இராமர் சேது பாலம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் ஒப்புதல்
மீண்டும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அமைக்க திராவிடர் கழகம் வேண்டுகோள்!
அதற்காக தோழமைக் கட்சிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தவும் தயார்!
திருச்சி, டிச.24 ''இராமர் சேது பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் கிடையாது'' என்று நாடாளுமன் றத்தில் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சரே ஒப்புக்கொண்டி ருக்கின்றார். எனவே, மீண்டும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அமைத்தே தீரவேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க. உள்பட, அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் தந்தை பெரியாரின் நினைவு நாளான இந்த நாளில், திராவிடர் கழகம் வேண்டுகோள் விடுக்கிறது. இதற்காகப் போராட வேண்டி வந்தால், எல்லோரையும் ஒருங்கிணைத்துப் போராட்டத்தை நடத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
இன்று (24.12.2022) திருச்சிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பகுத்தறிவுப் பகலவனின் 49 ஆம் ஆண்டு நினைவை யொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செய்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
தந்தை பெரியார் எதை விரும்பினார்களோ, அப்படிப்பட்ட இலட்சியங்கள் இன்றைக்கு நிறைவேறிக் கொண்டிருக்கின்றன
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய 49 ஆம் ஆண்டு நினைவு நாள் என்பது ஒரு வர லாற்றுக் குறிப்பு. மற்றபடி தந்தை பெரியாருடைய அருந்தொண்டை, அவர்கள் வாழ்ந்த காலத்தைவிட, இன்று உலகம் முழுவதும் உணர்ந்து வருகின்றது. இன்றைக்குப் பெரியார் உலக மயமாகி இருக்கிறார்; உலகம் பெரியார் மயமாகி இருக்கிறது. தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளில், ''திராவிட மாடல்'' ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய வகையிலே நடந்துகொண்டுள்ளது, தந்தை பெரியார் எதை விரும்பினார்களோ, அப்படிப்பட்ட இலட்சியங்கள் இன்றைக்கு நிறைவேறிக் கொண்டிருக் கின்றன.
50 ஆண்டுகளுக்கு முன்....
இன்னுங்கேட்டால், அறிஞர் அண்ணா அவர்கள், 50 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி அமைத்தபொழுது, ''பெரியாருக்கு இந்த ஆட்சி காணிக்கை'' என்று சொன்னார்கள்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், ''அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற பெயராலே, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளோடு நான் புதைக்கிறேன்'' என்று சொன்னார்.
ஆனால், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை, நம்முடைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அதையும் அகற்றினார்.
இன்றைக்குத் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை என்பது உலகளாவிய கொள்கையாக இருக் கிறது. பெரியார் அவர்கள் எதை எதையெல்லாம் விரும் பினார்களோ, அவை அத்தனையும் நடைமுறைக்கு வருகிறது.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்
அதுமட்டுமல்லாமல், 'திராவிட மாடல்' ஆட்சி, தொடங்கிய எல்லா திட்டமும், உண்மை அடிப் படையில் நடந்துகொண்டிருக்கின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக நேற்று (23.12.2022) ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில், ''இராமர் பாலம் என்ற ஒன்று இல்லை'' என்று சொல்லியிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம்தான் முன்னின்று, ''சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறினால், தென்மாவட்டங்கள் சிறப்படையும்; வேலை வாய்ப்பு கள் வரும்'' என்று சொன்னது.
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, திராவிட முன்னேற்றக் கழகம், யு.பி.ஏ. அரசில் அங்கம் வகித்தது. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் முடிவடையக்கூடிய நிலையில் இருந்தது. டி.ஆர்.பாலு அவர்கள் அந்தத் துறை அமைச்சராக இருந்தார். அந்தத் திட்டம் நிறைவேற இன்னும் 12 கிலோ மீட்டர் பணிகள்தான் மீதம் இருந்தது.
அந்தத் திட்டத்திற்காக 2,000 கோடி ரூபாய்க்குமேல் செலவழிக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும். திருச்சியிலி ருந்து, தென்மாவட்டங்கள் வரை உள்ள மக்களின் வாழ்வாதாரம் பெருகக் கூடிய அளவில் இருந்த திட்டத்தை, வேண்டுமென்றே சுப்பிரமணியசாமி, மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்றவர்கள் அந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்குப் போட்டு, ''இராமர் பாலம்'', ''இராமர் பாலம்'' என்று சொல்லி, அந்தத் திட்டத்தையே கைவிடும்படியாக ஆக்கினார்கள்.
அதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும், மற்ற அமைப்புகளும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன.
''இராமர் சேது பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் கிடையாது''
ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல்!
அதன் பிறகு கலைஞர் சொன்னார், ''வேண்டு மானால், அதை விட்டுவிட்டாவது, அந்தத் திட் டத்தை நிறைவேற்றுங்கள்; அதன்மூலமாக, வேலை வாய்ப்புகளும், பொருளாதார செழிப்பும் ஏற்படும்'' என்றார்.
ஆனால், வேண்டுமென்றே இதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கின்றார், ''இராமர் சேது பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் கிடையாது'' என்று சொல்லியிருக்கிறார்.
திராவிடர் கழகத்தின் வேண்டுகோள்!
எனவே, தந்தை பெரியாரின் நினைவு நாளான இந்த நாளில், திராவிடர் கழகம் ஒரு வேண்டுகோளை, தி.மு.க. உள்பட, அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் வைக்கிறது.
அது என்னவென்றால், மீண்டும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அமைத்தே தீரவேண்டும் என்ற கோரிக்கைக்கான கிளர்ச்சிகளை செய்வோம்.
ஏனென்றால், இராமர் சேது பாலம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சரே, சொல்லிவிட்ட பிறகு, நிச்சயமாக அந்தத் திட்டத்திற்காகச் செலவழித்த பணம் வீண் அல்ல என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஒன்றிய அரசை வலியுறுத்தி அந்தத் திட்டத்தை நிறைவேற்றச் செய்யவேண்டும்.
எல்லோரையும் ஒருங்கிணைத்துப் போராட்டத்தை நடத்துவோம்!
அதன்மூலமாக தென்மாவட்டங்கள் செழிக்க வேண்டும்; நம்முடைய இளைஞர்கள் வேலைவாய்ப்பு களைப் பெறவேண்டும். அப்படி இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றால், யாரும் கஞ்சா, மது போன்ற போதை பழக்கங்களுக்கு ஆளாகமாட்டார்கள்.
எனவே, தந்தை பெரியாருடைய நினைவு நாளில் உறுதியாகக் கூறுகின்றோம். இதற்காகப் போராட வேண்டி வந்தால், எல்லோரையும் ஒருங்கிணைத்துப் போராட்டத்தை நடத்துவோம்.
நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், தி.மு.க.வும், மற்ற தோழமைக் கட்சிகளும் - அன்றைக்கு யார் யார் ஒன்றுபட்டு சேது சமுத்திரத் திட்டத்திற்காகக் குரல் கொடுத்தார்களோ, அவர்கள் அத்துணை பேரும் இன்றைக்கும் குரல் கொடுக்கவேண்டும்.
அதற்கு ஆதாரமாக பா.ஜ.க.வே இருக்கிறது- எனவே, அவர்கள் மறுக்க முடியாது.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக