• Viduthalai
இதை விளக்குவதுதான் ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' - நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, செப்.19- கரோனாவைவிட ஆபத்தானது ஆர்.எஸ்.எஸ்.; ஆர்.எஸ்.எஸின் அஜெண்டா வேறு; ஹிடன் அஜெண்டா வேறு; இதை விளக்குவதுதான் ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' என்று அந்நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
‘‘ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை’’
புத்தக வெளியீட்டு விழா!
கடந்த 8.9.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' புத்தக வெளியீட்டு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' என்ற புத்தக வெளியீட்டு விழாவின் தலைவரும், திராவிடர் கழகத் துணைத் தலைவருமான மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய அருமைத் தோழர் திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
நாடாளுமன்ற உறுப்பினர் அன்பிற்குரிய அருமைத் தோழர் தயாநிதி மாறன்
இந்நிகழ்வில் நம் அழைப்பை ஏற்று இங்கே வந்து சிறப்பாக ‘‘ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை’’ புத்தகத்தை வெளியிட்டு ஓர் அருமையான உரையை நிகழ்த்தி விடைபெற்று சென்றிருக்கக்கூடிய இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பிற்குரிய அருமைத் தோழர் தயாநிதி மாறன் எம்.பி., அவர்களே
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி.
அதேபோல, எப்பொழுதும் பெரியார் திடலுக்கு உரியார் என்ற பெருமையை உடைய நம்முடைய அன் புச் சகோதரர், திராவிட இயக்கத்தினுடைய மூன்
றாவது குழலாக இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - நாம் அழைத்தபொழுதெல்லாம் எங்கிருந்தாலும், எப்படியும் வந்து சேருவேன் என்ற முறையில், இங்கு வந்து ஓர் அற்புதமான ஆய்வுரையை ஆற்றியுள்ள அருமைச் சகோதரர் மானமிகு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களே,
இந்நிகழ்ச்சியில் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு சிறப்பாக உரையாற்றிய அருமைச் சகோதரர் வழக்குரை ஞர் இராஜீவ் காந்தி அவர்களே, வழக்குரைஞரும், இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பிற்குரிய சகோதரர் பரந்தாமன் அவர்களே,
இன்றைக்கு சட்டமன்ற நிகழ்ச்சி இரவு 9 மணிவரை யில் நடைபெறுகின்ற காரணத்தினால், நம்முடைய மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சரும், இந்தத் திடலுக்கு உரியவருமான அருமைச் சகோதரர் சேகர்பாபு அவர்கள், தன்னுடைய கடமையை ஆற்றிக் கொண் டிருக்கிறார். அவர் இந்நிகழ்ச்சிக்கு வந்தாலும், வராவிட் டாலும் இப்பொழுது அவரை எப்படிப் பார்க்கிறார்கள் என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே முதல் இடத்தைப் பெற்றிருக்கின்ற முதலமைச்சர்
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி, பெண் களையும் ஓதுவராக்கி, ஓர் அமைதிப் புரட்சியை அற நிலையத் துறையில் செய்கின்றபொழுது, தொடக்கத்தில் நீதிக்கட்சியை நடத்திய நேரத்தில் பிரீமியர் என்று அழைக்கப்பட்ட முதலமைச்சர் பனகல் அரசர் அவர்கள் எப்படி ஒரு புரட்சியை செய்தார்களோ, அதே புரட்சியை, இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே முதல் இடத்தைப் பெற்றிருக்கின்ற முதலமைச்சர், 150 நாள்களிலேயே நிரூ பித்திருக்கின்ற சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி யில், மிகச் சிறப்பான ஒரு திருப்பத்தைக் கொடுத்து, ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்தி - தந்தை பெரியாருக்கு இறுதி மரியாதையை அரசு மரியாதையாக நான் அளித்தேன் - ஆனால், அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றவில்லையே என்று வருத்தப்பட்டார் முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்கள். அவருடைய வருத்தத்தைப் போக்கும் வகையில், பெரியார் நெஞ்சில் தைத்த முள் ளையும் அகற்றி, அதையும் தாண்டி, நம் நெஞ்சங்களில் எல்லாம் மகிழ்ச்சிக் கொள்ளக்கூடிய அளவிற்கு, நேற்று முன்தினம் அவர்கள் சிறப்பான ஒரு வரலாற்றுப் பிர கடனத்தை செய்திருக்கிறார்கள். அதைத்தான் இங்கே உரையாற்றிய அத்தனை தோழர்களும் சொன்னார்கள்; எழுச்சித் தமிழர் அவர்களும் சொன்னார்கள்.
வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதியன்று, பெரியார் பிறந்த நாள் என்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டான நாளாக இருக்கும்; வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய நாளாக இருக்கும்.
எப்படி என்றால், அது சமூகநீதி நாளாக, தமிழ்நாடு அரசாலே கொண்டாடப்படும் என்று அவர்கள் பிரகட னப்படுத்தியதோடு, அந்த நாளில், வெறும் பிரகடனத் தோடு நிறுத்திவிடாமல், தலைமைச் செயலகத்தில் தொடங்கி, ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும், கல்வி நிலையங்களிலும் உறுதிமொழி ஏற்று சூளுரை ஏற்கக் கூடிய நாளாக இருக்கும் என்று சொல்லி, அற்புதமான ஒரு முயற்சியை செய்திருக்கிறார்.
தமிழ்நாடு தொடங்கும் - இந்தியா அதனைப் பின்பற்றும்!
எப்பொழுதுமே தமிழ்நாடு தொடங்கும் - இந்தியா அதனைப் பின்பற்றும்; அதுதான் வரலாறு.
அந்த வகையிலே நண்பர்களே, நாம் விரைவில் பார்க்கப் போகிறோம். அடுத்தடுத்து வரக்கூடிய பெரியார் பிறந்த நாள் விழாவில், இன்றைக்கு நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகராக இருக்கின்ற நம்மு டைய முதலமைச்சர் அறிவித்திருக்கின்ற இந்த அறி விப்பு, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களிலும், ஏன் ஒன்றிய அரசுகூட அறிவிக்கின்ற நாள் தொலைதூரத்தில் இல்லை என்பதை நாம் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏனென்றால், சமூகநீதி என்பது இன்றைக்கு அனை வருக்கும் உரிய மூச்சுக் காற்று. அதைத்தான் இங்கே அழகாக எழுச்சித் தமிழர் அவர்களும், தோழர்களும் எடுத்துச் சொன்னார்கள்.
அந்த சமூகநீதி நாள் என்பதை இந்தியாவுக்கே கொடுத்த பெருமை தந்தை பெரியார் அவர்களுக்கு.
முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் பயன் இந்தியா முழுவதற்கும் கிடைத்தது
உங்களுக்குத் தெரியும், கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை, உச்சநீதி மன்றம் உறுதி செய்த பிறகும்கூட, தந்தை பெரியார் தொடங்கிய அந்தப் போராட்டம் - கம்யூனல் ஜி.ஓ. என் றாலே, பாதிக்கப்பட்டுள்ள நம்முடைய உரிமை பறிக் கப்பட்டதே - மீண்டும் அந்த உரிமை நமக்குக் கிடைக்க வேண்டும் கல்வியிலே, உத்தியோகத்திலே என்ற அந்த சிறப்புக்காக நடந்தாலும், அதனுடைய பயன் யாருக்குக் கிடைத்தது என்று சொன்னால் நண்பர்களே, முழுக்க முழுக்க அதன் பயன் இந்தியா முழுவதற்கும் அந்த முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூல மாகக் கிடைத்தது.
இந்தியா முழுமைக்கும் பெரியார் என்பதுதான் சிறப்பானது. எனவே, நமக்காக மட்டும், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அந்தப் பயன்.
தமிழ்நாட்டிற்கு உருவான வெளிச்சம், தமிழ்நாட்டிற்கு உருவான மருந்து - எப்படி ஓர் ஊரில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து, உலகுக்கே பயன்படுகிறதோ - அதுபோல ஓர் அற்புதமான வகையில் நடந்தது.
விடியலை நாம் தேடியிருக்கிறோம்!
அதுபோல, இன்றைய ஆட்சியிலும், 27 சதவிகிதம் - அதுபோல, ஏற்கெனவே இட ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படாத ஒரு சூழல். அதற்கெல்லாம் விடியலை நாம் தேடியிருக்கிறோம்.
இன்றைக்கு அந்த வழக்கு நிலுவையில்தான் இருக் கிறது, மருத்துவ கல்லூரி சம்பந்தமான அந்த வழக்கு. ஆனாலும், அதற்கிடையில் நாம் இந்தியா முழுவதற்கும் கட்டுப்படுத்தக் கூடிய அளவிற்கு, அந்தத் தொகுப்பி லிருந்து முதன்முறையாக நாங்கள் ஒதுக்கமாட்டோம் என்று சொன்னதை மாற்றி, ‘‘நீங்கள் கொடுத்தாக வேண்டும்; இல்லையானால், பதில் சொல்லவேண்டும்'' என்று சொன்னவுடன், அதனை மாற்றிக் காட்டினார்கள்.
சமூகநீதியினுடைய மீட்டுருவாக்கம் நடந்திருக்கிறது
அதுமட்டுமல்ல நண்பர்களே, 102 ஆவது அரசமைப் புச் சட்டத் திருத்தத்தை இரண்டாண்டுக்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள் - அதனுடைய கேட்டை நாம் தொடர்ந்து எடுத்துச் சொன்னதினுடைய விளைவாக - 102 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்மூலமாக - மாநிலங்களுடைய உரிமைகளைப் பறிக்க உங்களுக்கு உரிமையில்லை. பிற்படுத்தப்பட்டவர் யார்? என்று அடையாளம் கண்டு சொல்லக்கூடிய உரிமை மாநிலங் களுக்கு உண்டு. அந்த உரிமையை, 102 ஆவது அரச மைப்புச் சட்டத் திருத்தத்தின்மூலமாகப் பறித்துக் கொண்டு விட்டீர்கள். அதனை நாங்கள் போராடி, பெற்றுத்தான் தீருவோம் என்று சொன்ன நிலையில், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, அந்தப் போராட்டத்தை நடத்தி யதினுடைய விளைவாகத்தான் நண்பர்களே, இழந்ததை மீண்டும் பெற்றிருக்கிறோம்; பறிகொடுத்ததை மீட்டிருக்கி றோம். எனவே, சமூகநீதியினுடைய மீட்டுருவாக்கம் நடந்திருக்கிறது.
எனவே, சமூகநீதி நாள் என்பது வெற்று உரையல்ல; வெறும் பிரகடனமல்ல. செயல் திட்டத்தினுடைய மலர்ச்சி. அந்த செயல் திட்டம் இந்தியா முழுவதற்கும் கலங்கரை வெளிச்சம்போல - கப்பல்கள் வருவதற்கு வழிகாட்டுவதுபோல - சமூகநீதி கப்பல் தங்குதடையின்றி களத்திலே அவர்கள் செல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய ஒன்று.
இஸ்மாயில் ஆணையம் அதற்குச் சாட்சி!
ஆகவே, அப்படிப்பட்ட மகிழ்ச்சியான சூழ்நிலையில், ‘‘ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை’’ புத்தகம் என்பது சாதாரணமானதல்ல. வெளிப்படையான ஆபத்துகளைக் கண்டுபிடிப்பது என்பது வேறு. மறை முக ஆபத்துகளைக் கண்டுபிடிப்பது என்பது வேறு. இங்கே நம்முடைய தயாநிதி மாறன் அவர்கள் மிக அற்புதமாக சொன்னார்கள். எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், நானும், முரசொலி மாறன் அவர்களும் சிறைச்சாலையில் ஒன்றாக இருந்தவர்கள். நம்முடைய முதலமைச்சர் போன்றோர் எல்லாம் சிறைச் சாலையில் தாக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும்; இஸ்மாயில் ஆணையம் அதற்குச் சாட்சி. இன்றைக்கு அதையே கூட சில பைத்தியக்காரர்கள் அவர் மிசா விலே கைதாகவில்லை என்று சொல்லி, தங்களுடைய அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய அளவிற்கு இருக்கிறது. இது ஒருபுறம் இருக்கட்டும்.
ஆனால், அதையும் தாண்டி, இன்றைக்கு ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டு இருக்கக்கூடிய அளவில், நல்ல மாறுதல் ஏற்பட்டு இருக்கிறது.
அப்பொழுது முரசொலி மாறன் அவர்களும், நானும் மிசா கைதியாக சென்னை மத்திய சிறைச்சாலையில் ஓராண்டு காலத்திற்கு இருந்தோம். சிறைச்சாலையில் இருந்த காவல்துறை அதிகாரிகள், ‘‘இனிமேல் நீங்கள் வெளியுலகத்தையே பார்க்க முடியாது'' என்று அச்சுறுத் தினார்கள். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் நாங்கள் எல்லோரும் இருந்தோம்.
இங்கே எழுச்சித் தமிழர் சொன்னதுபோன்று, சிறைச் சாலை ஒரு நல்ல வாய்ப்பு- பல நேரங்களில். கொடு மைகள் இருந்தாலும், அந்தக் கொடுமைகளைப்பற்றி கவலைப் படவில்லை.
அது ஓர் அருமையான கசப்பு அனுபவங்கள்; அதை அனுபவித்த பிறகு, வாழ்க்கையில் நாங்கள் எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
சிறைச்சாலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு, பத் திரிகைகளைப் படிப்பதற்காகக் கொடுத்தார்கள். விடு தலை அலுவலகத்திலிருந்து எல்லா பத்திரிகைகளையும் எனக்கு வாங்கி அனுப்புவார்கள்.
அந்தப் பத்திரிகைகளில் குறிப்பாக விடுதலை, முர சொலி பத்திரிகைகளில், நிறைய கருப்பு மை தடவப்பட் டிருக்கும். ஏனென்றால், அந்தச் செய்திகளை நாங்கள் எல்லாம் படிக்கக்கூடாது என்பதற்காக.
நீதிக்கட்சி, திராவிட இயக்க வரலாற்றைப்பற்றி நீங்கள் எழுதுங்கள் என்றேன்!
இன்னும் சில நாள்கள் கழித்து, புத்தகங்களைப் படிப் பதற்காகக் கொடுத்தார்கள். அப்பொழுது ‘விடுதலை' நாளிதழின் பழைய தொகுப்புகளை - பைண்ட் செய்தவற்றைக் கொடுக்கச் சொல்லி, திராவிடர் இயக்க வரலாற்றைப் பற்றி எழுத ஆரம்பித்தோம். ஏனென்றால், நிறைய நேரம் இருக்கும்.
தோழர் முரசொலி மாறன் அவர்கள், ‘‘நீங்கள் படித்துவிட்டு, எனக்கும் கொடுங்கள்; சில முக்கிய குறிப்புகளை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்'' என்றார்.
உடனே நான் அவரிடம், ‘‘நான் வகுப்புரிமையைப்பற்றி எழுதுகிறேன். நீதிக்கட்சி, திராவிட இயக்க வரலாற் றைப்பற்றி நீங்கள் எழுதுங்கள்'' என்று சொன்னேன்.
இந்த சம்பவத்தை அவர் திராவிட இயக்க வரலாற்று நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆகவே, அந்த முறையில் பயன்படக் கூடிய அளவிற்கு அந்த வாய்ப்புகள் வந்தன.
அவருடைய காலத்தில், திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சிபற்றியெல்லாம் புத்தகம் எழுதினார் முரசொலி மாறன் அவர்கள்.
வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என்று சொல் கிறார்களே, திராவிட இயக்கம் என்றாலே, கொள்கைப் பொழில் பூத்துக் குலுங்கும். பிள்ளைகள் வேறொரு கட்சியில் இருக்கவேண்டும் என்பதில்லை. இதே கொள்கைகள் பாரம்பரியமாக வரும்.
அந்த வகையில், தயாநிதி மாறன் அவர்கள் இன் றைக்கு ஓர் அற்புதமான ஓர் உரையை ஆற்றினார். நான் அவரிடம் சொன்னேன், ‘‘ஏன் உங்களை அழைத்தோம் என்றால், இது அடுத்த தலைமுறை - இராஜீவ் காந்தி, பரந்தாமன், நம்முடைய எழுச்சித் தமிழர் போன்றவர்கள் அடுத்த நிலையில் வந்தவர்கள். இவர்களுடைய கையில், பெரியார் ஏந்திய சமூகநீதிச் சுடரை அப்படியே கொடுத்துவிட்டோம். மிக பாதுகாப்பாக அதனை எடுத்துச் செல்கிறார்கள். இவர்கள் எல்லாம் இந்தப் போரில் ஒரு பெரிய தளகர்த்தர்கள். போர் நடந்துகொண் டிருக்கிறது, இன்னும் முடியவில்லை'' என்று குறிப் பிட்டேன். இறுதியான லட்சியப் போர் இன்னும் இருக் கிறது. அந்தப் போருக்கு ஆயுதங்கள் வேண்டும் அல்லவா? பழைய காலத்து ஆயுதங்களான ரத, கஜ, துரக படைகள் எல்லாம் இப்பொழுது கிடையாது. கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருப்பார்கள். எங்கேயோ அமர்ந்துகொண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் அதனை இயக்குவார்கள். ஆகவே, அப்படிப்பட்ட நிலையில், அதனைக் கண்டுபிடிக்கக்கூடிய ஆயுதங்கள் தேவை.
பெரியாரின் போர் முறை!
அறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார், பெரியாரின் போர் முறை என்பது மற்றவர் களுடைய போர் முறைக்கும், பெரியாருடைய போர் முறைக்கும் வித்தியாசம் உண்டு. மற்றவர்களுடைய போர் முறை என்பது, கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளுடன் போராடுவது. பெரியாருடைய போர் முறை என்பது, கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளுடனும், கண்ணுக்குத் தெரியாத எதிரிகளுடனும் போராடுவதுதான். மூல பலம் எங்கே இருக்கிறது என்று தெரிந்து, அதனை முறியடிப்பதுதான் பெரியாருடைய போர் முறை. அந்த மூல பலம்தான் ஆர்.எஸ்.எஸ். இன்றைக்கு.
எனவேதான், ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’’ புத்தகம் இன்றைக்கு இங்கே வெளியிடப்பட்டு இருக்கிறது. இங்கே எழுச்சித் தமிழர் அழகாக சொன் னார், ஆர்.எஸ்.எஸ்.தான் பிள்ளை பிடிக்கின்ற இயக்கம் என்று. பிள்ளை பிடிக்கின்ற இயக்கமட்டுமல்ல நண் பர்களே, அவர்களின் மறைமுகத் திட்டத்தில் ஒன்றையும் சொல்கிறேன். எங்களுடைய பிள்ளைகளைப் பிடிக்க முடியாது; இந்தப் பிள்ளைகளை யாராலும் பிடிக்க முடி யாது; தமிழ்நாட்டுப் பிள்ளைகளை எவராலும் பிடிக்க முடியாது.
அந்த நிலையில், பிள்ளைகளை பிடிக்க முடியாது என்றவுடன், அவர்களுடைய தந்திர வியூகங்கள் எப் படிப்பட்டவை என்றால், பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடியவர்கள். இதுதான் நம்ப வைத்து கழுத்தை அறுப்பதினுடய இன்னொரு பாகம்.
பெரியார் எரிமலையாக இருக்கிறார்; எரிமலையிடம் நெருங்க முடியாது
ஆக, பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவார்கள். இன்றைக்கு அதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திடீரென்று அம்பேத்கர்மீது பக்தி அவர்களுக்கு; அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். பெரியாரி டம் மட்டும்தான் அவர்களால் நெருங்க முடியவில்லை. காரணம், பெரியார் எரிமலையாக இருக்கிறார். எரிமலையிடம் நெருங்க முடியாது. இமயமலையில்கூட ஏறிவிடலாம்; எரிமலையிடம் வரவே முடியாது.
பெரியார் என்கிற போராயுதம் - பேராயுதம் என்பது அது மேலெழுந்தவாரியாகப் போகாது - அதை மிகச் சிறப்பாக நம்முடைய அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள், ‘‘ஈட்டி எட்டிய வரையில் பாயும்; பணம் பாதாளம் வரை பாயும்; எங்கள் பெரியாரின் கொள்கைகள் இருக்கிறதே, அது அண்ட பிண்ட
சராசரங்கள் அத்தனையும் பாய்ந்து, அதற்கப்பாலும் பாயும்'' என்பார்.
அதற்குரிய வாய்ப்பை மக்களிடம் சொல்லவேண்டும். இன்றைய இளைஞர்களுக்குச் சொல்லவேண்டும்; அவர்கள் ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் ‘‘ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை’’ புத்தகம்.
ஏமாற்று வேலையை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்
டிரோஜன் குதிரை என்பது என்னவென்றால், பெரிய மரக்குதிரை வருகிறது, வருகிறது என்று சொன்னவுடன், மிக ஆவலுடன் எல்லோரும் பார்த்தால், இவர்கள் குதிரையை மட்டும்தான் பார்த்தார்கள். குதிரையை நகர்த்திக்கொண்டு டிராய் நகருக்குள் போகிறார்கள். இந்தப் புத்தகத்தை வாங்குகிறவர்கள் அதனுடைய அட்டைப் படத்தை நன்றாகப் பார்க்கவேண்டும். விமானத்தின் பின்பக்கம் திறந்தவுடன், கீழே நிறைய பேர் பாராசூட்டில் பறப்பார்கள் பாருங்கள்; அதுபோன்று, அந்த மரக்குதிரையிலிருந்து நிறைய ஆட்கள் வெளியே குதித்து, அந்த நகரத்தைக் கைப்பற்றுகிறார்கள். அதுதான் அதனுடைய உருவகம்.
அந்த உருவகம் போன்று, இது ஏமாற்று வேலை. அந்த ஏமாற்று வேலையை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் அதற்கு அடையாளம்.
இங்கே சொன்னார்கள் அல்லவா - ‘‘மண்டல் - கமண்டல்.
ரத யாத்திரை - ரத்த யாத்திரை'' என்று!
பெரியாருடைய நுண்ணாடிமூலமாகப் பார்த்தால்தான் தெரியும்
இப்பொழுது மோடிதான் சமூகநீதி காப்பவராம். புராணத்தில் கடவுள் தசாவதாரம் எடுத்தார் என்று சொல்வார்கள்; ஆனால், இன்றைக்கு மோடி எடுத்தி ருப்பது சதாவதாரம் - நூறு அவதாரம் - அவர் எப்படி திடீர் திடீரென்று உடையை மாற்றுகிறாரோ - அதுபோலவே, அவருடைய தந்திரங்களைப் புரிந்து கொள்ளவேண்டுமானால், பெரியாருடைய நுண்ணாடி மூலமாகப் பார்த்தால்தான் தெரியும்.
இந்தியா முழுவதற்கும் இந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்லவேண்டும்; இன்றைக்குத் தமிழ்நாடுதான் அதற்கு வழிகாட்டுகிறது. தமிழ்நாட்டினுடைய முதல மைச்சர்தான் அதற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒன்றிய வேளாண் மைச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்; குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம்; ஒவ்வொரு நாளும் அறிவிப்பு மழை - வறண்ட நிலத்திற்கு வான்மழை போன்று அறிவிப்புகள் - மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் எல்லாத் தரப்பினருக்கும்.
எவர் கைகளிலும் எந்த ஆயுதமும் இல்லை. எதிரிகள், ஏதாவது ஆயுதம் கிடைக்குமா என்று தேடுகிறார்கள்; ஆயுதம் ஏதும் இல்லை. அவர்களுடைய கைகளில் இருக்கின்ற ஆயுதங்களை எல்லாம் பிடுங்கி வைத்துவிட்டார், நம்முடைய முதலமைச்சர்.
பெரியார் என்கிற போராயுதம்!
முதலமைச்சர் கைகளில் இருக்கின்ற பேராதயும் - மிக முக்கியமான போராயுதம் பெரியார் என்கிற போராயுதம்.
அவர் எடுக்கின்ற நடவடிக்கைகளைப்பற்றி ஏதும் சொல்ல முடியவில்லை. பிள்ளையார் சதுர்த்திக்கு சில கட்டுப்பாடுகள்; கடவுள் மறுப்பாளராக எல்லோரும் இருக்கமாட்டார்கள்; உடனே அதனை எதிர்த்தார்கள். அதற்குரிய விளக்கத்தை நம்முடைய முதலமைச்சரும், நம்முடைய அமைச்சர் சேகர்பாபு அவர்களும் சொன்னார்கள்.
இங்கே நம்முடைய எழுச்சித் தமிழர் அழகாகச் சொன்னார், வட நாட்டில் வியாபாரமானது - செலா வணியானது ஏன் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. அதற்குக் காரணம், அடிக்கட்டுமானம்தான். இங்கே பெரியார் கட்டி வைத்திருக்கின்ற அரசியல். இங்கே பிள்ளையார் அரசியல் நடைபெறவில்லையே!
அங்கே பிள்ளையார் எப்படி வந்தார்?
ஹிந்துத்துவா என்பதுதான் ஆர்.எஸ்.எஸினுடைய அடிப்படை தத்துவம். அதனை உருவாக்கியது யார் என்றால், 5, 6 பேர்.
இதுபோன்ற தகவல்கள் எல்லாம் இந்த
‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’’ புத்தகத்தில் இருக்கின்றது. ஆங்கிலத்தில் இருப்பதை தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பில்லாதவர்களும், மற்றவர் களும் புதிதாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற் காகத்தான் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஹிந்து மதம் என்றால் என்ன தெரியுமா?
சவார்க்கார் எப்படிப்பட்ட வீரர்? எத்தனை முறை மன்னிப்புக் கேட்டு வந்திருக்கிறார் என்பது எல்லோ ருக்கும் தெரியும்.
ஹிந்துவை ராணுவமயமாக்கு -
ராணுவத்தை ஹிந்து மயமாக்கு.
ஹிந்து மதத்திற்கும் - ஹிந்துத்துவாவிற்கும் என்ன வேறுபாடு என்று நம்முடைய கண்ணோட்டத்தில் சொல்லவேண்டுமானால், பிள்ளையார் சதுர்த்தி, விநா யகர் சதுர்த்தி என்பதற்காக வாதாடுகிறாரே புதிதாக தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க.விற்குத் தலைவராக வந்துள்ள அண்ணாமலையினுடைய ஆரோகணம், அவுரோ கணம், அரோகரோ எல்லாம்.
கடவுளை உண்டாக்கியவனும் இவன்தான்; கடலில் தள்ளி ஒழிப்பவனும் இவன்தான்!
ஹிந்து மதம் என்றால், அந்த நம்பிக்கை உள்ளவன், கடவுளைக் கும்பிடுகிறவன், விநாயகர் சதுர்த்தி என்று சொல்லி, அந்தக் காலத்தில் 5 ரூபாய்க்குப் பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல் வைத்து கொண்டாடிவிட்டு, சில நாள்களுக்குப் பிறகு, கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ சத்தம் போடாமல் போட்டுவிடுவார்கள்.
ஹிந்து மதத்தில்தான், உலகத்திலேயே கடவுளை உண்டாக்கியவனும் இவன்தான்; கடவுளைக் கொண்டு போய் கடலில் தள்ளி ஒழிப்பவனும் இவன்தான்.
வேறு எந்த மதத்துக்காரனும் கடவுளை இப்படி அவமானப்படுத்தியது கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய பெரிய விநாயகர் சிலைகளைப் போட்டிப் போட்டுக்கொண்டு பொது இடங்களில் வைத்து, ஊர் வலம் நடத்தி, கடலில் கொண்டு போய், அது கடலில் மூழ்கவில்லை என்றவுடன், அதனை கசாப்புக் கடையில் ஆட்டை அறுப்பதுபோன்று, தனித்தனியே அறுத்து, அடித்து நொறுக்குவார்கள். கடவுளை அவர்கள் கேவலப்படுத்துவதைவிட, வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது.
விநாயகரையும் காப்பாற்றி இருக்கிறார் நம்முடைய தளபதி
அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் செய்திருக்கிறார் நம்முடைய தளபதி அவர்கள். அதற்கு அவர்கள் நன்றி சொல்லவேண்டாமா?
சகோதரர் தொல். திருமாவளன் அவர்கள் சொல் வதுபோன்று, விநாயகரையும் காப்பாற்றி இருக்கிறார் நம்முடைய தளபதி.
விநாயகர் ஊர்வலத்தில், தள்ளாடி, ஆடிக்கொண்டு, இவன் குடித்த சாராயத்தை விநாயகர்மேல் ஊற்றி, கடலில் மிதிபடாமல், அடிபடாமல் இருக்கின்ற வாய்ப்பை உருவாக்கியிருக்கின்றார் நம்முடைய தளபதி.
சிவசுப்பிரமணியம் எழுதிய ‘‘பிள்ளையார் அரசியல்’’
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிறந்த ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் அவர்கள், ‘‘பிள்ளையார் அரசியல்'' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
வடநாட்டில் பம்பாயில் பிள்ளையாரை வைத்தத்தான் திலகர் அரசியலை நடத்தினார். ஆனால், இங்கே பிள்ளையாரை உடைத்துக்காட்டி, அதற்கு சக்தியில்லை என்று காட்டினார் தந்தை பெரியார்.
தயவு செய்து நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் - சாதாரணமான பக்திக்காரன், மூடநம்பிக்கையின் காரண மாக, ஒரு களிமண் பிள்ளையாரை வாங்கி, வீட்டில் சில நாள்கள் வைத்திருந்து, கிணற்றிலோ, ஆற்றிலோ போட்டால், அது ஹிந்து மதம்.
20 அடி, 30 அடி பிள்ளையாரை தெருவில் வைத்து, மற்றவர்களைப் பார்த்து நாங்கள் கேலி செய்வோம் என்று சொல்லி, அதைக் கரைப்பதற்காக ‘விசர்ஜனம்' - (சமஸ்கிருதத்தில் ‘விசர்ஜனம்' என்றால், சிறுநீர் கழித்தல்) என்று சொல்லி, அந்தச் சிலைகளை ஊர்வ லமாகக் கொண்டு போகிறார்கள்; அந்த ஊர்வலம் கடற்கரைக்குப் போவதற்கான வழியில் செல்லாமல், மசூதி எங்கே இருக்கிறது என்று பார்த்து, அந்த வழியில் செல்லுவார்கள். ஒவ்வொரு முறையும் இராம.கோபா லான் வித்தை காட்டுவார்; ஒரு லட்சம் காவல்துறையினர் அதற்காகப் பாதுகாப்புக்காக நிற்பார்கள்.
மனிதனை நினைக்கின்ற ஆட்சி இது!
இப்பொழுது, விநாயகர் சிலை செய்பவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், ‘‘நிறைய விநாயகர் சிலையை செய்துவிட்டோமே'' என்று சொன்னார்கள்.
பெரியார்தான் சொன்னார், ‘‘கடவுளை மற - மனிதனை நினை’’ என்று. நம்முடைய முதலமைச் சருடைய அணுகுமுறையைப் பாருங்கள், விநாயகர் வைப்பதற்கு அனுமதியில்லாததால், விநாயகர் சிலை தயாரிப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்குப் பதில் 10 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று சொன்னார். மனிதனை நினைக்கின்ற ஆட்சி இது.
அந்த அடிப்படையில், பிள்ளையார் அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. இங்கே கூலிக்கு ஆள்களைப் பிடித்தார்கள்; 10 அடியில் வைத்தால், இவ்வளவு பணம்; 20 அடியில் வைத்தால் இவ்வளவு பணம் என்றார்கள். வடநாட்டுப் பணம் விளையாடியது. பிறகு அது கல கலகத்துப் போனது. ஆனாலும், அதை வைத்து இப் போது வித்தை காட்டுகிறார்கள். இதுதான் ஹிந்துத்துவா.
அதேபோன்று வடநாட்டில் இராமர் கோவில் - இராமரை வைத்து அரசியல் செய்கிறார்கள். அயோத் தியை சுற்றி 700 இராமர் கோவில்கள் இருக்கின்றன.
‘தி வீக்' பத்திரிகையில் படத்தோடு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். பிறகு ஏன் பெரிய இராமரை வைக்கிறார்கள் என்று கேள்வி கேட்க வேண்டாமா? கொள்கை அடிப்படையில் நீங்கள் செய்கிறீர்கள் அல்லவா? நீங்கள் செய்தால், அது தெய்வீகம்.
திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம்
அமெரிக்காவில் டிஸ்னி வேர்ல்டு என்று இருப்பதைப் போன்று - திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்தில், தந்தை பெரியாருக்கு 95 அடி உயர சிலை மட்டுமல்ல - கோளரங்கம் இருக்கும்; குழந்தைகள் பூங்கா இருக்கும்; கண்காட்சியகம் இருக்கும்; படகு சவாரி செய்யும் இடம்- மிகப்பெரிய அளவிற்கு திராவிட இயக்க வரலாற்றையே தெரிந்துகொள்ளக்கூடிய அள விற்கு இருக்கும்.
இந்தியாவில், தமிழ்நாட்டிற்குச் சென்றால் பார்க்க வேண்டியதில் முதல் இடம் எது என்று சொன்னால், திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் என்று எல்லோரும் நினைக்கக்கூடிய அளவில், அத்தனை அம்சங்களும் ஒரே இடத்தில் இருக்கக்கூடிய அளவிற்குத் திட்டமிட்டு, செயல்படுத்தப்படவிருக்கிறது. எனவே, அது எல்லோருக்கும் பயன்படக்கூடியது. எதிர்க்கின்றவர்களின் பேரப் பிள்ளைகளும் அதனை சுவைப்பார்கள்.
ஆகவே, இராமரை வைத்துக்கொண்டு அரசியலை இங்கே நடத்த முடியவில்லை. கமண்டலத்தைத் தூக்கிக் கொண்டு அரசியலை இங்கே நடத்த முடியவில்லை.
மண்டல்தான் இன்றைக்கு நிற்கிறார். வி.பி.சிங் சொன்னாரே, மண்டல் காற்று வரும். அது சாதாரணமாக எப்பொழுதும் அடித்துக்கொண்டே இருக்கும் என்று சொன்னார்.
ஜாதியை ஒழிக்காமல், தீண்டாமையை ஒழிக்க முடியுமா?
அதேபோல, சமூகநீதியினுடைய தத்துவம்- ஜாதியை ஒழிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்; தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்று சொல்வார்கள்.
ஜாதியை ஒழிக்காமல் எப்படி தீண்டாமை ஒழிக்கப் படும்? எனவே, அந்த அடிப்படையை எடுத்துச் சொன்னோம்.
ஜாதி வர்ணம் வேறு; ஜாதி வேறு. ஜாதி இருக்க வேண்டும். ஜாதியை ஒழிக்கக் கூடாது. ஜாதி இருக்க வேண்டும்; ஜாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால், அது கூடாது. எல்லாவற்றிலும் வித்தை காட்டுகிறார்கள்.
ஆகவேதான் நண்பர்களே, இந்தப் புத்தகத்தில் எல்லா தகவல்களும் இருக்கின்றன.
எழுச்சித் தமிழர் உரையாற்றும்பொழுது சொன்னா ரல்லவா, இந்திய அரசமைப்புச் சட்டம் உருவானபோது, உலகமே பாராட்டியது. அரசமைப்பினுடைய முன்பகுதி யான சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்தைப்பற்றி சொல்லும்பொழுதுகூட, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஓர் அற்புதமான கருத்தைச் சொன்னார்.
புத்தருடைய கொள்கையிலிருந்து எடுத்த கருத்துதான்
‘‘நிறைய பேர் நினைக்கிறார்கள், சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்தை - பிரெஞ்ச் புரட்சியிலி ருந்து எடுத்தேன் என்று; இல்லை, நான் இந்த மூன்றையும் எடுத்தது புத்தருடைய கொள்கையிலிருந்து எடுத்த கருத்துதான்'' என்று அம்பேத்கர் கூறினார்.
அரசமைப்புச் சட்டம் வந்தவுடன், ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையில் தலையங்கம் ஒன்றை எழுதுகிறார்கள்.
‘‘இந்த அரசமைப்புச் சட்டம் மிகவும் மோசமானது; இது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல; ஏனென்றால், மனுதர் மத்தையே அது மறந்துவிட்டது. இந்த அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மம்தான் இருக்கவேண்டும்'' என்று எழுதினார்கள்.
எனவே, குலதர்மம் ஆட்சி செய்வதா? இதுதான் அவர்களுடைய திட்டங்கள்.
எனவேதான், அவர்கள் முகப்பில் வேறு இருக்கும்; முகமூடி போட்டிருப்பார்கள்; உள்ளே வேறு சங்கதிகள் இருக்கும்.
வளர்ச்சி, வளர்ச்சி என்று சொன்னார்களே, என்ன வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது?
வித்தை காட்டுவதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். 2014 இல் என்ன குரல் கொடுத்தார்கள், ‘‘சப்கா காத்; சப்கா விகாஸ்'' - ‘‘வளர்ச்சி, வளர்ச்சி'' என்று சொன்னார்கள். குஜராத் மாடல் என்று ஊடகங்கள் பெரிதுபடுத்தின. அங்கே எத்தனை பேர் இறந்து போனார்கள்? என்ன நடந்தது? என்பதெல்லாம் வேறு விஷயம்.
ஆனால், நாட்டில் இன்றைக்கு என்ன வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது?
வாஜ்பேயி பிரதமராக இருந்தபொழுது, விற்பதற்காக ஒரு அமைச்சரை நியமித்திருந்தார். மோடி காலத்தில், விற்பதைவிட, அடமான இலாகாதான். இதில் என்ன வளர்ச்சி இருக்கிறது.
இரண்டாம் முறையாக பிரதமராகப் பதவியேற்கிறார் மோடி. அந்தப் பதவி விழாவினை தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள்; உறுதிமொழியை சொல்லிவிட்டு, அங்கே இருந்து நேராக நடந்து செல்கிறார். அங்கே ஒரு கல்வெட்டு இருக்கிறது; அது அரசமைப்புச் சட்ட கல்வெட்டு - அதற்கு முன்பாக நின்று கும்பிட்டு, முட்டிப் போட்டு கும்பிட்டுவிட்டு, அரசமைப்புச் சட்டத்தை வணங்குகிறேன் என்று.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வேதனை!
நேற்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, முக்கிய நீதிபதிகள் எல்லாம் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?
‘‘எங்களுடைய - உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஒன்றிய அரசு மதிப்பதில்லை. இதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றால், அதற்கு ஒன்று, டிரிபியூனலை மூடவேண்டும்; இரண்டாவதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒன்றிய அரசின்மீது தொடரவேண்டும்'' என்று சொன்னார்கள்.
இதுதான் அரசமைப்புச் சட்டத்தை மதிப்பதா?
அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்துக்கொண்ட பிரமாணமா?
ஆகவேதான் நண்பர்களே, முன்னால் பார்த்தால் நாய்க்கர் குதிரை; பின்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை என்று பழமொழி சொல்வார்கள்.
அதுபோன்று, எல்லாவற்றிலும் வேஷம் போடுவார் கள்; எல்லா இடங்களிலும் இரட்டை வேடம் போடு வார்கள்.
அஜெண்டா வேறு;
ஹிடன் அஜெண்டா வேறு!
எனவேதான், அஜெண்டா வேறு; ஹிடன் அஜெண்டா வேறு. இதை விளக்குவதுதான், ‘‘ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை'' புத்தகம்.
எனவே தோழர்களே, நீங்கள் படித்தால் மட்டும் போதாது; மற்றவர்களையும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வைத்து, புரிய வையுங்கள்.
தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடியது; தமிழ் மண்தான், பெரியார் மண்தான் சமூகநீதி மண். பெரியாருடைய ஆயுதம்தான், எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஆயுதம். அதை ஏந்துவதற்கான அறிவாயுதம் இந்த நூல் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி,
நம்முடைய அழைப்பை ஏற்று வந்த அருமைத் தோழர்கள் தயாநிதி மாறன் எம்.பி., அவர்களானாலும், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர் களானாலும், நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் பரந் தாமன் அவர்களானாலும், இராஜீவ் காந்தி அவர்க ளானாலும் எல்லோருக்கும் நம்முடைய :அன்பான நன்றியை, ஆசிரியர் என்கிற முறையில் சொல்லுகிறேன்.
கரோனாவைவிடவும்
மிகவும் ஆபத்தானது ஆர்.எஸ்.எஸ்.
இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் - பிறருக்கு அளியுங்கள் - பரப்புங்கள் - எச்சரிக்கையாக இருங்கள் - கரோனாவைவிடவும் மிகவும் ஆபத்தானது ஆர்.எஸ்.எஸ். - மதவெறி, நோயைவிட ஆபத்தானது.
நோய் வந்தால் நீங்கும் - மதவெறி வந்தால் அவ்வளவு சீக்கிரம் போகாது. இதற்கு ஒரே ஒரு மருந்து, பெரியார் என்கிற ஈரோட்டு மருந்தைத் தவிர, வேறு மருந்து கிடையாது.
அந்த மருந்தினுடைய குப்பிதான் இந்தப் புத்தகம் என்பதை எடுத்துச் சொல்லி, விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக