சனி, 7 பிப்ரவரி, 2026

ஜாதியப் பாகுபாட்டைத் தடுக்கும் யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து வடமாநிலங்களில் பார்ப்பன மாணவர்கள் போராட்டம்!

 பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்!

புதுடில்லி, ஜன. 28 பல்கலைக்கழக மானியக் குழு ஜனவரி 13, 2026 அன்று வெளியிட்ட ‘‘உயர்கல்வி நிறு வனங்களில் சமத்துவத்தை மேம்ப டுத்துதல், ஒழுங்குமுறைகள், 2026’’ (Promotion of Equity in Higher Education Institutions Regulations, 2026) என்ற புதிய விதிமுறைகளை எதிர்த்து பார்ப்பன மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

புதிய யுஜிசி விதிமுறைகள்

உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி ரீதியான பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு  பல்கலைக்கழக மானியக்குழு புதிய விதிமுறைகளை கடந்த வாரம் அறி முகப்படுத்தி உடனடியாக இது அமலுக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில்  இந்த விதிமுறைகளால் உயர்ஜாதி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்களாம்! இந்த விதிமுறையை உடனடியாக நீக்க வேண்டும் என்று கூறி உயர்ஜாதி யின மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

‘‘புதிய விதிமுறைகளின்படி ‘‘ஜாதி பாகுபாடு’’ என்பது  தழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக நடப்பவை மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ளது. உயர்ஜாதி மாணவர்களாக நாங்களும் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகிறோம்; எங்களுக்கு எதிராக நடப்பவை குறித்து இந்த விதிமுறைகள்படி  புகார் அளிக்க முடியாது’’ என்று அவர்கள் கூறியுள்ளனர்.

‘‘ஒவ்வொரு கல்லூரியிலும் அமைக்கப்பட வேண்டிய ‘ஈக்விட்டி கமிட்டியில்’ உயர்ஜாதி மாணவர்களுக்கு  இடம் அளிக்கப்படவில்லை.  2025 இல் வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையில் ‘பொய் புகார் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற விதி முறை இருந்தது;  ஆனால், தற்போது வெளியிடப்பட்ட இறுதி விதிமுறைகளில் அந்த அம்சம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இது தவறாகப் பயன்படுத்தப்படலாம்’’ என உயர்ஜாதி  மாணவர்கள் அஞ்சு கின்றனராம்!

பல்கலைக்கழக மானியக்குழு இந்த விதிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று கூறி டில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் அரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வரு கின்றன. இவர்களின் முக்கிய வாதங்கள் வருமாறு:

‘‘இந்த விதிமுறைகளால் மாண வர்களுக்குள் நடக்கும் சிறிய உரை யாடல்கள் கூட பெரிதுபடுத்தப்பட்டு  பொதுப்பிரிவு மாணவர்களை ‘‘குற்ற வாளிகளாகவே’ சித்தரிக்கின்றன.  இதன் மூலம் கல்வி வளாகம் ஜாதிய அமைப்புகளின் கூடாரமாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாகவும் மாறிவிடும்  ஏற்கெனவே உள்ள சமூகப் பிரிவினையை இந்த புதிய விதிகள் மேலும் அதிகப்படுத்தும்’’ என்று அந்த உயர்ஜாதி மாணவர்கள் கூறுகின்றனர்.

மாவட்ட நீதிபதி
விதிமுறையை எதிர்த்துப்
பதவி விலகலாம்!

இந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில்  மாவட்ட நீதிபதி அலங்கார் அக்னிஹோத்ரி, கடந்த ஜனவரி 26 (குடியரசு நாளில்) பதவி விலகல் கடிதம் வழங்கினார்.  அவரது 5 பக்க பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள காரணங்கள்:

புதிய யுஜிசி விதிமுறைகள் ‘‘கருப்புச் சட்டம்’’ போன்றவை என்றும், இது பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, குறிப்பாக பார்ப்பனச் சமூகத்திற்கு எதிரானது என்றும் அவர் குற்றம் சாட்டி யுள்ளார். ‘‘பல்கலைக்கழகங்களில் மற்றும் கல்வி நிலையங்களில் பார்ப்பன மாணவர்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகின்றனர். அவர்கள் தலைமுடிக் குடுமியைப் பிடித்து இழுக்கிறார்கள். அவர்களைத் திருநங்கைகள்  என்று கேலி செய்கின்றனர்.  பார்ப்பன மாணவர்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் தனது மனதைப் புண்படுத்தியதாகக்’’ குறிப்பிட்டுள்ளார். புதிய விதிமுறைகள் பார்ப்பனச் சமூகத்தின் பேச்சுரிமை மற்றும் அவர்களின் சுதந்திரமான செயல்பாட்டை முடக்கி அவர்களைக் குற்றவாளிகள் போலவும், சமூகத்தில் ஜாதிப் பாகு பாட்டை விதைக்கும் நபர்களாகவும் சித்தரித்து மக்களிடமிருந்து பார்ப்பன மாணவர்களை  பிளவுபடுத்துவதாக உணர்வதால், அதற்கு எதிர்ப்பு தெரி விக்கும் வகையில் பதவி விலகுவதாக அவர் கூறியுள்ளார்.

‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை’ என்பார்களே, அது இதற்கு மிகவும் பொருத்தம்.

இவர்கள் ஏன் படபடக்க வேண்டும்?

ஜாதிப் பாகுபாட்டை பார்ப்பன மாணவர்கள் பார்ப்பதில்லை என்பது உண்மையானால், இவர்கள் ஏன் படபடக்க வேண்டும்?

ஒரு மாவட்ட நீதிபதியே பார்ப்பன உணர்வுடன், பதவி விலகியுள்ளார் என்றால், பார்ப்பனர்களின் அந்த ஆதிக்க உயர்ஜாதி மனப்பான்மை அகலவில்லை என்பதைப் பச்சையாக வெளிப்படுத்துகிறதே!

- விடுதலை நாளேடு,28.01.26

கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு



தமிழ்நாடு

சென்னை, பிப்.7 உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3.4.2025 அன்று சட்டமன்றத்தில்  விதி எண் 110-இன் கீழ் சென்னையில் கார்ல் மார்க்ஸ்சுக்கு புதிதாக உருவச்சிலை நிறுவப்படும் என அறிவித்தார்.

அதன்படி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சென்னை கன்னிமாரா பொது நூலகம், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் உருவச்சிலையை நேற்று (6.2.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கார்ல் மார்க்ஸ்சின் சிலை திறப்பு விழாவில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை. இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர ஒன்று மில்லை. அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது” என உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவு டைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலை கன்னிமாரா பொதுநூலக வளாகத்தில் நிலைகொண்டது. நல்லவை எங்கிருந்து வந்தாலும் வணங்கி ஏற்றுக் கொள்வோம். அல்லவை ஆதிக்கம் செலுத்தப் பார்த்தால் தடுத்து நிறுத்துவோம். இதுதான் ‘‘திராவிட மாடல்’’ என அதில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை நாளேடு, 7.2.26

பெரியார் என்றால் பார்ப்பனர்கள் பதறுகிறார்கள் – பெரியார் இன்னும் இவர்களைப் பதறடித்துக் கொண்டே இருப்பார்!




* நாடாளுமன்றத்தில் கலைஞானி கமல்ஹாசன் பேசியதில் என்ன குற்றம்?  தந்தை பெரியார் கூறிய கருத்தைத் திரித்துப் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
* தந்தை பெரியார் கூறுவதை எல்லாம் ஒப்புக் கொள்கிறார்களா?  தமிழை நீஷப் பாைஷ என்றும், சமஸ்கிருதத்தைத் தேவ பாைஷ என்றும் கூறுவோர் யார்?
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினருக்குத் தமிழ்மீதும், தமிழர்மீதும் இருப்பது வயிற்றெரிச்சல்! தந்தை பெரியாருக்கு இருப்பதோ தாய்க் கோழியின் எரிச்சல்!

மாநிலங்களவையில் ‘‘கலைஞானி’’ கமல்ஹாசன் மிகச் சரியாகத் தான் பேசி இருக்கிறார். தந்தை பெரியாரைப்பற்றி திரித்துப் பேசிய,   நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  முதல் பிஜேபியினர் அனைவரும் பதறுகின்றனர். பெரியார் அந்தக் கூட்டத்தை இன்னும் பதறடித்துக் கொண்டுதான் இருப்பார் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாடாளுமன்ற மாநிலங்களவையில், தனது முதல் ‘கன்னி’ உரையைச் (Maiden Speech) சிறப்பாக நிகழ்த்தியிருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்   ‘‘கலைஞானி’’ கமல்ஹாசன் அவர்கள். தன்னுடைய உரையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காந்தியார் உள்ளிட்டோரைத் தன்னுடைய ஆசான்களாகவும், தாத்தா, தந்தையராகவும் முன்னிறுத்தி அவர் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கதாகும்.

நிதி அமைச்சருக்குக் கமல்ஹாசன் எதிர்ப்பு!

எஸ்.அய்.ஆர்., நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தன்னுடைய உரையில் குறிப்பிட்ட தோழர் கமல்ஹாசன், கடந்த ஆண்டு 2025 ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆற்றிய உரையில் தமிழ் பற்றித் தெரிவித்த கருத்துகளுக்குக் கடும் மறுப்பையும் பதிவு செய்துள்ளார்.

‘தமிழன் பிச்சையெடுக்க மாட்டான்; அதிலும் உங்களிடம் பிச்சையெடுக்க மாட்டான். பிச்சையெடுத்துப் பழக்கப்பட்டவர்கள், அது உதவாதென்று, பின்னர் உண்டியலை நீட்டியது வரை’, தன் கோபத்தை நாடறிய வெளிக்காட்டி அமர்ந்தார் கமல்ஹாசன்.

கடந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  பேசியது அவருடைய கருத்தில்லை என்றும், பெரியாரின் கருத்தையே அவர் எடுத்துக் காட்டியதாகவும் பா.ஜ.க.வினர் ஊடகங்களில் விளக்கமளிக்கின்றனர்.

தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிடாமலேயே நிதியமைச்சர் அம்மையார் பேசினாலும்   எந்தச் சூழலில் அவர் பெரியாரைத் துணைக்கழைத்தார்?

ஒன்றிய கல்வி அமைச்சரின் சண்டித்தனம்!

தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தர முடியாது என்று சண்டித்தனம் செய்தார்; தேசியக் கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதி வழங்கப்படும் என்று கட்டாயப்படுத்த முயற்சித்தார். தமிழ்நாடு அதைக் கண்டித்தது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் அதனைக் கண்டித்தனர்.

அதன் நியாயத்தை உணராத தர்மேந்திர பிரதான், தமிழர்களை ‘நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள்’ என்று அவையிலேயே பேசினார். கொதித்தெழுந்த நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களைக் கொச்சைப்படுத்திய அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், பதவி விலக வேண்டும் என்றும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள். அவரது வார்த்தைகள் அவைக் குறிப்பில் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டாலும், அவர் மன்னிப்புக் கேட்கவில்லை. வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

தந்தை பெரியார் பேச்சைத் திரித்துப் பேசிய நிர்மலா சீத்தாராமன்

அந்த நிலையில் தான், தாங்கள் பின்வாங்கிய கோபத்துடன், தர்மேந்திர பிரதானுக்கு வக்காலத்து வாங்கி நாடாளுமன்றத்தில் பேசினார் நிதியமைச்சர் அம்மையார். அதில், “தமிழ்நாடு போற்றிக் கொண்டாடும் ஒரு முக்கியமான தலைவர், நான் அவர் (பெரியார்) பெயரைச் சொல்லப் போவதில்லை, அவர் தமிழைப் பற்றி குறை சொல்லவில்லையா?  அவரை எப்படி இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்’’ என்று பேசிவிட்டு, ஆதாரம் காட்டுவதாகச் சொல்லி, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினரின் வழக்கத்தைப் போல, தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல், தந்தை பெரியார் எழுதியவற்றை முன் – பின் வெட்டிவிட்டு,  நடுவில் சில வரிகளை மட்டும் சுட்டிக் காட்டிப் பேசினார்.

காலம் காலமாக இந்துத்துவவாதிகள் ஓட்டித் தேய்ந்துபோன அதே பழைய கிராமபோன் தட்டை இவர் நாடாளுமன்றத்தில் ஓட்டினார். நாடாளுமன்றத்தில் பேசுபவர் கொஞ்சம் ஆதாரத்துடன், சரியான தரவுகளுடன் பேச வேண்டாமா? அவர் இரண்டு தேதிகளில் ‘‘விடுதலை’’யில் செய்தி வந்ததாகச் சுட்டிக் காட்டினார்.

வாட்ஸ் அப் வதந்திகளை நம்பும் பரிதாபத்துக்குரிய நிதி அமைச்சர்

27.11.1943 ‘‘விடுதலை’’யில் தந்தை பெரியார் எழுதியதாக எதையோ படித்தார். முடிந்தால் அம்மையார் அந்த நாள் ‘விடுதலை’யை எடுத்துக் காட்டலாமே! முடியாது. ஏனெனில், 1943 செப்டம்பர் மாதத்திலிருந்து விடுதலை ஏடு யுத்தப் பிரச்சாரத்திற்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான் மீண்டும் அது பெரியாரின் கைகளுக்கு வருகிறது. ஆனால், வாட்ஸ் அப் வதந்திகளைப் பரப்புவோர் அதையே ஆதாரமாகக் காட்டி நாடாளுமன்றத்திலும் பேசி அதன் மாண்பைக் கெடுக்கலாமா?

மற்றொரு தேதியில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கத்தை எடுத்துக் காட்டுகிறார். அதிலாவது ‘அறிவு நாணயம்’ இருக்க வேண்டாமா? ‘துக்ளக்’கில் வந்த ஒரு துண்டுப் பகுதியை எடுத்துப் படித்த அவர், அதிலேயே ‘தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடிய வில்லை’ என்று ஒரு ‘புலவர் பாடியிருப்பதாகப் பெரியார் சுட்டிக் காட்டியிருப்பதை’த் தமிழில் படித்துக்காட்டிவிட்டு, ஆங்கிலத்தில் அதைச் சொல்லும்போது, பெரியாரே அப்படிச் சொன்னது போல் திரித்துப் பேசினாரே! ஏன்?

தந்தை பெரியார் பேசியதை எல்லாம்
ஒப்புக் கொள்கிறார்களா?

‘பெரியார் பேசியதைத் தானே நிர்மலா அம்மையார் எடுத்துக்காட்டினார்’ என்று சொல்வோர், ‘மற்றொரு புலவரின் பாடலைத் தானே பெரியார் எடுத்துக்காட்டினார்’ என்ற உண்மையை மறைப்பதேன்? 16-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் என்பவர் எழுதிய தனிப் பாடல் ஒன்றைத் தானே பெரியார் சுட்டிக்காட்டுகிறார். அதை நியாயமாக எடுத்துச் சொல்வதில் என்ன தயக்கம்? அதைத் திரிப்பானேன்?

அதன் வரலாறு தெரியாதவர் இப்படிப் பேசுவது எவ்வகையில் நியாயம்?

‘தந்தை பெரியார் தமிழைப் பற்றி இப்படிச் சொல்லிவிட்டார், அப்படிச் சொல்லிவிட்டார்; அதனால் தர்மேந்திர பிரதான் சொன்னது தவறில்லை’ என்ற தொனியில் தானே அந்த அம்மையார் பேசினார். அப்படியென்றால் பெரியார் பேசியதையெல்லாம் ஒப்புக் கொள்கிறார்களா? பெரியாரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? அதே கட்டுரையில், பெரியார், ‘ஏன் தமிழ் இலக்கியங்களை ஏற்க மறுக்கிறேன்’ என்று எழுதுகிறாரே! இவர்கள் இப்போது தூக்கிக் கொண்டு வரும் அகஸ்தியரைக் கிழித்துப் போட்டிருக்கிறாரே! அவற்றைப் பற்றிப் பேசுவோமா?

பெரியாருக்கு யாரும் உரை எழுத வேண்டியதுமில்லை; விளக்கம் சொல்ல வேண்டியதுமில்லை. தந்தை பெரியாரின் எழுத்தை, பேச்சை முழுமையாகப் படித்தாலேயே அதற்கான காரண, காரியங்கள், நோக்கங்கள் (அவருக்கு உள்நோக்கம் எதுவுமில்லை; அவர் என்றும் வெளிப்படையானவரே, அவருடைய கருத்துகள் எல்லாம் வெளிப்படையானவையே!) அனைத்தும் எளிதில் விளங்கிவிடுமே!

தமிழர்கள்மீது தந்தை பெரியாருக்கு
இல்லாத அக்கறையா?

யார் தமிழர்களைப் பற்றிப் பேச, தமிழைப் பற்றிப் பேச அருகதை உடையவர்? ‘தமிழருக்காக நான் பலிகடா ஆகிறேன்’ என்று தன் 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு தெருத்தெருவாய் அலைந்து பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்ட பெரியாருக்குத் தமிழர்கள் மீது இல்லாத அக்கறையா? தமிழர்கள் வளர்ச்சி அடைய, பகுத்தறிவு பெற, மான உணர்வு பெற எவையெல்லாம் தடை என்று கண்டறிந்து, அவற்றைத் தகர்த்தெறிந்த தளகர்த்தர் அவர். தமிழர்கள் நல் வாழ்வு வாழத் தமிழும், ஆங்கிலமும் வேண்டும் என்று அவர் முன்மொழிந்ததைத் தானே அண்ணா சட்டமாக்கினார். அதனால் தானே இன்று தமிழர்கள் உலகம் முழுக்க அறிவியலில் வெற்றிக் கொடி நாட்டுகின்றனர்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். – பாஜ.க. காரர்கள் செய்வது என்ன? ஆங்கிலத்துக்குப் பதில் ஹிந்தியை, சமஸ் கிருதத்தைத் திணித்து தமிழர் தம் வளர்ச்சியைத் தடுத்து, மீண்டும் மனுவாதத்தின் பிடியில் தள்ள முயல்வது தானே அவர்களின் நிலைப்பாடு! அதற்குத் தடையாகத் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும், அவர்கள் தந்த சமூக நீதியும், கல்வியும் இருக்கிறது என்பதால் தானே இவற்றையெல்லாம் ஒழிக்க நினைக்கிறார்கள்.

தமிழை நீஷ பாைஷயாக்கி, தீட்டு மொழியாக்கி, சமஸ்கிருதத்தை – வடமொழி ‘‘தேவபாைஷ’’யாக்கிய பேதவாதிகள் ஆணவக்காரர்கள் யார்? மொழி மற்றும் சமத்துவத்தை ஏற்காதவர்கள் யார்?

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யினருக்கு
தமிழ்மீதும், தமிழர்மீதும் வயிற்றெரிச்சல்!

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வினருக்குத் தமிழ் மீதும், தமிழர் மீதும் இருப்பது வயிற்றெரிச்ச்சல்! தந்தை பெரியாருக்கு இருந்தது தாய்க் கோழியின் எரிச்சல்! முட்டையிட்ட கோழிக்குத் தானே வலி தெரியும். பார்ப்பனர்களுடனும் போராடி, அதைப் புரிந்துகொள்ளத் தமிழர்களின் அறிவுடனும் போராடி, படிப்படியாய்த் தமிழர்களைத் தூக்கி நிறுத்தியவருக்குத் தானே தடைகள் எங்கே என்று தெரியும். ‘‘தமிழின் வளர்ச்சிக்கும், தமிழர்தம் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பவை தமிழ் இலக்கியங்களே ஆனாலும், அவற்றை ஒழித்தாக வேண்டும்’’ என்ற பெரியாரின் சிந்தனை – ஒரு சமூக மருத்துவரின் சிந்தனை! நம்முடல் தான் எனினும், புற்று வந்த பகுதியை வெட்டி வீசுவதில்லையா? அழுகிப் போன திசுக்களை அடியோடு நறுக்கி எறிவதில்லையா? அப்படித்தான் பெரியாரும் – தமிழருக்கும், தமிழுக்கும் கேடு செய்தவற்றை ஒழிக்கச் சொன்னார் – தனக்கே உரிய அறுவைச் சிகிச்சை நிபுணரின் முடிவோடு!

ஈரோடு தமிழன்பன் கூறியதுதான்
நினைவிற்கு வருகிறது

மறைந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் சொன்னது போல, தந்தை பெரியார் நடத்தியவை யாவும் ‘அக்கறைக் கலவரங்கள்!’ ஒரு தாய்ப்புலி தன் குட்டியைக் கவ்வுவது போல தமிழர்களைக் கவ்விய கருணை மறவர் தந்தை பெரியார். அவரைத் திரித்தும், புரட்டியும் பேசுவதை ஒருபோதும் ஒப்ப முடியாது. கடந்த ஆண்டே இதற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க.துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் பதில் அளித்துவிட்டார்.

எனினும், ஓராண்டு கடந்தாலும் தன் தமிழ்க் கோபத்தைக் காட்டி, போலியாகத் தமிழர்கள் மீது அக்கறையுடன் நடிப்பவர்களுக்கு, நண்பர் கமல்ஹாசன் காட்டமாகப் பதில் அளித்துள்ளார். அவர் சுட்டிக்காட்டி யதைப் போல, தமிழன் பிச்சையெடுக்க மாட்டான். திராவிட இயக்கம் பிச்சையெடுக்க விடாது! அதிலும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பிச்சையை ஒரு நாளும் ஏற்காது. உரிமையைக் கேட்கும்; மக்களுக்கு உரிமை கொடுக்கும்; உடைமையைப் பொதுவாக்கும்.

“தமிழன் என்றொரு இனமுண்டு – தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடிய நாமக்கல் கவிஞர் அடுத்தடுத்த வரிகளில் அதைச் சரியாகவே விளக்குகிறார்.

“மானம் பெரிதென உயிர்விடுவான்; மற்றவர்க்காகத் துயர் படுவான்; தானம் வாங்கக் கூசிடுவான்; தருவது மேலெனப் பேசிடுவான்”

பிச்சை எடுப்பதுதான் பார்ப்பனர்களின் தர்மம் என்று அவாளின் மகா பெரியவாள் கூறியதை மறுக்கிறார்களா?

பூதானம், கோதானம், அன்னதானம், சொர்ணதானம் வாங்கியே பழக்கப்பட்டுவிட்டவர்கள் போலல்ல; ‘உண்டியலில் போடாதீர்கள் – அர்ச்சகர் தட்டில் போடுங்கள்’ கோயிலில் போய் பக்தர்களிடம், ‘தங்களவர்’களுக்காகச் சிறீவைகுண்டத்தில் ‘பரிந்துரை செய்தவர்கள்’ போலல்ல.

”ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;

கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று” என்பது பழந்தமிழர் மரபு.

பிக்‌ஷாந்தேகிகளுக்கு அது உகந்ததல்ல; அவர் களுக்குப் போடுங்கள் என்று பரிந்துரைப்போருக்கும் உகந்ததல்ல என்பதும் நமக்கு நன்கு தெரியும்.

மகா மகா பெரியவர் ‘‘பிராமணர்’’களுக்கு  என்ன அறிவுரை கூறுகிறார். ‘‘பிச்சையெடுத்தல் தான தர்மம் அதை விட்டு விட்டார்களே’’ என்று ‘தெய்வத்தின் குரலில்’ கூறினாரே  அதை   மறுக்கிறார்களா?

நண்பர் கமல்ஹாசனின் நாடாளுமன்ற முதல் உரை, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புரிய வேண்டியவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். அதனால்தான் பதறுகிறார்கள். தந்தை  பெரியார் இன்னும் இவர்களைப் பதறடித்துக் கொண்டிருக்கிறார்.

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

7.2.2026        

புதன், 21 ஜனவரி, 2026

தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை!

 

‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு –‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ அவர் என்பதை உலகறியச் செய்யும் எடுத்துக்காட்டு

துணைவேந்தர் நியமனம்முதல் கலை, மொழி, இலக்கியம், வரலாறு

அனைத்தையும் காவி மயமாக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. அரசு!
குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளிவரும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை!

துணைவேந்தர் நியமனம் முதல், கலை, மொழி, இலக்கியம், வரலாறு உள்ளிட்ட பண்பாட்டுத் தளத்தை எல்லாம் ஒன்றிய பி.ஜே.பி. அரசு காவி மயமாக்கிவரும் நிலையில், இந்திய அளவில் குறிப்பிட்ட மொழிகளில் வெளிவரும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருதும்’, தலா 5 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என்ற ‘திராவிட மாடல்’ அரசின் நாயகரின் அறிவிப்பு – ‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் என்பதற்கான எடுத்துக்காட்டு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி, வரவேற்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்களது அண்மை அறிவிப்பு  – இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் பாராட்டி வரவேற்கும் மிக அருமையானதொரு திட்டமாகும்!

‘‘குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் “செம்மொழி இலக்கிய விருது” என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும். விருதுடன், தலா 5 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

படைப்புகளின் இலக்கியத் தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். புரவலர் பணியை தமிழ்நாடு அரசு மனநிறைவோடு மேற்கொள்ளும்.

காதுகளில் தேன் பாய்ந்த மகிழ்ச்சியை
உருவாக்கும் என்பது நிச்சயம்!

அடுத்து அமையப்போவதும் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சிதான்! அப்போது, இதைவிடப் பெரிய அளவில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்தப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை நடத்துவோம்!’’ என்று கூறியுள்ளது இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் காதுகளில் மட்டுமல்ல, இலக்கிய ரசனை உள்ள அந்தந்த மொழிப் பற்றாளர்களின் காதுகளில் தேன் பாய்ந்த மகிழ்ச்சியை உருவாக்கும் என்பது நிச்சயம்!

அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். – காவிமயம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க., ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்தே – அரசின் பொது வள சுதந்திரத்துடன் இயங்கி வந்த வரலாற்று ஆய்வு அமைப்பு, கலாச்சாரப் பாதுகாப்பு அமைப்புக் குழு அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். – காவிமயம் ஆக்கப்பட்டு வருகின்றன!

இதை, நாடாளுமன்றத்தில்கூட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சுட்டிக்காட்டி, கண்டனம் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

துணைவேந்தர்கள் நியமனம் தொடங்கி, அரசின் கலை, இலக்கிய, மொழி அமைப்புகள், வரலாறு, அறிவியல் அமைப்புகள் எல்லாவற்றையும் காவி மயமாக்கி வரும் நிலையில், சுதந்திரமாக இதுவரை தலையீடு இன்றி நடந்து வந்த இலக்கிய பீடமான ‘‘சாகித்ய அகாடமி’யின்  விருதையே – அது தகுதி மிக்க ஒருவருக்குச் செல்லக்கூடாது – காரணம், அவர் இடதுசாரி கருத்தாளர் என்பதால், அப்பரிசை நிறுத்தி வைத்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசு. இது ஏற்கத்தக்கதா? நியாயமா?

இதற்கு சரியான ஆக்கப்பூர்வமான பதிலடிதான் ‘திராவிட மாடல்’ முதலமைச்சரின் வரவேற்கத்தக்க மேற்கண்ட அறிவிப்பு!

‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்!’

‘திராவிட மாடல்’ அரசு, வெறுப்பு அரசியல் நடத்தாத ஒன்று; எந்த மொழி மீதும் வெறுப்பு இல்லை. பண்பாட்டுப் படையெடுப்பு, மொழித் திணிப்பை ஒரு வழிமுறையாகக் கொள்ள திட்டமி்ட்டு செயல்படுவதை எதிர்ப்பதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று நமது முதலமைச்சர் இந்தப் புதிய ஏற்பாட்டினை அறிவித்துள்ளார், தக்க நேரத்தி்ல்!

‘‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’’ அவர் என்பதை உலகறிய இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை
19.1.2026

இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924)



 இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924)

சோவியத் யூனியனின் தந்தை என்று அழைக்கப்படும் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் அவருடைய 102-ஆவது நினைவு நாள் இன்று (21.1.1924)

புரட்சியின் நாயகன்: 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற புகழ்பெற்ற அக்டோபர் புரட்சியை முன்னின்று நடத்தியவர். ஜார் மன்னர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, உலகில் முதன்முதலாக ஒரு ‘தொழிலாளர் அரசை’ உருவாக்கினார்.

சோவியத் ஒன்றியம்: நவீன ரஷ்யாவின் சிற்பியாகக் கருதப்படும் இவர், சோவியத் யூனியன் உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். அதன் முதல் தலைவ ராகவும் பணியாற்றினார்.

மார்க்சியச் சிந்தனையாளர்: கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை ரஷ்யாவின் சூழலுக்கு ஏற்ப மாற் றியமைத்தார். இது பிற்காலத்தில் ‘லெனினிசம்’ என்று அழைக்கப்பட்டது. “அதிகாரம் அனைத்தும் சோவியத் துகளுக்கே” என்பது இவரது புகழ்பெற்ற முழக்கமாகும்.

எளியவர்களுக்கான தலைவர்: நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து, நிலங்களை விவசாயிகளுக்கும், தொழிற் சாலைகளைத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப் பாடுபட்டார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங் களில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

புரட்சியாளர் லெனின்   இளைஞர்களுக்கு லெனின் வழங்கிய மிக முக்கியமான அறிவுரை படி மேலும் படி, ‘‘எப்போதும் படிப்பை கைவிடாதே’’ ( ஹுஸிசா, ஹுஸிசா, ஈ யோஷோ ராஸ் ஹுஸிசா)  என்ற முழக்கம் கம்யுனிஸ்ட்களை விரும்பாத முதலாளித்ததுவ நாடுகளில் உள்ள இளைஞர்களையும் ஈர்த்தது.  அவருடைய உடல் இன்றும் மாஸ்கோவில் உள்ள லெனின் நினைவகத்தில்  பொதுமக்கள் பார்வைக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-விடுதலை நாளேடு, 21.01.26

செவ்வாய், 20 ஜனவரி, 2026

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

9806f786-ea7e-4066-b8fb-d912d288568f
நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மாயமானது அம்பலமானது. -
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

சபரிமலையில் சுமார் ஆறாண்டுகளுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கோவில் கருவறை முன்பு இருந்த துவார பாலகர்கள் சிலைகள், கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கக் கவசங்களைப் புதுப்பிப்பதற்காக கோவில் நிர்வாகத்தினர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மாயமானது அம்பலமானது.

தங்கம் திருடப்பட்டது தொடர்பாக 11 பேர் அடுத்தடுத்து கைதாகினர்‌‌. புனரமைப்புப் பணிக்குத் தலைமை தாங்கிய உன்னி கிருஷ்ணன், கோவில் நிர்வாக அதிகாரி, ஊழியர்கள் எனப் பலர் கைதான நிலையில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) கேரளா, கர்நாடகா, தமிழகம் என மூன்று மாநிலங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கேரளாவில் உள்ள உன்னி கிருஷ்ணன் வீடு, திருவனந்தபுரத்தில் உள்ள கோவில் முன்னாள் வாரியத் தலைவர் பத்ம குமார் ஆகிய இருவரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தங்க முலாம் பூசும் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டதாகவும் மொத்தம் 21 இடங்களை குறிவைத்து அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை பல மணிநேரம் நீடித்ததாகவும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- தமிழ் முரசு நாளேடு இணைய பக்கம், 20.01.26

வியாழன், 8 ஜனவரி, 2026

டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அளித்த பேட்டி

 

இன்றைய நிலையில், பெரியாரின் பொருத்தப்பாடு என்ன? பார்ப்பனீய எதிர்ப்பு ஏன் என்பது உள்பட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டுக்கு விடையளித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். தமிழ்நாட்டில் பெரியார் இருக்கும்போது என்னிடம் ஏன் வருகிறீர்கள்? என்று கேட்டவர் அம்பேத்கர் என்ற தகவல் உள்பட அடங்கிய பேட்டி வருமாறு:

கடந்த டிசம்பர் 24 அன்று வெளிவந்துள்ள அப் பேட்டியின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு இப்போது 93 வயது ஆகிறது. ஆனாலும், ஓர் இளம் அரசியல்வாதியைப் போலவே அவர் சுறுசுறுப்பாக வாழ்கிறார். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியிலாவது அவர் கலந்து கொள்ளாமல் இருப்பதே இல்லை. பல சமயங்களில் இயக்கம் சார்ந்த நூல் வெளியீடு, வீர வணக்கக் கூட்டங்கள், திருமண விழாக்கள் என்று ஒரே நாளில் மூன்று மாவட்டங்களில் கூட அவர் பரப்புரைப் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 24 ஆம் நாள் திராவிடர் கழகத்தின் வழிகாட்டி தந்தை பெரியாரின் 52 ஆவது நினைவு நாள் என்பதால் அதற்கான பணிகளில் திராவிடர் கழகம் மும்முரமாக ஈடுபட்டு வரும் சூழலில், பெரியாரியலின் மாண்பு, நிலைத் தன்மை குறித்தும், அதை உயிர்ப்புடன் வைத்திருக்கத் திராவிடர் இயக்கம் எதிர்கொள்ளும் போராட்டங்கள்பற்றியும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்காக ஜெயா மேனன் உடனான பேட்டியில் கி.வீரமணி உரையாடினார். அப்பேட்டி வருமாறு:

பெரியார் பல அவதூறுகளைச் சந்தித்தவர்!

செய்தியாளர்: திராவிடர் கழகம் மேலும் வளர்ந்து செழித்தோங்க தாங்கள் எப்படி திட்டமிட்டுள்ளீர்கள்?

ஆசிரியரின் பதில்: பெரியாரின் தொண்டர்களுக்கு இது ஓர் எளிமையான பணி. ஒரு யுத்தத்தில் பல போர்கள் நிகழும். எத்தனை சோதனைகள் வந்தாலும், இடையூறுகள் ஏற்பட்டாலும் நாங்கள் அயராமல் போராடி பல போர்களில் வெற்றி பெற்று வருகிறோம். இன்னும் யுத்தம் முடியவில்லை. அதிலும் வெல்வோம். அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

பெரியார் பல அவதூறுகளைச் சந்தித்தவர். அவர் மீது சுமத்தப்பட்ட ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகளைச் சந்தித்தவர். அவரது இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்கள் ஏவிவிட்ட அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும், எதேச்சாதிகாரப் போக்கையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக அவற்றை முறியடித்தவர் பெரியார்.

அனுபவம் தானே மிகச்சிறந்த ஆசான்!

எமர்ஜென்சி காலகட்டத்தில் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தார். எமர்ஜென்சியை எதிர்த்ததாலேயே கலைஞருடைய ஆட்சி கலைக்கப்பட்டது. எத்தனை இன்னல்கள் வந்தாலும் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம். இன்றைய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், அன்று இளைஞர். திருமணமான ஒரே மாதத்தில் அவரும் கைது செய்யப்பட்டார். ரத்தக்கறை படிந்த ஆடையுடன் நான் இருந்த சிறைக்கூடத்தில் தள்ளப்பட்டார். எட்டடி நீளமும் எட்டடி அகலமுமாக இருந்த அந்தக் கொட்டடியில் எட்டு நபர்கள் அடைக்கப்பட்டிருந்தோம். சிறுநீர் கழிக்க ஒரு மண்பா னையும், குடிநீருக்காக ஒரு மண்பானையும் மட்டுமே அந்த அறையில் இருந்தன. எல்லாவிதமான கொடுமைகளையும், சகித்துக்கொள்ளும் மனஉறுதியும், பயிற்சியும் பெற்றவர்கள் நாங்கள். அனுபவம் தானே மிகச்சிறந்த ஆசான்! அதுதான் எங்களுக்கு விவேகம் தந்தது. அதையே நாங்கள் எங்கள் தொண்டர்களுக்கும் போதித்து வருகிறோம்.

செய்தியாளர்: அய்ம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று சமூகத்தின் மீது பெரியாரியத்தின் பொருத்தப்பாடு எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு மக்களின் வாழ்வும், அரசியலும் அதையும் கடந்து வளர்ந்துள்ளனவா?

பெரியாருடைய
கொள்கை வாரிசுகள் நாங்கள்!

ஆசிரியரின் பதில்: இன்றைய காலகட்டத்திற்குத் தான் பெரியாரும், அவருடைய கொள்கைகளும் மிக அவசிய மாகத் தேவைப்படுகின்றன. கடந்த காலங்களில் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பாலின சமத்துவம், மகளிர் உரிமை போன்ற எங்கள் கொள்கைகளை எதிர்த்த எதிரிகள் குறைந்தபட்ச அறிவு நேர்மை உடையவர்களாக இருந்தனர். ஆனால், இன்றைய ஆரியக் கூட்டம் ஸநாதனம் என்ற பெயரில், வருணாஸ்ரம தர்மத்தையும், ஜாதியையும் நிலை நாட்ட நினைக்கிறது. அது சமத்துவத்தை விரும்பவில்லை.

இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு பெரியார் தான். ஏனெனில் அவர் ஒரு சமுதாய விஞ்ஞானி. பொய்யும், புரட்டும் நிறைந்த வேஷதாரி சாமியார்கள் போல் வாழ்ந்தவர் அல்ல அவர்! எதற்காகவும் அவர் ஆசைப்பட்டதுமில்லை, ஏங்கியதுமில்லை. அவருடைய கொள்கை வாரிசுகள் நாங்கள்.

பெரியாரியம் தனித்தன்மையுடன்
சுதந்திரமாகவே என்றும் செயல்படும்!

செய்தியாளர்: பெரியாரியல் உயிர்ப்புடன் இருக்கப் போராடி வருவதாக நீங்கள் கூறுகிறீர்கள். தற்போது இந்தப் போராட்டத்தை திராவிடர் கழகத்திற்குப் பதிலாக தி.மு.க. முன்னெடுத்து நடத்துவதாகக் கருதலாமா?

ஆசிரியரின் பதில்: தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள். நாங்கள் போர்க்களத்தில் பணி யாற்றும் தூசிப் படையினர் போன்றவர்கள். நாங்கள் தி.மு.க.வுக்குப் பக்கபலமாக, பாதுகாப்பு அரணாக சென்ட்ரி கடமையாற்றுவோம்.

அரசியல் களம் ஓர் எல்லைக்கு உட்பட்டே உள்ளது. இன்றைய தி.மு.க. தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசின் நிர்வாகத்திறன் அற்புதமானது. ஆற்றல் மிக்க ஒரு மக்கள் நல ஆட்சி இது. ஆனால், எந்த ஒரு சிறிய மாற்றத்திற்கும் அது தன்னிடம் கையேந்தி நிற்கவேண்டும் என்றே ஒன்றிய அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், மாநில அரசின் அதிகாரங்களைப் பொறுத்தவரை எந்தவிதமான சமரசத்திற்கும் தி.மு.க. உடன்படாது; அடிபணியாது.

பெரியாரும், அவருடைய கொள்கைகளும், கோட்பாடு களும் மட்டுமே ஒரே மருந்து. எனவே தான், நாங்கள் பெரியாரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். எங்கள் இயக்கம் என்றும் கலையாது. வேறு எவருடனும் இணையாது. பெரியாரியம் தனித்தன்மையுடன் சுதந்திரமாகவே என்றும் செயல்படும்.

பெரியாரின் அடிச்சுவடுகளைப்
பின்பற்றிவரும் கழகம் தி.மு.க.

செய்தியாளர்: பெரியாரின் கொள்கைகளுடன் ஒருங்கி ணைந்து இருப்பது யார்? தி.மு.க.வா, அ.தி.மு.க.வா?

ஆசிரியரின் பதில்: உங்கள் கேள்வி ‘கருப்பா – வெள்ளையா? எது பளிச்சென்று தெரியும்?’ என்று கேட்பது போல் உள்ளது. பெரியாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வரும் கழகம் தி.மு.க.

ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சிக்கு எப்போதுமே அரசியல் சார்ந்த சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனாலும், சமூகக் கொள்கைகளில் அது ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள இயலாது. எனவே, பரப்புரைகள், அமைதியான போராட்டங்கள் போன்ற சீரிய அணுகுமுறைகளுடன் சமூகக் களத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, திராவிடர் கழகம் பணியாற்றும். அவற்றை சட்டமாக்கும் பணிகளை இயன்றவரை தி.மு.க. நிறைவேற்றும்.

செய்தியாளர்: பெரியார் ஏன் தமிழ்நாட்டிற்குள் மட்டும் சுருங்கிவிட்டார்? அம்பேத்கரியம் உலகம் முழுவதும் பரவிப் படர்ந்துள்ளது போல், பெரியாரியம் ஏன் பரவலாக அறியப்ப டாமல் உள்ளது?

வரலாற்றையும், உண்மையையும்
புறக்கணிக்கும் செயலாகும்!

ஆசிரியரின் பதில்: பெரியாரின் தாக்கத்தை ஒரு மாநில அளவிலோ, தேசிய அளவிலோ குறுக்கிவிட முடியாது. அவர் வாழ்ந்த காலத்திலேயே, மொழி – புவியியல் எல்லை களைக் கடந்தவர் பெரியார். அவரை வடநாட்டிற்கு வரு மாறு அம்பேத்கர் மட்டுமல்ல, எம்.என்.ராய் போன்ற பல சிந்தனை யாளர்களும், தேசியத் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

பெரியார் சிந்தனையின் தாக்கத்தால் தான் சமூகநீதி பற்றிய புரிதல் இந்தியா முழுவதும் அரசியல் களத்தில் ஏற்பட்டது. பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டங்கள் இந்தியாவிலும், உலக நாடுகள் பலவற்றிலும் இன்று உருவாகியுள்ளன. நம் நாட்டின் எல்லா மாநிலங்களிலும், எல்லா மொழிகளிலும் பெரியாரின் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் நிறைந்த மொழியாக்க நூல்கள் விரும்பிப் படிக்கப்பட்டு வருகின்றன.

பெரியார் – அம்பேத்கர் படைப்புகளும், பரவலாக இந்தியாவிலும், பல உலக நாடுகளிலும் முக்கியமாக இளைய தலைமுறையினரால் படிக்கப்படுகின்றன; விவாதிக்கப்படுகின்றன. குறுகிய எல்லைகளுக்குள் பெரியாரை அடைக்க முயலுவது வரலாற்றையும், உண்மை யையும் புறக்கணிக்கும் செயலாகும்.

தமிழ் தேசியம் என்பதன் பொருள் என்ன என்று தெரியுமா அவர்களுக்கு?

செய்தியாளர்: பெரியாரியம் தலித், தமிழ்த் தேசிய அமைப்புகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறதா?

ஆசிரியரின் பதில்: அவர்கள் தமிழர்களும் அல்ல, தேசியவாதிகளும் அல்ல. தமிழ் தேசியம் என்பதன் பொருள் என்ன என்று தெரியுமா அவர்களுக்கு? இது ஒரு ஏமாற்று அரசியல். சில தலித் அறிவுஜீவிகளின் அணுகுமுறை சரி என்றும் கூற முடியாது. “பெரியார் இங்கு இருக்கும்போது என்னிடம் ஏன் வருகிறீர்கள்?” என்று அம்பேத்கரே ஒரு முறை அவர்களைக் கேட்டிருக்கிறார். அந்த அறிவு ஜீவிகளுக்கு அவர் கேட்ட கேள்வியே மிகச் சரியான பதில்.

சுயமரியாதை உணர்வுள்ள எவருமே
பெரியாரியச் சுடரை ஏந்தியவர் தான்!

செய்தியாளர்: பெரியாரியம் என்ற சுடரை ஏந்தி, சமூக நீதிக்காகப் போராட புதிதாக எவரேனும் முன்வந்திருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

ஆசிரியரின் பதில்: எந்த அரசியல் அமைப்புடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும் எல்லோருமே பகுத்தறிவாளர்களாக இருக்கவே விரும்புகிறார்கள். அவர்கள் சமூக அநீதியை அடியோடு அழித்து சமூகநீதியை நிலைநாட்டுபவர்களாக இருக்க விரும்புகிறார்கள். சுயமரியாதை உணர்வுள்ள எவருமே பெரியாரியச் சுடரை ஏந்தியவர் தான். மானுட உயர்வுக்காகப் போராடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெரியார் என்ற சுடரை ஏந்தியவர்கள் தான். பெரியாரை எங்கள் ஏகபோக உரிமை என்று எப்போதும் நாங்கள் சொந்தம் கொண்டாடுவதில்லை.

செய்தியாளர்: பார்ப்பனியத்தை பெரியார் தீவிரமாக எதிர்த்தார் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. பார்ப்பன எதிர்ப்பு என்பது இன்றும் தேவைப்படுகிறதா?

ஆசிரியரின் பதில்: மானுட இழிவும், பாகுபாடுகளும் தான் பார்ப்பனியம். மனித் தன்மை இழந்தவர்களை மீண்டும் மானுடர்களாக மாற்றுவதே எங்கள் பணி. எனவே தான், நாங்கள் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம். பெரியார் இயக்கம் வன்முறையை நாடாத, மனிதநேய இயக்கம். ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பைத் தீவிரமாக எதிர்க்கும் இயக்கம்.

நடிகர் விஜய்யின் அரசியல் முன்னெடுப்பை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

செய்தியாளர்:  நடிகர் விஜய்யின் அரசியல் முன்னெடுப்பை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? பெரியாரைத் தங்கள் கொள்கை வழிகாட்டி என்கிறாரே அவர்?

ஆசிரியரின் பதில்: முதல் பொதுத் தேர்தலிலிருந்து அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் வரை எத்தனையோ பேர் வந்ததையும், போனதையும் பார்த்து, அரசியலில் அனுபவம் உள்ளவர்களுக்கு இது மற்றுமொரு சுவாராஸ்யமான அத்தி யாயம். அவ்வளவே!  எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வெறும் திரைப்பட நடிகர்களாக மட்டுமே இருக்காமல், திராவிடக் கொள்கைகளை முன்னிறுத்தினார்கள். எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தில் இணைந்திருந்தார்; பரப்புரையாளராகவும் இருந்தார். ஜெயலலிதாவும் அவரைப் பின்பற்றியே செய லாற்றி வந்தார்.

த.வெ.க.வின் கொள்கையல்ல அது!

செய்தியாளர்:   வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜர், அம்பேத்கர் மட்டுமின்றி பெரியாரும் தங்களின் வழிகாட்டித் தலைவர்கள் என்றெல்லாம் சொல்கிறாரே நடிகர் விஜய்?

ஆசிரியரின் பதில்: இது ஒரு ஃபார்முலா. அவருடைய கொள்கையல்ல.

செய்தியாளர்: தமிழ்த் தேசியம், பெரியார் எதிர்ப்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அரசியல் செய்து வரும் சீமானின் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆசிரியரின் பதில்:தெளிவான மனநிலையும், மானுடப் பண்பும் நிறைவந்தவர்கள் பற்றி மட்டும் தான் நான் பதில் சொல்வேன். நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.

தமிழுக்குப் பெரியார் ஆற்றிய தொண்டு

செய்தியாளர்: தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் இகழ்ந்ததாக நிர்மலா சீதாராமன் விமர்சித்து வருகிறாரே?

ஆசிரியரின் பதில்: பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி அவருடையது. இது ஒரு திரிபுவாதம். ஆயிரம் நிர்மலாக்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் பெரியாரின் பிம்பத்தை ஒழித்துவிட முடியாது. தமிழ் மொழிக்கு அவர் ஏகபோக உரிமையாளர் அல்ல. தமிழ் மொழி மீது உண்மை யான பற்றுள்ளவர்கள் அவருடைய விமர்சனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள். தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்தவர் பெரியார். அவர் அறிமுகம் செய்த மாற்றங்களை அகில உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. மொழி என்பது போர்க்கருவி போல் இருக்கவேண்டும். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வார்த்தைகளுக்கு மாறுபட்ட பொருள் கொள்ளப்படுவது உண்டு. பெரியார் சொன்ன பொருள் வேறு. இதுதான் உண்மை.

பெரியார் சிந்தனைப் பற்றுள்ள எந்த இயக்கமும், கட்சியும் தோல்வியடையாது!

செய்தியாளர்: உங்களுக்கு வாரிசாக இயக்கத்தில் எவரை யேனும் உருவாக்கி வருகிறீர்களா அல்லது உங்களுக்குப் பின் பெரியாரியத்தைத் தொடர்ந்து தி.மு.க.வே போற்றிப் பாதுகாத்துவரும் என்று கருதுகிறீர்களா?

ஆசிரியரின் பதில்: மனிதநேயமும், சுயமரியாதையும் நிறைந்த ஒரு மக்களாட்சிக்கு, ஒரு நல்ல அரசு அமைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்குப் பெரியாரியம் அவசியமான அரசியல். பெரியார் என்றென்றும் தேவைப்படுபவர். பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவின் அடிச்சுவட்டில் இயங்கும் தி.மு.க. என்றுமே மக்களின் நலனுக்காகப் பாடுபடும். பெரியாரின் இயக்கம் ஒரு சமூக இயக்கம்; அறிவியல் இயக்கமும் கூட. அறிவியல் என்றுமே தோல்வியடையாது. பெரியார் சிந்தனைப் பற்றுள்ள எந்த இயக்கமும், கட்சியும் தோல்வியடையாது.

நன்றி. ‘தி டைம்ஸ் ஆஃப் இண்டியா’ – 24.12.2025

மொழியாக்கம்: எம்.ஆர்.மனோகர்

உதவி: சமா

- விடுதலை நாளேடு,28.12.25