செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி!

 

‘‘ஊன்றிப் படியுங்கள், உண்மையைப் பரப்புங்கள்!’’


உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது!

இந்தியாவில் இரண்டே அணிகள்தான்;  ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி!

சமூகநீதி அணியை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திரள்வோம்!

நம் நாட்டின் உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது!  இனி இந்தியாவில் இரண்டே அணிகள்தான்;  ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி! சமூகநீதி அணியை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திரள்வோம்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியாவில் மட்டுமே இருக்கும், இந்து மதத்தின் கொடிய நோய்களான வர்ணாசிரமம் – ஜாதி அடிப்படையில் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த மக்க ளுக்கு வாய்ப்புகளை வழங்கவும், அவர்களின் வாழ்வு மேம்படவும் சமூகநீதியைச் செயல்படுத்தக் கொண்டுவரப்பட்ட முறையே இடஒதுக்கீடு ஆகும்.

உண்மையில், எல்லா அதிகாரப் பதவிகளையும், கல்வியையும் தங்களுக்கென்றே ‘ஒதுக்கீடு’ செய்துகொண்டவர்கள் பார்ப்பன – உயர்ஜாதியினர். ‘இன்னாருக்கு இது தான்! இன்னின்னாருக்கு இந்த உரிமைகள் கிடையாது’ என்பது பார்ப்பனர்களின் மனுஸ்மிருதி இடஒதுக்கீட்டு முறை. அந்த உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகச் செய்யப்பட்ட மறு ஒதுக்கீட்டு முறை தானே இன்றைய சமூகநீதி இடஒதுக்கீட்டு முறை!

அதனைக் கொண்டுவருவதற்கான போராட்டம் எத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய சமஸ்தானங்களான கோல்ஹாப்பூரிலும் (1902), மைசூரிலும் (1921) பார்ப்பனரல்லாதாருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்னர் 1928இல் தான் மதராஸ் மாகாணத்தில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு ஆணை செயல்படுத்தப்பட்டது. அதுவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலான பின்னர் 1950 இல் பார்ப்பனர்களின் பொய் வழக்கால் ரத்து செய்யப்பட்டது.

1951 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம்!

பின்னர் தந்தை பெரியார் நடத்திய மாபெரும் ‘மக்கள் போராட்டம்’ தான் 1951 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டுவரக் காரணமாகியது. அப்போதும், மாநிலங்களில் இருந்த இடஒதுக்கீட்டுக்கு அனுமதி கிடைத்ததே தவிர, ஒன்றிய அரசுப் பணிகளிலும், கல்வி வாய்ப்புகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 1993-லும், 2006-லும் தான் கதவு திறக்கப்பட்டது.

இத்தனை ஆண்டுகள் ஆனபின்னும், இன்னும் ஒன்றிய அளவிலான இடங்களில் ஒடுக்கப்பட்டோ ருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு முழுமையான அளவில் நிரப்பப்படவில்லை என்பது தானே நிலைமை! புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கும் உண்மையும் அதுதானே!

ஒவ்வொரு காலத்திலும் சமூக நீதி என்னும் தேரை ஒவ்வோர் அடி முன் நகர்த்துவதற்கும், எத்தனை எத்தனை ஆண்டுகள்? எத்தனை எத்தனைப் போராட்டங்கள்? மக்கள் மன்றத்தில் விழிப்புணர்வூட்டி, அணி திரட்டி, சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் சட்டங்களைக் கொண்டுவந்தால், நீதிமன்றம் குறுக்கே வந்து நிற்கும்.

அங்கும் வாதாடி, போராடி, அவர்கள் ஏற்படுத்தும் குறுக்கீடுகளையும், தடைகளையும், சட்ட ரீதி யாக உடைத்து, இடைச்செருகல்கள் என்னும் வெட்டுகளையும், காயங்களையும் தாங்கிக் கொண்டு தான், இயன்றவரை இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்.

சமூக ரீதியாக, கல்வி ரீதியாக இடஒதுக்கீடு!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான போது, சமூக ரீதியாக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு, அதுவரை மறுக்கப்பட்ட உரிமைகளை வழங்க முடிவெடுக்கப்பட்டது. அப்போதே பொரு ளாதார அளவில் பிற்படுத்தப்பட்டோர் என்று சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அது நிரந்தரமானதல்ல; இந்தியாவில் இருக்கும் பொருளாதாரச் சமநிலையற்ற தன்மைக்கு, பிறவி அடிப்படையிலான பேதமே காரணமாக இருக்கிறது என்பதற்காகத் தான், மிகச் சரியாக சமூக ரீதியாக, கல்வி ரீதியாக இடஒதுக்கீடு என்பது ஏற்கப்பட்டது.

பொருளாதார அளவுகோல் தடையைக் கொண்டுவந்து திணித்தது உச்சநீதிமன்றம்!

ஆனால், மண்டல் ஆணைய அறிக்கை ஏற்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு, மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அரசால் ஏற்கப்பட்ட பின்னர், அது தொடர்பான இந்திரா சஹானி வழக்கில், இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்ற (இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத) முட்டுக்கட்டையையும், பிற்படுத்தப்பட்டோரில் கிரிமீலேயருக்கு இடஒதுக்கீடு இல்லை என்ற பொருளாதார அளவுகோல் தடையையும் கொண்டுவந்து திணித்தது உச்சநீதிமன்றம்.

மண்டல் அறிக்கையை அமல்படுத்தக் கோரி, நாம் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தினோம். அது குறித்தெல்லாம் எந்தச் செய்தியும் வெளியிடாத ஊடகங்கள், இடஒதுக்கீட்டை எதிர்த்து வடநாட்டில் சில உயர்ஜாதியினர் நடத்திய போராட்டங்களுக்கு வானளாவ விளம்பரம் தந்தன. அதே போலத் தான் 2006 இல் கல்வித் துறையில் இடஒதுக்கீடு வழங்கப்படும் 93 ஆம் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோதும், போராட்டங்களை நடத்தி இட ஒதுக்கீட்டை எதிர்த்தனர்.

பார்ப்பனர், உயர்ஜாதியினர் என்றால் அவ்வளவு எளிதாக எல்லாம் நடந்துவிடுகின்றன!

ஆனால், எந்தவிதப் போராட்டமும் இல்லாமல், காத்திருப்பும் இல்லாமல், அய்ந்தே நாள்களில் பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை (EWS), 103 ஆம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் உடனடியாக நிறைவேற்றிக் கொண்டனர். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்ப டைக்கே விரோதமான, அரசியலமைப்புச் சட்ட விவாதங்களின் போதே தூக்கி எறியப்பட்ட பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து திணித்து, அதையும் ஏற்றுக் கொண்டது உச்சநீதிமன்றம்! பார்ப்பனர், உயர்ஜாதியினர் என்றால் அவ்வளவு எளிதாக எல்லாம் நடந்துவிடுகின்றன. அதைவிட வேகமாக நிதி ஒதுக்கீடு ஒன்றிய அரசால்.

எவ்வளவு மோசமான மனநிலை!
எவ்வளவு மோசமான ஆதிக்கம்!

ரோகித் வேமுலா, பாயல் தத்வி போன்ற மாணவர்களால், கல்வி நிறுவனங்களில் ஜாதி, மத அடிப்படையில் பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட தைக் கண்டித்து, 2019 இல் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் தந்த ஆணையின் படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில்தான்  உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி, மத ரீதியான பாகுபாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தும் யு,ஜி.சி.யின் வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிடப்பட்டன. அதைக் கண்டித்து உயர்ஜாதியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகச் செய்திகள் பரபரத்தன. உடனடியாக உச்சநீதிமன்றம் தலையிட்டு, பாகுபாடுகளைத் தடுக்க முயற்சி செய்யும் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உடனடியாகத் தடை வழங்கியது. பாகுபாட்டை, நிறுவனப் படுகொலைகளைத் தடுப்பது உயர்ஜாதி யினருக்கு வலிக்கிறது என்றால் எவ்வளவு மோசமான மனநிலை! எவ்வளவு மோசமான ஆதிக்கம்! இதுதானே இன்றைக்கும் இந்தியாவின் நிலை.

“இடஒதுக்கீடு இல்லாத இந்தியா”வாம்!

ஒடுக்கப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் ஜாதி ரீதியாக இன்றைக்கும் அனுபவிக்கும் தீண்டாமைக் கொடுமைகள், எதிர்கொள்ளும் தடைகள் ஏராளம், ஏராளம். ஆனால், அந்தக் கொடுமைகளைக் கடக்க உதவி செய்யும் சமூகநீதியை நசுக்க வேண்டும் என்றும், இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்றும் இன்றைக்கு ஓர் உயர்ஜாதிக் கூட்டம் “இடஒதுக்கீடு இல்லாத இந்தியா” என்ற ஆணவத்தோடு ஒரு புதுப் பெயரில் கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது. அதற்கு ஒரே நாளில் ஊடக வெளிச்சம் கண்ணைப் பறிக்கிறது. சமூக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று இருப்பதை, பொருளாதார ரீதியாக என்று மாற்றி, அதன் மூலம் மீண்டும் உயர்ஜாதியினர்க்கு மட்டுமே கல்வி, வேலைவாய்ப்பு என்று கொண்டுவர வேண்டுமாம்!

முன்பு எப்படி மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் குறித்துத் தவறான கருத்தினை வடநாட்டு, தென்னாட்டுப் பார்ப்பன ஊடகங்களும் திட்டமிட்டுப் பரப்பியதோடு, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக்கு வெளியிலிருந்து அதுவரை ஆதரவு தந்து வந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற வலதுசாரிகள் வாபஸ் வாங்க, இடதுசாரிகளான கம்யூனிஸ்டுகளும், உரிய ஆதரவினைத் தரவில்லை.

அதற்குமுன் தமிழ்நாட்டில், எம்.ஜி.ஆர். முதலமைச்ச ராக இருந்தபோது 9 ஆயிரம் வருமான வரம்பு ஆணை யைக் கொண்டு வந்தபோது, சி.பி.எம் (மார்க்சிஸ்ட்) கட்சி, இடஒதுக்கீட்டில் ‘பொருளாதார வரம்பு’ அல்லது கிரீமிலேயர் கோட்பாடு இருக்க வேண்டும் என்ற தேசிய அளவிலான தங்கள் கட்சியின் கொள்கை முடிவுக்கு ஏற்ப, எம்.ஜி.ஆரின் வருமான வரம்பு முடிவினை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தது. பின்னணியில் உயர்ஜாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டையும் சி.பி.எம். ஆதரித்தது என்பதும் வரலாறு.

ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.அய்.) 9 ஆயிரம் ரூபாய் உச்சவரம்பு பிரச்சினையின்போதும், EWS சட்டத்தின்போதும் சமூக ரீதியான பிற்படுத்தப்பட்ட நிலையே முக்கியமானது எனக் கருதி, இந்த பொருளாதார வரம்பை எதிர்த்த திராவிடர் கழகம், தி.மு.க., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் போராட்டத்திற்கு ஆதரவாக நின்றது.

அதே நிலைதான் மீண்டும் வடக்கே உள்ள பார்ப்பனர்களால் – பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சின் ‘‘கண் ஜாடையோடு’’, பொல்லாத வாடைக்காற்றாக வீசி, உயர்ஜாதிகளின் ஆதரவோடு, உ.பி. உள்ளிட்ட மாநிலங்க ளின் தேர்தல்களையே மனதில் கொண்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒற்றுமையற்று இருக்கிறார்கள்; அவிழ்க்கப்பட்ட நெல்லிக்காய் மூட்டையென சிதறிக் கிடக்கிறார்கள்; ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஊட்டும் மதப் போதையில் மயங்கிக் கிடக்கிறார்கள் என்ற மமதையில் உயர்ஜாதிப் பார்ப்பனக் கூட்டம் மீண்டும் தார்ப்பாச்சையை இறுக்கிக் கொண்டு முண்டிப் பார்க்கிறது!

அதை முளையிலேயே கிள்ளியெறிய, அத்துணை சமூகநீதியில் நம்பிக்கை உள்ளவர்களும் ஒன்றுபட்டு, ஓரணியில் திரளவேண்டும்.

தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி

எச்சரிக்கையோடும், விழிப்போடும் அணுக வேண்டிய காலகட்டம் இது! சமூகநீதியால் பலன்பெற்ற மக்களிடமே, இடஒதுக்கீடு என்பது தரக் குறைவானது என்றும், இழிவானது என்றும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி, தகுதி- திறமை என்னும் மாய, மோசடி வலைக்குள் சிக்கவைக்க அனைத்து வகை ஊடகங்களும், பிரச்சாரங்களும் நடந்திருக்கின்றன. தாங்கள் அனுபவித்தால் போதும், அடுத்தவருக்கு எதற்கு இந்த ஏணி என்று அதை எட்டி உதைக்கும் கோடரிக் காம்புகள் சிலவும் நம்மில் இருப்பதை நாம் அறிவோம். t

அனைவரையும் ஓரணியில் இணைத்துப்
போராட வேண்டியது அவசியம்!

அதை முறியடித்து, நமது இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வூட்டி, நேரடியாகவும், மறைமுகமாகவும் சமூகநீதியைச் சிதைக்க நடந்திருக்கும் முயற்சிகளை, சூழ்ச்சிகளையெல்லாம் எடுத்துக்காட்டி, இன்று தொடங்கியிருக்கும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி, அனைவரையும் ஓரணியில் இணைத்துப் போராட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

‘‘ஜாதி ஒழிந்த இந்தியா’’

‘ஜாதி ஒழிந்த இந்தியா’வாகக் கொண்டு வர வேண்டும் என்பதே நமது உண்மையான போராட்டம்! அதை நோக்கி இளைஞர்கள் முன்வரவேண்டும்.

ஜாதி என்பது நோய்; பாகுபாடும், தீண்டாமையும் என்பது அதன் வெளிப்பாடுகள்! அதே கிருமிகளை ‘இன்ஜெக்ட்’ செய்து, ‘ஜாதி நோயை’ ஒழிக்கும் மருந்தே இட ஒதுக்கீடு!  ஜாதி ஒழிப்பே நிரந்தரத் தீர்வு!

ஜாதி ஒழிப்பாளர்கள் போல் வேடம் போடும் இந்த ஆதிக்கவாத உயர்ஜாதியினர், ஜாதியை ஒழிக்கும் பணியில் ஈடுபட முன்வருவார்களா? மதத்திலும், சமூகத்திலும் அரசியலிலும் ஜாதி ஆதிக்கம் நிலவுவது குறித்து இந்தத் ‘திடீர் சமத்துவப்’ போராளிகளுக்கு எதிர்ப்பு உணர்ச்சி உண்டா?

‘ஜாதி இருக்கவேண்டும்; அதன் ஏற்றத் தாழ்வு இருக்கவேண்டும்; தங்களின் ஆதிக்கம் குறையக்கூடாது!’

ஆனால், ‘ஜாதி ரீதியான ‘இட ஒதுக்கீடு’ மட்டும் இருக்கக்கூடாது என்பது எவ்வளவு பெரிய மோசடி!

எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் உண்டா இந்நாட்டில்?

சமமான வாய்ப்புகளை, சமமான வசதிகளை, சம உரிமையை வழங்காமல் தகுதி, திறமை மட்டும் எப்படி சமமாக உருவாகும்? காணப்பட முடியும்?

இந்தப் புரட்டை அம்பலப்படுத்தினால்தானே நம்முடைய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சமூகநீதி என்றால் என்னவென்று புரியும்! அதைச் செய்யவேண்டியது சமூகநீதியாளர்களின் முதன்மைக் கடமை அல்லவா?

அணியமாவோம்! அணி திரள்வோம்!

திராவிடர் கழகம் இதனை முன்னின்று முனைப்புடன் செயல்படுத்தும்! குறுகிய கால அரசியல் சூழல்களையெல்லாம் மறந்து, அனைவரும் திரள வேண்டியது அவசியம். நம் உரிமைகளைப் பறிக்க எல்லா பக்கங்களிலிருந்தும் சூழ்ச்சிகள், குழிபறிப்புகள், ஈட்டிகள், குண்டுகள், சுனாமிகள், சுழற்காற்றுகள் என்று ‘சூப்பர் எல்நினோ’வாக, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆளும் இந்தக் காலம் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்! உயிரைக் கொடுத்தும் உரிமையைப் பாதுகாப்போம்!

கட்சிகளைக் கடந்து, இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அணிக்கு எதிராக, இட ஒதுக்கீடு எங்கள் உரிமை! எங்கள் தேவை! தேவை!! அதைப் பறிக்கும் முயற்சியை முறியடிக்க, மீண்டும் இரண்டாவது மண்டல் அறப்போர் பேருருக்(விஸ்வரூபம்) கொள்ளும், கொள்ள வைப்போம்!

இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதிக்கு ஆதரவான அணி; மற்றொன்று, சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி.

சமூகநீதிக்கு ஆதரவான அணியை வலுப்படுத்த வேண்டியது நமது முதல் பணி!

அணியமாவோம்! அணி திரள்வோம்! ஆர்ப்பரிப்போம்! உரிமை வெல்வோம்! உரிமை வெல்வோம்!

கி.வீரமணி

தலைவர்,

    திராவிடர் கழகம்

சென்னை

11.8.2026

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் சட்டமாக்குக! அதை அவமதிப்போரைத் தண்டிக்கவும் வகை செய்யவேண்டும்!

 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் சட்டமாக்குக! அதை அவமதிப்போரைத் தண்டிக்கவும் வகை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் மூலம் உலகுக்கே தமிழை, எளிய முறையில் கற்றுக்கொள்ள, கணினி முதலியவற்றில் பயன்படுத்த வைத்து, உலக நாடுகளில் தமிழ் எளிதில் பரவும் வகையில் கொண்டு சென்றவர் தந்தை பெரியார். (‘பகுத்தறிவு இதழ்’, 13.1.1935).

‘‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’’ என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.

‘‘எம் மொழி செம்மொழி’’ என்ற உரிமையைப் பெற்றுத் தந்தார் முத்தமிழறிஞர் கலைஞர். அது மட்டுமல்லாமல், மனோன்மணீயம் சுந்தரனார் பாடிய மொழி வாழ்த்தின் சில முக்கியப் பகுதிகளைத் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ  மொழி வாழ்த்தாக ஆக்கி, அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாட ஆணை பிறப்பித்தார்.  (அரசு ஆணை எண்: 1393 (தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை) நாள்: 17.6.1970).

தனியாக ஓர் ஆணையே பிறப்பிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது!

ஆனால், அதனைத் தவிர்க்கும் வகையில், இன்றைய காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரர்  பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்திருக்காமல், கண்ணை மூடிக் கொண்டு அவமதித்த காரணத்தால், அதற்குத் தனியாக ஓர் ஆணையே பிறப்பிக்கவேண்டிய அவசியம் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு ஏற்பட்டது. பின்னர், அதை மாநிலப் பாடலாக அறிவித்தும் ஆணையிட்டது தளபதி மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தி.மு.க. அரசு! (அரசு ஆணை எண்: 272 – தமிழ் வளர்ச்சித் துறை நாள்: 17.12.2021).

இருந்தும், தொடர்ந்து தமிழ்மொழி, தமிழ்நாட்டிலேயே மதிக்காத வகையில், அரசு நிகழ்ச்சியில் பாடுவது தவிர்க்கப்படுவதைவிட, பெருத்த வேதனையும், வெட்கமும் வேறு ஏது?

ஏன் அலட்சியப்படுத்தப்பட்டது?

அந்தப் பாடலை எழுதிய மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தில், தற்போது துணைவேந்தராக உள்ளவர் நடந்து கொண்ட முறை பலரின் கண்டனங்களைப் பெற்றது. மீண்டும் பதவி நீடிப்புக்காகவோ, ஆளுநரைக் ‘குளிர்’விப்பதற்காகவோ, அதனால் ஏற்படும் பயனை எதிர்ப்பார்த்தும்தான் அவ்வாறு நடந்துகொண்டார் என்று பேசிக் கொள்ளப்படுகிறதே! அது ஏன் அலட்சியப்படுத்தப்பட்டது?

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தமிழ்நாட்டிலேயே மூன்றாவது இடத்திற்குத் தள்ளுவது, ஒரு மன்னிக்கப்படக் கூடாத குற்றம். அதை முதலில் பாட வற்புறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் முன்மொழிந்தபோது, ‘‘இதில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். முதலில் தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் பாடுவதுதான், அரசு நிகழ்ச்சிகளில் நடைமுறையாக இருக்கவேண்டும்! இதற்காக பிரத மருக்கு, இரண்டுமுறை கடிதம் எழுதியுள்ளேன்’’ என்று கூறியிருக்கிறார். வரவேற்கத்தக்கது!

ஆனால், சட்டமன்றத்தில் ஆளுநர் வரும்போது மேற்கண்டவாறு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தந்து பாடப்படுவதில்லை என்பது ஏற்கத்தக்கதா?

சட்டமன்ற நடவடிக்கையும் ‘அரசு நிகழ்ச்சிதான்’ என்பதை உணர்த்தியாக வேண்டும் – அதை உணராதவர்களுக்கு!

தனிச்சட்டமாகவே ஆக்கவேண்டும்!

இதற்குச் சிறந்த வழி, இதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதைவிட, தனிச்சட்டமாகவே ஆக்கப்பட வேண்டும். இதனைக் கடைப்பிடிக்காததை ஒரு குற்றமாக அந்தச் சட்டத்தில் பிரிவுகள் தெளிவுடன் அறிவிக்கவேண்டும்.

அதற்குப் பிறகு, அரசு யாரையும் ‘‘கெஞ்ச வேண்டிய’’ அவசியமும் இல்லை.

முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியில் இப்படி ஒரு சட்டத் திருத்தம், புதிய சட்டமாக வந்தால், அவரது ஆட்சிக்கும் பெருமை சேர்க்கும்!

சிந்திப்பார்களாக!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

10.8.2026       

செவ்வாய், 14 ஜூலை, 2026

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது


கால் நூற்றாண்டுக்குப் பிறகு ‘ஞானபீட விருது’ பெற்றார் கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரையில் இலக்கியத்திற்கு தனிப் பல்கலைக் கழகம் தேவை என்று வேண்டுகோள்


இந்தியா

புதுடில்லி, ஜூலை 14 இந்தியாவில் இலக்கியத்துக்கு உயர்ந்தபட்சமாக வழங்கப்படும் ‘ஞானபீட விருது’ இந்த ஆண்டு கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழி பெற்றிருக்கும் மூன்றாவது ஞானபீட விருது இதுவாகும்.

நேற்று (13.7.2026) டில்லியில் நடந்த விழாவில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் டாக்டர் கரண்சிங் ஞானபீட விருதினை  கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வழங்கினார். ஞானபீட அமைப்பைச் சேர்ந்த சாகு அகிலேஷ் ஜெயின், சிறீ முதத் ஜெயின், பிரதீபா ராய், ஆர்.என்.திவாரி ஆகியோர் விழா மேடையில் இருந்தனர். விருதைப் பெற்றுக்கொண்டு கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரை ஆற்றினார்:

“தமிழ்நாட்டின் தென்மேற்கு மூலையில், இந்தியாவின் வரைபடத் திற்குச் சிக்காத ஒரு கடைக் கோடியில், 60 வீடுகளே கொண்ட ‘மெட்டூர்’ என்ற சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நான் பிறந்தேன். 1950களில் வைகை நதியின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்டது; அதன் நீர்தேங்கும் பரப்புக்காக 14 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. அதில் ஒன்றுதான் நான் பிறந்த ஊர்.

இடுப்புவரை மூழ்கிய ஊர் கழுத்துவரை மூழ்கத் தலைப்படும்போது, அந்த கிராமத்தின் தாயொருத்தி உலர்ந்த கண்ணீரோடும் நனைந்த சேலையோடும் கதறிக்கொண்டே கரையேறுகிறாள். அவள் இடுப்பில் ஒரு பெண் குழந்தை, கைப்பிடியில் ஓர் ஆண் குழந்தை. அப்போதெல்லாம் அவளுக்குத் தெரியாது இடுப்பில் உள்ள பெண்குழந்தை அடுத்த ஆறு மாதத்தில் இறந்துபோகும் என்றும், கைப்பிடியாய்க் கூட்டிவந்த ஆண்குழந்தை அடுத்த எழுபது ஆண்டுகளில் ‘ஞானபீட விருது’ பெறும் என்றும்! அன்று கால்சட்டை நனைய நனையக் கரைசேர்ந்த சிறுவன்தான் இன்று இந்த ஞானபீட மேடையில் உங்கள் முன் நிற்கிறான்; அவன் பெயர் வைரமுத்து!

பிழைக்கவந்த வடுகப்பட்டியில் வகுப்பு அவனுக்கு எழுத்துகளைச் சொல்லிக்கொடுத்தது; வறுமை அவனுக்கு வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்தது. இரண்டும் அவனைக் கையோடு கூட்டிவந்து கவிதையிடம் சேர்த்தன.

நல்லது காண்பது இலக்கியம்; நம்பிக்கையூட்டுவது இலக்கியம். “விரும்பியது அமையாவிட்டால் அமைந்ததை விரும்பு” என்கிறது உபநிஷத். அமைந்ததை விரும்பா விட் டால் விரும்பியதை அமை என்கிறது இலக்கியம்

இது 60ஆம் ஞானபீடம்

என் அரைநூற்றாண்டு எழுத்து களைப் பாராட்டி ஞானபீடம் 60 கிராம் அமிர்தப் புட்டி வழங்கியிருக்கிறது. இது எனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமைகொள்ள முடியாது. ஒரு கிராம் திருவள்ளுவருக்கு, ஒரு கிராம் இளங்கோவடிகளுக்கு, ஒரு கிராம் கம்பருக்கு, பாரதிக்கு, பாரதிதாசனுக்கு, அண்ணா, கலைஞர், கண்ணதாசனுக்கு ஆளுக்கொரு சொட்டு. அவர்களுக்கு மட்டுமா? காளிதாசனுக்கு ஒருசொட்டு, வேதவியாசருக்கு ஒரு சொட்டு. வால்மீகிக்கு ஒரு சொட்டு, தாகூருக்கு, ஷேக்ஸ்பியருக்கு, ஃபிர்தவுசிக்கு, மில்டனுக்கு. ஷெல்லி, பைரன், கீட்ஸூக்கு, டி.எஸ்.எலியட்டுக்கு, எஸ்ராபவுண்டுக்கு கடைசியாய் ஒரு சொட்டு கலீல் ஜிப்ரானுக்கு இப்படிப் பகிர்ந்து கொடுத்ததுபோகக் கரண்டியில் ஒட்டியிருக்கும் ஈரப்பசை மட்டும் என் பங்கு ஆகலாம்.

இந்த விருது என்னை ஒரு சாய்வு நாற்காலியில் சாய்த்துவிடாது. இது ஓடிவந்த குதிரைக்கு நீட்டப்படும் புல் அல்ல; குதிரை மீது விழுந்த மற்றுமொரு சாட்டையடி. குதிரை இன்னும் வேகமெடுக்கும்; நான் வெறிகொண்டு ஓடுவேன். இந்த விருதுக்கு என் தமிழ் இன்னும் நியாயம் செய்யும்.

எனக்குச் சில கேள்விகள் உண்டு

இலக்கியத்துக்காக இந்தியா ஒரே ஒரு நோபல் பரிசு பெற்று 113 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன் பிறகு நோபல் பரிசு பெறத் தகுதியான ஒரு படைப்பாளியை இந்தியா தயாரிக்கவில்லையா? அல்லது நோபல் குழு கண்டுபிடிக்கவில்லையா? ஏகப் பட்ட உலக அழகிகளைத் தயாரித்த இந்தியா உலகக் கவிகளைத் தயாரிக்க மறந்ததா?

ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகம் காணும் நாம், இலக்கியத்துக்கு என்று தனியே ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவக் கூடாதா? அது எப்போது?

இந்தக் கேள்விகளோடு என் ஏற்புரையை நிறைவுசெய்கிறேன். இந்த விருதுக்கு என்னைத் தகுதிப்படுத்திய ஒவ்வொரு சமூக மனிதனுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரை வழங்கினார்.

ஞாயிறு, 12 ஜூலை, 2026

தமிழ்த்தென்றல் திரு.வி.க. எழுதியிருப்பதை எடுத்துக்காட்டி ‘மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா’வில் தமிழர் தலைவர் கருத்துரை

 

பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்குப் போட்டியாக காங்கிரஸ் பார்ப்பனர் ஒருவரால் தொடங்கப்பட்டதுதான் ‘சென்னை மாகாணச் சங்கம்’

சென்னை, ஜூலை,11 மணவழகர் மன்றத்தின் முத்தமிழ் விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.  “பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்குப் போட்டியாக, காங்கிரசிலிருக்கும் பார்ப்பனர் ஒருவரால் தொடங்கப்பட்டதுதான், ‘சென்னை மாகாணச் சங்கம்  அதில்  யானும், ஈ.வெ.ரா. வும் துணைத்தலைவர்களாக இருந்தோம்” என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. எழுதி யிருப்பதாக தமிழர் தலைவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.

1957இல் தொடங்கப்பட்ட சென்னை மணவழகர் மன்ற அறக்கட்டளை, அதன் 70 ஆம் ஆண்டு முத்தமிழ் விழா 10.07.2026, வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு, தியாகராயர் நகரில் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

இந்நிகழ்வில், மணவழகர் மன்றத்தின் செயலாளர் கே.கன்னியப்பன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அதில் அவர், “தமிழ்த்தென்றல் திரு.வி.க.கூறியது போல், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவராகவும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. தாய் என்றும் பேசியிருக்கிறார்கள்” என்று ஒரு முக்கியமான வரலாற்றுக்குறிப்பை நினைவூட்டிப் பேசினார். வரவேற்புரை நிறைவு பெற்றவுடன் சிறப்பு விருந்தினர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் செ.முகம்மது அலி, “இன்றைய தமிழர் நிலை” எனும் தலைப்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கே.பாலகிருஷ்ணன், “திரு.வி.க.வும், தொழிலாளர் இயக்கமும்” எனும் தலைப்பிலும் உரையாற்றினர். முன்னதாகவே திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் தமது உரையில், “இன்றைய அரசியல் சூழல் மாறியிருக்கிறது. அவர் வருவார், இவர் வருவார் என்று இல்லாமல் எவர் வந்தாலும் வராவிட்டாலும் மணவழகர் மன்றம் நிகழ்ச்சி நடைபெறும்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே தொடங்கினார். தொடர்ந்து, தந்தை பெரியாருக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களுக்கும் கருத்து மோதல்கள் இருந்தாலும் அது கண்ணியமாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, “இது என்றைக்கும் பாடமாக இருக்கக்கூடியது” என்றார். மேலும், மணவழகர் மன்ற வரலாற்றில் மேனாள் நீதியரசர் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், எ.ஆர்.லட்சுமணன், சுந்தரேசன் ஆகியோரை நினைவு கூறாமல் இருக்க முடியாது” என்றார். மேலும் அவர், வரவேற்புரை வழங்கிய கன்னியப்பன் அவர்களின் பணிகளையும் நினைவு கூர்ந்து பாராட்டினார்.

தொடர்ந்து, தனக்கு வழங்கப்பட்ட ‘தந்தை பெரியாரும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வும்” என்ற தலைப்பை சுட்டிக்காட்டி, “Unlike poles attracks each other” என்ற காந்தவியலைச் சுட்டிக்காட்டி இருவரின் கருத்துகளையும், குணங்களையும் பட்டியலிட்டார். “சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியார் பொதுவாழ்க்கைக்கு வந்தார்” என்பதை முன்னோட்டமாகக் கூறிவிட்டு, நீதிக்கட்சி இருந்த காலத்தில், அதற்கு போட்டியாகத்தான் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர் ஒருவரால் தொடங்கப்பட்டதுதான், சென்னை மாகாண சங்கம். அந்த சென்னை மாகாண சங்கத்தில், தந்தை பெரியாரும், திரு.வி.க.வும் துணைத் தலைவர்களாக இருந்ததை, திரு.வி.க.வே எழுதியிருப்பதை, அவரது எழுத்துகளிலேயே வாசித்துக்காட்டினார். வாசிக்கும் போதே அந்த தமிழின் இனிமையில் மனதைப் பறிகொடுத்து, “கடலூர் மாநாடு, ஈரோடு மாநாடுகளில் திரு.வி.க. பேசியதை கேட்கும் பேறு பெற்றவன் நான். அவரது பேச்சு மட்டுமல்ல, எழுத்தும் நம்மை ஈர்க்கக்கூடியது” என்று பெருமிதத்துடன் கூறினார். அடுத்து திரு.வி.க. சொன்ன இன்னுமொரு முக்கியமான கருத்தான, “தமிழ்நாடு காங்கிரஸ் ஈ.வெ.ரா வின் உழைப்பால் நன்றாக உண்டு கொழுத்தது” என்பதைச் சொன்னவுடன் பார்வையாளர்கள் நன்றாக ரசித்து சிரித்தனர்.

அடுத்து, “ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கம் எனது சன்மார்க்க இயக்கத்திலிருந்து பிறந்தது. 90% ஒற்றுமை! 10% வேற்றுமை! வேற்றுமை எங்களுக்குள் போரை மூட்டியது. ஆனால், வேற்றுமை ஆக்கம் பெறவில்லை” என்று திரு.வி.க. சொன்னதையே எடுத்துரைத்தார். மேலும் அவர், “அந்த வேற்றுமையும் கண்ணியத்துடன் இருந்தது. இது பொதுவாழ்வில் இருப்போருக்கு என்றைக்கும் பாடமாகும்” என்று கூறி, பெரியாரின் தொண்டும், உண்மையும் எப்படிப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பட்டியலிட்டு, காஞ்சிபுரம் மாநாட்டில் கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்தாலும், சந்திக்கும் போது, காழ்ப்புக் காட்டாத நண்பர்களாகவே இருந்ததையும் சுட்டிக்காட்டி தமது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக மணவழகர் மன்றத்தின் துணைச் செயலாளர் சு.கருணாநிதி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்வில்,  கழகத்தின் செயலவைத்தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி,  தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, கோ.வீ.ராகவன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச் செல்வன், தாம்பரம் மாவட்டத் தலைவர், முத்தையன், மோகன்ராஜ், கழகச் சொற்பொழிவாளர்கள் பிராட்லா, தேவநர்மதா, பெரியார் மாணாக்கன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ‌.தொண்டறம், சோழிங்கநல்லூர் ஜெயராமன்,  சுரேஷ், பெரியார் பெருந்தொண்டர் த.கு.திவாகரன், அரும்பாக்கம் தாமோதரன், யுகேஷ், தங்கமணி தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

- விடுதலை நாளேடு,11.07.26



அயோத்தி கோயிலில் நடக்கும் ஊழல் பற்றி ‘கடவுள்’ ராமனுக்குத் தெரியுமா?-கி.வீரமணி

 

‘பக்தி’, ‘பக்தி’ என்று ஏமாறும் பக்தர்களே, சிந்தியுங்கள்!

பக்தி’, ‘பக்திஎன்று ஏமாறும் பக்தர்களே, சிந்தியுங்கள்! அயோத்தி கோயிலில் நடக்கும் ஊழல் பற்றிகடவுள்ராமனுக்குத் தெரியுமா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தி, ‘ஆக்டோபஸ்’ அதன் பல கரங்களை விரிப்பது போல, பணிவு, பகிர்வு என்ற பெயரால் தனது ஜாதி, மதவாதக் கொள்கையைப் பரவலாக்கி, தனது ஆதிக்கத்தை மேலும் மேலும், நாளும் நாளும் பரப்பி வருகிறது.

அதன் நூற்றாண்டு கொண்டாடப்படும் இத்தருணத்தில் அதனுடைய செயற்பாட்டிலும், வெளிப்படைத் தன்மை எதுவும் இல்லாது எல்லாம் மறைபொருளாகவே உள்ளன; அதன் ‘ஷாகா’ ஒன்றைத் தவிர.

அது உருவாக்கியுள்ள முக்கிய அமைப்புகளுள் ஒன்று “விஸ்வ ஹிந்து பரிஷத்’ (V.H.P.)!

‘பக்தி போதை‘ மாத்திரைகளை மக்கள் விழுங்கும்படித் தொடர்ந்து செய்து வருகிறது!

இது மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்ததையொட்டி ஆழ்ந்த ‘கவலை’, ‘கரிசனம்’ காட்டியும், மக்களைத் தங்களது வயப்படுத்த ‘கடவுள் பக்தி’ போதையையும், அதன் குறியீடுகளையும் ஆங்காங்கு பாமர மக்கள் முதல் படித்த, பணக்காரர் வரைப் பாய்ந்திடச் செய்து – கோயில் திருவிழாக்கள், மக்கள் மறந்துவிட்ட சடங்கு, சம்பிரதாயங்களுக்குப் புது வடிவம் கொடுத்து, தேர் ஓட்டம் மற்றும் பலவற்றிற்கும் மாதா மாதம் ஏதோ ஒரு பெயரில் புதுப்புது ‘பக்தி போதை’ மாத்திரைகளை மக்கள் விழுங்கும்படித் தொடர்ந்து செய்து வருகிறது!

கோயில் ‘கும்பாபிஷேகங்கள்’ மற்றொரு வகை!

புதுப்புது ‘ஜெயந்தி’ – பண்டிகைகளையும் ‘உருவாக்கி!’

தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் ‘பெரு முதலாளி’களால் (கார்ப்பரேட்) நடத்தப்படுவதால், அவர்களை ஏவி விட்டுப் பழைய குட்டிச் சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், ஓடாத கிராமங்களில் கூடத் தேர் இழுக்கச் செய்தல், முன்பு இல்லாத அனுமன் ஜெயந்தி போன்ற புதுப்புது ‘ஜெயந்தி’ – பண்டிகைகளையும் ‘உருவாக்கி’ வியாபாரங்களையும் தங்கள் வயப்படுத்தி ‘அட்சய திருதி‘ என்று, பல்வேறு ‘மயக்க பிஸ்கெட்’டுகளை தொடர்ந்து தயாரித்துத் தருதல் என்று விதவிதமாகச் செயல்பட்டு வருகிறது.

அறிவியல் தந்த கருவிகள், எலக்ட்ரானிக் மீடியாக்கள், தொலைக்காட்சிகளை வைத்து மத மூட நம்பிக்கைகளைப் பரப்பி, பக்தி போதையூட்டி, ஆட்சியாளர்கள் மீது ஏற்படும் எதிர்ப்பு, அதிருப்தியை அறவே திசை திருப்பவும், மறக்கடிக்கவும் செய்ய இந்தக் கடவுளை, பக்தி மாயையை நல்ல மயக்க மருந்தாக மக்களுக்கு ஊட்டி வருகிறது.

நீதிமன்றத் தீர்ப்புகள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகவே நிற்கும் பரிதாப நிலை!

ஓட்டு அரசியல் நடத்தி, ஆட்சியைப் பிடிக்க விரும்பும் கட்சிகளும், வாக்கு வங்கியை மனதிற்கொண்டே நடைபாதைக் கோயில்களை அகற்றிட உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும், அரசின் ஆணைகளும் இருந்தும், அவற்றைச் செயல்படுத்த மறுக்கின்றன. தீர்ப்புகள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகவே நிற்கும் பரிதாப நிலை!

கும்பாபிஷேகக் கணக்கைப் போட்டிப் போட்டுக் கொண்டு சொன்ன பக்தவத்சலம் ஆட்சி முதல் நேற்றைய தி.மு.க. ஆட்சி வரை அதனால் பெரிய வெற்றியைப் பெற்றதாகத் தெரியவில்லை! ஏமாற்றம் தான் மிச்சம்!

ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., அவற்றின் செயல்பாட்டினைப் பற்றி விவரிக்கையில், கோயில்களையே தங்களது ஆதரவு பெருகும் அமைப்புகளாகக் கருதியே, நடத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது.

பார்ப்பன வர்ணாசிரமத் தத்துவங்களுக்கு நல்ல உரம் போடவும், இந்தக் கடவுள் பக்தி, கோயில் என்று பார்ப்பனர்கள் கொழுக்கவும், மக்கள் மூளையில் காவிச்சாயம் அடிக்கவும் பயன்படுத்துகின்றன:

பெரியார் மண்ணான தமிழ்நாட்டில்தான் அவர்கள் முழு வெற்றி பெற முடியாமல், முட்டி மோதிப் பார்க்கிறார்கள். சில கூலிப்படைகளையும், எழுத்துக் குத்தகை ஆட்களையும் முகவர்களாக்கி முயற்சி செய்கின்றனர்.

பரப்புரை, அறப் போராட்டங்கள், பேரணிகள் முலம் மக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தியுள்ளது!

பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முழுமையாக – மும்முரமாகச் செய்து – அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டுமென்று அரசியலமைப்புச் சட்டம் 51A(h) பிரிவு வற்புறுத்தியுள்ளதைப் பல ஆண்டு முன்பே தந்தை பெரியாரது இயக்கம் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி வந்து, பரப்புரை, அறப் போராட்டங்கள், பேரணிகள் முலம் தெளிவுப்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கியத் திட்டமான ராமன் கோயில் கட்டுவதை – திட்டமிட்டே பாபர் மசூதி இடிப்பு – பிறகு அதையொட்டிய உச்சநீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பு, அதைப் பயன்படுத்தி அயோத்தி ராமன் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியும், திறப்பு விழா செய்தது பா.ஜ.க., அதன் அறக்கட்டளை அமைத்தல் முதல் பொறுப்பாளர்கள் தேர்வு வரை பிரதமர் மோடியே அவர்களே முன்னின்று செய்து, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானமான “மதச் சார்பற்ற அரசு” என்ற கருத்தாக்கத்தையே காணாமற் போகச் செய்து, அவசர அவசரமாகத் தேர்தலுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் திறப்பு விழா நடந்தது;

விமானத் தளம் திறக்கப்பட்டது, எல்லாவற்றுக்கும் விளம்பரமோ அடை மழைபோல!

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் வந்த வண்ணம் உள்ளது!

ஆனால், இன்று அதில் பரிதாபத்திற்குரிய பக்தர்களின் காணிக்கைகள் எல்லாம் ஊழல் பெருச்சாளிகள் வசம் சிக்கி, குற்றச்செயல்கள் பற்றி முகம் சுளிக்கும் செய்திகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் வந்த வண்ணம் உள்ளது!

சி.பி.அய். விசாரிக்கத்தக்க ஊழல் என்பது பற்றிச் சற்றும் கருத்தில் கொள்ளாது குற்றம் இழைத்தவர்களை ராஜினாமா மூலம் வெளியே அனுப்புகிறார்கள் (குற்றப் பத்திரிகை இல்லாது). சரியான நடவடிக்கைகள் நடக்குமா? இதுபோன்ற நடவடிக்கைகளே தொடருமா? – யாருக்கும் தெரியாது, ஏன் கடவுள் இராமனுக்குக்கூட தெரியாது என்ற நிலைதானா?

‘பக்தி’, ‘பக்தி’ என்று ஏமாறும் பக்தர்களே, சிந்தியுங்கள்!

- விடுதலை நாளேடு, 12.07.26