புதன், 30 அக்டோபர், 2024

‘‘தீபாவளி’’யைக் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்குச் சில செய்திகள்!

விடுதலை நாளேடு

 ‘‘தீபாவளி’’ வந்தது திருமலை நாயக்கன் காலத்தில்தான் – சோழர் காலத்தில் கிடையாது!

ஒரே பண்டிகைக்குப் பல்வேறு கதைகள் ஏன்?
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

‘தீபாவளி’ வந்தது திருமலை நாயக்கன் காலத்திலிருந்துதான், சோழர் காலத்தில் கிடையாது. ஒரே பண்டிகைக்குப் பல்வேறு கதைகள் வந்தது எப்படி? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
‘தினத்தந்தி’யின் ஞாயிறு இதழில் வெளிவரும் இணைப்பான ‘தேவதை’ (27.10.2024) பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுரையில் உள்ள சில தகவல்களைப் படியுங்கள். அதன் பிறகு, அதன்மூலம் சிறிதும் விருப்பு வெறுப்பற்று, பகுத்தறிந்து, பொங்கலைப் போல, கொண்டாடத்தக்க யோக்கியதை இதற்கு உண்டா? என்று முடிவுக்கு வாருங்கள்.
‘‘அறியாமை என்பதைவிட, உலகின் மானுட வர்க்கத்திற்கு மிக மோசமான நோய் வேறு இல்லை’’ என்றார் அமெரிக்க நாட்டுப் பகுத்தறிவு மேதை இங்கர்சால் அவர்கள்.
இந்தத் தீபாவளியே அதற்குச் சரியானதொரு எடுத்துக்காட்டு.

மேலும் கொடுமையானது இது. ‘‘அசுரர்கள்’’ என்று ஆரியர்களால் பெயர் சூட்டப்பட்டு, அவதூறு சேற்றை அவர்கள்மீது பூசி, ‘தேவர்கள் வென்றார்கள், கொன்றார்கள்’ என்று கதைகள் புனைவுமூலம் நம் திராவிட இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பினை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டுக்கதைப் புராணம்.
தீபாவளிபற்றி அவ்வேடு வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையை முதலில் தருகிறோம், படியுங்கள்!
‘‘தீபாவளியை முதன்முதலில் கொண்டாடியவர்!’’
‘‘தீபாவளியை முதன்முதலாகக் கொண்டாடி யவன், நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றன புராணங்கள்.
‘‘தமிழகத்தில் சோழர் காலம்வரை தீபாவளி கொண்டாடப்படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில்தான் முதன்முதலாக தீபாவளி கொண்டாடப்பட்டது.’’

தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகையாகும். வாத்சாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.
கைலாய மலையில் தீபாவளி நாளில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடியதாக ஒரு கதை உண்டு. அதை நினைவூட்டும் விதமாகவே குஜராத் மாநில மக்கள் தீபாவளி நாள் இரவில் சொக்கட்டான் ஆடும் பழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து முதலில் தோன்றி யவர் தன்வந்திரி. ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்த இவர் தோன்றிய நாளே தீபாவளி என்ற கருத்தும் உண்டு.

சிவபெருமானின் உடலில் பாதியை அடைய திருக்கேதாரத்தில் தவம் செய்தார் பார்வதி. சதுர்த்தசி நாளில் சக்திக்கு தன் உடலில் பாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் சிவன். அதன் அடிப்படையில், கணவனுடன் எந்நாளும் சேர்ந்தே இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு தீபாவளி நாளில் கேதாரகவுரி விரதம் இருக்கி்ன்றனர் பெண்கள். அப்போது அம்மியையும், குழவியையும் சிவசக்தியாக பாவித்து பூஜை செய்கின்றனர்.
தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து, தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று விஷ்ணு புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


சிறீரங்கத்தில் சிறீரங்கநாதருக்கு மிகச் சிறப்பான தீபாவளி கொண்டாட்டம் உண்டு. அன்று அவருக்கு விசேஷமாக ‘ஜாலி அலங்கார’ நிகழ்ச்சி நடைபெறும். ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு துணிகளில் மூட்டையாகக் கட்டி, மேளதாளங்கள் முழங்க, நாகஸ்வர இசை ஒலிக்க, வேத பாராயணத்துடன் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பதே ஜாலி அலங்கார நிகழ்ச்சி ஆகும்.
குஜராத் மாநிலத்தில் வியாபாரிகள் புதுக் கணக்கு துவங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று சிறுவர்கள் பட்டம் பறக்கவிட்டு மகிழ்வார்கள்.

புத்த பிரான் முக்தி அடைந்த நாளாக பவுத்தர்க ளும், மகாவீரர் முக்தி அடைந்த நாளாக ஜைனர்களும் தீபாவளி திருநாளை கொண்டாடுகிறார்கள்.
வாரணாசியில் ‘கார்த்திகை பூர்ணிமா’ என்ற பெயரில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னர் தன்வந்திரி பகவானுக்கு விழா எடுக்கின்றனர். இந்த விழாவுக்கு ‘தந்தேராஸ்’ என்று பெயர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில், தீபாவளியன்று குபேர பூஜை செய்வதை முக்கியமானதாக கருதுகி்ன்றனர். அன்று செல்வத்தின் அதிபதியான குபேரனை வழிபட்டால், ஆண்டு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது என்பது அவர்கள் நம்பிக்கை.
உத்தரப்பிரதேசத்தில், சீதாதேவியை ராமர் மீட்ட திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.


மேற்கு வங்காளத்தில் காளிதேவி வழிபாடாக ‘மகாநிசா’ என்ற பெயரில் தீபாவளியை கொண்டாடு கி்ன்றனர்.
கொல்கத்தாவி்ல் தீபாவளியையொட்டி, ‘பூவாணப் போட்டி’ நடைபெறுகிறது. எவரது வாணம் (பட்டாசு) வானில் அதிக உயரத்தில் சென்று வெளிச்சப் பூக்களைக் கொட்டுகிறதோ, அவரே வெற்றி பெற்றவர்!’’
இதுவே அக்கட்டுரையாகும்.

தீபாவளிப் பண்டிகையை முதன்முதலாகக் கொண்டாடியவன் நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றனவாம் புராணங்கள்!
ஆதாரம் எது? புராணம் – புராணங்களே புளுகு மூட்டைகள் என்பது பலரும் ஒப்புக்கொண்ட ஒன்று.
‘‘இந்தப் புளுகு கந்தப் புராணத்திலும் இல்லை’’ என்பது கிராமியப் பழமொழி!
திராவிடர்களை சூழ்ச்சியால் கொன்றது மட்டுமல்ல, அதனை அவனையே கொண்டாடச் சொன்னான் என்றும், மகனையே கொண்டாடச் செய்தார்கள் என்பதும் எவ்வகை மூளைச்சாயம் பார்த்தீர்களா? பண்பாட்டுப் படையெடுப்பின் தத்துவம்!
இரணியன் மகனே பிரகலாதன், இராவணனின் தம்பி வஞ்சக விபீடணன், வாலியின் தம்பி சுக்கிரீவன், அவனை சாகடிக்க குரங்கு வகையான அனுமார். இப்படி ஆரிய எதிரிகளையே அப்போது வளைத்துப் போட்டு தங்களது ஆதிக்க வெற்றியை நிலை நிறுத்தினர் என்ற பொது உண்மையை அனைத்துப் புராண இதிகாசங்களின் இத்தகைய கதைகள்மூலம் அறிந்துகொள்ளலாமே!
இக்கட்டுரையாளர் கருத்துப்படி,

1. தமிழ்நாட்டில் சோழர் காலம்வரை (அதாவது 13 ஆம் நூற்றாண்டு வரை) தீபாவளி என்ற ஒரு பண்டிகையே கிடையாது. அதற்குப் பிறகுதான். இவ்வடபுலத்துப் பண்டிகையை யார் திணித்தது?
திருமலை நாயக்கர் மன்னர்கள் காலத்தில்தான் முதன்முதலில் கொண்டாடப்பட்டது என்று சொல்வதின் பொருள் என்ன?
ஒரு பண்பாட்டுப் படையெடுப்புதானே!
பழனி கோவில் அர்ச்சகர்களாக பார்ப்பனர்கள் வந்தது எப்படி?
பழனி கோவிலில் புலிப்பாணி சித்தர்களை, அர்ச்சகர் பொறுப்பிலிருந்து விரட்டிவிட்டு, கொடுமுடியிலிருந்து பார்ப்பனர்களைக் கொண்டுவந்து அந்தப் பொறுப்பில் வலுக்கட்டாயமாகத் திணித்தது திருமலைநாயக்கனின் அமைச்சரான இராமப்பையன் என்பது பல பதிவுகள்மூலம் தெரிய வருகிறது. (பழனி தலப் புராணம்)

இது பண்பாட்டுப் படையெடுப்பைத் தவிர, வேறு என்ன?
இதில் சுட்டிக்காட்டப்பட்ட கட்டுரையில், தொட்டுக் காட்டப்படவேண்டிய அளவிற்குப் புலப்படும் மற்றொரு உண்மை.
‘தீபாவளி’ என்ற வடமொழிச் சொல் பெயர் பெற்ற இப்பண்டிகைக்கான கதைகள் ஒரு வகையானதல்ல.
பல ஊர்களில், பல மாநிலங்களில், பலரால், பலவிதமான காரணங்களாக அமைந்து கொண்டாடப்படு கின்றன!
இதைப் பெருமையாக கருதுவோருக்கு இது ஏனோ புரியவில்லை!
இரண்யாட்சதன் பூமியைப் பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து, பிறகு மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து, அதை மீட்டான். மீட்ட பன்றி அவதாரத்திற்கும், ‘மகாவிஷ்ணுவுக்கும்’ – பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகா அசுரனாம்!
தேவன் – தேவி இருவருக்கும் பிறந்த பிள்ளை எப்படி அசுரன், ராட்சசன், அரக்கனாக முடியும்?
தேவன் –தேவி – பிள்ளையும் தேவர்கள் என்றுதானே அழைக்கப்படுதல் நியாயம்!
எவராவது சிந்தித்தார்களா?
என்ன குற்றம்?
ஆரியர்களின் யாகத்தை – பண்பாட்டை – படையெடுப்பைத் தடுத்தது குற்றமாம்!
அதற்கு வஞ்சகமாக கொலை நாளாம்!
அறிவுள்ளோர், உணர்வுள்ளோர் ‘தீபஒளி’ என்று அழைக்கலாமா? இதைக் கொண்டாடலாமா?
சிந்திக்கும் மனிதர்களாக மாறுங்கள்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
29.10.2024 

‘பிராமண’ – சூத்திரப் போராட்டத்திற்கு தூபம் போடுவதா? சந்திப்போம்!

 


விடுதலை நாளேடு

பிராமணர்களைத் துவேஷிக்கிறார்களாம், திரைப் படங்களில் கேலி கிண்டல்கள் செய்கிறார்களாம்.

தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை அவமதித்தால் அத்தகையவர்கள்மீது நடவடிக்கை எடுக்க பி.சி.ஆர். சட்டத்தின் (Prevention of Civil Right Act 1955) அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

காஞ்சி சங்கர மடத்தின் புனிதத் தன்மையை இழிவுபடுத்துதல் போன்றவற்றைச் செய்தால் பி.சி.ஆர். சட்டம் போல புதிய சட்டம் கொண்டு தண்டிக்க வேண்டுமாம். அதற்காக ஆர்ப்பாட்டம் – பேரணிகளை நடத்தப் போகிறார்களாம்! (நவம்பர் 3ஆம் தேதியன்று சென்னையில்) இராமாயண காலத்திலிருந்து விபீஷணர்களும் சுக்கிரீவன்களும், அனுமார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அயோத்தியிலிருந்து ராமனையும் சேர்த்து மூவர்தான் வனவாசம் சென்றார்கள்.

இந்த மூவரும் சேர்ந்தா திராவிட மாவீரன் இராவணனை வீழ்த்தினார்கள்? உடன் பிறந்தே கொல்லும் வியாதியான வீபிஷண ஆழ்வார்கள், அனுமார்கள் காட்டிக் கொடுத்துத்தானே அந்த வீழ்ச்சி நடைபெற்றது.

‘இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் ‘‘விபீஷணப் பரம்பரை’’ வளர்ந்து வருவதுதான், என்றார் தந்தை பெரியார் (தந்தை பெரியார் பிறந்த நாள் 90ஆம் ஆண்டு ‘விடுதலை’ மலர் 17.9.1969)
அந்த நிலை இன்னும் நீடிக்கிறதே – வெட்கக் கேடு!

பிராமணர்களைப் பாதுகாக்கப் போகிறார்களாம்! அவர்களைப் ‘பிராமணர்கள்’ என்று சொல்லும்போதே – அப்படி சொல்லுகின்றவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறார்கள் என்ற அடிப்படை தெரியாத அறிவிலிகள் என்பதற்காகப் பரிதாபப்பட வேண்டியுள்ளது. இழிவில் சுகத்தைக் காணும் கேவலம்!

‘அவன் பிராமணன் என்றால் நீ யார்?’ சொல்! நீ சூத்திரன் என்று ஒப்புக் கொண்டு விட்டாயே!
பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவன் பிராமணன், தோளிலிருந்து பிறந்தவன் சத்திரியன் – தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன் – காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன் என்று ஹிந்து மதத்தின் மனுதர்மம் கூறியிருப்பதை – ஹிந்துத்துவாவவைக் காப்பதற்காகத் தொடை தட்டும் தன்மானமற்ற தக்கைகளுக்குத் தெரியுமா?
சூத்திரன் என்றால் யார்? அதையும் அதே மனுதர்ம சாஸ்திரம் தான் ஓங்கி அடித்துக் கூறுகிறது – இதுவரை தெரியாவிட்டாலும் இப்பொழுதாவது தெரிந்து கொண்டு போதை தெளியட்டும்!
‘சூத்திரன் ஏழு வகைப்படும்.

(1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.
(2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்.
(3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்.
(4) விபச்சாரி மகன்.
(5) விலைக்கு வாங்கப்பட்டவன்.
(6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்.
(7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (மனுதர்மம் அத்தியாயம் – 8; சுலோகம் – 415).

இவர்கள்தான் சூத்திரர்கள். ‘பிராமணர்’களுக்காக வரிந்து கட்டி வக்காலத்து வாங்கிக் கோதாவுக்குள் குதிக்கும் ஆசாமிகள் இந்த ‘இழிவை’யும் ஏற்றுக் கொண்டு மானத்தை விற்று இழிவுச் சேற்றில் கிடந்து உழலப் போகிறார்களா?

‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!’ என்ற முழக்கத்தை திராவிடர் கழகம் கொடுத்த பிறகு தானே இப்பொழுது வெளிப்படையாக சூத்திரன் என்று சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மறுபடியும் ‘பிராமணர்’களுக்காக மடிகட்டி நிற்கும் மட சாம்பிராணிகள் தங்களை விபச்சாரி மகன் என்று ஏற்றுக் கொள்ளத் துடிக்கிறார்களா?

பி.சி.ஆர். சட்டம் போல ‘பிராமணர்களை பழிப்பவர்களை தண்டிக்க சட்டம் கொண்டு வர’ வேண்டுமாம்.
நியாயமாகப் பார்க்கப் போனால் பி.சி.ஆர். சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய முதல் ஆசாமி காஞ்சி சங்கராச்சாரியார்தான்.

‘தீண்டாமை ேக்ஷமகரமானது என்ற எண்ணம் தமக்கிருக்கிறது’ என்று சொன்னவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதிதான் (ஸ்ரீ ஜெகத்குருவின் உபதேசங்கள்’’ இரண்டாம் பாகம்).

தீண்டாமை ஒழிப்புத் தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியை காந்தியார் பாலக்காட்டில் சந்தித்ததுண்டே! அப்பொழுது என்ன நடந்தது?

‘16.10.1927 அன்று பாலக்காட்டில் மாட்டுக் கொட்டகையில் சங்கராச்சாரியாரைச் சந்தித்த காந்தியாரிடம், சங்கராச்சாரியார் கூறுகிறார். ‘‘ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில்’’ சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கின்றது என்றும் ஸ்வாமிகள் (காஞ்சி சங்கராச்சாரியார்) காந்தியடிகளிடம் தெரிவித்தார்.’’ (ஆதாரம்: ‘தமிழ்நாட்டில் காந்தி‘ பக்கம் 575,576).

சங்கரமடத்துக்கு வக்காலத்து வாங்கும் கூலிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

பி.சி.ஆர். சட்டத்தின்படி அந்த சங்கராச்சாரியார் கைது செய்யப்படாதது ஏன்? பதில் சொல்லுமா இந்த வாடகை ஒலி பெருக்கிகள்?
இந்த இலட்சணத்தில் காஞ்சி சங்கர மடத்தின் புனிதத் தன்மையை இழிவுபடுத்துகிறோமாம்.

இழிந்த குணத்தை இரத்தவோட்டமாகக் கொண்டவர்களால்தான் இப்படி எல்லாம் பேச முடியும்.

ஸ்திரிகளுக்குச் சொத்து பாத்யம் கொடுத்தால் – அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தால் என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவாகூட ஸ்திரிகள் ஓடிப் போயிடுவா’ என்று சொன்னவரும் சாட்சாத் அதே சங்கராச்சாரியார்தான்.

பார்ப்பனப் பெண்களையும் உள்ளடக்கி எல்லாப் பெண்களையும் ஒட்டு மொத்தமாக ‘நமோ சூத்திரா’ என்று சொல்லும் ஹிந்துத்துவாவுக்குப் பல்லக்குத் தூக்கும் பேர் வழிகளின் கூட்டத்தை என்ன சொல்லி நகைப்பது!

ஆண்டுக்கொருமுறை ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பூணூலைப் புதுப்பிக்கிறார்களே, பூணூல் கல்யாணம் செய்கிறார்களே – அதன் தாத்பரியம் என்ன? அவர்கள் துவி ஜாதிகளாம் – அதாவது இரு பிறவியாளர்களாம்.

‘சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை – பூணூல் முதலியவற்றைத் தரித்தால், அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டி விட வேண்டும்‘ (மனுதர்மம் அத்தியாயம் 9 – சுலோகம் 224).

‘பிராமணனுக்குத் தலையை முண்டிதம் செய்வது (மொட்டை அடிப்பது) கொலைத் தண்டனையாகும். மற்ற வர்ணத்தாருக்கு கொலை தண்டனை உண்டு’’ (மனுதர்மம் அத்தியாயம் – 8 சுலோகம் 379).
இந்த 2024லும் கூட மனுதர்ம சாஸ்திரத்துக்கு வக்காலத்து வாங்கும் வடிகட்டிய – மூளையை அடகு வைக்கும் ஆசாமிகளை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

இந்த நிலையில் பிராமணர்களைப் பாதுகாக்கப் போகிறார்களாம்! இவர்களின் அடிமைப்புத்தியைப் புரிந்து கொள்வீர்!
பேரணியாம் – ஆர்ப்பாட்டமாம் – அனுமார் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

இது தந்தை பெரியார் மண் – திராவிடத் தத்துவ உரம் பதிந்த பூமி!

இந்த நிலையில் ‘பிராமணர்கள்‘ என்பதும் – அவர்களைப் பாதுகாப்போம் என்பதும் – ஆர்ப்பாட்டம் என்பதும் – எல்லாம் நூற்றுக்கு 97 விழுக்காடு மக்களைச் சீண்டுவதாகும். அவர்களைச் சூத்திரர்கள் (விபச்சாரி மக்கள்) என்று இழிவுபடுத்துவது என்று முனைந்தால், தன்மானமுள்ள பார்ப்பனர் அல்லாதார் திரண்டு எழுவார்கள்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!