சனி, 14 மார்ச், 2020

ஆன்மிகத்தின் இலட்சணம் என்ன?

கேள்வி: பெரியாரின் கொள்கைப்படி வாழ்ந்தவர்களின் கடைசிக்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?

பதில்: நெற்றி முழுவதும் விபூதியிட்டு,  தள்ளாமல் நடந்து, கபாலி கோவிலை சுற்றி வருபவர்கள் பலர், ஒரு காலத்தில் பெரியார் கொள்கைகளோடு வாழ்ந்தவர்கள்தான்.

‘துக்ளக்‘, 18.3.2020

அப்படியா? ஒரு பத்துப் பேரைச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

நூறு வயதைத் தாண்டி கழகம் நடத்தும் மாநாடுகளுக்கெல்லாம் தன்னந்தனியாக தவறாமல் வரும் கருஞ்சட்டைத் தோழர்கள்பற்றி நெற்றி நிறைய திருநீறையும் பூசிக்கொண்டு, மடத்துக்கு வரும் பெண்ணின் கையைப் பிடித்து இழுக்கும் சங்கராச்சாரியாரின் சீடருக்கு என்ன தெரியும்?

பக்தியிலே மூழ்கி பெரியார் உரையைக் கேட்டு நாத்திகர்களாக மாறியவர்களின் பட்டியலைக் கொடுக்க நாங்கள் தயார் - அதே முறையில் பட்டியல் கொடுக்க குருமூர்த்திகள் தயார்தானா?

அதுசரி, பார்வதி தேவியாரின் ஞானப்பாலைக் குடித்த திருஞான சம்பந்தர் பதினாறு வயதிலேயே அற்பாயுளில் மண்டையைப் போட்டது - எதனாலாம்?

‘துக்ளக்‘ கூட்டத்துக்கு ஒரே ஒரு கேள்வி. உங்களின் சாவர்க்கார் ஆத்திகரா - நாத்திகரா?

***

கேள்வி: முட்டாள் அலைவான், புத்திசாலி பிரயாணம் செய்வான்; புத்திசாலியின் ஒரு பயண அனுபவம் சொல்லுங்களேன்... ப்ளீஸ்...!

பதில்: புத்திசாலி பயணம் செய்வான் என்பதற்கு மகத்தான உதாரணம் மகாத்மா காந்தி. தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய அவர், நாடு முழுவதும் செய்த பிரயாண அனுபவத்தால் அவருடைய உடையே மாறி, மோகன்தாஸ் காந்தி மகாத்மா காந்தியாகி மக்களை ஆட்கொண்டார். உல்லாசத்துக்கு மட்டும் பிரயாணம் செய்பவர்கள் எல்லோருமே ஒரு வகையில் முட்டாள்களே!

‘துக்ளக்‘, 18.3.2020

காந்தியார் பயணம் நல்லதுதான். அவர் பயணத்தைத்தான் உங்களின் இந்து மகா வெறியனான சித்பவன் பார்ப்பானாகிய நாதுராம் கோட்சே துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்து முடிவுரை எழுதிவிட்டானே!

“வேதம் ஓத வேண்டியவர்களின் கைகளில் ‘டி ஸ்கொயர்’ எதற்கு? ஆபரேசன் செய்யும் கத்தி எதற்கு?” என்று பேச ஆரம்பித்துவிட்டாரே - அவர் பயணம் ஆபத்து என்று கூடி முடிவு செய்துதானே ‘மகாத்மா’வின் உயிரைக் குடித்துத் தீர்த்தீர்கள் - இந்த வெட்கக்கேட்டில் காந்தி புராணம் வேறா?

கேள்வி: தமிழ்நாட்டில் இனி வருங்காலத்தில் ‘ஜாதிக்குள்ளாகவே மோதல்கள் உருவாகும்‘ என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளாரே?

பதில்: அவர் கூறுவது முற்றிலும் உண்மை. ஜாதிக்குள் மோதல்கள் - அரசியலால்தான் உருவாகும். அரசியல் ஜாதிகளைப் பிரிக்குமே தவிர, இணைக்காது. ஆன்மிகமும், கலாச்சாரமும் மட்டுமே ஜாதிக்குள் இணக்கத்தை ஏற்படுத்தும்.

‘துக்ளக்‘, 18.3.2020

அந்த ஜாதிகளை உருவாக்கியது யார்? அந்த ஜாதிகள் ஒழிய வேண்டுமா? வேண்டாமா? ‘துக்ளக்‘கின் கொள்கை என்ன? ஜாதி என்பதே மனிதருக்குள் பிரிவினையை ஏற்படுத்துவது தானே - இதில் அரசியல் ஜாதிகளைப் பிரிக்கும் என்ற பேச்சு எதற்கு?

ஜாதியை முதலீடாக கொண்ட கட்சிகள் இங்கு போணி ஆவதில்லை என்பது வேறு விடயம்.

இதிலே மதத்தை ஏன் விட்டுவிட்டார் குருமூர்த்தி? ஓ, அதைத் தொட்டால் மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி, பார்ப்பனீயத்தை சிம்மாசனத்தில் அமர்த்தும் அவாளின் இந்து மத அரசியலின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிடுமே என்ற அச்சமா?

கடைசியில் அது என்ன ஒரு சொட்டு?

ஆன்மிகமும், கலாச்சாரமும் மட்டுமே ஜாதிக்குள் இணக்கத்தை ஏற்படுத்தும் என்ற உளறல் ஒரு கேடா?

உங்கள் ஆன்மிகம் என்பதே ஜாதிக்கு ஜாதி சிண்டு முடிவதுதானே? உங்கள் ஆன்மிகத்தில் ஒரு மதத்துக்குள்ளே ஆயிரம் ஆயிரம் பிளவுகளும், வெட்டுக் குத்துகளும்தானே.

நாமதாரி கூட்டத்துக்குள் வடகலை - தென்கலை சண்டை ஊர் சிரிக்கிறதே! காஞ்சி வரதராஜன் கோவிலில் பாசுரத்தை யார் முதலில் பாடுவது என்பதில், குடுமிப் பிடிச் சண்டை - சந்தி சிரிக்கிறதே- சாக்கடை நாற்றத்தைவிடக் குடலைப் புரட்டுகிறதே!

காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதியின் ஆன்மிகத்துக்குள் புகுந்து விளையாடும் திருவிளையாடல்கள்பற்றி, காஞ்சி மடத்தின் மேனாள் மேலாளர் சங்கரராமன் தான் புட்டு புட்டு வைத்தாரே... அவற்றையெல்லாம் மறுபடியும் வெளியிடவேண்டும் என்று திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் ஆசைப்படுகிறாரா?

தந்தை பெரியாரின் கோட்பாட்டில் ஒழுக்கம் பொதுச் சொத்து, பக்தி தனிச் சொத்து - அங்கே எப்படி?

தந்தையைக் கொன்று, தாயைப் புணர்ந்தவனுக்கே சுலபத்தில் மோட்சத்துக்கு டிக்கெட் கிடைத்துவிடுகிறதே - அந்தக் காமக் கொடூரனுக்கு நேரில் தோன்றியல்லவா உமையொரு பாகன் (சிவன்)அழைப்புக் கொடுத்தான் என்று புராணம் புகல்கிறதே - இதுதானே ஆன்மிகத்தின் - பக்தியின் இலட்சணம்!

கண்ணாடி வீட்டிலிருந்து குருமூர்த்தி அய்யர்கள் கல்லெறிய ஆசைப்படவேண்டாம்!

- மின்சாரம்

- விடுதலை ஞாயிறு மலர் 14 3 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக