சனி, 30 ஜனவரி, 2021

இன்றைய மத்திய பா.ஜ.க. ஆட்சி எங்கே செல்கிறது?


சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தல்; பொதுத்துறை நிறுவனங்கள் வலுவிழப்பு; எதேச்சதிகாரம், ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற போக்குகள் ஆபத்தானவை!

மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் கல்வியாளர் ஹமீத் அன்சாரியின் கருத்துகளை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் எச்சரிக்கை

நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு அச் சுத்தல்; மெஜாரிட்டி என்ற போர்வையில் எதேச்சதிகாரம்; ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற போக்கு இன்றைய மத்திய ஆட்சியில் நீடிப்பதால் ஏற்படும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி, மேனாள் குடி யரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, தனது வாழ்க்கை வரலாற்று நூலில் சுட்டிக்காட்டியிருப்பதை எடுத்துக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

முன்னாள் (இந்திய) குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஹமீத் அன்சாரி அவர்கள் (இவர் நிறைந்த கல்வியாளர் என்று போற்றப்படுபவர் - நிதானமான போக்கும், சுபாவமும் கொண் டவர் என்று பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்).

இவர் தனது தன் வரலாறு நூல் ஒன்றை ‘‘By Many a Happy Accident: Recollections of a Life'' (‘‘பலரால் ஏற்பட்ட மகிழ்ச்சிகரமான விபத்து'' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது) என்ற தலைப்பில் எழுதியுள்ளது குறித்து ஒரு செய்திச் சுருக்கம் இன்றைய ஆங்கில ‘ஹிந்து' நாளேட்டில் (29.1.2021, பக்கம் 11 இல்) வெளிவந்துள்ளது.

அவரைப் போன்ற பெரிய பொறுப்பில் இருந்தவர்கள், அவர்களது பதவிக் காலத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களையும், நாட்டின் தற்போதுள்ள போக்கையும்பற்றி எழுதுவது முற்றிலும் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று மட் டுமல்ல; அரசியல் வரலாற்றுக் குறிப்புகளாக வும் கருதப்படவேண்டியவை ஆகும்.

மேனாள் குடியரசுத் துணைத் தலைவரின் முக்கிய கருத்து

இவரது இந்த சுயசரிதை நூலில் முக்கிய கருத்தாக, ‘‘அரசியல் சட்ட விழுமியங்கள் (constitutional values), பன்முகக் கலாச் சாரம், சகோதரத்துவம், அறிவியல் மனப் பாங்கு (Scientific Temper) ஆகியவை தற்போதைய அரசியல் கலாச்சாரத்தில் மறைந்து வருவதாகவே தோன்றுகிறது. அவைகட்கு நேர் எதிரான நம்பிக்கை களையும், நடைமுறைகளையுமே புகுத்தி வரும் போக்கே பெரிதும் காணப்படுகிறது!'' என்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியுறவுத் துறையில் சிறந்த மேதை யான இவர் இந்த நூலில் மிகுந்த வருத் தத்துடன் குறிப்பிடுகிறார். ‘‘நாட்டில் சட் டத்தின் ஆட்சி மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறது; அரசின் பொது நிறு வனங்கள் வலுவிழந்து, எதேச்சதிகார கண் மூடிய மக்களின் கூச்சலுக்கு உட்படுவதாகத் தெரிகிறது. ‘‘மெஜாரிட்டேரியனிசம், தேசியம், எதேச்சதிகாரம்'' ஆகியவற்றிற்குத் துணை போகும் நிலை உருவாகியுள்ளது!

2019 தேர்தலுக்குப் பின் லட்சிய ரீதியாக ஒரே மொழி, ஒரே மக்கள், ஒரே மதம், ஒற்றை நிலமும், கலாச்சாரமும்தான் என்ற உணர்வு பரப்பிடும் நிலையே உள்ளது!'' என்கிறார்.

இவர் மாநிலங்களவைத் தலைவராக (குடியரசு துணைத் தலைவர் என்பதால் Ex officio - மாநிலங்களவை தலைவர் என்பது அரசியல் சட்டப்படி உள்ள தகுதி யாகும்) இருந்தபோது நிகழ்ந்தவைகளைப் பற்றி எழுதியுள்ளதைப் படிக்கும்போது அதிர்ச்சி தருவதாகவே உள்ளது!

பிரதமரின் திடீர் வருகையும் - உரையாடலும்!

‘‘ஒரு நாள் பிரதமர் மோடி எனது அலுவல கத்திற்குத் திடீரென்று வந்தார். (முன்கூட்டி திட்டமிடப்படாமலேயே) நான் அதிர்ந்து போனேன். உரிய மரியாதையுடன்  அவரை வரவேற்று அமர வைத்தேன்.

உடனே பிரதமர் மோடி, ‘‘உங்களுக்கு நிறைய உயர் பொறுப்புகள் காத்துக் கொண் டிருக்கின்றன; ஆனால், நீங்கள் எங்களுக்கு உதவ மாட்டேன் என்று உள்ளீர்களே'' என்றார்.

அதற்கு நான், ‘‘எனது மாநிலங்களவைப் பணி என்பது மக்களால் கூர்ந்து கவனிக் கப்படுவை'' என்றேன்.

‘‘நீங்கள் ஏன் பல மசோதாக்களை எதிர்த்து கூச்சல் இருந்தாலும், நிறைவேற் றாமல் தள்ளிப் போடுகிறீர்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு நான், ‘‘எனது முடிவுகளை அவை யின் கட்சித் தலைவர்கள் அனைவரும் வரவேற்கின்றனர். பெருங்கூச்சல் மத்தி யிலும், மற்ற முறைகளில் எப்படி மசோ தாக்களை நிறைவேற்ற இயலும்? பொது வான சட்ட நடைமுறை, அவையின் நடைமுறைகளையே நான் கடைப்பிடித்து வருகிறேன்'' என்று பதில் அளித்தேன். ‘‘தொடர்ந்து அப்படி நடப்பது எனது கடமை'' என்று தெளிவுபடுத்தினேன்.

அடுத்து மோடி அவர்கள், ‘‘ராஜ்ய சபை டி.வி., அரசுக்கு ஆதரவாக இல்லையே'', என்றார்.

அதற்கு நான், ‘‘அந்த டி.வி. சேனலின் மேலாண்மையில் மாநிலங்களவைத் தலை வர் என்ற முறையில் எனக்குப் பங்கிருந் தாலும்கூட, அதன் ஆசிரியக் கருத்துரை களில் நான் எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்க முடியாது.'' (I  had no control over the editorial content) என்று கூறினேன்'' என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன!

இதுதான் ஆட்சியின் வெளிப்படைத்தன்மையா?

இன்றைய பா.ஜ.க. ஆட்சியும், அதன் தலைமையும் - இப்போதுள்ள முழு மெஜாரிட்டி - ரோட்ரோலர் மெஜாரிட்டி -  2019 வரும் முன் நிகழ்ந்தவை இவை.

அப்படியென்றால் இப்போது வெளிப் படையாகவே அரசியல் சட்ட விழுமியங்கள் காற்றில் பறப்பதை எவரும் நன்கு புரிந்துகொள்ள இயலும்!

இதுதான் ஆட்சியின் வெளிப்படைத் தன்மை (Transperancy) என்பதற்கு அடையாளம்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

29.1.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக