செவ்வாய், 23 மார்ச், 2021

'நீட்' NEET அல்லது 'சீட்' SEET இன்னும் புதிதாக வரும் எல்லாமே நவீன மனுநீதி தான்


'நீட்' NEET அல்லது 'சீட்' SEET இன்னும் புதிதாக வரும் எல்லாமே நவீன மனுநீதி தான். மீண்டும் மீண்டும் பதிய வைப்போம் இந்த புதிய வருகையாளர்களுக்கு

கலைஞர் அவர்கள் ‘நுழைவுத் தேர்வு ரத்து 2006’ அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தார். இந்த குழு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகளைக் கேட்டபின் அந்த கமிட்டி அளித்த அறிக்கையை ஏற்று, 6.12.2006 அன்று ஒரு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து (மசோதா எண்: 39/2006) நிறைவேற்றி - நுழைவுத் தேர்வை சட்டம் மூலம் ரத்து செய்தார். 

அந்த சட்டத்திற்குப் பெயர், “Tamilnadu Professional Education Institution Admission Act 2006”! கல்வி “Concurrent List” இல் இருப்பதால் - இந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி 3-3-2007 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது தி.மு.க. ஆட்சிதான். 

இதை எதிர்த்து தொடரப்பட்ட “அஸ்வின் குமார்” வழக்கில் அந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வெளிவந்ததும், பிறகு அதன் மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டை உச்சநீதி மன்றமே நிராகரித்து- தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்ததும் திமுக ஆட்சி இருந்தபோதுதான். 

பாவம் கமலஹாசனுக்கு இந்த அடிப்படைத் தகவல்கள் கூட தெரியவில்லை; (நடுநிலை ஊடகங்களுக்கும்) தற்போது இருக்கும் இந்த சட்டத்தை பயன்படுத்தி நீட் தேர்வை கூட தமிழகத்தில் வர விடாமல் செய்யலாம்.(விரைவில் நடக்கும்.) 

இவர்களின் நோக்கம் நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தால் என்னைப்போல் யாரும் பொறியியல் பட்டதாரிகள் (அதுவும் அண்ணா பல்கலைகழகத்தில் நேரடியாக படித்தவன்)  உருவாகிவிட கூடாது என்பதே முதல் நோக்கம். 

இந்த நுழைவுத் தேர்வு ரத்து மூலம் பெரும் பாலான கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வி பயின்று தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை நிலை நிறுதிக்கொண்டனர். 

நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்திற்கு இன்னும் வலுசேர்த்தது முதல் தலைமுறை பட்டதாரி உதவித்தொகை. சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்விப் பயணம் தடைபடாத வகையிலான முக்கிய முடிவு; பட்டதாரி அல்லாத குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பில் சேர்வதற்குக் கட்டணத்தை ரத்து செய்தது. இதன் மூலம் பலர் குலத் தொழிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

திராவிடம் நம் கையை பிடித்து முன்னேற கூட்டி செல்கிறது.

கமல் போன்றவர்கள் நம்மை குறைந்தது 15 வருடம் பின்னோக்கி கூட்டி செல்வார்கள்.

பின் குறிப்பு: அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட “நுழைவுத் தேர்வு ரத்து சட்டம், “பிரியதர்சினி” என்ற மாணவி போட்ட வழக்கில், அந்தக் கொள்கை முடிவு எடுத்த 9.6.2005 தேதியிட்ட அரசு ஆணை, அம்மையார் ஜெயலலிதா ஆட்சி யிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. 

- முகநூலிலிருந்து தகவல் 

குடந்தை கோ.கருணாநிதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக