இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தமிழகத் தலைவர்கள் போர் முழக்கம்
* தொகுப்பு: மின்சாரம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில அரசியல் எழுச்சி மாநாடு "தமிழகத்தை மீட்போம்!" என்ற முழக்கத்தின் அடிப்படையில் நேற்று (18.2.2021) மாலை மதுரை வண்டியூர் - சென்னை - கன்னியாகுமரி சாலையில் பேரெழுச்சியுடன் கூடியது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் செஞ்சட்டைத் தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் கூடினர். செஞ்சட்டைத் தொண்டர் படையினரின் (இருபாலரும் சேர்ந்த) அணி வகுப்பு எடுப்பாயிருந்தது.
திருச்சி பாரதி கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி கருத்தோட்டமாக அமைந்திருந்தது.
மாநாட்டிற்கு மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் தலைமையேற்றார். தலைமை உரை சுருக்கமான அளவில் சுருக்கென்று தைக்கும் அளவுக்கு முத்தரசன் என்பதாலோ முத்து முத்தாக, செறிவாக அமைந்திருந்தது.
"பணம் கொடுத்துக் கூப்பிட்டு வந்த கூட்டமல்ல. அவரவர்கள் சொந்த பணத்தைக் செலவிட்டு கொள்கை உணர்வுடன் கூடிய கூட்டம்" என்று அவர் சொன்னபோது கரஒலி கோடை இடியாய் வெடித்துக் கிளம்பியது.
"ஆண்டுதோறும் ஆற்றில் இறங்குவதாகக் கூறப்படும் அழகருக்கு வரும் கூட்டத்தைவிடப் பெரியது இது" என்று சொன்னபோதும் - தொண்டர்களின் உற்சாகம் கரை புரண்டது.
ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூகநீதி, சோசலிசம் இவற்றைப் பாதுகாக்கும் முற்போக்குக் கூட்டணியினர் சங்கமிக்கும் மாநாடு இது என்று குறிப்பிட்ட மாநாட்டுத் தலைவர் தோழர் இரா. முத்தரசன் அவர்கள், மாநாட்டுக்குப் பல்லாயிரக்கணக்கில் கூடியுள்ள நீங்கள் வாகனங்களை வேகமாக ஓட்டாமல், பொறுப்பான தோழர்கள் ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்து, எந்தவித சிறு விபத்துகளுக்கும் இடமில்லாமல் பாதுகாப்பாக ஊர்களுக்குத் திரும்ப வேண்டும் என்று கட்சியை நடத்திச் செல்லும் ஒரு பொறுப்பான தலைவர் என்ற முறையில் வேண்டுகோள் விட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மத்தியக் குழு உறுப்பினர் தோழர் சி. மகேந்திரன் நாட்டில் நடைபெறுவது கொள்கை வழி ஆட்சியல்ல - கொள்ளை அடிக்கும் வழிகளை அறிந்தஆட்சி என்றாரே பார்க்கலாம்.
தந்தை பெரியார், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், ஜீவா ஊட்டிய உணர்வோடு பிற்போக்குச் சக்திகளை முறியடிப்போம் - இது வெற்றிக் கூட்டணி என்று முழங்கி சில மணித்துளிகளில் தன் உரையை நிறைவு செய்தார்.
தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
திராவிட இயக்கத்துக்கும் கம்யூனிஸ்டுக்கும் அடிப் படையில் நீண்ட காலமாக கொள்கை அளவிலும் இயக்க அடிப்படையிலும் தொடர்ச்சியாக உறவு உண்டு.
1925ஆம் ஆண்டில்தான் தந்தை பெரியார் சுயமரி யாதை இயக்ககத்தை உருவாக்கினார். அதே 1925ஆம் ஆண்டில்தான் கம்யூனிஸ்டுக் கட்சியும் இந்தியாவில் தோற்றம் எடுத்தது.
ருசியாவுக்குச் செல்லும் முன்பே மார்க்ஸ் - ஏங்கல்ஸ் அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து இந்தியாவிலேயே தனது 'குடிஅரசு' இதழில் வெளியிட்டவர் தந்தை பெரியார்.
திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால் நான் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருந்திருப்பேன் என்று சொன்னவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆவார்!
விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்காக கணபதியாப் பிள்ளை ஆணையத்தையும், கார்த்திகேயன் தலைமையிலான ஆணையத்தையும் உருவாக்கியவர் திமுக தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
நாங்கள் ரத்தம் சிந்திப் போராடினோம். ஆனால் கலைஞர் அவர்கள் ஒரு துளி மை சிந்தி பேனாமுனையில் எங்களுக்குச் சாதித்துக் கொடுத்தவர் என்றார் - பொதுவுடைமை இயக்க முன்னோடி மணலி கந்தசாமி (பலத்த கரஒலி)
புன்செய் நிலத்திற்கு இருந்த வரியை அறவே நீக்கி, 5 ஏக்கர் வரை உள்ள நன்செய்க்கும் வரி நீக்கம் செய்தவர், விவசாயத்துக்கு இருந்து வந்த மின் கட்டணத்தை அறவே ஒழித்தவரும் கலைஞர் அவர்களே என்று பட்டியலிட்டார் தளபதி மு.க. ஸ்டாலின்.
"இப்பொழுது நடப்பது இரு வேறு கொள்கைகளுக்கு இடையிலான போராட்டம் - வெறும் ஆட்சி மாற்றப் போராட்டம் அல்ல. பிரதமரின் இரு கைகளில் ஒன்று காவி. இன்னொன்று - கார்ப்பரேட் கை. ஆனால் நமது கரம் பாட்டாளிகளின் கரம் - உழவர்களின் கரம் என்றார்.
அதிமுகவைப் பயன்படுத்தி பா.ஜ.க. உள்ளே நுழைய பார்க்கிறது. இது தந்தை பெரியார் மண், பேரறிஞர் அண்ணா மண், பெருந்தலைவர் காமராஜர் மண், ஜீவாவின் மண் பிற்போக்கு சக்திகளுக்கு இங்கு இடம் கிடையாது" என்றார் தளபதி மு.க. ஸ்டாலின்.
தோழர் ஆர்.என்.கே. - தா.பா.
முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தோழர் நூற்றாண்டைக் காணவிருக்கும் தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள் மாநாட்டுக்கு முன்னிலை வகித்து திமுக தலைமையில் அமையும் கூட்டணி 'பெரு வெற்றி பெற' முயற்சிகளை மேற்கொள்வோம் என்று இரத்தினச் சுருக்கமாகப் பேசினார்.
மாநாட்டுக்கு முன்னிலை வகித்த அண்மையில் பெரியார் விருது பெற்ற தோழர் தா. பாண்டியன் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் சக்கர நாற்காலியில் வந்தாலும், ஒலி பெருக்கி முன் அவர் உரை வழக்கம்போல கோடை இடியாக ஒலித்தது.
மதுரையைச் சேர்ந்தவன் என்ற முறையில் உங்களை எல்லாம் வரவேற்கிறேன் என்றார்.
என் உடம்பின் எலும்புகள், கால்கள் வலுவாக இல்லை என்றாலும் மண்டை உறுதியாகவே இருக்கிறது (அடேயப்பா - எத்தகைய கரஒலி!)
சாகும் வரை மக்களைத் தட்டி எழுப்புவேன். நம் அணிதான் வெற்றி பெறும் என்று பிரகடனம் செய்யும் மாநாடு இது என்று சொன்னபோதும் பெரும் வரவேற்பு.
வகுப்புவாத சக்திகளுக்குத் துணைப் போகும் எடப்பாடிகள் - தாங்கள் துணைப் போவது மட்டுமின்றி தமிழ்நாட்டையும் அடிமைப்படுத்தி விடலாம் என்று நினைத்தால் அது நடக்கவே நடக்காது, போர் முரசம் கொட்டுவோம், பா.ஜ.க.வையும், அதற்குத் துணைப் போகும் சக்திகளையும் முறியடிப்போம்!
இதேபோலவே வெற்றி விழாவிலும் கூடுவோம் என்று குரல் கொடுத்தார் தோழர் தா.பா.
தோழர் து.ராஜா
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் து. ராஜா அவர்கள் மாநாட்டில் தொடக்கவுரையை நிகழ்த்தினார்.
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்டான சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் பிறந்த நாளிலே இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டுள்ளது. தந்தை பெரியாரோடு கை கோர்த்த சிங்காரவேலர் பகுத்தறிவுச் சமதர்மப் பிரச்சாரம் நடைபெற்ற மண் இது.
"அரசியல் பிழைத்தோ அறங்கூற்றம்" என்றுபறை சாற்றிய பூமியாருக்கு மதுரையில் இம்மாநாடு எழுச்சியோடு நடைபெறுகிறது.
இந்து ராஷ்டிரா என்கிறார்கள் - மனுதர்மத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று துடிக்கிறார்கள். அது மட்டும் நடக்காது- நடக்கவும் விட மாட்டோம்.
நாட்டில் செல்வங்களை உற்பத்தி செய்வது உழைப் பாளிகள், விவசாயிகள், தொழிலாளர்கள்தானே தவிர அதானிகளும், அம்பானிகளும், டாடாக்களும், பிர்லாக் களும் அல்ல என்ற தோழர் ராஜா அவர்கள் - நடப்பது மக்கள் ஆட்சியல்ல - கார்ப்பரேட்டுகளின் ஆட்சியே என்றார்.
சமூகநீதியை ஒழித்துக் கட்டும் வேலை வேகமாக நடக்கிறது. அய்.அய்.டி. என்கிறார்கள். அங்கே இடஒதுக்கீடு உண்டா? அம்பானி - அதானிகள் நடத்தும் தொழிற்சாலை களில்தான் இடஒதுக்கீடு உண்டா என்ற அர்த்தமுள்ள வினாவை எழுப்பினார் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் ராஜா அவர்கள்.
கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈசுவரன் தனது உரையில்: "அரசு நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. சிறுகுறு தொழில்கள் ஒழிந்துவிட்டன. ஒடுக்கப்பட்டோர், பாதிக்கப்பட்டோர் ஒன்றிணைவோம் - ஒழிக்கப்பட வேண்டிய மத்திய, மாநில அரசுகளை வீழ்த்துவோம்" என்றார்.
மேனாள் மக்களவை உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதல் நிலை துணைத் தலைவருமான எம்.அப்துல் ரகுமான் குடியுரிமை சட்டத்தினால் ஏற்படும் பாரதூர விளைவுகளை எடுத்துரைத்தார்.
பேராசிரியர் ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தன் உரையில் - இந்துக்களின் கட்சி என்று தன்னை வருணித்துக் கொள்ளும் பா.ஜ.க. சங்பரிவார்களைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு. தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் இந்துக்கள் இல்லையா? அவர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கிறீர்கள்? ஒழிக்கிறீர்கள்? என்ற நியாயமான வினாவை எழுப்பினார்.
ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) முதல் அமைச்சராக இருந்தபோது (1952-1954) சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசும் போது என்ன சொன்னார்?
சலவைத் தொழிலாளர்களாகிய நீங்கள் ஏன் படிக்க வேண்டும்? துணியைக் கிழிக்காமல் சலவை செய்யும் உங்கள் குலத் தொழிலைச் செய்யுங்கள் என்று கூறியதை பொருத்தமாக நினைவூட்டி அந்த மனுதர்மத்தை, வர்ணாசிரமத்தைக் கொண்டு வருவதுதான் பா.ஜ.க - சங்பரிவார்களின் திட்டம் என்று அம்பலப்படுத்தினார் பேராசிரியர் ஜவாஹிருல்லா.
கலி. பூங்குன்றன்
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாநாட்டுக்கு அனுப்பி வைத்த வாழ்த்தினைப் படித்து தன் உரையை ஆற்றினார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டவைகளுக்கு விரோதமாக நடந்து வருகிறது என்றால் அதற்குத் துணைப் போகிறது தமிழ்நாட்டை ஆளும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி.
குடியரசு நாளில் அதிகாரப் பூர்வமாக அளிக்கப்பட்ட விளம்பரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட "செக்குலர்" என்ற (மதச்சார்பின்மை) சொல்லை நீக்கிவிட்டு மத்திய பிஜேபி அரசு விளம்பரம் கொடுக்கிறது என்றால் இதைவிட அரசியல் சட்ட மீறல் வேறு உண்டா?
திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் 'நீட்' வந்தது என்று ஓயாமல் உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறார்களே - அதன் உண்மை என்ன?
காங்கிரஸ் ஆட்சியின்போது 'நீட்' கொண்டு வரப்பட்டது உண்மைதான் அதனை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் சென்றதே. மேலும் சிலர் வழக்கைத் தொடர்ந்தனர். அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு, உச்சநீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அது. விக்ரமஜித் சென் மற்றும் ஏ.ஆர். தவே அதில் இடம் பெற்றனர்.
பல்கலைக் கழக மான்ய குழுவுக்குத் தேர்வு நடத்தும் உரிமை கிடையாது என்று கூறி, 'நீட்' செல்லாது என்று பெரும்பான்மை தீர்ப்பாக இரு நீதிபதிகள் கூறினர். ஏ.ஆர். தவே மட்டும் மாறுபட்டதீர்ப்பாக 'நீட்' செல்லும் என்றார்.
மேல்முறையீடு செய்யவில்லை மத்திய காங்கிரஸ் ஆட்சி. ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தஅமர்வுக்குத் தலைமை வகித்த ஏ.ஆர். தவே. ஏற்கெனவே - 'நீட்' வழக்கில் 'நீட்' செல்லும் என்ற தீர்ப்பு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாக' நீட் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்றைய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது 'நீட்'டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் என்ற வரலாற்று உண்மையையும் சுட்டிக்காட்டினார் கலி. பூங்குன்றன்.
'நீட்'டை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்திலும்
இரு மசோதாக்கள் ஒரு மனதாக நிறைவேற்றப் பட்டும், அதற்கான ஒப்பு தலை மத்திய பா.ஜ.க. அரசிடம் பெற்றுத் தர முடிய வில்லை அதிமுக அர சால். பா.ஜ.க.வுடன் அதி முக கூட்டணியில் இருந்தும் பயன் இது தான்.
அந்த மசோதாக் களுக்கு குடியரசு தலை வர் ஒப்புதல் தராததைக் கூட அதிமுக அரசு தெரி விக்கவில்லை. உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கின்போது மத்திய அரசின் வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டதை சொன்னபோது தான் உண்மை வெளிச்சத் திற்கு வந்தது என்றும் கூறினார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்.
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்
விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலை வர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தன் உரையில் குறிப் பிட்டதாவது: ஒரே கட்சி, ஒரே தேசம், ஒரே கலாச் சாரம் என்பது பா.ஜ.க.வின் கொள்கை முழக்கம்.
அந்த அடிப்படையில் தான் மாற்றுக் கட்சி ஆட்சிகளை ஒழிக்கும் வேலையிலும், சமஸ்கிருதம், இந்தி திணிப்பு வேலையிலும் பா.ஜ.க. ஆட்சி ஈடுபடுகிறது. அரசு தொலைக்காட்சியில் நாள்தோறும் 15 நிமிடங்கள் சமஸ் கிருதத்தில் செய்தி ஒலிபரப்பு நடந்துகொண்டு இருக்கிறது. யார் கேட்டார்கள் - யார்தான் அந்தச் செய்தியைக் கேட்கிறார்கள்.
பா.ஜ.க. பிரித்தாளும் சூழ்ச்சியாக தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் ஒன்று சேர விடாமல் செய்து வருகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக் கொள்கையை ஏற்காத பா.ஜ.க.வினர் ராமன் கோயில் கட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் ராமனைப் பற்றிப் பேச மாட் டார்கள். ஆனால் முருகனைப் பற்றிமட்டும் பேசுவார்கள்.
இதுவரை அம்பேத்கர் சிலையைச் சிறுமைப்படுத் தினார்கள். இப்பொழுது தந்தை பெரியார் சிலையையும் அவமதிக்க ஆரம்பித்து விட்டனர். அதிமுகமீது சவாரி செய்து கொண்டு பா.ஜ.க. தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கிறது.
அதிமுகவை ஒழிப்பது தான் பா.ஜ.க.வின் திட்டம் - அதிமுகவில் வெற்றி பெற்றவர்கள்கூட, அதன் பின் பா.ஜ.க.வுக்குத் தான் தாவுவார்கள்.
அரசியல் கட்சிகளை அச்சுறுத்த வருமான வரித்துறை இருக்கிறது. ரெய்டு நடத்துவார்கள். ஆனால் நமக்கெல்லாம் அந்தக் கவலையில்லை. நமது இடத்துக்கு வந்தால் துண்டறிக்கைகளைத்தான் கைப்பற்ற முடியும். அந்தத் துண்டு அறிக்கையும் 'பா.ஜ.க. ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் - ஏன்?" என்ற கருத்துக்கள் அடங்கியதாகவே இருக்கும் என்றார் எழுச்சித் தமிழர்.
நடக்க உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தப் பக்கம் பா.ஜ.க. திரும்பிப் பார்க்கவே கூடாது என்கிற அளவுக்குப் பலத்த அடி கொடுக்க வேண்டும் என்று எழுச்சித் தமிழர் சொன்னபோது - பலத்த கைதட்டல்.
தோழர் கே. பாலகிருஷ்ணன்
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தன் உரையில் குறிப்பிட்டதாவது:
பிரதமர் நரேந்திர மோடிக்குக் குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட கிடையாது. 85 நாட்களாக டில்லியில் கடும் குளிரில் இந்தியாவின் தலைநகரமான டில்லியில் அறப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்களே அவர்களை அழைத்துப் பிரதமர் பேசாதாது ஏன்?
விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆளும் கேரள சட்டசபை தீர்மானம் போடுகிறது. புதுச்சேரி முதல் அமைச்சர் அந்த சட்டத்தை கிழித்து எறிகிறார். ஆனால் அதிமுக அரசோ ஆதரிக்கிறது.
இத்தகு ஆட்சி நமக்கு தேவையா? நடக்க உள்ள தேர்தலில் அவர்களை வீழ்த்த வேண்டும் என்றார் தோழர் பாலகிருஷ்ணன்.
தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் உரையாற்றினர். மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். குணசேகரன் நன்றி கூற மாநாடு வரலாற்று முத்திரையுடன் நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக