ஆமாம், வீரமணியிடம் பெரியார் திடல் இருக்கிறது!
பெரியார் திடல் என்பது கொள்கை வீரியத்தின் குறியீடு!!
கேள்வி: வீரமணி காலத்து தி.க.வைக் கண்டு தி.மு.க. பயப்படவில்லை. ஆனால், திருமாவளவனின் வி.சி.க.வைக் கண்டு தி.மு.க. பயப்படுகிறதே?
பதில்: வீரமணியிடம் பெரியார் திடல்தான் இருக்கிறது. திருமாவளவனிடம் பெரியார் கூட்டம் இருக்கிறது என்று அஞ்சுகிறதோ தி.மு.க.?
‘துக்ளக்', 3.2.2021, பக்கம் 9
‘சிண்டு முடிந்திடுவாய்ப் போற்றி!' என்று ‘ஆரிய மாயை' நூலில் எடுத்த எடுப்பிலேயே தீட்டியிருப்பார் அறிஞர் அண்ணா.
அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது, ஆம்; வீரமணியிடம் பெரியார் திடல் இருக்கின்றது. வீரமணியிடம் ‘விடுதலை' இருக்கிறது. பெரியார் திடலிலிருந்து பகுத்தறிவுப் பிரச்சார வெடிகுண்டுகள் அன்றாடம் புறப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றமும் இருக்கிறது. பகுத்தறிவுச் சூறாவளிப் பிரச்சாரங்களும் நடந்துகொண்டுள்ளன. பெரியார் நூலகம் - ஆய்வகம் இருக் கிறது. பன்னாட்டைச் சேர்ந்தவர்களும் தந்தை பெரியார் சித்தாந்தங்கள், தத்துவங்கள், திராவிடர் இயக்கத்தின் பரிமாணங்கள்பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்; இதன்மூலம் உலகெங்கும் போய்ச் சேர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
பெரியார் திடலில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூக இரு பால் மாணவர்கள் ஆரவாரமின்றிப் பயிற்சி பெற்று வருகின் றனர்.
பெரியார் நூல்கள் விற்பனையகம் - உள்ளே நுழைந்த வுடன் வரவேற்கிறது. பெரியார் இயக்க நூல்கள் விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதிக நூல்கள் விற்பனையாவது பெரியார் இயக்க நூல்கள்தான் என்ற செய்தி, ‘நூல்'களின் ஆதிக்கத்தின் ஆணி வேரை அறுத்தெறிகின்றது.
‘விஜயபாரத' அரங்கு அழுது வடிவதையும், ஈ ஓட்டிக் கொண்டும் இருப்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
வீரமணியிடம், பெரியார் திடல் இருக்கிறது என்பது உண்மைதான். பெரியார் திடல் என்பது ஒரு குறியீடு - அதன் உள்ளடக்கம் வீரியமானதே!
இவையெல்லாம் ‘துக்ளக்' குருமூர்த்தி கும்பலுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்துவருவதால், அந்த ஆத்திரத்தை வசைப்பாடியும், கேலி, ஏகடியம் செய்தும் தங்கள் ஆற்றாமை என்னும் அரிப்பை ரத்தம் சொட்டும் வரை சொரிந்து ஆசுவாசப்படுகின்றது.
‘துக்ளக்', ‘தினமலர்' வகையறாக்கள் ஒவ்வொரு இதழிலும் வீரமணியைப்பற்றி விதண்டாவாதமாக எழுதாவிட்டால் தூக்கம் வராது. அது அச்சத்தின் வெளிப்பாடுதான்.
தி.க., தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மூன்று குழல் துப்பாக்கி என்று ஆகிவிட்ட பிறகு, இந்தக் கூட்டத்திற்கு குருதிக் கொதிப்பு அதிகரித்து விட்டதாகவே தெரிகிறது.
தி.க.விடம் இருந்தும், வீரமணியிடம் இருந்தும், மு.க.ஸ்டா லின் விலகி இருக்கவேண்டும் என்று குருமூர்த்தி அய்யர் எழுதி எழுதி............. தேய்ந்து கட்டெறும்பு ஆனதுதான் மிச்சம்!
‘‘எங்கள் பயணத்தை முடிவு செய்வது பெரியார் திடல்தான்'' என்று தி.மு.க. தலைவர் பளிச்சென்று செவுளில் அறைந்ததுபோல் பதில் சொன்ன பிறகு, அறிவு நாணயத்தோடு ஒதுங்கிக் கொள்ளவேண்டாமா?
பரவாயில்லை; எழுச்சித் தமிழர் திருமாவளவனிடம் பெரியார் கூட்டம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டவரைக்கும் மகிழ்ச்சிதான்.
எப்படி இருந்தாலும், எங்கு இருந்தாலும், அவற்றின் கொள்கைப் பீரங்கிகள், குண்டுகள் ஆரிய புரியைத்தானே துளைத்து எடுக்கும் என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும்!
பெரியார் கொள்கையாளர்கள் தி.க., தி.மு.க., வி.சி.க. அமைப்புகளில் மட்டுமல்ல, எல்லாக் கட்சிகளிலும், எல்லா அமைப்புகளிலும் கண்ணுக்குத் தெரிந்தும், கண்ணுக்குத் தெரியாமலும் (Visible and Invisible) இருக்கத்தான் செய்கிறார் கள். இன்னும் சொல்லப்போனால், உலகெங்கும் பரவியும்தான் இருக்கிறார்கள். (ஏன், இவர்கள் அலுவலகங்களிலும்கூட ஓசையின்றி இருக்கக் கூடும்).
நாடாளுமன்றத்துக்குள்ளேயே ‘வாழ்க பெரியார்!' ‘வெல்க திராவிடம்!' என்ற முழக்கமும் கேட்கிறதே - காகப்பட்டர் களுக்குக் காதென்ன செவிடோ!
எல்லாக் கட்சிகளிலும் பெரியாரின் அடையாளமாக வீரமணி இருப்பதால்தான் தேர்தல்களில் போட்டியிட பார்ப்ப னர்களை வேட்பாளர்களாகக்கூட நிறுத்துவதில்லை.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேர வையில், பார்ப்பனரின் எண்ணிக்கை ஒண்ணே ஒண்ணு. கண்ணே கண்ணுதான்! (அவர்கூட இருக்கும் இடம் தெரியவில்லை).
‘துக்ளக்' ஒப்புக்கொண்ட இன்னொரு முக்கிய சேதி - கருத்து உண்டே!
கேள்வி: தமிழக மக்கள் எந்த விஷயத்தில் தனித்துவம்?
பதில்: ஆன்மிகத்தில் முழுகிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிடக் கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களின் தனித்தன்மை.
‘துக்ளக்', 19.2.2020, பக்கம் 29
திராவிடர் கழகம் பெரியார் திடலில் மட்டுமல்ல - தமிழகம் தழுவிய அளவில் தமிழ் மக்களிடம் நீக்கமற நிறைந்திருக்கிறது என்று ‘துக்ளக்'கே ஒப்புக் கொண்ட பின், ‘செலக்டிவ் அம்னி ஷியாவால்' திருவாளர் குருமூர்த்தி இப்படி எழுதுகிறாரோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக