வெள்ளி, 23 ஏப்ரல், 2021

மானமிகு வைகோ கூறுவது முக்கியமானது (பாட திட்டத்தில் தலைகீழ் மாற்றம்)


 ம.தி.மு.க. பொதுச்செயலாளர் - திராவிட இயக்கப் போர் வாள் வைகோ எம்.பி., அவர்கள் விடுத்துள்ள ஓர் அறிக்கை இந்தக் காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது.

‘‘டில்லி பல்கலைக் கழகத்தின் இளங்கலை வரலாற்றின் பழைய பாடத்திட்டத்தின் முதல் பாகம், இந்தியாவின் தொடக்க கால வரலாற்றைப் பேசுகிறது. ஆனால் தற்போது புதிய பாடத்திட்டத்தின் முதல் பாகம், “பாரத் வர்ஷாவின் கருத்துருவாக்கம் (Concept of Bharatvarsha)” என்ற பாடம் முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. “பாரதத்தின் நித்தியம்” எனும் தலைப்பில் வேதங்கள், வேதாந்தங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்ற வைதீக பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன. ‘ஆரம்ப காலத்திலிருந்து கி.மு. 550 வரை' என்ற மூன்றாவது தாளில், ‘‘சிந்து - சரஸ்வதி நாகரிகம் மற்றும் அதன் தொடர்ச்சி, எழுச்சி மற்றும் வீழ்ச்சி” பாடமாக இடம்பெற்று இருக்கின்றது. ‘சரஸ்வதி’ என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஆறு; இதற்கு வரலாறோ, தொல்லியல் ஆதாரமோ கிடையாது.

புராண கால ‘சரஸ்வதி’ நதியை உண்மை வரலாறாக ஆர்.எஸ்.எஸ். சனாதன அமைப்புகள் சித்தரித்து வருவதைப் பாடத்திட்டத்திலும்  புகுத்திவிட்டனர்.

‘இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம்’ என்ற 12 ஆவது தாளில், “இராமாயணம் மற்றும் மகாபாரதம்” போன்றவை தனித் தனி தலைப்புகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

‘இடைக்கால இந்தியா’ பற்றி தற்போதுள்ள பாடத்திட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாறு குறித்து மூன்று தாள்கள் உள்ளன. அந்தக் காலகட்டம் குறித்து மூன்று பருவங்களுக்கு மேல் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் புதிய பாடத்திட்டத்தில் முஸ்லிம்கள் கால ஆட்சியின் முக்கியத்துவத்தைக் குறைத்து ஒரே ஒரு தாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பாடத்திட்டத்தில் இடம்பெறாத ஒன்றை முஸ்லிம் மன்னர்கள் பற்றிய பாடங்களில் ‘படையெடுப்பு’ என்ற சொல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதுவரை ‘இந்திய சமூகம்’ என்று பொதுத் தலைப்பில் இடம் பெற்றிருந்த பாடத்தை மாற்றி, ஏழாவது தாளில், ஹிந்து சமூகம், முஸ்லிம் சமூகம் என்று பிரித்து, அவற்றில் ஹிந்து சமூகத்தின் ஜாதி மற்றும் தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் என்று பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதே போன்று முஸ்லிம் சமூகத்தின் பிரிவுகள் மற்றும் தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகள் தொடர்பான பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

‘நவீன இந்தியா’ குறித்த பாடத்தில், தற்போது 1857 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் அரசியல் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவை புதிய பாடத்தில் நீக்கப்பட்டுள்ளன.

‘1857’ சிப்பாய் கிளர்ச்சியை, ‘முதல் சுதந்திரப் போர்’ என்று ஹிந்து மகா சபை தலைவர் வி.டி. சாவர்கர் வர்ணித்ததை அப்படியே பாடத்தில் சேர்த்துள்ளனர். அதற்கு முன் வங்காளத்தில் நடந்த சன்யாசி கிளர்ச்சி, ஒடிசாவில் பைக்கா கிளர்ச்சி, தமிழ்நாட்டில் வேலூர் புரட்சி போன்றவை இடம்பெறவில்லை.

1905 வங்கப் பிரிவினை மற்றும் அதற்கு எதிரான குறிப்புகள் பாடத் திட்டத்தில் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளன.

காந்தியார், பண்டித ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்ற வரலாற்றில் வாழும் மாபெரும் தலைவர்களின் முக்கியத்துவத்தை பாடத்திட்டத்தில் இருட்டடிப்பு செய்துள்ளனர்.

ஹிந்துத்துவ சனாதனக் கோட்பாட்டிற்கு ஏற்ற வகையில் இளங்கலை வரலாறு பட்டப் படிப்புக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. கல்வித் துறையில் காவி சித்தாந்தத்திற்கு பாதை அமைக்கும் பாசிசப் போக்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்‘’ என்று தம் அறிக்கையில் வைகோ அவர்கள் குறிப்பிட்டு இருப்பது இந்தக் காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது.

மத்திய அரசுப் பள்ளிகளில் 4 ஆம் வகுப்புப் பாடத்தில் ‘‘பட்டியல் இன மக்கள் யார்?’’ என்பதற்கான பதில், ‘‘இந்தியாவின் தீண்டத்தகாத ஜாதி’’ என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. (Scheduled Caste - Untouchable Castes of India). 

இப்பொழுது மட்டுமல்ல, என்.சி.இ.ஆர்.டி. என்ற பாடநூல் தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ள பாடத் திட்டங்கள் காவி மயம் ஆக்கப்படுவதாக ‘சகமத்’ என்னும் வரலாற்றுப் பேராசிரியர்களின் பெருமன்றத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதுண்டே!

‘‘சிந்து சமவெளி, அரப்பா நாகரிகம் வேத காலத்துக்கு உரியதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது'' என்று அவ்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டது (‘தி இந்து’, 1.2.2002).

வரலாற்றுப் பேராசிரியர் கே.என்.பணிக்கர் ‘ஃப்ரண்ட் லைன்’ இதழிலும் (19.1.2001) விரிவாக எழுதியுள்ளார். மறுப்பு அளிக்கப்படவில்லை.

அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமான அரசு அதி£ரத்தில் இருப்பதால், ஹிந்து சனாதனக் கண்ணோட்டத்தோடு பாடத் திட்டங்கள் வகுக்கப்படுவதை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டி இருப்பதை நாட்டு நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் கவனத்துடன் அணுகி, எதிர்ப்புக்குரலை எல்லா வகைகளிலும் உயர்த்தித் தடுத்து நிறுத்த முன்வரவேண்டியது மிகவும் அவசியமாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக