• Viduthalai
தி. வேல்முருகன்
(தமிழக வாழ்வுரிமைக் கட்சி)
சமூக நீதியின் தந்தை, தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளை ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடுவோம் என்று அறிவித்து, அந்த நாளில் அரசு ஊழியர்களும், அரசு சார்ந்தவர்களும் உறுதி மொழி எடுத்துக்கொள்கின்ற ஒரு நாளாகவும் அந்த நாள் அமையப்பெறும் என்கின்ற இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண் ணன் தளபதி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, சமத்துவம், சமூகநீதிக் கோட்பாடு, ஆதிக்க அரசுகளை எதிர்த்துப் போராடுகின்ற போர்க்குணம், இழிவுகளைப் போக்குவதற்காகத் தன் வாழ் நாள் முழுவதும் அர்ப்பணித்த அந்த மாபெரும் தலைவருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன் நெஞ்சில் நிறுத்தி, எந்தளவிற்கு மாபெரும் மரியாதையை தந்தை பெரியார் அவர்களுக்கு வழங்கினார்களோ, அதே வழியில் நம்முடைய அண்ணன் தளபதி அவர்களும்....
அந்தப் பகுத்தறிவுப் பகலவன் அவர்களுக்கு இந்த நாளை சமூக நீதி நாளாகக் கொண்டாடுகின்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிட்டு, உலகம் முழுவதும் வாழ்கின்ற சமூகநீதி செயல்பாட்டாளர்களுக்கும், சமூகநீதி பெறுவதற்காக இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கும், இன்றைக்கு மரியாதை செலுத்துகிற நிகழ்வாக இந்த நிகழ்வை அறிவித்தமைக்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.
ஈ.ஆர். ஈஸ்வரன்
(கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி)
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய தொடர்ந்த இந்த 110 விதியின் கீழ் அறிவிக்கின்ற அறிவிப்புகள் மூலமாக இந்த 110 விதிக்குப் பெருமை சேர்த்தி ருக்கிறார் என்பதை, அதற்கு அது இழந்த புகழை மறுபடி யும் மீட்டுக் கொடுத்திருக் கிறார் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். செப்டம்பர் 17 ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை சமூக நீதி நாள் என்று அறிவித்து, மிகப் பெரிய ஒரு வரலாற்றுச் சிறப்பைச் செய்திருக்கின்றார். அந்த நாளைத் தவிர வேறு நாளை சமூக நீதி நாள் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சிறப்பாக அதைச் சிந்தித்து, இன்றைக்கு ஒவ்வொன்றாக அதை யோசித்து, யோசித்து, செய்து கொண்டிருக்கின்றார். தந்தை பெரியார் என்று சொன்னாலே, அவர் ஏதோ கடவுள் மறுப்புக் கொள்கை மட்டும்தான் வைத்திருந்தாரென்று ஒரு தவறான பிரச்சாரம் நாடு முழுவதும் இன்றைக்குப் பல இடங்களிலே செய்யப்படுகிறது. ஆனால், இன்றைக்குப் பெண்கள் அரசு உயரதிகாரிகளாக, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாக, ஏழைப் பெண்கள் அமைச்சர்களாக, இன்றைக்கு வந்திருக் கிறார்களென்று சொன்னால், அதைத் தந்தை பெரியார் கொடுத்த அந்த சமூக நீதி என்பதை நாம் மறுக்கக்கூடாது. என்னைப் பொறுத்தவரை இரட்டிப்பு மகிழ்ச்சி. என் பெயர் ஈ.ஆர். ஈஸ்வரன். அதிலே ஈ என்பது ஈரோடு. ஆர் என்பது ராமசாமி. ஈ.ஆர். என்பது ஈரோடு ராமசாமி ஈஸ்வரன் நான். அந்தவகையிலே, இந்த நேரத்திலே இரட்டிப்பு மகிழ்ச்சியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய இந்த அறிவிப்புகளை நான் வரவேற்கின்றேன். நன்றி, வணக்கம்.
மு. ஜெகன் மூர்த்தி
(புரட்சி பாரதம் கட்சி)
சுய மரியாதைக்கும், பகுத் தறிவுக்கும் தந்தையாக இருந்து, சம நிலை, சம தர்மம் உருவாக்க ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தவர்; ஜாதியை ஒழிக்கப் போராடியவர்; மக்களை நல் வழிப்படுத்தியவர்; பட்டி, தொட்டியெல்லாம் திராவிடச் சிந்தனையை உருவாக்கிய வர். இப்படிப்பட்ட தலைவ ருக்கு வரும் செப்டம்பர் 17 பிறந்த நாளை முன்னிட்டு, சமூக நீதி நாளாக அறிவித்த நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன். நன்றி.
முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா
(மனித நேய மக்கள் கட்சி)
1967இல் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டபோது, அந்த ஆட்சியைத் தந்தை பெரியாருக்கு சமர்ப்பித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த போது, ஒவ்வொரு முறையும் தந்தை பெரியாருடைய சிந்தனைகளையெல்லாம் சட்டங்களாக வடித்தார். இன்று 110 விதியின்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தந்தை பெரியாருக்கு மிகச் சிறப்பான ஒரு புகழுரையை ஆற்றினார். அதன் ஒவ்வொரு வார்த்தையும் அனைவரையும் குளிர வைத்தது. குறிப்பாக, சமூக நீதியின் கதவைப் பெரியார் தன் கைத்தடியால் தட்டினார் என்பது மிகப் பெரிய உச்சமான ஒரு வார்த்தையாக கருதுகிறேன். பெரியார் என்ன செய்து விட்டாரென்ற விமர்சனங்கள் எழக்கூடிய சூழலில், இந்தத் தமிழ்நாடு சமூக நீதியினுடைய கோட்டையாக என்றென்றும் விளங்கும்.
இந்தத் தமிழ்நாட்டிலே பிரிவினைவாதத்திற்கும் வெறுப்புணர்வுக்கும் இடமே இல்லை என்ற வகையிலே, அதை நிலைநாட்டுவதற்காக, தமிழர்களுடைய ஒவ்வொரு உணர்வும் தந்தை பெரியாருடைய உணர்வாக மாறக்கூடிய வகையிலே, செப்டம்பர் 17 ஆம் நாளை ‘சமூகநீதி நாள்’ என்று அறிவித்து, வெறும் அறிவிப்பாக இல்லாமல், அத்துணை தமிழர்களும் ஓர் உறுதியோடு சகோரத்துவத்தையும், சமத்துவத்தையும், சமதர்மத்தையும் கடைப்பிடிப்போம்; எங்களுக்குள்ளே இல்லை வெறுப்புணர்வு; எங்களுக்குள்ளே இருப்பது இணைப்புத்தான்; அனைவருக்கும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக பாடுபடுவோம் என்ற மிகச் சிறப்பான அறிவிப்பை அறிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து, விடைபெறுகின்றேன்.
டாக்டர் தி. சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.)
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் இந்த நாட்டில் பிறக்காமல் இருந்திருந்தால் என்னைப் போன்றவர்கள், நம்மைப் போன்றவர்கள் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. அந்த அளவிற்கு எல்லோர் இடத்திலும் விழிப்புணர்வையும், பகுத்தறிவையும், சமூகநீதியையும் ஏற்படுத்தித் தந்தவர் தந்தை பெரியார் அவர்கள். அவர் வாழ்கின்ற காலத்தில் கல்லெறிகளும், சொல்லெறிகளும் ஏகப்பட்ட இடங்களில் நடந்தன. குறிப்பாக, திருச்சியில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது செருப்புகளை கழற்றி வீசி இருக்கின்றார்கள். அப்போது அரணாக இருந்தவர் நம் நினைவில் வாழும் அன்புக்குரிய அன்பிலார் அவர்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். நம்முடைய அறிஞர் அண்ணா அவர்களும், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், அவர்கள் நினைவாக, அவர்கள் முதல்வர்களாக இருந்தபோது, அவர்கள் ஆட்சியையே ஆண்டு கொண்டிருந்தார்கள். அதைப் பின்பற்றி நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக, அவர் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளை, சமூகநீதி நாளாக அறிவித்திருக்கின்றார்கள். அந்த நாள் இனிய நாள்; அவரது அறிவிப்பு இனிய அறிவிப்பு; மகிழ்ச்சித் தரக்கூடிய அறிவிப்பு என்று சொல்லிக்கொண்டு, அதை நானும், நான் சார்ந்திருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களும் வரவேற்கிறோம். நன்றி.
தளி. இராமச்சந்திரன்
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விதி எண் 110இன்கீழ் தொடர்ந்து இந்த அவையில் சமூகநீதி போராளிகளுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும், அவர்களுடைய தியாகத் தையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில், இந்த அவையிலே தொடர்ந்து சிறப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு போன்ற சுய மரியாதை கருத்துகளை தமிழ்நாட்டிலே விதைத்த சுய மரியாதைச் சுடர் தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக அறிவித்தமைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து, அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வரவேற்கிறேன்.
வி.பி. நாகைமாலி
(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
தள்ளாத வயதிலும் மூத்திரச் சட்டியைச் சுமந்து கொண்டு, தமிழ்நாட்டிலே பகுத்தறிவு பிரச்சாரத்தையும், சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் பரப்பியவர் அறிவுச் சுடர் தந்தை பெரியார். பெரியாரைப் போல, உலகத்திலே பெண்களைப்பற்றி யாரும் பேசியதில்லை. ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற பெரியாருடைய அந்த நூல் மிகவும் ஆய்வுக்குரிய நூல். அதனால்தான், ஈ.வெ. இராமசாமி என்கிற அவருக்கு ‘பெரியார்’ என்கிற பட்டத்தையே பெண்கள்தான் கொடுத்தார்கள். அந்தவகையில் இந்தியா முழுவதும் சமூக நீதியை விதைத்த தந்தை பெரியாருடைய பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளை ‘சமூகநீதி நாள்’ எனக் கொண்டாடுவோம் என்கிற வகையில், விதி எண் 110இன் கீழ் அறிவித்திருக்கிற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.ம. சிந்தனை செல்வன்
(விடுதலை சிறுத்தைகள் கட்சி)
இந்த நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மிகமுக்கியமான நாள் என்று கருதுகிறேன். அரசியல் புரட்சியும், பண்பாட்டுப் புரட்சியும் ஒன்றையொன்று தாங்கி வரலாற்றை வழிநடத்துகின்றன என்றாலும்கூட, பண்பாட்டு இயக்கங்கள் தனியாகவும், அரசியல் இயக்கங்கள் தனியாகவும் இயங்குவதுதான் உலக வரலாற்றில் நாம் பார்க்கின்ற காட்சியாக இருக்கிறது. ஆனால், ஒரு பண்பாட்டு இயக்கமே அரசியல் இயக்கமாகவும், அரசியல் இயக்கமே பண்பாட்டு இயக்கமாகவும் என்று தலைநிமிர்ந்து உலகத்திற்கு வழிகாட்டக்கூடிய வகையிலே திராவிட முன்னேற்றக் கழக அரசு மீண்டும் கலைஞரின் பொற்கால ஆட்சி தொடங்கிவிட்டது என்பதை உணர்த்துகிற வகையிலே இன்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதை அறிவிப்புச் செய்திருக்கிறார்கள். தமிழர்கள் அரை நூற்றாண்டு காலமாக கொண்டாடிவருகிற பொங்கல் என்கிற இந்தத் திருவிழாகூட பழைமைவாதிகளால் மறக்கடிக்கப்பட்ட ஒரு திருவிழா. அதை மீட்டுருவாக்கம் செய்தது நம்முடைய அமரர் முத்தமிழறிஞர் சமத்துவ பெரியவர் கலைஞர்தான். இன்று மக்கள் விழாவாக அது கொண்டாடப்படுகிறது. ஆகவே, இன்னொரு பொங்கலாக, மக்கள் விழாவாக இந்த சமூக நீதித் திருநாள் சமூக நீதி விழா என்பது அமையும் என்று நான் நம்புகிறேன். ஒன்றைச் சொல்லி நான் நிறைவு செய்ய விரும்புகிறேன். கமம்யூனிஸ்ட் கட்சியினுடைய அறிக்கை, அந்த manifesto என்று சொல்லக்கூடிய அந்த அறிக்கையை முதன் முதலாக தமிழிலே கொண்டுவந்து சேர்த்தவர் தந்தை பெரியார்தான். அதைப்போலவே, 1932 ஆம் ஆண்டு வட்டமேசை மாநாட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் கலங்கி நின்றபோது, இரட்டை வாக்குரிமைக்கான போராட்டத்திலே கலங்கி நின்றபோது, ‘தைரியமாக இருங்கள், நாங்கள் உங்களோடு இருக்கிறோம்‘ என்று சொன்னவரும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்தான். ஆகவே, தந்தை பெரியாரின் பிறந்த நாளில் விழா எடுப்பது என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய விழா. இந்த விழாவை ஒரு சமூக நீதிக்கான விழாவாக, மக்கள் நல்லிணக்கத்திற்கான ஒரு விழாவாக, மக்கள் விழாவாக கொண்டுசேர்க்கிற முயற்சியில் விடுதலை சிறுத்தைகளும் தங்களை இணைத்துக்கொள்ளும் எனச் சொல்லி, இந்த அறிவிப்பைச் செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்கி நிறைவுசெய்கிறேன். நன்றி, வணக்கம்.
நயினார் நாகேந்திரன்
(பாரதிய ஜனதா கட்சி)
சமூக நீதி என்பது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையில் ஒன்றாக இருக்கிறது. ஜாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனத்தை அடியோடு வேரறுக்கச் செய்கிற கொள்கையுடைய கட்சி, பாரதிய ஜனதா கட்சி. அதே வகையில் தந்தை பெரியாரும் அதே கொள்கையில்தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்காக எழுப்பப்படுகின்ற இந்த செப்டம்பர் 17 ஆம் நாள் விழா என்பது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கடவுள் நம்பிக்கையோடு இருக்கிற பாரதிய ஜனதா கட்சி இதை வரவேற்கிறது. நன்றி.
ஜி.கே. மணி
(பாட்டாளி மக்கள் கட்சி)
நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விதி 110இன்கீழ் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்து, அறிவித்ததோடு மட்டும் விடவில்லை, அதை எல்லோரிடத்திலும் கொண்டுசென்று சேர்க்க வேண்டுமென்று உறுதி எடுத்துக்கொள்ளக்கூடிய வகையில், தலைமைச் செயலகம் முதல் எல்லா அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படும் என்ற அந்த வரிகளையும், வாசகத்தையும் இங்கே படித்திருப்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலே மகிழ்ச்சியோடு திறந்த மனதோடு பாராட்டி வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன். இந்த விதி 110 தீர்மானத்தை எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் இந்நேரம் கேட்டிருந்தால் மகிழ்ந்திருப்பார்கள். இன்று மிகப்பெரிய அறிக்கையாக வரவேற்பும், பாராட்டும் வரும் என்பதை நான் முன்பாகவே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். காரணம், தந்தை பெரியார் அவர்கள் இந்த நாடு சுதந்திரம் பெற்றால் மட்டும் போதாது, என்று வகுப்புவாரி பிரதிநிதித்துவம் முழுமையாக அமலாக்கப்படுகிறதோ அந்த நாள்தான் சுதந்திரம் பெற்ற நாள் என்று சொன்னார். ஆகவே, அந்த சுதந்திரம் பெற்ற நாளுக்கு அடித்தளமாக அதை வெளிக்கொணர்ந்தது இந்த விதி 110 என்பதை நான் பெருமையோடு எண்ணிப் பார்க்கிறேன். நான்கூட இந்த அவையில் இதற்கு முன்னால் இருந்த நேரத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள்- பெருமைக்காக அல்ல, எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் சொல்லி, தந்தை பெரியார் பிறந்த நாளை கல்வி தினமாக அறிவிக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்தநாளை கல்வி தினமாக அறிவிக்க வேண்டுமென்று தனி நபர் தீர்மானங்களெல்லாம் கொண்டுவந்தோம்.அதை முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார்கள். நாங்கள் கேட்டது ‘கல்வி தினமாக’ என்று அப்படி கேட்டோம். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் பிறந்த தினத்தை அறிவிப்பதாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். ஆனால், அவர் செய்யாததை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதை இங்கே பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது ஏதோ புகழ்வதற்காக அல்ல. நடந்த சம்பவங்களை-இது எங்கள் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய கொள்கை. அந்தக் கொள்கைகளில் முதல் கொள்கை சமூக நீதிக் கொள்கை. எங்கள் உறுப் பினர் அட்டையில்கூட முதலில் சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம் என்ற கொள்கையை முன்வைத்திருக்கிறோம். அந்த அட்டையிலேகூட போடப்பட்டிருக்கிற படம், தந்தை பெரியார் படம். இரண்டாவது, அண்ணல் அம்பேத்கர் படம். .
இரண்டாவது, கட்சிக்குள் போகவில்லை. ஆகவே, இதை நாங்கள் மனதார வரவேற்கிறோம். அதோடு மட்டுமல்ல, ஒரு நாடு என்று சொன்னால், தமிழ்நாடு இந்திய நாட்டுக்கு எடுத்துக்காட்டான நாடு என்பதை அறிவிக்கிற வகையிலேதான் தந்தை பெரியார் அவர்களும், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் முதல் இன்றைய முதலமைச்சர் வரையிலே இந்த சமூக நீதிக்கொள்கை பிறழாமல் வந்திருப்பதுதான் தமிழ்நாடு இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்க்கிறது என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏற்றத்தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது என்பதற்கு இதுதான் வெளிப்பாடு. அந்த அடிப்படையிலேதான் தந்தை பெரியார் தினம் என்பது சமூக நீதிநாளாகவும், அதற்கு மேலும் சிறப்பு சேர்த்து உறுதிமொழி எடுத்துக்கொள்வது என்பதாகும். இதுதான் நமக்கு வழக்கம்.
ஆகவே, 110 விதியின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அறிவிப்புகளை வரவேற்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.
கு. செல்வபெருந்தகை
(காங்கிரஸ் கட்சி)
பகுத்தறிவு நெறியே பண்பட்ட நெறி என்று நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 110 விதியின்கீழ் இந்த சபையிலே அறிவித்திருக்கிறார். பெரியாரைக் காணவில்லை என்ற ஏக்கம் இந்த சபையிலே இருந்தது. இப்போது தாடியில்லா, தடியில்லா பெரியாராக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இங்கே அமர்ந்திருக்கின்றார். இந்த அறிவிப்புகளையெல்லாம் பார்க்கும்போதும், இந்த சபை நடக்கும் விதத்தையெல்லாம் பார்க்கும்போதும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க இலக்கியத்திலே அய்ங்குறுநூறு ஞாபகத்திற்கு வருகிறது. அந்த அய்ங்குறுநூறிலே ஒரு தமிழ்ப்பெண், ஒரு நாடு எப்படியிருக்க வேண்டுமென்று சொல்லுகிறாள். ‘பசியில்லாத நாடு-பசியில்லாகுக; நோயில்லாத மக்கள்-நோயின்மை ஆக்குக; பகை, தணி வேகுக’ என்று சொல்கிறாள். இதையெல்லாம் பார்க்கும்பொழுது, உங்களுக்குப் பகையும் இல்லை, பசியில்லாத மக்களை நீங்கள் படைத்திருக்கிறீர்கள். நோயில்லாத மக்களுக்கு ஒரு நல்ல சுகாதாரத் துறை அமைச்சரைக் கொடுத்திருக்கிறீர்கள். இந்தக் கரோனாவை நீங்கள் கையாண்டபோது, பெரியார் மட்டுமல்ல, இங்கே ஒளிப்படங்களில் இருக்கின்ற படமாக இருக்கின்ற தலைவர்களெல்லோரும் உங்களை வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். தந்தை பெரியார் ஒரு முறை பெருந்தலைவர் காமராசர் அவர்களைப் பார்த்து சொன்னார், ‘தமிழ்நாடு மக்களிடம் நான் ஓர் அறிவிப்பு செய்யப்போகிறேன்; தமிழ்நாடு மக்களே தமிழர்கள் நலம் பெற வேண்டுமென்றால் இந்தப் பச்சைத் தமிழன், பெருந்தலைவர் காமராசரை இறுகப் பிடித்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னார். அப்போது பொற்கால ஆட்சி நடைபெற்றது. எப்போதெல்லாம் கலைஞர் அவர்களும், அண்ணா அவர்களும் நீங்களும் இருக்கும்போது பொற்கால ஆட்சி நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் இடையிலே ஒரு தீங்கு ஏற்பட்டு விடுகிறது. நாங்கள் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாகச் சொல்லுகிறோம். அன்று தந்தை பெரியார் சொன்னார், இன்று நாங்கள் சொல்லுகிறோம், ‘தமிழர்களே, தமிழர்கள் நலம்பெற வேண்டுமென்றால் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்கள் கையை நீண்ட நெடிய நாட்களுக்குப் பிடித்துக்கொள்ளுங்கள், தமிழகம் ஓங்கி நிற்கும்‘ என்று. இன்று இந்தியாவிலே, பல இடங்களிலே, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அய்ம்பெரும் தலைவர்களாக பிற்படுத்தப்பட்ட மக்களும், விளிம்பு நிலை மக்களும் கொண்டாடி வருகிறார்கள். ஜோதிராவ் புலே, சாது மஹாராஜ், நாராயண குரு, புரட்சியாளர் அம்பேத்கர், நம்முடைய தந்தை பெரியார், இப்படிப்பட்ட தலைவர்கள் அபூர்வமாக இந்தப் பூமியிலே தோன்றுகிறார்கள். இவர்களையெல்லாம் அடையாளம் கண்டு இந்த சமூக நீதி நாளைப் பிடித்திருக்கின்ற நம்முடைய தலைவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பார்போற்றும் பரவச அரசாக இந்த அரசு தொடர்ந்து தன்னுடைய பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக எங்களுடைய மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாகச் சொல்கிறேன். நன்றி, வணக்கம்.ஆர். வைத்திலிங்கம்
(அ.தி.மு.க)
தொண்டு செய்து பழுத்த பழம்;
தூய தாடி மார்பில் விழும்;
மண்டைச் சுரப்பை உலகு தொழும்;
மனக்குகையில் சிறுத்தை எழும்; அவர்தான் பெரியார்!
என்று சொன்னார் பாவேந்தர். தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்ததை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது. ஏனென்றால், ஒரு சாமானியனும் சட்டமன்ற உறுப்பினராகலாம், நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என்று திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார்.
அவருடைய ஜாதியக் கொடுமை, பகுத்தறிவு, சமத்துவம், சமூகநீதி. இன்றைக்குத் தமிழ்நாடு உயர்ந்து நிற்கின்றது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார். அவருடைய பிறந்த நாளை ‘சமூகநீதி நாள்’ ஆகக் கொண்டாடுவதை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கின்றோம். அவருடைய எண்ணத்தை ஈடேற்றியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ‘எழுத்து சீர்திருத்தத்தைக்‘ கொண்டுவந்தார். அவருடைய 100ஆவது பிறந்த நாளை மாவட்டத் தலைநகரங்களில் விழா எடுத்து, நினைவுத் தூண் நிறுவி, பொன்முடிகளைப் பொறிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர். மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 69 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததற்காக, திராவிடக் கழகத் தலைவர் பெரியவர் திரு. கி.வீரமணி அவர்களால் ‘சமூகநீதிக் காத்த வீராங்கனை’ என்று போற்றப்பட்டவர் எங்களது அம்மா. அந்த வழியில், இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கண் திறந்த பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியாரின் பிறந்த நாளை ‘சமூகநீதி நாள்’ ஆகக் கொண்டாடப்படும் என விதி 110இன்கீழ் அறிவித்திருப்பதை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கின்றோம்; வாழ்த்துகின்றோம். நன்றி.
ஆ.தமிழரசி (திமுக)
‘பாராட்டி போற்றிவந்த பழமை லோகம்; ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்’ என்று, விதி 110 அறிக்கையில், அய்யா கலைஞர் அவர்களுடைய வரிகளோடு இங்கே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சமர்ப்பித்திருக்கின்றார்கள். ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம் மற்றும் பட்டியலின மக்களுடைய விடியல் என அனைவருக்குமான சமூக நீதிக்காக உழைத்தவர் தந்தை பெரியார் அவர்கள். அவர்களுடைய பிறந்த நாளை ‘சமூகநீதி நாள்’ ஆகக் கொண்டாடப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தந்தை பெரியாருடைய பேரனாக, இன்று, விதி 110இன்கீழ் அறிக்கை அறிவித்திருப்பதை மகளிர் சார்பாக இருகரம் கூப்பி, வரவேற்று மகிழ்கிறேன்.
நன்றி.
பேரவைத் தலைவர்
மு.அப்பாவு
பெரியாராக, அண்ணாவாக, கலைஞராக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு அனைத்துக் கட்சி சார்பாக விதி எண் 110இன் கீழ் எல்லோரும் பாராட்டி அமர்ந்தீர்கள். அதோடு என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று மகாராட்டிரா மாநிலம் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராவத் அவர்கள் சொன்னார்; அகில இந்திய அளவில் ஒரு அரசியல் முதிர்ச்சிப் பெற்ற ஒரு முதல்வர் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் என்று சொன்னார். அந்தளவில், தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் அச்சடிக்கப்பட்ட பைகளில் முன்னாள் முதல்வர்கள் மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் படமும், அய்யா எடப்பாடி அவர்களின் படமும் இருந்துள்ளதை மாற்ற வேண்டுமென்று சொன்னால், அதற்கு ரூ.13 கோடி செலவாகும் என்று அதிகாரிகள் சொன்னபோது; நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள், ரூபாய் 13 கோடியை வீணாக்க வேண்டாம். அதே பைகளிலேயே புத்தகங்களைக் கொடுங்கள் என்று சொல்லி, இன்று அகில இந்தியாவில் ஒரு மாபெரும் தலைவராக, மகாராஷ்டிரா மாநிலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராவத் சொன்னதுபோல் நானும் மனதாரப் பாராட்டுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக