தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் தமிழ்நாடெங்கும்
• Viduthalaiநமது சிறப்புச் செய்தியாளர்
பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்றார் பெரியார். இந்த நிலைமையை உருவாக்கிட தடையாக இருப்பது கடவுளா? ஒரு கை பார்க்கிறேன் என்று உடைத்துக் காட்டினார். மதம்தான் அதற்கு மூல ஊற்று என்றால், அதன் ஆணிவேரை வெட்டி வீழ்த்து வேன் என்றார். வேதங்களும், இதிகாசங்களும், ஸ்மிருதிகளும், புராணங்களும்தான் பாதுகாப்புக் கோட்டைகள் என்றால், அவற்றை உடைத்துத் தரைமட்டமாக்குவேன் என்றார். சொன்னது மட்டுமல்ல, செய்தும் காட்டினார்.
அதன் விளைவுதான் தமிழினத்தின் மறுமலர்ச்சி, பெண்ணினத்தின் பேரெழுச்சி! அக்கிரகாரக் கழனி களில் மட்டும் பாய்ந்து வந்த கல்வி நீரோடை சேரி பக்கமும் சென்றது - ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கமெல் லாம் பாய்ந்து பசுமைக் கொழிக்கச் செய்தது.
கடவுள் நம்பிக்கையாளர்களும்கூட, மத நம்பிக்கை யிலிருந்து விடுபட முடியாத நிலையில் இருந்த வர்கள்கூட நம் விழிகளைத் திறந்த வித்தகர்; நம் பிள்ளைகளுக்குக் கல்வி உரிமையைப் பெற்றுத் தந்த பெம்மான், உத்தியோக வாய்ப்பு என்னும் கதவுகளைத் திறந்துவிட்ட தீரமிகு தலைவர் என்று போற்றினர் - தங்கள் இனத்தின் தந்தை என்று தலைமேல் வைத்துக் கொண்டாடினர்.
அவர் மறைந்து 48 ஆண்டுகள் ஓடி மறைந்தாலும், நன்றி உணர்வோடு கொண்டாடப்படுகிறார்.
கடந்த 10 ஆண்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்கள், ஒன்றியத்தில் கடந்த ஏழாண்டு காலமாக நடைபெறும் ஹிந்துத்துவா என்னும் பார்ப்பன வெறி பிடித்த மதவாதமென்னும் மதவெறி கொண்ட யானையின் துவம்சம், சமூகநீதியின் ஆணிவேரில் அமிலத்தைப் பாய்ச்சிய பாசிசம் - மாநில உரிமைகளை மண்ணில் புதைக்கும் ஏகாதிபத்திய துர்க்குணம் - இவற்றால் ஏற்பட்ட இழப்புகள், உரிமைப் பறிப்புகளைக் கண்ட மக்கள் தந்தை பெரியாரின் பக்கம் தங்கள் பார்வையைச் செலுத்தினர். பகுத்தறிவுப் பகலவன் இல்லைஎன்ற நினைப்பா - இந்த கைபர் கணவாய்க் கூட்டத்திற்கு என்று நினைக்க ஆரம்பித்தனர்.
பா.ஜ.க. போர்வையில் பார்ப்பனீயம் படம் எடுத்து ஆடுகிறது. பா.ஜ.க.வின் காதைத் திருகி செயல்பட வைப்பது ஆர்.எஸ்.எஸ். என்ற உண்மைகளையெல்லாம் திராவிடர் கழகம் தொடக்க முதல் அங்குலம் அங்குலமாகத் தோலுரித்துக் காட்டியது.
வேறு மாநிலங்களில் வாலாட்டிய இந்தக் கும்பலின் ஜம்பம் தமிழ் மண்ணில் பலிக்கவில்லை.
பத்தாண்டு பார்ப்பனீய பாதம் தாங்கும் ஆட்சி தொலைந்த நிலையில், உண்மையான திராவிட இயக்க ஆட்சி முழு பலத்துடன் அதிகார லகானைப் பிடித்தது.
ஆம், தந்தை பெரியாரின் ஆட்சி மலர்ந்தது. அதன் விளைவுதான் - தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள் என்ற அறிவிப்பு - அந்த நாளில் உறுதிமொழி ஏற்பு என்ற ஏற்பாடு.
அதன் விளைவு தமிழ் மண் முழுவதும் மகிழ்ச்சியின் கொண்டாட்டம்! தங்கள் வீட்டு விழா என்ற உணர் வோடு தமிழர் இல்லமெல்லாம் இன்பப் பொங்கல் - எங்கு பார்த்தாலும் தந்தை பெரியாரின் உரை வீச்சுகள், இசைப் பாடல்கள் ஒலிபரப்பு. இதுவரை காணாத திராவிடத் திருநாளாகக் கொண்டாடப்பட்டது.
எந்தத் தொலைக்காட்சியைத் திறந்தாலும் பெரியார்! பெரியார்!! பெரியார்!!! கலை உலகத்தவர்களின் கல கலப்பான பேட்டிகள் - அரசியல் தலைவர்களின் ஆணித்தரமான கருத்துரைகள், கல்வி நிலையங்களில் ஆடல் பாடல்கள், வண்ண வண்ண சுவரொட்டிகள் - பதாகைகள், சுவர்கள் எல்லாம் தந்தை பெரியாரின் ஆக்கிரமிப்பு.
சென்னையில் தந்தை பெரியார் சிலைகள் எல்லாம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் - தலைவர்களும், தொண்டர்களும் புடைசூழ தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு, உறுதிமொழி ஏற்பு, தந்தை பெரியார் நினைவிடம், பெரியார் திடலுக் குத் தலைவர்கள், தொண்டர் குழாமுடன் படையெடுப்பு!
இன்னும் எவ்வளவோ எழுதலாம் - எழுதி மாளாது.
இத்தகு சூழலில்தான் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் திராவிடர் கழகத்தின் சார்பில், தலைமைக் கழகத்தின் சார்பில் எடுக்கப்பட்டது. அன்னை மணியம்மையார், தந்தை பெரியார் சிலை களுக்கு மாலை, அய்யா -அம்மா நினைவிடங்களிலும், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்திலும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் மலர்வளையம் வைத்துச் சூளுரை!
தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் உரையரங்கம் தொடக்கம்! (விவரம் - இன்றைய ‘விடு தலை'யில் ஜப்பான் மொழியில் தந்தை பெரியார்பற்றிய இரு நூல்கள் வெளியீட்டு விவரம் தனியே காண்க).
விழாவுக்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையில் இடம்பெற்ற ஒவ்வொரு சொல்லும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு - என்றும் காண முடியாத மகிழ்ச்சியின் உந்துதல் அவரிடம் காணப்பட்டது.
அவர் உரையில் மின்னித் தெளித்த முத்துகள் சில...
ஜப்பான் மொழியில் வெளியான தந்தை பெரியாரின் வாழ்க்கைச் சுருக்கம், வைக்கம் போராட்டம் ஆகிய இரு நூல்களை வெளியிட்ட இந்து அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்களைப் பற்றி குறிப்பிட்ட கழகத் தலைவர், இவர் சேகர்பாபு அல்ல- செயல்பாபு - புயல்வேக செயல் வீரர் என்று பாராட்டுரை புகன்றார்.
தந்தை பெரியார், ஈரோடு வட்ட தேவஸ்தான கமிட்டியின் தலைவராக இருந்து, கோவிலின் வருவாயைப் பெருக்கிக் காட்டியவர்தான். அதேபோல இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களும், கோவில் சொத்துகளை எல்லாம் மீட்டு வருகிறார். கோவில்களில் அன்னதானம் வழங்கி, மக்களின் பசிப் பிணியைப் போக்கி வரக்கூடியவர்.
'குடிஅரசு' இதழின் தலையங்கப்பகுதியின் மேல் ஒரு பாடல் வரும் - அந்தப் பாடல் -
''அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி யெவற்கும் ஆற்றி
மனத்துளே பேதாபேதம்
வஞ்சம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேறொன்றுண்டோ
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகும்தானே.''
'குடிஅரசு' இதழின் வரியில் காணப்படும் அந்தப் பசியைத்தான் கோவில் வருவாயிலிருந்து போக்கி வருகிறார் நம் அமைச்சர் என்றார் கழகத் தலைவர்.
மற்றொரு முக்கிய தகவலை உணர்ச்சியோடு வெளிப்படுத்தினார் தமிழர் தலைவர். இதே மேடையில்தான் தந்தை பெரியார் அவர்கள் 1973 டிசம்பர் 8, 9 நாள்களில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டை நடத்தினார். தமிழன் கட்டிய கோவில் கருவறைக்குள் தமிழன் செல்ல முடியாது - கூடாது என்ற இழிவை ஒழிக்கும் போராட்டத்தை அறிவித்தார்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையைப் பெற்றே தீருவோம் என்று கர்ச்சனை செய்தார்.
தந்தை பெரியாரின் அந்தக் கர்ச்சனைகளின் அர்த்தம் - இப்பொழுது கிடைத்திருக்கிறது. இப்பொழுது நமது திராவிட இயக்க ஆட்சியிலே சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்து நமது அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் அந்த இறுதி அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசு ஏற்படுத்திய பயிற்சிப் பள்ளியில் முறையாகப் பயிற்சி பெற்றவர்களுக்கு அனைத்து ஜாதியினருக்கும் 58 பேருக்குப் பணிநியமன ஆணை வழங்கியுள்ளார் நமது முதலமைச்சர்.
இன்னும் எஞ்சிய கோவில்களிலும் பணி நியமன ஆணை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை செய்யப்பட்டு பயிற்சி நிறுத்தப்படாமல் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்றார் கழகத் தலைவர்.
மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு
தந்தை பெரியாரின் கனவை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார் நமது தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள். நமது முதலமைச்சர் அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர்தான் என்றும் குறிப்பிட்டார். ஆசிரியர் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு கண்டு நலமுடன் வாழவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் என்று தன் உள்ளத்தின் உணர்வை வெளிப்படுத்தினார்.
ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட இரு நூல்களையும் அமைச்சர் வெளியிட, சென்னையில் உள்ள ஜப்பானிய தூதரகக் கலாச்சார மற்றும் தகவல் பிரிவு ஆராய்ச்சியாளர் செல்வி மியூகி இனோகவே பெற்றுக்கொண்டு வாழ்த்துரைத்தார்.
''கற்போம் பெரியாரியம்!''
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட ''கற்போம் பெரியாரியம்'' எனும் நூலை திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட, உலகத் தமிழர் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் சுலோச்சனா அவர்கள் நூலைப்பற்றிய தம் கருத்துகளை எடுத்துக் கூறினார்.
எங்களைப் போன்றவர்கள் படித்து ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக வளர்வதற்குக் காரணம் தந்தை பெரியாரே - அவர்களின் சமூகநீதிக் கொள்கையே என்று நன்றி உணர்வுடன் வெளிப்படுத்தினார்.
கொசுவை ஒழிக்க அதன்மூலமான சாக்கடையை ஒழிப்பதுபோல, ஜாதி சமூக அமைப்பை ஒழிக்க அதன் மூலத்தோடு போர் புரிந்தவர் தந்தை பெரியார் என்றும் பெருமைப்படக் கூறினார்.
பார்ப்பனர் அல்லாதாரைக் குறிக்க திராவிடர் என்பதைத் தந்தை பெரியார் பயன்படுத்தியதன் காரணத்தை இந்நூலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
தந்தை பெரியார் ஒரு தொலைநோக்காளர் - சமூக விஞ்ஞானி என்பதற்கு 1938-களில் சோதனைக் குழாய்க் குழந்தை குறித்து தந்தை பெரியார் கூறிய கருத்தும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
தந்தை பெரியார் தன்னைப்பற்றி சுய விமர்சனம் செய்துகொள்ளும்போது, ''தான் ஒரு எழுத்தாளனோ, பேச்சாளனோ அல்ல - கருத்தாளன்'' என்று குறிப்பிட்டதை வியந்து பாராட்டினார் சுலோச்சனா அம்மையார்.
ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் பள்ளிகளில் பாட நூலாக வைக்கப்படவேண்டும் என்ற கருத்தையும் உறுதிபடக் கூறினார்.
ஜோதிமணி எம்.பி.
தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் 'விடுதலை' மலரை வெளியிட்ட கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
தந்தை பெரியார் ஒரு கலகக்காரரே தவிர, கலவரக்காரர் அல்ல.
பெண்கள் விடுதலை என்று வரும்போது, பெண்களிடத்திலேகூட மனத்தடை உண்டு. அதற்கு மரபணுக்கள் நம்முள் பரம்பரையாக இருந்து வருகின்றன. அந்தத் தடைகளை உடைத்தது தந்தை பெரியாரின் கைத்தடி என்றார்.
ஒர சமூகத்தின் வளர்ச்சி என்பதில் கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம் இம்மூன்றும் முக்கியமானது - ஆர்.எஸ்.எஸ். இந்த மூன்றையும் குறி வைத்துத் தாக்கி அழித்து வருகிறது என்ற நுட்பமான கருத்தினை அவர் பதிவு செய்தார்.
தங்கள் கலாச்சாரத்தைத் தவிர, வேறு கலாச்சாரம் தலைதூக்கக் கூடாது என்பதிலே பாசிச சக்திகள் கவனமாக இருக்கின்றன. கீழடி ஆய்வு தடைபட்டதற்கும், அதன் அதிகாரி அந்த இடத்திலிருந்து வெகுதூரத்திற்கு மாற்றப்பட்டதற்கும் இதுதான் அடிப்படை என்றார்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி இம்மூன்றும்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்றி வருகிறது என்று மிகவும் சரியாகக் கணித்துச் சொன்னார்.
ஆசிரியர் அய்யா அவர்களும், கருஞ்சட்டைத் தோழர்களும் வலிமையுடன் கருத்துகளை விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.
ஆசிரியர் அவர்கள் எனக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். வெற்றிக்குப் பிறகு இப்பொழுதுதான் அவர்களைச் சந்திக்கின்றேன்.
எனக்கு நான்கு இலட்சத்திற்குமேல் வாக்குகள் கிடைத்ததற்கு ஆசிரியர் அய்யா அவர்களின் பங்கும் உண்டு - அதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தம் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
தந்தை பெரியார் அவர்களை வேறு வழியில் குறை சொல்ல முடியாதவர்கள், பெரியாருக்கு இவ்வளவு உயரத்தில் சிலை தேவையா என்று சில குள்ள மனிதர்கள் சொல்லுகிறார்கள்.
நமது சமுதாயம் நமது தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மிகவும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார்.
நமது ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட ''கற்போம் பெரியாரியம்'' எனும் நூல் ஆய்வு நூல் அல்ல - அறிவு நூல். ஒவ்வொருவரும் படிக்கவேண்டும். நமக்குப் பாடங்களைக் கற்றுத் தரும் நூல். அவரை ஆசிரியர் என்று சொல்லுவது ஏன் என்பது இப்பொழுது புரிகிறதா?
உலகில் மதத்தின் பெயரால் - ஜாதியின் பெயரால் கட்சிகள் உண்டு.
சுயமரியாதை என்ற பெயரில் கட்சி உண்டா - அமைப்பு உண்டா என்ற ஆழமிகுந்த வினாவை பேராசிரியர் சுப.வீ. அவர்கள் எழுப்பியபோது அரங்கமே அதிர்ந்தது.
சிலர் இப்பொழுது கிளம்பி இருக்கிறார்கள். பெங்களூரு அய்யங்கார் பேக்கரி என்றால், பெங்களூரை எடுக்கவேண்டும் என்கிறார்கள் - ஆனால், அய்யங்கார் பேக்கரி அப்படியே இருக்கட்டும் என்கிறார்கள்.
இதுதான் இவர்களின் பிரச்சினை என்று குழப்பவாதிகளை அம்பலப்படுத்தினார் பேராசிரியர் சுப.வீ.
இந்து அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்களுக்கும், ஜப்பான் தூதரகக் கலாச்சார மற்றும் தகவல் பிரிவு ஆராய்ச்சியாளர் செல்வி மியூசிகி இனோஉவேவிற்கும், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி அவர்களுக்கும், உலகத் தமிழர் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் சுலோச்சனா அவர்களுக்கும், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கும் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக