பாட திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாட திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 மே, 2021

கடல் கடந்து நச்சைப்பரப்பும் மார்வாடி ஆதரவு இந்து அமைப்பு


பள்ளிப் பாடங்களில் பெரியார் குறித்த பாடம் கூடாது.  பொங்கல் இந்துக்களுக்கான உற்சவம். அதை கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் கொண்டாடுவதாக குறிப்பிடுவது குறித்த பாடங்களை மலேசிய அரசாங்கம் நிறுத்தவேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் அறிவித்துள்ளது.

மலேசிய இந்துச் சங்கம் என்ற ஒரு அமைப்பு அங்கு பெருவணிகத்தில் நுழைந்திருக்கும் மார்வாடிகளின் நிதி உதவிக்காக அங்கிருக்கும் இந்து அமைப்புகள் சிலரோடு மதவாதத்தை பரப்பிக்கொண்டு இருக்கிறது,

கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி மலேசிய இந்து சங்கம், அதிகாரபூர்வமாக மலேசியத் தமிழ் பத்திரிக்கைகளுக்கு அறிக்கை அனுப்பியது.

அதில் தமிழ்ப் பள்ளிகளில் இந்து சமயப் புறக்கணிப்பும், திராவிட கொள்கையைப் பரப்பும் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும், கல்வி அமைச்சகத்தின் பாடத்திட்டம் பிரிவின் சில அதிகாரிகள் பள்ளிகளில் திராவிட கொள்கைகளைப் பரப்புவதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் கூறியிருந்தது மலேசிய இந்து சங்கம். அதோடு, பள்ளி பாட நூலில் தை மாத முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்ற கருத்து திணிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மறைமுகமாக பள்ளிப்பாட புத்தகங்களில் பெரியாரின் கொள்கைகளும் அவரைப்பற்றிய செய்தி திணிப்பும் மேலோங்கி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அச்சங்கம் மாக கடுமையாக எச்சரித்திருந்தது,

இந்து சங்கத்தின் இந்தப் பத்திரிக்கைச் செய்தி, மலேசியத் தமிழ் மக்களிடம் அதிர்ச்சியையும் சினத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து பத்திரிக்கையிலும், சமூக ஊடகங்களிலும் இது தொடர்பான எதிர்வினைகளை குறிப்பாக, திராவிடக் கொள்கையைப் பின்பற்றுபவர்களும், பெரியார் ஆதரவாளர்களும், தமிழ்ப் பற்றாளர்களும் இந்து சங்கத்தின் இந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றிவருகிறார்கள்.

மலேசிய இந்து சங்கத்தின் தலைவரான மோகன் ஷான் வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்துக்கு, மலேசிய இந்தியர்களின் கட்சியான ம.இ.கா தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. பொங்கல் என்பது பண்பாட்டு விழா என்றும், அதற்கு மதச் சாயம் பூச வேண்டாம் என்றும் அந்தக் கட்சி மலேசிய இந்து சங்கத்திடம் வலியுறுத்தியது. மேலும், இந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்தக் கட்சி கூறியிருந்தது.

"தமிழருக்கான புத்தாண்டு தை முதல் நாள்தான். தைப்பொங்கல் இந்து மதத்தவர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையல்ல. முஸ்லிம் தமிழர்களும், கிறிஸ்தவத் தமிழர்களும் கொண்டாடும் உழவர் திருநாள். அதற்கு மதச் சாயத்தைப் பூச வேண்டாம்' ' என சமூக ஊடகங்களில் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைக்கொண்டு, மலேசிய நாட்டில் தமிழையும் தமிழனையும் ஒருபோதும் வெல்ல முடியாது என்று வெளிப்படையான கோபத்தையும் பலர் பதிவு செய்துவருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மோகன் ஷான் மற்றுமோர் அறிக்கையைப் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதில் சித்திரை முதல் தேதிதான் தமிழர் புத்தாண்டு, அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. தமது இந்தக் கூற்றோடு இந்து மதம் சார்ந்த 13 இயக்கங்கங்கள் உடன்பட்டிருப்பதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். தவிர, தமது சங்கம் பொங்கலுக்கு மதச் சாயம் பூசுகிறது என்று சிலர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது'  என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் மோகன் ஷானின் இந்த மறு அறிக்கையால் இந்தச் சர்ச்சை அங்கு மேலும் நீடிக்கிறது. இதன் இந்த விவாதம் தீவிரமடைந்துவருகிறது.

மலேசிய இந்து சங்கத்துக்கு நிலையான ஒரு கருத்து இல்லை என்று மோகன் ஷானின் கருத்தை எதிர்ப்பவர்கள் பதிவு செய்துவருகிறார்கள் சில ஆண்டுகள் வரையில் அரசு ஆதரவின் கீழ் ‘ஒரே மலேசியா' எனும் கோட்பாட்டின் கீழ் பொங்கல் விழாவை மதம் இனம் சாராமல் மலாய்க்காரர்களும் தமிழர்களோடு சேர்ந்து கொண்டாடினர்.

“2018ஆம் ஆண்டில், பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை, பள்ளிகளில் அதைச் செய்ய அனுமதிக்கக் கூடாது; மலாய் மாணவர்கள் பொங்கல் பண்டிகையில் ஈடுபடக் கூடாது” என்ற மலாய் அதிகாரி ஒருவர்

தெரிவித்த கருத்துக்கு இதே இந்து சங்கத்தைச் சேர்ந்த மோகன் ஷான், பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை அல்ல, அது பண்பாட்டு விழா என்று அறிக்கைவிட்டிருந்தார். தான் கூறிய கூற்றுக்கு எதிராக இப்போது அவரே மாற்றிப் பேசுகிறார் என்று பலர் விமர்சிக்கின்றனர்.

மலேசிய அரசு பாடத்திட்ட வழக்கப்படி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய பாடப் புத்தகம் தயாரிக்கப்படும். அதன்படி கடந்த 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகத்தில், தமிழர்களுக்குப் பங்காற்றிய மூன்று அறிஞர்கள் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அதில் 10 வரிகளில் பெரியார் குறித்த அறிமுகம் எழுதப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தப் பாடப்புத்தகம் காலாவதியாகும் நிலையில், பெரியார் குறித்த தகவல்கள் பாடப் புத்தகத்தில் இருப்பது சமயத்துக்கு எதிரானது என்று மலேசிய இந்து சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது, இந்த நிலைப்பாடு தொடர்பாக மலேசியத் தமிழர்களில் ஒரு பகுதியினர் இந்து சங்கத்துக்கு எதிரான கருத்தைத் தெரிவித்துவருகிறார்கள். பொங்கல் தமிழர் திருநாள், அது தமிழர்களின் புத்தாண்டு என்று தொடர்ந்து பலர் குரல் எழுப்பிவருகின்றனர். இந்த எதிர்ப்புக் குரல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

"இந்து சங்கம் குற்றம் சுமத்தியிருப்பது போல எந்த எதிர்மறைக் கருத்தும் கல்வி பாடத்தில் இல்லை என்றும், அது கூறியிருப்பதுபோல பள்ளிப் பாடப்புத்தகத்தில் பொங்கல் விழா தமிழர்களின் புத்தாண்டு என்ற கருத்தை மாணவர்கள் மத்தியில் திணிப்பது போன்ற எந்தப் பதிவும் இல்லை'' என்று கல்வியாளர்களும் தங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கின்றனர்.

தந்தை பெரியார் பற்றிய பாடம், அன்னை தெரசா குறித்த குறிப்பு, படம் போன்றவை ஆர்.எஸ்.எஸ். ஆதரவு சங்கத்துக்கு பெரும் எரிச்சலைத் தந்திருக்கிறது. அதற்கு மலேசியாவைக் கடந்து இந்தியாவிலிருந்து தரப்படும் அழுத்தம் மலேசிய அரசையும் சினமூட்டியுள்ளது.

நெடுங்காலமாக இருந்து வரும் சுயமரியாதை இயக்கப் பண்பாடு, தமிழிண உணர்வு போன்றவை மலேசிய வளர்ச்சிக்கும் பயன்பட்டுள்ள நிலையில், மத உணர்வைத் தூண்டும் இந்த செயல்பாடு மலேசிய அரசின் கவனத்துக்கும் சென்றுள்ளது.

பல ஆண்டுகளாக அங்கு ஒழுங்காக இயங்கிக்கொண்டு இருந்த மலேசிய இந்து அமைப்பு 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உலகம் எங்கும் உள்ள இந்தியர்களுக்கு மத்தியில் நாம் இந்துக்கள் மற்றவர்கள் நமக்குக் கீழே என்ற ஒரு மோசமான பிரிவினை வாதத்தைப் பரப்பி வருகிறது, மலேசியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் நடுத்தர மக்களை குறிவைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது, இவர்களுக்கு உலகெங்கும் உள்ள மார்வாடிகள் அனைத்துவகையான நிதி உதவிகளையும் செய்துவந்து தங்களுக்கு ஆதரவானவர்களை அங்குள்ள அமைப்புகளின் முக்கியப் பதவியில் அமரவைத்து பிரிவினையைத் தூண்டி வருகின்றனர். தற்போது மலேசியாவில் வெளிப்படையாகவே மதவாதக் கருத்தை விதைக்க ஆரம்பித்துவிட்டனர் - ஆனாலும் அங்கு வாழும் தமிழர்கள் அவற்றை எதிர் கொள்வார்கள் அல்லது முறியடிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

அதற்கு அச்சாரமாக சில நாட்களுக்கு முன்பு தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி இந்த மதவாதிகளை முறியடிக்க தமிழ் அமைச்சர் ஒருவர் தலைமையில் செயலாற்ற முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

மானமிகு வைகோ கூறுவது முக்கியமானது (பாட திட்டத்தில் தலைகீழ் மாற்றம்)


 ம.தி.மு.க. பொதுச்செயலாளர் - திராவிட இயக்கப் போர் வாள் வைகோ எம்.பி., அவர்கள் விடுத்துள்ள ஓர் அறிக்கை இந்தக் காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது.

‘‘டில்லி பல்கலைக் கழகத்தின் இளங்கலை வரலாற்றின் பழைய பாடத்திட்டத்தின் முதல் பாகம், இந்தியாவின் தொடக்க கால வரலாற்றைப் பேசுகிறது. ஆனால் தற்போது புதிய பாடத்திட்டத்தின் முதல் பாகம், “பாரத் வர்ஷாவின் கருத்துருவாக்கம் (Concept of Bharatvarsha)” என்ற பாடம் முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. “பாரதத்தின் நித்தியம்” எனும் தலைப்பில் வேதங்கள், வேதாந்தங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்ற வைதீக பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன. ‘ஆரம்ப காலத்திலிருந்து கி.மு. 550 வரை' என்ற மூன்றாவது தாளில், ‘‘சிந்து - சரஸ்வதி நாகரிகம் மற்றும் அதன் தொடர்ச்சி, எழுச்சி மற்றும் வீழ்ச்சி” பாடமாக இடம்பெற்று இருக்கின்றது. ‘சரஸ்வதி’ என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஆறு; இதற்கு வரலாறோ, தொல்லியல் ஆதாரமோ கிடையாது.

புராண கால ‘சரஸ்வதி’ நதியை உண்மை வரலாறாக ஆர்.எஸ்.எஸ். சனாதன அமைப்புகள் சித்தரித்து வருவதைப் பாடத்திட்டத்திலும்  புகுத்திவிட்டனர்.

‘இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம்’ என்ற 12 ஆவது தாளில், “இராமாயணம் மற்றும் மகாபாரதம்” போன்றவை தனித் தனி தலைப்புகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

‘இடைக்கால இந்தியா’ பற்றி தற்போதுள்ள பாடத்திட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாறு குறித்து மூன்று தாள்கள் உள்ளன. அந்தக் காலகட்டம் குறித்து மூன்று பருவங்களுக்கு மேல் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் புதிய பாடத்திட்டத்தில் முஸ்லிம்கள் கால ஆட்சியின் முக்கியத்துவத்தைக் குறைத்து ஒரே ஒரு தாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பாடத்திட்டத்தில் இடம்பெறாத ஒன்றை முஸ்லிம் மன்னர்கள் பற்றிய பாடங்களில் ‘படையெடுப்பு’ என்ற சொல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதுவரை ‘இந்திய சமூகம்’ என்று பொதுத் தலைப்பில் இடம் பெற்றிருந்த பாடத்தை மாற்றி, ஏழாவது தாளில், ஹிந்து சமூகம், முஸ்லிம் சமூகம் என்று பிரித்து, அவற்றில் ஹிந்து சமூகத்தின் ஜாதி மற்றும் தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் என்று பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதே போன்று முஸ்லிம் சமூகத்தின் பிரிவுகள் மற்றும் தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகள் தொடர்பான பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

‘நவீன இந்தியா’ குறித்த பாடத்தில், தற்போது 1857 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் அரசியல் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவை புதிய பாடத்தில் நீக்கப்பட்டுள்ளன.

‘1857’ சிப்பாய் கிளர்ச்சியை, ‘முதல் சுதந்திரப் போர்’ என்று ஹிந்து மகா சபை தலைவர் வி.டி. சாவர்கர் வர்ணித்ததை அப்படியே பாடத்தில் சேர்த்துள்ளனர். அதற்கு முன் வங்காளத்தில் நடந்த சன்யாசி கிளர்ச்சி, ஒடிசாவில் பைக்கா கிளர்ச்சி, தமிழ்நாட்டில் வேலூர் புரட்சி போன்றவை இடம்பெறவில்லை.

1905 வங்கப் பிரிவினை மற்றும் அதற்கு எதிரான குறிப்புகள் பாடத் திட்டத்தில் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளன.

காந்தியார், பண்டித ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்ற வரலாற்றில் வாழும் மாபெரும் தலைவர்களின் முக்கியத்துவத்தை பாடத்திட்டத்தில் இருட்டடிப்பு செய்துள்ளனர்.

ஹிந்துத்துவ சனாதனக் கோட்பாட்டிற்கு ஏற்ற வகையில் இளங்கலை வரலாறு பட்டப் படிப்புக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. கல்வித் துறையில் காவி சித்தாந்தத்திற்கு பாதை அமைக்கும் பாசிசப் போக்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்‘’ என்று தம் அறிக்கையில் வைகோ அவர்கள் குறிப்பிட்டு இருப்பது இந்தக் காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது.

மத்திய அரசுப் பள்ளிகளில் 4 ஆம் வகுப்புப் பாடத்தில் ‘‘பட்டியல் இன மக்கள் யார்?’’ என்பதற்கான பதில், ‘‘இந்தியாவின் தீண்டத்தகாத ஜாதி’’ என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. (Scheduled Caste - Untouchable Castes of India). 

இப்பொழுது மட்டுமல்ல, என்.சி.இ.ஆர்.டி. என்ற பாடநூல் தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ள பாடத் திட்டங்கள் காவி மயம் ஆக்கப்படுவதாக ‘சகமத்’ என்னும் வரலாற்றுப் பேராசிரியர்களின் பெருமன்றத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதுண்டே!

‘‘சிந்து சமவெளி, அரப்பா நாகரிகம் வேத காலத்துக்கு உரியதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது'' என்று அவ்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டது (‘தி இந்து’, 1.2.2002).

வரலாற்றுப் பேராசிரியர் கே.என்.பணிக்கர் ‘ஃப்ரண்ட் லைன்’ இதழிலும் (19.1.2001) விரிவாக எழுதியுள்ளார். மறுப்பு அளிக்கப்படவில்லை.

அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமான அரசு அதி£ரத்தில் இருப்பதால், ஹிந்து சனாதனக் கண்ணோட்டத்தோடு பாடத் திட்டங்கள் வகுக்கப்படுவதை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டி இருப்பதை நாட்டு நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் கவனத்துடன் அணுகி, எதிர்ப்புக்குரலை எல்லா வகைகளிலும் உயர்த்தித் தடுத்து நிறுத்த முன்வரவேண்டியது மிகவும் அவசியமாகும்!