உண்மையான திருநாள் உண்டு என்றால், அது தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள்தான். மற்ற திருநாள் எல்லாம் வைதீகச் சம்பந்தமானது. இந்தத் திருநாள் ஒன்றுதான் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது.’’
- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்
தைப் பொங்கல் என்ற பொங்கல் விழா - திராவிடர் - தமிழர் திருவிழா - பண்பாட்டு அடிப்படையில் அமைந்தது; பகுத்தறிவு அடிப்படையிலும் பெருமை உடையது. ‘அறுவடைத் திருநாள்’ என்று உலகெங்கும் கொண்டாடும் உழவர் தம் உழைப்பின் வெற்றியை எண்ணி உவகை பொங்கக் கொண்டாடப்படும் உன்னதத் திருவிழா!
திராவிடப் பண்பாடு - மனுதர்ம ஆரியப் பண்பாட்டுக்கு நேர் எதிரானது. எப்படி? ஏன்?
ஆரியப் பண்பாட்டின் அகம் மனுதர்ம சாஸ்திரம்.
அதில்,
உலகத்தாரின் உயிருக்கே பாதுகாப்பான உணவைத் தரும் வேளாண்மையை எவ்வளவு கொச்சைப்படுத்திக் கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.
‘‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது; ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையையும், மண்வெட்டியையும், பூமியையும், பூமியில் உண்டான பல ஜந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?’’
- (மனு அத்தியாயம் 10; சுலோகம் 84).
இதற்கு முந்தைய சுலோகம் கூறுவதென்ன?
‘‘பிராமணனும், க்ஷத்திரியனும் வைசியன் தொழிலினால் ஜீவித்த போதிலும், அதிக ஹிம்சையுள்ளதாயும், பராதீனமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்கவேண்டியது.’’ (‘‘அதைச் செய்யாவிட்டால், ஜீவனம் நடக்காத காலத்தில் அதையும் அந்நியனைக் கொண்டு செய்விக்க வேண்டும்‘’ என்பது முன் சுலோகத்தின் கருத்து)
- (மனு அத்தியாயம் 10; சுலோகம் 83).
இதற்கு முன் சுலோகம் கூறுவதென்ன? பார்ப்போமா!
‘‘தன் ஜாதித் தொழில், க்ஷத்திரிய ஜாதித் தொழில் இரண்டினாலும் ஜீவிக்கக் கூடாவிடில் வைசியன் தொழிலான பயிரிடுதல், பசுவைக் காப்பாற்றல், வியாபாரஞ் செய்தல் இவைகளாலும் ஜீவிக்கலாம்.’’
- (மனு அத்தியாயம் 10; சுலோகம் 82).
இந்த சுலோகத்திற்குமுன் உள்ள சுலோகம் (அத்தியாயம் 10, சுலோகம் 81) கூறுவது என்ன?
‘‘பிராமணனுக்கு மேற்சொல்லிய பிரகாரமாக தன் தொழிலினால் ஜீவிக்கக் கூடாத சமயத்தில் கிராமாதிகாரந் தேசாதிகார முதலிய க்ஷத்திரியன் தொழிலினால் ஜீவிக்க வேண்டியது. ஏனென்றால், அது அவனுக்கு அடுத்த ஜாதியின் தொழில் அல்லவா?
(ஆதாரம்: ‘‘அசல் மனுதர்மம்‘’, பதிப்பு 1919, திருவைந்திரபுரம் - கோமாண்டூர் - இராமாநுஜாசாரியார் - வடமொழி, சமஸ்கிருத பாஷையில் உள்ளது)
பக்கம் 295.
இதன் கருத்து:
1. பயிரிடுதல் மிகவும் மோசமான தொழில் - நல்ல தொழில் அல்ல.
2. அவனவன், அவனவன் தொழிலையே செய்யவேண்டும்.
3. அது முடியாத காலங்களில், தவிர்க்க முடியாத பட்சத்தில் இந்தப் பயிர்த் தொழிலையும் மாற்றிச்
செய்து, உயிர்களைக் காப்பாற்றலாம் (வெறுப்புடன் விதிவிலக்கு).
ஆனால், மனித குலத்தையே ஓர் குடும்பமாகப் பார்க்கும் மகத்தான திராவிடர் பண்பு பூத்துக் குலுங்கும் திருக்குறள் - உழவின் சிறப்புபற்றி ஒரு தனி அதிகாரத்தையே - 10 குறள்பாக்களில் படைத்துக் காட்டி - காரண காரிய விளக்கத்துடன் பெருமைப்படுத்துகிறது!
அதிகாரம் 104 - ‘உழவு’ என்ற தலைப்பில்,
‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை’ (குறள் 1031)
எனத் தொடங்கி, 10 குறள்பாக்களில் உழவின் சிறப்பை வானளாவிய வகையில் புகழுகிறார் வள்ளுவர்!
ஒரு குலத்துக்கொரு நீதி - தொழில் பேசுகிறது மனு!
மக்களை ஜாதிப் பார்வையால் பிரித்து அளக்கிறது, பிளக்கிறது! - அது ஆரியம்.
ஆனால், திருக்குறளோ இந்தப் பத்துக் குறள்களில் உலகத்தையே - மனித குலத்தையே ஒன்றுபடுத்தி ஒரே அணியாய்ப் பார்த்துப் பெருமைப்பட்டுக் கூறுகிறது என்பதற்கு சான்றுகள்தான் உலகம், உலகம் என்று பலமுறை கூறி, உறுதிப்படுத்தும் பரந்த பார்வை (Inclusiveness). இது திராவிடப் பண்பாடு!
மனுவோ, உழவை சூத்திரர்கள், வைசியர்கள் செய்யும் தொழில் என்று வெறுப்புடன் பார்த்து, உயிர்காப்பதைக்கூட, பின்னுக்குத் தள்ளி, பிளவுபடுத்திப் பிரித்து வைக்கிறது (Exclusiveness). இது ஆரியப் பண்பாடு.
எனவே, திராவிடப் பண்பாட்டுத் திருவிழா - பொங்கல் விழா - உழவர் திருநாள் - அறுவடைத் திருவிழா என்பது அய்யந்திரிபற விளங்குகிறது அல்லவா?
மேலும் எவ்வித தனிச்சிறப்புமற்ற ஆரியப் பண்டிகைகளுக்கு இல்லாத தனிச்சிறப்பு திராவிடப் பண்பாட்டுத் திருவிழாவிற்கு உண்டு. இவ்விழா ஒரு மதம்சார்ந்த விழா (தீபாவளி போல) அல்ல! அனைத்து உழவர்களும், மக்களும் பிறவிபேதமின்றி மகிழ்ந்து நன்றி செலுத்திக் (Thanks giving) கொண்டாடுவதாகும். இயற்கைக்கு - உழைப்போருக்கு - உழைப்பில் உதவிடும் மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் பேதமின்றி நன்றி பாராட்டும் பேதம் நீக்கிய பெருவிழா - திருவிழா!
தீபாவளி கதை கட்டுக்கதை. புராணக் கதையில்கூட உயிர்க்கொலைகள் - கொலைகளைக் கொண்டாடும் பண்டிகை!
இங்கோ புதுப்பொங்கல்! புத்துலகுக்குத் தெம்பூட்டும் புது வெள்ள மகிழ்ச்சி - புது நம்பிக்கை பூத்துக் குலுங்கும் புத்தெழுச்சித் திருவிழா! பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து, ஜாதி, மத, பேதம் ஒழித்த ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என உலகுக்குப் பறைசாற்றும் அனைவருக்குமான திராவிடத் திருவிழா!
ஆரியப் பண்டிகை மற்ற இந்து மதப் பண்டிகைகள் - அசுரர்களைக் கொன்றனர் தேவர்கள் என்று இனப் போராட்ட மறைவு வைத்த புனைவுகள்தானே!
அது செயற்கை (கற்பனை) - பொங்கல் விழா இயற்கையானது - உண்மையும்கூட!
திராவிடர் இயக்கம் இதனை மீட்டெடுத்து, திராவிடர்தம் திருவிழா என்று பகுத்தறிவுடன் விளக்கி செம்மாந்து நிற்கிறது!
ஆய்வு அறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள், மற்றொரு புதிய கோணத்தில் பொங்கல் விழாவை விளக்குகிறார்!
‘‘தமிழர்களின் தனிப்பெரும் திருவிழாவாகத் திகழ்வது தைப் பொங்கல் திருநாள். தேசிய இனத்துக்குரிய அடையாளம் ஒன்றைத் தமிழர்க்கு வழங்கும் திருவிழா இது. சமய எல்லைகளைக் கடந்த திருவிழாவாகவும் இது அமைகிறது.
பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா இது என்பது பலர் அறியாத செய்தி. தைப் பொங்கல் நாளன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும், மிக விரைவாக வீட்டைச் சுத்தம் செய்து, இறந்தவர் உடலை எடுத்துச் சென்றவுடன், தைப் பொங்கல் இடும் வழக்கத்தை நெல்லை மாவட்டத்தில் காணலாம். பொங்கல் திருநாளன்று, திருவிளக்கின் முன் படைக்கும் பொருள்களில் காய்கறிகளும், கிழங்கு வகைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றுள் கிழங்கு வகைகள் (சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு) பார்ப்பனர்களாலும், பெருங்கோவில்களாலும் காலங்காலமாக விலக்கப்பட்ட உணவு வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்சொன்ன இரண்டு செய்திகளாலும் தைப்பொங்கல் தமிழர்களின் திருவிழா என்பதையும், அது பார்ப்பனியப் பண்பாட்டிலிருந்து விலகி நிற்பது என்பதனையும் உணர்ந்து கொள்ளலாம்.’’
- தொ.ப.சி. ‘‘பண்பாட்டு அசைவுகள்’’, நூல் பக்கம் 56)
திராவிடர் இயக்கம் - அறிவு ஆசான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, திராவிடர் கழகம், இனமான தமிழ் உணர்வாளர்கள் பொங்கல் விழாவைப் பொலிவுடன் கொண்டாடுவதை - எப்படியெல்லாம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை விரட்டிடும் வீரம் செழிக்கும் விழா என்பதை - பூரித்து வாழ்த்துகிறார் நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
‘‘பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்,
போற்றி விழாக் கொண்டாடி உன் நலத்தைச்
செத்தவரை மறந்தாலும், மறவா வண்ணம்
செந்தமிழால் வானிலெல்லாம் செதுக்கி வைத்தோம்!
பத்தரை மாற்றுத் தங்கம் ஒளி மாய்ந் தாலும்
பற்றுள்ளத்தில் உன் பழஞ்சீர் மங்கிற் றில்லை.’’
‘‘தமிழகமே, திராவிடமே, தைம்மு தல்நாள்
தன்னில் உன்னை வாயார வாழ்த்து கின்றேன்
அமிழ்தான பாற்பொங்கல் ஆர உண்டே
அதைஒக்கும் தமிழாலே வாழ்த்து கின்றேன்;
எமைஒப்பார் எவருள்ளார்? எம்மை வெல்வார்
இந்நிலத்தில் பிறந்ததில்லை; பிறப்ப தில்லை.
இமைப்போதும் பழிகொண்டு வாழ்ந்த தில்லை
எனும்உணர்வால் வாழ்த்துகின்றேன்; வாய்ப்பேச் சல்ல.
- கி.வீரமணி
ஆசிரியர்
திங்கள், 22 பிப்ரவரி, 2021
இவர்தான் பெரியார் - நூலின் சில பக்கங்கள்
நூல்: இவர்தான் பெரியார்
ஆசிரியர்:மஞ்சை வசந்தன்
முகவரி: பெரியார் புத்தக நிலையம்
பெரியார் திடல், 84/1 (50),
ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி,
சென்னை -600 007.
044-26618163 பெரியார் மாளிகை,
புத்தூர், திருச்சி-620 017 0431-2771815
www.dravidianbookhouse.com
பக்கம் : 286 ; விலை: ரூ.180/-
துவக்கம் - சுயமரியாதை இயக்கம்
காங்கிரசை விட்டு வெளியேறிய ஈ.வெ.ரா. சுயமரியாதை உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
மக்களிடையே ஏற்றத்தாழ்வு கூறுவது தவறு. ஒருவன் உயர்ந்த ஜாதி, மற்றொருவன் தாழ்ந்த ஜாதி என்று பிறப்பால் வேறுபடுத்துவது கொடுமை. ஒவ்வொரு மனிதனுக்கும் மான உணர்வு உண்டு. அதை மதித்து மற்றவன் நடக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு சுயமரியாதைக் கருத்துகளை மக்களிடம் எடுத்துரைத்துப் பிரச்சாரம் செய்தார்.
1926 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி ‘‘குடிஅரசு’’ இதழில் ‘சுயராஜ்யமா? சுயமரியாதையா’? என்ற தலையங்கம் எழுதினார். அது அவரின் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைப் பிரகடனமாக அமைந்தது.
“ஒரு சமுதாயத்தை ஒடுக்கி சுயமரியாதை அற்று வைத்திருக்கும் சமூகத்தார் சுயராச்சியம் (விடுதலை) அடைவது மற்றைய சமூகங்களுக்கு நன்மை தருமா? அல்லது ஒடுக்கப்பட்டவருக்கும் சேர்த்துத்தான் சுயராச்சியம் தேடுவது என்று சொல்லுவோமானால், அவர்கள் தெய்வங்களைக் காணவும், தரிசிக்கவும் முடியாத படியும், தெருவில் நடக்கவும், கண்ணில் தென்படவும் முடியாத படியும் வைத்திருப்பதற்குக் காரணம் சுயராச்சியம் இல்லாமைதானா?.....
மகாத்மாகாந்தி அவர்கள் சுமார் அய்ந்து வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது,’’ என்னுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள யோக்கியதை இல்லாமல் இருக்குமானால் நான் சுயராச்சியத்தை விரும்புவதில் அர்த்தமேயில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.....
“தீண்டாமை ஒழிய வேண்டும் என்று காந்தியடிகள் சொல்வதும், கதர் அணியவேண்டும் என்று கட்டாயப் படுத்துவதும், நம் நாட்டு மக்கள் சுயமரியாதையின் ஜீவநாடிகள்... ஆகவே, நமது தேசம் உண்மையான உரிமை பெறவேண்டுமானால் மக்களின் சுயமரியாதைக்குத்தான் முதலில் பாடுபடவேண்டும்‘‘ என்று எழுதியிருந்தார்.
“மனிதன், மானிடன் என்னும் சொற்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானம் உடையவன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமை உடையதே மானம்தான்.”
“தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமான கடனாகும். ஏனென்றால், தீண்டாதார்களின் முன்னேற்றந்தான் பிராமணர் அல்லாதாரின் முன்னேற்றம். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணர் அல்லாதாரின் துன்பமாகும். எனவே, தீண்டாமை ஒழிவதன் மூலந்தான் நாடு சுயராச்சியம் அடையும்“ என்றும் ஈ.வெ.ரா. விளக்கினார்.
தெருவில் நடக்கக் கூடாது, கோயிலுக்குள் நுழையக் கூடாது, பிராமணர்கள் குடியிருக்கும் பக்கம் செல்லக் கூடாது என்று தாழ்த்தப்பட்டோர் கொடுமைப்படுத்தப்படும் நிலை உச்சநிலையில் இருந்ததால்
ஈ.வெ.ரா. வேறு எல்லா பிரச்சினைகளையும் விட சுயமரியாதைப் பிரச்சினையை முதன்மையானதாகக் கொண்டு பிரச்சாரம் செய்தார்.
காங்கிரசை விட்டு வெளியில் வந்த ஈ.வெ.ரா. சுயமரியாதைப் பிரச்சாரத்தில் தீவிரங்காட்டியதோடு நீதிக்கட்சிக் கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வதை அறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒரு குழு அமைத்து ஈ.வெ.ரா. நடவடிக்கைகளை விசாரித்தது. அக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஈ.வெ.ரா. வின் காங்கிரஸ் பதவியை ரத்து செய்து, காங்கிரசுக்கும் அவருக்கும் இனித் தொடர்பில்லை என்று அறிவித்தது.
இந்த நடவடிக்கை ஈ.வெ.ரா.வை நீதிக் கட்சியின் பக்கம் நெருக்கமாகக் கொண்டு சென்றது. பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பில், பார்ப்பனர் அல்லாதார் உரிமைக்குப் போராடுவதில் ஈ.வெ.ரா முழுமூச்சாக ஈடுபடத் தொடங்கினார். தன்னுடைய பிரச்சாரத்திற்கு நீதிக் கட்சி மாநாடுகளையும் பயன்படுத்திக் கொண்டார்.
1926 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை மாகாண சட்ட மன்றத்திற்குப் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. ஈ.வெ.ரா யாரையும் குறிப்பிட்டு ஆதரிக்காமல், திறமையுள்ள, பார்ப்பனர் அல்லாத, தொண்டுள்ளங் கொண்ட, தன்னலமற்றவர்களை ஆதரிக்கும்படி வேண்டினார்.
அத்தேர்தலில் “நீதிக்கட்சி’’ பெருந்தோல்வி அடைந்தது, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதில்லை என்ற முடிவில் இருந்ததால் சுயேட்சை உறுப்பினரான டாக்டர் பி.சுப்பராயன் டிசம்பர் மாதம் தனது அமைச்சரவையை அமைத்தார். ‘‘நீதிக்கட்சி’’ எதிர்க்கட்சியாகச் செயல்பட்டது.
தோல்வி அதிர்ச்சியில் ‘‘நீதிக்கட்சி’’ சிதறத் தலைப்பட்டது. அந்நிலை அறிந்த ஈ.வெ.ரா. அக்கட்சியைக் காப்பாற்ற முடிவு செய்தார். 1926 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25,26 தேதிகளில் மதுரை நகரில் கூட்டப்பட்ட பிராமணர் அல்லாதார் மாநாட்டில் ஈ.வெ.ரா. பேசினார். இந்த எழுச்சியுரை நீதிக்கட்சியினருக்கு புதிய தெம்பைக் கொடுத்தது. அனைவரும் கதர் அணிய வேண்டும் என்ற ஈ.வெ.ராவின் வேண்டுகோளை தீர்மானமாகவே அம்மாநாட்டில் நிறைவேற்றினர்..
காந்தியாருடன் கடும் மோதல்:
காங்கிரசை விட்டு வந்தாலுங்கூட ஈ.வெ.ரா. காந்தியார் மீது மதிப்பும் பற்றுங் கொண்டேயிருந்தார். ஆனால் 1927 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘‘சுதேசமித்திரன்’’ நாளிதழில் வெளிவந்த காந்தியாரின் உரையைப் படித்த ஈ.வெ.ரா. அதிர்ச்சியடைந்தார்.
“ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வர்ணத்தார் செய்யவேண்டும். அப்படி செய்யும் போது அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள்”.
பிராமணனுக்குச் சில தர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை அவன் சரிவர நிறைவேற்றும்போது அவன் உயர்ந்தவன் ஆகிறான். ஜனசேவையே பிராமணனுடைய முக்கிய தர்மம்.
எளியவர்களைப் பாதுகாப்பது சத்திரியனுடைய முக்கிய தர்மம். அத்தர்மத்தை அவன் செய்யுபோது அவன் மற்றோரிலும் மேம்பட்டவனாகிறான்.
இப்படியே இதர வர்ணத்தார்களும் தத்தமக்கு ஏற்பட்ட தர்மங்களை - கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள்.
இப்படியிருக்கும் போது உயர்வு - தாழ்வு எங்கிருந்து வருகிறது? வருணாசிரம தர்மம் சமுதாய நலத்தை ரட்சிப்பதற்காகவே ஏற்பட்டது. மற்றபடி ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை ரட்சிப்பதற்கு ஏற்பட்டதல்ல.
மேற்கண்ட காந்தியாரின் கருத்துகளைக் கண்ணுற்ற ஈ.வெ.ரா. கடுங்கோபங் கொண்டார். காந்தியாரை நேரில் சந்தித்து விவாதிக்க முடிவு செய்து பெங்களூருக்குப் போய் காந்தியைச் சந்தித்தார்.
அப்போது மூன்று கருத்துகளை காந்தியிடம் வற்புறுத்தினார்.
1. காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும்
2. ஜாதியை ஒழிக்க வேண்டும்
3. இந்துமதத்தை ஒழிக்க வேண்டும்.
அப்போது காந்தியாருக்கும் ஈ.வெ.ரா. விற்கும் நடந்த விவாதத்தின் ஒரு பகுதியைக் கீழே படியுங்கள்.
ஈ.வெ.ரா.: இந்துமதம் ஒழிய வேண்டும்
காந்தி : ஏன்?
ஈ.வெ.ரா.: இந்துமதம் என்று எதுவும் கிடையாது.
காந்தி : இருக்கிறது
ஈ.வெ.ரா.: அது பிராமணன் உருவாக்கிய பிரமை
காந்தி : அனைத்து மதங்களும் அதைப் போன்றதுதான்
ஈ.வெ.ரா. : இல்லை, மற்ற மதங்களுக்கு வரலாறு, லட்சியங்கள், கோட்பாடுகள் உள்ளன. மக்கள் அவைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
காந்தி : இந்துமதத்தில் அத்தகையது எதுவும் இல்லையா?
ஈ.வெ.ரா. : சொல்வதற்கு என்ன இருக்கிறது? பிராமணன், சூத்திரன், வைசியன் போன்ற ஜாதிய உட்கூறுகள் தவிர அதில் வேறெந்த விதியோ,சான்றோ கிடையாது.
காந்தி : அது குறைந்தபட்சம் இக்கோட்பாட்டைக் கொண்டுள்ளது.
ஈ.வெ.ரா. : இந்துமதம் இருக்கும்வரை சமத்துவத்தைப் பெற முடியாது.
காந்தி : இந்துமதத்தின் மூலமாக எவரும் இதைப் பெற முடியும்.
ஈ.வெ.ரா : அப்படியானால் பிராமணர் - சூத்திரர் வேறுபாட்டை நிரூபிக்கும் மதச்சான்றுகள் குறித்து என்ன சொல்வது?
காந்தி : நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். இந்துமதம் என்று எதுவும் இல்லையென்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அதற்கென்று திட்டவட்டமான விதியில்லை என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால், இந்துக்கள் என்று நம்மை நாம் கூறிக் கொள்வதன் மூலம் நாம் விரும்பும் முறையில் அதற்காக பொதுவான லட்சியங்களை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்....
ஈ.வெ.ரா. : மன்னிக்கவும். அதைச் செய்ய முடியாது.
காந்தி : ஏன்?
ஈ.வெ.ரா. : இந்துமதத்திலுள்ள சுயநலக் கும்பல் அவ்வாறு செய்ய
உங்களை அனுமதிக்காது.
காந்தி : (சிரித்துக் கொண்டே) : யார் அவர்கள்?
ஈ.வெ.ரா. : பிராமணர்கள் அனைவரும்.
காந்தி: அவ்வாறு சொல்லாதீர்கள்! நான் ஒரு பிராமணனைப் பார்த்தேன். அவர் ஒரு சிறந்த பிராமணர் என்றே இன்றும் கருதுகிறேன். அவர்தான் கோபாலகிருஷ்ண கோகலே.
ஈ.வெ.ரா.: உங்களைப் போன்ற மகாத்மாவிற்கு இந்த உலகில் ஒரே ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது சாத்தியமாயிருக்கலாம். ஆனால், என்னைப் போன்ற சாதாரண பாவிகளுக்கு ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?
காந்தி : (சிரித்துக் கொண்டே)... பிராமணர்கள் படித்த மக்கள். அவர்கள் என்றென்றும் மற்றவர் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவார்கள். எனவே, அவர்களை விமர்சிப்பதை விட்டு நாமும் அந்த மட்டத்தை அடைய வேண்டும்.
ஈ.வெ.ரா. : பிராமணர்கள் முழுமையும் அறிவு ஜீவியா இருந்து கொண்டு 90 சதவிகிதம் மக்களை கல்லாதவர்களாக்கி, அவர்களுக்கு ஊறுவிளைவித்தல் சரியா? எனவே, இந்நிலைக்குக் காரணமான மதத்தை ஒழிக்க வேண்டும்.
காந்தி : நீங்கள் பிராமணர்களுக்கு எதிரான வெறுப்பைக் கொண்டுள்ளீர்கள். அதுதான் உங்கள் சிந்தையில் பிரதானமாக நிற்கிறது. நம்முடைய விவாதம் மூலம் நாம் இதுவரை எந்த உடன்பாட்டுக்கும் வரவில்லை. எனினும் எதிர்காலத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சந்தித்துப் பேசுவோம். நமது நிலை குறித்துத் தீர்மானிப்போம். இவ்வாறு காந்தியுடன் கருத்து வேறுபாடு முற்றவே ஈ.வெ.ரா. கடுப்புடன் வெளியே வந்துவிட்டார். காந்தியின் மீதிருந்த மரியாதை ஈ.வெ.ரா.வை விட்டு விலகியது. அதுவரை “மகாத்மா’’ என்று எழுதி வந்தவர் அதன்பின் அதை நீக்கி எழுதினார்.
“என்றைக்கு மக்களுக்குள் வருணம் நான்கு உண்டு. அதுவும் அவை பிறவியில் ஏற்படுகின்றன. அந்தந்த வர்ணத்தாருக்கும் ஒரு தர்மம் உண்டு என்று சொன்னாரோ அன்றே அவரிடம் “மகாத்மா’’ தன்மை இல்லை என்று தீர்மானித்து விட்டோம்... “மகாத்மா’’ பட்டம் ஒருவரின் அபிப்பிராயத்தையும் நடவடிக்கையையும் பொருத்துத்தான் வழங்கப்படுவதே தவிர, வெறும் உருவத்திற்காக வழங்கப்படுவதல்ல என்று ஈ.வெ.ரா. வே கூறினார்.
காந்தியைச் சந்தித்து வந்தபின் ஈ.வெ.ரா. போக்கில் மட்டுமல்ல, “குடிஅரசு’’ ஏட்டிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.
சுயமரியாதை இயக்கத்தின் முக்கியக் கொள்கைகளாக கீழ்க்கண்டவற்றை ஈ.வெ.ரா. வரையறுத்தார்.
1. மனிதருள் உயர்வு- - தாழ்வு பிறப்பால் இல்லை.
2. பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாத பொதுவுடைமைச் சமுதாயம் வேண்டும்.
3. ஆணும் பெண்ணும் சமவாய்ப்பும் சம உரிமையும் உடையவர்கள்.
4. ஜாதி, மதம், தேசம், வருணம், கடவுள் ஆகியவை ஒழிந்த அறிவும் ஒற்றுமையும் உடைய சமுதாயம் அமைக்க வேண்டும்.
5. உழைப்பாளி முதலாளி என்ற வேறுபாடு இல்லாமல் உழைத்து உழைப்பின் பயனை சமமாக அனுபவிக்க வேண்டும்.
6. யாரும் யாருக்கும் அடிமையல்ல. அவரவர் அறிவு, ஆராய்ச்சி, காட்சி, உணர்ச்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்க அனைத்து சுதந்திரமும் வேண்டும்.
இந்நோக்கங்களை அடைய அவர் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.
1917 ஆம் ஆண்டு நாயக்கர் என்ற ஜாதிப் பெயரை ஈ.வெ.ரா. கைவிட்டார். அதுமுதல் அவர் ஈ.வெ.ரா. என்றே அழைக்கப்பட்டார்.
இரயில்வே தொழிலாளர் போராட்டம்
1928 ஆம் ஆண்டு தென்னக இரயில்வே தொழிலாளிகளின் போராட்டம் வெடித்தது. நாகப்பட்டினம், பொத்தனூர் போன்ற இடங்களிலிருந்த ரயில்வே பணிமனைகளை மூடி, ஆட்குறைப்புச் செய்தது ஆங்கில அரசு.
இந்த நடவடிக்கையின் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும் என்பதால் தொழிலாளர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியது.
தமிழகத்தை அப்போது ஆண்ட “நீதிக்கட்சி’’க்குத் தொல்லை தருவதாக பார்ப்பனர்கள் இப்போராட்டத்தைத் தூண்டுகின்றனரோ என்று எண்ணிய ஈ.வெ.ரா., முதலில் வேலை நிறுத்தத்தில் இறங்கவேண்டாம் என்று தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார். நாகப்பட்டினத்து தொழிலாளர்கள் பெரும்பாலானோர் சுயமரியாதை இயக்கத்தை ஆதரிப்பவர்களாய் இருந்தனர். ஆனாலும் அவர்களின் பாதிப்பை உணர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாய் இருந்தனர். ஜூலை 19 ஆம் தேதி வேலை நிறுத்தம் துவங்கியது. இதைக் கண்ட ஈ.வெ.ரா. தொழிலாளர்களுக்கு ஆதரவாய் போராட்டத்தை ஆதரித்தார். நாகப்பட்டினத்தில் அரசாங்கம் விதித்திருந்த தடையுத்தரவையும் மீறி போராட்டத்தை ஆதரித்துப் பேசியதோடு, போராட்டத்திற்கு நிதி உதவி அளிக்கும்படி பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
ஈரோட்டிலும் வேலை நிறுத்தக்காரர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது என்று வாதிட்டார்.
வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்ததற்காக ஈ.வெ.ரா 1 மாத சிறைத் தண்டனை அனுபவித்தார். பின்னர் அரசாங்கமே அவர்மீது தொடுத்த வழக்கைத் திரும்பப் பெற்றது.
சுயமரியாதை மாநாடுகள்:
1928 ஆம் ஆண்டு முதல் ஈ.வெ.ரா. வின் தீவிரப் பிரச்சாரத்தால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுயமரியாதை இயக்க அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு அவரின் முதன்மை நடவடிக்கையாக அமைந்தது.
பார்ப்பனர் இல்லாத திருமணம், பார்ப்பனர் இல்லாத நினைவு நாள், பார்ப்பனர் இல்லாத புதுமனை புகுவிழா என்று புரட்சிச் செயல்பாடுகள் பரவின. இவ்வாறு காரியங்கள் செய்வோர் பற்றிய விவரம் “குடிஅரசு’’ இதழில் வெளியிடப்பட்டது.
‘ஸிமீஸ்ஷீறீt’ என்ற ஆங்கிலப் பத்திரிகை ஒன்றையும் ஈ.வெ.ரா. தொடங்கினார். சுயமரியாதைக் கொள்கை தமிழ் தெரியாத மக்களுக்கும் பரவ வேண்டும் என்கிற நோக்கோடு இது ஆரம்பிக்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் செங்கற்பட்டில் சுயமரியாதை இயக்க முதல் மாநாடு நடந்தது. டபிள்யூ. பி.ஏ. சவுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். “நீதிக்கட்சி’’யின் கொடியை பி.டி.இராஜன் ஏற்றி வைத்து உரையாற்றினார்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தும் தீர்மானம் உட்பட 34 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மக்களிடையே ஏற்றத்தாழ்வு கூடாது, மதம், வேதம், சாஸ்திரம், புராணம் இவற்றை மக்கள் ஏற்கக் கூடாது, நால்வருணம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற முக்கிய தீர்மானங்களும் அதில் அடங்கும்.
பொது இடங்களில் அனைத்து ஜாதியினரும் புழங்க உரிமை வேண்டும். அதற்கு அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 16 வயதுக்கு மேல்தான் பெண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும். விவாகரத்து, விதவை மணம், சிக்கனத் திருமணம் ஆகியவையும் வலியுறுத்தப்பட்டன. தாய் மொழிக் கல்வியும் வலியுறுத்தப்பட்டது.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பதவி முழுவதும் பெண்களுக்கே தரப்படவேண்டும். மூடநம்பிக்கையைப் பரப்பும் கருத்துகள் பாடத்திட்டத்தில் இடம்பெறக் கூடாது என்பனவும் தீர்மானம் செய்யப்பட்டன.
தொழிலாளர் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
1930 இல் ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாடும், 1931 இல் விருது நகரில் மூன்றாவது சுயமரியாதை மாநாடும் நடத்தப்பட்டன.
இவற்றைத் தொடர்ந்து சுயமரியாதைப் பெண்கள் மாநாடு, சுயமரியாதை வாலிபர் மாநாடு நடைபெற்றன. ஆயிரக்கணக்கில் பெண்களைத் திரட்டி எழுச்சிக் கருத்துகளை ஊட்ட இம்மாநாடுகள் பயன்பட்டன. இளைஞர்களும் வெகுவாகக் கவரப்பட்டு அணி திரண்டனர்.
- உண்மை இதழ், 1-15 .11.20
"பெரியார் மண்ணில் பாசிச சக்திகளை அனுமதியோம்!"- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தமிழகத் தலைவர்கள் போர் முழக்கம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தமிழகத் தலைவர்கள் போர் முழக்கம்
* தொகுப்பு: மின்சாரம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில அரசியல் எழுச்சி மாநாடு "தமிழகத்தை மீட்போம்!" என்ற முழக்கத்தின் அடிப்படையில் நேற்று (18.2.2021) மாலை மதுரை வண்டியூர் - சென்னை - கன்னியாகுமரி சாலையில் பேரெழுச்சியுடன் கூடியது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் செஞ்சட்டைத் தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் கூடினர். செஞ்சட்டைத் தொண்டர் படையினரின் (இருபாலரும் சேர்ந்த) அணி வகுப்பு எடுப்பாயிருந்தது.
திருச்சி பாரதி கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி கருத்தோட்டமாக அமைந்திருந்தது.
மாநாட்டிற்கு மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் தலைமையேற்றார். தலைமை உரை சுருக்கமான அளவில் சுருக்கென்று தைக்கும் அளவுக்கு முத்தரசன் என்பதாலோ முத்து முத்தாக, செறிவாக அமைந்திருந்தது.
"பணம் கொடுத்துக் கூப்பிட்டு வந்த கூட்டமல்ல. அவரவர்கள் சொந்த பணத்தைக் செலவிட்டு கொள்கை உணர்வுடன் கூடிய கூட்டம்" என்று அவர் சொன்னபோது கரஒலி கோடை இடியாய் வெடித்துக் கிளம்பியது.
"ஆண்டுதோறும் ஆற்றில் இறங்குவதாகக் கூறப்படும் அழகருக்கு வரும் கூட்டத்தைவிடப் பெரியது இது" என்று சொன்னபோதும் - தொண்டர்களின் உற்சாகம் கரை புரண்டது.
ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூகநீதி, சோசலிசம் இவற்றைப் பாதுகாக்கும் முற்போக்குக் கூட்டணியினர் சங்கமிக்கும் மாநாடு இது என்று குறிப்பிட்ட மாநாட்டுத் தலைவர் தோழர் இரா. முத்தரசன் அவர்கள், மாநாட்டுக்குப் பல்லாயிரக்கணக்கில் கூடியுள்ள நீங்கள் வாகனங்களை வேகமாக ஓட்டாமல், பொறுப்பான தோழர்கள் ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்து, எந்தவித சிறு விபத்துகளுக்கும் இடமில்லாமல் பாதுகாப்பாக ஊர்களுக்குத் திரும்ப வேண்டும் என்று கட்சியை நடத்திச் செல்லும் ஒரு பொறுப்பான தலைவர் என்ற முறையில் வேண்டுகோள் விட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மத்தியக் குழு உறுப்பினர் தோழர் சி. மகேந்திரன் நாட்டில் நடைபெறுவது கொள்கை வழி ஆட்சியல்ல - கொள்ளை அடிக்கும் வழிகளை அறிந்தஆட்சி என்றாரே பார்க்கலாம்.
தந்தை பெரியார், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், ஜீவா ஊட்டிய உணர்வோடு பிற்போக்குச் சக்திகளை முறியடிப்போம் - இது வெற்றிக் கூட்டணி என்று முழங்கி சில மணித்துளிகளில் தன் உரையை நிறைவு செய்தார்.
தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
திராவிட இயக்கத்துக்கும் கம்யூனிஸ்டுக்கும் அடிப் படையில் நீண்ட காலமாக கொள்கை அளவிலும் இயக்க அடிப்படையிலும் தொடர்ச்சியாக உறவு உண்டு.
1925ஆம் ஆண்டில்தான் தந்தை பெரியார் சுயமரி யாதை இயக்ககத்தை உருவாக்கினார். அதே 1925ஆம் ஆண்டில்தான் கம்யூனிஸ்டுக் கட்சியும் இந்தியாவில் தோற்றம் எடுத்தது.
ருசியாவுக்குச் செல்லும் முன்பே மார்க்ஸ் - ஏங்கல்ஸ் அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து இந்தியாவிலேயே தனது 'குடிஅரசு' இதழில் வெளியிட்டவர் தந்தை பெரியார்.
திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால் நான் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருந்திருப்பேன் என்று சொன்னவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆவார்!
விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்காக கணபதியாப் பிள்ளை ஆணையத்தையும், கார்த்திகேயன் தலைமையிலான ஆணையத்தையும் உருவாக்கியவர் திமுக தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
நாங்கள் ரத்தம் சிந்திப் போராடினோம். ஆனால் கலைஞர் அவர்கள் ஒரு துளி மை சிந்தி பேனாமுனையில் எங்களுக்குச் சாதித்துக் கொடுத்தவர் என்றார் - பொதுவுடைமை இயக்க முன்னோடி மணலி கந்தசாமி (பலத்த கரஒலி)
புன்செய் நிலத்திற்கு இருந்த வரியை அறவே நீக்கி, 5 ஏக்கர் வரை உள்ள நன்செய்க்கும் வரி நீக்கம் செய்தவர், விவசாயத்துக்கு இருந்து வந்த மின் கட்டணத்தை அறவே ஒழித்தவரும் கலைஞர் அவர்களே என்று பட்டியலிட்டார் தளபதி மு.க. ஸ்டாலின்.
"இப்பொழுது நடப்பது இரு வேறு கொள்கைகளுக்கு இடையிலான போராட்டம் - வெறும் ஆட்சி மாற்றப் போராட்டம் அல்ல. பிரதமரின் இரு கைகளில் ஒன்று காவி. இன்னொன்று - கார்ப்பரேட் கை. ஆனால் நமது கரம் பாட்டாளிகளின் கரம் - உழவர்களின் கரம் என்றார்.
அதிமுகவைப் பயன்படுத்தி பா.ஜ.க. உள்ளே நுழைய பார்க்கிறது. இது தந்தை பெரியார் மண், பேரறிஞர் அண்ணா மண், பெருந்தலைவர் காமராஜர் மண், ஜீவாவின் மண் பிற்போக்கு சக்திகளுக்கு இங்கு இடம் கிடையாது" என்றார் தளபதி மு.க. ஸ்டாலின்.
தோழர் ஆர்.என்.கே. - தா.பா.
முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தோழர் நூற்றாண்டைக் காணவிருக்கும் தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள் மாநாட்டுக்கு முன்னிலை வகித்து திமுக தலைமையில் அமையும் கூட்டணி 'பெரு வெற்றி பெற' முயற்சிகளை மேற்கொள்வோம் என்று இரத்தினச் சுருக்கமாகப் பேசினார்.
மாநாட்டுக்கு முன்னிலை வகித்த அண்மையில் பெரியார் விருது பெற்ற தோழர் தா. பாண்டியன் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் சக்கர நாற்காலியில் வந்தாலும், ஒலி பெருக்கி முன் அவர் உரை வழக்கம்போல கோடை இடியாக ஒலித்தது.
மதுரையைச் சேர்ந்தவன் என்ற முறையில் உங்களை எல்லாம் வரவேற்கிறேன் என்றார்.
என் உடம்பின் எலும்புகள், கால்கள் வலுவாக இல்லை என்றாலும் மண்டை உறுதியாகவே இருக்கிறது (அடேயப்பா - எத்தகைய கரஒலி!)
சாகும் வரை மக்களைத் தட்டி எழுப்புவேன். நம் அணிதான் வெற்றி பெறும் என்று பிரகடனம் செய்யும் மாநாடு இது என்று சொன்னபோதும் பெரும் வரவேற்பு.
வகுப்புவாத சக்திகளுக்குத் துணைப் போகும் எடப்பாடிகள் - தாங்கள் துணைப் போவது மட்டுமின்றி தமிழ்நாட்டையும் அடிமைப்படுத்தி விடலாம் என்று நினைத்தால் அது நடக்கவே நடக்காது, போர் முரசம் கொட்டுவோம், பா.ஜ.க.வையும், அதற்குத் துணைப் போகும் சக்திகளையும் முறியடிப்போம்!
இதேபோலவே வெற்றி விழாவிலும் கூடுவோம் என்று குரல் கொடுத்தார் தோழர் தா.பா.
தோழர் து.ராஜா
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் து. ராஜா அவர்கள் மாநாட்டில் தொடக்கவுரையை நிகழ்த்தினார்.
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்டான சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் பிறந்த நாளிலே இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டுள்ளது. தந்தை பெரியாரோடு கை கோர்த்த சிங்காரவேலர் பகுத்தறிவுச் சமதர்மப் பிரச்சாரம் நடைபெற்ற மண் இது.
"அரசியல் பிழைத்தோ அறங்கூற்றம்" என்றுபறை சாற்றிய பூமியாருக்கு மதுரையில் இம்மாநாடு எழுச்சியோடு நடைபெறுகிறது.
இந்து ராஷ்டிரா என்கிறார்கள் - மனுதர்மத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று துடிக்கிறார்கள். அது மட்டும் நடக்காது- நடக்கவும் விட மாட்டோம்.
நாட்டில் செல்வங்களை உற்பத்தி செய்வது உழைப் பாளிகள், விவசாயிகள், தொழிலாளர்கள்தானே தவிர அதானிகளும், அம்பானிகளும், டாடாக்களும், பிர்லாக் களும் அல்ல என்ற தோழர் ராஜா அவர்கள் - நடப்பது மக்கள் ஆட்சியல்ல - கார்ப்பரேட்டுகளின் ஆட்சியே என்றார்.
சமூகநீதியை ஒழித்துக் கட்டும் வேலை வேகமாக நடக்கிறது. அய்.அய்.டி. என்கிறார்கள். அங்கே இடஒதுக்கீடு உண்டா? அம்பானி - அதானிகள் நடத்தும் தொழிற்சாலை களில்தான் இடஒதுக்கீடு உண்டா என்ற அர்த்தமுள்ள வினாவை எழுப்பினார் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் ராஜா அவர்கள்.
கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈசுவரன் தனது உரையில்: "அரசு நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. சிறுகுறு தொழில்கள் ஒழிந்துவிட்டன. ஒடுக்கப்பட்டோர், பாதிக்கப்பட்டோர் ஒன்றிணைவோம் - ஒழிக்கப்பட வேண்டிய மத்திய, மாநில அரசுகளை வீழ்த்துவோம்" என்றார்.
மேனாள் மக்களவை உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதல் நிலை துணைத் தலைவருமான எம்.அப்துல் ரகுமான் குடியுரிமை சட்டத்தினால் ஏற்படும் பாரதூர விளைவுகளை எடுத்துரைத்தார்.
பேராசிரியர் ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தன் உரையில் - இந்துக்களின் கட்சி என்று தன்னை வருணித்துக் கொள்ளும் பா.ஜ.க. சங்பரிவார்களைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு. தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் இந்துக்கள் இல்லையா? அவர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கிறீர்கள்? ஒழிக்கிறீர்கள்? என்ற நியாயமான வினாவை எழுப்பினார்.
ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) முதல் அமைச்சராக இருந்தபோது (1952-1954) சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசும் போது என்ன சொன்னார்?
சலவைத் தொழிலாளர்களாகிய நீங்கள் ஏன் படிக்க வேண்டும்? துணியைக் கிழிக்காமல் சலவை செய்யும் உங்கள் குலத் தொழிலைச் செய்யுங்கள் என்று கூறியதை பொருத்தமாக நினைவூட்டி அந்த மனுதர்மத்தை, வர்ணாசிரமத்தைக் கொண்டு வருவதுதான் பா.ஜ.க - சங்பரிவார்களின் திட்டம் என்று அம்பலப்படுத்தினார் பேராசிரியர் ஜவாஹிருல்லா.
கலி. பூங்குன்றன்
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாநாட்டுக்கு அனுப்பி வைத்த வாழ்த்தினைப் படித்து தன் உரையை ஆற்றினார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டவைகளுக்கு விரோதமாக நடந்து வருகிறது என்றால் அதற்குத் துணைப் போகிறது தமிழ்நாட்டை ஆளும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி.
குடியரசு நாளில் அதிகாரப் பூர்வமாக அளிக்கப்பட்ட விளம்பரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட "செக்குலர்" என்ற (மதச்சார்பின்மை) சொல்லை நீக்கிவிட்டு மத்திய பிஜேபி அரசு விளம்பரம் கொடுக்கிறது என்றால் இதைவிட அரசியல் சட்ட மீறல் வேறு உண்டா?
திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் 'நீட்' வந்தது என்று ஓயாமல் உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறார்களே - அதன் உண்மை என்ன?
காங்கிரஸ் ஆட்சியின்போது 'நீட்' கொண்டு வரப்பட்டது உண்மைதான் அதனை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் சென்றதே. மேலும் சிலர் வழக்கைத் தொடர்ந்தனர். அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு, உச்சநீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அது. விக்ரமஜித் சென் மற்றும் ஏ.ஆர். தவே அதில் இடம் பெற்றனர்.
பல்கலைக் கழக மான்ய குழுவுக்குத் தேர்வு நடத்தும் உரிமை கிடையாது என்று கூறி, 'நீட்' செல்லாது என்று பெரும்பான்மை தீர்ப்பாக இரு நீதிபதிகள் கூறினர். ஏ.ஆர். தவே மட்டும் மாறுபட்டதீர்ப்பாக 'நீட்' செல்லும் என்றார்.
மேல்முறையீடு செய்யவில்லை மத்திய காங்கிரஸ் ஆட்சி. ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தஅமர்வுக்குத் தலைமை வகித்த ஏ.ஆர். தவே. ஏற்கெனவே - 'நீட்' வழக்கில் 'நீட்' செல்லும் என்ற தீர்ப்பு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாக' நீட் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்றைய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது 'நீட்'டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் என்ற வரலாற்று உண்மையையும் சுட்டிக்காட்டினார் கலி. பூங்குன்றன்.
'நீட்'டை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்திலும்
இரு மசோதாக்கள் ஒரு மனதாக நிறைவேற்றப் பட்டும், அதற்கான ஒப்பு தலை மத்திய பா.ஜ.க. அரசிடம் பெற்றுத் தர முடிய வில்லை அதிமுக அர சால். பா.ஜ.க.வுடன் அதி முக கூட்டணியில் இருந்தும் பயன் இது தான்.
அந்த மசோதாக் களுக்கு குடியரசு தலை வர் ஒப்புதல் தராததைக் கூட அதிமுக அரசு தெரி விக்கவில்லை. உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கின்போது மத்திய அரசின் வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டதை சொன்னபோது தான் உண்மை வெளிச்சத் திற்கு வந்தது என்றும் கூறினார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்.
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்
விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலை வர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தன் உரையில் குறிப் பிட்டதாவது: ஒரே கட்சி, ஒரே தேசம், ஒரே கலாச் சாரம் என்பது பா.ஜ.க.வின் கொள்கை முழக்கம்.
அந்த அடிப்படையில் தான் மாற்றுக் கட்சி ஆட்சிகளை ஒழிக்கும் வேலையிலும், சமஸ்கிருதம், இந்தி திணிப்பு வேலையிலும் பா.ஜ.க. ஆட்சி ஈடுபடுகிறது. அரசு தொலைக்காட்சியில் நாள்தோறும் 15 நிமிடங்கள் சமஸ் கிருதத்தில் செய்தி ஒலிபரப்பு நடந்துகொண்டு இருக்கிறது. யார் கேட்டார்கள் - யார்தான் அந்தச் செய்தியைக் கேட்கிறார்கள்.
பா.ஜ.க. பிரித்தாளும் சூழ்ச்சியாக தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் ஒன்று சேர விடாமல் செய்து வருகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக் கொள்கையை ஏற்காத பா.ஜ.க.வினர் ராமன் கோயில் கட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் ராமனைப் பற்றிப் பேச மாட் டார்கள். ஆனால் முருகனைப் பற்றிமட்டும் பேசுவார்கள்.
இதுவரை அம்பேத்கர் சிலையைச் சிறுமைப்படுத் தினார்கள். இப்பொழுது தந்தை பெரியார் சிலையையும் அவமதிக்க ஆரம்பித்து விட்டனர். அதிமுகமீது சவாரி செய்து கொண்டு பா.ஜ.க. தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கிறது.
அதிமுகவை ஒழிப்பது தான் பா.ஜ.க.வின் திட்டம் - அதிமுகவில் வெற்றி பெற்றவர்கள்கூட, அதன் பின் பா.ஜ.க.வுக்குத் தான் தாவுவார்கள்.
அரசியல் கட்சிகளை அச்சுறுத்த வருமான வரித்துறை இருக்கிறது. ரெய்டு நடத்துவார்கள். ஆனால் நமக்கெல்லாம் அந்தக் கவலையில்லை. நமது இடத்துக்கு வந்தால் துண்டறிக்கைகளைத்தான் கைப்பற்ற முடியும். அந்தத் துண்டு அறிக்கையும் 'பா.ஜ.க. ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் - ஏன்?" என்ற கருத்துக்கள் அடங்கியதாகவே இருக்கும் என்றார் எழுச்சித் தமிழர்.
நடக்க உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தப் பக்கம் பா.ஜ.க. திரும்பிப் பார்க்கவே கூடாது என்கிற அளவுக்குப் பலத்த அடி கொடுக்க வேண்டும் என்று எழுச்சித் தமிழர் சொன்னபோது - பலத்த கைதட்டல்.
தோழர் கே. பாலகிருஷ்ணன்
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தன் உரையில் குறிப்பிட்டதாவது:
பிரதமர் நரேந்திர மோடிக்குக் குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட கிடையாது. 85 நாட்களாக டில்லியில் கடும் குளிரில் இந்தியாவின் தலைநகரமான டில்லியில் அறப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்களே அவர்களை அழைத்துப் பிரதமர் பேசாதாது ஏன்?
விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆளும் கேரள சட்டசபை தீர்மானம் போடுகிறது. புதுச்சேரி முதல் அமைச்சர் அந்த சட்டத்தை கிழித்து எறிகிறார். ஆனால் அதிமுக அரசோ ஆதரிக்கிறது.
இத்தகு ஆட்சி நமக்கு தேவையா? நடக்க உள்ள தேர்தலில் அவர்களை வீழ்த்த வேண்டும் என்றார் தோழர் பாலகிருஷ்ணன்.
தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் உரையாற்றினர். மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். குணசேகரன் நன்றி கூற மாநாடு வரலாற்று முத்திரையுடன் நிறைவுற்றது.