• Viduthalai
* மிகவும் வெட்கப்பட வேண்டிய அவலம்!
* ஜாதி வெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக!
இந்திய விளையாட்டு வீராங்கனை ஒடுக்கப் பட்ட சமூகப் பெண் வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முன் ஜாதி வெறியாட்டம் நடந்திருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய அவலம்! இத்தகைய ஜாதி வெறியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலி யுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
ஒலிம்பிக் போட்டிகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு, இதுவரை ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு, ஹாக்கி உள்ளிட்ட பல போட்டிகளில் வெற்றிக்கு அடுத்த நிலையை எட்டிப் பிடித்திருக்கிறது என்னும் அளவுக்கு இந்தியா முன்னேறியிருக்கிறது என்ற நிலை ஒருபுறம் ஆறுதலைத் தந்திருக்கிறது.
ஆனால், மகளிர் ஹாக்கி போட்டியில் மிகக் கடுமையாகப் போராடி, ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ள உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வந்தனா கட்டாரியா என்ற ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவமதிப்பு, நம் நெஞ்சத்தைக் கொதிப்படையச் செய்கிறது.
பேதங்களுக்கு மத்தியிலும்...
ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்து ஏராளமான நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஜாதி, மத, மொழி, பாலின, வர்க்கப் பிரிவினைகள்-பேதங்களுக்கு மத்தியிலும் போராடித்தான் இந்தியாவில் ஒருவர் விளையாட்டுக் குழுவில் பங்கேற்க முடிகிறது என்பது ஓர் அவலநிலை.
ஆனால், இவற்றையும் கடந்து உலக நாடுகளெல்லாம் பங்குபெறும் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்று, அங்கும் தன் திறமையை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்தியுள்ளார் வந்தனா கட்டாரியா. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வெல்ல இயலாமல் இந்தியா தோல்வியுற்ற நிலையில், அவரது வீட்டின் முன் வெடிவெடித்து ஜாதி வெறியர்கள் வெறியாட்டம் போட்டுள்ளனர். அனைத்து விளையாட்டு அணிகளிலும் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை நீக்கினால் தான் விளையாட்டு போட்டிகளில் இந்தியா வெல்லும் என்று தங்களது ஆடைகளைக் கழற்றிக் கூச்சலிட்டு, தங்கள் ஜாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜாதியின் பேரால் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்
இந்த நாட்டில் ஜாதி வெறி எத்தனை மோசமாக இருந்துகொண்டிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்றாகும். ஒரு நாட்டுக்காக விளையாடி, அதிலும் தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கும் ஒருவரை ஜாதியின் பேரால் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் என்றால் எத்தகைய தடைகளை யெல்லாம் அவரும், அவரைப் போன்றே இந்நாட்டின் வெகுமக்களும் கடக்க வேண்டியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க முடியும்.
ஒதுக்கித் தள்ளிவிட முடியாது
அந்தச் செயலைச் செய்தவர்கள் ஏதோ இருவர் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அந்நிகழ்வுதான் இங்குள்ள கேடுகெட்ட ஜாதிவெறியின் கண்கண்ட அடையாளம்! இப்படி நாளும், நாளும் எத்தனை ஜாதி- தீண்டாமை வன் கொடுமைகள் நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன? இது இந்நாடு வெட்கப்பட வேண்டிய நிகழ்வாகும்.
இத்தகைய ஜாதி வெறியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜாதி வெறியர்களை மீறி சாதனை படைத்துள்ள வந்தனா கட்டாரியாவை இந்நாடு மேலே உயர்த்திக் கொண்டாட வேண்டும்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
8.8.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக