ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், உயர்ஜாதியினருக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியை நிரப்புவது அவசர
அவசியமாகும்!
அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வீதிக்கு வாரீர்!
உயர் அதிகார வர்க்கத்தில் உயர்ஜாதி பார்ப்பனர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த ஆதிக்கத்தை வீழ்த்த அனைத்துத் தரப்பினரும் அணிதிரள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்திய அமைச்சகங்களில் உள்ள உயர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற அடிப்படையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. திப்பேந்து அதிகாரி மக்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
அக்கேள்விக்கு எழுத்துமூலம் மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் பதில் அளித்துள்ளார்.
அதிர்ச்சி தரும் அந்தப் புள்ளி விவரங்களைத் தனியே காண்க!
புள்ளிவிவரங்கள்
உணர்த்துவது என்ன?
இந்தப் புள்ளி விவரங்கள் உணர்த்துவது என்ன? தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங் குடியினருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் சட்டப்படி இட ஒதுக்கீடு இருப்பதாக சொல்லப்பட்டாலும், அவர்களுக்கு உரிய சட்டப்படியான இட ஒதுக்கீடு விகிதாசாரம் அளிக்கப்படவில்லை என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாக, அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிட்டதே!
உண்மை விவரம் இவ்வாறு இருக்க, எவ்வளவு காலத்துக்கு இன்னும் இட ஒதுக்கீடு என்று கேள்வி கேட்போர் ஒருபக்கம்; உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று கூறி அவசர அவசரமாக ஒரு வார காலத்திற்குள் சட்டம் இன்னொரு பக்கம் என்பது - எண்ணிப் பார்க்கவே முடியாத - இரத்தக் கொதிப்பு ஏற்படுத்தக் கூடிய உயர்ஜாதி பார்ப்பனர் ஆதிக்கம் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
உயர்ஜாதி ஏழைகளுக்கு
இட ஒதுக்கீடா?
இந்த உயர்ஜாதி ஆதிக்கம் போதாது என்று கூறி, தனியார்த் துறைகளிலிருந்தும் இணைச் செயலாளர்கள் பதவிக்கு நேரி டையாக நியமனம் என்பது சமூக அநீதியின் உச்சம் அல்லவா! இத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஏணி வைத் தாலும் எட்ட முடியாத அளவுக்கு வெகுச் சிறுபான்மையினரான பார்ப்பன உயர் ஜாதியினரின் அதிகார வர்க்க ஆதிக்கம் உச்சத்தில் கொடி கட்டிப் பறக்கிறது.
இடைவெளியை நிரப்ப வேண்டாமா?
இந்த இடைவெளியை நிரப்புவது என்பதுதான் உண்மையான சமூகநீதியாக இருக்க முடியும்.
இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் சமூக நீதியில் அக்கறை உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் போர்க் குரல் எழுப்பிட வேண்டும்.
இட ஒதுக்கீடு விலக்கு அளிக்கப்பட் டுள்ள அத்துணைத் துறைகளிலும் சட்டப்படியான விகிதாச்சாரத்தில் இட ஒதுக்கீடு கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.
நாரா நாச்சியப்பன்
தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தவேண்டும்!
நாரா நாச்சியப்பன் தலைமையில் அமைந்த நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படை யில் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதில் தவறு செய்கிற அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இட ஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும், உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை என்ற நிலையில், தேசிய புதிய கல்வி என்றும், ‘நீட்' என்றும் கூறி ஒடுக்கப்பட்ட மக்கள் தலையெடுக்க முடியாத அளவுக்குத் தடைச் சுவர்களை எழுப்பி வருவது எத்தகைய அபாயகரமான பார்ப்பனத் தன்மை கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
1925 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் எச்சரித்த ‘பிராமினோகரசி!'
1925 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் எச்சரித்த அந்த ‘பிராமினோகரசி' என்பது எத்தகைய தொலைநோக்கு என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை
அடுத்து நடைபெற இருக்கக் கூடிய நாடாளுமன்றத் தொடரில் இந்தப் பிரச் சினைக்கான தீர்வுக்கு வழிகாணும் வகை யில், அனைத்து மாநிலங்களில் உள்ள சமூகநீதியின்மீது அக்கறை உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு: UR - UNDER - REPRESENTED IN GOVT JOBS - இட ஒதுக்கீடு அளிக்கப்படாதது என்று சொல்லப்படுவதன் பொருள் - உயர்ஜாதியினருக்கானது என்று பொருள்!
அகில இந்திய அளவில்
இயக்கம்
மண்டல் குழுப் பரிந்துரையை அமல் படுத்த கோரி தேசிய அளவில் இயக்கம் நடத்தியதுபோல் நடத்திடவேண்டும்; இல்லையேல், அகில இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து இயக்கம் காணவேண்டிய அவசியம் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். வீதிக்கு வந்து போராடுவோம், வாரீர்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.2.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக