மாநில காங்கிரஸ் அரசு தடை விதித்தது
ஜெய்ப்பூர், பிப்.15 ராஜஸ்தான் மாநில சிறைகளில் கைதிகளுக்கு ஜாதி அடிப்படையில் வேலை கொடுக்கும் நடைமுறைக்கு தடை விதித்து மாநில காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறைக் கைதிகளுக்கு அவரவர் ஜாதியை பொறுத்து வேலை ஒதுக்கப்பட்ட விவகாரத்தை அண்மையில் ‘தி வயர்’ இணைய இதழ் அம்பலப் படுத்தியது.
ராஜஸ்தான் மாநில சிறைகளில் இதுபோன்ற சம்பவம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளதை அந்த செய்தி சுட்டிக்காட்டியது. இந்த விவகாரம் பெரிதானதை தொடர்ந்து, பிப்ரவரி 3 ஆம் தேதி ராஜஸ்தான் அரசு சிறைத்துறைக்கு புதிய வழிகாட்டு நெறி முறைகள் அடங்கிய அரசாணை வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை சிறையில் உள்ள கழிப்பறைகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் வேலையை தாழ்த்தப்பட்டவர்கள் மீது திணிக்கப்பட்டு வந்தது. சமையல் செய்யும் உரிமை குற்றம் செய்ததாக பிடிபட்டு தண்டனை பெறும் பார்ப்பனர்களுக்கோ அல்லது வேறு உயர்ஜாதி வகுப்பினருக்கோ வழங்கப்பட்டது.
மாநில அரசின் இந்த புதிய அறிவுறுத்தலின்படி இனி இதுபோன்ற நடைமுறை இருக்காது என்று நம்பப்படுகிறது. சமீபத்தில் பீகார் மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அஜய்குமார் என்ற குற்றவாளிக்கு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலை கொடுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் எதிர்ப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இதன் பின்னரே நீதிமன்ற தலையீட்டிற்குபின் இந்த முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
“சிறை விதிகள் கையேட்டில் இத்தனை ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது நீதிமன்ற நடவடிக் கைக்குப்பின் அதில் மாற்றங்களை கொண்டு வர வழிவகுத்திருப்பதாகவும் ஒடிசா, கோவா மற்றும் டில்லியை தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் புதிய சிறைவழிகாட்டு நெறியை இதுவரை அமல்படுத்தவில்லை. வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ராஜஸ்தான் மாநில சிறை வழிகாட்டு நெறிகள் முழுமையாக மாற்றியமைக்கப்படும். என்று சிறைத்துறை கூடுதல் அய்.ஜி ராஜிவ் டஸாட் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாளையங்கோட்டை, மதுரை மத்திய சிறை உள்ளிட்ட சிறைகளில் கைதிகளின் ஜாதி அடிப்படையில் செல்களில் அடைத்து வைக்க இட ஒதுக்கீடு செய்யும் அவலங்கள் தொடர்வதாக ‘தி வயர்’ இதழ் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக