வெள்ளி, 23 ஏப்ரல், 2021

உடைபடும் ‘துக்ளக்'கின் மூக்கு!அவமானப்பட்டது எந்த முருகன்?

 உடைபடும் ‘துக்ளக்'கின் மூக்கு!

அவமானப்பட்டது எந்த முருகன்?

*           பா.ஜ.க. தலைவர் முருகன் வேல் எடுத்தார். சீமான் வேல் எடுத்தார். ஸ்டாலினும் வேலைக் கையில் எடுத்தார். துரைமுருகனும் வேலைப் பிடித்தார். லேட்டஸ்ட் உறுப்பினர் திருமாவளவன் வேலைப் பிடித்தார். கழகங்கள் கேவலப்படுத்திய முருகக் கடவுளின் வேல் பிடிக்கும் அரசியல் களமாகி விட்டது பெரியார் மண். நல்ல  வேளை ஈ.வெ.ரா.வும், கருணாநிதியும் அவர்கள் கொள்கைக்கு நேர்ந்த அவமானத்தைப் பார்க்காமல் போய்ச் சேர்ந்தார்கள்.

- ‘துக்ளக்'கில் குருமூர்த்தி

>>           ஆக வேலைப் பிடிப்பது அவமானம் என்று குருமூர்த்தி கும்பலுக்குத் தெரிந்துவிட்டது.

பா.ஜ.க. தலைவர் முருகன் தூக்கிச் சென்ற வேலினை திருத்தணி முருகன் கோவில் கருவறைக்குள் வைத்துப் பூஜை செய்ய விடுத்த வேண்டுகோளை அர்ச்சகப் பார்ப்பான் மறுத்தானே - அப்பொழுது அவமானப்பட்டது எந்த முருகன்?

நடிகவேலா - வேளா?

*           பட்டுக்கோட்டை அழகிரிசாமி மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணனான எம்.ஆர்.ராதாவுக்கு ‘நடிகவேல்' என்ற பட்டத்தைக் கொடுத்தார். பிறகு ‘வேல்' ‘வேள்' ஆகிவிட்டது.

- ‘துக்ளக்'கில் குருமூர்த்தி

>>           அட அவுட்டுத்திரி அண்டப் புளுகே, இது என்ன காஞ்சி குச்சிக்காரருக்கு ஜெகத்குரு என்று நீங்கள் அழைப்பது போன்றதா?

அஞ்சா நெஞ்சன் கொடுத்தப் பட்டம் ‘‘நடிகவேள்'' என்பதுதான்.

‘திடீர் ஞானோதயம்!'

*           மனு ஒரு திராவிடர்.

- ‘துக்ளக்'கில் குருமூர்த்தி

>>           ஆரியர் - திராவிடர் என்பதே ஒரு புரட்டு - வெள்ளைக் காரன் கற்பித்தது என்று சொன்ன கும்பலுக்கு இப்பொழுது திடீர் ‘திராவிட ஞானோதயம்' ஏற்பட்டுவிட்டதோ!

ஜீவ சுபாவமோ!

*          அரசியல் நிர்ணயச் சட்டப் பிரிவு 15, 16-ன்படி சமூக, கல்வி நிலையில் பின்தங்கி இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு 15 ஆண்டுகளுக்கு மட்டுமே என்று வரையறை செய்யப்பட்டது.

- ‘துக்ளக்'கில்  சிறப்புக் கட்டுரை

>>           இது உண்மையா? அரசமைப்புச் சட்டத்தில் எங்கே சொல்லப்பட்டுள்ளது? சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசீலிக்கவேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளதே தவிர - கல்வி, வேலை வாய்ப்பில் 15 ஆண்டுகள் என்று வரையறை செய்யப்படவில்லையே!

பொய்யும், புரட்டும்தான் இந்தப் பிறவிகளுக்கு ஜீவ சுபாவமோ!

இப்படியும் விளக்கம் சொல்லலாம்!

*          பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் பாரதியாரின் பாடல் வரிகளைச் சொல்லுகிறார் என்று எல்லாம் புகழாரம் சூட்டும் திருவாளர் நாராயண அய்யர் (மாலன்) பாரதியாரின் ‘‘பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்!'' என்ற பாடல் வரிக்குச் சொல்லும் பாஷ்யம் இதோ:

‘‘மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் கல்வி முறையிலிருந்து, மூளையைக் கூர் சீவும் புதிய கல்வித் திட்டம் 2021-22 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக  அமல்படுத்தப்படுகிறது'' என்று எழுதியுள்ளார்.

>>           மொட்டைத் தலைக்கும், விளக்கெண்ணெய்த் தடவிய முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்பார்களே, அது இதுதான்.

புதிய கல்விக் கொள்கையை எதோடு முடிச்சிப் போடுகிறார் பார்த்தீர்களா? ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளார். இப்பொழுது மார்க் வாங்கும் கல்வி முறை என்பது மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பது என்று தந்தை பெரியார் சொல்லி வந்ததைக் காலம் கடந்தாலும் ஒப்புக் கொண்டுவிட்டார்களே!

பாரதியின் பாடல் வரிக்கு இப்படியும் விளக்கம் சொல்லலாம்தான்.

‘‘பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம் - முஸ்லிம்களின் பள்ளி வாசல்களை இடித்துவிட்டு ஹிந்துக் கோவிலாக்குவோம்.'' (அயோத்தியில் என்ன நடந்தது) என்று பாரதி பாடினார் என்று சொல்லலாம்;

‘‘பள்ளிகளை எல்லாம் இழுத்து மூடிவிட்டு (ராஜாஜி பாதையில்) பார்ப்பனச் சுரண்டலுக்கு வழிவகுக்கக் கோவிலாக்குவோம்'' என்று பாரதி பாடினான் என்று கூட சொல்லலாமே!

- மின்சாரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக