• Viduthalai
புத்தக வெளியீட்டு விழாவில் ஒலித்த முத்துகள்
தொகுப்பு: மின்சாரம்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' நூல் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று (8.9.2021) மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது.
அதில் ஒலித்த கருத்து மணிகள்:
தயாநிதி மாறன் எம்.பி.
நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பி னர்கள் பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்தபோது, பா.ஜ.க.வினர் ‘ஜெய் ஸ்ரீராம்' என்று குரல் கொடுக்க, தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ‘‘பெரியார் வாழ்க'', ‘‘அண்ணா வாழ்க'', ‘‘கலைஞர் வாழ்க'', ‘‘வெல்க திராவிடம்'' என்று முழங்கினர் - நாடாளுமன்றமே அதிர்ந்தது.
***
ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் காலத் தின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியது. ஒவ்வொரு இளைஞர்களிடமும் கொண்டு சேர்க்கப்படவேண்டும்.
இப்பொழுது இளைஞர்கள் மத்தியில் பெரியார்மீதான தாக்கம் அதிகரித்துள்ளது. பெரியார்பற்றிய நூல்கள் ஏராளமாக விற்கப்படுகின்றன. இதற்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ். - சங் பரிவார்கள் - அவற்றின் அரசியல் வடிவமான பா.ஜ.க.வின் மோசமான நடவடிக்கைகள்தான்!
***
நூற்றுக்கு 3 சதவிகிதம் உள்ளவர்களை திராவிட இயக்கம் ஏன் எதிர்க்கிறது? இரண்டாயிரம் ஆண்டுகால மாக அவர்களின் ஆதிக்கமும் - இன்றுவரை அதனை நிலை நிறுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகள்தான் - எதிர்ப்புக்குக் காரணம்.
***
விநாயக ஊர்வலத்துக்குத் தமிழ்நாடு அரசு தடை போட்டதற்கு என்ன காரணம்? மத விழாக்களில் மக்கள் அதிகம் கூடுவதால், கரோனா பரவுகிறது. கும்பமேளாவில் வடநாட்டில் லட்சக்கணக்கில் கூடியதால், ஆயிரக்கணக் கானோர் கரோனாவால் பாதிக்கப்படவில்லையா? கேரளாவில் கரோனா பாதிப்புக் குறைந்து வந்த நிலை யில், ஓணம் பண்டிகை காரணமாக கரோனா தொற்று அதிரித்துவிட்டதே - இந்தக் காரணங்களுக்காகத்தான் தமிழ்நாட்டில் விநாயக ஊர்வலத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மணி அடியுங்கள், கரோனா ஒழியும்; விளக்கு ஏற்றுங்கள் கரோனா ஒழியும் என்றாரே பிரதமர் மோடி - இவற்றால் கரோனா ஒழிந்ததா?
***
நீட்டை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்? முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு அது தடையாக இருக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்குக் கடினமாக இருக்கிறது என்பதால்தான்.
நீட் தேர்வுதான் தகுதிக்கு அடையாளமா? குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் வைத்தியம் பார்ப்பவர்கள் எல்லாம் ‘நீட்' எழுதி டாக்டர்கள் ஆனவர்களா? உலகம் முழுவதும் புகழ்பெற்ற டாக்டர்களாக விளங்குபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் - நீட் எழுதாமல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்து டாக்டர்கள் ஆனவர்கள்தான் அவர்கள்.
சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் டாக்டராக முடியும் என்ற நிபந்தனையை வைத்த கூட்டம்தான் இப்பொழுது ‘நீட்'டை வலியுறுத்துகிறது என்றார் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன்.
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி.,
கரோனா காலத்திலும் தலைவர் ஆசிரியர் அவர்கள் காலத்துக்குத் தேவையான ஒரு நூலை - அதுவும் ஆய்வு நலை எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது.
***
ஆர்.எஸ்.எஸைப் புரிந்துகொண்டால்தான் பி.ஜே.பி. யைப் புரிந்துகொள்ள முடியும் - எனவே இந்த நூல் மிகவும் முக்கியமானது.
***
1925 ஆம் ஆண்டில்தான் சுயமரியாதை இயக்கமும், ஆர்.எஸ்.எசும் தோன்றின. தமிழ்நாட்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஏன் தலைதூக்க முடியவில்லை? காரணம், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் - திராவிட இயக்கம் - திராவிடர் கழகம்தான்.
***
சனாதனத்தை வேரறுக்கும் பணியைத்தான் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் மகத்தான முறையில் மேற்கொண்டனர்.
***
தந்தை பெரியார் மறைந்தபோது - பெரியாரின் தன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார் - நாம் அந்தப் பயணத்தைத் தொடர்வோம் என்றார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
இப்பொழுது அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்கள் குடும்ப வாரிசாக இல்லாமல், கொள்கை வாரிசாக ஒளிவீசுகிறார் - அதன் அடையாளம் தான் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்து, அன்று உறுதிமொழியையும் அரசு பணியாளர்கள் எடுக்கவேண்டும் என்றும் சட்டப்பேர வையில் அறிவித்துள்ளார்.
***
ஆர்.எஸ்.எஸ். பிள்ளை பிடிக்கும் ஒரு வேலையில் இறங்கியுள்ளது. பள்ளிப் பிள்ளைகளுக்கு யோகா சொல்லிக் கொடுக்கிறோம் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எசுக்கு ஆள் பிடிக்கிறார்கள்.
திராவிடர் கழகம் இருக்கும்வரை ஆர்.எஸ்.எஸின் ஜம்பம், தந்திரங்கள் எல்லாம் பலிக்கவே பலிக்காது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முயற்சி பெரிய வெற்றியைக் குவிக்கும் என்றார் எழுச்சித் தமிழர்.
***
தமிழர் தலைவர் ஆசிரியர்
தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அய் சமூகநீதி நாளாக அறிவித்துள்ளார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அந்த நாளில் உறுதிமொழி ஒன்றை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங் களில் எடுக்கவேண்டும் என்று அறிவித்து, அந்த உறுதிமொழி வாசகங்களையும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மட்டுமல்ல, ஒன்றிய அரசே இதனை மேற்கொள்ளும் காலமும் வரும் என்பதில் அய்யமில்லை.
***
இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டதே சமூகநீதிக்காகத்தான் - அதற்குக் காரணம், தமிழ்நாடுதான் - தந்தை பெரியார்தான் - அதன் பலன் - பயன் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமையும் கல்வி உரிமை கிடைக்கப் பெற்றது.
***
தந்தை பெரியார் பணி என்பது - எதிர்ப்பு என்பது சனாதனத்தின் மூல பலத்தை நோக்கிப் போர் தொடுப்ப தாகும். மூல பலத்தை நோக்கிப் போர் புரிவதுதான் தந்தை பெரியாரின் போர்முறை என்று அறிஞர் அண்ணா அவர்கள் அழகாகச் சொன்னது அந்த அடிப்படையில்தான்.
***
எழுச்சித் தமிழர் சொன்னார் - ஆர்.எஸ்.எஸின் வேலை பிள்ளை பிடிப்பது என்று - அதோடு மட்டுமல்ல - பிள்ளைகளைக் கிள்ளி விடுவதும் அவர்கள்தான் - தொட்டிலை ஆட்டுவதும் அவர்கள்தான் - அந்த தந்திரங்களையும் முறியடிப்போம்.
***
உண்மையிலேயே கடவுளைக் கேவலப்படுத்து பவர்கள் இவர்கள்தான். பிள்ளையாரை தண்ணீரில் கரைப்பது என்ற பெயரால், அந்தப் பொம்மைகளை- சிலைகளை அடித்து நொறுக்கி, கிரேன்மூலம் தண்ணீரில் அழுத்தி மூழ்கடிப்பது எல்லாம் யார்? அந்த வகையில் பிள்ளையாரை முதலமைச்சர் ஸ்டாலின்தான் காப்பாற்றியுள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட ஒரு வார காலத்தில், ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வ ஏடான ‘‘ஆர்கனைசரில்' என்ன எழுதினார்கள்?
இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்க முடியாது - மனுதர்மத்தை மறந்துவிட்டார்கள் - மனுதர்மம்தான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக இருக்கவேண்டும் என்று எழுதினார்கள்.
***
வளர்ச்சி, வளர்ச்சி என்று அடிக்கடி பிரதமர் மோடி சொல்லுகிறார்; எதில் வளர்ச்சி? அரசாங்க சொத்துகளை விலை பேசுவதிலா?
அரசு சொத்துகளை விற்பதற்கென்றே ஒரு புதிய துறையை ஏற்படுத்தியது பி.ஜே.பி. அரசுதான் - வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே அது தொடங்கப்பட்டு விட்டது - அருண்ஷோரி இதற்காகவே அமைச்சராகவும் நியமிக்கப்பட்டதுண்டு.
2014 இல் பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில், மேடையை விட்டுக் கீழே இறங்கி இந்திய அரசமைப்புச் சட்டம் என்று செதுக்கப்பட்டிருந்த ஒரு கல்லின்மேல் தன் தலையை வைத்து வணங்கி, அரசமைப்புச் சட்டத்தின்மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக ஒரு நாடகம் போட்டார்.
உண்மையில் சட்டத்தை மதிக்கிறாரா?
இதற்கு வேறு எங்கும் போகவேண்டாம் - உச்சநீதி மன்றமே இப்பொழுது வெளிப்படையாகக் கூறிவிட்டதே! ‘உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஒன்றிய அரசு மதிப்பதில்லை' என்று கூறியுள்ளதே, உச்சநீதிமன்றம்.
இதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தொடர வேண்டும் என்று ஒன்றிய அரசு எதிர்பார்க்கிறதா என்ற வினாவை எழுப்பியுள்ளதே - இதற்கு என்ன பதில்?
ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.,களுக்கு வெளிப்படையான அஜெண்டா, ஹிடன் அஜெண்டா என்று இரண்டு வகையான அஜெண்டாக்கள் உண்டு.
ஆர்.எஸ்.எஸ். என்ன நினைக்கிறதோ அதைத்தான் பி.ஜே.பி. செயல்படுத்தத் துடிக்கிறது.
மக்களிடம் அவற்றைக் கொண்டு செல்லவேண்டும். இந்த நூல் அதைத்தான் செய்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர்.
***
எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்
எழும்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன் தன் உரையில்,
பெரியார் திடல் எங்கள் குருகுலம். அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் முதன்முதலாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதை தவற விடக் கூடாது என்பதற்காகத்தான் சட்டமன்றம் நடந்துகொண்டு இருந்தாலும், சொல்லிவிட்டு ஓடோடி வந்தேன் என்றார்.
தமிழ்நாட்டில் தாமரை மலரத் துடிக்கிறது - அதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக