திங்கள், 30 செப்டம்பர், 2019

பெண்ணுரிமைக் காவலர் பெரியார்!

முனைவர்


துரை சந்திரசேகரன்


பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்




இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாள ரும், ஈடற்ற பெண்ணுரிமைக் காவலரும், சீரிய சுயமரியாதை வீரரும், பார் போற்றும் பகுத்தறிவுப் பகலவனும், ஆகச் சிறந்த மனித உரிமைப் பற்றாளரும், மாந்த நேயத்தின் மறு உருவும், ஈரோட்டு வேந்தரும், இனமானத் தந்தையுமான பெரியார்...

தலைவர்க்கும் தலைவர்

அறிஞர்க்கும் அறிஞர்

மனிதருள் மாமனிதர்

புத்துலகச் சிற்பி

ஈடற்ற பகுத்தறிவுப் பகலவன் ஆவார்!

அவர் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு அயராது உழைத் திட்ட ஆற்றலாளர். மூடநம்பிக்கைகளை முனை மழுங்கச் செய்திட்ட ஞானசூரியன். பகுத்தறிவின் திறவுகோல். பழைமையைச் சாடிய புத்தறிவாளர். ஜாதியை ஒழித்து சமத்துவம் காண போராடியவர். ஜாதிக்கு அடிப்படையான மதம், கடவுள் ஆகியவற்றின் கடும் வைரி! மக்களின் இருண்ட வாழ்வு வெளிச்சத்தை தரிசித்தது அவர்வரவால்... நாதியிலார் நாதிபெற 'நா' சுழன்றது... வீதியில் நடக்கவும் உரிமையற்றுக் கிடந்த மக்கள் உரிமை வாழ்வு பெற ஓயாது உழைத்தவர் அவர். அவரின் உரிமைப் போரால் உயர்ந்த வாழ்வினை மக்கள் துய்த்தனர்.

ஆம்! ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி அணிந்திராத அணி அவர்! அறிந்திராத அறிவும் அவரே! அவர் இல்லை யென்றால் நாட்டில் அறிவில்லை... ஆக்கம் இல்லை! அறிஞர் தம் பிறப்பே இல்லை! அவர் வாழ்ந்திட்ட காலத்தில் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவரால் நாட்டுமக்கள் அனைவரும் படிப்பு பெற்றனர்; பட்டம் பெற்றனர்; பதவி பெற்றனர்! ஏன்? அனைத்தும் பெற்றனர்.

சமுதாயத்தில் சரி பகுதியாய் இருக்கும் மகளிர்குலம் மானம் பெற - மாண்புகள் பெற அயராது உழைத்த அறிவாசான் பெரியாரே! தன் வாழ்நாள் முழுமையும் பெண்களைப் பற்றியே சிந்தித்த தலைவர். தன் சிந் தனையில், செயலில் சரிபாதியை பெண்கள் வாழ்வுரி மைக்காகவே பாடுபட்ட பெண்ணுரிமைக் காவலர் அவர். இதோ பெரியார் போற்றிய பெண்ணியம்...!

எங்கெங்கு ஏற்றத்தாழ்வுகள் வெளிப்பட்டதோ அங் கெல்லாம் பெரியார் தலையிட்டார். வேறுபாடுகளும், மாறுபாடுகளும் அவரின் போராட்டத்தால் வீழ்ந்தன. மனிதகுல சமத்துவம், மனிதகுல விடுதலை அவரின் எண்ணக் கனவு. மனித சமத்துவத்தில் அவசியமானதாக பெரியார் கருதியது பெண்கள் விடுதலை பற்றியதே! ஆண் - பெண் சமத்துவமே!  பெண்ணுரிமை பணியே தந்தை பெரியாரின் பெரும் பணியில் அரும்பணி!

உலகத்தில் - இந்திய துணைக்கண்டத்தில் - தமிழ் நாட்டில் பெண்ணினத்தின் வரலாறு புதுப்பிக்கப்பெற தந்தை பெரியாரின் பங்களிப்பு மகத்தானது. பெண்ணுரி மைக்காக பெரியார் அர்ப்பணித்த "யுகம்" என்றே சொல்லலாம்.

பெண்களின் ஆற்றலும், ஆளுமையும், வலிமையும், அறிவும் பெரியாரால் உணரப்பெற்ற அளவுக்கு மற்ற பெண்ணியவாதிகளால் உணரப்பட்டு இருக்குமா? என்பது கேள்விக்குறிதான்! நினைத்துப்பார்த்தால் வியப்பினை ஏற்படுத்துகிறது. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரின் பெண்ணுரிமை பங்களிப்பு! ஒடுக்கப்பட் டோரிலும் ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள் எனக்கருதிய பெரியார் பெண்ணடிமைக்கு எதிராகத் தொடுத்த போர் சம உரிமையை பெற்றுத் தந்தது பெண்களுக்கு!

தந்தை பெரியாரின் பெண் உரிமைப் போருக்கு முன்பு பெண்கள் வேதனையைத் தின்றார்கள்... விம்மிக் கிடந் தார்கள்! சுரணையற்ற ஜடப் பொருளாக அடிமைத்தனத்தை சுகமாக எண்ணி அறியாமைப் படுகுழியில் ஆழ்ந் திருந்தார்கள். பெண் எனும் பாலியல் வேறுபாட்டை மட்டும் காரணியமாக்கி எல்லா நிலைகளிலும் ஆதிக்கத் துக்கு உள்ளாகி தவித்துக் கிடந்தார்கள்!

பெரியார் வந்தார் - போராடினார்... எல்லாமும் தங் களுக்கு வந்ததைப் போல மகளிர் உணரத் தலைப் பட்டார்கள். ஆணாதிக்க கட்டமைப்பு அறிவுலக ஆசான் பெரியாரால் உடைத்து நொறுக்கப்பட்டது. 70 ஆண்டுகளில் பெரியார் போராடி பெற்றுத்தந்த பெண்ணுரிமைக்கான வளர்ச்சிப் படிநிலைகள் இனியும் தகர்க்க முடியாத வலுவான கட்டமைப்பாக உருப்பெற்றது!



"கல்வி, அறிவியல், கலை, விளையாட்டு, விடாமுயற்சி ஆகியவற்றில் வெற்றிபெற்ற நவீன பெண்களையே பெண்கள் உதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் - சங்கீதம், கோலாட்டம், மனையியல் ஆகியவற்றை பெண்கள் புறந்தள்ள வேண்டுமென்றும், பெண்களுக்கே உரிய காரியங்களையும், பதிவிரதைகளான சீதை, நளாயினி, சந்திரமதி, வாசுகி ஆகியோரின் வாழ்க்கை முன்னுதாரணங் களையும் பெண்கள் அலட்சியப்படுத்த வேண்டும்" என்றார் பெரியார். ('குடி அரசு' 22.1.1933).

பெண்கள் முன்னுக்கு வரவேண்டுமென்றால் தங்களுக்கு முன் உதாரணமாக யாரைப் பின்பற்ற வேண்டும்? யாரைப் பின்பற்றக்கூடாது? என்பதை தந்தை பெரியார் மேற்கண்டவாறு வரையறுத்தார்.

"ஆண் - பெண் வேறுபாடு இல்லாமல் ஒருவர் மற்றவரை அழைக்கும்போது 'தோழர்' என்றே அழைக்க வேண்டும். ஆண்கள் - பெண்கள் ஒரே விதமான உடைகளையே அணிய வேண்டும்" என்றார் பெரியார். "பெற்றோர்கள் பெண் குழந்தைகளை 'பெண்' என்று அழைக்காமல் 'ஆண்' என்றே அழைக்க வேண்டும்" ('குடி அரசு' 12.5.1935) என்று வலியுறுத்தியவர் பெரியார்.

குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் கூட பெயரைக் கேட்ட மாத்திரத்தில் இது பெண் குழந்தை, ஆண் குழந்தை என்று தெரியாத வண்ணம் பெயர் வைக்க வேண்டும் என்று கூறியதுடன், அய்யாவிடம் பெயர் சூட்டும்படி கேட்டுக் கொண்டபோது அன்புமணி, அறிவுமணி, அழகுமணி, அருள்மணி, பண்பு, பகுத்தறிவு, நாத்திகம், குடி அரசு, விடுதலை, உண்மை, சமத்துவம், இரஷ்யா, தன்மானம், அறிவுக்கண்ணு, அருமைக்கண்ணு என்றே பொதுப்பெயர்களையே சூட்டியவர் பெரியார்!

"மனிதர்கள் இருக்கும்வரை அனுபவிக்க வேண் டியது இன்பமும், திருப்தியும்தான். இதற்கு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம்" என்றும் கூறியவர் பெரியார். ('குடி அரசு' 17.8.1930)

ஒரு பெண்ணின் அல்லது ஒரு ஆணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு ஆணோ, பெண்ணோ மற்றவர்கள் - மூன்றாமவர்கள் யாராயினும் பேசுவதற்கோ, நிர்பந்திப் பதற்கோ சிறிதுகூட உரி மையே கிடையாது என்றும் திருமணம் பற்றிய தமது மதிப்பீட்டை வெளிப்படுத் தியவர் பெரியார்.

சமுதாய சமத்துவத்துக்காகவும், மானுட மேன்மைக் காகவும் ஜாதி மறுப்பு திருமணங்களை, விதவை மறுமணங்களை ஊக்குவித்தவர் பெரியார். சடங்கு சம்பிரதாயங்கள் நீக்கப்பெற்ற, ஆண் - பெண் சமத்துவம் பேணக்கூடிய அறிவுக்கொத்த சுயமரியாதைத் திருமண முறையை ஏற்படுத்தி அதனை பரப்புரை நிகழ்வாக பொது விழாவைப் போல நடைபெறச் செய்தவர் பெரியார்.

வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா, வாழ்க்கை ஒப்பந்த விழா என திருமணத்தையும், கணவன் - மனைவி என்பதை வாழ்க்கைத் துணைவர்களாகவும் மாற்றியவர் பெரியார். இன்றைய கால கட்டத்தில் வாழ்க்கை இணை நலம் ஏற்பு விழாவாக, வாழ்விணை யர்களாக சொல்லாட்சி மாற்றம் பெற்றுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சுயமரியாதைத் திருமணத்தை வடிவமைத் தவர் பெரியார். கூட்டு வாழ்க்கையில் ஆணுக்கும், பெண் ணுக்கும் எவ்வித வித்தியாசமோ, உயர்வு - தாழ்வோ இல்லை என்பதும், சகல துறைகளிலும் பெண்களுக்கு சம சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்பதை அடித் தளமாகக் கொண்டதே சுயமரியாதைத் திருமணம். திருமணம் என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க் கையை நடத்த ஏற்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தமென்றும், அவ்வொப்பந்த விஷயம் பெண்ணையும் - ஆணையும் மாத்திரமே பொறுத்ததே ஒழிய வேறு எவ்வித கட்டுப் பாட்டுக்கும் சம்பந்தப்பட்டதல்ல என்று அறிவுறுத்தியவர் பெரியார்.

"திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வேண் டும். ஒருவரையொருவர் பழகிக்கொள்ளவேண்டும். ஒருவருடைய குணங்களை மற்றவர் தெரிந்து கொள்ள வேண்டும். இருவரும் சம்மதித்துக் கொண்டால் முடிந்தது திருமணம்" ('விடுதலை' 23.8.1956)

"வரதட்சணை கேட்பதும் கொடுப்பதும் குற்றம்" என்றார் பெரியார். சட்டமாக மலருவதற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டன. "பெண்ணின் மூலம் கூடுமான அளவு சொத்தை சுரண்டலாம் என்று பெற்றோர்களும், ஆண் பிள்ளைகளும் திட்டமிடுவது மனிதத்தன்மையற்ற செய்கையே" என்றார்.

"படிப்பையும், காதலையும் விலைப் பொருள் களாக்குவதற்கும், கற்பை விற்பதற்கும் அடிப்படைத் தத்துவத்தில் வேற்றுமை இல்லை" ('விடுதலை' 1.4.1957) என்று பறைசாற்றியவர் பெரியார்.

'பிள்ளைப்பேறு' என்பது நடைமுறை வாழ்வில் பெண்ணை வேறு எந்த தளத்திலும் காலூன்ற முடியாதபடி தடைக்கல்லாய் அமைந்திருப்பதைக் கண்டு மனம் குமு றினார் அய்யா. அதேபோல் ஆண் - பெண் சேர்க்கையில் (தாம்பத்திய வாழ்வின்) ஒரே நோக்கமாகவும், இலட்சிய மாகவும் பிள்ளைப்பேறு ஆக்கப்பட்டு இருப்பதை பெரியார் ஏற்றுக்கொண்டாரில்லை. இனவிருத்தி, பிள்ளைப் பேறு வேண்டாமென்றால் மனித குலம் அழிந்து போகாதா? என்று கேள்வி தொடுப்போருக்கு மனித வாழ்க்கை என்பதே இயற்கையை மீறிய செயலாக இருக்கும்போது, மனிதகுலம் பெருகாமல் போனால் என்ன? இதுவரை ஏற்பட்ட மக்கள் பெருக்கத்தால் ஏற்பட்ட நன்மை என்ன? என்று கேட்டதுடன் பெண்களுக்கு அதனால் என்ன நட்டம் வந்து விடப்போகிறது? என்றும் இடித்துரைத்தார் பெரியார்.

கர்ப்பத்தடை பற்றி எவரும் சிந்திக்காத காலத்தில் பெரியார் 'கர்ப்ப' ஆட்சியை நூலாக்கித் தந்தவர். காதலுக்கு வழிவைத்து கருப்பாதைச் சாத்திட கதவொன்று கண்டறி வோம்... இதிலென்ன குற்றம்? சாவதற்கோ பிள்ளை... தவிப்பதற்கோ பிள்ளை? என்று நியாயங்களைப் தொடுத்தவர் பெரியார்.

"மதுவிலக்கு பிரச்சாரத்தைவிட, தொத்து வியாதிகளை ஒழிக்கும் பிரச்சாரத்தைவிட, இந்த கர்ப்பத்தடை பிரச்சாரம் மிகவும் முக்கியமானது" என்றார். ('குடி அரசு' 6.4.1930)

பல ஆண்டுகளுக்கு முன்பே இனவிருத்தி, மகப்பேறு என்பனவற்றை தீர்மானிக்கும் உரிமை, தங்கள் உடலின் மீது தாங்கள் மட்டுமே கட்டுப்பாடு செய்யும் உரிமை பெண்களுக்கு இருக்க வேண்டும் என்றவர் தந்தை பெரியார்.

உலகத்தில் ஆண்மை நிலைபெற்றிருக்கும் வரையிலும் பெண்களின் அடிமைத்தனம் வளர்ந்தே வரும். பெண் களால் 'ஆண்மை' என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலொழிய பெண் விடுதலை இல்லை என்று அவதானித்தவர் பெரியார். ஆண்கள் பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளர்வதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டுதான் போகும் என்றும் உண்மையை உணர்த்தியவர் பெரியார்.

"எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லா தாருக்கு சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்" - பெரியாரின் தொலைநோக்குப் பார்வை - தீர்க்கதரிசனம் எத்துணை நேர்மையானது, உண்மையானது என்பதை எவரே மறுப்பர்?

ஏனெனில் 'ஆண்மை' என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்திடும் முறையில் உலக வழக்கில் உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்து விடக்கூடாது அந்த 'ஆண்மை' உலகில் உள்ள வரையிலும் பெண்களுக்கு மதிப்பு இல்லை என்பதை பெண்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

எப்போதும் அடிமைதானா? பெண்கள் இளமையில் தந்தைக்கும், திருமணமான பிறகு கணவனுக்கும், முதுமை யில் மகனுக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்கும்படியான நிலையே உள்ளது. மொத்தத்தில் பெண் என்பவர் எப் போதும் ஏதாவது ஒருவகையில் ஆண்களுக்கு அடங்கி, ஒடுங்கி வாழவேண்டிய நிலையே இருக்கிறது. நியாயமான நிலையா இது? என்று அய்யா பெரியார் கேட்பதைப் பாருங்கள்.

"பெண்கள் விலைபொருளாக மதிக்கப்படுகின்றனர். குழந்தைப்பருவம், இளமைப்பருவம், கல்யாணப்பருவம், வாழ்க்கைப் பருவம், முதுமைப்பருவம் ஆகிய எல்லா பருவங்களிலும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள், இவைகளைப்பற்றி பழமை விரும்பிகளுக்கு நட்டமாய்த் தோன்றலாம். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு பெண் களாயிருந்து அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்" என்றார் பெரியார்.

"உங்கள் மனைவிமார்களை நினைத்துக்கொண்டே யோசிக்காதீர்கள். உங்கள் தாய்மார்களையும், செல்வப் பெண் குழந்தைகளையும், அன்பு சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப் பாருங்கள். உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளாயிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப் பீர்கள்? என்பதையும் யோசித்துப் பாருங்கள்" தந்தை பெரியாரின் உருக்கமான - கனிவான வேண்டுகோளை எண்ணிப்பார்ப்போமா? ஏற்றம் தருவோம் பெண் குலத்துக்கு என்று எண்ணிட வேண்டாமா? அறிவுலக ஆசான் பெரியாரின் கேள்வியில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து செயலாற்றுவோம்.

அடிமைப் பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால் அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும்? நமது மக்களுக்கு ஏன் மனிதத்தன்மை இல்லை -  சுயமரியாதை இல்லையென்றால் அவற்றிற் கெல்லாம் முக்கியத்திலும் முக்கியமான காரணம் இப்படிப் பட்ட தாய்மார்களால் பெறப்பட்டு வளர்க்கப்பட்டதேயாகும் என்கிறார் பெரியார். சுயமரியாதையும், மாந்தநேயமும் மிளிர பெண்ணுரிமையே முக்கியம் என்பதை நாம் உணர்வோமாக!

பெண்கள் சமுதாயத்தில் தலைகீழான புரட்சி ஏற்பட்டால் ஒழிய நாம் வேறு துறைகளில் எவ்விதமான பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்தாலும் எந்தப் பயனும் ஏற்படாது. பெண்கள் உண்மையான மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால் மூன்று காரியங்கள் உடனே செய்யப்படவேண்டும் என்றார் பெண்ணுரிமைப் போராளியான தந்தை பெரியார்.

"முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும். இரண்டாவது நகைப் பேயை அவர்களிடமிருந்து விரட்ட வேண்டும். மூன்றாவதாக இப்போதுள்ள திருமணச் சிக்கல்களைத் துண்டுதுண்டாக நறுக்கி விட வேண்டும். இவ்வளவுக்கும் அடிப்படையாய் இருப்பவை கல்வியும், சொத்துரிமையும். இவ்விரண்டையும் பெற்ற பெண்கள் அவரவர்களுக்குப் பிரியமான உத்தியோகங் களை ஏற்பதற்கு தடையில்லாமல் செய்ய வேண்டும். இந்த உதவியைத்தான் இங்குள்ள ஆட்சியாளர் செய்ய வேண்டும். பெண்கள் உத்தியோகங்களில் அமர்ந்து விடுவார் களேயானால், நாம் மேலே கூறிய மூன்று தேவைகளும் தாமாகவே படிப்படியாக நிறைவேறிவிடும்"

"நாளைக்கு நம் நிலை என்ன? என்ற கவலை இல்லாமல் உலகப் பெண்கள் எல்லோரையும்விட இன்பமாகவும், சுதந்திரமாகவும், முழு வாழ்க்கை வாழுகின்றவர்களாகவும் மாற வேண்டும். கல்வியையும், வேலையையும் தான் தங்கள் அழகாக கருத வேண்டும்" என்ற பெரியாரின் கனவை நனவாக்கிட நமது பெண்கள் தயாராக வேண்டாமா? நகையிலும், அணிமணிகளிலும், உடையிலும் அழகைத் தேடிக்கொண்டிருக்கலாமா? சிந் தித்து செயல்பட வேண்டிய பொறுப்பு பெண்களுடையதே!

மனித சமுதாயம் அடுத்தவனைச் சுரண்டாமல், தானும் சுரண்டலுக்கு ஆளாகாமல் சமத்துவத்தோடு, சுதந்திரத் தோடு சுயச்சார்போடு வாழவேண்டுமென்று ஆசைப் பட்டவர் அய்யா. அதனால் தான் பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டும், ஆணாதிக்கச் சிந்தனை அழிய வேண் டும் என்று விரும்பினார். ஆண் - பெண் பேதமற்ற சமுதா யத்தில்தான் உண்மையான சமத்துவத்தை காணமுடியும்.

பெண்ணினத்தின் தன் நிலையை, ஆளுமையை வளர்த்தெடுத்த தந்தை பெரியாரை தங்களின் உரிமைப் போராளியாக பெண்கள் அங்கீகரித்து - தந்தை பெரியாரே தங்களுக்கு முதன்மையான தலைவர் - முக்கியமான தலைவரும் ஆவார் என்பதை உணர வேண்டும். பெண்களுக்காக வாதாடுவதால், போராடுவதால் ஆண்கள் சமுதாயம் எதிர்க்குமே என்பதை பற்றியெல்லாம் கவலைப் படாமல் மகளிர் குலத்தை மன்பதையில் உயர்த்திப்பிடித்து உரிமைப் போரிட்ட பெருந்தலைவரே பெரியார் எனப் போற்றிட வேண்டும்.

கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை எனும் தடத்தில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள பெண்கள் நாடாளுமன்றத்தில் 33% இடஒதுக்கீடு எட்டப்பட முடியாமல் தவிப்பதை நினைத்தால் இன்னமும் பெண்கள் தங்களின் உரிமைத் தடத்தில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதை மறுக்க முடியாது. உரிமைப்போர் தொடரட்டும்; ஆணுக்கு நிகரான அனைத்து உரிமைகளும் மலரட்டும்!

நீதி உரைத்திடும் நியாயவானாக நின்று பெரியார் தொடுத்த பெண் உரிமைக்கான போர்க்குரல், உலகில் வேறு எவராலும் சொல்லப்படாத குரலாக வெளிப்பட்டது என்பதே உண்மை.

அமெரிக்கா, வர்ஜினியா - தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் படிக்கப்பட்ட கட்டுரை 17.9.2019.

- விடுதலை நாளேடு, 30 .9. 19

அமெரிக்கா மாநாட்டில் பங்கேற்ற தோழர்கள் தமிழகம் திரும்பினர்



அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில்  செப்டம்பர் 21, 22 ஆகிய நாள்களில் அமெரிக்க மனித நேயர் அமைப்பும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் ஒருங்கிணைந்து  நடத்திய  மாநாட்டில் பங்கேற்று, இன்று (30.9.2019) விடியற்காலை தமிழகம் திரும்பிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட கழகத் தோழர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் தலைமைக் கழகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தாம்பரம் கழக மாவட்டத்தின் சார்பில், மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குப் பயனாடை அணிவிக்கப்பட்டது.

- விடுதலை நாளேடு, 30. 9 .19

சனி, 28 செப்டம்பர், 2019

பகவத் கீதை வன்முறையைத் தூண்டும் நூல்

பெரியார் மண்ணில் அண்ணா பல்கலை கழகத்தில் ‘பகவத் கீதை'

விருப்பப் பாடம் என்று துணைவேந்தர் சொல்வதா?

தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி

தொடர் போராட்டம் நடைபெறுவது உறுதி! உறுதி!!



பெரியார் மண்ணில், அண்ணா பல்கலைக் கழகத்தில் ‘பகவத் கீதை' விருப்பப் பாடமாக வைக்கப்படும் என்று துணைவேந்தர் சொல்வதா? ஒரு மாதத்திற்குள் இந்த  அறிவிப்பைப் பின்வாங்காவிடில், தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி - தொடர் போராட்டம் நடைபெறுவது உறுதி! உறுதி!! என்று திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அண்ணா பல்கலைக் கழகம் தனியார் பல்கலைக் கழகமல்ல!

அண்ணா பல்கலைக் கழகம் தனியார் பல்கலைக் கழகம் அல்ல. முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகம். மத்திய அரசின் நிதி உதவியை - பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் பல அமைப்பு களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் நிதி உதவியும் பெறும் பல்கலைக் கழகம்.
இந்தப் பல்கலைக் கழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர் - தமிழ் தெரியாத ஒருவர் துணைவேந்தராக தமிழ்நாடு அரசிடமோ, முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் போன்றவர்களிடமோ ஒப்புதல் ஏதும் பெறாமல், ஆளுநரால் தன்னிச்சையாக நியமனம் பெற்றவர்.
அப்போதே பலத்த எதிர்ப்புக் கிளம்பியது - யாருக்கும் மறந்துபோய்விடக் கூடிய ஒன்றல்ல.
விஷ உருண்டைக்குத் தேன் தடவியது போன்ற அறிவிப்பு

இந்நிலையில், தனது பச்சை இந்துத்துவா உணர்வை வேந்தர் தூண்டுதலோ அல்லது இவரது பதவியின் எதிர்காலக் கணக்குக் காகவோ, பகவத் கீதையை அப்பல்கலைக் கழகத்தில் விருப்பப்பாடம் என்று - விஷ உருண்டைக்குத் தேன் தடவியதுபோல் - அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது வன்மையான கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த அறிவிப்பு பின்வாங் கப்பட்டு, மாற்றி அமைக்கப்படல் வேண் டும்.
மற்ற மத நூல்களும் வைக்கவேண்டும் என்கிற குரல் எழுமே!

இதற்கான நியாயமான காரணங்கள் இதோ:
1. கீதை ஒரு இந்து மத நூல் மட்டுமல்ல, ஜாதியை ஆதரித்து நியாயப்படுத்தும் நூல்.
“சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம், குண - கர்ம விபாகச
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யா கர்த்தாரர மவ்யயம்”
(அத்தியாயம் 4, சுலோகம் 13)
அதாவது, ‘‘நாலு வருணங்களையும் நானே படைத்தேன். நானே அதனைப் படைத்தவனாக இருந்தாலும் அதனை மாற்றிட அல்லது திருத்தி அமைத்திட என்னால் முடியாது'' என்று கூறும் நூல்.
2. சூத்திரர்களும், பெண்களும் ‘பாவயோனி'யில் பிறந்தவர்கள் என்று அவர்களைக் கேவலப்படுத்தும் நூல்.
“மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு, பா - யோன்ய
ஸத்ரியோ வைச்யாஸ் - ததா சூத்ராஸ் - தேஸ் பியாந்தி பராங்கதிம்''
(அத்தியாயம் 9, சுலோகம் 32)
அதாவது, ‘‘பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். அதனால் அவர்கள் கீழானவர்கள்.
“பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று வர்ணத்தாருக்கும் தொண்டூழியம் செய்வது ஒன்றே சூத்திரர்களின் இயல்பான கடமையாகும்” என்றும் கூறும் நூல் பகவத் கீதை.
மகளிரும் படிக்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் இப்படி இழிவுபடுத்தும் நூல் இடம்பெறலாமா?
3. இந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை (Secularism) கொள் கைக்கு முற்றிலும் முரணானது இது. இந்து மத நூலை இப்படி விருப்பப் பாடம் என்ற போர்வையோடு பல்கலைக் கழகத்தில் வைத்தால், மற்ற மதவாதிகளான இசு லாமியரின் ‘‘குரான்'', கிறித்துவர்களின் ‘‘பைபிள்'', சீக்கியர்களின் ‘‘கிரந்தம்'', பவுத்தர்களின் ‘‘தம்மபதம்'', ஜொராஷ்டர் களின்  ‘‘அவெஸ்தா'', பகுத்தறிவாளர்களின் ‘‘கீதையின் மறுபக்கம்'' நூல் - இவைகளை அதேபோல் விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்தால், அதை  ஏற்று துணைவேந்தரோ - அவரது ‘அகாடமிக்  கவுன்சில்' என்ற அமைப்பு தலையாட்டுமா?
4. கீதை வன்முறையைத் தூண்டும் ஒரு கொலைகார நூல்!
முன்னாள் நீதிபதி எழுதிய ‘மகாத்மாவின் கொலை' நூல்

‘தேசப்பிதா'  என்று அழைக்கப்படும் அண்ணல் காந்தியாரை சுட்டுக்கொன்ற - தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.சிடம் பயிற்சி பெற்ற நாதுராம் விநாயக் கோட்சே, நீதி மன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்திலேயே,  தான் இந்த கொலை  முடிவுக்கு வருவதற்குப் பெரிதும் துணை நின்று தூண்டிய நூல் ‘பகவத் கீதை' என்று கூறியுள்ள நிலையில்,
'The Murder of the Mahatma' -   ‘மகாத்மாவின் கொலை' என்ற தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா 1963 இல் எழுதிய நூலில், 1977 வரை மூன்று பதிப்புகள் வெளியாகி - விற்பனையாகி - இக்கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்!
எவரே மறுப்பர்?
பகவத் கீதை வன்முறையைத் தூண்டும் நூல்!

கீதை கொலை நூல்தான் என்று சுவாமி சித்பவானந்தா எழுதிய விளக்கவு ரையிலேயே குறிப்பிட்டுள்ளார்!
‘‘இந்து சாஸ்திரங்களில் சொல்லப் பட்டபடி நடந்துகொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவருடைய கடமை - தர்மம் ஆகும்'' என்பதே கோட்சே வாக்குமூலம். (அவர் கைப்பட எழுதியது ‘May it Please Your Honour' என்ற தலைப்பில் ஒரு நூலாகவும் (ஆங்கிலத்தில்) அது வெளி வந்துள்ளது).
‘‘...தாயகத்தைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்தும் போராடவேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பகவத் கீதையிலிருந்து சில சுலோ கங்களைச் சொல்லி உணர்ச்சிகரமாகத் தனது வாக்குமூல உரையை முடித்தார்....'' - இப்படி நீதிபதி ஜி.டி.கோஸ்லா அந்த நூலில் குறிப்பிடுகிறார்!
‘‘கடமையைச் செய்; பலனை எதிர் பார்க்காதே'' என்பதில்  கடமை என்பது ஜாதி - வருணத்தைக் காப்பாற்றும் கடமை யைச் செய்யவேண்டும் என்று வன்முறை யைத் தூண்டும் ஒரு நூல் பகவத் கீதை ஆகும். இப்படிப்பட்ட நூலில் இருப்பதாகத் தவறான மேற்கோள்களைக் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர்.
குறளை விருப்பப் பாடமாக வைக்கட்டும்!

திருக்குறள் போன்ற உலகப் பொது ஒழுக்க நூல் - ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டில்' அவரது குறளை விருப்பப் பாடமாக வைக்க வேண்டாமா?
அண்ணா பல்கலைக் கழகத்தில் அண் ணாவின் அரிய சிந்தனைக் கருவூலங்களை வைக்கவேண்டாமா? அவர் பெயரால் அமைந்த பல்கலைக் கழகம் அல்லவா அது?
தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி  உறுதி!

இன்னும் ஒரு மாதத்திற்குள் இதைப் பின்வாங்கி மாற்றாவிடில், தமிழ்நாடு முழுவதும்  அறப்போர்க் கிளர்ச்சி தொடர் போராட்டமாக, அண்ணா பல்கலைக் கழகம் முன் தொடங்கி, தொடருவது உறுதி! உறுதி!!
பெரியார் மண்ணில் இப்படி உணர்ச் சிபூர்வ நெருப்புடன்  நெருங்கும் முயற்சி யில் இப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஈடுபடக் கூடாது.
ஒன்றுபட்டு கண்டனக் குரல் எழட்டும்!

தமிழக அரசும், முதலமைச்சரும் - மதச்சார்பின்மைக்கு எதிரான இதனை அகற்றிட முழு முயற்சியில் உடனடியாக ஈடுபடவேண்டும்!
ஒத்த கருத்துள்ள அனைவரும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், கல்வி யாளர்களும் ஒன்றுபட்டு கண்டனக்குரல் எழுப்பிட முன்வரவேண்டும்.

கி.வீரமணி,
முகாம்: பிலெடெல்ஃபியா (அமெரிக்கா)
தலைவர்,
திராவிடர் கழகம்
26.9.2019

சிவகங்கை அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

, செப்.28 சிவகங்கை அருகே கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வா ளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கோவானூர் பகுதியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர்கள் கொல்லங்குடி புலவர் காளிராசா, ராமநாதபுரம் மோ. விமல் ராஜ் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் பழைமையான 6 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அவை அனைத்தையும் படியெடுத்த பின்னர் கல்வெட்டு ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியது:
கோவானூர் முகப்பில் உள்ள ஊருணியின் கிழக்குக் கரையில் படித்துறையும், வடக்கில் ஒரு வரத்துக் கால்வாயும் உள்ளன. அந்த ஊருணி படித்துறையில் வெவ்வேறு தகவல்களைக் கொண்ட பழைமையான கல்வெட்டுகள் 6 துண்டுகளாக காணப்படுகின்றன.
மேலும், அங்குள்ள மற்றொரு கல்வெட்டில் கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் "பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும்' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி 9 வரிகளில் உள்ளன. இதில், தஞ்சையும், உறந்தையும் செந்தழல் கொளுத்தியது, மாளிகையும், மண்டபமும் இடித்தது உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இக்கல்வெட்டுகளில், அரசின் வரிக் கணக்கை நிர்வகிக்கும் திணைக்கள நாயகம் பற்றியும், உழக்குடி முத்தன், தச்சானூருடையன், வீரபஞ்சான், முனையத்தரையன், அழகனான வானவன், விழயராயன், வந்தராயன் ஆகிய அரசு அதிகாரிகளின் பெயர்களும் பொறிக்கப் பட்டுள்ளன.
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்று, கீழ்க்கூற்று, மதுரோதய வளநாடு, கீரனூர் நாடு, காஞையிருக்கை ஆகிய நாடுகளும், நல்லூர், மிழலைக் கூற்றத்து தச்சனூர், புல்லூர்க்குடி, மதுரோதய வளநாட்டு புறப்பற்று, காஞையிருக்கை உழக்குடி ஆகிய ஊர்களும் கல் வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வெட்டில் வேலி, இருமா ஆகிய நில அளவுகளைக் குறிக்க குறியீடுகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. நெடில் எழுத்துகள் பெரும்பாலும் கல்வெட்டில் வருவதில்லை. ஆனால் இங்குள்ள ஒரு கல்வெட்டில் நீக்கி நீக்கி என்ற சொல் நெடிலாகவும், மற்றொன்றில் நிக்கி நிக்கி என குறிலாகவும் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர, இந்தப் பகுதியில் சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.
-  விடுதலை நாளேடு, 28.9.19
 

பெண்கள் விடுதலை

-சித்திரபுத்திரன்


27.09.1947  -குடிஅரசிலிருந்து...

இராஜன்: ஏண்டா, டேய்! இராமா! பெண்கள் விடுதலை, பெண்கள் விடுதலை என்று பேசுகிறார்களே, அதென்ன விடு தலை? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?

இராமன்: உனக்கெப்படியப்பா புரியும்? உனக்கு கால் டஜன் பெண்டாட்டிகள் இருக்கிறார்கள்; அரை டஜன் வைப் பாட்டிகள் இருக்கிறார்கள். அதோடு நிறையப் பணமும் இருக்கிறது?

இராஜன்: நான் சொல்லுவது உனக்குக் கேலியாக இருக்கிறது. இந்தப் பெண் களிடமிருந்து எனக்கு (ஆண்களுக்கு) விடுதலை கிடைப்பதுதான் பெரிய கஷ்டமாயிருக்கிறது? ஒருத்தி விட்டால் மற்றொருத்தி இழுக்கிறாள். இவர் களைவிட்டு நான் எப்படி விடுதலை அடைகிறது?

இராமன்: சரிதான் இப்போது புரிந்தது. நீ அந்தப் பெண்களிடம் கஷ்டப் படுவதினால் உனக்குத் தான் விடுதலை வேண்டும் என்கிறாய். உனக்கு 9 பெண்கள் எதற்கு? ஒரு பெண் இருந்தால் போதா தோ? ஒரு பெண் 9 கணவனை மணம் செய்து கொண்டும் காதலனாக வைத்துக் கொண்டும் இருந்தால் நீ அந்த ஒன்பதில் ஒருவனாக இருக்க சம்மதிப்பாயா?

இராஜன்: ஒரு பெண்ணுக்கு 9 புருஷன் என்றால் அது என்ன மிருகமா? நாமென்ன மிருக சாதியா? நன்றாய்ச் சொல்லுகின்றாய் நாக்குக் கூசாமல்!

இராமன்: பெண்கள் விடுதலை என் றால் இப்போது உனக்கு அருத்தமாச்சுதா? நீ ஒன்பது பெண்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய இயற்கை உணர்ச்சிக்கு உன்னை வலிய இழுக்க வேண்டிய மாதிரிக்கு அவர்களை அடைத்து வைக்க லாம். அது மனுஷத்தன்மை என்கிறாய். ஒரு பெண் 9 கணவர்களை வைத்துக் கொண்டிருந்தால் அது மிருகத்தனம் என்கிறாய், இந்தக் கொள்கை போகவேண்டுமென்பதைத்தான் பெண்கள் விடுதலை என்று சொல்லுவது. புரிந்ததா?

இராஜன்: புரிந்தது. நன்றாய்ப் புரிந்தது. நான் அவசரப்பட்டு மிருகத்தன்மை என்று சொல்லிவிட்டேன். ஒரு பெண் ணுக்கு 9 பேர் என்பது இன்றும் தாராள மாய் நடக்கின்றதே. நம்ம தேவதாசிகளைப் பாரேன். நம்ம விலைமாதர்களைப் பாரேன். 9 தானா 90ம், 900மும் கூட இருக்கும் போலிருக்கின்றதே. மக்கள் அங்கு போவதில்லையா? அவர்களை மரியாதை செய்வதில் லையா? அந்தப் பெண்களுக்குச் சுதந்திர மில்லையா? தங்கள் இஷ்டம் போல் பணம் கேட்பதும் தங்கள் இஷ்டம்போல் ஒருவனை  நீ வேண்டாம் வெளியில் போ என்பதும் நாம் தினமும் பார்க்கவில்லையா? ஆகவே அவர் களுக்குச் சுதந்திரமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

இராமன்: பொறு, பொறு, அவசரப் படாதே. சுதந்திரம் இருப்பதாக நீ சொல்லும் பெண்கள் யார் என்பதைத் தெரிந்து கொண்டாயா? தேவதாசிகளுக் கும் விலை மாதர்களுக்கும் சுதந்திரம் இருப்பதாகச் சொன்னாய். நீ சொல் லுகிறபடி பார்த்தால் ஒரு பெண் சுதந்திரமாக இருக்கவேண்டுமானால் ஒன்று தேவதாசியாகப் போய்விட வேண்டும், அல்லது விலைமாதாகப் போய்விட வேண்டும். வெள்ளைத் தமிழில் சொல்ல வேண்டுமானால் தேவடியாளாக அல்லது குச்சுக்காரியாகப் போய்விட வேண்டும் என்கிறாய். ஒருவ னையே கணவனாகக் கொண்டு திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிற பெண் களுக்கு விடுதலை என்பது ஒரு ஆளுக்குப் பல பெண்களில் ஒருத்தியாய் இருந்து அடைபட்டுக்கிடக்க வேண்டியதுதான் கடமைபோல் இருக்கிறது?

இராஜன்: ஒரு பெண் தனிமையில் இருந்து வாழ்க்கை நடத்திக் கொள் ளட்டுமே, யார் வேண்டாம் என்கின் றார்கள்? பெண்கள் தாமாகத்தானே யாருக்காவது ஒருவனுக்கு வாழ்க்கைப் படவேண்டும் என்று துடிக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும் வயது வந்துவிட்டதே என்ன செய்வது? யார் தலையிலாவது கட்டிவிடவேண்டுமே, இல்லாவிட்டால் கெட்டபெயர் வந்து விடுமே என்று கவலைப்படுகிறார்கள். அதற்கேற்றபடியே கல்வி இல்லாமலும் தொழில் பழக்காமலும் வளர்க்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்ணைக் கட்டிக் கொள்ள வருபவனும் தனக்கு அடிமை தொழில்செய்ய ஒரு ஜீவன் வேண்டும் என்று கருதியே பெண்ணைத் தேடுகிறான். அதோடு இவள் பெறுகின்ற குழந்தை களுக்கும் இவளுக்கும் வாழ்விற்கு வேண்டியதை எல்லாம் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டு செய்கிறான். இதற்கு மேல் அடிமை புகுந்தவளுக்கு எஜமானன் வேறு என்ன செய்ய முடியும்? தான் தேடிய சொத்துக்களையும் அடிமைபெற்ற குழந்தைகளுக்கே வைத்துவிட்டுப் போ கிறான். இன்னும் என்னதான் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறாய்?

இராமன்: நீ சொல்லுவதைப் பார்த்தால் பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம் என்கிறாய்போல் இருக்கிறது. கல்யாணம் செய்துகொண்டால் அடிமை யாய்த்தான் இருக்க வேண்டும் என்கின் றாயாக்கும்?

இராஜன்: நான் அப்படிச் சொல்ல வில்லை; இயற்கை அது. கொடுப்பவன் கை மேலாகவும், வாங்குபவன் கை கீழாகவும்தான் இருக்கும். கல்யாணம் இல்லாமல் இருந்தால் என்ன முழுகிப் போய் விடும். மலையாளத்தில் சில இராணிகளும் ஜமீன்தாரணிகளும் சம் பளம் கொடுத்து புருஷன்மார்களை வைத்துக்கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் கவுரவம் குறைந்துபோய் விட்டதா? அல்லது சமுதாயத்தில் குறை கூறுகிறார்களா? அவ்வளவுதூரம் போக உன்னால் முடியாவிட்டால் பெண்களை நன்றாய்ப் படிக்கவைத்து அல்லது ஏதாவது ஒரு தொழிலில் அமர்த்தி, 25 வருடம்வரை கல்யாணப் பேச்சு பேசாமல் 25 முதல் 30 வயதிற்குள் அந்தப் பெண்ணையே தனக்குப் பிடித்த வனை ரிஜிஸ்டர் கல்யாணம் செய்து கொள் ளும்படி செய். வாழ்க்கைக்கு (அன்ன வஸ்திரத்துக்கு) புருஷன் கையை எதிர் பார்க்காமல் செய். அப்போது பெண் விடுதலை வேண்டி இருக்குமா அல்லது ஆண் விடுதலை வேண்டி இருக்குமா? அல்லது இருவரும் தங்களை ஒருவருக் கொருவர் கட்டுப்படுத்திக் கொள்வார் களா என்று பார்!

 - விடுதலை நாளேடு, 28 .9 .19