• Viduthalai
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது - அடிப்படையில் மனித உரிமைப் பிரச்சினை.
தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் பங்கு பெற்ற பார்ப்பனர் ஒருவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற சிலர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துள்ளார்களே- கடவுளே இல்லை என்று சொன்ன பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிப்பவர்கள் எப்படி மனமார கோயிலில் கடவுளுக்குப் பூஜை செய்வார்கள் என்று பெரிய புத்திசாலித்தனமாக குற்றஞ்சாட்டுவது போலப் பேசியதுதான் கடைந்தெடுத்த நகைச்சுவைத் துணுக்கு. இப்படி சொல்பவர்களும் அடிக்கடி தங்களைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் எப்பொழுதோ பதில் சொல்லியாயிற்று - புதிதாக சொல்லுவதற்குச் சரக்கு ஏதும் இல்லாத நிலையில், அரைத்த மாவையே அரைக்கும் பரிதாப நிலையில்தான் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.
பெரியாரின் கொள்கை கடவுள் மறுப்புதான் - இவர்கள் சொல்லி தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் மக்கள் இல்லை.
கொள்கைக்கும், உரிமைக்கும் உள்ள வேறுபாட்டை அறியாமல் பேசுகிறார்களா? எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. என் அண்ணனுக்குக் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை இருக்கிறது. அவன் இந்து மதத்தைச் சேர்ந்தவன் - அவனுக்கு அர்ச்சகராக உரிமை கிடையாது என்று தடுப்பதற்கு என்ன காரணம்? ஜாதிதானே! சூத்திரன் என்று சொல்லப்படுவதுதானே! அவன் உரிமைக்கு அவன் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமா? ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கொள்கையுடைய, மனித உரிமையில் நாட்டம் கொண்ட, பெரியார் சக மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடாதா? போராடக் கூடாதா?
அவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறோம். இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று குரல் கொடுக்கும் கூட்டத்தினரை நோக்கி நாம் வைக்கும் கேள்வி இதுதான்.
உங்களுக்குத் தேவைப்படும் பொழுது மட்டும் எம் சகோதரர்கள் தேவைப்படுகிறார்கள் - அப்பொழுது ஜாதி - தீண்டாமை பார்ப்பதில்லை. அந்த இந்து - உரிய பயிற்சி பெற்று, தகுதி அடைந்த நிலையிலும் கூட அர்ச்சகராகத் தகுதி இல்லை என்று சொல்லுவது அசல் பார்ப்பன புத்தியும், ஆணவமும்தானே! எங்கள் மக்களை தங்கள் வசதிக்கு தேவைப்படும்பொழுது பயன்படுத்திக் கொண்டு, பிறகு தூக்கி எறியும் (Use And Throw) தந்திரம் தானே!
பார்ப்பனர்கள் இந்த 2021லும் இப்படிப் பேசுவார்களேயானால், இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் பார்ப்பன எதிர்ப்புத் தன்மை என்னும் தீப்பந்தம் திகு திகு என்று கொப்பளித்து எழாதா? பார்ப்பனர்கள் தங்களை அறியாமல் தங்கள் தலைகளுக்குத் கொள்ளி வைத்துக் கொள்ள விரும்புகிறார்களா?
இன்றைக்கு சைவ - வைணவக் கோயில்களில் பட்டர்களாகவும், சிவாச்சாரியார்களாகவும் இருக்கும் அர்ச்சனை செய்யும் பார்ப்பனர்கள் எத்தனைப் பேர்களுக்கு உண்மையிலே ஆகமங்கள் தெரியும் - மந்திரங்கள் தெரியும் - உச்சாடனங்கள் தெரியும்?
1960ஆம் ஆண்டில் சர்.சி.பி.இராமசாமி அய்யரின் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள கோயில்களை நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்தது.
“கோயில் டிரஸ்டிகளும், மகந்துகளும், பூசாரிகளும், அர்ச்சகர் களும் ஒன்று தற்குறிகளாக இருக்கிறார்கள் அல்லது அரை குறை கல்வி அறிவு படைத்தவர்களாக இருக்கிறார்கள். அத்துடன் வழக்கமாகவே பணம் பறிக்கும் ஆசாமிகளாக இருக்கின்றனர்” - என்று சொல்லி இருப்பது சர். சி.பி.இராமசாமி அய்யர்தான் என்பது நினைவில் இருக்கட்டும்.
தமிழ்நாடு அரசால் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் ஒன்று (கோயில் பட்டாச்சாரியார் களும், சிவாச்சாரியார்களும் கூட இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்) அந்த ஆணையம் அளித்த அறிக்கை குறிப்பிடும் தகவல்கள் கடும் அதிர்ச்சியைத் தருகின்றன.
வைணவத் திவ்யதேசங்கள் 108இல் 106 கோயில்களுக்குச் சென்று வந்த இந்தக் குழு கூறுகிறது - "106 திவ்ய தேசங்களில் 30 கோயில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். பூசாரிகள் இல்லாத இடங்களில் பெண்களும் அர்ச்சனை செய்கிறார்கள்."
“சென்னை கபாலீசுவரர் கோயில் உள்ள 41 அர்ச்சகர்களுள் 4 அர்ச்சர்களுக்கு மட்டுமே ஆகம விதிகள் தெரிந்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே”
- சொல்லுவது யார்? நீதிபதி தலைமையில் சிவாச்சாரியார் களும், பட்டர்களும் அடங்கிய ஆணையம்.
உண்மை இவ்வாறு இருக்க, முறையாக ஆகமம் பயின்று தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் அர்ச்சகர்களாக ஓர் அரசால் நியமிக்கப்பட்ட பொழுது அலறுகிறது ஒரு கூட்டம் - திசை திருப்பும் விவாதங்களை முன் வைக்கிறது என்றால், இதன் உண்மைத் தன்மையைப் பக்தர்களும் உணர்வார்களாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக