சனி, 5 செப்டம்பர், 2026

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ‘‘ஜாதி வாரி கணக்கெடுப்பை’’ நீக்கிட சூழ்ச்சி! - ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை



இணையவழி கையெழுத்து இயக்கம்

ஆபத்து! ஆபத்து!! அரும்பாடுபட்டுக் கொண்டு வரப்பட்ட சமூகநீதியை ஒழிக்க ஒன்றிய பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய அரசு சூழ்ச்சி!
‘பேக்வேர்டு கிளாஸ்’ என்பதில், ‘கிளாஸ்’ என்றால் ‘வகுப்பு’ என்று பொருள் – ஜாதியில்லை என்று குறுக்குசால் ஓட்டுகின்றனர்!
செப்.11 இல் நாடெங்கும் நடக்கட்டும் ஆர்ப்பாட்டங்கள்!

தமிழர் தலைவர்
ஆசிரியர் எச்சரிக்கை அறிக்கை

ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதியை ஒழித்துக்கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியைத் தவிர்க்க சூழ்ச்சித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது – எச்சரிக்கை! எச்சரிக்கை!! என்றும், செப்.11 இல் நாடெங்கும் நடக்கட்டும் ஆர்ப்பாட்டங்கள் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இந்திய வரலாற்றில் சமூகநீதியை ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தென்னாடு குறிப்பாக பழைய சென்னை மாகாண நீதிக்கட்சி என்ற திராவிடர்களின் அரசு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வி, உத்தியோகப் பணிகளில், அதற்குமுன் பல நூற்றாண்டுகளாகத் திறக்கப்படாத மனுதர்ம இரும்புக் கதவை அசைத்து, மெல்ல திறந்தது! அதனால், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகி யோரும் நுழைந்து, படித்து, பணித் தகுதி பெற்றனர்.

சமூகநீதி கிடைத்த வரலாறு!

காலங்காலமாக இந்த நாட்டின் குடிமக்களான அவர்க ளுக்கு, வந்தேறிய ஆரியத்தால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை மாற்றிட, சமூகநீதி இயக்கங்களான ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் என்ற பல பெயர்களில் மக்களிடையே உரிமைக் குரல் எழுப்பி, ‘‘100–க்கு 3 சதவிகிதமாக உள்ள உயர்ஜாதிப் பார்ப்பனர்களுக்கே அவற்றையும் ஏகபோகமாக்கிக் கொண்டு, அதற்குரிய பல வகை பாதுகாப்பு, ‘தகுதி – திறமை’ என்ற வடிகட்டல் முறை என்றெல்லாம் வைத்து, அரும்பாடுபட்டுப் பெற்ற சமூகநீதி – இட ஒதுக்கீடான ‘Compensatory Justice’ ஏற்கெனவே இழைக்கப்பட்ட ‘பல்லாண்டு சமூக அநீதிக்கானப் பரிகார நீதியாக’, ‘பள்ளத்தில் வீழ்ந்திருந்த மனிதரெலாம் விழி பெற்றுக் கொள்ளத்’ தொடங்கிய உரிமைப் போர், இன்றளவும் நீடிக்கும் ஆரிய – திராவிடப் போராகவே – பல முகமூடிகள் அணிந்த நிலையிலும், தொடர்ந்த வண்ணமே உள்ளது!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்கரின் அரிய முயற்சியால், முகப்புரை என்ற கொள்கைத் தத்துவ அறிமுக உரையான ‘Preamble’ என்பதில், 1.சமூகநீதி 2.பொருளாதார நீதி 3.அரசியல் நீதி என்பது பறிக்கப்பட முடியாத பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை என்பது பாதுகாக்கப்பட்ட சட்ட நிலையாக இருந்தாலும்,

அரசியலமைப்புக் கட்டுமானத்தை உடைப்பதா?

பிரதமர் மோடி தலைமையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில் தொடர்ந்து, ‘சாண் ஏறினால் முழம் சறுக்குதல்’ என்பதைப்போல, ‘சாண் தந்தால்‘ ‘முழம் பறித்தல்’ என்ற புதுவகை சூழ்ச்சிமூலம், அரசிய லமைப்புச் சட்ட அடிப்படைக் கட்டுமானத்தைத் தகர்க்கும் வகையில் சட்ட விரோத, நியாய விரோத முறைகளின்மூலம் ஒடுக்கப்பட்டோரது உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்ந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருவது கொடுமையிலும் கொடுமை!

பொய் வழக்கு ஒன்றின் தீர்ப்பின் காரணமாக, ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட சமூகநீதி, தந்தை பெரியாரின் போராட்டத்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம்மூலம்  மீட்கப்பட்டது.

அதனை அறவே திரித்து, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கே தவறான விளக்கம் தந்து, உச்சநீதிமன்றத்தின் உயர்ஜாதி ஆதிக்க  அதிகார வாய்ப்பினைப் பயன்படுத்தி, பொருளாதார அளவுகோலை நுழைத்தனர்.

‘பொருளாதார அடிப்படை செல்லாது’ என்ற பழைய உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தில் நலிந்த அரிய உயர்ஜாதியினருக்கு, குறிப்பாகப் பார்ப்பனர்க ளுக்கு, 10 சதவிகித  இட துக்கீடு என்று திணித்து உள்ளே கொண்டு வந்து, ‘50 சதவிகிதத்திற்கு மேலா?’ என்று முன்பு கேட்ட அதே ஆரிய அதிகார வர்க்கம், நீதித்துறை களிலும் கூடுதல் 10 சதவிகிதம் உயர்ஜாதி ஏழைகள் (EWS) மூலம் என்றவுடன், தலையசைத்து சட்ட சம்மதம் தந்து, ஒரே வாரத்தில் நிதி ஒதுக்கீடு உள்பட தரப்பட்ட அதிசயம் நடந்தது. (அரசியலமைப்புச் சட்டத் திருத்த நிறை வேற்றமும் அதில் அடக்கம்!).

மண்டல் அறிக்கை அமலாக்கம் தொடர்பான ‘இந்திரா சகானி’ வழக்கில், ஒன்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு வழங்கிய தீர்ப்பை, உயர்ஜாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு (அதுவும்கூட 3:2 என்ற நிலையில்) மாற்ற இயலுமா? அதிலும் மூன்று நீதிபதிகள் தானே உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஒப்புக் கொண்டனர். இரு நீதிபதிகள் உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின் படியும், முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையிலும் முரணானது என்று தீர்ப்பளித்தனர்.  ஆக, ஒரே ஒரு நீதிபதி மாற்றி வழங்கிய தீர்ப்பு தானே, இந்தியாவின் 140 கோடி மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

தற்போது, மக்கள் தொகையில் 100–க்கு 65 விழுக்காட்டிற்குமேல் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட ஒரு பெரும் சூழ்ச்சி திட்டத்தை மக்கள் தொகைக் கணக்கெ டுப்பின்மூலம் ‘‘சட்ட ரீதியாகச்’’(!) செய்ய முனைப்புக் காட்டி வருகின்றனர்.

சமூகநீதியை ஒழிக்க புதிய சூழ்ச்சி!

ஜாதிவாரி கணக்கெடுப்பை முன்பு எதிர்த்த பா.ஜ.க. கடந்த பீகார் மாநிலத் தேர்தலின்போது, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக   ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், இப்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசும், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அதிகார வர்க்கமும் ஒரு புதிய சூழ்ச்சியை, தந்திரத்தை நுழைத்து, அதனை அறவே மறுக்க முடிவு செய்துள்ளன –

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC) என்று இருப்பதால், ‘வகுப்பு என்று தான் இருக்கிறது. ‘ஜாதி’ என்று இல்லை (அரசியலமைப்புச் சட்டத்தில் Class – Not Caste என்ற) ஒரு குயுக்தியான வாதத்தைக் காரணம் காட்டி, ஏற்கெனவே நாட்டிலுள்ள சமூகநீதி, இட ஒதுக்கீட்டையே ஒழித்துக்கட்டத் தொடங்கிவிட்டனர்.

ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களும், கிரீமிலேயர் திணிக்க முன்வந்தபோது, ஒடுக்கப்பட்ட (எஸ்.சி., எஸ்.டி.,) மக்களும் ஒருங்கிணைந்து அறவழியில் போராட்டக் களம் அமைக்கவேண்டிய அரிய தருணம் வந்துவிட்டது!

வகுப்பு – கிளாஸ் என்பதற்கு அண்ணல் அம்பேத்கரும் – மண்டல் குழுவும் கூறியுள்ளதென்ன?

அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள வகுப்பு – Class என்பதற்கு, அதனை எழுதிய மூலகர்த்தா டாக்டர் அம்பேத்கர் அவர்களே, அரசியலமைப்புச் சட்ட முதல் திருத்தத்தை, சட்ட அமைச்சர் என்ற கூடுதல் தகுதியுடன் கொண்டு வந்தபோது, நாடாளுமன்றத்திலேயே சிறப்பாக விளக்கியுள்ளார்.

இதனை மண்டல் கமிஷன் அறிக்கையிலும், பிறகு வெளிவந்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்ப்புகளிலும் எடுத்துக் காட்டியுள்ளது.

இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.ஜீவன் ரெட்டி அவர்கள் தனக்காகவும், அப்போதைய தலைமை நீதிபதி எம்.ஹெச்.கனியா, மற்ற நீதிபதிகள் எம்.என்.வெங்கடாச்சல்யா, எ.எம்.அகமதி ஆகியோருக்காக எழுதிய தீர்ப்பில்,

அப்பகுதியை அப்படியே தருகிறோம்.

Para. 662. Chapter – VII deals with ‘Social Justice, Constitution and the law’. It referes to the relvant provisions of the Constitution, to the decision in M.R.Balaji & Ors v. State of Mysore (1963 Suppl.(1) S.C.R.439) and various subsequent decisions of this Court and discusses the principles flowing from the said decisions. It notes that the subsequent decisions of this Court in C.A.Rajendran v. Union of India (1968 (1) S.C.R.721), State of Andhra Pradesh & Ors. v. P.Sagar (1968 (3) S.C.R.595) and State of Andhra Pradesh & Ors. v. U.S.V.Balram (1972 (3) S.C.R.247) etc. show a marked shift from the original position taken in Balaji on several important points. In particular, it refers to the observations in Rajendran to the effect that ‘‘caste is also a class of citizens and if the class as a whole is socially and educationally backward, reservation can be made in favour of such a caste on the ground that it was socially and educationally backward class of citizens within the meaning of Article 15(4)’’. It refers to the statement in A.Peeriakaruppan etc. v. State of Tamil Nadu (1971 (2) S.C.R.430) to the effect that ‘‘a caste has always been recognised as a class.’’ It also commends the dissent-ing view of Subba Rao, J. in T.Devadasan v. Union of India (1964 (4) S.C.R.680) (wrongly referred to as Rangachari) – [General Manager, Southern Railway v. Rangachari (1962 (2) S.C.R.586)].

இதன் தமிழாக்கம் வருமாறு:

  1. ஏழாவது அத்தியாயம் ‘சமூக நீதி, அரசியலமைப்பு மற்றும் சட்டம்’ குறித்து விவாதிக்கிறது. இது தொடர்பு டைய அரசியலமைப்பின் விதிகள், “‘எம்.ஆர். பாலாஜி மற்றும் பிறர்’ எதிர் ‘மைசூர் மாநிலம் (1963 Suppl.(1) S.C.R.439) வழக்கின் தீர்ப்பு மற்றும் இம்மன்றத்தின் பல்வேறு பிந்தைய தீர்ப்புகளைக் குறிப்பிடுவதுடன், அத்தீர்ப்புகளிலிருந்து பெறப்படும் கோட்பாடுகளையும் விவாதிக்கிறது. சி.ஏ. ராஜேந்திரன் எதிர் இந்திய ஒன்றியம் (1968 (1) S.C.R.721), ஆந்திரப் பிரதேச மாநிலம் மற்றும் பிறர் எதிர் பி.சாகர் (1968 (3) S.C.R.595) மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலம் மற்றும் பிறர் எதிர் யு.எஸ்.வி. பலராம் (1972 (3) S.C.R.247) போன்ற வழக்குகளில் இம்மன்றம் வழங்கிய பிந்தைய தீர்ப்புகள், ‘பாலாஜி’ வழக்கில் எடுக்கப்பட்ட அசல் நிலைப்பாட்டிலிருந்து பல முக்கிய அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டுவதை இது சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, ‘‘ஜாதி என்பதும் குடிமக்களின் ஒரு வகுப்பே (class) ஆகும்; ஒரு வகுப்பு ஒட்டுமொத்தமாகச் சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய நிலையில் இருந்தால், அரசியலமைப்பின் 15(4)-ஆவது பிரிவின் பொருளில் அது சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய குடிமக்கள் வகுப்பாகக் கருதப்பட்டு, அந்த ஜாதிக்கு இடஒதுக்கீடு வழங்கப்படலாம்’’ என்ற ராஜேந்திரன் வழக்கின் கருத்துகளை இது குறிப்பிடுகிறது.

‘‘ஒரு ‘ஜாதி’ எப்போதும் ஒரு ‘வகுப்பாகவே’ (class) அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளது’’ என்ற ஏ.பெரியகருப்பன் மற்றும் பிறர் எதிர் தமிழ்நாடு மாநிலம் (1971 (2) S.C.R.430) வழக்கின் கூற்றையும் இது குறிப்பிடுகிறது. மேலும், டி.தேவதாசன் எதிர் இந்திய ஒன்றியம் (1964 (4) S.C.R.680) வழக்கில் நீதிபதி சுப்பா ராவ் தெரிவித்த மாறுபட்ட கருத்தையும் இது பாராட்டுகிறது. (இது தவறாக ‘ரங்காச்சாரி’ வழக்கு – அதாவது பொது மேலாளர், தெற்கு ரயில்வே எதிர் ரங்காச்சாரி (1962 (2) S.C.R.586) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)

Para. 698. It is worthy of notice that the Parliament, which enacted the first Amendment to the Constitution, was in fact the very same Constituent Assembly which had framed the Consti-tution. The speech of Dr. Ambedkar on the occasion is again instructive. He said:-

Then with regard to article 16, clause (4), my submission is this that it is really impossible to make any reservation which would not result in excluding somebody who has a caste. I think it has to be borne in mind and it is one of the fundamental principles which I believe is stated in Mulla’s edition on the very first page that there is no Hindu who has not a caste. Every Hindu has a caste-he is either a Brahmin or a Mahratta or a Kundby or a Kumbhar or a carpenter. There is no Hindu-that is the fundamental proposition-who has not a caste. Consequently, if you make a reservation in favour of what are called backward classes which are nothing else but a collection of certain castes, those who are excluded are persons who belong to certain castes. Therefore, in the circum stances of this country, it is impossible to avoid reservation without excluding some people who have got a caste.’’

இதன் தமிழாக்கம் வருமாறு:

  1. அரசியலமைப்பிற்கான முதல் திருத்தத்தை இயற்றிய நாடாளுமன்றம் என்பது, உண்மையில் அதே அரசியலமைப்பு நிர்ணய சபையே என்பது குறிப்பி டத்தக்கது. அந்தச் சூழலில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரை மீண்டும் ஒருமுறை கவனிக்கத்தக்கது. அவர் கூறியதாவது:-

‘‘அடுத்து, கூறு 16 (4) குறித்து நான் முன்வைக்கும் கருத்து இதுதான்: ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரை விலக்கி வைக்காத வகையில் இடஒதுக்கீட்டை உருவாக்குவது என்பது உண்மையில் சாத்தியமற்றது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்; ‘முல்லா’வின் (Mulla) நூலின் முதல் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக நான் நம்பும் அடிப்படைத் தத்துவங்களில் இதுவும் ஒன்று: அதாவது, ஜாதி இல்லாத இந்து என்று எவரும் இல்லை. ஒவ்வொரு இந்துவுக்கும் ஒரு ஜாதி உண்டு – அவர் பார்ப்பனராகவோ, மராத்தாவாகவோ, குன்பியாகவோ (Kundby), கும்பாராகவோ (Kumbhar) அல்லது தச்சராகவோ இருக்கலாம். ஜாதி இல்லாத இந்து என்று யாரும் இல்லை – அதுவே அடிப்படை உண்மை. எனவே, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ என்று அழைக்கப்படுபவர்களுக்கு – இவர்கள் உண்மையில் சில ஜாதிகளின் தொகுப்பே ஆவர் – நீங்கள் இடஒதுக்கீடு அளித்தால், அதனால் விலக்கி வைக்கப்படுபவர்களும் ஏதோ ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆகையால், இந்நாட்டின் சூழலில், ஜாதி அடையாளத்தைக் கொண்ட சிலரை விலக்கி வைக்காமல் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது என்பது சாத்தியமற்றது.’’

இவ்வளவு தெளிவாக ‘வகுப்பு’ (Class) என்பது ஜாதிகளின் தொகுப்பே (Builde of Castes) என்று விளக்கப்பட்டதற்குப் பிறகு, இப்போது வந்து தவறான வியாக்கியானங்களுடன் நமக்கு ‘கிளாஸ்’ எடுக்க முற்படுகிறது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசு.

முந்தைய அரசை நோக்கித்தானே
குரல் எழுப்ப வேண்டும்!

ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றுதானே பிரதமர் மோடி வெளிப்படையாக அறிவித்தார் அதற்கும் பின்னரும், இப்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும் இடையில் என்ன நடந்தது?

இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் வரும்போ தெல்லாம் அளவிடற்குரிய தரவு (Quantifiable Data) இருக்கிறதா என்றுதானே உச்சநீதிமன்றம் கேட்கிறது? அதை ஒன்றிய அரசுதானே ஜாதிவாரிக் கணக்கெடுப்பின்  (Caste-wise Census) மூலம்  எடுக்க முடியும். மாநில அரசுகளால் சமூகநீதி சர்வே மட்டும்தானே எடுக்க முடியும் அந்த சர்வேயும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு போதுமானதில்லை என்பது பீகாரிலும் கருநாடகத்திலும் கிடைத்துள்ள அனுபவங்கள் அல்லவா? எனவே ஒன்றிய அரசு சென்சஸ் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தாமல் சர்வே ஏன் எடுக்கவில்லை என்று மாநில அரசுகளைக் கேட்பதால், அரசியல் உள்நோக்கங்களைத் தவிர வேறு என்ன பயன்? அந்த கணக்கெடுப்பிலும் ஒன்றிய அரசு குழப்பத்தை ஏற்படுத்த முனையுமானால் அதை முறியடித்த முந்தைய அரசை நோக்கித்தானே குரல் எழுப்ப வேண்டும்.

பல்வேறு முறையீடுகள் வைத்து, போராட்டங்களும் நடத்தி, வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டும், 95 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்படும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பில், பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான கணக்கெடுப்பில் மட்டும் குழப்பங்களை ஏற்படுத்துவதும், குழப்பமான முடிவுகள் கிடைக்கும் வகையிலேயே முழுமையற்ற விவரங்களைச் சேகரிப்பதும் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைப்பதாகும். 1931 சென்சஸ்சை மாடலாகக் கொள்ளவேண்டும்!

செப்.11 இல் தமிழ்நாடு – புதுச்சேரியில் ஆர்ப்பாட்டங்கள்!

சமூக நீதிக்காக போராடும் இயக்கங்களும், அமைப்பு களும் இதை எதிர்த்து போராட்டக் களம் காண வேண்டிய தவிர்க்கவியலாத சூழலை ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை களுக்காக எப்போதும் களம் காணும் திராவிடர் கழகம் இந்தக் களத்தை மீண்டும் இப்போது தொடங்கி வைக்கிறது. வரும் செப்டம்பர் 11 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து கழக மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில், “ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், சமூகநீதிக்காக நீதிமன்றங்கள் கேட்கும் முழுமையான விவரங்களைத் திரட்ட வலியுறுத்தியும்” அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

சென்னையில் நான் பங்கேற்கிறேன்!

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் (கி.வீரமணி) பங்கேற்கிறேன். ஒத்த கருத்துடையோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து சமூக நீதிக்கான குரலை வலுப்படுத்த வரலாம்; வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

திராவிட இயக்கத்தின் அடிநாதமான சமூகநீதிக்காக தந்தை பெரியார் பிறந்த இந்த மாதத்தில் நமது போராட்டம் தொடங்கட்டும்! கருஞ்சட்டைத் தோழர்களே தயாராவீர்!

பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இந்த போராட்டத்தை விட பொருத்தமான தொடக்கம் வேறு உண்டோ?

 

 

சென்னை      தலைவர்,

5.9.2026  திராவிடர் கழகம்


செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி!

 

‘‘ஊன்றிப் படியுங்கள், உண்மையைப் பரப்புங்கள்!’’


உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது!

இந்தியாவில் இரண்டே அணிகள்தான்;  ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி!

சமூகநீதி அணியை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திரள்வோம்!

நம் நாட்டின் உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது!  இனி இந்தியாவில் இரண்டே அணிகள்தான்;  ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி! சமூகநீதி அணியை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திரள்வோம்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியாவில் மட்டுமே இருக்கும், இந்து மதத்தின் கொடிய நோய்களான வர்ணாசிரமம் – ஜாதி அடிப்படையில் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த மக்க ளுக்கு வாய்ப்புகளை வழங்கவும், அவர்களின் வாழ்வு மேம்படவும் சமூகநீதியைச் செயல்படுத்தக் கொண்டுவரப்பட்ட முறையே இடஒதுக்கீடு ஆகும்.

உண்மையில், எல்லா அதிகாரப் பதவிகளையும், கல்வியையும் தங்களுக்கென்றே ‘ஒதுக்கீடு’ செய்துகொண்டவர்கள் பார்ப்பன – உயர்ஜாதியினர். ‘இன்னாருக்கு இது தான்! இன்னின்னாருக்கு இந்த உரிமைகள் கிடையாது’ என்பது பார்ப்பனர்களின் மனுஸ்மிருதி இடஒதுக்கீட்டு முறை. அந்த உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகச் செய்யப்பட்ட மறு ஒதுக்கீட்டு முறை தானே இன்றைய சமூகநீதி இடஒதுக்கீட்டு முறை!

அதனைக் கொண்டுவருவதற்கான போராட்டம் எத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய சமஸ்தானங்களான கோல்ஹாப்பூரிலும் (1902), மைசூரிலும் (1921) பார்ப்பனரல்லாதாருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்னர் 1928இல் தான் மதராஸ் மாகாணத்தில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு ஆணை செயல்படுத்தப்பட்டது. அதுவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலான பின்னர் 1950 இல் பார்ப்பனர்களின் பொய் வழக்கால் ரத்து செய்யப்பட்டது.

1951 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம்!

பின்னர் தந்தை பெரியார் நடத்திய மாபெரும் ‘மக்கள் போராட்டம்’ தான் 1951 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டுவரக் காரணமாகியது. அப்போதும், மாநிலங்களில் இருந்த இடஒதுக்கீட்டுக்கு அனுமதி கிடைத்ததே தவிர, ஒன்றிய அரசுப் பணிகளிலும், கல்வி வாய்ப்புகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 1993-லும், 2006-லும் தான் கதவு திறக்கப்பட்டது.

இத்தனை ஆண்டுகள் ஆனபின்னும், இன்னும் ஒன்றிய அளவிலான இடங்களில் ஒடுக்கப்பட்டோ ருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு முழுமையான அளவில் நிரப்பப்படவில்லை என்பது தானே நிலைமை! புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கும் உண்மையும் அதுதானே!

ஒவ்வொரு காலத்திலும் சமூக நீதி என்னும் தேரை ஒவ்வோர் அடி முன் நகர்த்துவதற்கும், எத்தனை எத்தனை ஆண்டுகள்? எத்தனை எத்தனைப் போராட்டங்கள்? மக்கள் மன்றத்தில் விழிப்புணர்வூட்டி, அணி திரட்டி, சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் சட்டங்களைக் கொண்டுவந்தால், நீதிமன்றம் குறுக்கே வந்து நிற்கும்.

அங்கும் வாதாடி, போராடி, அவர்கள் ஏற்படுத்தும் குறுக்கீடுகளையும், தடைகளையும், சட்ட ரீதி யாக உடைத்து, இடைச்செருகல்கள் என்னும் வெட்டுகளையும், காயங்களையும் தாங்கிக் கொண்டு தான், இயன்றவரை இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்.

சமூக ரீதியாக, கல்வி ரீதியாக இடஒதுக்கீடு!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான போது, சமூக ரீதியாக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு, அதுவரை மறுக்கப்பட்ட உரிமைகளை வழங்க முடிவெடுக்கப்பட்டது. அப்போதே பொரு ளாதார அளவில் பிற்படுத்தப்பட்டோர் என்று சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அது நிரந்தரமானதல்ல; இந்தியாவில் இருக்கும் பொருளாதாரச் சமநிலையற்ற தன்மைக்கு, பிறவி அடிப்படையிலான பேதமே காரணமாக இருக்கிறது என்பதற்காகத் தான், மிகச் சரியாக சமூக ரீதியாக, கல்வி ரீதியாக இடஒதுக்கீடு என்பது ஏற்கப்பட்டது.

பொருளாதார அளவுகோல் தடையைக் கொண்டுவந்து திணித்தது உச்சநீதிமன்றம்!

ஆனால், மண்டல் ஆணைய அறிக்கை ஏற்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு, மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அரசால் ஏற்கப்பட்ட பின்னர், அது தொடர்பான இந்திரா சஹானி வழக்கில், இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்ற (இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத) முட்டுக்கட்டையையும், பிற்படுத்தப்பட்டோரில் கிரிமீலேயருக்கு இடஒதுக்கீடு இல்லை என்ற பொருளாதார அளவுகோல் தடையையும் கொண்டுவந்து திணித்தது உச்சநீதிமன்றம்.

மண்டல் அறிக்கையை அமல்படுத்தக் கோரி, நாம் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தினோம். அது குறித்தெல்லாம் எந்தச் செய்தியும் வெளியிடாத ஊடகங்கள், இடஒதுக்கீட்டை எதிர்த்து வடநாட்டில் சில உயர்ஜாதியினர் நடத்திய போராட்டங்களுக்கு வானளாவ விளம்பரம் தந்தன. அதே போலத் தான் 2006 இல் கல்வித் துறையில் இடஒதுக்கீடு வழங்கப்படும் 93 ஆம் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோதும், போராட்டங்களை நடத்தி இட ஒதுக்கீட்டை எதிர்த்தனர்.

பார்ப்பனர், உயர்ஜாதியினர் என்றால் அவ்வளவு எளிதாக எல்லாம் நடந்துவிடுகின்றன!

ஆனால், எந்தவிதப் போராட்டமும் இல்லாமல், காத்திருப்பும் இல்லாமல், அய்ந்தே நாள்களில் பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை (EWS), 103 ஆம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் உடனடியாக நிறைவேற்றிக் கொண்டனர். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்ப டைக்கே விரோதமான, அரசியலமைப்புச் சட்ட விவாதங்களின் போதே தூக்கி எறியப்பட்ட பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து திணித்து, அதையும் ஏற்றுக் கொண்டது உச்சநீதிமன்றம்! பார்ப்பனர், உயர்ஜாதியினர் என்றால் அவ்வளவு எளிதாக எல்லாம் நடந்துவிடுகின்றன. அதைவிட வேகமாக நிதி ஒதுக்கீடு ஒன்றிய அரசால்.

எவ்வளவு மோசமான மனநிலை!
எவ்வளவு மோசமான ஆதிக்கம்!

ரோகித் வேமுலா, பாயல் தத்வி போன்ற மாணவர்களால், கல்வி நிறுவனங்களில் ஜாதி, மத அடிப்படையில் பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட தைக் கண்டித்து, 2019 இல் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் தந்த ஆணையின் படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில்தான்  உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி, மத ரீதியான பாகுபாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தும் யு,ஜி.சி.யின் வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிடப்பட்டன. அதைக் கண்டித்து உயர்ஜாதியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகச் செய்திகள் பரபரத்தன. உடனடியாக உச்சநீதிமன்றம் தலையிட்டு, பாகுபாடுகளைத் தடுக்க முயற்சி செய்யும் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உடனடியாகத் தடை வழங்கியது. பாகுபாட்டை, நிறுவனப் படுகொலைகளைத் தடுப்பது உயர்ஜாதி யினருக்கு வலிக்கிறது என்றால் எவ்வளவு மோசமான மனநிலை! எவ்வளவு மோசமான ஆதிக்கம்! இதுதானே இன்றைக்கும் இந்தியாவின் நிலை.

“இடஒதுக்கீடு இல்லாத இந்தியா”வாம்!

ஒடுக்கப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் ஜாதி ரீதியாக இன்றைக்கும் அனுபவிக்கும் தீண்டாமைக் கொடுமைகள், எதிர்கொள்ளும் தடைகள் ஏராளம், ஏராளம். ஆனால், அந்தக் கொடுமைகளைக் கடக்க உதவி செய்யும் சமூகநீதியை நசுக்க வேண்டும் என்றும், இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்றும் இன்றைக்கு ஓர் உயர்ஜாதிக் கூட்டம் “இடஒதுக்கீடு இல்லாத இந்தியா” என்ற ஆணவத்தோடு ஒரு புதுப் பெயரில் கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது. அதற்கு ஒரே நாளில் ஊடக வெளிச்சம் கண்ணைப் பறிக்கிறது. சமூக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று இருப்பதை, பொருளாதார ரீதியாக என்று மாற்றி, அதன் மூலம் மீண்டும் உயர்ஜாதியினர்க்கு மட்டுமே கல்வி, வேலைவாய்ப்பு என்று கொண்டுவர வேண்டுமாம்!

முன்பு எப்படி மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் குறித்துத் தவறான கருத்தினை வடநாட்டு, தென்னாட்டுப் பார்ப்பன ஊடகங்களும் திட்டமிட்டுப் பரப்பியதோடு, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக்கு வெளியிலிருந்து அதுவரை ஆதரவு தந்து வந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற வலதுசாரிகள் வாபஸ் வாங்க, இடதுசாரிகளான கம்யூனிஸ்டுகளும், உரிய ஆதரவினைத் தரவில்லை.

அதற்குமுன் தமிழ்நாட்டில், எம்.ஜி.ஆர். முதலமைச்ச ராக இருந்தபோது 9 ஆயிரம் வருமான வரம்பு ஆணை யைக் கொண்டு வந்தபோது, சி.பி.எம் (மார்க்சிஸ்ட்) கட்சி, இடஒதுக்கீட்டில் ‘பொருளாதார வரம்பு’ அல்லது கிரீமிலேயர் கோட்பாடு இருக்க வேண்டும் என்ற தேசிய அளவிலான தங்கள் கட்சியின் கொள்கை முடிவுக்கு ஏற்ப, எம்.ஜி.ஆரின் வருமான வரம்பு முடிவினை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தது. பின்னணியில் உயர்ஜாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டையும் சி.பி.எம். ஆதரித்தது என்பதும் வரலாறு.

ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.அய்.) 9 ஆயிரம் ரூபாய் உச்சவரம்பு பிரச்சினையின்போதும், EWS சட்டத்தின்போதும் சமூக ரீதியான பிற்படுத்தப்பட்ட நிலையே முக்கியமானது எனக் கருதி, இந்த பொருளாதார வரம்பை எதிர்த்த திராவிடர் கழகம், தி.மு.க., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் போராட்டத்திற்கு ஆதரவாக நின்றது.

அதே நிலைதான் மீண்டும் வடக்கே உள்ள பார்ப்பனர்களால் – பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சின் ‘‘கண் ஜாடையோடு’’, பொல்லாத வாடைக்காற்றாக வீசி, உயர்ஜாதிகளின் ஆதரவோடு, உ.பி. உள்ளிட்ட மாநிலங்க ளின் தேர்தல்களையே மனதில் கொண்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒற்றுமையற்று இருக்கிறார்கள்; அவிழ்க்கப்பட்ட நெல்லிக்காய் மூட்டையென சிதறிக் கிடக்கிறார்கள்; ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஊட்டும் மதப் போதையில் மயங்கிக் கிடக்கிறார்கள் என்ற மமதையில் உயர்ஜாதிப் பார்ப்பனக் கூட்டம் மீண்டும் தார்ப்பாச்சையை இறுக்கிக் கொண்டு முண்டிப் பார்க்கிறது!

அதை முளையிலேயே கிள்ளியெறிய, அத்துணை சமூகநீதியில் நம்பிக்கை உள்ளவர்களும் ஒன்றுபட்டு, ஓரணியில் திரளவேண்டும்.

தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி

எச்சரிக்கையோடும், விழிப்போடும் அணுக வேண்டிய காலகட்டம் இது! சமூகநீதியால் பலன்பெற்ற மக்களிடமே, இடஒதுக்கீடு என்பது தரக் குறைவானது என்றும், இழிவானது என்றும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி, தகுதி- திறமை என்னும் மாய, மோசடி வலைக்குள் சிக்கவைக்க அனைத்து வகை ஊடகங்களும், பிரச்சாரங்களும் நடந்திருக்கின்றன. தாங்கள் அனுபவித்தால் போதும், அடுத்தவருக்கு எதற்கு இந்த ஏணி என்று அதை எட்டி உதைக்கும் கோடரிக் காம்புகள் சிலவும் நம்மில் இருப்பதை நாம் அறிவோம். t

அனைவரையும் ஓரணியில் இணைத்துப்
போராட வேண்டியது அவசியம்!

அதை முறியடித்து, நமது இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வூட்டி, நேரடியாகவும், மறைமுகமாகவும் சமூகநீதியைச் சிதைக்க நடந்திருக்கும் முயற்சிகளை, சூழ்ச்சிகளையெல்லாம் எடுத்துக்காட்டி, இன்று தொடங்கியிருக்கும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி, அனைவரையும் ஓரணியில் இணைத்துப் போராட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

‘‘ஜாதி ஒழிந்த இந்தியா’’

‘ஜாதி ஒழிந்த இந்தியா’வாகக் கொண்டு வர வேண்டும் என்பதே நமது உண்மையான போராட்டம்! அதை நோக்கி இளைஞர்கள் முன்வரவேண்டும்.

ஜாதி என்பது நோய்; பாகுபாடும், தீண்டாமையும் என்பது அதன் வெளிப்பாடுகள்! அதே கிருமிகளை ‘இன்ஜெக்ட்’ செய்து, ‘ஜாதி நோயை’ ஒழிக்கும் மருந்தே இட ஒதுக்கீடு!  ஜாதி ஒழிப்பே நிரந்தரத் தீர்வு!

ஜாதி ஒழிப்பாளர்கள் போல் வேடம் போடும் இந்த ஆதிக்கவாத உயர்ஜாதியினர், ஜாதியை ஒழிக்கும் பணியில் ஈடுபட முன்வருவார்களா? மதத்திலும், சமூகத்திலும் அரசியலிலும் ஜாதி ஆதிக்கம் நிலவுவது குறித்து இந்தத் ‘திடீர் சமத்துவப்’ போராளிகளுக்கு எதிர்ப்பு உணர்ச்சி உண்டா?

‘ஜாதி இருக்கவேண்டும்; அதன் ஏற்றத் தாழ்வு இருக்கவேண்டும்; தங்களின் ஆதிக்கம் குறையக்கூடாது!’

ஆனால், ‘ஜாதி ரீதியான ‘இட ஒதுக்கீடு’ மட்டும் இருக்கக்கூடாது என்பது எவ்வளவு பெரிய மோசடி!

எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் உண்டா இந்நாட்டில்?

சமமான வாய்ப்புகளை, சமமான வசதிகளை, சம உரிமையை வழங்காமல் தகுதி, திறமை மட்டும் எப்படி சமமாக உருவாகும்? காணப்பட முடியும்?

இந்தப் புரட்டை அம்பலப்படுத்தினால்தானே நம்முடைய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சமூகநீதி என்றால் என்னவென்று புரியும்! அதைச் செய்யவேண்டியது சமூகநீதியாளர்களின் முதன்மைக் கடமை அல்லவா?

அணியமாவோம்! அணி திரள்வோம்!

திராவிடர் கழகம் இதனை முன்னின்று முனைப்புடன் செயல்படுத்தும்! குறுகிய கால அரசியல் சூழல்களையெல்லாம் மறந்து, அனைவரும் திரள வேண்டியது அவசியம். நம் உரிமைகளைப் பறிக்க எல்லா பக்கங்களிலிருந்தும் சூழ்ச்சிகள், குழிபறிப்புகள், ஈட்டிகள், குண்டுகள், சுனாமிகள், சுழற்காற்றுகள் என்று ‘சூப்பர் எல்நினோ’வாக, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆளும் இந்தக் காலம் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்! உயிரைக் கொடுத்தும் உரிமையைப் பாதுகாப்போம்!

கட்சிகளைக் கடந்து, இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அணிக்கு எதிராக, இட ஒதுக்கீடு எங்கள் உரிமை! எங்கள் தேவை! தேவை!! அதைப் பறிக்கும் முயற்சியை முறியடிக்க, மீண்டும் இரண்டாவது மண்டல் அறப்போர் பேருருக்(விஸ்வரூபம்) கொள்ளும், கொள்ள வைப்போம்!

இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதிக்கு ஆதரவான அணி; மற்றொன்று, சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி.

சமூகநீதிக்கு ஆதரவான அணியை வலுப்படுத்த வேண்டியது நமது முதல் பணி!

அணியமாவோம்! அணி திரள்வோம்! ஆர்ப்பரிப்போம்! உரிமை வெல்வோம்! உரிமை வெல்வோம்!

கி.வீரமணி

தலைவர்,

    திராவிடர் கழகம்

சென்னை

11.8.2026

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் சட்டமாக்குக! அதை அவமதிப்போரைத் தண்டிக்கவும் வகை செய்யவேண்டும்!

 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் சட்டமாக்குக! அதை அவமதிப்போரைத் தண்டிக்கவும் வகை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் மூலம் உலகுக்கே தமிழை, எளிய முறையில் கற்றுக்கொள்ள, கணினி முதலியவற்றில் பயன்படுத்த வைத்து, உலக நாடுகளில் தமிழ் எளிதில் பரவும் வகையில் கொண்டு சென்றவர் தந்தை பெரியார். (‘பகுத்தறிவு இதழ்’, 13.1.1935).

‘‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’’ என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.

‘‘எம் மொழி செம்மொழி’’ என்ற உரிமையைப் பெற்றுத் தந்தார் முத்தமிழறிஞர் கலைஞர். அது மட்டுமல்லாமல், மனோன்மணீயம் சுந்தரனார் பாடிய மொழி வாழ்த்தின் சில முக்கியப் பகுதிகளைத் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ  மொழி வாழ்த்தாக ஆக்கி, அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாட ஆணை பிறப்பித்தார்.  (அரசு ஆணை எண்: 1393 (தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை) நாள்: 17.6.1970).

தனியாக ஓர் ஆணையே பிறப்பிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது!

ஆனால், அதனைத் தவிர்க்கும் வகையில், இன்றைய காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரர்  பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்திருக்காமல், கண்ணை மூடிக் கொண்டு அவமதித்த காரணத்தால், அதற்குத் தனியாக ஓர் ஆணையே பிறப்பிக்கவேண்டிய அவசியம் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு ஏற்பட்டது. பின்னர், அதை மாநிலப் பாடலாக அறிவித்தும் ஆணையிட்டது தளபதி மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தி.மு.க. அரசு! (அரசு ஆணை எண்: 272 – தமிழ் வளர்ச்சித் துறை நாள்: 17.12.2021).

இருந்தும், தொடர்ந்து தமிழ்மொழி, தமிழ்நாட்டிலேயே மதிக்காத வகையில், அரசு நிகழ்ச்சியில் பாடுவது தவிர்க்கப்படுவதைவிட, பெருத்த வேதனையும், வெட்கமும் வேறு ஏது?

ஏன் அலட்சியப்படுத்தப்பட்டது?

அந்தப் பாடலை எழுதிய மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தில், தற்போது துணைவேந்தராக உள்ளவர் நடந்து கொண்ட முறை பலரின் கண்டனங்களைப் பெற்றது. மீண்டும் பதவி நீடிப்புக்காகவோ, ஆளுநரைக் ‘குளிர்’விப்பதற்காகவோ, அதனால் ஏற்படும் பயனை எதிர்ப்பார்த்தும்தான் அவ்வாறு நடந்துகொண்டார் என்று பேசிக் கொள்ளப்படுகிறதே! அது ஏன் அலட்சியப்படுத்தப்பட்டது?

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தமிழ்நாட்டிலேயே மூன்றாவது இடத்திற்குத் தள்ளுவது, ஒரு மன்னிக்கப்படக் கூடாத குற்றம். அதை முதலில் பாட வற்புறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் முன்மொழிந்தபோது, ‘‘இதில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். முதலில் தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் பாடுவதுதான், அரசு நிகழ்ச்சிகளில் நடைமுறையாக இருக்கவேண்டும்! இதற்காக பிரத மருக்கு, இரண்டுமுறை கடிதம் எழுதியுள்ளேன்’’ என்று கூறியிருக்கிறார். வரவேற்கத்தக்கது!

ஆனால், சட்டமன்றத்தில் ஆளுநர் வரும்போது மேற்கண்டவாறு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தந்து பாடப்படுவதில்லை என்பது ஏற்கத்தக்கதா?

சட்டமன்ற நடவடிக்கையும் ‘அரசு நிகழ்ச்சிதான்’ என்பதை உணர்த்தியாக வேண்டும் – அதை உணராதவர்களுக்கு!

தனிச்சட்டமாகவே ஆக்கவேண்டும்!

இதற்குச் சிறந்த வழி, இதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதைவிட, தனிச்சட்டமாகவே ஆக்கப்பட வேண்டும். இதனைக் கடைப்பிடிக்காததை ஒரு குற்றமாக அந்தச் சட்டத்தில் பிரிவுகள் தெளிவுடன் அறிவிக்கவேண்டும்.

அதற்குப் பிறகு, அரசு யாரையும் ‘‘கெஞ்ச வேண்டிய’’ அவசியமும் இல்லை.

முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியில் இப்படி ஒரு சட்டத் திருத்தம், புதிய சட்டமாக வந்தால், அவரது ஆட்சிக்கும் பெருமை சேர்க்கும்!

சிந்திப்பார்களாக!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

10.8.2026       

செவ்வாய், 14 ஜூலை, 2026

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது


கால் நூற்றாண்டுக்குப் பிறகு ‘ஞானபீட விருது’ பெற்றார் கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரையில் இலக்கியத்திற்கு தனிப் பல்கலைக் கழகம் தேவை என்று வேண்டுகோள்


இந்தியா

புதுடில்லி, ஜூலை 14 இந்தியாவில் இலக்கியத்துக்கு உயர்ந்தபட்சமாக வழங்கப்படும் ‘ஞானபீட விருது’ இந்த ஆண்டு கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழி பெற்றிருக்கும் மூன்றாவது ஞானபீட விருது இதுவாகும்.

நேற்று (13.7.2026) டில்லியில் நடந்த விழாவில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் டாக்டர் கரண்சிங் ஞானபீட விருதினை  கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வழங்கினார். ஞானபீட அமைப்பைச் சேர்ந்த சாகு அகிலேஷ் ஜெயின், சிறீ முதத் ஜெயின், பிரதீபா ராய், ஆர்.என்.திவாரி ஆகியோர் விழா மேடையில் இருந்தனர். விருதைப் பெற்றுக்கொண்டு கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரை ஆற்றினார்:

“தமிழ்நாட்டின் தென்மேற்கு மூலையில், இந்தியாவின் வரைபடத் திற்குச் சிக்காத ஒரு கடைக் கோடியில், 60 வீடுகளே கொண்ட ‘மெட்டூர்’ என்ற சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நான் பிறந்தேன். 1950களில் வைகை நதியின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்டது; அதன் நீர்தேங்கும் பரப்புக்காக 14 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. அதில் ஒன்றுதான் நான் பிறந்த ஊர்.

இடுப்புவரை மூழ்கிய ஊர் கழுத்துவரை மூழ்கத் தலைப்படும்போது, அந்த கிராமத்தின் தாயொருத்தி உலர்ந்த கண்ணீரோடும் நனைந்த சேலையோடும் கதறிக்கொண்டே கரையேறுகிறாள். அவள் இடுப்பில் ஒரு பெண் குழந்தை, கைப்பிடியில் ஓர் ஆண் குழந்தை. அப்போதெல்லாம் அவளுக்குத் தெரியாது இடுப்பில் உள்ள பெண்குழந்தை அடுத்த ஆறு மாதத்தில் இறந்துபோகும் என்றும், கைப்பிடியாய்க் கூட்டிவந்த ஆண்குழந்தை அடுத்த எழுபது ஆண்டுகளில் ‘ஞானபீட விருது’ பெறும் என்றும்! அன்று கால்சட்டை நனைய நனையக் கரைசேர்ந்த சிறுவன்தான் இன்று இந்த ஞானபீட மேடையில் உங்கள் முன் நிற்கிறான்; அவன் பெயர் வைரமுத்து!

பிழைக்கவந்த வடுகப்பட்டியில் வகுப்பு அவனுக்கு எழுத்துகளைச் சொல்லிக்கொடுத்தது; வறுமை அவனுக்கு வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்தது. இரண்டும் அவனைக் கையோடு கூட்டிவந்து கவிதையிடம் சேர்த்தன.

நல்லது காண்பது இலக்கியம்; நம்பிக்கையூட்டுவது இலக்கியம். “விரும்பியது அமையாவிட்டால் அமைந்ததை விரும்பு” என்கிறது உபநிஷத். அமைந்ததை விரும்பா விட் டால் விரும்பியதை அமை என்கிறது இலக்கியம்

இது 60ஆம் ஞானபீடம்

என் அரைநூற்றாண்டு எழுத்து களைப் பாராட்டி ஞானபீடம் 60 கிராம் அமிர்தப் புட்டி வழங்கியிருக்கிறது. இது எனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமைகொள்ள முடியாது. ஒரு கிராம் திருவள்ளுவருக்கு, ஒரு கிராம் இளங்கோவடிகளுக்கு, ஒரு கிராம் கம்பருக்கு, பாரதிக்கு, பாரதிதாசனுக்கு, அண்ணா, கலைஞர், கண்ணதாசனுக்கு ஆளுக்கொரு சொட்டு. அவர்களுக்கு மட்டுமா? காளிதாசனுக்கு ஒருசொட்டு, வேதவியாசருக்கு ஒரு சொட்டு. வால்மீகிக்கு ஒரு சொட்டு, தாகூருக்கு, ஷேக்ஸ்பியருக்கு, ஃபிர்தவுசிக்கு, மில்டனுக்கு. ஷெல்லி, பைரன், கீட்ஸூக்கு, டி.எஸ்.எலியட்டுக்கு, எஸ்ராபவுண்டுக்கு கடைசியாய் ஒரு சொட்டு கலீல் ஜிப்ரானுக்கு இப்படிப் பகிர்ந்து கொடுத்ததுபோகக் கரண்டியில் ஒட்டியிருக்கும் ஈரப்பசை மட்டும் என் பங்கு ஆகலாம்.

இந்த விருது என்னை ஒரு சாய்வு நாற்காலியில் சாய்த்துவிடாது. இது ஓடிவந்த குதிரைக்கு நீட்டப்படும் புல் அல்ல; குதிரை மீது விழுந்த மற்றுமொரு சாட்டையடி. குதிரை இன்னும் வேகமெடுக்கும்; நான் வெறிகொண்டு ஓடுவேன். இந்த விருதுக்கு என் தமிழ் இன்னும் நியாயம் செய்யும்.

எனக்குச் சில கேள்விகள் உண்டு

இலக்கியத்துக்காக இந்தியா ஒரே ஒரு நோபல் பரிசு பெற்று 113 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன் பிறகு நோபல் பரிசு பெறத் தகுதியான ஒரு படைப்பாளியை இந்தியா தயாரிக்கவில்லையா? அல்லது நோபல் குழு கண்டுபிடிக்கவில்லையா? ஏகப் பட்ட உலக அழகிகளைத் தயாரித்த இந்தியா உலகக் கவிகளைத் தயாரிக்க மறந்ததா?

ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகம் காணும் நாம், இலக்கியத்துக்கு என்று தனியே ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவக் கூடாதா? அது எப்போது?

இந்தக் கேள்விகளோடு என் ஏற்புரையை நிறைவுசெய்கிறேன். இந்த விருதுக்கு என்னைத் தகுதிப்படுத்திய ஒவ்வொரு சமூக மனிதனுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரை வழங்கினார்.

ஞாயிறு, 12 ஜூலை, 2026

தமிழ்த்தென்றல் திரு.வி.க. எழுதியிருப்பதை எடுத்துக்காட்டி ‘மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா’வில் தமிழர் தலைவர் கருத்துரை

 

பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்குப் போட்டியாக காங்கிரஸ் பார்ப்பனர் ஒருவரால் தொடங்கப்பட்டதுதான் ‘சென்னை மாகாணச் சங்கம்’

சென்னை, ஜூலை,11 மணவழகர் மன்றத்தின் முத்தமிழ் விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.  “பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்குப் போட்டியாக, காங்கிரசிலிருக்கும் பார்ப்பனர் ஒருவரால் தொடங்கப்பட்டதுதான், ‘சென்னை மாகாணச் சங்கம்  அதில்  யானும், ஈ.வெ.ரா. வும் துணைத்தலைவர்களாக இருந்தோம்” என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. எழுதி யிருப்பதாக தமிழர் தலைவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.

1957இல் தொடங்கப்பட்ட சென்னை மணவழகர் மன்ற அறக்கட்டளை, அதன் 70 ஆம் ஆண்டு முத்தமிழ் விழா 10.07.2026, வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு, தியாகராயர் நகரில் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

இந்நிகழ்வில், மணவழகர் மன்றத்தின் செயலாளர் கே.கன்னியப்பன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அதில் அவர், “தமிழ்த்தென்றல் திரு.வி.க.கூறியது போல், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவராகவும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. தாய் என்றும் பேசியிருக்கிறார்கள்” என்று ஒரு முக்கியமான வரலாற்றுக்குறிப்பை நினைவூட்டிப் பேசினார். வரவேற்புரை நிறைவு பெற்றவுடன் சிறப்பு விருந்தினர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் செ.முகம்மது அலி, “இன்றைய தமிழர் நிலை” எனும் தலைப்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கே.பாலகிருஷ்ணன், “திரு.வி.க.வும், தொழிலாளர் இயக்கமும்” எனும் தலைப்பிலும் உரையாற்றினர். முன்னதாகவே திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் தமது உரையில், “இன்றைய அரசியல் சூழல் மாறியிருக்கிறது. அவர் வருவார், இவர் வருவார் என்று இல்லாமல் எவர் வந்தாலும் வராவிட்டாலும் மணவழகர் மன்றம் நிகழ்ச்சி நடைபெறும்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே தொடங்கினார். தொடர்ந்து, தந்தை பெரியாருக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களுக்கும் கருத்து மோதல்கள் இருந்தாலும் அது கண்ணியமாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, “இது என்றைக்கும் பாடமாக இருக்கக்கூடியது” என்றார். மேலும், மணவழகர் மன்ற வரலாற்றில் மேனாள் நீதியரசர் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், எ.ஆர்.லட்சுமணன், சுந்தரேசன் ஆகியோரை நினைவு கூறாமல் இருக்க முடியாது” என்றார். மேலும் அவர், வரவேற்புரை வழங்கிய கன்னியப்பன் அவர்களின் பணிகளையும் நினைவு கூர்ந்து பாராட்டினார்.

தொடர்ந்து, தனக்கு வழங்கப்பட்ட ‘தந்தை பெரியாரும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வும்” என்ற தலைப்பை சுட்டிக்காட்டி, “Unlike poles attracks each other” என்ற காந்தவியலைச் சுட்டிக்காட்டி இருவரின் கருத்துகளையும், குணங்களையும் பட்டியலிட்டார். “சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியார் பொதுவாழ்க்கைக்கு வந்தார்” என்பதை முன்னோட்டமாகக் கூறிவிட்டு, நீதிக்கட்சி இருந்த காலத்தில், அதற்கு போட்டியாகத்தான் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர் ஒருவரால் தொடங்கப்பட்டதுதான், சென்னை மாகாண சங்கம். அந்த சென்னை மாகாண சங்கத்தில், தந்தை பெரியாரும், திரு.வி.க.வும் துணைத் தலைவர்களாக இருந்ததை, திரு.வி.க.வே எழுதியிருப்பதை, அவரது எழுத்துகளிலேயே வாசித்துக்காட்டினார். வாசிக்கும் போதே அந்த தமிழின் இனிமையில் மனதைப் பறிகொடுத்து, “கடலூர் மாநாடு, ஈரோடு மாநாடுகளில் திரு.வி.க. பேசியதை கேட்கும் பேறு பெற்றவன் நான். அவரது பேச்சு மட்டுமல்ல, எழுத்தும் நம்மை ஈர்க்கக்கூடியது” என்று பெருமிதத்துடன் கூறினார். அடுத்து திரு.வி.க. சொன்ன இன்னுமொரு முக்கியமான கருத்தான, “தமிழ்நாடு காங்கிரஸ் ஈ.வெ.ரா வின் உழைப்பால் நன்றாக உண்டு கொழுத்தது” என்பதைச் சொன்னவுடன் பார்வையாளர்கள் நன்றாக ரசித்து சிரித்தனர்.

அடுத்து, “ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கம் எனது சன்மார்க்க இயக்கத்திலிருந்து பிறந்தது. 90% ஒற்றுமை! 10% வேற்றுமை! வேற்றுமை எங்களுக்குள் போரை மூட்டியது. ஆனால், வேற்றுமை ஆக்கம் பெறவில்லை” என்று திரு.வி.க. சொன்னதையே எடுத்துரைத்தார். மேலும் அவர், “அந்த வேற்றுமையும் கண்ணியத்துடன் இருந்தது. இது பொதுவாழ்வில் இருப்போருக்கு என்றைக்கும் பாடமாகும்” என்று கூறி, பெரியாரின் தொண்டும், உண்மையும் எப்படிப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பட்டியலிட்டு, காஞ்சிபுரம் மாநாட்டில் கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்தாலும், சந்திக்கும் போது, காழ்ப்புக் காட்டாத நண்பர்களாகவே இருந்ததையும் சுட்டிக்காட்டி தமது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக மணவழகர் மன்றத்தின் துணைச் செயலாளர் சு.கருணாநிதி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்வில்,  கழகத்தின் செயலவைத்தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி,  தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, கோ.வீ.ராகவன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச் செல்வன், தாம்பரம் மாவட்டத் தலைவர், முத்தையன், மோகன்ராஜ், கழகச் சொற்பொழிவாளர்கள் பிராட்லா, தேவநர்மதா, பெரியார் மாணாக்கன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ‌.தொண்டறம், சோழிங்கநல்லூர் ஜெயராமன்,  சுரேஷ், பெரியார் பெருந்தொண்டர் த.கு.திவாகரன், அரும்பாக்கம் தாமோதரன், யுகேஷ், தங்கமணி தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

- விடுதலை நாளேடு,11.07.26