செவ்வாய், 14 ஜூலை, 2026

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது


கால் நூற்றாண்டுக்குப் பிறகு ‘ஞானபீட விருது’ பெற்றார் கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரையில் இலக்கியத்திற்கு தனிப் பல்கலைக் கழகம் தேவை என்று வேண்டுகோள்


இந்தியா

புதுடில்லி, ஜூலை 14 இந்தியாவில் இலக்கியத்துக்கு உயர்ந்தபட்சமாக வழங்கப்படும் ‘ஞானபீட விருது’ இந்த ஆண்டு கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழி பெற்றிருக்கும் மூன்றாவது ஞானபீட விருது இதுவாகும்.

நேற்று (13.7.2026) டில்லியில் நடந்த விழாவில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் டாக்டர் கரண்சிங் ஞானபீட விருதினை  கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வழங்கினார். ஞானபீட அமைப்பைச் சேர்ந்த சாகு அகிலேஷ் ஜெயின், சிறீ முதத் ஜெயின், பிரதீபா ராய், ஆர்.என்.திவாரி ஆகியோர் விழா மேடையில் இருந்தனர். விருதைப் பெற்றுக்கொண்டு கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரை ஆற்றினார்:

“தமிழ்நாட்டின் தென்மேற்கு மூலையில், இந்தியாவின் வரைபடத் திற்குச் சிக்காத ஒரு கடைக் கோடியில், 60 வீடுகளே கொண்ட ‘மெட்டூர்’ என்ற சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நான் பிறந்தேன். 1950களில் வைகை நதியின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்டது; அதன் நீர்தேங்கும் பரப்புக்காக 14 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. அதில் ஒன்றுதான் நான் பிறந்த ஊர்.

இடுப்புவரை மூழ்கிய ஊர் கழுத்துவரை மூழ்கத் தலைப்படும்போது, அந்த கிராமத்தின் தாயொருத்தி உலர்ந்த கண்ணீரோடும் நனைந்த சேலையோடும் கதறிக்கொண்டே கரையேறுகிறாள். அவள் இடுப்பில் ஒரு பெண் குழந்தை, கைப்பிடியில் ஓர் ஆண் குழந்தை. அப்போதெல்லாம் அவளுக்குத் தெரியாது இடுப்பில் உள்ள பெண்குழந்தை அடுத்த ஆறு மாதத்தில் இறந்துபோகும் என்றும், கைப்பிடியாய்க் கூட்டிவந்த ஆண்குழந்தை அடுத்த எழுபது ஆண்டுகளில் ‘ஞானபீட விருது’ பெறும் என்றும்! அன்று கால்சட்டை நனைய நனையக் கரைசேர்ந்த சிறுவன்தான் இன்று இந்த ஞானபீட மேடையில் உங்கள் முன் நிற்கிறான்; அவன் பெயர் வைரமுத்து!

பிழைக்கவந்த வடுகப்பட்டியில் வகுப்பு அவனுக்கு எழுத்துகளைச் சொல்லிக்கொடுத்தது; வறுமை அவனுக்கு வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்தது. இரண்டும் அவனைக் கையோடு கூட்டிவந்து கவிதையிடம் சேர்த்தன.

நல்லது காண்பது இலக்கியம்; நம்பிக்கையூட்டுவது இலக்கியம். “விரும்பியது அமையாவிட்டால் அமைந்ததை விரும்பு” என்கிறது உபநிஷத். அமைந்ததை விரும்பா விட் டால் விரும்பியதை அமை என்கிறது இலக்கியம்

இது 60ஆம் ஞானபீடம்

என் அரைநூற்றாண்டு எழுத்து களைப் பாராட்டி ஞானபீடம் 60 கிராம் அமிர்தப் புட்டி வழங்கியிருக்கிறது. இது எனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமைகொள்ள முடியாது. ஒரு கிராம் திருவள்ளுவருக்கு, ஒரு கிராம் இளங்கோவடிகளுக்கு, ஒரு கிராம் கம்பருக்கு, பாரதிக்கு, பாரதிதாசனுக்கு, அண்ணா, கலைஞர், கண்ணதாசனுக்கு ஆளுக்கொரு சொட்டு. அவர்களுக்கு மட்டுமா? காளிதாசனுக்கு ஒருசொட்டு, வேதவியாசருக்கு ஒரு சொட்டு. வால்மீகிக்கு ஒரு சொட்டு, தாகூருக்கு, ஷேக்ஸ்பியருக்கு, ஃபிர்தவுசிக்கு, மில்டனுக்கு. ஷெல்லி, பைரன், கீட்ஸூக்கு, டி.எஸ்.எலியட்டுக்கு, எஸ்ராபவுண்டுக்கு கடைசியாய் ஒரு சொட்டு கலீல் ஜிப்ரானுக்கு இப்படிப் பகிர்ந்து கொடுத்ததுபோகக் கரண்டியில் ஒட்டியிருக்கும் ஈரப்பசை மட்டும் என் பங்கு ஆகலாம்.

இந்த விருது என்னை ஒரு சாய்வு நாற்காலியில் சாய்த்துவிடாது. இது ஓடிவந்த குதிரைக்கு நீட்டப்படும் புல் அல்ல; குதிரை மீது விழுந்த மற்றுமொரு சாட்டையடி. குதிரை இன்னும் வேகமெடுக்கும்; நான் வெறிகொண்டு ஓடுவேன். இந்த விருதுக்கு என் தமிழ் இன்னும் நியாயம் செய்யும்.

எனக்குச் சில கேள்விகள் உண்டு

இலக்கியத்துக்காக இந்தியா ஒரே ஒரு நோபல் பரிசு பெற்று 113 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன் பிறகு நோபல் பரிசு பெறத் தகுதியான ஒரு படைப்பாளியை இந்தியா தயாரிக்கவில்லையா? அல்லது நோபல் குழு கண்டுபிடிக்கவில்லையா? ஏகப் பட்ட உலக அழகிகளைத் தயாரித்த இந்தியா உலகக் கவிகளைத் தயாரிக்க மறந்ததா?

ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகம் காணும் நாம், இலக்கியத்துக்கு என்று தனியே ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவக் கூடாதா? அது எப்போது?

இந்தக் கேள்விகளோடு என் ஏற்புரையை நிறைவுசெய்கிறேன். இந்த விருதுக்கு என்னைத் தகுதிப்படுத்திய ஒவ்வொரு சமூக மனிதனுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரை வழங்கினார்.

ஞாயிறு, 12 ஜூலை, 2026

தமிழ்த்தென்றல் திரு.வி.க. எழுதியிருப்பதை எடுத்துக்காட்டி ‘மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா’வில் தமிழர் தலைவர் கருத்துரை

 

பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்குப் போட்டியாக காங்கிரஸ் பார்ப்பனர் ஒருவரால் தொடங்கப்பட்டதுதான் ‘சென்னை மாகாணச் சங்கம்’

சென்னை, ஜூலை,11 மணவழகர் மன்றத்தின் முத்தமிழ் விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.  “பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்குப் போட்டியாக, காங்கிரசிலிருக்கும் பார்ப்பனர் ஒருவரால் தொடங்கப்பட்டதுதான், ‘சென்னை மாகாணச் சங்கம்  அதில்  யானும், ஈ.வெ.ரா. வும் துணைத்தலைவர்களாக இருந்தோம்” என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. எழுதி யிருப்பதாக தமிழர் தலைவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.

1957இல் தொடங்கப்பட்ட சென்னை மணவழகர் மன்ற அறக்கட்டளை, அதன் 70 ஆம் ஆண்டு முத்தமிழ் விழா 10.07.2026, வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு, தியாகராயர் நகரில் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

இந்நிகழ்வில், மணவழகர் மன்றத்தின் செயலாளர் கே.கன்னியப்பன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அதில் அவர், “தமிழ்த்தென்றல் திரு.வி.க.கூறியது போல், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவராகவும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. தாய் என்றும் பேசியிருக்கிறார்கள்” என்று ஒரு முக்கியமான வரலாற்றுக்குறிப்பை நினைவூட்டிப் பேசினார். வரவேற்புரை நிறைவு பெற்றவுடன் சிறப்பு விருந்தினர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் செ.முகம்மது அலி, “இன்றைய தமிழர் நிலை” எனும் தலைப்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கே.பாலகிருஷ்ணன், “திரு.வி.க.வும், தொழிலாளர் இயக்கமும்” எனும் தலைப்பிலும் உரையாற்றினர். முன்னதாகவே திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் தமது உரையில், “இன்றைய அரசியல் சூழல் மாறியிருக்கிறது. அவர் வருவார், இவர் வருவார் என்று இல்லாமல் எவர் வந்தாலும் வராவிட்டாலும் மணவழகர் மன்றம் நிகழ்ச்சி நடைபெறும்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே தொடங்கினார். தொடர்ந்து, தந்தை பெரியாருக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களுக்கும் கருத்து மோதல்கள் இருந்தாலும் அது கண்ணியமாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, “இது என்றைக்கும் பாடமாக இருக்கக்கூடியது” என்றார். மேலும், மணவழகர் மன்ற வரலாற்றில் மேனாள் நீதியரசர் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், எ.ஆர்.லட்சுமணன், சுந்தரேசன் ஆகியோரை நினைவு கூறாமல் இருக்க முடியாது” என்றார். மேலும் அவர், வரவேற்புரை வழங்கிய கன்னியப்பன் அவர்களின் பணிகளையும் நினைவு கூர்ந்து பாராட்டினார்.

தொடர்ந்து, தனக்கு வழங்கப்பட்ட ‘தந்தை பெரியாரும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வும்” என்ற தலைப்பை சுட்டிக்காட்டி, “Unlike poles attracks each other” என்ற காந்தவியலைச் சுட்டிக்காட்டி இருவரின் கருத்துகளையும், குணங்களையும் பட்டியலிட்டார். “சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியார் பொதுவாழ்க்கைக்கு வந்தார்” என்பதை முன்னோட்டமாகக் கூறிவிட்டு, நீதிக்கட்சி இருந்த காலத்தில், அதற்கு போட்டியாகத்தான் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர் ஒருவரால் தொடங்கப்பட்டதுதான், சென்னை மாகாண சங்கம். அந்த சென்னை மாகாண சங்கத்தில், தந்தை பெரியாரும், திரு.வி.க.வும் துணைத் தலைவர்களாக இருந்ததை, திரு.வி.க.வே எழுதியிருப்பதை, அவரது எழுத்துகளிலேயே வாசித்துக்காட்டினார். வாசிக்கும் போதே அந்த தமிழின் இனிமையில் மனதைப் பறிகொடுத்து, “கடலூர் மாநாடு, ஈரோடு மாநாடுகளில் திரு.வி.க. பேசியதை கேட்கும் பேறு பெற்றவன் நான். அவரது பேச்சு மட்டுமல்ல, எழுத்தும் நம்மை ஈர்க்கக்கூடியது” என்று பெருமிதத்துடன் கூறினார். அடுத்து திரு.வி.க. சொன்ன இன்னுமொரு முக்கியமான கருத்தான, “தமிழ்நாடு காங்கிரஸ் ஈ.வெ.ரா வின் உழைப்பால் நன்றாக உண்டு கொழுத்தது” என்பதைச் சொன்னவுடன் பார்வையாளர்கள் நன்றாக ரசித்து சிரித்தனர்.

அடுத்து, “ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கம் எனது சன்மார்க்க இயக்கத்திலிருந்து பிறந்தது. 90% ஒற்றுமை! 10% வேற்றுமை! வேற்றுமை எங்களுக்குள் போரை மூட்டியது. ஆனால், வேற்றுமை ஆக்கம் பெறவில்லை” என்று திரு.வி.க. சொன்னதையே எடுத்துரைத்தார். மேலும் அவர், “அந்த வேற்றுமையும் கண்ணியத்துடன் இருந்தது. இது பொதுவாழ்வில் இருப்போருக்கு என்றைக்கும் பாடமாகும்” என்று கூறி, பெரியாரின் தொண்டும், உண்மையும் எப்படிப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பட்டியலிட்டு, காஞ்சிபுரம் மாநாட்டில் கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்தாலும், சந்திக்கும் போது, காழ்ப்புக் காட்டாத நண்பர்களாகவே இருந்ததையும் சுட்டிக்காட்டி தமது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக மணவழகர் மன்றத்தின் துணைச் செயலாளர் சு.கருணாநிதி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்வில்,  கழகத்தின் செயலவைத்தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி,  தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, கோ.வீ.ராகவன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச் செல்வன், தாம்பரம் மாவட்டத் தலைவர், முத்தையன், மோகன்ராஜ், கழகச் சொற்பொழிவாளர்கள் பிராட்லா, தேவநர்மதா, பெரியார் மாணாக்கன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ‌.தொண்டறம், சோழிங்கநல்லூர் ஜெயராமன்,  சுரேஷ், பெரியார் பெருந்தொண்டர் த.கு.திவாகரன், அரும்பாக்கம் தாமோதரன், யுகேஷ், தங்கமணி தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

- விடுதலை நாளேடு,11.07.26



அயோத்தி கோயிலில் நடக்கும் ஊழல் பற்றி ‘கடவுள்’ ராமனுக்குத் தெரியுமா?-கி.வீரமணி

 

‘பக்தி’, ‘பக்தி’ என்று ஏமாறும் பக்தர்களே, சிந்தியுங்கள்!

பக்தி’, ‘பக்திஎன்று ஏமாறும் பக்தர்களே, சிந்தியுங்கள்! அயோத்தி கோயிலில் நடக்கும் ஊழல் பற்றிகடவுள்ராமனுக்குத் தெரியுமா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தி, ‘ஆக்டோபஸ்’ அதன் பல கரங்களை விரிப்பது போல, பணிவு, பகிர்வு என்ற பெயரால் தனது ஜாதி, மதவாதக் கொள்கையைப் பரவலாக்கி, தனது ஆதிக்கத்தை மேலும் மேலும், நாளும் நாளும் பரப்பி வருகிறது.

அதன் நூற்றாண்டு கொண்டாடப்படும் இத்தருணத்தில் அதனுடைய செயற்பாட்டிலும், வெளிப்படைத் தன்மை எதுவும் இல்லாது எல்லாம் மறைபொருளாகவே உள்ளன; அதன் ‘ஷாகா’ ஒன்றைத் தவிர.

அது உருவாக்கியுள்ள முக்கிய அமைப்புகளுள் ஒன்று “விஸ்வ ஹிந்து பரிஷத்’ (V.H.P.)!

‘பக்தி போதை‘ மாத்திரைகளை மக்கள் விழுங்கும்படித் தொடர்ந்து செய்து வருகிறது!

இது மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்ததையொட்டி ஆழ்ந்த ‘கவலை’, ‘கரிசனம்’ காட்டியும், மக்களைத் தங்களது வயப்படுத்த ‘கடவுள் பக்தி’ போதையையும், அதன் குறியீடுகளையும் ஆங்காங்கு பாமர மக்கள் முதல் படித்த, பணக்காரர் வரைப் பாய்ந்திடச் செய்து – கோயில் திருவிழாக்கள், மக்கள் மறந்துவிட்ட சடங்கு, சம்பிரதாயங்களுக்குப் புது வடிவம் கொடுத்து, தேர் ஓட்டம் மற்றும் பலவற்றிற்கும் மாதா மாதம் ஏதோ ஒரு பெயரில் புதுப்புது ‘பக்தி போதை’ மாத்திரைகளை மக்கள் விழுங்கும்படித் தொடர்ந்து செய்து வருகிறது!

கோயில் ‘கும்பாபிஷேகங்கள்’ மற்றொரு வகை!

புதுப்புது ‘ஜெயந்தி’ – பண்டிகைகளையும் ‘உருவாக்கி!’

தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் ‘பெரு முதலாளி’களால் (கார்ப்பரேட்) நடத்தப்படுவதால், அவர்களை ஏவி விட்டுப் பழைய குட்டிச் சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், ஓடாத கிராமங்களில் கூடத் தேர் இழுக்கச் செய்தல், முன்பு இல்லாத அனுமன் ஜெயந்தி போன்ற புதுப்புது ‘ஜெயந்தி’ – பண்டிகைகளையும் ‘உருவாக்கி’ வியாபாரங்களையும் தங்கள் வயப்படுத்தி ‘அட்சய திருதி‘ என்று, பல்வேறு ‘மயக்க பிஸ்கெட்’டுகளை தொடர்ந்து தயாரித்துத் தருதல் என்று விதவிதமாகச் செயல்பட்டு வருகிறது.

அறிவியல் தந்த கருவிகள், எலக்ட்ரானிக் மீடியாக்கள், தொலைக்காட்சிகளை வைத்து மத மூட நம்பிக்கைகளைப் பரப்பி, பக்தி போதையூட்டி, ஆட்சியாளர்கள் மீது ஏற்படும் எதிர்ப்பு, அதிருப்தியை அறவே திசை திருப்பவும், மறக்கடிக்கவும் செய்ய இந்தக் கடவுளை, பக்தி மாயையை நல்ல மயக்க மருந்தாக மக்களுக்கு ஊட்டி வருகிறது.

நீதிமன்றத் தீர்ப்புகள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகவே நிற்கும் பரிதாப நிலை!

ஓட்டு அரசியல் நடத்தி, ஆட்சியைப் பிடிக்க விரும்பும் கட்சிகளும், வாக்கு வங்கியை மனதிற்கொண்டே நடைபாதைக் கோயில்களை அகற்றிட உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும், அரசின் ஆணைகளும் இருந்தும், அவற்றைச் செயல்படுத்த மறுக்கின்றன. தீர்ப்புகள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகவே நிற்கும் பரிதாப நிலை!

கும்பாபிஷேகக் கணக்கைப் போட்டிப் போட்டுக் கொண்டு சொன்ன பக்தவத்சலம் ஆட்சி முதல் நேற்றைய தி.மு.க. ஆட்சி வரை அதனால் பெரிய வெற்றியைப் பெற்றதாகத் தெரியவில்லை! ஏமாற்றம் தான் மிச்சம்!

ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., அவற்றின் செயல்பாட்டினைப் பற்றி விவரிக்கையில், கோயில்களையே தங்களது ஆதரவு பெருகும் அமைப்புகளாகக் கருதியே, நடத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது.

பார்ப்பன வர்ணாசிரமத் தத்துவங்களுக்கு நல்ல உரம் போடவும், இந்தக் கடவுள் பக்தி, கோயில் என்று பார்ப்பனர்கள் கொழுக்கவும், மக்கள் மூளையில் காவிச்சாயம் அடிக்கவும் பயன்படுத்துகின்றன:

பெரியார் மண்ணான தமிழ்நாட்டில்தான் அவர்கள் முழு வெற்றி பெற முடியாமல், முட்டி மோதிப் பார்க்கிறார்கள். சில கூலிப்படைகளையும், எழுத்துக் குத்தகை ஆட்களையும் முகவர்களாக்கி முயற்சி செய்கின்றனர்.

பரப்புரை, அறப் போராட்டங்கள், பேரணிகள் முலம் மக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தியுள்ளது!

பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முழுமையாக – மும்முரமாகச் செய்து – அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டுமென்று அரசியலமைப்புச் சட்டம் 51A(h) பிரிவு வற்புறுத்தியுள்ளதைப் பல ஆண்டு முன்பே தந்தை பெரியாரது இயக்கம் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி வந்து, பரப்புரை, அறப் போராட்டங்கள், பேரணிகள் முலம் தெளிவுப்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கியத் திட்டமான ராமன் கோயில் கட்டுவதை – திட்டமிட்டே பாபர் மசூதி இடிப்பு – பிறகு அதையொட்டிய உச்சநீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பு, அதைப் பயன்படுத்தி அயோத்தி ராமன் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியும், திறப்பு விழா செய்தது பா.ஜ.க., அதன் அறக்கட்டளை அமைத்தல் முதல் பொறுப்பாளர்கள் தேர்வு வரை பிரதமர் மோடியே அவர்களே முன்னின்று செய்து, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானமான “மதச் சார்பற்ற அரசு” என்ற கருத்தாக்கத்தையே காணாமற் போகச் செய்து, அவசர அவசரமாகத் தேர்தலுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் திறப்பு விழா நடந்தது;

விமானத் தளம் திறக்கப்பட்டது, எல்லாவற்றுக்கும் விளம்பரமோ அடை மழைபோல!

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் வந்த வண்ணம் உள்ளது!

ஆனால், இன்று அதில் பரிதாபத்திற்குரிய பக்தர்களின் காணிக்கைகள் எல்லாம் ஊழல் பெருச்சாளிகள் வசம் சிக்கி, குற்றச்செயல்கள் பற்றி முகம் சுளிக்கும் செய்திகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் வந்த வண்ணம் உள்ளது!

சி.பி.அய். விசாரிக்கத்தக்க ஊழல் என்பது பற்றிச் சற்றும் கருத்தில் கொள்ளாது குற்றம் இழைத்தவர்களை ராஜினாமா மூலம் வெளியே அனுப்புகிறார்கள் (குற்றப் பத்திரிகை இல்லாது). சரியான நடவடிக்கைகள் நடக்குமா? இதுபோன்ற நடவடிக்கைகளே தொடருமா? – யாருக்கும் தெரியாது, ஏன் கடவுள் இராமனுக்குக்கூட தெரியாது என்ற நிலைதானா?

‘பக்தி’, ‘பக்தி’ என்று ஏமாறும் பக்தர்களே, சிந்தியுங்கள்!

- விடுதலை நாளேடு, 12.07.26

சனி, 27 ஜூன், 2026

கருவறை முதல் கல்லறை வரை - கவிஞர் கண்ணதாசன்



கருவறை தொடங்கிக் கல்லறை வரைக்கும்

வருவதும் போவதும் வரைமுறை அன்று 

ஒருவினை மறையின் மறுவினை தோன்றும் 

ஊழ்வினை உறுத்துவந் தூட்டும் எனும்படி 

பட்டினி உணர்வு பரபரப் பென்பது கட்டளை போலக் கழுத்தினை நெரிக்கும்! 

நண்பர் என்பதில் நல்லவர் தீயவர் அன்பர் என்பதில் அறவோர் மறவோர் கொண்டவர் தமக்குள் குறையினர் நிறையினர் 

கொள்கைகள் தம்மில் கூடுதல் குறைச்சல்

ஆயிரம் ஈட்டிகள்! ஆயிரம் ஈட்டிகள்! அனைத்தையும் விலக்கி அடவி சென்றாலும்

 பாயும் ஈட்டிகள் பாசக் கம்புகள்! மானிடச் சாதியில் மறுபடி மறுபடி தோன்றும் விதியிது! துயரா, நலமா? வாழ்க்கை என்பதை வாசலில் ஒருநாள் அற்புதச் சொர்க்கமாய் அறிந்துநாம் போற்றுவோம்! 

மறுநாள் பொழுது மயங்கி விடிந்தால் நரகம் போலதை நாமே தூற்றுவோம்! எத்தனை சலனம்? எத்தனை சபலம்? பித்துப் பிடித்துப் பேதை போலாகி தத்துவ ஞானச் சந்நிதி விழுந்து 

காய மேஇது பொய்யெனக் கதறுவோம் மாய மாதா மயக்கென உளறுவோம்! நாற்றச் சடலமும் ஊத்தைப் பையெனத் தூற்றித் தூற்றித் துயரம் தீருவோம்! ஆத்தாள் அப்பன் அனுசரித் ததனால் ஊத்தைப் பையை உலகில் சுமந்தோம்! நாமா காரணம்? நமதா குற்றம்? நன்றோ தீதோ நாமும் பிறந்தோம்! இன்றோ நாளையோ எங்கோ இருப்போம்! 

வாழும் வரைக்கும் வாழ்க்கையை நினைத்து 

அங்கம் தனில்நோய் அணுகா வாறும் ஆசை எனும்நோய் அடையா வாறும் துன்பம் எனும்நோய் தொடரா வாறும் ஆடி முடித்தால் ஆனந்தம் அதிகம்! 'வாழ்வோம்' என்பதை வரையெனப் போட்டால் 

'வாழ்வீர்' என்பதை இறைவன் உரைப்பான்!

'இந்த முதலடிக்குக் கவிதை எழுத வேண்டாம்' என்று எவ்வளவோ சொல்லியும், மறுத்து, இது தனக்குப் பிடித்ததெனச் சொல்லி, கவிஞர் 1.7.81. இரவு 7.30. க்கு எழுதி முடித்தார். இதுவே, கவியரசர் தமிழகத்தில் இறுதியாக எழுதிய கவிதை.

- இராம. கண்ணப்பன்

முதலடி தந்தவர்: என். சிவகாமி நாகப்பன்.

குமுதம் வார இதழ், 1981

- தேடி எடுத்தவர்:-செ.ர.பார்த்தசாரதி



திங்கள், 11 மே, 2026

பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்து


கொள்கை எதிரிகளிடமிருந்து தமிழ்நாட்டைக் காக்க வேண்டும்!

திராவிடர் கழகம்

* பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்து * தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

சென்னை, மே 11 தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று (10.5.2026) காலை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் பதவியேற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள்  அங்கிருந்து நேரே தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்துக்கு விரைந்தார். அங்கு பொறுப்பில் இணைந்து மேலும் சில கோப்புகளில் கையொப்பமிட்டார். பின்னர் அங்கிருந்து கிளம்பி மதியம் 3:10 மணி அளவில், தமது அமைச்சரவையினருடன் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தார்.

திராவிடர் கழகம்

பெரியார் அருங்காட்சியக வாயிலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்துப் பெற்றார். “என்றும் உங்கள் ஆதரவு வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

மகிழ்வுடன் அதனை ஏற்றுக் கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, ‘தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்’ என்ற புத்தகத்தையும், தந்தை பெரியாரின் மார்பளவுச் சிலையையும் பரிசாக வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

“வாழ்த்துகள்.  தமிழ்நாட்டைக் கொள்கை எதிரிகளிட மிருந்து காப்பாற்றுவதே நம்முடைய கடமை” என்று அப்போது முதலமைச்சர் அவர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்தார். முதலமைச்சர் அதனை ஏற்று ஆமோதித்தார்.

பெரியார் அருங்காட்சியகம் குறித்த செய்திகளை அவருக்குத் தெரிவித்த தமிழர் தலைவர் அவர்கள், பின்னர் அருங்காட்சியகத்தினைச் சில நிமிடங்கள் சுற்றிக்காட்டி, வரலாற்றுச் செய்திகளை முதலமைச்சருக்கு சுட்டிக் காட்டினார்.    அப்போது திராவிடர் கழகத் துணைத்தலைவர், கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப்பொதுச்செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் மற்றும் தோழர்கள் உடனிருந்தனர்.

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுடன் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன், கீர்த்தனா, வெங்கட் ரமணன், டாக்டர் பிரபு உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்துப் பெற்று, சிறிதுநேரம் உரையாடி விடைபெற்ற பின்னர், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களைத் தந்தை பெரியார் நினைவிடத்திற்குத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் தோழர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம் ஆகியவற்றிற்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செய்தனர். ‘‘தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்’’ ‘‘கொள்கைத் தலைவருக்குப் புகழ் வணக்கம், மண்ணுரிமைப் போராளி, பெண்ணுரிமைப் போராளி, சமூகச் சிந்தனையாளர் தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்’’ ‘‘வாழ்க வாழ்க வாழ்கவே பெண்ணுரிமை வாழ்கவே’’  என்று முழக்கங்களை அமைச்சர் ராஜ்மோகன் எழுப்ப  பிற அமைச்சர்களும் த.வெ.க தொண்டர்களும் முழக்கமிட்டனர்.

சனி, 7 பிப்ரவரி, 2026

ஜாதியப் பாகுபாட்டைத் தடுக்கும் யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து வடமாநிலங்களில் பார்ப்பன மாணவர்கள் போராட்டம்!

 பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்!

புதுடில்லி, ஜன. 28 பல்கலைக்கழக மானியக் குழு ஜனவரி 13, 2026 அன்று வெளியிட்ட ‘‘உயர்கல்வி நிறு வனங்களில் சமத்துவத்தை மேம்ப டுத்துதல், ஒழுங்குமுறைகள், 2026’’ (Promotion of Equity in Higher Education Institutions Regulations, 2026) என்ற புதிய விதிமுறைகளை எதிர்த்து பார்ப்பன மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

புதிய யுஜிசி விதிமுறைகள்

உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி ரீதியான பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு  பல்கலைக்கழக மானியக்குழு புதிய விதிமுறைகளை கடந்த வாரம் அறி முகப்படுத்தி உடனடியாக இது அமலுக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில்  இந்த விதிமுறைகளால் உயர்ஜாதி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்களாம்! இந்த விதிமுறையை உடனடியாக நீக்க வேண்டும் என்று கூறி உயர்ஜாதி யின மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

‘‘புதிய விதிமுறைகளின்படி ‘‘ஜாதி பாகுபாடு’’ என்பது  தழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக நடப்பவை மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ளது. உயர்ஜாதி மாணவர்களாக நாங்களும் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகிறோம்; எங்களுக்கு எதிராக நடப்பவை குறித்து இந்த விதிமுறைகள்படி  புகார் அளிக்க முடியாது’’ என்று அவர்கள் கூறியுள்ளனர்.

‘‘ஒவ்வொரு கல்லூரியிலும் அமைக்கப்பட வேண்டிய ‘ஈக்விட்டி கமிட்டியில்’ உயர்ஜாதி மாணவர்களுக்கு  இடம் அளிக்கப்படவில்லை.  2025 இல் வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையில் ‘பொய் புகார் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற விதி முறை இருந்தது;  ஆனால், தற்போது வெளியிடப்பட்ட இறுதி விதிமுறைகளில் அந்த அம்சம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இது தவறாகப் பயன்படுத்தப்படலாம்’’ என உயர்ஜாதி  மாணவர்கள் அஞ்சு கின்றனராம்!

பல்கலைக்கழக மானியக்குழு இந்த விதிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று கூறி டில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் அரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வரு கின்றன. இவர்களின் முக்கிய வாதங்கள் வருமாறு:

‘‘இந்த விதிமுறைகளால் மாண வர்களுக்குள் நடக்கும் சிறிய உரை யாடல்கள் கூட பெரிதுபடுத்தப்பட்டு  பொதுப்பிரிவு மாணவர்களை ‘‘குற்ற வாளிகளாகவே’ சித்தரிக்கின்றன.  இதன் மூலம் கல்வி வளாகம் ஜாதிய அமைப்புகளின் கூடாரமாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாகவும் மாறிவிடும்  ஏற்கெனவே உள்ள சமூகப் பிரிவினையை இந்த புதிய விதிகள் மேலும் அதிகப்படுத்தும்’’ என்று அந்த உயர்ஜாதி மாணவர்கள் கூறுகின்றனர்.

மாவட்ட நீதிபதி
விதிமுறையை எதிர்த்துப்
பதவி விலகலாம்!

இந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில்  மாவட்ட நீதிபதி அலங்கார் அக்னிஹோத்ரி, கடந்த ஜனவரி 26 (குடியரசு நாளில்) பதவி விலகல் கடிதம் வழங்கினார்.  அவரது 5 பக்க பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள காரணங்கள்:

புதிய யுஜிசி விதிமுறைகள் ‘‘கருப்புச் சட்டம்’’ போன்றவை என்றும், இது பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, குறிப்பாக பார்ப்பனச் சமூகத்திற்கு எதிரானது என்றும் அவர் குற்றம் சாட்டி யுள்ளார். ‘‘பல்கலைக்கழகங்களில் மற்றும் கல்வி நிலையங்களில் பார்ப்பன மாணவர்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகின்றனர். அவர்கள் தலைமுடிக் குடுமியைப் பிடித்து இழுக்கிறார்கள். அவர்களைத் திருநங்கைகள்  என்று கேலி செய்கின்றனர்.  பார்ப்பன மாணவர்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் தனது மனதைப் புண்படுத்தியதாகக்’’ குறிப்பிட்டுள்ளார். புதிய விதிமுறைகள் பார்ப்பனச் சமூகத்தின் பேச்சுரிமை மற்றும் அவர்களின் சுதந்திரமான செயல்பாட்டை முடக்கி அவர்களைக் குற்றவாளிகள் போலவும், சமூகத்தில் ஜாதிப் பாகு பாட்டை விதைக்கும் நபர்களாகவும் சித்தரித்து மக்களிடமிருந்து பார்ப்பன மாணவர்களை  பிளவுபடுத்துவதாக உணர்வதால், அதற்கு எதிர்ப்பு தெரி விக்கும் வகையில் பதவி விலகுவதாக அவர் கூறியுள்ளார்.

‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை’ என்பார்களே, அது இதற்கு மிகவும் பொருத்தம்.

இவர்கள் ஏன் படபடக்க வேண்டும்?

ஜாதிப் பாகுபாட்டை பார்ப்பன மாணவர்கள் பார்ப்பதில்லை என்பது உண்மையானால், இவர்கள் ஏன் படபடக்க வேண்டும்?

ஒரு மாவட்ட நீதிபதியே பார்ப்பன உணர்வுடன், பதவி விலகியுள்ளார் என்றால், பார்ப்பனர்களின் அந்த ஆதிக்க உயர்ஜாதி மனப்பான்மை அகலவில்லை என்பதைப் பச்சையாக வெளிப்படுத்துகிறதே!

- விடுதலை நாளேடு,28.01.26

கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு



தமிழ்நாடு

சென்னை, பிப்.7 உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3.4.2025 அன்று சட்டமன்றத்தில்  விதி எண் 110-இன் கீழ் சென்னையில் கார்ல் மார்க்ஸ்சுக்கு புதிதாக உருவச்சிலை நிறுவப்படும் என அறிவித்தார்.

அதன்படி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சென்னை கன்னிமாரா பொது நூலகம், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் உருவச்சிலையை நேற்று (6.2.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கார்ல் மார்க்ஸ்சின் சிலை திறப்பு விழாவில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை. இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர ஒன்று மில்லை. அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது” என உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவு டைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலை கன்னிமாரா பொதுநூலக வளாகத்தில் நிலைகொண்டது. நல்லவை எங்கிருந்து வந்தாலும் வணங்கி ஏற்றுக் கொள்வோம். அல்லவை ஆதிக்கம் செலுத்தப் பார்த்தால் தடுத்து நிறுத்துவோம். இதுதான் ‘‘திராவிட மாடல்’’ என அதில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை நாளேடு, 7.2.26