சனி, 22 ஜனவரி, 2022

தமிழுக்குப் பெருமை; அமெரிக்காவில் தமிழ்ப் பண்பாட்டு மாதமாக ஜனவரி அறிவிப்பு!


நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலம் அறிவித் துள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள தமிழ்ச்சங்கம் இந்த மாதமான ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுள்ள கரோலினா மாநில அரசு நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளது. இதற்கான ஆணையை மாநில ஆளுநர் ராய் கூப்பர் வெளியிட்டுள்ளார்.

உலகில் நெடுங்காலமாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வரும் பெருமையைக் கொண்ட மொழிகளுள் ஒன்று தமிழ் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு கரோலினா மாநிலத்தின் வளர்ச்சியில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருப்பதாக அந்த அறிவிப்பில் ராய் கூப்பர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த காணொலில் காட்சிப் பதிவு ஒன்றையும் ராய் கூப்பர் வெளியிட்டுள்ளார். அதில்,  தமிழர்களின் அடையாளம் தமிழ் மொழி. உலகில் இன்னும் பயன்பாட்டில் இருக்கும் பழைமையான மொழிகளில் ஒன்றும் கூட. வடக்கு கரோலினாவில் வசிக்கும் தமிழர்கள் சிறப்பு மிக்க தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் இங்கு பாதுகாத்து வளர்த்துள்ளனர்.  தமிழ் மொழியும் நமது கலாச்சார வரலாற்று வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.

அதன்படி தமிழர்களோடு இணைந்து தைப் பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக