அகில இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு - தி.மு.க. முயற்சிக்கு வெற்றி!
தி.மு.க. தலைவருக்கு நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
அகில இந்திய அளவில் மருத்துவக் கல்வி யில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைத்திருப்பது தி.மு.க.வின் முயற்சிக்குக் கிடைத்துள்ள வெற்றியே! இதற் குக் காரணமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
மத்தியத் தொகுப்பு என்ற ஒன்றை முந்தைய அரசுக் காலத்தில் ஏற்படுத்தியபின், மருத்துவக் கல்வியைப் பெற்ற மாநிலங்களிலிருந்து எம்.பி.பி.எஸ்.சுக்கு 15 சத விகிதமும், M.D., M.S., போன்ற மேற்பட்டப் படிப்பு களுக்கு 50 சதவிகித இடங்களையும் ஒன்றிய அரசுக்குத் தரவேண்டும் என்ற ஓர் ஆணைக்கிணங்கவே மற்ற மாநிலங்களுக்குப் பிரித்தளிக்கும் ஏற்பாடு தொடர்ந்து வருகின்றது.
அந்த ஏற்பாட்டின்படி உள்ள இடங்களில் இட ஒதுக் கீடு - சமூகநீதி பின்பற்றப்பட வேண்டியது அரசமைப்புச் சட்டப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்குள்ள உரிமையாகும்.
‘‘தாரை வார்க்கும்'' ஏற்பாடே தொடர்ந்து வந்தது!
அதன்படி எஸ்.சி., எஸ்.டி., ஆகிய ஒடுக்கப்பட்ட வகுப்பில் உள்ளவர்களுக்கு ஒன்றிய அரசு ஆணைப்படி முறையே 15, 7.5 என்று 22.5 (ரவுண்டாக 23 சதவிகிதம்) இட ஒதுக்கீட்டை இந்த மருத்துவப் படிப்புக்குச் செய்யும் ஒன்றிய அரசு, இதர பிற்படுத்தப்பட்டவர்கள் (ஓ.பி.சி.) மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தர, மறுத்தே வந்ததோடு, எஞ்சியவற்றின் பெரும்பகுதியை முன்னேறிய உயர் ஜாதியினருக்குத் ‘‘தாரை வார்க்கும்'' ஏற்பாடே தொடர்ந்து வந்தது!
இதனைத் திராவிடர் கழகம் கடந்த இரண்டாண்டு களுக்கு முன்பிருந்தே சுட்டிக்காட்டி தமிழ்நாடு பெரியார் மண் - சமூகநீதி மண் என்பதால், அத்துணைக் கட்சி களும் பா.ஜ.க.வைத் தவிர ஒன்றாக இந்த இடஒதுக்கீடு -இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தரப்படல் வேண்டும் என்று வற்புறுத்தியதை, ஏற்க தொடர்ந்து மறுத்தே வந்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தனித்தனியே வழக்குகள் போடப்பட்டன. தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளும் இதே வாதத்தினை முன்வைத்தன.
பீகாரைச் சார்ந்தவரான ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அமர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் அளிக்க வேண்டியது அவசியம் என்று தீர்ப்பளித்தார்.
அதற்கிடையில் 2019 இல் இரண்டாண்டுகளுக்கு முன்பு உயர்ஜாதியில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு - அவர்களுக்கு வருமான அடிப்படையில் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அவசர அவசரமாக 5 நாள்களில் 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், அடுத்த 5 நாள்களில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, பொருளாதார அளவுகோல்படி ஆண்டுக்கு 8 லட்சம் வருவாய் உள்ளவர்கள் ‘‘ஏழைகள் - பொருளா தாரத்தில் நலிந்தவர்கள்'' என்று ஒரு சில நாள்களிலேயே வரையறுத்துவிட்டார்கள்.
அரசமைப்புச் சட்டத்தை மீறியது ஆகாதா?
1. இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்குமேல் போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் (பாலாஜி வழக்கில்) கூறியதை மீற முடியாது என்ற நிலையில் - இந்த 10 சதவிகித கூடுதல் ஒதுக்கீட்டை உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்ற போர்வையில் தருவதும் அரசமைப்புச் சட்டத்தை மீறியது ஆகாதா? என்ற கேள்விக்குப் பதில் அளிக்க முடியவில்லை (இதைத்தான் நமது வழக்குரைஞர்களின் வாதங்களைக் கேட்டு, ஏற்ற சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் சஞ்சீப் பானர்ஜியும் கேட்டார் - அதன் விளைவு நாடறிந்த ஒன்று!).
இதன்மீது ஒன்றிய அரசு பிற்படுத்தப்பட்டவர் களுக்கான (ஓ.பி.சி.) 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை தர முடியாது என்று மறுத்தே வந்ததோடு, உச்சநீதி மன்றத்தில் வழக்கும் போட்டது.
உச்சநீதிமன்ற அமர்வு கேட்ட பல கேள்வி களுக்கும்கூட சரியான பதில் அளிக்க இயலாது - வேறு ஏதேதோ சொல்லி வந்தது.
உச்சநீதிமன்றம் ஏற்றது
இந்த வழக்கில் எதிர்க்கட்சியாக இருந்தபோதே தி.மு.க., அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரியது - உச்சநீதிமன்றமும் ஏற்றது.
தி.மு.க. சார்பில் மூத்த வழக்குரைஞர், நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் அவர்கள் சிறப்பாக வாதாடி னார்கள்.
மாதம் ரூ.66 ஆயிரம் வருமானம் வருபவர் எப்படி ஏழையாவார்?
‘‘8 லட்ச ரூபாய் வருமான வரம்பு எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்தீர்கள்? புள்ளிவிவரங்களின் (Data) ஆய்வுப்படி ஆய்வு செய்தீர்களா? மாதம் ரூ.66 ஆயிரம் வருமானம் வருபவர் எப்படி ஏழையாவார்? பொருளா தார வாழ்வாதாரம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுமே; நகரத்திற்கும் (Urban), கிராமத்திற்கும் இடையேயும் வேறுபடுமே என்று கேட்டது - ஜஸ்டீஸ் சந்திரசூட் தலைமையிலான அமர்வு.
இந்தக் கேள்விகளுக்குப் பதில் ஏதும் சரியானபடி கூறாமல், மூவர் குழு என்ற அதிகாரிகள் குழு, அதனை நியாயப்படுத்தி அறிக்கை தந்ததை முழு மனதோடு நீதிபதிகள் ஏற்காவிட்டாலும், இந்த ஆண்டுக்கு மருத் துவக் கல்வி P.G. - மேற்பட்டப் படிப்புத் தேர்வு, நீட் தேர்வினால் காலதாமதமாவதால், அனுமதிக்கிறோம். இறுதித் தீர்ப்பு - இதன்மீது மார்ச் மாதம் நடைபெறும் விசாரணைக்குப் பிறகு, என்று தீர்ப்பு கூறியதில் மிக முக்கியமான பகுதி - பிற்படுத்தப்பட்ட சமூக மாண வர்களுக்கு (ஓ.பி.சி.) 27 சதவிகிதம் அளிப்பது சட்டப்படி சரியானது என்று தீர்ப்பளித்துவிட்டனர்.
சமூகநீதி எழுச்சி வரலாற்றில் சிறந்த சாதனைபூர்வ வெற்றி!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை - உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது; உண் மையில் ஒரு பெரிய சமூகநீதி எழுச்சி வரலாற்றில் சிறந்த சாதனைபூர்வ வெற்றியாகும்!
இதனால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்கள் மேலும் 4,000 மாணவர்கள் மருத்துவப் படிப்பு, மேல் படிப்பில் பயன்பெறுவார்கள் என்பது என்ன சாதாரணமா? இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பலன் பெறப் போகின்றனர் என்பதுதான் மிகவும் முக்கிய மானது. மண்டல் குழு செயல்பாட்டால் எப்படி இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் கல்வியிலும், உத்தியோகத்திலும் பலன்பெற்றார்களோ அதனை ஒத்ததுதான் இது (அதற்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது) என்பதை பெற்றோர்களும், மற்றவர்களும் எண்ணிப் பார்க்கவேண்டும்.
கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர் களின் மருத்துவக் கனவு இதன்மூலம் செயலுரு கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
திராவிடர் ஆட்சி தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறுவதன் விளைவுதான் தொடர்ந்து பறிக்கும் வெற்றிக் கனிகள்.
தந்தை பெரியார் வகுப்புரிமையைப் பாதுகாக்க நடத்திய போராட்டத்தின் விளைவாக முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் (15.4.1951).
ஏற்பட்டதால் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு.
காலங்காலமாக மறுக்கப்பட்ட சமூகநீதி மீண்டும் நமக்குக் கிட்டியது!
இந்த வரலாற்றுப் பெருமைக்குரிய இந்தத் தீர்ப்பினை தி.மு.க. பெற்றதன்மூலம், காலங்காலமாக மறுக்கப்பட்ட சமூகநீதி மீண்டும் நமக்குக் கிட்டியது!
இதனையெல்லாம் உணர்ந்தேதான் ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று திராவிடர் கழகம் கூறியது 100-க்கு 100 எவ்வளவு சரியானது என்பது புரிந்துவிட்டதல்லவா?
திராவிட மாடல் ஆட்சியில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கிறது என்பதை இனியாவது சமூகநீதியை எதிர்க்கும் கூட்டம் புரிந்துகொள்ளட்டும்!
பெற்றது இப்போதும் கைம்மண் அளவு; இனி பெறவேண்டியது உலகளவு என்பது இனிமேல் புரியும்! அதிலும் வெற்றி பெறுவோம்.
தி.மு.க. தலைவருக்கு நமது வாழ்த்துகள்!
மாணவர்களே, பெற்றோர்களே நன்றி சொன்னாலும், சொல்லாவிட்டாலும் திராவிடர் இயக்கமும், அதன் ஆட்சியும் அதன் கடமையைத் தொடர்ந்தே ஆற்றிக் கொண்டே வெற்றி நடை - வீரநடை போடும் என்பது உறுதி!
தி.மு.க. தலைவருக்கு நமது வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
8.1.2022