கழகப் பொறுப்பேற்று 45 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழர் தலைவருக்குப் பாராட்டு!
தி.மு.க. அரசின் தந்தை பெரியார் - திராவிட மாடல் திட்டங்களுக்குப் பாராட்டு!
'நீட்' தேர்வு - புதிய தேசியக் கல்வி, மாநில உரிமைகள் பறிப்புகளுக்குக் கடும் எதிர்ப்பு!
மாநிலப் பட்டியலுக்குக் கல்வியைக் கொண்டு வருக!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்பாடு
ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் தேவை!
கழக வேலைத் திட்டங்கள் - எழுவர் விடுதலை
ஏப்ரல் 3 ஆம் தேதிமுதல் 25 ஆம் தேதிவரை நாகர்கோவில்முதல் சென்னை வரை தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தீவிரப் பிரச்சாரத் திட்டம்!
கழகத் தலைமைச் செயற்குழு சிறப்புக் கூட்டத்தின் சிறப்புத் தீர்மானங்கள்!
சென்னை, மார்ச் 19 ஏப்ரல் 3 ஆம் தேதிமுதல் ஏப்ரல் 25 ஆம் தேதிவரை நாகர்கோவில் முதல் சென்னை வரை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில், 'நீட்' எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு இவற்றை முன்னிறுத்தி தீவிரப் பிரச்சாரத் திட்டம் உள்பட 17 தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள் வருமாறு:
இரங்கல் தீர்மானம்: 1
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன துணைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு (மறைவு 06.10.2021) பகுத்தறிவுப் புலவர் புலமை பித்தன் (மறைவு 8.9.2021) தெற்குநத்தம் வழக்குரைஞர் சி.கோவிந்தராசு (மறைவு 10.9.2021) டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் (மறைவு 24.9.2021) வீரபாண்டி ராஜா மறைவு 02.10.2021) பெரியார் பெருந்தொண்டர் திருச்சி மாவடியான் (மறைவு 15.10.2021) அரியகுடி வீர சுப்பையா (மறைவு 16.10.2021) பெருநிலக்கிழார் எஸ்.இராமலிங்கம் (மறைவு 20.10.2021) மதுரை மேனாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் (மறைவு 29.10.2021) வெண்கரும்பூர் க.நாராயணசாமி (மறைவு 29.10.2021) மலர் மாமணி புலவர் பெ.அ.இளஞ்செழியன் (மறைவு 02.11.2021) சிங்கப்பூர் தமிழ்முரசு இராமகிஷ்ணன் (மறைவு 04.11.2021) மத்தூர் அரங்க.ரவி (மறைவு 04.11.2021) குருவாரெட்டியூர் பிரகலாதன் (மறைவு 09.11.2021) வழக்குரைஞர் அ.பாலகுரு (மறைவு 21.10.2021) உரத்தநாடு ஆர்.பி.சாமி (மறைவு 29.11.2021) விழுப்புரம் மேனாள் மண்டலத் தலைவர் க.மு.தாஸ் (மறைவு 01.12.2021) காரைக்குடி உமையாள் ராமநாதன் (மறைவு 13.12.2021) பெரியார் பெருந்தொண்டர் வல்லவாரி இரணியன் (மறைவு 21.12.2021) கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் (மறைவு 22.12.2021) துரை.மகாலிங்கம் (மறைவு 24.12.2021) திராவிடர் விவசாய தொழிலாளர் கழக மாநில செயலாளர் இராயபுரம் கோபால் (மறைவு 27.12.2021) சிவகங்கை மாவட்ட கழகத் தலைவர் உ.சுப்பையா (மறைவு 13.01.2022) கவிவேந்தர் கா.வேழவேந்தன் (மறைவு 27.1.2022) மதுரை தமிழரசன் ( மறைவு 28.1.2022) ஆத்தூர் அங்கம்மாள் (மறைவு 28.1.2022) தஞ்சை எஸ்.சிங்காரவேலு (மறைவு 01.2.2021) பொறியாளர் என்.எஸ்.ஏகாம்பரம் (மறைவு 05.2.2022) டே ப் சன்யாசி (மறைவு 10.2.2022) பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை தேசிங்கு (மறைவு 26.02.2022) மேனாள் மாவட்ட கழகத் தலைவர் பெரம்பலூர் ஆறுமுகம் (மறைவு 27.2.2022) கரந்தை ச.இராமநாதன் (மறைவு 6.3.2022) பெங்களூர் முத்துச்செல்வன் என்ற மீனாட்சி சுந்தரம் (மறைவு 09.3.2022) பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை த.பெரியார்தாசன் (மறைவு 10.3.2022) மதுரை ஈரோட்டுச் செல்வன் (மறைவு 17.3.2022)
ஆகியோர் மறைவிற்கு கூட்டம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், இயக்கத்தினருக்கும் இக்கூட்டம் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தன்னலம் துறந்து இயக்கபணி ஆற்றி மறைந்த கழகத் தோழர்களுக்கு இக்கூட்டம் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 2
திராவிடர் கழகத் தலைவருக்கு வாழ்த்தும், பாராட்டும், நன்றியும்!
தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்று கழகத்தை சிறப்பாக நடத்தினார். அன்னையாரின் மறைவிற்குப் பிறகு கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, கட்டுக்குலையாமல் கழகத்தை காத்ததுடன், மேலும் சிறப்பாக வளர்த்தும், பெரியார் கல்வி நிறுவனங்களை மேலும் பெருக்கியும், விரிவாக்கியும் வளர்த்தும், கட்டுமானப் பணிகளை வியக்கத்தக்க முறையில் நிர்மாணித்தும், தமிழினத்துக்கு அரும்பெரும் வெற்றிச் சாதனைகளை குவித்தும், பிரச்சாரப் பணிகள், களப் பணிகளில், காலத்துக்கேற்ற வகையில் யூகங்களை வகுத்தும், நாளும் செயல்பட்டு வரும் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்று 45 ஆம் ஆண்டில் (18.3.2022) அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சிப் பெருக்கில் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றியையும் திராவிடர் கழகம் தெரிவித்துக் கொள்கிறது,
89ஆம் ஆண்டு அகவையில் 79 ஆண்டு அப்பழுக்கற்ற தொண்டறம் புரிந்து வாழும் நமது ஒப்பற்ற தலைவர் நூற்றாண்டும் கண்டு மேலும் வாழ்ந்து கழகத்துக்கும் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றுமாறும் வாழ்த்துகிறோம்.
கழகப் பொறுப்பேற்று 45 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழகத் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்துகளைத் தெரிவித்தனர் (சென்னை, 19.3.2022)
தீர்மானம் எண்: 3
அ) தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு
தந்தை பெரியார் பிறந்த நாளை - சமூகநீதி நாளாக அறிவித்ததோடு, அந்நாளில் அரசு அலுவலர்கள் அனை வரும் தந்தை பெரியாரின் அன்பு நெறி, பகுத்தறிவு நெறி, சமத்துவம், சகோதரத்துவம், மனிதாபிமானம், சமூகநீதி, ஆளுமைத்திறன் கொண்ட சமுதாயம் சமைக்கும் வகையில் எனது பயணம் தொடரும் என்று உறுதி ஏற்கச் செய்ய ஆணை பிறப்பித்த ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ திராவிட மாடல் ஆட்சியின் செயல்பாட்டாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கு இக்கூட்டம் நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ்நாடு அரசின் 2022-2023 நிதிநிலை அறிக்கையில் (தாக்கல் செய்யப்பட்ட நாள் 18.3.2022) தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு - 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக வெளியிட அய்ந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம் என்ற நிலை இதன்மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.அதுபோலவே, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தனித்தன்மையான, ஜாதி ஒழிப்புச் சிந்தனையோடு ஆக்கப்பூர்வமாக உருவாக்கப்பட்ட 149 பெரியார் நினைவு சமத்துவப் புரங்களை சீரமைத்திட ரூ.190 கோடி - நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
எல்லா வகையிலும் தந்தை பெரியார் கொள்கைப் பரவிடவும், நிலை நிறுத்தப்படவும் திட்டமிட்ட வகை யில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளை வரலாறு என்றென்றும் போற்றும் என்பதை மகிழ்ச்சியுடன் இக்கூட்டம் பதிவு செய்கிறது, பாராட்டுகிறது, வாழ்த்துகிறது, நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
ஆ) பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ முதுகலைக் கல்வியில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இந்தியா முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் கிடைத்திட அயராது சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட தி.மு.க. அரசுக்கு இக்கூட்டம் மிகுந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
மருத்துவக் கல்வியில் உயர் சிறப்புக் கல்வி (Super Speciality) படிக்க - அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்க உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, வெற்றி பெற்றுத் தந்து சமூகநீதி சரித்திரத்தில் மேலும் முத்திரை பதித்த தி.மு.க. அரசுக்கு இக்கூட்டம் மனந்திறந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 4
நாகர்கோயில் முதல் - சென்னை வரை பிரச்சாரத் திட்டம்
சமூகநீதி, நீட், மாநில உரிமை மீட்பு முதலியவற்றை முன்னிறுத்தி வரும் ஏப்ரல் 3 முதல், நாகர்கோயில் முதல் சென்னை வரை திராவிடர் கழகத்தின் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் நடைபெறும் இத்தொடர் கூட்டங்களில் ஒத்த கருத்துள்ள கட்சிகள், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் முக்கியமாகப் பங்கேற்பார்கள் (பிரச்சாரத் தேதி, ஊர்கள் தனியே). கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அவர்களுடன் ஒருங்கிணைந்து இந்தக் காலகட்டத்திற்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் இத்தொடர் பிரச்சாரத் திட்டத்தை வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் நடத்தித் தரக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விடுபட்ட மாவட்டங்களில் கழகச் சொற்பொழி வாளர்களை அழைத்து தெருமுனைக் கூட்டங்களை நடத்துமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளபடுகின்றனர்,
தீர்மானம் எண்: 5
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட வேண்டும்
+2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படை யில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நடை முறையை மாற்றி, நீட் என்ற நுழைவுத் தேர்வை நடத்தி, நீட் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது சமூகநீதிக்கு எதிரானதாகும்.
பல்வேறு இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் சுற்றுச் சூழல், வாழ்க்கை முறைகள், தட்பவெப்பங்கள், தொழில்முறைகள், பல்வேறு கல்வித் திட்டங்கள் நிலவும் இந்தியத் துணைக் கண்டத்தில், ஒரே மாதிரியான தேர்வு நடத்தி, அதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோர்க்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு வாய்ப்பு என்பது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
பல்வேறு பாடத்திட்ட முறைகளில் கல்விக் கூடங்கள் நடந்துவரும் இந்தியத் துணைக் கண்டத்தில் சிபிஎஸ்இ பள்ளிக் கூடங்களின் கல்வித் திட்ட அடிப்படையில் நீட் தேர்வை நடத்துவது - குறிப்பிட்ட சிபிஎஸ்இ முறையில் படிக்கும் மாணவர்களுக்கே வாய்ப்புகள் அதிகமாகும் என்பது வெளிப்படையாகும்.
+2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடந்தபோது ஒரே ஒரு விழுக்காடு இடம் பெற்ற சிபிஎஸ்இ மாணவர்கள் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 39 விழுக்காடு இடங்கள் கிடைத்தன என்றால், நீட் தேர்வு யாருக்குக் கூடுதலான வாய்ப்பினை அளிக்கக் கூடியது என்பது வெளிப்படையானதாகும்.
முதல் தலைமுறையாக கல்வி கற்க முன்வந்தோர், கிராமப்புற ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்டோர் இந்த நீட் தேர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தப்பட்ட சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது. நீட் தேர்வு என்பது கண்ணும், கருத்தும் உள்ள எவருக்கும் எளிதாகப் புரியக் கூடிய ஒன்றாகும்.
இந்த சமூக அநீதியை எதிர்த்துத்தான் தொடக்கம் முதல் திராவிடர் கழகம் பிரச்சாரம், போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் நடந்து வரும் திமுக ஆட்சியில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறுவதற்குத் தேவைப்படும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருவது பாராட்டுக்கும், வரவேற்புக்கும் உரியதாகும்.
தமிழ்நாடு அரசின் சமூகநீதியைக் காப்பாற்றிட மேற்கொண்டு வரும் அரிய பணிகளுக்கு கட்சி மாச்சரியங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த ஒத்துழைப்பினையும் அளிக்க வேண்டும் என்று இக்கூட்டம் கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 6
கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வருக!
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியானது 1976ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை காலத்தில் ஒத்திசைவுப் பட்டியலுக்குக் (சிஷீஸீநீuக்ஷீக்ஷீமீஸீt லிவீst) கொண்டு செல்லப்பட்டது. மாநில அரசின் கருத்துக் கேட்கப்படவில்லை.
கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டதால் நீட் என்றும், புதிய தேசியக் கல்விக் கொள்கை என்றும், ஒன்றிய அரசு மாநில அரசுகளின் கருத்தைக் கேட்காமலேயே மாநிலங்களின் மீது திணிக்கப்படுகிறது. இந்தியா என்பது ஒரே நாடல்ல; பல மாநிலங்களைக் கொண்ட ஒன்றியமாகும். ஒவ்வொரு மாநிலத்தின் தட்பவெப்பம், இயற்கைச் சூழல் தொழில்கள், பண்பாடுகள், வாழ்க்கை இயல்பு முறைகள் வேறுபட்டு நிற்கும் நிலையில் கல்வி மாநிலப் பட்டியலில் இருப்பதுதான் சரியானதும் பொருத்தமானதும் நியாயமானதுமாகும். எனவே, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவர ஆவன செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மாநில அரசுகளும் இந்த வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண் : 7
புதிய தேசியக் கல்வித் திட்டம் புறக்கணிக்கப்பட வேண்டியதே!
ஒன்றிய அரசு செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ள தேசியக் கல்விக் கொள்கைகள் பற்றி பல தளங்களிலும் விரிவாகப் பேசப்படுகிறது. இதன் பாரதூர விளைவுகள் குறித்து சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய மாநாட்டில் மாணவர்களும் கல்வியாளர்களும் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர் (8.8.2016)
அரக்கோணத்திலும் திராவிடர் கழகத்தின் சார்பில் இதற்காகவே திராவிடர் கழக மாணவரணி மாநாடு கூட்டி கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய கல்வி என்று தோற்றத்திற்கு வசீகரமாக இருந்தாலும் அதன் உள்ளுக்குள் சனாதனப் பிற்போக்கு அம்சங்கள் படம் எடுத்து ஆடுகின்றன.
புதிய கல்விக் கொள்கை என்ன சொல்லுகிறது?
1. இது ஒரு நவீன குலக்கல்வித் திட்டமே!
2. இந்தி, சமஸ்கிருதத் திணிப்பை உள்ளடக்கியது!
3. அய்ந்தாம் வகுப்புவரை தேர்வு முறையில்லை. அதற்குப்பின் தேர்வு உண்டு. அதில் இரண்டு முறைக்குமேல் மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றால், தொழில் பயிற்சிக்குச் செல்லவேண்டும். (அதாவது அதிகபட்சப் படிப்பே 5 ஆம் வகுப்புவரைதான்) 5 ஆம் வகுப்புவரை படித்தவன் தொழிலைக் கற்றுக்கொள்வது என்பது குலத்தொழிலைக் கற்றுக்கொள்ள மட்டுமே சாத்தியமாகும்!
4. உயர்கல்வி என்பது ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகும். அரசு உயர்கல்வியில் புதிய நிறுவனங்களைத் தொடங்காது.
5. மாநில அரசின் முடிவில் தலையிடுகிறது.
6. இந்தக் கல்வித் திட்டம் குறித்து நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாது நடுவர் மன்றம் மட்டும் அமைக்கப்படும்.
7. இத்திட்டம் கல்வியாளர்களைக் கொண்டு வகுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ்.காரரான ஜெ.எஸ்.ராஜ்புத் என்பவர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
8. கல்வியைப் பன்னாட்டு மயமாக்கும் வர்த்தகத் தன்மை உடையது.
9. பதினான்கு வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாயக்கல்வி என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதமே இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், கல்வியை உலக மயமாக்கிடத் துடிப்பது விபரீதமான ஒன்றே!
10. மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி வரை கல்வியின் அளவில் ஒரே மாதிரியான பாடத் திட்டமும் நிர்ணயிக்கப்படுமாம். இதன் பொருள் இந்தியாவின் பன்முகத்தன்மை, பண்பாடு, மொழி, தட்பவெப்பம் எல்லாம் தூக்கி எறியப்பட்டு, இந்தியா ஒரே நாடு எனும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை அரங்கேற்றப்படுகிறது.
இந்தத் திட்டத்தால் இடஒதுக்கீடு வரை பாதிப்புக்கு வழிவகுக்கும். தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இல்லாமையால் மருத்துவக் கல்லூரி பொதுப்போட்டியில்கூட தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், கிராமப்புற மக்கள்கூட சிறப்பான இடங்களைப் பெற்றுள்ளனர். புதிய கல்வித் திட்டத்தில் திணிக்கப்படும் நுழைவுத் தேர்வுமூலம் இந்த நிலை வேரோடு முற்றிலும் துடைத்து எறியப்பட்டுவிடும்.
எனவே, புதிய கல்விக் கொள்கை என்பதை எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்க முடியாது என்று இக்கூட்டம் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டிற்கான புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டு இருப்பதையும் இக்கூட்டம் வரவேற்கிறது.
தீர்மானம் எண் : 8
தனியார் துறைகளில் தேவை இடஒதுக்கீடு
ஒன்றிய அரசு அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்க்குத் தாரைவார்க்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சோசலிஸக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானதாகும்; சோசலிச அரசு என்பதற்கு மாறாக கார்ப்பரேட் அரசு என்பதாக மாறிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் மாற்றம் தேவை என்று ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தனியார்களுக்கு அரசுத்துறைகளும், பொதுத் துறைகளும் தாரை வார்க்கப்படும்போது இத்துறைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்படுகிறது.
தனியார்த் துறைகளில் இப்போது இடஒதுக்கீடு கிடையாது என்ற நடைமுறைக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுகும்போது, இதில் பதுங்கியுள்ள சமூகநீதிக்கு எதிரான வன்மம் வெளிப்படையாகவே தெரிகிறது.
எனவே, தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட உரிய சட்டத்தைக் கொண்டு வரு மாறு ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. மாநில அரசுகளும் இந்தவகையில் ஒன்றிய அரசை திடமாக வலியுறுத்திச் செயல்படவைக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.
(ஆ) குறிப்பிட்ட சில துறைகளில் இடஒதுக் கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதை ரத்து செய்து, அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
குறிப்பாக நீதித்துறையில் நீதிபதிகள் நியமனங் களிலும் இடஒதுக்கீடு அவசியம் தேவை என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
(இ) ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியால் உத்தரவாதம் செய்யப்பட்டும், கடந்த எட்டு ஆண்டுகளில் அந்தவகையில் எந்த வகையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். ஒன்றிய அரசுத் துறைகளில் 8.70 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சராலே அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-2018 காலகட்டத்தில் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 6.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது இருமடங்காக அதிகரித்துள்ளதாக சி.எம்.அய்.இ. என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உடனடியாக வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப் படும் கோடானுகோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்க வேண்டும் என்றும் வேலை வாய்ப்பு என்பதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 9
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை
தந்தை பெரியார் அவர்கள் தம் நீண்ட பொதுவாழ்வில் இறுதியாக அறிவித்தது அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டமாகும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் அதற்கான சட்டங்கள் இரு முறை நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையிலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டின் கோயில்களில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதிகளிலிருந்தும் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர்.
கேரள மாநிலத்திலும் 60க்கும் மேற்பட்ட கோயில்களில் இவ்வாறு நியமனங்கள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன.
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் இரண்டு கோயில்களில் இவ்வாறே அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இதனை எதிர்த்து, கோயில்களைத் தங்கள் ஆதிக்கத்தின் கட்டை விரலுக்கும் கீழே வைத்திருந்தவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
அனுபவமும், திறமையும் வாய்ந்த வழக்குரை ஞர்களை நியமித்து, நடைமுறையில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற நிலை தொடர ஆவன செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனை வருக்கும் அர்ச்சகராகப் பணியாற்றிட வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்நாடு அரசினை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 10
மாநில உரிமைகளைப் பறிப்பதா?
உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் ஒன்றிய அரசின் துறைகளாக உள்ள நிலையில், மாவட்ட நீதிமன்றங்களும் ஒன்றிய அரசின் கீழ் கொண்டு செல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய தாகும்.
நாகப்பட்டினத்தில் இருக்கும் ஒரு மாவட்ட நீதிபதியை ஒன்றிய அரசு நினைத்தால் அஸ்ஸாமுக்கும் காஷ்மீருக்கும் கூட மாற்றலாம்.
இப்படி மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன் றையும் விழுங்கும் முதலையாக ஒன்றிய அரசு உரு வெடுத்திருப்பதை இக்கூட்டம் கண்டனம் செய்கிறது. உடனடியாக இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசும் இதில் தலையிட்டு மாநில உரிமையை மீட்க வேண்டும் என்றும் இக்கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
மாநில அரசின் உரிமைகளை மேலும் மேலும் பறிக்கும் ஒன்றிய அரசின் ஒற்றை ஆட்சிப் போக்கை மாநில அரசுகள் வலிமையாக எதிர்த்து, ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரப் போக்கை முறியடிக்கவேண்டும் என்று இக்கூட்டம் மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் : 11
கருநாடகத்தில் சட்டத்தை மீறிக் கட்டத் துடிக்கும் மேகதாது அணை தடுக்கப்படவேண்டும்
1. 1892இல் முதன் முதலாக காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை உருவானது. அப்போது, ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக முதல் ஒப்பந்தம் உருவானது.
2. ஒப்பந்தப்படி சென்னை மாகாண அரசு அனுமதி யின்றி, மைசூர் அரசு, காவிரியின் குறுக்கே அணைகள் கட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.
3. 1900ஆம் ஆண்டில் கூட சென்னை மாகாண அரசின் அனுமதி பெற்றே கருநாடகம் காவிரியின் குறுக்கே சிவசமுத்திரம் நீர்மின் நிலையம் அமைத்தது.
4. அதன்பிறகு 1924ஆம் ஆண்டு சென்னை மாநிலமும், மைசூர் அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே, 1929இல் கருநாடக அரசு, 45 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட கிருஷ்ண ராஜசாகர் அணையைக் கட்டியது.
5. 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி, கருநாடக அரசு காவிரியின் துணை ஆறுகளான ஹேமாவதி, ஹேரங்கி ஆகியவற்றின் குறுக்கே அணைகளைக் கட்டி, தமிழ்நாட்டுக்குக் கூடுதலாகக் கிடைக்க வேண்டிய நீரைத் தடுத்தது. இதுவே தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி நடந்த கருநாடகாவின் முதல் விதிமீறல்.
6. 1924ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கருநாடக அரசு ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு சராசரியாக 575 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும்.
7. 1924இல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு 1974இல் இரு அரசுகளும் புதுப்பிக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகத் தவறாகக் கூறி, கருநாடக அரசு தம் மாநிலத்தில் காவிரி நீர்ப் பாசனப் பரப்பை விரிவுபடுத்தியது. காவிரியின் துணையாறுகளின் குறுக்கே புதிதாக பல சிறிய அணைகளைக் கட்டி, காவிரியில் கலக்கும் நீரைத் தடுத்ததால், தமிழ்நாட்டுக்கு வரும் நீர் வரத்து குறையத் தொடங்கியது.
8. காவிரி நடுவர் நீதிமன்றம், 1991 ஜூன், 25இல் கரு நாடகா ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு, 205 டி.எம்.சி. நீர் வழங்கவேண்டும் என, இடைக்காலத் தீர்ப்பில் கூறியது.
9. 2007 பிப்ரவரி 5இல் இறுதித் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின்படி தமிழ்நாடு 419 டி.எம்.சி, கருநாடகா 270 டி.எம்.சி., கேரளா 30 டி.எம்.சி., புதுச்சேரி 7 டி.எம்.சி., என்றவாறு நீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
10. 2015ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டு வதற்கான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய கருநாடக அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
11. 2018ஆம் ஆண்டு மேகதாதுவில் புதிய அணை கட்ட கருநாடக அரசு தாக்கல் செய்த திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
12. இந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, கடந்த அஇஅதிமுக ஆட்சியில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது.
13. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கருநாடக அரசு மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் கூறியது.
14. மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
15. மேகதாது அணை கட்ட அனுமதியே தரவில்லை, தமிழ்நாடு அரசின் மனு அர்த்தமற்றது. அதனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனுதாக்கல் செய்தது.
16. மேகதாதுவில் அணை கட்டி 66 டி.எம்.சி தண் ணீரைத் தேக்கினால் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும்.
17. காவிரியின் குறுக்கே மேகதாது அணை அனுமதியின்றிக் கட்டப்படுகிறதா என 25.05.2021 அன்று தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியதுடன், ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
18. இந்த உத்தரவை எதிர்த்து கருநாடக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர, 11.06.2021 ஜூன் மாதம் 11ஆம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அந்த உத்தரவை ரத்து செய்தது.
19. இந்த நிலையில் கருநாடகாவில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக அங்குள்ள அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளன.
20. கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த ஆண்டுக்குள் மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று 10.03.2022 அன்று அறிக்கை விட்டார்.
21. தமிழ்நாடு அல்லது கருநாடகா என எந்த மாநிலம் அணை கட்டுவதாக இருந்தாலும், அதற்குக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் தேவை. அந்த ஆணையத்தில் தென்மாநிலங்களின் உறுப்பினர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடத்தி உச்சநீதிமன்றத்தில் நாம் பெற்ற தீர்ப்பால் காவிரி நதிநீர் முறையான வகையில் பங்கிட்டுத்தர வேண்டும் என்ற நடைமுறை வந்துள்ளது. மேலும் காவிரி நதி மீதான எந்தவிதமான கட்டுமானம் செய்வதாக இருந்தாலும் நான்கு மாநிலங்களின் ஒப்புதல் வேண்டும்.
22. சட்டத்தின் நிலைப்பாடுகளும் நீதிமன்றத்தின் தீர்ப்பும் இவ்வளவு தெளிவாக இருக்க, இவற்றை யெல்லாம் துச்சமாக மதிப்பது - அரசு என்ற தன்மைக்கு உகந்தது தானா என்ற கேள்வி எழுகிறது.
23. ஒன்றியத்திலும் கருநாடகத்திலும் பி.ஜே.பி ஆட்சி நடைபெறுவதால், மேகதாதுவில் அணையைக் கட்டினால்,அது இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கிழித்துக் குப்பைக் கூடையில் எறிவதற்குச் சமமாகும்.
தமிழ்நாடு அரசு மேகதாதுவில் நகர்த்தப்படும் புள்ளிகளைத் துல்லியமாக அவ்வப்பொழுது விழிப் பாகக் கவனித்து, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண் : 12
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலேயே கோயில்கள் இருப்பது மிக அவசியம்
மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் பார்ப்பனர்களுக்கே சொந்தமானது என்பது போல் நாளடைவில் ஆனது; இந்தத் கோயில்களுக்கென்று இருந்த சொத்துகள் நிலங்கள் எல்லாம் பார்ப்பனப் பெருச்சாளிகளின் கூடாரமாகிவிட்டன.
இந்த நிலையில் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத்துறை சட்டம் நிறைவேற்றப்பட்டது (1926) ஓய்வு பெற்ற நீதிபதி பி.வெங்கட்ரமண ராவ் நாயுடு தலைமையில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்து அறநிலையத்துறைக் கூட்டம் மேலும் செயல் படுத்தப்பட்டது. (1959) சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் இதற்கான நியாயத்தை உறுதிப்படுத்தியது. (1960-1962)
தீட்சதர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சதர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு அளவே இல்லை. இந்த நிலையில் இந்து அறநிலையத்துறையைக் கலைத்துவிட்டு கோயில்களை ஏற்கெனவே உண்டுகொழுத்த கோயில் பெருச்சாளிகளிடம் கோயிலையும், அதன் திரண்ட சொத்துகளையும் ஒப்படைக்கவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கோயில்கள் அரசின் கட்டைவிரலின் கீழ் இருக்கவேண்டுமா என்று நீதிபதிகளே கருத்து தெரிவிக்கும் நிலையை அலட்சியப்படுத்திவிடவும் முடியாது. எந்தவித சமரசத்துக்கும் இடமில்லாமல், கோயில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதே பாதுகாப்பானது என்பதால் இப்பொழுது இருக்கும் நிலையே தொடரப்படவேண்டும் என்று இக்கூட்டம் ஒன்றிய மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் போன்று தனியார் களின் வசம் இருக்கும் கோயில்களும் இந்து அற நிலையத் துறையின் வசம் கொண்டுவரப்பட தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் : 13
கல்விக் கூடங்களில் வீண் மத சர்ச்சை
கல்விக்கூடம் செல்லும் மாணவர்களுக்குச் சீருடை என்பது, கட்டாயம் என்ற நிலை உள்ளது. இதில் இஸ்லாமியப் பெண்கள் அணிந்து வரும் ஹிஜாப் உடையை அந்த இஸ்லாமியப் பெண்கள் அணிந்துவரக்கூடாது என்ற பிரச்சினை, கருநாடக மாநிலத்தில் வெடித்தது, இப்பொழுது அகில இந்திய அளவில் பேருரு எடுத்துள்ளது. கருநாடக மாநில உயர்நீதிமன்றமும் ஹிஜாப் உடை அணிந்துவரக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மத அடையாளம் கூடாது என்பதுதான் இதற்குக் காரணம் என்றால், திருநீறு அணிவது, நாமம் போடுவது, பூணூல் அணிவது, குடுமி வைத்துக் கொள்வது என்பவையெல்லாம் பச்சையான மத அடையாளங்கள் தாம். ஆகையால் அவற்றையும் அணிந்து வரக்கூடாது என்று சட்டம் இயற்றுமாறு ஒன்றிய அரசினை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
உண்மையான மதச்சார்பின்மையை பாரபட்சம் இல்லாமல் நிலைநிறுத்த வேண்டும் என்று இக்கூட்டம் ஒன்றிய அரசை மேலும் மேலும் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 14
ஜாதி ஆணவக் கொலை புதிய சட்டம் தேவை!
அண்மைக்காலமாக ஜாதி ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. சட்டப்படியான வயது அடைந்த ஓர் ஆணும் பெண்ணும் எந்த ஜாதியாக இருந்தாலும் மதமாக இருந்தாலும்விரும்பித் திருமணம் செய்து கொள்வது அவர்களுக்கான உரிமையாகும். இதில் ஜாதி, மத வெறித்தனத்துடன் தலையிட்டுக் கொலை செய்வது மனிதத் தன்மைக்கும், சமத்துவ உணர்வுக்கும் எதிரானதாகும். இத்தகு ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் ஜாதி, மத ஆணவக் கொலையைத் தடுத்து நிறுத்திட, அவசரமாகச் சட்டம் இயற்றுமாறு, ஒன்றிய மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 15
பா.ஜ.க.வின் திட்டங்கள் - ஊடுருவல்கள்
அண்மையில் அய்ந்து மாநிலத் தேர்தல்களில் உ.பி. உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து புனேயைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுகாஷ் பல்சிகார் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது கவனத்துக்குரியது:
1. உ.பி.யில் பாஜகவின் அரசியல் கட்டமைப்பு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
2. தங்களை ஹிந்துக்கள் என்று சொல்ல வைத்து அதில் ஒன்று திரட்டுவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக மக்களின் மிக இன்றியமையாத பிரச்சினைகளான - வேலைவாய்ப்பின்மை, வறுமை, விவசாயிகளின் போராட்டம், ஹத்ராஸ் பாலியல் நிகழ்வு, லக்கிம்பூர்கேரியில் ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றி நடத்திய கொலை இவை அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
3. நாட்டைக் காப்பாற்ற தாங்கள்தான் உரிய தலைமை என மக்களை நம்பவைப்பது
என பாஜக அரசியல் ஏனைய கட்சிகளைவிட மாற்றாக அமைந்துள்ளது. இதற்கு மாற்றான அரசியலை எதிர்க்கட்சிகள் வலுவாக ஒன்றுபட்டு அமைக்க முடியவில்லை.
தற்போது தமிழ்நாடு, கேரளம் ஆகிய இந்த இரண்டு மாநிலங்களில்தான் பாஜகவின் ஹிந்துத்துவாவிற்கு மாற்றுச் சித்தாந்தத்தைத் தரக்கூடிய கட்சிகள் ஆட்சியில் உள்ளன.
குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜக பல்வேறு வழிகளில் கால்பதிக்கத் திட்டமிட்டு, செயலாற்றி வருகிறது.
எடுத்துக்காட்டாக,
பாரதிய சிக்ஸான் மண்டல் எனும் வலதுசாரி இந்து அமைப்பு கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இடையே வேகமாகப் பரவி வருகிறது.
நாக்பூரைத் தலைமையகமாகக் கொண்ட இவ் வமைப்பு, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் கிளைகளைத் தொடங்கி வருகிறது. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் விஜய பாரதம் என்ற ஆர்.எஸ்.எஸ். வார இதழின் சந்தாதாரர் ஆக்கப்பட்டு வாரந்தோறும் இதழ் அனுப்பி வைக்கப்படுகிறது.
பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் உறுப்பி னர்கள் போன்ற பதவிகளுக்கு யாரை நியமிக்க வேண்டும் என்று இந்த உறுப்பினர்களிடையே விவா திக்கப்படுகிறது. மத்திய அரசு நம்மிடையே உள்ளது, ஆளுநர் அலுவலகம் நமது கையில் உள்ளது. ஆகவே, உயர்கல்வித் துறையில் உயர்பதவிகளை நம்மால் மட்டுமே அடைய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப்படுகிறது.
இதில் உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலா னவர்கள் சங்க அனுபவம் கொண்டவர்களோ சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களோ கிடையாது; இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தங்களுக்குப் பதவி வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால், தொடர்ச்சியாக இவர்கள் ஆர்எஸ்எஸின் கிளைகளான விஎச்பி, ஏபிவிபி போன்ற அமைப்புகளின் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
பாரதீய சிக்சான் மண்டல் என்ற அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பேராசிரியர்கள் தங்களது துறைகளில் வலதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்களைச் சேர்த்து அவர்கள் மூலமாக ஏபிவிபி எனும் இந்து மாணவர் அமைப்பை வளர்க்கின்றனர்.
இதை கல்லூரி அளவில் கண்காணிக்கவும் எதிர் வினை ஆற்றவும் செயல்திட்டம் வேண்டும்.
மற்றொன்று, சில மாவட்டங்களில் உள்ள தனியார் ஆலைகளில் கிராமப்புற இளைஞர்களைப் பணியில் அமர்த்தி, நிறுவனம் சம்பளம் தரவும், இளைஞர்கள் ஆலைகளில் பணி செய்திடாமல், கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்திடும் நிலையும் உள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்புகளின் மறை முகமான தந்திரமான மேற்கண்ட நடவடிக்கைகளை ஆழமாகப் புரிந்து கொண்டு, இதற்கான எதிர் நடவடிக்கைகள், திட்டங்களை சட்டத்திற்கு உட்பட்டு உருவாக்கி, முறையான வகையில், தீவிரமாக ஈடு படுவது என்றும், இதில் ஒத்த கருத்தினைக் கொண்ட இடதுசாரி மற்றும் முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து செயல்படுவது என்றும் திராவிடர் கழகம் தீர்மானிக்கிறது.
சட்டத்துக்கு விரோதமாகவும் மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும் இரகசியமாகவும் செயல்பாடுகளைக் கொண்ட பாரதீய சிக்சான் மண்டல் எனும் அமைப்பு செயல்படுவதையும், அந்த அமைப்போடு தொடர்பு கொண்டும் ஈடுபாடு கொண்டும் கல்லூரி பல்கலைக் கழக பேராசிரியர்களுடன் தொடர்புக்கொண்டு செயல்படுவதையும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும், இதை உடனடியாகச் செயல்படுத்தாவிட்டால் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்குள் ஜாதி, மத சச்சரவுகள் - கலகங்கள் உருவாகும் ஆபத்து விளையும் என்பதையும் இக்கூட்டம் எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறது.
பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது வரை இவ்வமைப்பு விவாதிக்கிறது என்பது எத்தகைய விபரீதம் என்பதையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு இதில் முக்கிய கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையை எடுப்பது அவசியமானது என்பதைத் தமிழ்நாடு அரசுக்கு இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் : 16
கழக வேலைத் திட்டங்கள்
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டையொட்டி (1925-2025) பல்வேறு திட்டங்களை வகுத்து, அமைப்பைப் பலப்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டியுள்ளது.
சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமைக் கட்சிக்கும் 2025 என்பதுதான் நூற்றாண்டாகும்.
மக்கள் மத்தியில் மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பிளவுகளை ஏற்படுத்தி, கலவரங்களை உண்டாக்குவது, பிற்போக்குத் தனமான பழைய சனாதன எண்ணங்களை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் பரப்புவது, பகுத்தறிவுக்கு எதிரான மூடநம்பிக்கைகளைப் பரப்புவது, சமூகநீதியை அறவே ஒழித்துக் கட்டுவது, பெண்ணடிமைத் தனத்தைப் போற்றுவது பார்ப்பனீயத்தை எல்லா வகையிலும் நிலை நிறுத்தாது போன்ற பிற்போக்குத்தனங்களை - அவர்களிடம் உள்ள அதிகார பலம், பணபலம், பத்திரிகை பலம், மக்களிடம் மண்டியுள்ள மூடத்தனம் இவற்றின் அடிப்படையில் செயல்படத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் திராவிடர் கழகமும் முற்போக்கு அமைப்புகளும் இணைந்து உரிய திட்டங்களை வகுத்துச் செயல்படுவது அவசியமாகும்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், கீழ்க்கண்ட திட்டங்களை வகுத்து செயல்படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
(அ) கிராமப் பிரச்சாரம், தெருமுனைக்கூட்டங்கள்
(ஆ) சுவரெழுத்துப் பணிகள்
(இ) துண்டு அறிக்கைகள் வெளியீடு
(ஈ) மாணவரணி, இளைஞரணி, மகளிர் அணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழக அமைப்பு - ஆகியவற்றைப் பலப்படுத்துவது, உறுப்பினர்களைப் பெருமளவில் சேர்ப்பது குறிப்பாக மாணவர் கழகங்களைக் கல்வி நிறுவங்களில் உருவாக்கி மாணவர்கள் மத்தியில் பெரியாரியலை வளர்த்தெடுப்பது - ஒவ்வொரு அணியும் தமக்கென்று உள்ள பணிகளில் அக்கறை செலுத்தி, ஆற்றிய பணிகளை - சாதனைகளை தலைமைக் கழகத்திற்கு ஆவண ரீதியாகத் தெரிவிப்பது.
(உ) பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை மாவட்டங்கள், ஒன்றியங்கள் வாரியாக நடத்துவது
(ஊ) புத்தக சந்தைகளை நடத்துவது
(எ) இயக்க ஏடுகளுக்கு இலக்கு வைத்து சந்தா சேர்ப்பது
(ஏ) சமூக வலைத்தளங்களைப் பெருமளவில் பயன்படுத்திப் பிரச்சாரம் - அதற்காக அமைக்கப்பட்டுள்ள கழகத்தின் தொழில்நுட்ப அணி - தன் பணிகளைத் திட்டமிட்டு விரிவுபடுத்துவது
(அய்) மாவட்டம், ஒன்றியம், கிராமம் வாரியாகக் கிளைக்கழகக் கழகங்களை அமைத்து கூட்டங்களை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டி ஆக்க ரீதியான கழகப் பணிகளைத் துரிதப்படுத்துவது
(ஒ) கழக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கழகத்தின் உயிர் மூச்சான விடுதலைக்கு சந்தாத்தாரராக இருப்பதை உறுதிப்படுத்துவது
(ஓ) கழகப் பொதுச்செயலாளர்கள், மாநில அமைப்பாளர், அமைப்புச் செயலாளர்கள் தங்களுக்கு உட்பட்ட பகுதிப் பொறுப்பாளர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வது. சம்பந்தப்பட்ட பகுதியில் இயக்கப் பணிகளை, பிரச்சாரங்களை அதிகப்படுத்துவது உள்ளூர் இளைஞர்கள், மாணவர்களுடன் இணக்கமாகத் தொடர்பு கொண்டு கழகக் கொள்கைகளை எடுத்துக்கூறி இயக்கத்தின்பால் ஈர்ப்பது
(அவ்) பெரியார் படிப்பகங்களையும் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி நூலகங்களையும் சரிவரப் பராமரித்து, பொதுமக்கள் - குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் பெருமளவில் அவற்றைப் பயன்படுத்தி பயன்பெறச் செய்வது உள்ளிட்ட கழகப் பணிகளைத் தொய்வில்லாமல் கழகத்தினர் மேற்கொள்வது என்று திட்டவட்டமாக முடிவு செய்கிறது.
தீர்மானம் எண் : 17
ஏழுபேரை விடுதலைச் செய்க!
ஒரு கொலைக் குற்றம் தொடர்பாக ஏழுபேர் கடந்த 30 ஆண்டுகாலமாக சிறையில் வாடுகின்றனர். இவர்களை விடுதலை செய்யவேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியும், தமிழ்நாடு அரசும் எழுவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று பரிந்துரைத்தும், வாதாடியும் வரும்நிலையில், இதற்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநரும் ஒன்றிய அரசும் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு அவர்களை மனிதாபிமானத்துடன் விடுதலை செய்ய ஆவன செய்யவேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக