‘நீட்’ தொடருவதற்குக் காரணம் யார்?காங்கிரஸ் கூட்டணியா - பா.ஜ.க. கூட்டணியா?
பொய்யர்களை அடையாளம் காண்பீர்!
‘நீட்’ தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய ஆட்சியின் போதுதான் கொண்டு வரப்பட்டது என்று வார இதழ்கள் முதல் நாள் ஏடுகள் வரை பல்லாயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து விளம்பரம் செய்கிறார்களே... அதன் உண்மை நிலை என்ன? படித்த வர்களும், பாமரர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன?
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்தில் படிப்போர் 98 விழுக்காடு, சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பாடத்திட்டத்தில் படிப்போர் வெறும் இரு விழுக்காடே!
ஆனால், மருத்துவக் கல்லூரிக்கு ‘நீட்’ தேர்வு மூலம் கிடைத்திட்ட இடங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகின்றன. மாநிலக் கல்வித் திட்டத்தில் தேர்வு எழுதிய 98 விழுக்காட்டினருக்கு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் 63 விழுக்காடு; சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட வேறு கல்வி திட்டத்தில் பயின்ற இரு சதவீதத்தினருக்குக் கிடைத்த இடங்களோ 37 விழுக்காடாகும்.
‘நீட்’ தேர்வை திராவிடர் கழகம் ஏன் எதிர்த்து வருகிறது என்பதற்கான நியாயத்தை இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும்.
‘நீட்’ தேர்வினை இந்திய மருத்துவக் குழு (MCI) அறிமுகப்படுத்திய அந்த முதற்கட்டத்திலேயே (2012) திராவிடர் கழகம் கடுமையாக எதிர்ப்புக் குரலை உயர்த்தியது - கண்டனத்தை அழுத்தமாகவும் தெரிவித்தது. ‘நீட்’ தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 115 வழக்குகள் பதிவாயின; தி.மு.க.வும் வழக்குத் தொடுத்ததுண்டு. நீதிபதிகள் அல்தமாஸ் கபீர், விக்ரம் ஜித்சென், அனில்தவே அடங்கிய அமர்வில் முதல் இரு நீதிபதிகள் ‘நீட்’ தேர்வுக்குத் தடை விதித்தனர். மூன்றாமவர் மாறுபட்ட தீர்ப்பினை எழுதினார் (18.7.2013).
இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு(MCI க்கு) தேர்வு நடத்தும் அதிகா ரமே கிடையாது என்று அந்தப் பெரும் பான்மை தீர்ப்பை அறுதியிட்டுக் கூறியிருந்தனர் - இது எல்லாம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் (UPA) நடைபெற்ற நிகழ்வுகள் ‘நீட்’ தேர்வுக்கு முடிவு ஏற்பட்டு விட்டது என்று சமூக நீதியாளர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்ட நிலையில், மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பி.ஜே.பி. தலைமையிலான - நரேந்திர மோடி பிரதமரான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மீண்டும் இடி விழுந்தது. ‘நீட்’ செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய பி.ஜே.பி. அரசும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் அனில்தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய சாசன அமர்வு ஏற்கெனவே உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மாறாக ‘நீட்’ தேர்வை நடத்திட அனுமதியளித்தது. இதில் குறிப்பிட்டதக்கது என்னவெனில், 2013இல் உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, ‘நீட்டுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்த அதே அனில்தவேதான் இந்த அய்ந்து நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வுக்குத் தலைவர் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
சமூகநீதி எத்தனை எத்தனைத் தடைகளையும், கண்ணி வெடிகளையும் தாண்டிவர வேண்டியுள்ளது என்பதை எண்ணும் போது இரத்தக் கண்ணீர்தான் வடிக்க வேண்டும். +2 வரை பன்னிரெண்டு ஆண்டுகள் படித்து அரசுத் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதாம். மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான முன்னெடுப்புப் பாடப் பகுதிகள் இதில்தான் உள்ளன என்பதை அறிய மாட்டார்களா? எல்லாம் தெரியும்.
கிராமத்தைச் சேர்ந்த அனிதாக்கள் எல்லாம்கூட 1200 மதிப்பெண்களுக்கு 1,176 பெற முடிகிறது. அந்த அளவுக்கு மேலே வந்து விட்டனர்; இதனை வளர விட்டால் தங்களின் ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாகத் திணிக்கப்பட்ட ஆரியச் சதிதான் இந்த ‘நீட்’.
(28.6.2020 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் காணொலி மூலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய ஆதாரப்பூர்வ தகவலும் கருத்தும் இது)
நீட்டுக்கு உயிரூட்டி நடைமுறைக்குக் கொண்டு வரக் காரணமாக இருந்தது - இருப்பது நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசே - அதனோடு கூட்டணி வைத்திருக்கும் அதிமுக அரசு தி.மு.க. பொய் சொல்லுவதாக தலைகீழாகப் பிரட்டி விளம்பரம் செய்யும் அசல் பொய்யர்களை அடையாளம் காண்பீர்! வாக்குச் சீட்டு மூலம் தண்டிப்பீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக