• Viduthalai
முதலமைச்சரின் அறிவிப்பை சட்டமன்ற முன்னவர் துரைமுருகன் வரவேற்று உரை
சென்னை, செப்.7- நம் வாழ்வுக்கெல்லாம் அடித்தளம் தந்தை பெரியாரே! பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் வீரியத்துடன் செயலாற்றுகிறது! அண்ணன் வீரமணிக்கு அரசு சார்பில் தனி மரியாதை செய்யவேண்டும் என்றார் சட்டப்பேரவை முன்னவர் துரைமுருகன் அவர்கள்.
தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் நாளை சமூகநீதி நாளாகக் கொண்டாடுவது என்றும், அந்நாளில் தலைமைச் செயலகம் தொடங்கி அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் உறுதிமொழி ஒன்றை எடுப்பது எனவும் நேற்று (6.9.2021) தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-இன்கீழ் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பிரகடனப்படுத்தியுள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை சட்டமன்ற முன்னவர் துரைமுருகன் நேற்று (6.9.2021) வரவேற்று உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த அவையிலே படித்திருக்கிறார். அந்தத் தீர்மானத்தை இந்த அவையில் இருக்கின்ற மாண்புமிகு கட்சித் தலைவர்கள் எல்லாம் வரவேற்று இருக்கிறார்கள்.
காரணம், தந்தை பெரியாருடைய வழியிலேதான் இன்றைக்கு நாமெல்லாம் அமர்ந்திருக்கின்றோம். நண்பர் வைத்தியலிங்கம் சொன்னதைப்போல, இங்கே நாமெல்லாம் அமர்ந்திருக்கின்றோம் என்றால், அதற்குத் தந்தை பெரியார் அவர்கள்தான் காரணம். அவர் இல்லாவிட்டால், யார் யார் இங்கே அமர்ந்திருப்பார்கள் என்பதை கொஞ்சம் சுதந்திரத் திற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில், 52 ஆம் ஆண்டு களுக்கு முன்பு வரை நடைபெற்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்த்தால் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால், இன்றைக்கு அவையெல்லாம் மாறுபட்டு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், தந்தை பெரியார் அவர்கள்தான்.
'ஆட்சி போனால் போகட்டும்!'
அறிஞர் அண்ணா அவர்கள் சீர்திருத்தத் திருமணத்தை சட்டமாக்கி, சபையில் படித்தபொழுது, இது பெரியாருக்கா என்று கேட்டார்கள்.
அண்ணா சொன்னார், ''இந்த ஆட்சியே, பெரியாருக்குக் காணிக்கை; அது என்ன இது தனியே'' என்று கேட்டார்.
அடுத்ததாக, தந்தை பெரியார் அவர்கள் மறைந்துவிட்டபொழுது, அவரை அரசு மரியாதையோடு அடக்கம் செய்யவேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் சொன்னார்.
அன்றைக்கு இருந்த தலைமைச் செயலாளர், "தந்தை பெரியார் அவர்கள் எந்த அரசாங்கப் பதவிகளிலும் இருந்ததில்லை; சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்ததில்லை, நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்ததில்லை; அவருக்கு எப்படி அரசாங்க மரியாதை கொடுக்க முடியும்?'' என்று கேட்டார்.
உடனே கலைஞர் அவர்கள், ''காந்தியாருக்கு அரசு மரியாதையோடு அடக்கம் செய்தார்களே, அவர் எந்த அவையில் உறுப்பினராக இருந்தார் என்று கேட்டுவிட்டு, தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை கொடுப்பதால், என்னுடைய ஆட்சி போகுமேயானால், இந்தக் கருணாநிதி, இந்த ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டுப் போவான்'' என்று சொன்னார்.
திராவிட இயக்கத்தை
யாராலும் இனிமேல் அழிக்க முடியாது
அதன்படியே அரசு மரியாதை செய்து காட்டினார். அறிஞர் அண்ணாவின் வழியில், எங்களுடைய தலைவர் கலைஞரின் வழியில், அதே உணர்வோடு, அதே சுயமரியாதை உணர்வோடு, அதே திராவிடத் தாக்கத்தோடு, இன்றைக்கு எங்களுடைய தளபதி தீர்மானத்தைப் படித்தபொழுது, எனது நெஞ்சம் விம்மிப் போய்விட்டது; ரத்தம் புது வேகத்தில் பரவ ஆரம்பித்துவிட்டது; ஆகா, இந்தத் திராவிட இயக்கத்தை யாராலும் இனிமேல் அழிக்க முடியாது; தலைமுறைக்கு தலைமுறை வந்துகொண்டிருப்பார்கள் என்று.
காரணம், எனக்கு திராவிட இயக்கத்தின்மீது ஒரு தனியான பற்று உண்டு. காரணம், உலகத்தில் ஏற்பட்ட இனங்களையெல்லாம் நான் படித்திருக்கிறேன். உலகத்தில் ஏற்பட்ட பல இனங்கள் நூறாண்டு காலத்திற்குள் மடிந்து போயிருக்கின்றன. ஆனால், இந்த ஒரு இனம் மட்டும் தப்பித்தவறி இன்றைக்கும் கொஞ்சம் வலிவோடு இருக்கிறது என்று சொன்னால், அது பெரியார் போட்ட அடித்தளம்தான்.
ஆனால், மற்ற இனங்கள் எல்லாம் மதத்தை எதிர்த்த வைகள் அல்ல; மற்ற இனங்கள் எல்லாம் கடவுளை எதிர்த்த வைகள் அல்ல. மற்ற இனங்கள் எல்லாம் மேல்ஜாதியினரை எதிர்த்தவைகள் அல்ல.
ஆனால், பெரியார் அவர்கள், கடவுளையும் எதிர்த்தார், மதத்தையும் எதிர்த்தார், ஜாதியையும் எதிர்த்தார். மேல்ஜாதி யினரையும் எதிர்த்தார். இந்த இயக்கத்தையும், இந்த இனத்தையும் காப்பாற்றி இருக்கிறார்.
இது பாஷாணத்திலே புழுத்த புழு என்று அண்ணா சொன்னதைப்போல, இதை வேறொரு பாஷாணம் அழிக்க முடியாது. எவராவது திராவிட இயக்கத்திலேயே ஒரு துரோகி தோன்றினால்தான், இந்த இயக்கத்தை அழிக்க முடியுமே தவிர, வேறு யாராலும் அழிக்க முடியாது. அதுவும் தோன்ற முடியாது என்று நான் கருதுகிறேன்.
இந்திய அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் தந்தை பெரியாரால் ஏற்பட்டது. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அரசியல் சாதனையால் நமக்கு சலுகைகள் கிடைத்தன.
செண்பகம் துரைராஜ் என்பவர் அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்; பிற்படுத்தப்பட்டோருக்கு இடம் கொடுத்ததால், எனக்கு இடம் கிடைக்கவில்லை என்று.
உயர்நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டது. பெரிய பெரிய ஆச்சாரியார்கள் எல்லாம் சேர்ந்து அந்த வழக்கை நடத்தினார்கள். அவருக்கு இடம் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது; உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது.
கடைசியில் ஓர் அநியாயம் என்னவென்றால், வழக்கு தொடுத்த செண்பகம் துரைராஜ், அப்ளிகேஷனே போட வில்லை; அப்ளிகேஷன் போடாத ஒருவர் வழக்கு தொடுக் கிறார். அதற்கு அவாள்கள் எல்லாம் செய்து முடித்து விட்டார்கள் வேலையை!
அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள், அண்ணாவின் துணை கொண்டு போராடியதன் காரணத்தினால், அரச மைப்புச் சட்ட முதல் திருத்தம் வந்தது.
ஒன்றை நான் சொல்கிறேன், தந்தை பெரியாருடைய தாக்கம் எல்லோரிடமும் இருக்கிறது.
பெரியாரின் அந்த வாசகம்
தளபதி அவர்கள் முதலில் படித்தார். வேறு யாரும் இதைச் செய்வதற்கு முன்வராத காரணத்தினால், எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ நான் தோள்மீது தூக்கிப் போட்டுக்கொண்டு செய்கிறேன் என்று சொன்னாரே, அந்த வாசகம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும்.
எங்களுடைய இளைஞரணி தொடக்க விழாவில் நான் சொன்னேன், இளைஞரணியினர் பேட்ஜ் அணியும்பொழுது, அந்தப் பேட்ஜில் இருக்கவேண்டும் என்று சொன்னேன்.
அதை எங்கே நாம் செய்கிறோம். சொல்வதை செய்வதே கிடையாது.
மற்றவர்கள் எப்படி?
மற்றவர்கள் எல்லோரையும் பாருங்கள், காலையில் எழுந்தவுடன், கடவுளுக்கு ஸ்தோத்திரம், பகவானுக்கு நமஸ்காரம் என்றெல்லாம் சொல்கிறார்களே, எத்தனை பேர் வீட்டில் பெரியாருடைய பொன்மொழிகள் இருக்கின்றன? எத்தனை பேர் அதனை முழுமையாகப் படித்திருக்கிறோம்? எத்தனை பேர் சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தை முழுமையாகப் படித்திருக்கிறோம்?
ஆகவே, தயவு செய்து சொல்கிறேன், இனி இந்த சமுதாயம் இருக்கவேண்டும் என்றால், ஏதோ நாம் வந்துவிட்டோம்; அடுத்த சமுதாயத்தினர் வரவேண்டும் என்றால், நீங்கள் அனைவரும், ஒவ்வொரு வீட்டிலும் பெரியாருக்கென்று ஒரு இடத்தை ஒதுக்குங்கள்; சாமி கும்பிடுகிறீர்களோ, இல்லையோ அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், இனத்தைக் காப்பாற்றுவதற்காக அதனை நீங்கள் செய்யவேண்டும்.
அதேநேரத்தில், நம்முடைய தளபதிக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள். சுயமரியாதைக் கருத்துகள் பாடப் புத்தகத்தில் இருக்கவேண்டும்.
அதில் என்ன தவறு?
மனிதன் பகுத்தறிவுள்ளவனாக இருக்கவேண்டும்; மானமுள்ளவனாக இருக்கவேண்டும்; சுயமரியாதை உள்ளவனாக இருக்கவேண்டும் என்றால், இருக்கட்டும்.
எவனுக்கு சுயமரியாதை இல்லையோ, மானம் இல் லையோ அவன் எதிர்க்கட்டும். எனக்கு மானம் இருக்கிறது, ஆகையால், இதை நான் சொல்கிறேன்.
பாடத் திட்டத்தில் சுயமரியாதைக் கருத்துகள்!
ஆகையினால், சுயமரியாதை கருத்துகள் பாடப் புத்தகத் தில் வைக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, இந்தப் பணியை அரசாங்கம் செய்யும்.
பெரியாருக்குப் பிறகு, திராவிடர் கழகம் வீரியம் கெடாமல், விதை நமத்துப் போகாமல் அது கட்டிக் காக்கிறதே, இந்த அவையில் நான் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன், அண்ணன் வீரமணி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை, பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசாங்கம், அரசின் சார்பில், அவருக்குத் தனி மரியாதையை செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எங்களுடைய தளபதி அவர்களே, நீங்கள் கலைஞர் வழியிலே சென்றீர்கள்; அண்ணா வழியில் சென்றீர்கள்; இன்றைக்குப் பெரியார் வழிக்கே போய்விட்டீர்கள்.
நான் பெரியாரோடு ஒரு நாள் முழுவதும் இருந்திருக்கி றேன், காட்பாடி தேர்தலின்போது, ஆற்காட்டில் ஒரு மாநாடு நடைபெற்றது. 8 மணிக்கு ராணிப்பேட்டை தெருவில் நானும், ஆற்காடு வீராசாமியும் நடந்து சென்றோம். அப்பொழுது மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்துவிட்டார்கள்.
அய்யாவிடம் அப்பொழுது பேசியபொழுது, நாடார் சமுதாயத்தைப்பற்றி அப்பொழுதுதான் சொன்னார். உங் களைவிட, நாடார் சமுதாயதம் எவ்வளவோ கேவலப்படுத்தப் பட்டு இருக்கிறது என்ற வரலாற்றை அய்யா அவர்கள் சொல்ல சொல்ல, நான் அசந்து போனேன்.
தளபதி அவர்களே, என்னைவிட நீங்கள் இளைஞர்தான். ஆனால், என்னைவிட, அனுபவத்தில், ஆற்றலில் என்னை விட உயர்ந்திருக்கிறீர்கள்; வணங்குகிறேன் என்றே நான் சொல்கிறேன்.
வாழ்த்துகள், நன்றி, வணக்கம்!
- இவ்வாறு அவை முன்னவர் துரைமுருகன் அவர்கள் உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக