புதன், 6 நவம்பர், 2019

பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் நடத்தும் ‘பெரியார் 1000' வினா-விடைப் போட்டி 2019: தமிழ்நாடெங்கும் ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்பு

தந்தை பெரியார் ஓர் ஒப்பற்ற சுய சிந்தனையாளர், உலகச் சிந்தனை யாளர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர், அய்.நா. மன்றத்தினு டைய கிளைப் பிரிவான 'யுனெஸ்கோ' மன்றம் விருது வழங்கி சிறப்பித் திருக்கிறது.

தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி இந்திய அரசு அஞ்சல் தலையும், அவரது 125ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் உறையும் வெளியிட்டு பாராட்டியுள்ளது.

தமிழக அரசு பாடத் திட்டத்தில் தந்தை பெரியாரின் தொண்டினைப் பதிவு செய்திருக்கிறது.

தஞ்சாவூரில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் பள்ளி மாணவர்களுக்கான 'பெரியார் 1000' எனும் மாபெரும் வினா - விடைப் போட்டியினை 2011ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.

பள்ளி மாணவர்கள் 'பெரியார் 1000' வினா - விடைப் போட்டி' எனும் இந்த அறிவுத் திருவிழாவல் கலந்து கொண்டு பயன்பெற்று வருகிறார்கள். முதன் முதலில் 2011ஆம் ஆண்டு தொடங்கியபோது 100 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதன்பின் 17,000, 50,000, 75,000, 78,500 என்று ஆண்டு தோறும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை படிப் படியாக அதிகரித்து வருவது பெரியாரின் தேவையை உணர்த்துவதாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்று வருகிறார்கள்.

இந்த ஆண்டு (2019) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து வருவாய் மாவட்டங்களில் 'பெரியார் 1000' வினா விடைப் போட்டி 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரே பிரிவாக நடைபெறுகிறது. 45 நிமிடங்களில் 50 வினாக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.

இன்று (6.11.2019) தொடங்கிய 'பெரியார் 1000' வினா விடைப் போட்டி நவம்பர் 22 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் www.periyarquiz.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-விடுதலை நாளேடு 6 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக