• Viduthalai
இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக தந்தை பெரியாரின் கொள்கை சார்ந்து, வாழ்வியல் நெறியினை வடிவமைத்துக் கொண்ட திராவிடர் பலரின் வாழையடி வாழையென பங்கேற்புடன் செயல்பட்டு வரும் மலேசிய திராவிடர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 143ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் காணொலி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றினார்.
18.9.2021 அன்று மலேசிய நேரம் மாலை 7.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்ற காணொலி வாயிலான திராவிடர் திருவிழாவிற்கு மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் ச.த. அண்ணாமலை தலைமை வகித்தார். தேசியப் பொதுச் செயலாளர் பொன். பொன்வாசகம் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியினை நெறிப் படுத்தி நடத்தினார். விழாவில் மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தின் ஆலோசகர் ரெ.சு. முத்தையா, மலேசியா தமிழ்நெறிக் கழகத்தின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் உரை யாற்றினர். தமிழர் தலைவரின் பேருரையினை அடுத்து மலேசியா மற்றும் பிற நாட்டு தமிழர் பலர் கேட்ட கேள்விகளுக்கு தமிழர் தலைவர் விளக்கமாக பதிலளித்தார். நிறைவாக மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் நாக. பஞ்சு நன்றி கூறினார்.
சமூகநீதி உறுதிமொழி ஏற்பு
மலேசிய திராவிடர் கழகப் பொதுச் செய லாளர் பொன். பொன்வாசகம் வரவேற்புரை ஆற்றிய பின்பு அண்மையில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் 'சமூகநீதி நாள்' என அறிவித்த தந்தை பெரியாரின் பிறந்த நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சமூகநீதி உறுதிமொழினை வாசித்து கூட்ட நிகழ்வுகளைத் தொடங்கினார். மலேசியா வாழ் மங்கை அறிவம்மை 'பெரியார் ஒருவர்தான் பெரியார் - பெருமைக்கு உரியார் அவர்போல் பிறர் யார்?' எனும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந் தன் பாடலை இசைக் குரலில் பாடினார்.
மலேசிய திராவிடர் அமைப்புகளின் தலைவர்கள் உரை
கூட்டத் தலைவர் ச.த. அண்ணாமலை தமிழுக்கு, தமிழ ருக்கு தந்தை பெரியார் ஆற்றிய பெரும் பணிகளை உணர்வுப் பூர்வமாக எடுத்துரைத்தார். ரெ.சு. முத்தையா தமது பேச்சில் மலேசிய நாட்டில் நிலவி வந்த தீண்டாமைக் கொடு மையிலிருந்து விடுதலை பெற தந்தை பெரியாரின் சிந்தனைகள் பயன் பட்டதுபற்றி குறு ஆய்வுரையாக வழங்கினார். தமிழ் நெறிக் கழக திருமாவளவன், மொழி ஞாயிறு தேவ நேய பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் படைப்புகளில், தந்தை பெரியாரைப் பற்றியும் அவர் காண விரும்பிய சமுதாயம் பற்றியும் கூறியதை ரத்தினச் சுருக்கமாக வழங்கினார். மலேசிய நாட்டில் பெரியார் சிந்தனை வழிபட்டு வாழ்ந்து வரும் பல அமைப்பினர் அனைவரையும் ஒற்றுமை காத்து, இன எதிரிகளுக்கு இடம் கொடுத்திடாத வகையில் தமிழ்நாட்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் 2019இல் மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய திராவிடர் கூட்டமைப்பினை உருவாக்கி யமைக்கு நன்றி தெரிவித்து நாக. பஞ்சு பேசினார்.
தமிழர் தலைவரது உரை
மலேசிய நாட்டு திராவிடர் திருவிழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த கருத்து முத்துகளில் சில:
*தமிழ்நாடு அரசு தந்தை பெரியார் பிறந்த நாளை 'சமூகநீதி நாள்' என அறிவித்து, அந்நாளில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய 'சமூகநீதி உறுதிமொழியினை' முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். முதலமைச்சரை 'சமூகநீதியின் சரித்திர நாயகர்' என பாராட்டி மகிழ்ந்தது திராவிடர் கழகம். அரசு ஊழியரையும் தாண்டி, தமிழ்நாடு பொது மக்களாலும் செப்டம்பர் 17 அன்று சமூகநீதி உறுதிமொழி ஏற்கப்பட்ட நிலையில், மலேசிய நாட்டு நிகழ்ச்சியிலும் சமூகநீதி உறுதிமொழி ஏற்கப்பட்டது; இது இனம், மொழி, நாடு கடந்து மனிதகுலம் முழுவதற்கும் பெரியாரின் சமூகநீதிக் கொள்கை உரியது; உலகப் பொதுமையானது என்பது உறுதிப்பட்டுள்ளது.
* மலேயா (இன்றைய மலேசியா & சிங் கப்பூர் நாடுகள்) நாட்டிற்கு இருமுறை பயணம் (1929 & 1954) செய்து தமிழ் மக்களைச் சந்தித்து உரையாடினார் தந்தை பெரியார். இரப்பர் தோட்டத் தொழிலாளர்களான உழைக்கும் மக்களிடையே தங்களது வருமானத்தை குடிப்ப தற்கும், கோயில் விழாக்களுக்கும் செல வழிப்பதை விடுத்து, அவர்தம் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டிட வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தார். இரண்டாம் முறையாக மலேசிய சென்ற பொழுது (16 ஆண்டுகள் கழித்து) தொழிலாளர் வீட்டு பிள்ளைகள் கல்வி கற்று நல்ல நிலைமையில் உள்ளதை நேரடியாக தந்தை பெரியார் பார்த்து மகிழ்ந்தார். தந்தை பெரியாரின் மலேசிய நாட்டுப் பயணம் தமிழ் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து பல்கலைக் கழகங்கள் ஆய்வு நடத்தி ஆவணப் படைப்பாக தற்பொழுது வெளிவந்துள்ளன.
*மலேசிய திராவிடர் கழகம் எனும் வலுவான அமைப்பு ஆட்சி அதிகாரத்தில் உள்ளோருக்கு அழுத் தம் கொடுக்கின்ற அமைப்பாக இருந்த காரணத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பு ஜாதிப் பாகுபாட்டால் பேதப் படுத்தி புதைக்கப்பட்ட 'கலியன்' எனும் தமிழரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உரிய மரியாதையுடன் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நீதிமன்ற வழக்கிலும் உரிய தீர்ப்பு பெறப்பட்டது.
*லெபான் ரப்பர் தோட்டத்தில் தாகத்திற்கு அருந்திட குடிநீரை தொட்டுப் பெற்று விட முடியாது. மூங்கில் குழாய் வழியாக எட்ட இருந்து ஊற்றப்பட்ட தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கும் அவல நிலையில் இருந்த தமிழரை சுயமரியாதையுடன் வாழச் செய்தவர் தந்தை பெரியார்.
*மனிதரை அவதாரமாக்குவது, எளிது; மனிதரை மனிதராக்குவதுதான் கடினம்! அப்படிப்பட்ட கடினப் பணியினை, யாரும் முழுமையாக செய்ய முன்வராத சமுதாயப் பணியினை தானே தோளில் போட்டுக் கொண்டு உழைத்தவர் பெரியார். அந்தப் பணியினை வேறு யாரும் செய்ய முன் வராததால், தான் செய்ய முன் வந்தது தனக்குள்ள யோக்கியதை என வெளிப்படுத்தி மக்களுக்கான விடியலைக் கொண்டு வந்தவர் பெரியார்.
*கடவுளின் பெயரால், தேவதாசி எனும் பொட்டுக் கட்டி விடும் - பெண்களின் அவலநிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க ஓங்கி குரல் எழுப்பினார் பெரியார். அன்று சென்னை சட்டமன்றத்தில் டாக்டர் முத்துலட்சமி எழுப்பிய தேவதாசி முறை எதிர்ப்புக் குரலாக மக்கள் மன்றத்தில் விளக்கியவர் பெரியார். இன்று சட்டத்திற்குப் புறம்பானது 'தேவதாசி முறை' என்பது நடைமுறை உண்மையாகி விட்டது.
*திராவிடரா? தமிழா? என கொள் கையைச் சீரழிக்கும் கூட்டத்திற்கு அறியாமையில் தமிழர்கள் பலியாகி விடக் கூடாது. ஆரிய சனாதனத்தை எதிர்த்திட 'திராவிடர்' தளமே சரியான கருத்துப் போர்க்களம். புரிந்து பேசுவது அறிவு மொழி; குழப்பத்தை உருவாக்கப் பேசுவதை அலட்சியப்படுத்திட வேண்டும்.
*நாடு கடந்து பெரியாரது கொள்கைகள் நடைமுறையில் உள்ளன. தந்தை பெரியார் நடை முறைப்படுத்திய சுயமரியாதைத் திருமணம், சடங்குகளற்ற திருமணம் என மலேசியா, சிங்கப்பூரில் சட்ட அங்கீகாரம் பெற்றுள்ளது. பெரியார் கொண்டு வந்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும், உலகின் பல நாடு களிலும் அரசு அங்கீகாரத்துடன் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
*"தான் பேச்சாளன் அல்ல; எழுத்தாளனும் அல்ல; ஆனால் ஒரு கருத்தாளன்" என ஆணித்தரமாக அறிவித்தார். தொடர்ந்து தனது கருத்தினைப் மக்களிடம் எடுத்துச் சென்று பரப்பினர். எமிலி. ஜோலா எனும் அறிஞன் கூறுகிறார்:
World is to be conquired not by arms but my ideas (உலகம் ஆயுதங்களால் வென்றெடுக்கப் படலாகாது; சிந்தனை களினால், கருத் துகளால் தான் அது சாத்தியப்படும்!) இந்தக் கூற்றின் இலக்கி யமாக வாழ்ந்தவர் தந்தை பெரியார் தனது கொள்கையால் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்; என்றும் வாழ்வார். தமிழ்நாட்டில் 'பெரியார் உலகம்' நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. 95 வயது வரை பெரியார் வாழ்ந்ததைக் குறிக்கும் விதமாக 95 அடி உயர சிலையானது. 40 அடி உயர பீடத்தில் நிறுவப்பட உள்ளது. பெரியார் அருங்காட்சியகம், நூலகம், குழந்தைகள் பூங்கா, அறிவியல் கண் காட்சிகள், கோளரங்கம் என பெரியார் உலகத்தைப் பார்வையிட வரும் அனை வருக்கும் பெரியார் காண விரும்பிய உலகத்தை வெளிப்படுத்தும் இடமாக அமைய உள்ளது.
*பெரியார் ஒரு தனி மனிதரல்ல; ஒரு சகாப்தம், சமூகப் போக்கில் ஏற்பட்ட மாபெரும் திருப்புமுனை; மக்களை அடிமை விலங்கிலிருந்து மீட்டெடுக்க அமைதிப் போரை நடத்திய பேராயுதம்; கருத்தாக்கம். பெரியார் இன்று மட்டுமல்ல;' இன் னும் பல ஆண்டுகளுக்கும், பல நாடு களுக்கும் தேவைப்படுவார். காரணம், பெரியாரியல் என்பது உலகளாவிய மனிதகுல தத்துவம்.
(தமிழர் தலைவரின் முழுமையான உரை விடுதலையில் பின்னர் வெளி வரும்)
தமிழர் தலைவரின் பேருரைக்குப் பின் சற்று மாறுபட்ட நிகழ்வு - புதுமை மிகு நிகழ்வு நடந்தது. தந்தை பெரியார் இன்று நேரில் வந்தால், அவருக்குப் பின் ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள் பற்றி எப்படி கூறியிருப்பார் என்பதை பெரியாரது குரல் ஒத்த மொழியிலேயே அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் வழங்கினார். பெரியாரை நேரில் காணாத, அவரது குரலை கேட்காத தலைமுறையினருக்கு புதுமையாகவும் இருந்தது. காணொலியில் பங்கேற்ற தோழர்களான ரெ.கோ.ராசு, பினாங்கு தங்கவேலு, சிங்கை இளங்கோ, மலேசியா நாகேந்திரன், சிங்கப்பூர் பதி, பஹ்ரைன் சிவக்குமார் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு தமிழர் தலைவர் விரிவான விளக்கங்களை அளித்தார்.
நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், மாநில பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வா. நேரு மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலேசிய நாட்டைச் சார்ந்த தோழர்கள், மலேசிய திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள்:
சா.இரா.பாரதி- தேசிய துணைத் தலைவர், ச.நாகேன் - தேசிய துணைப் பொதுச் செயலாளர், சு.குமுதா - தேசிய மகளிர் தலைவி, மு.இராதா கிருட்டிணன் - தேசிய அமைப்புச் செயலாளர், இரா.கெங்கையா - பேராக் மாநிலத் தலைவர், இரா.கோபி - பேராக் மாநிலச் செயலாளர், வ.கதிரவன் - கெடா மாநிலத் தலைவர், சு.குமரன்- கெடா மாநில துணைத் தலைவர், செ.குணாளன் - பினாங்கு மாநில துணைத் தலைவர்.
பேராக் மாநில பெரியார் பாசறை பொறுப்பாளர்கள்: கெ.வாசு - பெரியார் பாசறை அமைப்பாளர், மலேசிய மாந்த நேய திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள்: ச.அன்பரசன்- பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளை திராவிடர் கழக தொழில் நுட்ப குழுவின் பொறுப்பாளர் வி.சி. வில்வம் காணொலி தொழில் நுட்ப ரீதியாக ஒருங்கிணைத்தார்.
தொகுப்பு: வீ. குமரேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக