வியாழன், 29 பிப்ரவரி, 2024

பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கியது பி.ஜே.பி. ஆட்சி!



விடுதலை நாளேடு 
Published February 29, 2024

தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதான் தரவில்லை – ஆறுதல் வார்த்தைகளாவது சொன்னாரா?
பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கியது பி.ஜே.பி. ஆட்சி!
தோல்வி பயம் வந்துவிட்டது பிரதமர் மோடிக்கு –
வெற்றி பெறப் போவது ‘இந்தியா’ கூட்டணியே!

சாக்கோட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

சாக்கோட்டை, பிப்.29 தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக் களுக்கு நிவாரண நிதி தராவிட்டாலும், ஆறுதல் வார்த்தைகளையாவது சொன்னாரா? சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால், எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைத்திருக்கும். வரும் தேர்தலில் பி.ஜே.பி. தோற்பது உறுதி – ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றே தீரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (28-2-2024) சாக்கோட்டைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:

எம்.ஜி.ஆரையும் – ஜெயலலிதாவையும்
பிரதமர் மோடி திடீரென்று புகழ்வது ஏன்?

செய்தியாளர்: முன்பு, பிரதமர் மோடி தமிழ் நாடு பின்தங்கி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென்று இன்றைக்குத் தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னோடியாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அவர், எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் திடீ ரென்று புகழ்ந்து பேசுவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: அவருக்குத் தோல்வி தமிழ்நாட்டில் நூறு சதவிகிதம் உறுதி என்பதை அவருடைய பயணத்தில் உணர்ந்துவிட்டார்.
அதனுடைய அறிகுறி, அதனுடைய எதிரொலி தான் அவருடைய குழம்பிய பேச்சாகும்.
கடைசி நேரத்தில் இப்படி சொன்னாலாவது வாக்கு கள் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கிறார். ஏனென்றால், அவருடைய ஆட்சியின் சாதனைகளைச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மோடி ஆட்சியினால் வேதனைதான் மிஞ்சியிருக்கிறதே தவிர, சாதனை ஏதுமில்லை என்று அவருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது.
அப்படியே அவர் இவற்றைச் சொன்னாலும், தமிழ்நாட்டில் அது எடுபடாது. ஆகவேதான், ரயில்வே ஸ்டேஷன் ரிப்பேரையெல்லாம் கணக்கில் காட்டுகிறார். கதவு போட்டது, வாசற்படி வைத்தது – அதற்காக நாங்கள் எத்தனைக் கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறோம் பாருங்கள் என்கிறார்.
மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்காக ஒரு செங்கல்லை மட்டும் வைத்துவிட்டுப் போனார்கள். அந்தத் திட்டம் இதுநாள் வரையில் நிறைவேற்றப்படவில்லை.

இராமன் பாலம் என்று சொல்லி
முட்டுக்கட்டை போட்ட பா.ஜ.க.வினர்!

ஒன்றியத்தில் கடந்த ஆட்சியில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக ரூ.2500 கோடி ஒதுக்கி, அந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு இன்னும் 23 கிலோ மீட்டர்தான் மீதமுள்ளது என்ற நிலையில், இவருடைய கட்சியான பா.ஜ.க.வினர் இல்லாத இராமன் பாலத்தைச் சொல்லி, அந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட் டனர்.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியிலேயே, இராமன் பாலம் என்ற ஒன்று இல்லை என்பது தெளிவாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி முன்னிலையிலேயே சொல்லப்பட்டது.
கலைஞரும், சோனியா காந்தி, மன்மோகன்சிங் ஆகி யோராலும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஒன்றிய அமைச்சரவையில் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு போன்றவர்களுடைய முயற்சியினாலும் தொடங்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை – பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கொடுக்கக்கூடிய திட்டத்தை, தமிழ்நாடு பொருளாதாரம் மட்டுமல்ல; இந்தியாவின் பொருளாதாரம், தென்கிழக்கு ஆசியாவினுடைய பொருளாதாரம் வளரக்கூடிய ஒரு திட்டத்தை, நிறைவேற்றவிடாமல், கடைசி நேரத்தில் பாழாக்கினார்கள் பா.ஜ.க.வினர்.

இராமன் பாலம் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டனர்!

அத்திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தடை ஆணை பெற்ற பிறகும், அந்த வழக்கினை அவர்களால் நடத்த முடியவில்லை. காரணம், இராமன் பாலம் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டார்கள்.
அதற்குப் பிறகாவது, அவர்கள் கொடுத்த வாக் குறுதியை நிறைவேற்றினார்களா?
எந்தத் தூத்துக்குடி பக்கம் பிரதமர் மோடி போயிருக் கிறாரோ, அந்தத் தூத்துக்குடி பகுதி வளம்பெறும் திட்டம் – எந்தத் திருநெல்வேலிக்குச் சென்று மோடி முழங்கினாரோ, அந்தத் திருநெல்வேலி வளம் பெறும் திட்டம் அது.

பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து
ஓர் ஆறுதல் வார்த்தைச் சொல்லியிருக்கிறாரா?

குறைந்தபட்சம் மனிதாபிமானம் உள்ள ஒரு பிரதமராக இருந்தால், புயல், மழை, வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி கொடுக்கவில்லை – அதையும் குறைத்திருக் கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த புயல், மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஓர் ஆறுதல் வார்த்தைச் சொல்லியிருக்கிறாரா?
நிவாரண நிதி கொடுக்கிறாரா, இல்லையா என்பது வேறு; பாதிக்கப்பட்ட மக்களைச் சந் திக்கக்கூட அவருக்கு மனிதாபிமானம்கூட இல்லையே!
மனிதாபிமானம் இல்லாதவர்களை தமிழ்நாடு எப்படி நடத்தும் என்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

இவர்கள் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. பிரிந்தது என்பதற்கு என்ன காரணத்தைச் சொன்னார்கள்? யார் காரணம் என்று சொன்னார்கள்?
இது இப்படி இருக்கையில், திடீரென்று பிரதமர் மோடி இன்றைக்கு எம்.ஜி.ஆர். ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி மிகச் சிறப்பான ஆட்சி என்று சொல்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலின்போது பிரச் சாரத்திற்கு வந்தபொழுது மோடி என்ன சொன்னார்?
அ.தி.மு.க. ஊழல் ஆட்சி என்று பிரதமர் மோடியும் சொன்னார், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சொன்னார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதே!

‘நோட்டா’வைவிட கூடுதலாக வாக்குகள் வாங்குவதற்காக, இப்படியொரு உத்தி!

அவர்களுடைய நிலை இப்பொழுது என்ன வென்றால், ‘நோட்டா’வைவிட கூடுதலாக வாக்குகள் வாங்குவதற்காக, இப்படியொரு உத்தி யைக் கையாண்டு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைப் பாராட்டினால், வாக்குகள் கிடைக்காதா? என்பதால்தான்.
எனவே, இதன்மூலமாக தமிழ்நாட்டில் மிகப் பெரிய ஏமாற்றத்தை அவர் சந்தித்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகின்றது.
யாத்திரை, பாத யாத்திரை, நீதி யாத்திரைகளால் ஒரு பயனும் இல்லை என்பதுதான் உண்மை. பி.ஜே.பி.யினுடைய இறுதி யாத்திரைக்குத் தமிழ் நாடு வழிகாட்டும்.

மே மாதத்தில் ஒன்றியத்தில்
ஆட்சி அமைக்கப் போவது
இந்தியா கூட்டணிதான்!

புதுவை மற்றும் தமிழ்நாட்டில் 40-க்கு 40 இடங் களிலும் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி உறுதி. இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, மே மாதத்தில் ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது இந்தியா கூட்டணிதான் என்பதில் சந்தேகமேயில்லை.
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி – அகிலேஷ் கூட்டணி ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில், டில்லியிலும் இந்தியா கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அவர்களின் அரசியல் கணக்குத்
தப்புக் கணக்காக ஆகிவிட்டது
யார் யாரையெல்லாம் பிரித்து, இந்தியா கூட்டணியை உடைத்து, நாம் சுலபமாக ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று அவர்கள் அரசியல் கணக்குப் போட்டார்களோ, அந்த அரசியல் கணக்குத் தப்பாக ஆகிவிட்டது. அதனை பிரதமர் மோடி புரிந்துகொண்டார்.
ஆகவேதான், என்ன செய்வது என்று புரியாமல், இப்படி ஏதாவது சொல்லிப் பார்க்கலாம் என்று சொல் கிறார். அதனால் ஒரு பயனும் இல்லை.
நாங்கள் (பா.ஜ.க.) 370 இடத்தில் வெற்றி பெறுவோம்; 470 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றெல்லாம் கணக்குச் சொல்கிறார்கள். அது மக்களை ஏமாற்றுவதற் காகச் சொல்லுகின்ற தந்திரம் என்று எல்லோருக்கும் தெரியும்.

ஏனென்றால், தலைநகரமான டில்லியிலேயே இவர் களால் வெற்றி பெற முடியாது.
மோடியின் ”உத்தரவாதம், உத்தரவாதம்” என்று தொலைக்காட்சிகளில் விளம்பரங்களைத் தொடர்ந்து கொடுக்கிறார்கள். அதனால் ஒரு பயனும் அவர்களுக்கு விளையப் போவதில்லை.
விவசாயிகளுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதனை எதிர்த்து ஓராண்டிற்கு மேலாக விவசாயிகளின் போராட்டம் நாட்டையே நிலைகுலைய வைத்தது.

விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா பிரதமர் மோடி?

அதனால் பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது. அப்பொழுது சில வாக்குறுதிகளைக் கொடுத்தார் பிரதமர் மோடி.
குறைந்தபட்ச ஆதார விலையைக் கொடுப் போம் – விவசாயிகளின்மீது போட்ட வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வோம் என்று.
ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்பதால், அரியானா, பஞ்சாப், சண்டிகார் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் ”டில்லி சலோ” என்று முழக்கமிட்டு, டில்லி நோக்கி வரத் தொடங்கியபொழுது, அவர்களைத் தடுப்பதற்காக முள்வேலி அமைத்து, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுவதுதான் பதிலா? இதில் 6 விவசாயிகள் பலியாகி இருக்கின்றனர்.
இதற்கு முன் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்த லில் பா.ஜ.க. எத்தனை சதவிகித வாக்குகளை வாங்கி யிருக்கிறது தெரியுமா? 37 சதவிகித வாக்குகள்தான். மீதமுள்ள 63 சதவிகித வாக்குகள் அவர்களுக்கு எதி ராகத்தான் இருக்கிறது. பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சிக்கும் வாக்கு வித்தியாசம் மிக மிகக் குறைவுதான்.
இப்பொழுது எதிர்க்கட்சிகள் அத்தனையும் ஒன்றாக இணைந்துவிட்ட பிறகு, மோடிக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது, இதைத் தாண்டி அவரால் வெற்றி பெற முடியாது என்பது.
இருந்தாலும், பிரச்சாரத்தினால் எதையாவது செய்ய முடியுமா? என்பதற்காக, ‘கோயபல்ஸ்’ பிரச்சாரம் போன்று அவர் செய்து பார்க்கிறார், அதனால்தான் இந்தத் தடுமாற்றம் அவருக்கு.

400-க்கும் மேற்பட்ட இடங்களில்
இந்தியா கூட்டணி வெற்றி பெறும்!

செய்தியாளர்: இந்தியா கூட்டணி எத்தனை இடங் களைப் பிடிக்கும்?
தமிழர் தலைவர்: எத்தனை இடங்கள் என்றால், 400 இடங்களுக்குமேல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
காரணம் என்னவென்றால், மக்கள் ஆதரவு இருப் பதினால்தான்!
ஆருடம் சொல்லவில்லை. ஆலமரத்து ஜோசியர் அல்ல நாங்கள் – ஜோதிடத்தை நம்புவர்கள் அல்ல நாங்கள். அறிவுப்பூர்வமாக இதனைச் சொல்கிறோம்.
காஷ்மீரில், மூன்று எதிர்க்கட்சிகளும் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். உத்தரப்பிரதேசத்திலும் அப்படித்தான்.
இப்பொழுது நவீன முறையை பா.ஜ.க.வினர் கையாளுகிறார்கள்; அது என்னவென்றால், வெற்றி பெற்று வந்தவர்களை நாம் விலைக்கு வாங்கலாமா? என்று நினைக்கிறார்கள்.
வெற்றி பெற்றவர்கள், வருவார்கள் என்று நினைத்துத்தான் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வரமாட்டார்கள் என்பது தெளிவு.
இதேபோன்று வாஜ்பேயி, அத்வானியும் இரண்டாவது முறை தாண்டி வரக்கூடிய சூழ்நிலையில் என்ன சொன்னார்கள் என்றால், ”இந்தியா ஒளிர்கிறது”, ”இந்தியா ஒளிர்கிறது” என்று சொல்லி பிரச்சாரம் செய்தார்கள். அதேபோன்றுதான் இன்றைக்கும் பா.ஜ.க.வினர் பிரச்சாரம் செய்கிறார்கள்.
நாங்கள் சொல்வது அறிவுப்பூர்வமான கணக்கு – அரசியல் கணக்கு!
ஆனால், அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. நான் சொல்வது அறிவுப்பூர்வமான கணக்கு – அரசியல் கணக்கு. அரசியலுக்கு அப்பாற்பட்ட நாங்கள் உணர்ச்சிப்பூர்வமாக இல்லாமல், ஆசாபாசங்கள் இல்லாமல் கணக்குப் போட்டுச் சொல்கிறோம்.
வடகிழக்குப் பகுதி, தென்னாட்டில் அவர்களுக்குக் கதவு சாத்தி நீண்ட நாள்கள் ஆயிற்று. அதனை பிரதமர் மோடியே ஒப்புக்கொண்டார்.

தென்னிந்தியாவில் பா.ஜ.க.விற்குக் கதவு சாத்தப்பட்டு விட்டது!

ஆந்திராவில் போக முடியவில்லை; தெலங்கானாவில் உள்ளே உழைய முடியவில்லை. கேரளாவில் முடியவில்லை; கருநாடகாவில் தோல்வியைத் தழுவினார்கள். தமிழ்நாடு என்பது எழுதப்பட்ட சுவரெழுத்து. ஆகவே, அதைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை.
எனவேதான், தென்னிந்தியாவில் பா.ஜ.க.விற்குக் கதவு சாத்தப்பட்டு விட்டது.
இதனால், அவருக்கு ஏற்பட்ட ஆத்திரம் எந்த அளவிற்குப் போயிருக்கிறது என்றால், மேடையில் அமர்ந்திருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரையோ, மாநில அமைச்சர்களின் பெயரையோ கூட அவர் சொல்வதற்குத் தயாராக இல்லை.

ஆத்திரம், அறிவுக்குத் தடையாக இருக்கிறது!

குறைந்தபட்ச அரசியல் நாகரிகம் என்னவென்றால், மேடையில் இருந்தவர் தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர். அந்தத் துறையின் மாநில அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரின் பெயரை சொல்லவேண்டும். ஆனால், பிரதமர் மோடி சொல்லவில்லை. மற்ற நேரங்களில் மாநில அமைச்சர்களின் பெயரைச் சொல்லியிருக்கிறார். அவரின் ஆத்திரம், அறிவுக்குத் தடையாக இருக்கிறது.
ஆகவே, எந்த அளவிற்கு அவர் நிலை தடுமாறிப் போயிருக்கிறார் இந்தப் பயணத்தில் என்பதற்கு, இவையெல்லாம் சான்றாவணங்கள். இவையெல்லாம் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்.
கடைசியாக அவர்கள் திரிசூலத்தை நம்பியிருக்கிறார்கள். திரிசூலத்தில் ஒரு முனை – சி.பி.அய்.; இரண்டாவது முனை – வருமான வரித் துறை; மூன்றாவது முனை – அமலாக்கத் துறை.
நேற்றுகூட அகிலேஷ் யாதவ்மீது சி.பி.அய். விசாரணைக்கான சம்மன்.

அதேபோன்று, டில்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பப்படுகிறது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்படுகிறது.
ஆகவேதான், திரிசூலத்தை நம்பி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.
ஒன்றிய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.
நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பேரவைத் துணைத் தலைவரே இல்லாத ஒரு ஜனநாயகத்தை உலகத்திலேயே மோடி அரசுதான் நடத்தியிருக்கிறது.
ஆகவே, ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொடுமைகளை இன்றைக்கு சாதாரண மக்களும் உணர்ந்திருக்கிறார்கள்; விவசாயிகளும் உணர்ந்திருக்கிறார்கள்; அறிவு ஜீவிகளாக இருக்கக்கூடியவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

கடைசி சம்மன் யாருக்கு? என்பதுதான்மிகவும் முக்கியம்!

இதனால், இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாகி இருப்பதால்தான், பிரதமர் மோடிக்குக் கோபமும், ஆத்திரம் எழுகிறது. அதனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலருக்கு சம்மன் வரும். ஆனால், கடைசி சம்மன் யாருக்கு என்பதுதான் மிகவும் முக்கியம்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் ஆட்சி என்று சொன்ன மோடி, திடீரென்று இன்றைக்கு எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசுவது ஏன்?

வியாழன், 22 பிப்ரவரி, 2024

ஊன்றிப் படித்து, உண்மையை ஊரறியப் பரப்புங்கள்! தேர்தல் பத்திரச் சட்டம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

 



ஆளும் பா.ஜ.க.வுக்குச் சாதகமான ஒரு சார்பு பணந்திரட்டும் சட்டம்!
வெளிப்படைத்தன்மையற்றதும் – ஜனநாயகத்துக்கு விரோதமானதுமான தேர்தல் பத்திரச் சட்டம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!
மறுசீராய்வு உள்ளிட்ட முறையில் ‘புதிய முயற்சிகள்’ எடுக்க ஒன்றிய பி.ஜே.பி. அரசு முயன்றால், தக்க வகையில் அதை மக்கள் எதிர்கொள்ளவேண்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு துறையினரும் எதிர்ப்புத் தெரிவித்தும், அதனைப் பொருட்படுத்தாது ஒன்றிய பி.ஜே.பி. அரசால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரச் சட்டம் செல்லாது என்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது – மறு சீராய்வு மனு போன்ற முறையில் ஒன்றிய அரசு முயற்சிக்கக் கூடும் என்றும், அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை அமலில் இருந்து வருகின்றது.
பொதுவாழ்வில் ஊழல் ஒழிப்புப் பற்றி பலமுனை களில் பலராலும் பேசப்பட்டு வந்தாலும், அதன் ஊற்றுக்கண் நம் நாட்டுத் தேர்தல் முறையில்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
தனி நபர்களைவிட கம்பெனிகளின் நன்கொடை அவர்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்குக் கொடுக் கப்படுவதே பெரும் பங்கு ஆகும்!
எவரும் – எந்த கார்ப்பரேட் கம்பெனிகளும் பயனில்லாது நன்கொடை தரமாட்டார்கள்!
நம் நாட்டில் கிராமியப் பழமொழி ஒன்று – ‘‘ஆதாயம் இல்லாமல் அவர் ஆற்றோடு போவாரா?” என்பதே!
முன்பு அதிகபட்சமாக நன்கொடை ரூ.20 ஆயிரம் மட்டுமே என்ற விதி இருந்தது.
இதன்மூலம் ஜனநாயக ஆட்சி மறைமுகமாக கார்ப்பரேட் முதலாளிகளின் ஆட்சியாக மாறிடும் வாய்ப்பு உண்டு.

பொதுத்துறை நிறுவனங்கள்
தனியாருக்குத் தாரை வார்ப்பு
பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம்கூட தனியார் மயமாக்கி, அவற்றை தனியார் பெரும் முதலாளிகளுக்கு – மலிவான விலைக்கு விற்பனை செய்தோ அல்லது நீண்ட கால குத்தகை முறைமூலமோ, அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான பீடிகை களை – அதன் ஓர் அம்சமான சமதர்மத்தையே காணாமற் செய்யும் சூழ்நிலை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கண்கூடாகவே தெரிகிறது!
அத்தகையவர்களுக்குத் தாரை வார்ப்பதும், அவர்களிடமிருந்து ஏராளமான நன்கொடையை கட்சிக்கான நிதியாகப் பெறுவதற்கும் ஒரு வழிமுறை யாக முற்றிலும் வெளிப்படைத்தன்மை (Transparency) இல்லாத வகையில், தேர்தல் பத்திரச் சட்டம் நிறை வேற்றப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு அதிகபட்சமாக ஒரு கம்பெனியின் மொத்த வருவாயில் ஏழரை சதவிகிதம்தான் நன்கொடை வழங்கலாம் என்ற அளவீடு வரம்பு (Cap) முன்பு இருந்ததையும் நீக்கி, எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம் என்ற ஒரு புதுத் தேர்தல் நன்கொடை முறையை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.) அரசு 2017-2018 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கை யில் தேர்தல் பத்திரங்கள் திட்டம்மூலம் அறிமுகப் படுத்தியது.

ரிசர்வ் வங்கி உள்பட எதிர்ப்புத் தெரிவித்தும் – அவற்றைப் பொருட்படுத்தாத மோடி அரசு
அதற்கு வழிவகை செய்யும் வகையில்,
1. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934
2. மக்கள் பிரதித்துவச் சட்டம் 1951
3. வருமான வரித்துறைச் சட்டம் 1961
4. கம்பெனிகள் சட்டம் 2013
ஆகியவற்றை – அத்துறையினரேகூட பல மாறு பட்ட கருத்துகளைக் கூறியும், அவற்றைப் பொருட் படுத்தாது, இதற்கு வசதியாக பல திருத்தங்களைச் செய்து இந்தத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்களை வெளியிட்டு நன்கொடைப் பெறுவதை அமலாக்கி பல ஆயிரம் கோடிகள் குவிக்கப்பட்டன.

இந்தத் திட்டத்தின்படி, பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் ரூ.1000, ரூ.10,000, ஒரு லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை, நம் நாட்டைச் சேர்ந்த தனி நபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கி, தாங் கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கலாம்.
இதில் நிதி அளிக்கும் தனி நபர் அல்லது கார்ப்பரேட் கம்பெனி பெயர் உள்ளிட்ட எதுவும் இருக்காது.
இப்படி அளிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள், அதைப் பணமாக மாற்றிக் கொள்ள தங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்படி 15 நாள்களுக்குள் அந்தப் பத்திரத்தை மாற்றாவிட்டால், அத்தொகை பிரதமரின் பொது நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும்.

ஏற்கெனவே இருந்த விதிமுறைகள்
தூக்கி எறியப்பட்டுள்ளன!
முன்பிருந்த நன்கொடைக்கான உச்சவரம்பு ஏழரை சதவிகிதம் – லாபம் பெறும் நிறுவனமா – நட்டத்தில் இயங்கும் நிறுவனமா என்பதையெல்லாம் அலசி ஆராய வகை செய்த பழைய சட்ட நடைமுறையும் இதில் விடைபெற்றுக் கொண்டது!
ஒரே ஒரு நிபந்தனை – இந்த தேர்தல் பத்திரம் (Electoral Bonds) மூலம் பணம் நன்கொடை பெற அந்த அரசியல் கட்சி குறைந்தபட்சம் – நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் ஒரே ஒரு சதவிகிதம் வாக்குகளையாவது பெற்ற கட்சியாக இருக்கவேண்டும்.
இதற்கு வழிவகை செய்யும் இந்த சட்டத் திருத்தங் கள் அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளுக்கும், வெளிப்படை தன்மைக்கும் முற்றிலும் விரோதமாக உள்ளதால், இவற்றைச் செல்லாததாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப் பட்டன!

ஏழரை சதவிகிதம்வரை நன்கொடை வழங்கலாம் என்ற வரைமுறையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது!
எவ்வளவு வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங் கள்மூலம் நன்கொடையைத் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்குத் தரலாம் என்பதைப்போலவே, இன்னொரு பெரிய திருத்தம், முந்தைய சட்ட நடைமுறையில் வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தர முடியாது என்ற அந்தத் தடையும் நீக்கப்பட்டு, அவர்களும் தாராளமாக, ஏராளமாக நன்கொடை தரலாம் என்ற புதிய திருத்தம் அதில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது!
முன்பு சுட்டிக்காட்டியதுபோல, நிதியமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) போன்றவை இத்திட்டத்திற்கு எதிரான கருத்துகளை மோடி அரசுக்கு எடுத்துச் சொன் னதையும்தான் தேர்தல் ஆணையமும், அதன் வெளிப் படைத்தன்மையைப் பறிப்பது இத்திட்டம் என்று கூறி, தனது ஆட்சேபனைகளை எடுத்து வைக்கத் தவறவில்லை.

மூன்று அமைப்புகள்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
நொடித்துப்போன கம்பெனிகள் கூட அரசின் சலுகையைப் பெறுவதற்கு, கருப்புப் பணம் செலவிட்டு, தேர்தல் பத்திரத்தை வாங்கி, நன்கொடை கொடுக்க வழி ஏற்பட்டால், அதன் விளைவுகள் மோசமாகும் என்று வருமான வரித்துறையும் எச்சரித்தது!
இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது மோடி அரசு அவற்றை நிராகரித்தது.
இதனால்தான் இந்தத் தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக,
1. ஜனநாயக சீர்திருத்தச் சங்கம்
2. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
3. காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்கூர் ஆகியோர் தனித்தனியே வழக்குப் போட்டனர், உச்சநீதிமன்றத்தில்.
அதன் விளைவே – தலைமை நீதிபதி டி.ஒய்.சந் திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,
பி.ஆர்.கவாய், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய அய்வர் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரித்து, ஒருமித்த கருத்துடன், இந்தத் தேர்தல் பத்திரம்மூலம் நன்கொடை பெற்றுள்ளது செல்லாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு Landmark  தீர்ப்பைத் தந்துள்ளனர்!

252 பக்கங்களைக் கொண்ட
உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு!
நான்கு நீதிபதிகள் கையொப்பமிட்ட ஒரு தீர்ப்பு வாசகங்களோடு, தனியே கூடுதலாக சில வாதங்களை யும் சுட்டிக்காட்டிட, தனியே ஒரு நீதிபதியும் எழுதி யுள்ள இந்த இரு பகுதித் தீர்ப்புகளும் சேர்ந்து 252 பக்கங்களில் விரிவாகப் பல்வேறு தரப்பின் வாதங் களையும், ஆணைகளையும் விவரித்து, தீர்ப்பினை வழங்கியுள்ளனர். (இறுதியில் அதைத் தருவோம்).
அதற்குமுன் வாசகர்கள் அறியவேண்டிய முக்கியத் தகவல்கள் நன்கொடைகள்பற்றி (ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் தந்துள்ள விவரங்கள்).
மார்ச் 18 – ஜனவரி 2024 வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனையின் வாயிலாக மொத்தம் 16,518.11 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது!
பத்திரிகைச் செய்திகளின்படி இந்தப் பட்டியலில் முதல் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சி
1. பா.ஜ.க. – 6,565 கோடி ரூபாய் பத்திரங்கள்
2. காங்கிரஸ் – 1,547 கோடி ரூபாய் பத்திரங்கள்
3. திரிணாமுல் காங்கிரஸ் – 823 கோடி ரூபாய் பத்திரங்கள்
4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 367 கோடி ரூபாய் பத்திரங்கள்
5. தேசியவாத காங்கிரஸ் – 231 கோடி ரூபாய் பத்திரங்கள்.
(ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தாங்கள் பணம் பெறவில்லை என்று மறுத்துள்ளது).
கடந்த 2022 – 2023 ஆம் நிதியாண்டில் மட்டும், பா.ஜ.க.வின் மொத்த வருமானம் 2,360 கோடி ரூபாய். இதில் தேர்தல் பத்திரங்கள்மூலம் ரூ.1,300 கோடி.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக வந்த நிதியில், பாதிக்கும் மேற்பட்டவை கார்ப்பரேட் நிறுவனங்களி லிருந்து கிடைத்துள்ளன.
(நடப்பு நிதியாண்டிற்கான கட்சி வாரியான தரவு தணிக்கை அறிக்கை பின்னரே வரும்).
இந்தத் தேர்தல் பத்திர திட்டத்தில் வெளிப்படைத் தன்மை அறவே இல்லை. இது ஜனநாயகத்திற்கு மரண அடியாகும்.
இது எப்படி என்றால்,
வங்கி காசோலை கொடுத்து, தேர்தல் பத்திரங்கள் வாங்கிய ஒருவரிடமிருந்து பணம் கொடுத்து அதை வேறு ஒருவர் வாங்கலாம். அவர்மூலம் அரசியல் கட்சிக்குச் செல்லலாம். இதனால் நன்கொடை கொடுத்தவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியாது!

நன்கொடை விவரங்களை ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வெளியிட வலியுறுத்தல்
1. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை கொடுத்தோர்பற்றிய விவரங்களைத் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
2. ஸ்டேட் பேங்க் உடனடியாக, தேர்தல் பத்திரங்கள் விற்பனையை நிறுத்தவேண்டும்.
3. இதுவரை தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர் அவற்றின் மதிப்பு, அவற்றை பெற்ற கட்சிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் 2024, மார்ச் 3 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்குக் கொடுக்க வேண்டும்.
4. இதுவரை கட்சிகள் அந்தத் தேர்தல் பத்திரங்களைப் பணமாக மாற்றாமல் வைத்திருந்தால், அந்தக் கட்சிகள் அவற்றை ஸ்டேட் பேங்கில் ஒப்படைக்கவேண்டும்.
5. நன்கொடை அளித்தவர்களின் வங்கிக் கணக்கில், அந்தப் பத்திரங்களின் விலையை ஸ்டேட் பேங்க் திருப்பி செலுத்தவேண்டும்.
இந்தத் தேர்தல் பத்திர முறை – கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கே என்ற முகமூடி போட்ட மோடி அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது!
6. வாக்காளர்கள் சரியான முடிவு எடுப்பதற்கு வசதி யாக கட்சிகள் பெறும் நன்கொடை குறித்தும், நன்கொடை வழங்கியவர்கள் குறித்தும் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும்.
இதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19(1) ஏ பிரிவு உறுதி செய்கிறது.

நன்கொடை கொடுத்தது யார்? என்ற வெளிப்படைத் தன்மைக்கே இடமில்லை!
தேர்தல் பத்திரத்தில் யார் நன்கொடை அளிக்கிறார் என்ற தகவல் இடம்பெறாததால், தகவல் தெரிந்து கொள்ளும் (RTI) உரிமை மக்களுக்கு மறுக்கப்படுகிறது! அதனால் இந்தத் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நன்கொடைகளுக்கு வரவு- செலவு காட்டத்
தேவையில்லையாம்!
‘‘விற்பனையான தேர்தல் பத்திரங்களில் பெரும்பாலா னவை அதிகபட்ச தொகையாக ஒரு கோடி ரூபாய்க்கு உரியவை. பிரதிபலன் இல்லாமல் நன்கொடைகளை எதற்கு அரசியல் கட்சிகளுக்குத் தரப் போகிறார்கள்? இந்த ரகசியம் காக்கப்படுவதால், இந்தத் தேர்தல் பத்திரம் ஆளுங்கட்சிக்கே எப்போதும் சாதகமாக இருக்கும்.
அடுத்து மிகப்பெரிய நிறுவனங்கள் (கார்ப்பரேட்) தாங்கள் அளிக்கும் நன்கொடை குறித்த தகவல்களை தங்களுடைய வரவு – செலவுக் கணக்கில்கூட தெரிவிக்க வேண்டியதில்லை என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஏற்புடையதல்ல” என்றும் நிராகரித்துள்ளது உச்சநீதி மன்றம்!
‘‘அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு சட்டத்தையும், ஒரு நடைமுறையையும் தவறாகப் பயன்படுத்துவதை, அரசமைப்புச் சட்டம் ஒருபோதும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது” என்று தீர்ப்பில் ஆணி அடித்ததுபோல் கூறியுள்ளது உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஆணைகளில்.

திசைதிருப்ப வேறு வகைகளில்
ஒன்றிய அரசு முயற்சிக்கக் கூடும்!
நமது ஜனநாயகம் இதன்மூலம் மிகப்பெரிய ஆபத்திலிருந்து மீளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது நமது நம்பிக்கை என்றாலும், இதை திசை திருப்பும் வித்தைகளையும் யோசித்து, மறுசீராய்வு அல்லது அவசரச் சட்டம் என்ற வேறு பல ‘புதிய முயற்சிகள்’ வரவும் வாய்ப்பு உண்டு – ஆளுங்கட்சி எடுக்கவும்கூடும்!
மக்களுக்கு இது விளங்கும் வகையில் தீர்ப்பளித்த மாண்பமை நீதிபதிகளுக்கும், வழக்குப் போட்டு நீதி கேட்டுப் பெற்ற ஜனநாயகக் காவலர்களுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டும், வாழ்த்தும்!
இது இந்த 10 ஆண்டுகளில் பனிப் பாறைகளின் முனை மட்டும்தான் – (Tip of the iceberg).
மற்ற துறைகள்பற்றியும் வெளியே வரவேண்டும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
20-2-2024

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

2024 – மோடிக்குப் பதிலாகட்டும்!


நட்டா ஜி! படிங்க ஜி!ஊசி மிளகாய்(வாரிசு)


வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

ஈரோடு மாவட்டத்தில் 80 ஆயிரத்து 567 எக்டேரில் தந்தை பெரியார் வன உயிரின சரணாலயம் தமிழ்நாடு அரசு ஆணை



விடுதலை நாளேடு,
Published February 2, 2024

சென்னை, பிப்.2 ஈரோடு மாவட் டத்தில் 80,567 எக்டேர் பரப்பில் ‘தந்தை பெரியார்வன உயிரின சரணாலயம்’ உதயமானது. அது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேர வையில் கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் “ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபி செட்டிபாளையம் வட்டங் களைச் சேர்ந்த 80,567 எக்டேர் வனப் பரப்பில் ‘தந்தை பெரியார் வன விலங்கு சரணாலயம்’ என்ற புதிய சரணாலயம் அமைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தலைமை வன உயிரினக் காப்பாளர் அரசுக்குஅனுப்பிய கருத்துரு பரிசீலிக்கப்பட்டு, கடந்த ஜன. 30ஆ-ம் தேதி அந்தியூர், கோபி வட்டங்களில் உள்ள காப்புக் காடுகளை ‘தந்தை பெரியார் வன உயிரின சரணாலயம்’ என அரசு அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட் டில் உள்ள வன உயிரின சரணா லயங்களின் எண் ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:
வட பர்கூர், தெற்கு பர்கூர், தாமரைக்கரை, எண்ணமங் கலம், நகலூர் காப்புக்காடுகளைச் சேர்ந்த 80,567.76 எக்டேர் பரப்பை வன உயிரின சரணா லயமாக அறிவிக்குமாறு வனத் துறை கருத்து அனுப்பியுள்ளது.

இந்த காப்புக்காடுகள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கருநாடக மாநிலத்தில் உள்ள மலை மாதேஸ்வரா வன உயிரின சரணாலயம் மற்றும் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளன. இவற்றை இணைக்கும்போது முக்கிய வழித்தடம் உருவாகி, புலிகளின் வாழ்விடப் பகுதியாக அமையும். ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் உள்ள காப்புக்காடு பகுதிகளில் பல்வேறு தாவ ரங்கள், வன விலங்குகள் நிறைந்துள்ளன.
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மற்றும் கருநாடக மாநிலத்தில் உள்ள காவிரி வனப் பகுதிகளுடன் இணைக் கும் முக்கியப் பகுதியான இந்த இடத்தைப் பாதுகாப்பது, சந்தன மரங்களின் மீள் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றும்.
இந்த காப்புக்காடு 70 வகையான வண்ணத்துப் பூச்சி இனங்கள், 35 வகை மீன் இனங்கள், 10 வகை நீர்நிலவாழ் இனங்கள், 25வகை ஊர்வன இனங்கள், நிலத்தில் வாழும் 5 வகை முதுகெலும்பில்லா விலங் குகள், 233 வகை பறவை இனங்கள், 48 வகை பாலூட்டி இனங்களை கொண்ட பல்லு யிர் பரவல் பகுதியாகும்.
முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், மனித-வன உயிரினமோதலைத் தணிக்கவும் இதை வன உயிரினச் சரணாலய மாக நிர்வகிக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே, மேற் கூறிய பகுதிகள் தந்தை பெரியார் வன உயிரினசரணாலயமாக அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி’ தலையங்கத்திற்கு மறுப்பு: தவமிருந்தான் சூத்திரன் சம்பூகன் என்று வெட்டிக் கொன்றவன்தானே ராமன் – கதைப்படி?மீண்டும் அந்த ‘‘வருணாசிரம ராமராஜ்ஜியம்” வரவேண்டுமா?- கி வீரமணி தினமணிக்கு மறுப்பு


இன்றைய கால கட்டத்தில் மாணவர்களின் உரிமையும், கடமையும்’ என்ற கருத்தரங்கத்தில் மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சி முழக்கம்!


விடுதலை நாளேடு,
Published February 2, 2024

நிறைவாக தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை

சென்னை,பிப்.2- ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சென்னையில் நேற்று (1.2.2024) நடைபெற்ற ஊர்வலம், கண்டனப்போராட்டத்தில் திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள், பல்வேறு மாணவர் அமைப்பினர் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதுமிருந்து திராவிடர் கழகப்பொறுப்பாளர்கள் ஒத்துழைப் புடன், 22 கழக மாவட்டங்களிலிருந்து கழக மாணவர்கள் சென்னையில் திரண்டனர். நேற்று (1.2.2024) காலை பல்வேறு மாணவர் அமைப்பினர்களுடன் இணைந்து புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான ஊர்வலம், கண்டன போராட்டத்தில் பங்கேற்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுக மாணவரணி செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர் பாண்டியன் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினர் பெருந் திரளாக கலந்துகொண்டனர்.
திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, மன்னார்குடி, கோவை, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தென்காசி, சென்னை, அரியலூர், செய்யாறு, ஆத்தூர், கிருஷ்ணகிரி, கோபிசெட்டிப்பாளையம், இராணிப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தோழர்கள் திராவிட மாணவர் கழகம் சார்பில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் திடலில்…
திராவிட மாணவர் கழகம் சார்பில் இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் கடமையும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நேற்று (1.2.2024) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன் தலை மையில் நடைபெற்றது. மாணவர் கழக மாநில துணை செயலாளர் செ.பெ.தொண்டறம் வரவேற்றார். திருவாரூர் நர்மதா இணைப்புரை வழங்கினார்.
கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் மாணவர் கழக பொறுப்பாளர்கள் உரையாற் றினார்கள்.
இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் உரிமையும் கடமையும் சமூக தளத்தில்…எனும் தலைப்பில் கோவை மேட்டுப்பாளையம் அன்புமதி, அரசியல் தளத்தில் … தலைப்பில் .ஆவடி மாவட்ட மாணவர்கழகத் தலைவர் அறிவுமதி, பண்பாட்டுத்தளத்தில்… எனும் தலைப்பில் சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினார்கள்.
மணிமொழி, சிவபாரதி, ராகுல், இனியன், அறிவுச்சுடர் உள்ளிட்ட மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்க உரையாற்றினார். துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாக சிறப்புரை ஆற்றினார்.

சமூக தளத்தில்…
சமூக தளத்தில்… தலைப்பில் மேட்டுப் பாளையம் இரா.அன்புமதி உரையில்,
கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை உரிமைகளில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து அவர்களையும் முன்னேறச் செய்ய வேண்டும். சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்துத் தளங்களிலும் மனித சமுதாயத்தை முன்னேற்றமடையச் செய்வதுதான் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும். 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பிஜேபி அரசு கல்வி, வேலைவாய்ப்புகளை அடியோடு அடித்து நொறுக்குவதற்கான செயல் திட்டங்களை சதித்திட்டங்களைத் தீட்டிவருகிறது.
‘சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது, சூத்திரன் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும், படிப் பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்’ என்று மனுதர்மத்தில் சொல்லி, இதையெல்லாம் செய்தனர். அதன் பிறகு படிப்படியாக கல்வியைக்கொடுத்தது திராவிடர் இயக்கமும், நீதிக்கட்சியும்தான். ஆனால், இன்றைக்கு மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்துகொண்டு மனுதர்மத்தை நிலைநாட்டுவதற்கான வேலைகளை செய்து வருகின்றனர். ‘நீட்’, புதிய கல்விக்கொள்கை, விஸ்வகர்மா யோஜனா பெயரால் மாணவர் களின் முன்னேற்றத்தைத் தடுத்து சமூக வளர்ச்சியை முடக்குவதற்கானசெயலை இந்த ஒன்றிய பிஜேபி அரசு செய்து வருகிறது. ‘நீட்’ என்கிற பெயரால் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து வருகிறது. மாணவர்களின் கல்வி உரிமைக்காக அன்று முதல் இன்றும் திராவிடர் இயக்கம்தான் போராடி வருகிறது. நம்மை வழிநடத்தி வருபவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான்.

அரசியல் தளத்தில்…
அரசியல் தளத்தில்…தலைப்பில் ஆவடி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சி.அறிவுமதி உரையில்,
பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவர்கள், அரசியல் என்றால் பாலிடிக்ஸ் எனக்குப் பிடிக் காது என்று பெருமையாக சொல்கிற காலம். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய காலம் என்பது ஒவ்வொருத்தரையும் அரசியல் படுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக் கிறோம். 18 வயது நிரம்பியவர்களாக, படித்தவர்களாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் இன்று கல்வி அறிவு பெற்றவர்களின் விகிதம் 50 விழுக்காடாக இருக்கிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்குமுன்பு பார்த்தால், 1901இல் ஆங்கிலேய அரசு கணக்கெடுப்பில் தமிழ் நாட்டில் படித்தவர்கள் எண்ணக்கை ஒரு சதவீதத்துக்கும் கீழேதான் இருந்தது. அப்படியென்றால் கிட்டதட்ட 99 சதவீதம்பேர் படிக்காமல் இருந்துள்ளனர். அதற்குக் காரணம் படிக்கும் உரிமையைக்கொடுக்காமல் இருந்த காலம். ஆனால், இன்றைக்கு நிலைமை நாம் எல்லாரும் படித்திருக்கிறோம். நாம் பெற்றுள்ள இடஒதுக்கீடு, சமூகப்போராட்டங்களால் நம் எல்லோரும் படித்திருக்கிறோம்.
அப்படி இருக்கும் நம்மை திரும்ப பின்னோக்கி இழுத்துச்செல்கிறது பாசிச பாஜக அரசு.அதை நாம் முறியடிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார்க் கூட்டம் மாணவர் களிடையே அவர்களுடைய சித்தாந்தங்களை திணித்து வருகிறார்கள். நம்முடைய சித்தாந்தம் திராவிட சித்தாந்தம். அவர்களுடைய சித் தாந்தம் ஆரியசித்தாந்தம்.
திராவிடத்துக்கு எதிரானது ஆரியம். எல் லோருக்கும் கல்வி இன்றியமையாததுஎன்பது திராவிடம். சூத்திரர்- பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு கல்வி கூடாது என்பது ஆரியம்.
அதையெல்லாம் நாம் மீட்டுக்கொண்டு வருகிற வேளையில், அவர்கள் ஹிந்துத்துவா, ஹிந்துராஜ்ஜியம் என்ற மதவெறியுடன் நம்மைத் திரும்பவும் பழைய நிலைக்கே அனுப்பப்பார்க்கிறார்கள். அரசியல் மாற்றத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

பண்பாட்டுத்தளத்தில்…
சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் உரையில், ஆரிய பண்பாட்டுப்படையெடுப்பாலேயே தீபாவளி, தமிழே இல்லாத ஆண்டுகளை தமிழ்ப்புத்தாண்டு என்று ஆரியப் பண்பாட்டைத் திணித்து வருகிறார்கள். தமிழில் பெயர் சூட்ட பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிற நிலையில் நாம் இருக்கிறோம். நம்முடைய பண்பாட்டை மீட்டெடுக்க கழகத்தில் நாம் பயணிக்க வேண்டும். நம் எதிரிகள் என்றால் மனுதர்மம், ராஜாஜி, இன்று பிஜேபி மோடியாக இருக்கிறது என்றால், சித்தாந்த எதிரியாக இருக்கிறார்கள். குலக் கல்வியைக் கண்டு கொதித்தெழுந்த தந்தை பெரியார் அதனை முறியடித்து வெற்றி பெற்றார். கத்தி வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெட்ரோலையும், தீப்பந்தத்தையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள் நான் சொல்லும்போது அக்கிரகாரத்தைக் கொளுத்துங்கள் என்றார் பெரியார். தேவாசுரப்போராட்டம் என்றார் ராஜாஜி. ஆரிய – திராவிடப் போராட்டம் என்று சொன்ன தந்தைபெரியார் வென்றார். குலத்தொழிலை வலியுறுத்திச் சொல்கின்ற ஆரியம் நாம் படிக்கக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறது. ஸநாதனம், நீட், புதிய கல்விக்கொள்கை, விஸ்கர்ம யோஜனா என்று இன்றைக்கும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரிய-திராவிடப்போராட்டத்தில் நாம் வென்றெடுக்க தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் பணியாற்ற வேண்டும். அதன் மூலம் கல்வி, பண்பாட்டை மீட்டெடுக்க வேண்டும்.

பொதுச்செயலாளர்
வீ.அன்புராஜ் உரையில்
பொழுதுபோக்குகின்றவர்கள் மத்தியில் கல்வி உரிமை காப்போம், புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம், ஒன்றிய பாஜக அரசை நிராகரிப்போம் என்று சுமார் 22 மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் வந்துள் ளீர்கள். மாணவர்கள், பெற்றோர்கள், கழகப்பொறுபபாளர்களுக்கு பாராட்டு. அடுத்த தலைமுறைமீது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. திராவிடர் கழகம் எனும் முத்திரை பதித்துள்ளீர்கள். கழகத்தைத் தவிர வேறு எங்கும் இதுபோன்று களத்திற்கே செல்லும் வாய்ப்பு, பயிற்சி அளிக்கப்படுவதில்லை. நம்முடைய இயக்கத்தில்தான் 38 இடங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளது. 2761 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். ஆண்கள் 1599 பேர். பெண்கள் 1162 பேர் புதிதாக இயக்கத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
பலகைகளில் எழுதுவது, சுவர் எழுத்துப் பிரச்சாரங்கள் என்பது கழகத்தால் தொடர்ச் சியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த பிரச் சாரங்கள் தற்பொது தொழில்நுட்பத்துடன் இணையத்தில் சமூக ஊடகங்களிலும் தொடர்கின்றன.
தற்பொழுது 13 லட்சத்துக்கும் மேற் பட்டவர்கள் புதிய வாக்காளர்களாக உள்ளனர். அவர்களிடம் இந்த உணர்வைக் கொண்டு செல்ல வேண்டும். ‘விடுதலை’ செய்திகளை எடுத்து பரப்பவேண்டும். அமைதிப் புரட்சியாக செயல்பட வேண்டும்.
‘நீட்’ குழப்பங்கள், படிக்கும் போதே பாதியில் இடையில் நின்றுபோகிறவர்கள் என 10 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசால் என்னவெல்லாம் நடந்துள்ளது என்று அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்.
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையைத் தொடர்ந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவாக சிறப்புரை ஆற்றினார்.
மாணவர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோ ருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப் பட்டது.
பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் வி.தங்கமணி நன்றி கூறினார்.