• Viduthalai
நியூஸ் 18 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
சென்னை, அக்.5 மொழியால் தமிழன்; வழியால் -விழியால் திராவிடன். ‘நீட்' சட்டப் போராட்டம் - மக்கள் போராட்டம் போன்றவற்றால் வெற்றியைக் கொண்டுவந்து சேர்க்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியாரே பொதுவாழ்க்கைக்கு வந்தார்!
நெறியாளர்: பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார், அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: தந்தை பெரியார் மறைந்தார் என்று சொல்வதற்கில்லை; அவர் நிறைந்தார் நெஞ்சங்களில் என்று சொல்வதற்கான அடையாளம்.
சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் பொதுவாழ்க்கைக்கே வந்தார். சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதே சமூகநீதிக்காகத்தான் காங்கிரசைவிட்டு வெளியே வந்தார்.
சமூகநீதிக்காகத்தான் சுயமரியாதை இயக்கத்தை ஆரம் பித்தார்; திராவிடர் கழகத்தை ஆரம்பித்தார்.
எனவே, அவருடைய மிக முக்கியமான இலக்கு என்பது சமூகநீதி. அதிலே மிகப்பெரிய அளவிற்கு வெற்றியை பெற்றார். சமூகநீதியின் ஆட்சியின் தொடர் ஆட்சியாக வந்திருக்கின்ற நிலையில், இன்றைய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தந்தை பெரியார் பிறந்த நாளை, சிறப்பாக சமூகநீதி நாளாகவே அதை அறிவித்து ஒரு பிரகடனத்தை, உறுதிமொழியை எடுக்க வேண்டும் அந்நாளில் என்று அவர் அறிவித்திருப்பது எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது; நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெற்றிருக்கிறோம்.
வ.உ.சி., பாரதியாரை இருட்டடிப்பு செய்யக்கூடாது!
நெறியாளர்: தமிழக பா.ஜ.க. என்ன சொல்கிறார்கள் என்றால், பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாகக் கொண்டாடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அவருக்கு முன்பாகவே, சமூகநீதிக்குக் குரல் கொடுத்த திரு.வ.உ.சி., திரு.பாரதியார் போன்றவர்களை இருட்டடிப்பு செய்யக்கூடாது என்கிறார்களே?
தமிழர் தலைவர்: சமூகநீதி என்பது அடிப்படையில் கல்வி, உத்தியோகத்தில் இட ஒதுக்கீடு. எனவே, சமூகநீதிக்கு வேறு விளக்கங்கள் சொல்லக்கூடாது.
இட ஒதுக்கீடு என்பதில் திராவிடர் இயக்கம்தான் செய் ததைத் தவிர, நீங்கள் சொல்கின்றவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
பெண்ணுரிமை மற்றவற்றைப்பற்றி பாரதியார் பேசியி ருக்கலாம்; நீதிக்கட்சிக்கு, பாரதியார் எதிராகத்தான் பேசி யிருக்கிறார். நீதிக்கட்சி எல்லோரையும் பிரிக்கிறது என்ப தற்கு, பாரதியார் எழுதிய எழுத்துகள் இன்னும் சாட்சியமாக இருக்கின்றன. சுதேசமித்திரன் போன்ற பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.
அவருடைய முற்போக்குக் கருத்துகளைப்பற்றி நாங்கள் எதுவும் சொல்லவில்லை. சமூகநீதி என்பதில், குறிப்பாக எதைப்பற்றி நாங்கள் அடிப்படையாக சொல்கிறோம் என்றால், எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது- எதைக் கொடுத்தாலும் உத்தியோகத்தைக் கொடுக் கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய அடிப்படை.
ஆகவே, ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு விதமான சூழ்நிலை இருக்கிறது.
10 மாத வி.பி.சிங் ஆட்சியில், மண்டல் பரிந்துரையை அமல்படுத்தினார் என்பதற்காக, அவருடைய ஆட்சியை கவிழ்த்தவர்கள் பா.ஜ.க.வினர்.
மற்றவர்கள் இன்றைக்கு உரிமை கொண்டாடுகிறார்கள் என்றால், இந்தக் கருத்துக்கு செல்வாக்கு வந்துவிட்டது என்பதற்காக உரிமை கொண்டாடுகிறார்களே தவிர, வேறொன்றும் கிடையாது.
பெரியார் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார்
நெறியாளர்: பெரியார் அவர்களை மட்டும் குறிப்பிட்டு சொல்கிறார்கள்; மண்டல் கமிசனைப்பற்றி சொன்னீர்கள். மொரார்ஜி தேசாயிலிருந்து வி.பி.சிங் வரைக்கும் எல் லோருக்கும் அதில் பங்கிருக்கிறது. ஆனால், இந்த இடத்தில் பெரியார் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார் - அடை யாளப்படுத்தப்படுகிறார் என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: ஏனென்று கேட்டால், வி.பி.சிங் அவர் கள் மண்டல் கமிசனை நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தியபொழுது, தந்தை பெரியார் பெயரை முதலில் சொல்லிவிட்டுத்தான், மற்றவர்களின் பெயர்களைச் சொன் னார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பெரியாருடைய பிறந்த நாள் என்பது -சமூகநீதி நாள் என்று சொன்னால், மற்றவர்களுக்கு சமூகநீதியில் பங்கில்லை என்று அர்த்தம் இல்லை.
யார் அதிகமாக அந்த உணர்வுகளைப் பயன்படுத் தினார்கள் - இன்றைக்கு சமூகநீதி என்றால் பெரியார்; பெரியார் என்றால், சமூகநீதி. ஏனென்றால், முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் உருவாவதற்குக் காரணமானவர்.அம்பேத்கர் அவர்களும் சமூகநீதிக்காகப் பாடுபட்டவர்தான்; போராடியவர்தான்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்த வரலாற்றை உருவாக்கி, இந்தியாவிற்கே கொடுத்தவர் என்ற முறையில், சமூகநீதிக்குப் பெரியார்தான். ஆகவேதான், பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாள் என்று அறிவித்தது பொருத்தமானதாகும்.
அமாவாசையைக்கூட அப்துல்காதர் வரவேற்றார்
நெறியாளர்: செப்டம்பர் 17 ஆம் தேதியை சமூகநீதி நாள் என்பதை நாங்களும் வரவேற்கிறோம் என்று பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள்; ஏனென்றால், அன்று பிரத மர் மோடியினுடைய பிறந்த நாள். அவரும் சமூகநீதி காத்த ஒரு காவலர்தான். ஆகவே, அந்த வகையில் நாங்களும் வரவேற்கிறோம் என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்கள் ஒரு சிலர் வரவேற்கிறார்களே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: அமாவாசையில் சில நேரங்களில், இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். எனவேதான், அமாவாசையைக்கூட அப்துல் காதர் வரவேற்றார். அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
அப்படியிருந்தால், இத்தனை ஆண்டு ஏன் அறிவிக்க வில்லை? சமூகநீதிக்கு மோடி என்ன செய்தார்?
27 சதவிகிதத்தை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, நீட் தேர்வுக்கு இவ்வளவுப் பிடிவாதம் காட்டுகிறார்கள். கரோனா தொற்று காலகட்டத்தில், மற்ற தேர்வுகள் எல்லா வற்றையும் தள்ளி வைத்தார்கள். ஆனால், நீட் தேர்வை ஒத்தி வைக்காமல், ஏன் பிடிவாதம் காட்டவேண்டும்?
சமூகநீதியில் அவருக்கு நம்பிக்கை இருந்திருந்தால், இன்றைக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள், அரசமைப்புச் சட்டத் திருத்தத்தினால் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளினால்; அப்படி செய்யாவிட்டால், நீதிமன்ற அவ மதிப்புக்கு ஆளாவோம் என்பதினால்.
இரண்டாவதாக, பெரியாரால் உருவாக்கப்பட்ட சமூகநீதி கருத்து, தமிழ்நாட்டோடு நின்றுவிடவில்லை. அது அகில இந்திய அளவில் வந்துவிட்டது.
உத்தரப்பிரதேசத்தின் உள்ளேயும் இருக்கிறது; அடுத்து உத்தரகாண்ட், குஜராத் போன்ற மாநிலங்களிலும் அந்தக் கருத்து வந்துவிட்டது என்றவுடன்,
எப்படியாவது அந்த வேடத்தையும், அந்தப் பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலை வந்திருக்கிறது.
சமூகநீதிப் போராட்டங்களை குஜராத் முதலமைச்சர் மோடி வரவேற்றாரா?
நெறியாளர்: பிரதமர் மோடியை சமூகநீதி காவலர் என்று அழைப்பதற்கு சில காரணங்களை அவர்கள் பட்டியலிடுகிறார்கள்; பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தது; ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தில் நிறைய பட்டியலினத்தவர், பெண்கள், விவசாயிகளை உள்ளடக்கி விரிவாக்கம் செய்தது; முற்பட்ட வகுப்பினரில், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததும் ஒரு வகையிலான சமூகநீதி - ஆகையால், இதுபோன்ற காரணங்களைப் பட்டியலிட்டு, பிரதமர் மோடி சமூகநீதிக் காவலர்; அதனால், செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதி நாள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: மோடி 2014 இல்தான் பிரதமரானார். அதற்கு முன் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தார். அன்றைய காலகட்டத்தில், குஜராத்தில் நடைபெற்ற சமூகநீதி போராட்டங்களை ஆதரித்திருக்கிறாரா?
முதலமைச்சராக அவர் இருந்தபொழுது, குஜராத் மாடல், குஜராத் மாடல் என்று சொன்னார்களே, சமூகநீதி போராட்டங்களை எப்பொழுதாவது ஆதரித்திருக்கிறாரா? அதை அடக்கியிருக்கிறாரா?
2014 இல் பிரதமராக வந்த மோடி அவர்களுடைய அமைச்சரவையில், எத்தனை பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் அமைச்சராக இருந்தார்கள்?
எஸ்.சி., எஸ்.டி. என்று சொல்லப்படும் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எத்தனை பேர் அமைச்சராக இருந்தார்கள்?
மீண்டும் 2019 இல் பிரதமராக வந்ததிலிருந்து, அண் மைக்காலத்தில் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவைக்கு முன், அவருடைய அமைச்சரவையில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் அமைச்சராக இருந்தார்கள்? எஸ்.சி., எஸ்.டி. என்று சொல்லப்படும் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எத்தனை பேர் அமைச்சராக இருந்தார்கள்?
ஏன் இல்லை?
உத்தரப்பிரதேசத்திலும், மற்ற இடங்களிலும் இப் பொழுது அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.
எங்கு பார்த்தாலும் இப்பொழுது சமூகநீதிக் காற்று வீசுகிறது. ஆகவே, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் அவர்களால் வெற்றி பெற முடியாது என்பதற்காகவும், மற்ற இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவும், அவர்கள் இதனை ஆதரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அரசியல் நிர்ப்பந்தம் - தேர்தல் வாக்கு வங்கி என்பதை மய்யப்படுத்தி கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் அது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் - அந்த மக்களுக்குத் துரோகம் நினைப்பாரா?
நெறியாளர்: பிரதமர் மோடி அவர்களே, பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சார்ந்தவர்தான்; அவர் எப்படி நாட்டில் இருக்கக்கூடிய பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு எதிராக யோசிப்பார்? நீங்கள் சொல்கிறீர் கள், மனுநீதியின் அடிப்படையில் ஒன்றிய அரசு செயல் படுகிறது என்று. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, மிகவும் பின்தங்கிய ஒரு நிலையில் இருந்து, பிரதமராக உயர்ந்தவர், எப்படி அந்த மக்களுக்குத் துரோகம் நினைப் பார் என்று கேட்கிறார்களே?
தமிழர் தலைவர்: அந்த நினைப்பு மோடிக்கு, அவர் முதலமைச்சராக இருந்தபொழுது வந்ததா?
பிரதமராக அவர் முதன்முறையாக வந்தபொழுது வந்ததா?
இரண்டாம் முறை வெற்றி பெற்றாரே, அப்பொழுது வந்ததா?
நீட் தேர்வு, ஏழை, எளிய மக்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், சமூகநீதிக்கு விரோதமாகவும் இருக்கிறது என்பதைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லி, தொடர்ந்து நாடாளுமன்றம் குரலெழுப்பி, வாதாடினார்களே, அப்பொழுது அவருக்கு இந்தச் சிந்தனை வந்ததா? வரவில்லையே!
இப்பொழுதுதானே வந்திருக்கிறது.
நீங்கள் கேட்கலாம், பின்னாளில் வரக்கூடாதா? என்று.
வரட்டும், அப்படி வந்தால், எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்வோம்.
ஆனால், அதேநேரத்தில், உண்மையான, உள்ளார்ந்த எண்ணத்தில்சிந்தனை இருக்கிறது.
அவருடைய அடிப்படை கொள்கை - ஆர்.எஸ்.எஸ். கொள்கை அதுவல்ல. ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ். உத் தரவுப்படி நடக்கவேண்டியவர்கள்தான் அவர்கள்.
இப்பொழுது ஆர்.எஸ்.எசே அதனை லாவகமாக, தேர்தல் யுக்தியாக, வித்தையாகப் பயன்படுத்துகிறது.
பெரியாருக்கு 135 உயர அடி சிலை தேவையா என்போருக்குப் பார்வைக் கோளாறுதான்!
நெறியாளர்: அண்மையில் பெரியார் சிலை விவகாரம், பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நிறைய பேர் விமர்சனக் கணைகளை உங்களை நோக்கி வீசினார்கள். குறிப்பாக அதில் ஒரு கேள்வியை கேட்டிருந்தார்கள், பெரியார் சிலையை, வள்ளுவர் சிலையைவிட உயரமாக அமைப் பதற்கான நோக்கம் என்ன? 135 அடி உயர சிலைக்கு என்ன நோக்கம் என்று கேட்கிறார்களே?
தமிழர் தலைவர்: முதலில் அவர்களுக்குப் பார்வைக் கோளாறு. பெரியார் சிலை, வள்ளுவர் சிலையை விட உயரமாக இருக்கக்கூடாதா? அப்படி இருந்தாலும், கொள்கை ரீதியாக தவறு கிடையாது.
ஏனென்றால், வள்ளுவரைத் தாண்டி ஒரு அறிவாளி வரக்கூடாதா என்ன?
அவர்களுடைய பார்வையில் கோளாறு என்று ஏன் சொன்னேன் என்றால்,
சிலையின் உயரம் 95 அடி; உயரத்தை வைத்து ஒரு தலைவருடைய சிலையை அளப்பதில்லை. இது பெரி யாருடைய அடையாளம்; வரலாற்று ரீதியாக 95 ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறார் என்பதற்காக 95 அடி உயர சிலை.
அந்த சிலை உயரமாகவும், மிகச் சிறப்பாகவும், அறிவியல்பூர்வமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் 40 அடி பீடம் அமைக்கப்படுகிறது.
பெரியார் என்ன செய்தார் என்பதை வரலாற்று ரீதியாகப் பாருங்கள்.
பெரியார் உயிரோடு இருந்திருந்தால் கண்டித்திருப்பாராமே!
நெறியாளர்: பெரியாருக்கு இந்த அளவிற்குப் பிரம் மாண்டமாக சிலை அமைப்பதை, அவர் உயிரோடு இருந் திருந்தால், அவரே கண்டித்திருப்பார், தண்டித்திருப்பார் என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: அந்தப் புத்திசாலிகளுக்கெல்லாம் ஓர் அற்புதமான பதில், பெரியாருக்குத் திண்டுக்கல்லில் சிலை திறந்தபொழுது, எனக்கு மட்டும் சிலை வைக்கக்கூடாது; எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் சிலை வைக்கவேண்டும் என்று உரையாற்றினார்.
கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்கவேண்டும்; வீரமணிக்கு சிலை வைக்கவேண்டும்; மதுரை முத்துக்கு சிலை வைக்கவேண்டும் என்று பேசி, அந்தப் பேச்சை, வைகோ அவர்கள் விருத்தாசலம் சிலை திறப்பு விழாவில் உரையாற்றும்பொழுது எடுத்துக்காட்டி உரையாற்றி இருக்கிறார்.
ஆகவே, ஒவ்வொரு பெரியார் சிலைகளும், பெரியாரை முன்னிலைப்படுத்தி திறக்கப்பட்டு இருக்கிறது.
திருச்சியில், பெரியாருக்கு முதல் சிலை-
தருமபுரியில் இரண்டாவது சிலை
பெரியார் இல்லாமல், பெரியார் வாழ்ந்த காலத்தில், பெரியார் சிலை திறக்கப்படவில்லை. ஈரோடு உள்பட. இந்த வரலாறே தெரியாதவர்கள், விஷமத்தனமாக, பெரியாரை புரிந்துகொண்டவர்கள் போன்று, வித்தியாசமாக பெரியார் உயிரோடு இருந்திருந்தால் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார் என்று சொல்கிறார்கள்.
நூறு கோடி ரூபாயில் பெரியாருக்கு சிலையல்ல!
நெறியாளர்: நூறு கோடி ரூபாய் அளவிற்கு சிலை வைப்பது...
தமிழர் தலைவர்: இது தவறான தகவல். நூறு கோடி ரூபாயில் சிலை அல்ல. அதுவே, அறியாமை, அரை வேக்காட்டுத்தனம்.
ஒருவரைப்பற்றி விமர்சனம் செய்யும்பொழுது, அது எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டியது ஒவ்வொருவருடைய கடமை.
பெரியார் உலகம் என்பது அந்தத் திட்டம். அது அய்ந்து கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.
எப்படி அமெரிக்காவில் டிஸ்னிவேர்ல்டு என்று இருக்கிறதோ, அதுபோன்று, பெரியார் உலகத்தில், பெரியா ருடைய வரலாற்றுக் காவியம் - கோளரங்கம் - ஒலி, ஒளி காட்சி - பெரியார் படகு முகாம் - குழந்தைகள் நூலகம், பெரியவர்களுக்கான நூலகம் - ஆய்வகங்கள் என்று இப்படி ஒவ்வொரு கட்டமாக அமைக்கப்பட்டு, 30 ஏக்கரில் கட்டமைக்கப்பட உள்ளது பெரியார் உலகம்.
அரசாங்கத்தினுடைய திட்டமல்லவே அது. பெரியா ருடைய அறக்கட்டளையின் சார்பாக கட்டமைக்கப் படவிருக்கிறது. அதற்கான நிதியை மக்கள் கொடுக்கிறார்கள்; நன்றி உணர்ச்சி இருக்கின்றவர்கள் கொடுக்கிறார்கள்; நன்றி மறந்தவர்களைப்பற்றி கவலையில்லை. விமர்சனம் செய்கிறவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் நன்றி மறந்தவர்கள் என்கிற அடையாளத்தைத் தவிர, வேறொன்றும் கிடையாது. ஆகவே, அவர்கள் சொல்வதை நாங்கள் பொருட்படுத்தவேண்டிய அவசியமில்லை.
பெரியாரின் சிந்தனைகளை உலகம் முழுவதும் கொண்டு சென்றிருக்கின்றோம்!
நெறியாளர்: பெரியார் என்றால், பெரியார் சிலை மட்டு மல்ல; பெரியாரின் கருத்துகள், பெரியாருடைய சிந்தனைகள் - அந்த சிந்தனைகள் உலகம் முழுவதும் உள்ள வெகுஜன மக்களிடம் போய்ச் சேருவதற்கு என்ன செய்தீர்கள்? வெறும் சிலை வைத்தால் மட்டும் போதுமா? அவருடைய சிந்தனைகள்தானே போய்ச் சேரவேண்டும் என்று கேட்கிறார்களே?
தமிழர் தலைவர்: அப்படி கேட்கிறவர்கள் என்ன செய்தார்கள் என்பதை முதலில் சொல்லிவிட்டுக் கேட் கட்டும். எங்களைவிட அதிகம் செய்திருந்தால், கேட்கலாம்.
பெரியாருடைய கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டு செலுத்தியிருக்கிறோம். வருகின்ற 17 ஆம் தேதி, ஜப்பான் மொழியில், பெரியாருடைய புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படவிருக்கின்றது.
இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் பெரியாருடைய சிந்தனைகள் பரவியிருக்கின்றன.
பிரெஞ்சு நாட்டில், பெரியாருடைய ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' புத்தகம் இருக்கிறது.
இவற்றையெல்லாம் திட்டமிட்டு, விஷமத்தனமாக பெரியாருடைய கருத்துகளை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்று கேட்கிறார்கள்.
அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர, வேறொன்றும் எங்களால் செய்ய முடியாது.
யார் தமிழர்கள்?
நெறியாளர்: தமிழ்நாட்டில் எல்லாத் தரப்பு மக்களின் வாக்குகளையும் வாங்கிக்கொண்டு, திராவிடக் கொள்கை களுக்கு மட்டுமே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. தமிழன் என்று சொல்லிவிட்டு, திராவிடன் ஸ்டாக் என்று ஆட்சிக்கு வந்த பிறகு, மாற்றம் பெறுவது என்பது முரண்பாடான நிலை அல்லவா என்று கேட்கிறார்கள்?
தமிழர் தலைவர்: இந்தக் கேள்வியை கேட்கிற, பிரபலமான தமிழ்த் தேசியவாதிகளைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி.
யார் தமிழர்கள் என்பதை அவர்கள் வரையறுத்துச் சொல்லட்டும். பிறகு தமிழர்கள் என்ற அடையாளம் போய்விட்டதா என்பதைப்பற்றி சொல்வோம்.
எங்களைப் பொறுத்தவரையில், தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல.
திராவிடம் என்று சொல்லுகின்ற நேரத்தில், அது ஒரு பண்பாடு - மொழி. திராவிடம் என்பது இப்பொழுது புதிதாக உருவானதல்ல.
ஆரியம் - திராவிடம் என்று வருகிறபொழுது, இரு வேறு பண்பாடுகள். அந்த இருவேறு பண்பாட்டு அடிப்படையில்தான், முரண்பாடு என்று சொல்வதே தவறு.
அவர்கள் அடிப்படையிலேயே தவறு செய்கிறார்கள்.
தேவநேயபாவாணர், புரட்சிக்கவிஞர் போன்றோர் சொன்னதுபோன்று, திராவிடம் என்பது தமிழின் பிரிவுதான் - அதைப் புரியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மிகப்பெரிய ஆய்வறிஞர்களாக இருக்கக்கூடிய வர்களே சொல்லியிருக்கிறார்கள்.
ஆரியத்திற்கு நேர் எதிரானதுதான் திராவிடம்!
நெறியாளர்: பிரிவை ஏன் நாங்கள் பயன்படுத்தவேண்டும் என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: பிரிவு அல்ல - அதனுடைய வளரச்சி. இன்னுங்கேட்டால், எங்களைப் பொறுத்தவரையில், இன் னும் அதிகமான அளவிற்கு தத்துவ ரீதியாக, லட்சிய ரீதியாக இருப்பது திராவிடம் என்பது.
ஆரியம் என்பதற்கு நேர் எதிரானது என்ன?
திராவிடம்.
ஆரியம் - வருணாசிரம தர்மத்தைச் சொல்லுவது.
திராவிடம் என்பது அனைவருக்கும் அனைத்தும் - சமம் என்று சொல்வது.
தத்துவ ரீதியாக, இட ஒதுக்கீடு, சமூகநீதி, கல்வி இப்படி எல்லாவற்றையும்.
ஏனென்றால், இன்க்ளூசிவ் - எஸ்க்ளூசிவ் என்று வரக்கூடிய அளவிற்கு இதைச் சொல்கிறோம்.
அந்தப் பார்வை எங்களுக்குத் தெளிவாக இருக்கிறது.
ஆகவேதான், பண்பாட்டு அடிப்படையில், திராவிட நாகரிகம், திராவிட மொழி அதுதான் அடிப்படை.
மொழியால் தமிழன்; வழியால் - விழியால் திராவிடன்!
நெறியாளர்: உங்களை நோக்கி ஒரு விமர்சனம் சொல் கிறார்கள்; தமிழர் தலைவர் என்று உங்களை அடைமொழி யிட்டு அழைக்கிறார்கள். நீங்கள் தமிழர் திருநாள் பொங் கலன்று, திராவிடர்த் திருநாள் என்று கொண்டாடுகிறீர்கள். தமிழர் தலைவர் ஏன் திராவிடர்த் திருநாளைக் கொண் டாடுகிறார்; தமிழர் திருநாளைக் கொண்டாடலாமே என்று கேட்கிறார்கள்?
தமிழர் தலைவர்: மனுதர்மத்தில், விவசாயத் தொழில் என்பது பாவகரமான தொழிலாகும். திராவிடப் பண்பாடு, திராவிடத்தினுடைய தன்மை, திராவிட மொழி, திராவிட நாகரிகம் என்ற அடிப்படையில் திராவிடர்த் திருநாள்.
இதில் முரண்பாடே இல்லை. முரண்பாடு போன்று மற்றவர்கள் காட்டுகிறார்களே, தவிர வேறொன்றும் இல்லை.
நான் மொழியால் தமிழன். மொழி பேசும்போது நான் தமிழ் மொழி பேசுகிறேன். வழியால் திராவிடன் - விழியால் திராவிடன் என்பதுதான் மிகவும் முக்கியம்.
வழி - விழி - பண்பாடு - நாகரிகம் - கலை இவ்வளவுதான். இதைப் போட்டுக் குழப்பவேண்டிய அவசியமேயில்லை.
அரசியலுக்காக, குறை சொல்வதற்காகச் சொல் கிறார்களே, தவிர, வேறொன்றும் இல்லை.
(தொடரும்)
காலத்தால் முன்னோடியாக இருந்தவர்கள் பாடினார்கள், பேசினார்கள் - இயக்கம் நடத்தினார்களா?
• Viduthalaiதந்தை பெரியார் இயக்கம் அமைத்து கொள்கைக்காகப் போராடினார்
சென்னை, அக்.6 காலத்தால் முன்னோடியாக இருந்தவர்கள் பாடினார்கள், பேசினார்கள் - இயக்கம் நடத்தினார்களா? தந்தை பெரியார் இயக்கம் அமைத்து கொள்கைக்காகப் போராடினார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அயோத்திதாசரே திராவிடர்தானே!
நெறியாளர்: பெரியார் மண் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இது வள்ளுவரின் மண் - அவருக்கு முன்பாக அயோத்திதாசர் சமூகநீதிக்குக் குரல் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: அயோத்தி தாசரே திராவிடர் என்று சொல்லியிருக்கிறாரே, இதற்கு என்ன பதில்?
பாடினார்கள், பேசினார்கள் - இயக்கம் நடத்தினார்களா?
நெறியாளர்: பெரியார் மண் என்று நீங்கள் அழைப் பதே முதலில் தவறு. பெரியாருக்கு முன்னதாகவே சமூகநீதிக்கோ, இந்த மண்ணுக்கோ, மக்களுக்காகவோ பாடுபட்டவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, பெரியார் மண் என்று அடையாளப்படுத்துவது தவறு என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: அதாவது, முன்னோட்டமாக எத்தனை பேர் இருப்பார்கள். இராமலிங்கனார் ஜாதி ஒழிப்பைப்பற்றி பேசினார்; சித்தர்கள் ஜாதி ஒழிப்பைப் பற்றி பேசினார்கள்.
நடைமுறையில் கொண்டு வந்து, இன்றைக்கு மக்கள் மத்தியில் ஏராளமான போரட்டங்களை நடத்தி, அந்த ஒடுக்கப்பட்ட ஜாதிக்காரரைக் கொண்டு வந்து, உயர்நீதிமன்ற நீதிபதியாக்கி, உச்சநீதிமன்ற நீதிபதியாக்கி - நடைமுறையில் ஆக்கியது யார்?
அதுதானே மிகவும் முக்கியம்.
பாடினார்கள், பேசினார்கள் - இயக்கம் நடத்தினார் களா?
94 ஆண்டுகள் வரையில் போராட்டங்களை நடத்தி னார்களா?
இந்தக் கேள்விகளையெல்லாம் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள்.
ஆகவே, அவர்களை நாங்கள் குறைத்து மதிப்பிட வில்லை. அவர்கள் முன்னோடிகள். முன்னோட்டம் இருக்கலாம். ஆனால், நடைமுறையில், கட்டடத்தை எழுப்பவேண்டும் அல்லவா! அதுதானே மிகவும் முக்கியம்.
அவர்களை நாங்கள் மறைக்கவேண்டிய அவசிய மில்லையே - அவர்களுடைய தொண்டை நாம் குறைக்கவில்லையே! அவர்கள் காலத்தால் முன்னோடி யாக இருக்கலாம் - ஆனால், அவர்கள் நடைமுறையில் செய்தது என்ன?
பெரியார் இயக்கம் அமைத்தார்; கொள்கைக்கும் அவரே - அமைப்புக்கும் அவரே - போராடியதும் அவரே - எல்லா வகையிலும் செய்திருக்கிறார். அதை எப்படி குறை சொல்ல முடியும்?
குறை சொல்கிறவர்களுக்குக் குறைந்த புத்தி இருக் கிறது என்று அர்த்தமே தவிர வேறொன்றும் கிடையாது.
அண்ணா சாலையில், மீண்டும் கலைஞருக்கு சிலை
நெறியாளர்: அண்ணா சாலையில் கலைஞருக்கு சிலை என்கிற அறிவிப்பு வந்திருக்கிறது. அந்த சிலையை திராவிடர் கழகம் வைக்கப் போகிறதா?
தமிழர் தலைவர்: கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும். ஏற்கெனவே அண்ணா சாலையில் அவ ருடைய சிலை இருந்தது. அந்த அண்ணா சாலையில், கலைஞருக்கு மீண்டும் சிலை வைக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரதானமான கோரிக்கையே தவிர,
ஒருவேளை அரசே முடிவு செய்து, நாங்களே வைக் கிறோம் என்று சொன்னால், சிலை அமைக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.
நாங்கள் அனுமதி கேட்டிருக்கிறோம். ஏற்கெனவே சிலை இருந்த இடத்தில், மீண்டும் சிலை வைக்கவேண்டும் என்று. அந்த அரசாணை இன்னும் ரத்து செய்யப் படவில்லை.
மற்ற தலைவர்களுக்கெல்லாம் அண்ணா சாலையில் சிலைகள் இருக்கின்றன. அரசு என்ன முடிவு செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
முதலமைச்சர் சொன்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், அண்ணா சாலையில் கலைஞர் சிலை அமைக்கப்படும். அதுதான் எங்களுக்கு அடிப்படை யானது. நாங்கள் சிலை வைக்கிறோமா? அரசாங்கம் சிலை வைக்கிறதா? என்பதில் எங்களுக்கு உரிமைப் பிரச்சினையெல்லாம் கிடையாது.
நாங்கள் வைப்பதைவிட, ஒரு அரசாங்கம் வைத்தால், அரசாங்கம் எல்லோரையும் சார்ந்தது. ஆகவே, அதனால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான்.
எங்களுக்கு அனுமதி கொடுத்தால், அதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
சமூகநீதி சரித்திர நாயகருக்கும் - சமூகநீதி காத்த வீராங்கனைக்கும் என்ன வேறுபாடு?
நெறியாளர்: அண்மையில், தமிழ்நாடு முதலமைச் சருக்கு ‘‘சமூகநீதியின் சரித்திர நாயகர்'' என்ற பட்டம் வழங்கியிருந்தீர்கள்; சமூகநீதியின் சரித்திர நாயகருக்கும், சமூகநீதி காத்த வீராங்கனைக்கும் என்ன வேறுபாடு?
தமிழர் தலைவர்: இரண்டிற்கும் போட்டியும் கிடையாது; எது உயர்ந்தது? எது தாழ்ந்தது? என்பதும் கிடையாது. எது சூப்பர்லேட்டிவ் டிகிரி, எது மற்றது என்பதும் கிடையாது.
தமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய பெருமை உண்டு. பெரியார் மண்ணுக்கு, சமூகநீதி மண்ணுக்கு.
என்ன அந்த பெருமை என்றால், கட்சிகள் மாறலாம்; முதலமைச்சர்கள் மாறலாம்; ஆட்சிகள் மாறலாம்; ஆனால், சமூகநீதியினுடைய போக்குக்குத் தடை ஏற்படாது.
காமராஜர் காலத்தில் 25 சதவிகிதம்
கலைஞர் காலத்தில் 35 சதவிகிதம்
அதேபோன்று 16 சதவிகிதம் - 18 சதவிகிதம்
69 சதவிகிதம்
இப்பொழுது 69 சதவிகிதம் பாதுகாக்கப்பட்டு, ஒன்றிய அரசு உத்தியோகங்களில் இன்னின்ன இட ஒதுக்கீடு - பெண்களுக்கு இன்னின்ன ஒதுக்கீடு என்று வளர்ந்துகொண்டே இருக்கிறது.
எனவே, இந்த சரித்திரத்தைப் பாதுகாக்கக் கூடிய ஆட்சியாகவும், சரித்திர நாயகராகவும் இருக்கிறார்.
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு இருக்கிறதா?
நெறியாளர்: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று பணி நியமன ஆணைவரை வந்து, அது அடுத்த கட்டத்திற்குப் போயிருக்கிறது; பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு இருக்கிறதா?
தமிழர் தலைவர்: ஆமாம். அகற்றப்பட்டதினால்தானே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகப் பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் கடைசிப் போராட்டமாகும்.
இதே திடலில்தான். அதற்குக் களம் காணவேண்டும் என்று சொன்னார்கள். அந்தப் போராட்டத்தை அறிவித்தார். அய்யா அவர்கள் மறைந்துவிட்டார். அன்னை மணியம்மையார் நடத்தினார்கள்; நாங்கள் தொடர்ந்து அந்தப் போராட்டத்தை நடத்தினோம்.
கலைஞர் அவர்கள், தந்தை பெரியாருக்கு இறுதி மரியாதை - அரசு மரியாதை செய்தபொழுது, தந்தை பெரியாருக்கு அரசு மரியாதையைத்தான் என்னால் கொடுக்க முடிந்தது - ஆனால், அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லை என்று உரு வகப்படுத்தினார்.
எது நெஞ்சில் தைத்த முள்?
அந்த ஆசை, அந்த எண்ணம், அந்த விழைவு நிறைவேறாத ஒரு சூழல்.
எனவே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்குப் பணி நிய மனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ஆகவே, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு விட்டது.
ஏற்கெனவே நடைமுறையில் எங்கே இருக்கிறது?
நெறியாளர்: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது ஏற்கெனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக் கூடியதுதான். இப்பொழுது பணி நியமன ஆணை கொடுத்து வேண்டுமென்றே இவர்கள் செய்ததுபோல காட்டுகிறார்கள் என்று பா.ஜ.க.வினர் சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: ஏற்கெனவே நடைமுறையில் எங்கே இருக்கிறது? பூசாரிகள் இருப்பதா? அர்ச்சகர் அல்ல - பூசாரி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள், முதலில் அதற்குப் பதில் சொல்லட்டும்.
எந்தக் கோவிலிலாவது அர்ச்சகராக ஆதிதிராவிடர் இருந்தாரா? பெண்கள் இருந்தார்களா?
ஏன் வரலாற்றுத் திரிபுவாதம் செய்கிறீர்கள்? யார் சொன்னார்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது என்று.
காளியாத்தா கோவிலிலும், மாரியம்மன் கோவிலிலும் கூட வருமானம் வருகிறது என்றவுடன், உள்ளே புகுந்துவிட்டார்கள். யார் உள்ள போகக்கூடாதவனோ அவன் உள்ளே புகுந்து விட்டான். வருமானம் வந்தால், உள்ளே போய்விடுகிறார்கள்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற பெயரில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை சொல்லுங்கள்.
காளியாத்தா கோவிலிலும், மாரியாத்தா கோவிலிலும் மணி அடிப்பவர் அர்ச்சகரா? அவருக்கு அர்ச்சகர் என்ற பெயர் உண்டா?
அவருடைய பெயர் பூசாரி என்கிறார்கள்.
நம்மாள் காளியத்தா கோவிலில் இருந்தால், ‘டேய்' என்று அழைப்பார்கள். இவர்கள் அர்ச்சகர்களாக இருந் தால், ‘சாமி' என்பார்கள். இதில் வித்தியாசம் இருக்கிறதா, இல்லையா?
கோவில் கட்டியவர்கள் யார்?
சிலையை அடித்தவர் யார்?
பெரிய மணியை நம்மாட்களிடம் கொடுத்துவிட் டார்கள்; சின்ன மணியை அவன் வைத்துக்கொண்டான்.
பெரியார்தான் சொன்னார், மணி மாறட்டும் என்று. பெரிய மணியை அவன் அடிக்கட்டும்; சின்ன மணியை இவனிடம் கொடு என்றார்.
அந்த முள்ளை அகற்றினார்கள். அதுதான் முள்.
சதி அல்ல- சட்ட விதி!
நெறியாளர்: இன்னொரு சந்தேகத்தையும் எழுப்பு கிறார்கள். கடவுள் நம்பிக்கை அற்றவர்களையெல்லாம் இந்து அறநிலையத் துறையில் அர்ச்சகராக நியமிக் கக்கூடிய சதி நடக்கிறது; அர்ச்சகராகப் பணி நியமனம் பெற்றவர், பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பவர், எப்படி உள்ளார்ந்த உணர்வோடு அர்ச்சகராக செயல்படுவார்; இந்து அறநிலையத் துறையில், கடவுள் நம்பிக்கையற்றவர்களை உள்ளே திணிக்கக்கூடிய சதி நடக்கிறது என்கிறார்களே?
தமிழர் தலைவர்: சதி அல்ல - அதுதான் இப்பொழுது நடக்கவேண்டிய விதி - சட்ட விதி.
எப்படியென்று கேட்டால், முதலாவதாக அடிப் படையில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
கடவுள் நம்பிக்கையற்றவர்கள் யாரும் அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை.
இந்து மதம் என்றால், நாத்திகர் இந்துவாக இருக்க லாமா? இல்லையா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லட்டும்.
ஏன் அர்ச்சகராக இருக்கக்கூடாது.
ஆகமப் பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகராக பணியில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இல்லாத ஒன்றை கற்பனையாக எடுத்துக்கொண்டு பேசினால், அதனால் என்ன பயன்?
பொய் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள்!
நெறியாளர்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், இந்து சமய ஆன்மிகப் பணிகள் நிறைய நடக்கின்றன; பெரியாரின் வழிவந்த தி.மு.க. ஆட்சியில் நிறைய இந்து சமய ஆன்மிகப் பணிகள் நடக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: அப்படியென்றால் நன்றாக ஒன்று புரிகிறது. ஸ்டாலின் முதலமைச்சரானால், கோவில்களை யெல்லாம் மூடிவிடுவார்; ஸ்டாலின் முதலமைச்சரானால், கடவுள்கள் எல்லாம் வெளிநாட்டுக்குப் போய்விடு வார்கள், விசா வாங்காமல் என்று சொன்னது - பொய் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள் அல்லவா!
இந்தக் கேள்விக்கு அதுதானே பதில்!
திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரர்கள் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல!
நெறியாளர்: அவர்கள் ஒப்புக்கொண்டது இருக் கட்டும்; பெரியாரின் வழிவந்த தி.மு.க. ஆட்சியில், நிறைய இந்து சமய ஆன்மிகப் பணிகள் நடக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: எங்கள் இரண்டு பேருக்கும் மத்தியில் நீங்கள் நுழையவே முடியாது. என்ன கேள்வி கேட்டாலும், எங்கள் இரண்டு பேருக்கும் உள்ள ஒற்று மைக்கு மத்தியில் நீங்கள் நுழையவே முடியாது.
ஏனென்றால், எது எங்களைப் பிரிக்கிறது என்பதில் தெளிவு இருக்கிறது.
எது எங்களை இணைக்கிறது என்பதிலும் தெளிவாக இருக்கிறோம்.
ஆகவே, அவர் ஒரு அரசாங்கத்தை நடத்துகிறார். தி.மு.க.விற்கு வாக்களித்தவர்களுக்கும் அவர் முதல மைச்சர்; வாக்களிக்காதவர்களுக்கும் அவர்தான் முதல மைச்சர்.
எல்லோரையும் திருப்தி செய்யக் கூடிய காரியங்களை ஒரு அரசாங்கம் செய்ய முடியாது. சில காரியங்கள் சிலரைத் திருப்தி செய்யும்; சில காரியங்களால் சிலருக்கு அதிருப்தி ஏற்படும்.
அதிருப்தி ஏற்படுவதாலேயோ, மற்ற சங்கடங்கள் வருவதினாலேயோ, முதலமைச்சர் செய்யும் நல்ல காரியங்களையெல்லாம் மறைக்கவேண்டும் என்கிற அவசியமே கிடையாது.
தி.மு.க. என்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தி.க. என்கிற திராவிடர் கழகத்திற்கும் இடையே கொள்கையில் ஒரு கோடு இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரர்கள் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல.
அப்படி இருந்தும், சமூகநீதி, மற்ற விடயங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக செயல்படுகிறது.
அரசியலுக்குப் போனால், சில விஷயங்களில் நீக்குப் போக்குடன் செயல்படவேண்டி இருக்கும்.
ஆகவேதான், தந்தை பெரியார் அவர்கள் அரசி யலுக்குப் போகவில்லை.
நான் எப்பொழுதும் கொள்கைக்காரனாக இருந்தி ருக்கிறேனே தவிர, கட்சிக்காரனாக இருந்ததில்லை என்று சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
நாளைக்கும் திராவிடர் கழகம் அரசியலுக்குப் போகாது. காரணம் என்ன? நாங்களே ஆட்சியில் அமர்ந்தாலும்கூட, சில நீக்குப் போக்குகளை கடைப் பிடித்தாகவேண்டும்.
அந்த நெருக்கடிக்கு ஆளாகக்கூடாது என்பதால் தான், எங்கள் இயக்கம் அரசியலுக்குப் போகாத இயக்கமாகும்.
அமைச்சர் சேகர்பாபு செயல்களை எப்படி பார்க்கிறீர்கள்?
நெறியாளர்: திருவட்டாறு கோவிலுக்கு அமைச்சர் துரைமுருகன் சென்றபொழுது, திரு.கி.வீரமணி அவர் கள் விமர்சித்தார். அமைச்சர் சேகர்பாபு செயல்களை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: ஆமாம், விமர்சித்தோம். ஆனால், இப்பொழுது அமைச்சர் சேகர்பாபுவுக்கு அதுதான் வேலை. கோவில்களில் சிலைகள் எல்லாம் இருக்கின் றனவா? நகைகள் எல்லாம் இருக்கின்றனவா? என்கிற கணக்கெடுக்கிறார்.
திராவிடர் கழகம் கூட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி கொடுத்து, அர்ச்சகர் பணிக்கு அனுப்புங்கள்என்று ஏன் சொல்கிறோம்?
கொள்கை வேறு; உரிமை வேறு என்று பெரியார் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
கடவுள் இல்லை என்று சொல்வது எங்கள் கொள்கை.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பது உரிமை.
ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும் என்கிற குரல்கள் அதிகம் கேட்கிறதே?
நெறியாளர்: தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமிக் கப்பட்டு இருக்கிறார். அவருடைய நியமனத்தை திரு.ஸ்டாலின் அவர்கள் வரவேற்றாலும், தி.மு.க. கூட்டணி யில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி யினர் போன்றோர் சந்தேகக் கண்களோடு பார்க்கி றார்கள். ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும் என்கிற குரல்கள் அதிகம் கேட்கிறதே?
தமிழர் தலைவர்: ஆளுநர் என்று சொல்வதே பொது வாக தொடக்கத்தில் இருந்தே - ஒரு உண்மையான, தத்துவ ரீதியான அடிப்படை தத்துவம் என்னவென்றால், டில்லியினுடைய முகவர்கள்; ஒன்றிய அரசினுடைய முகவர்கள்.
இங்கே இருப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை ஒன்றிய அரசிடம் சொல்பவர்கள்தான்.
இரண்டாவது, ஒன்றிய அரசு என்ன சொல்லுகிறதோ, அதற்குக் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பம் போடுவதுதான் ஆளுநர்களின் பணி என்பது, ஆர்.வெங்கட்ராமன், குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் தெரிந்து போய்விட்டது.
ஆளுநரே பரிந்துரை செய்யாத தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிந்த பழைய வரலாறு.
பர்னாலா அவர்கள் இங்கே ஆளுநராக இருந்த பொழுது, ‘அதர்வைஸ்' என்ற ஒரு சொல்லைக் கண்டுபிடித்து, அப்படி செய்தார்கள்.
புதிதாக ஆளுநராக வந்திருப்பவர், அவர் என்ன வேலை செய்யப்போகிறார் என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஏற்கெனவே இருந்த ஆளுநர், மிக வேக வேகமாக வந்து, நான் எல்லா அரசு அலுவலகங்களையும் ஆய்வு செய்யப் போகிறேன் என்று சொன்னார். வந்த வேகம், போகப் போக இல்லை.
ஏற்கெனவே ஆளுநராக ஒரு அய்.பி.எஸ். அதிகாரி ஆந்திராவில் இருந்திருக்கிறார், வாஜ்பேயி பிரதமராக இருந்தபொழுது.
ஏற்கெனவே அண்ணா போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள், கவர்னர் பதவியே தேவையில்லாத ஒன்று என்று.
ஆனால், அரசமைப்பு சட்டப்படி, ஆளுநர் என்பவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர, அதைத் தாண்டி, வேறு வகையான அளவிற்கு அவர் செல்லக்கூடிய அளவிற்கு நடந்தால், மக்கள் பொறுத் திருந்து பார்ப்பார்கள். அதற்குரிய விளைவுகளை அவர் சந்திக்கவேண்டி இருக்கும்.
நடைபெறவிருக்கின்ற பஞ்சாயத்துத் தேர்தலில், தனியாக நின்று அவர்கள் வென்று காட்டட்டும்
நெறியாளர்: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு.அண்ணாமலை நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார். திராவிடக் கட்சிகளுக்கு இனி தமிழ்நாட்டில் இடமில்லை என்று சொல்லியிருக்கிறார், அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
தமிழர் தலைவர்: வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற பஞ்சாயத்துத் தேர்தலில், தனியாக நின்று அவர்கள் வென்று காட்டட்டும். பிறகு சட்டமன்றத் தேர்தலைப்பற்றி பேசுவோம். உங்கள்மூலமாக நான் சொல்லும் இந்தச் செய்தி அண்ணாமலைக்குப் போகும் என்று நினைக்கிறேன்.
அண்ணாமலைக்கு அரோகரோ என்று போய் விடக்கூடாது, கடைசியில்.
ஏனென்றால், 2026 ஆம் ஆண்டிற்கு ஏன் போகவேண்டும்? இப்பொழுது நடைபெறவிருக்கின்ற ஊராட்சித் தேர்தலில் கூட்டுச் சேராமல் தனித்து நிற்கட்டுமே!
சட்டமன்றத் தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெறுவதற்கு முன்னோட்டமாக, பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறுகின்ற 9 மாவட்டங்களில் தனித்து நின்று வெற்றி பெற்று காட்டட்டுமே!
அல்லது கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் அல்லவா - அந்த நான்கு இடங்களையும் ராஜினாமா செய்துவிட்டு, நாங்கள் தனித்து நின்று வெற்றி பெற்றுக் காட்டுவோம் - உங்களுக்கெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக என்று - அண்ணாமலை சொல்கிறான், மற்றவர்கள் செய்கிறார்கள் என்ற சினிமா வசனம் போன்று ஏதாவது சொன்னால்கூடவரவேற்கலாம்.
ஆசைப்படுவதில் தவறு இல்லை. ஏனென்றால், ஒரு கட்சிக்குத் தலைவராக இருக்கிறார். இதைக்கூட சொல்லவில்லை என்றால், அவர் எப்படி தலைமைப் பதவியில் நீடிப்பார். ஆகவே, அவருக்கு ஆசைப்படு வதற்கு முழு உரிமை உண்டு.
நடைமுறையில் சாத்தியம் உண்டா? என்றால் கிடையவே கிடையாது.
நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி வந்தார்கள்?
நெறியாளர்: ஏன் முடியாது என்று நினைக்கிறீர்கள்? வேல் யாத்திரையை நடத்தும்பொழுது, இதே திரு.வீரமணி அவர்கள், பாரதீய ஜனதா என்னதான் செய்தாலும், தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளையோ, அவர்களின் நம்பிக்கையையோ பெற முடியாது என்று சொன்னீர்கள். இன்றைக்கு நான்கு சட்டமன்ற உறுப்பி னர்கள் வந்துவிட்டார்கள்; நான்கு நாற்பதாகும், நாற்பது 150 ஆகும் என்று சொல்லலாம் அல்லவா?
தமிழர் தலைவர்: நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.விற்கு எப்படி வந்தார்கள்? தனியாக நின்று வந்தால் சொல்லலாம்.
தோள் ஊன்றல் என்பது வேறு; காலூன்றல் என்பது வேறு
நெறியாளர்: இது தி.மு.க.வுக்கும் பொருந்தும் அல்லவா?
தமிழர் தலைவர்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தனியாக நின்று வெற்றி பெறுங்கள் என்று சொல்கிறோம்.
காலூன்ற முடியும் என்றால் என்ன அர்த்தம்?
தனியாக நிற்பதுதான் காலூன்றுவது. அடுத்தவர்களின் தோள்மீது ஏறி நின்று, நான் எவ்வளவு உயரம் பாருங்கள் என்று சொல்வது காலூன்றுவது என்ற அர்த்தம் அல்ல.
உங்களுக்காக காலூன்றுவது வேறொருத்தர். நீங்கள் அவர்கள்மீது தோள் ஊன்றி இருக்கிறீர்களே தவிர, காலூன்றி அல்ல.
தோள் ஊன்றல் என்பது வேறு; காலூன்றல் என்பது வேறு என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை எப்படி மதிப்பீடுகிறீர்கள்?
நெறியாளர்: தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடு கிறீர்கள்?
தமிழர் தலைவர்: அவர்களே சொல்லிவிட்டார்களே, அதற்குமேல் நான் என்ன மதிப்பீடு செய்வது.
கரை ஒரு பக்கம் இருக்கிறது
ஆறு ஒரு பக்கம் இருக்கிறது
நெருப்பு ஒரு பக்கம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்களே, அதற்குமேல் நான் என்ன சொல்லவேண்டி இருக்கிறது.
பிரச்சினைக்கு அப்பாற்பட்டு இருந்தால் நல்லதுதான்!
நெறியாளர்: ஓ.பி.எஸ்.தானே சொல்லியிருக்கிறார்; இ.பி.எஸ். சொல்லவில்லையே?
தமிழர் தலைவர்: நான் அவர்களைப் பிரித்துப் பார்க்கவில்லை. இதுதான் அவர்களுடைய நிலைமை!
கரையா? நெருப்பா? ஆறா? என்பதில் அவர்களுக்கே சிக்கலாக இருக்கிறது.
அவர்களுக்கிடையில் நாளுக்கு நாள் சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது என்று இதிலேயிருந்து தெரிகிறது.
ஆளுங்கட்சியாக இருக்கட்டும்; எதிர்க்கட்சியாக இருக்கட்டும்; இதையே மாறி மாறி வரக்கூடிய சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடிய அளவில் அவர்கள் பிரச்சினைக்கு அப்பாற்பட்டு இருந்தால் நல்லதுதான்.
செய்ய முடியாத வாக்குறுதிகளை சொல்லி, தி.மு.க. தோற்றுவிட்டதா?
நெறியாளர்: நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்; நீட் தேர்வு நடக்காது; மாணவக் கண்மணிகளே தைரியமாக இருங்கள் என்று தி.மு.க. சொன்ன உறுதிமொழி இன்றைக்குப் பொய்யாகி விட்டது; நீட் தேர்வு நடந்துவிட்டது. அப்படியென்றால், செய்ய முடியாத வாக்குறுதிகளை சொல்லி, தி.மு.க. தோற்றுவிட்டது என்று பார்க்கலாமா?
தமிழர் தலைவர்: அது தவறானது. நீட் தேர்வு என்பது மாநில அரசின் அதிகாரத்தின்கீழே இருந்தால், தாராள மாக செய்யலாம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் உரிமை களை, உணர்வுகளை பிரதமர் மதிப்பார் என்கிற எண்ணத்தில், பிரதமரைச் சந்தித்து, தமிழ்நாடு முதல மைச்சர் சொன்னார். பிரதமர் கேட்கவில்லை.
அடுத்தபடியாக, முறைப்படி ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவினுடைய பரிந்துரையை வாங்கி, ஒரு சட்டத்தை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இது ஒரே நாளில் நடக்காது. நுழைவுத் தேர்வை எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது கொண்டு வந்தபொழுது, அதனை எதிர்த்து 21 ஆண்டு களாக திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தொடர்ந்து போராடித்தான் வெற்றி பெற்றோம்.
அதற்குப் பிறகு 2006 இல் ஜனதா கொண்டு வந்த நுழைவுத் தேர்வையும் எதிர்த்துப் போராடினோம்.
அரசியலில் இதேபோன்ற நிலை நீடிக்கும் என்று நீங்கள் நினைக்கவேண்டிய அவசியமில்லை. உடனே நாங்கள் முடித்துவிடுவோம் என்கிற கருத்தை அவர் சொல்லவில்லை.
சட்டப் போராட்டம் - மக்கள் போராட்டம் எல்லாம் சேர்ந்து வெற்றி பெற வைக்கும்!
நெறியாளர்: 8 மாதம் பொறுத்திருங்கள் மாணவர்களே, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு நடக்காது என்று சொன்னார்களே?
தமிழர் தலைவர்: ஆட்சி முடியவில்லையே. ஆட்சிக்கு வந்தவுடன், முதற்கட்டமாக முயற்சிகளை செய்திருக்கிறார்கள். இதில் அலட்சியமாக இல்லையே! பிரதமரைப் போய்ச் சந்தித்தார்; அதற்காக ஒரு குழுவை அமைத்தார்கள்; அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில், ஒரு சட்டத்தை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
உடனடியாக நடந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இது இவர்களுடைய அதிகாரத்தில் இல் லையே! அன்றைக்கும் அதே நிலைதான்; இன்றைக்கும் அதே நிலைதான்!
ஆகவேதான், நிச்சயம் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவோம், சட்ட ரீதியாக.
ஏனென்றால், முதலில் அவர்கள் எடுத்த நிலைப்பாடு - விதிவிலக்கே கிடைக்காது என்று சொன்னார்கள்.
பிறகு எப்படி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது, நீட் தேர்விலிருந்து ஓராண்டு விதிவிலக்கு எப்படி வந்தது? அப்படியென்றால், ஒன்றிய அரசு நினைத்தால், விதிவிலக்குக் கொடுக்கலாம் என்கிற வழி இருக்கிறதா, இல்லையா?
அதுமட்டுமல்ல, இப்பொழுது சட்டப் போராட்டங்கள் ஒரு பக்கம் நடக்கின்றன; மக்கள் போராட்டம் இன் னொரு பக்கம் நடக்கும்.
சட்டப் போராட்டம் - மக்கள் போராட்டம் எல்லாம் சேர்ந்து நிச்சயமாக நாம் இருந்து பார்க்கப் போகிறோம், நீட் தேர்வுக்கு விடை கொடுக்கப்படும்; மாணவர்கள் காப்பாற்றப்படுவார்கள்.
மற்ற மாநிலங்களில், சமூகநீதிபற்றி ஒரு சிந்தனை இல்லை!
நெறியாளர்: மற்ற மாநிலங்கள் எல்லாம் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளும்பொழுது, தமிழ்நாட்டிற்கு மட்டும் அப்படி என்ன ஒரு சிக்கல்? இங்கே மட்டும் தொடர்ந்து ஏன் தற்கொலைகள் நடைபெறுகின்றன? சர்ச்சைகள் வருகின்றன. மாணவக் கண்மணிகளுக்கு ஒரு தவறான நம்பிக்கையை, ஒரு தைரியமின்மையை அரசியல் கட்சி கள் விதைப்பதினால்தான், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்; மற்ற மாநிலங்களில் ஏன் தற்கொலைகள் நடைபெறவில்லை?
தமிழர் தலைவர்: மற்ற மாநிலங்களில், சமூகநீதிபற்றி ஒரு சிந்தனை - அதிகமாகத் தெரியவில்லையே!
தமிழ்நாடுதான் வழிகாட்டும் - மற்ற மாநிலங்கள் பின்பற்றும்
நெறியாளர்: கேரளா உள்பட மற்ற மாநிலங்களுக்குமா?
தமிழர் தலைவர்: எல்லா மாநிலங்களுக்கும். ஏனென் றால், கேரளாவில் நீட்டைப் பொறுத்தவரை அதனுடைய அடிப்படை தெரியவில்லை.
இப்பொழுதானே கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.
எப்பொழுதும் தமிழ்நாடுதான் வழிகாட்டும் - மற்ற மாநிலங்கள் பின்பற்றும்.
அதேபோன்று, இன்னும் சில மாதங்களில், மற்ற மற்ற மாநிலங்களிலும் அந்த உணர்வுகள் தாராளமாக வரும்.
ஏனென்றால், பாதிக்கப்படுகிறவர்கள் அங்கே அதிகமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதுவரையில், அவர்கள் அலட்சியமாக இருந்தார் கள். அவர்களுக்கு வேறு பிரச்சினைகள் முன்னால் இருந்தது.
எல்லாவற்றிலும் சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடிய பெரியாருடைய நுண்ணாடி தமிழ் நாட்டில்தான் இருக்கிறது.
ஆகவேதான், தமிழ்நாட்டில் எடுத்துச் சொல்கிறோம், மற்ற மாநிலங்களில் பின்னால் வரும்.
பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் கேட்கவேண்டும்!
நெறியாளர்: விநாயகர் சதுர்த்திக்குப் பொது ஊர் வலம், கொண்டாட்டத்திற்குத் தடை விதிப்பது என்பதன் மூலம் இந்து மத விரோத அரசு தி.மு.க. அரசு என்பதை வெளிப்படையாகக் காட்டியிருக்கிறது என்று சொல் கிறார்களே?
தமிழர் தலைவர்: அப்படியென்றால், அவர்கள் யாரை கேட்கவேண்டும் என்றால், மோடியைத்தான் கேட்கவேண்டும். உள்துறை அமைச்சரான அமித் ஷாவை கேட்கவேண்டும்.
ஏனென்றால், உள்துறை மூலமாக மாநில அரசு களுக்கு ஒரு சுற்றறிக்கையின்மூலம் உத்தரவு போட்டி ருக்கிறார்கள்.
மத விழாக்கள், ஊர்வலங்களை நடத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று ஒன்றிய அரசு அளித்த சுற்றறிக்கையின்படி மாநில அரசு நடந்திருக்கிறது.
ஆகவே, இதற்காக யார்மேலாவது கோபப்படவேண் டும் என்றால், அவர்கள்மீதுதான் கோபப்படவேண்டும். தூண்டியவர்கள் யார் என்றால், ஒன்றிய அரசுதான்.
சசிகலா அவர்களுடைய அரசியல் நகர்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
நெறியாளர்: திருமதி. சசிகலா அவர்களுடைய அரசியல் நகர்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்? ஒரு கட்டத்தில் அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்தீர்கள்; அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார்களே?
தமிழர் தலைவர்: இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பதில் சொல்லவேண்டிய அளவிற்கு இன்றைய காலகட்டத்திற்கு அதற்கான முக்கியத்துவம் இல்லை.
நெறியாளர்: இவ்வளவு நேரம் எங்களுடைய பல்வகையான கேள்விகளுக்குப் பதில் அளித்தீர்கள்.
நன்றி, வணக்கம்!
தமிழர் தலைவர்: நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக