புதன், 25 செப்டம்பர், 2024

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் பெயரை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சூட்டவேண்டும்! புகழேந்தி கோரிக்கை!

 


விடுதலை நாளேடு

கிருஷ்ணகிரி, செப்.20 தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி கார்னேசன் மைதானத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த புகழேந்தி மற்றும் அண்ணா திமுக நிர்வாகிகளும் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அப்போது, டாக்டர் ஜான் டிமோதி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் திராவிட மணி, அண்ணா தொழிற்சங்க மாநில இணை செயலாளர் ராஜேந்திரன், கருநாடக மாநிலச் செயலாளர் குமார், ரவி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, “ சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்குத் தந்தை பெரியாரின் பெயரை சூட்ட வேண்டும். திராவிட இயக்கங்கள் 55 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிவதற்கு அடித்தளம் அமைத்தவர் தந்தை பெரியார். அவர் திராவிட இயக்கத்தினுடைய உயிர் நாடி. தந்தை பெரியார் சுயமரியாதை கருத்துகளை வித்திட்ட ஈரோட்டு பகலவன். தந்தை பெரியாரை விட்டுப் பிரிந்து வெளியேறிய பின்னரும், அவர்தான் இயக்கத்தினுடைய நிரந்தர தலைவர் என்று கூறிய அண்ணா அதை நடைமுறைப்படுத்தினார்.

வைக்கம் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களைக் கண்டவர் தந்தை பெரியார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், அவர்கள் உரிமைகளுக்காகவும் வாழ்ந்து நமது நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்றவர் தந்தை பெரியார். ஆகவே, அந்த புரட்சிகரமான தலைவரின் பெயரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்குச் சூட்டி ஒன்றிய, மாநில அரசுகள் அழகு பார்க்க வேண்டும்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் ‘தந்தை பெரியார் ரயில் நிலையம்’ என இடம் பெற வேண்டும் என்கின்ற கோரிக்கை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்” என்றார். பின்னர் அந்த கடிதத்தையும் செய்தியாளர்களிடம் காட்டினார்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் கட்டுமானப் பணி தொடக்கம்


Published September 14, 2024, விடுதலை நாளேடு

 தூண்கள் அமைக்கும் பணிக்கு கான்கிரீட் கலவை போடும் பணியை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார். உடன் பொறியாளர்கள் கழக நிருவாகிகள், தோழர்கள் உள்ளனர்.

திருச்சி, செப். 14 சமூக நீதிக்கும், சுயமரியாதைக்கும் வித்திட்ட அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் கொள்கையை பறைசாற்றும் விதமாக திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் பணிகள் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதல்படி, படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று (14.9.2024) காலை 10.30 மணியளவில் பெரியார் சிலைக்கான பீடம் அமைக்கும் பணிக்கான அடித்தளம் (கான்கிரீட்) அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பேராசிரியர் ப.சுப்பிரமணியன், ஜெயபிரகாஷ், செந்தமிழ்குமார், கார்த்திக், ரமேஷ்பாபு, பாண்டியன், ஆல்பர்ட், ஞா.ஆரோக்கியராஜ், மு.சேகர், சங்கிலிமுத்து, மகாமணி, கனகராஜ், ராஜசேகர் ஆகிய கழகத் தோழர்களும் ஓசன் (ளிசிணிகிழி) குழு அரிகரன், ராம் பிரசாத், காசி, ரகுமான் உள்ளிட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு பெரிய காலம் (தூண்) உள்ளடக்கி மொத்தம் 28 தூண்கள் அமைக்கப்பட் டுள்ளது. இன்று (14.9.2024) மூன்று தூண் கள் அமைக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதத்திற்குள் அனைத்து தூண்களும் கான்கிரீட் போடப்பட்டு முடிக்கப்படும். மேலும் 4 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியும் தொடங் கப்பட்டுள்ளது.

30 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள பெரியார் உலகம் வளாகத்தில் 95 அடி உயரத்தில் பெரியார் சிலை அமையவுள்ளது. இதில் நூலகம், ஆய்வகம், பயிலரங்கம், குழந்தைகளுக்கான பூங்கா உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்களுடன் அமைக்கப் படவுள்ளன.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரியார் உலக பணி நவீன தொழில்நுட்பத்தோடு தொடங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெரியார் பற்றாளர்கள், பெரியார் தொண்டர் களும் இப்பணிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். அரசு அனுமதியோடு முறையாக நடைபெற்று வரும் பெரியார் உலகத் தின் கட்டுமான பணிகளின் முதல் கட்டபணி தொடங்கியது. இந்நிகழ்வில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இனிப்பு வழங்கினார். முதல்கட்டமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பெரியார் உலகம் செல்வதற்கான அணுகு சாலை (சர்வீஸ்ரோடு) 4.41 மீட்டர் தூரத்திற்கு 7.2 மீட்டர் அகலத்திற்கு அழகிய புல்வெளிகளுடன் அமைக்கப்பட்டி ருக்கிறது. புல் வெளிகள் மட்டும் 6.78 மீட்டருக்கு அமைக்கப் பட்டுள்ளது. பெரியார் உலகத்தின் நுழைவாயில் 9 மீட்டரிலும், வெளியே செல்வதற்கான வழி 9 மீட்டர் அளவிலும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இப்பணியை ஈரோட்டைச் சேர்ந்த எம்.எம். கட்டுமான நிறுவனம் செய்து வருகிறது.

தனி உலகமாக அமையவுள்ள பெரியார் உலகத்தின் கட்டு மான பணிகள் பல்வேறு மூத்த பொறியாளர்கள் கண் காணிப்போடு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதன், 11 செப்டம்பர், 2024

தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டுச் சென்றார் தமிழர் தலைவர் ஆசிரியர்!


விடுதலை நாளேடு Published September 11, 2024

 சென்னை, செப்.11 தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் மற்றும் அறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாள் விழாக்கள் ஜப்பானில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்விழாக்களில் பங்கேற்பதற்காகத் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (10.9.2024) ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் செல்லுமுன் சிங்கப்பூருக்கு இன்று (11.09.2024) காலை சென்ற தமிழர் தலைவருக்குத் தோழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு
இவ்வரவேற்பு நிகழ்வில் ‘செம்மொழி’ இதழின் ஆசிரியர் எம்.இலியாஸ், பெரியார் சமூகச் சேவை மன்றத் தலைவர் க.பூபாலன், பொறுப்பாளர்கள் இராஜராஜன், நா.மாறன், கவிதா, தமிழ்நாடு செய்தித் தொடர்பு கூடுதல் இயக்குநர் (ஓய்வு) ச.பாண்டியன், பா.பிரதாப், முகமது பர்வீஸ், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் பொருளாளர் சி.தமிழ்ச்செல்வன், த.அகிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜப்பான், டோக்கியோ நகரில், ஃபுனாபொரி டவர் ஹாலில் 15.09.2024 அன்று நடைபெறும் நிகழ்வில், ‘‘அண்ணா கண்ட கனவு’’ எனும் தலைப்பில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்களும், ‘‘பெரியாரின் சமூகப் பார்வை’’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள்.
நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் வி. குன்றாளன், ச. கமலக்கண்ணன், ரா. செந்தில்குமார், அ.கோவிந்தபாசம் ஆகியோர் கூறுகையில், நிகழ்விற்கான அரங்கம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட நிலையில், பங்கேற்பாளர்கள் அதிகம் வரும் சூழல் இருப்பதாகக் கூறினர்.

தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் விழாவிற்காக சிறப்பான ஏற்பாடுகள்!
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து நாளை (12.9.2024) இரவு புறப்பட்டு, 13 அன்று காலை ஆசிரியர் ஜப்பான் சென்றடைகிறார். ஆசிரியருடன் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தகவல் தொழில் நுட்பக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் ஆகியோர் உடன் செல்கின்றனர்.
அதேபோல செப்டம்பர் 17 ஆம் தேதி சிங்கப்பூரிலும் பெரியார் பிறந்த நாள் நிகழ்வுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

சனி, 7 செப்டம்பர், 2024

மூடநம்பிக்கைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்தவர்கள்மீது உடனடி நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சருக்குப் பாராட்டு – தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


விடுதலை நாளேடு Published September 6, 2024

 * கல்விக் கூடங்களில் ஆன்மிக மூடநம்பிக்கைப் பிரச்சாரமா?

* அரசமைப்புச் சட்டம் 51A(h) சரத்துக்கு விரோதம்
அரசு, கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழிப்போடு இருக்க வேண்டும்

அசோக் நகரில் செப்.9ஆம் தேதி சிறப்புக் கூட்டம் – ஆசிரியர் உரையாற்றுகிறார்
இந்திய அரசியலைமைப்பின் பிரிவு 51ஏ(எச்) வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை பரப்பவும், கல்விக் கூடங்களில் மூடநம்பிக்கைப் பிரச்சாரத்திற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு தி.மு.க. அரசைப் பாராட்டியும், “பகுத்தறிவும், மாணவர்களும்” என்ற தலைப்பில் அதே அசோக் நகர் பகுதியில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 09.09.2024 திங்கள்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெறும். தமிழர் தலைவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.
மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

கல்விக் கூடத்தில் மூடநம்பிக்கைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்தது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. சட்டத்திற்குப் புறம்பாக நடை பெறுவதைத் தடுப்பதில் அரசு, ஆசிரியர், கல்வியாளர்கள், பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஊக்க உரை (Motivational Speech) என்ற பெயரில் ‘‘பரம்பொருள் பவுண்டேஷன் மகாவிஷ்ணு’’ என்பவர் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஆற்றிய உரையும், அது மாணவிகளிடம் ஏற்படுத்திய தாக்கமும் அந்த நிறுவனமே வெளியிட்ட காணொளியால் நேற்று (5.9.2024) சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்விக் கூடத்தில் மூடநம்பிக்கைப் பிரச்சாரமா?
இதற்குச் சில நாள்களுக்கு முன்பே சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த இதே போன்ற நிகழ்விலும், குருகுலக் கல்வி, முன் ஜென்ம பலன், பாவம், புண்ணியம் என்று பேசி, அதன் பலன் தான் இப்பிறவியில் ஒருவரின் பிறப்பு என்றும் பேசியதைக் கண்டித்து, அங்கேயே பார்வை மாற்றுத் திறனாளியான சங்கர் என்ற தமிழாசிரியர் எதிர்க் கேள்வி எழுப்பியிருக்கிறார். எதிர்க் கேள்வி எழுந்ததுமே, உங்கள் பெயர் என்ன என்று கேட்டு அவரை மிரட்டத் தொடங்கி, குறைந்தபட்ச மனிதநேயமும், நாகரிகமும் இன்றி நடந்துகொண்ட காணொளியும் நேற்று இதனுடனே வெளியாகியது. இதனைக் கண்ட நாம் உள்பட அனைத்துத் தரப்பினரும் அதிர்ந்து போனோம்.

முதல் அமைச்சர், கல்வி அமைச்சரின் சீரிய பணிகள்
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காகவும், அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கல்வியின் எல்லா வாய்ப்புகளும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் அவர்களும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் சிறந்த முறையில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையில் பெருந்தொகை செலவு செய்யப்பட்டு, நிர்வகிக்கப்படும் துறை என்னும் அளவிற்கு பள்ளிக் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் அரசுப் பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்திருப்பது மிகுந்த எச்சரிக்கையுடன் நோக்கத் தக்கதாகும். இளம் பிஞ்சுகளிடம் மதவாத நஞ்சை விதைக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். இந்தியா முழுவதும் செய்து வரும் சதிச் செயலாகும். அதிலும், குறிப்பாக தமிழ்நாட்டைக் குறிவைத்துத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்-சும், அதன் அமைப்புகளும் செயலாற்றி வருவதையும், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

பல வேடங்களைத் தரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.,
பல வேடங்களைத் தரித்துக் கொள்வது ஆர்.எஸ்.எஸ்.சுக்குப் புதியதல்ல. கல்வியாளர், ஊக்க உரையாளர், யோகா பயிற்றுநர், பேச்சாளர் என்ற பல போர்வைகளில் பள்ளிகளை அவர்கள் குறிவைக்கின்றனர். தனியார் அமைப்புகளாகவும், சில தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரிலும், யோகா – உடற்பயிற்சி வகுப்புகள் என்ற பெயரிலும் நுழைய முயற்சிப்பதும், நாம் உள்ளிட்ட மதச்சார்பற்ற அமைப்பினர் சுட்டிக்காட்டுவதும், அதே நேரத்தில் அரசு அதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்து, உரிய சுற்றறிக்கைகள் ஆணைகள் மூலம் தடுத்துக் கொண்டு வருவதையும் அனைவரும் அறிவோம்.

தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரிலும், அதையொட்டிய பல்வேறு திட்டங்கள் என்ற பெயரிலும் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து நெருக்கடிகளை, மறைமுகமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் பல திட்டங்களை தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. ஆளுநர் என்ற பெயரில் அதிகார அத்துமீறலில் ஈடுபடும் ஒருவர் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையையும், பள்ளிக் கல்வித்துறையையும் குறிவைத்துக் காய் நகர்த்துகிறார்.
அறிவு விடுதலைக்காகவும், சமத்துவத்துக்காகவும் நடைபெறும் இந்தப் போர் சாமானியத்தில் ஓயக் கூடியதல்ல. தனியார் கல்வி நிறுவனங்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. அதை நோக்கியும் அரசு கவனத்தைச் செலுத்தி வருகிறது. செலுத்தவும் வேண்டும்.
இந்தச் சூழலில்தான் இந்த நிகழ்ச்சி அனைவரின் கொந்தளிப்புக்கும், கடுமையான கண்டனத்துக்கும் உடனடிக் காரணமாகி உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் மனநிலை என்ன என்பதையும், உச்சபட்ச விழிப்பு நிலையில் தமிழ்நாடு இருக்கி றது என்பதையும் இந்த எதிர்ப்புணர்வு பதிவு செய்திருக்கிறது.

அரசு சார்பில் உடனடி நடவடிக்கை!
தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அமெரிக்காவில் மிக முக்கியமான பயணத்தில் ஈடுபட்டிருந்தாலும், உடனடியாக இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பதை உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். “தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும், வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட” தாம் ஆணையிட்டுள்ளதைத் தெரிவித்தும், “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!” என்று தம் அரசின் பாதையைத் தெளிவாகவும் தெரிவித்துள்ளார்.

நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேரிலேயே அப்பள்ளிக்குச் சென்று நிலைமையை விசாரித்து. துறை ரீதியான நடவடிக்கைகளை எடுத்து (இரண்டு பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.) உணர்வுப் பூர்வமாக எதிர்க் கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கர் அவர்களையும் அழைத்துப் பாராட்டி அவரை அருகில் வைத்துக் கொண்டே செய்தியாளர்களைச் சந்தித்து உரிய விளக்கங்களையும், அரசின் நிலைப்பாட்டையும் தெரிவித்ததுடன், பள்ளியில் மிக மோசமாக நடந்துகொண்டு, ஆசிரியரை மிரட்டி, மூடநம்பிக்கைக் கருத்துகளை விதைத்த அந்தப் பேச்சாளர்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மிகுந்த உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

சில தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா அன்று ஆசிரியர்களின் கால்களை மாணவர்கள் கழுவும் நிகழ்ச்சி என்று மாணவர்கள்மீது திணிக்கப்படும் அருவருப்பான நிகழ்ச்சி குறித்தும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள அமைச்சர், இது தொடர்பான சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு, இவை தடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். பெற்றோர் காலைக் கழுவுங்கள் என்று சில பள்ளிகள் நடத்தும் நிகழ்ச்சி உள்பட எல்லா இழிவுகளும் ஒழிக்கப்பட வேண்டும்.
மாதிரிப் பள்ளிகள் என்பவையும் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனபதையும், எவ்விதத்திலும் ஒன்றிய அரசின் திட்டங்கள் வழியாக காவித்தனம் நுழையவோ, அதன் சாயல் கொண்ட திட்டங்களை நுழைக்கவோ இடம்கொடுத்துவிடக் கூடாது என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அரசுப் பள்ளி வளாகத்துக்குள் இருந்து கொண்டே ஆசிரியர்களை மிரட்டுவதா?
அரசுப் பள்ளி வளாகத்துக்குள் இருந்து கொண்டு ஆசிரியரை மிரட்ட இவர்களுக்கு எங்கிருந்து இந்தத் துணிச்சல் வருகிறது? அமைச்சரின் கொதிப்பு திராவிட இயக்க உணர்வின் வெளிப்பாடாகும். இதன் பின்னால் இருப்போர் யார்? யாருடைய தூண்டுதல் அல்லது ஊடுருவலில் இது நடக்கிறது என்பதையும் உரிய வகையில் கண்டுபிடித்துக் களைய வேண்டியது அவசியமாகும். இந்த நடவடிக்கையில் எத்தனை அதிகார மய்யங்கள் இருந்தாலும் தமிழ்நாடு அரசுக்குக் கருத்தியல் ரீதியாகவே பக்க பலமாக மக்கள் ஆதரவு உண்டு என்பதை இந்த ஒரே இரவில் மக்களும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்ற போதே ‘‘தி.மு.க. அரசு தந்தை பெரியாருக்குக் காணிக்கை’’ என்று அறிவித்தார். அதன் நீட்சியாகத் தான் முத்தமிழறிஞர் கலைஞரும், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஆட்சி நடத்தி வருகின்றனர். இத்தகைய ஊடுருவல் முயற்சிகள் வரலாறு நெடுக நடந்துவருகின்றன. அதற்கு உரிய பதிலை உடனடியாகச் செய்துள்ளது தான் ‘திராவிட மாடல்’ ஆகும்.

அரசமைப்புச் சட்டம் என்ன சொல்லுகிறது?
“It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform” என்று இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(h) ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இதைத் தான் வரையறுத்திருக்கிறது. தமிழ்நாடு அரசு எடுத்திருப்பது சட்ட ரீதியாகச் சரியான நடவடிக்கை ஆகும்.
ஆசிரியர் அமைப்புகள் இத்தகைய பிரச்சினைகளில் விழிப்போடு இருந்து, கல்வி நிலையங்களுக்குள் ஊடுருவ முயலும் மதவாதப் பாம்புகளை அடையாளம் காண வேண்டும்.

கல்வித் துறையின் மூலம் நவீன தமிழ்நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளோம். அந்தக் கோட்டைக்குள் இத்தகைய குள்ளநரிகளை அனுமதித்துவிடக் கூடாது. கல்வித் துறைக்குள்ளும் களைகள் முளைத்திருப்பின் அவற்றையும் களைந்தெறிய வேண்டிய அவசியம் உள்ளது.
ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கலாம் என்று ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டதன் பின்னணியில், இத்தகைய ஊடுருவல் நடவடிக்கைகளுக்கான நோக்கம் தான் உள்ளது. தமிழ்நாட்டில் வெளிப்படையாக அப்படி இருக்க முடியாது என்பதால் மறைமுகமாகச் செயல்படுவோர் உண்டு. அதனைக் கவனித்து ஊடுருவல்களைத் தடுத்து, மாணவ நாற்றுகளைக் காக்க வேண்டியது நம் கடமை.

சுயமரியாதை, பகுத்தறிவு உணர்வோடு உடனடியாகக் கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கரும், தகவல் தெரிந்த உடனே நடவடிக்கைகள் எடுத்த தமிழ்நாடு அரசின் முதலமைச்சரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் நமது பாராட்டுக்குரியவர்களாவார்கள்.
அரசு, கல்வித் துறை, பெற்றோர் உள்ளிட்டோர்
விழிப்போடு இருக்க வேண்டும்
இது ஒரு நாள் இரு நாள் பிரச்சினையல்ல. “Eternal vigilance is the price of liberty”. அரசு, கல்வித் துறை, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர், சமூக இயக்கங்கள் உள்ளிட்ட அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியமாகும்.

 

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
6.9.2024


திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மூடப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூற முடியுமா? – தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

 

விடுதலை நாளேடு

தமிழ்நாட்டிற்குள் ‘‘பிள்ளையார்’’ வந்தது எப்போது?

திராவிடர்களைக் கொன்றொழித்த கதைகளைக் கொண்டதுதானே ஆரியப் பண்டிகைகள்!
பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும்

ஹிந்து மதப் பண்டிகைகள் எல்லாம் திராவிடர்களைக் கொன்றொழித்த ஆரியப் புராணக் கதைகளின் அடிப்படையில்தானே! தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் பகுத்தறிவுக் கொள்கையைக் கொண்ட ‘திராவிட மாடல்‘ அரசு, இந்த மூடப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூற முடியுமா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று (7.9.2024) விநாயகர் சதுர்த்தியாம்! பிள்ளையார் பிறந்த நாளாம்!
தமிழ்நாட்டுக்குள் ‘‘பிள்ளையார்’’ வந்தது எப்படி?
சில நூற்றாண்டுகளுக்கு முன்தான் வடக்கே இருந்து பிள்ளையார் – விநாயகர் என்று தமிழ்நாட்டிற்குள் பண்பாட்டுப் படையெடுப்பாக உள்ளே திணிக்கப்பட்டது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு காலப்போக்கில் வாதாபியி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘கடவுள்’தான் விநாயகன் – ‘பிறந்தது எப்படியோ?’ (நூல் ஆதாரம்: தமிழறிஞர் – மேனாள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் – பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் நூல்)
‘முருகன்’ (கந்தன்) எப்படி ஸ்கந்தன் ஆக்கப்பட்டு, ‘சுப்ரமணியக் கடவுளாக’ மாற்றப்பட்டான் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் போன்ற கற்றுத் துறைபோகிய தனித்தமிழ் பண்பாட்டுப் பாதுகாவலர்களிின் கருத்தியலை எளிதில் புறந்தள்ள முடியாதே!
அதுமட்டுமா?

வேதங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும்
பிள்ளையார் உண்டா?
‘‘வேதங்களிலும், பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம்பெறவில்லை’’ என்று அனிதா ரெய்னாதாப்பன் (1992:31) குறிப்பிடுகிறார்.
குப்தர் காலத்து முந்தைய சிற்றூர்களிலும் பிள்ளையார் வடிவம் இல்லையென்று கூறும் ஆய்வாளர் ஆனந்த குமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
‘விநாயகர்’ என்பது விண்–நாயகர்–தலைவர் – புத்தருக்கு உள்ள பெயர். அது ஹிந்துக் கடவுளுக்கு வந்தது எப்படி என்று மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறாரே! (‘பெளத்தமும் தமிழும்’) இதற்கு என்ன பதில்?
பிறகு பிள்ளையாரை வைத்து மராத்திப் பார்ப்பனர் திலகர் போன்றவர்கள், பம்பாய் – மராத்திய மாநிலத்தில், அரசியல் ஆயுதமாக்கி, பக்திப் போதையைப் பயன்படுத்தி தங்களது தேசியப் போர்வைக்கு இந்த வர்ணாசிரமவாதிகள் வழிமுறை வகுத்தனர். அதைப் பெருங்கொண்டாட்டமாக்கி, பண்பாட்டுப் படையெடுப்பை வளர்த்தனர்!
முன்பெல்லாம் சிறுசிறு களிமண் பொம்மைகள் ஓரிரு ரூபாய்க்கு வாங்கப்பட்டு, வழிபாடு முடிந்தவுடன் கிணற்றிலோ, ஆற்றிலோ போடப்படும்!

மதக் கலவரத்தை ஏற்படுத்த பிள்ளையாரும் – ஊர்வலமும்!
இப்பொழுது அந்த ஆயுதத்தை மதக் கலவரத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி, அரசியல் லாபம் ஈட்ட
ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்துபரிஷத், வடநாட்டு மார்வாரி – பனியாக்களின் பண வீச்சுடன் நடைபெறும் நிலை தமிழ்நாட்டிற்குள்ளும் ஏற்பட்டுள்ளது!
அப்படி விநாயகருக்கு எந்த சக்தியும் கிடையாது என்று பாமர மூடநம்பிக்கையாளர்களுக்கு நிரூபித்துக் காட்டவே 1953 ஆம் ஆண்டு பிள்ளையார் சிலைகளை பொது இடங்களில் உடைத்துக் காட்டினர் தந்தை பெரியாரும், அவர்தம் தொண்டர்களும்!
அது புண்படுத்த அல்ல; மக்களைப் பண்படுத்தவே! அறியாமையிலிருந்து அவர்களை விடுதலை பெறச் செய்யவே!
‘விக்னத்தைப் போக்குவான்’ என்று கதை அளப்பார்கள் – மக்களின் எந்த ‘விக்னத்தை’, கோணலை அவர் நிமிர்த்தியிருக்கிறார்? சிந்திக்க மறுக்கும் மூடர்களால் இதுபோன்று பக்தியைப் பயன்படுத்தி, பலர் பிழைப்புத் தேடுவதுதான் ‘மிச்சம்!’

பிள்ளையாருக்குப் பூணூல் வந்தது எப்படி?
பிள்ளையார் உற்பத்திபற்றிய கதைகளோ நம்ப முடியாத புளுகு மூட்டைகள் என்பது ஒருபுறம் இருந்தா லும், அருவருப்பு ஆபாசத்தின் தொகுப்பாகவே காட்சி அளிக்கும் பரிதாபம்தானே மிச்சம்!
அக்கடவுளுக்கு ‘‘பூணூல் முக்கியமாம்!’’
எப்படி வந்தது இது?
யாராவது யோசித்தார்களா? சுட்டிக்காட்டுபவர்கள்மீது வசை மாரி பொழிவதுதான் ஒரே வழியா? பதிலா? என்னே, அறியாமை!
இந்த லட்சணத்தில் சில அரசியல் அவலட்சணங்கள் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஏன் தமிழ்நாடு முதல மைச்சர் வாழ்த்துச் சொல்லவில்லை என்று வக்கணை பேசுகின்றன!
தந்தை பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரசு உண்மையான ‘திராவிட மாடல்’ அரசு – அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆட்சிகள்.
மக்களை ‘‘சூத்திரரர்களாக்கி’’, ‘‘பஞ்சமர்களாக்கி’’டும் பண்டிகைகள், அசுரர்கள் என்ற திராவிடர்களைக் கொன்று அழிக்கவேண்டும் என்ற தத்துவத்தை – உட்கருத்தை வைத்தே உருவாக்கப்பட்ட பண்டிகைகள்தான் ஹிந்து மதத்தின் ஆரியப் பண்டிகைகள்!

திராவிடர்களைக் கொன்றொழித்த கதைகளைக் கொண்டதுதானே ஆரியப் பண்டிகைகள்!
மனிதநேயத்திற்கிடமில்லாமல், நம் இனத்தவரை சூழ்ச்சியால் கொன்றதாகக் கதைகளை உள்ளடக்கிய – பண்பாட்டுப் படையெடுப்புமூலம் தமிழ்நாட்டிற்குள் புகுந்த ஜாதி, வர்ணாசிரமத்தை மறைமுகமாக வாழ வைக்கும் பக்திப் போதைக் கருத்துகள்தான் இவை.
இருமொழிக் கொள்கை உடைய திராவிட அரசினை – ஹிந்தித் திணிப்பு விழாவிற்கு அழைத்து வர முடியுமா? அதுபோலத்தான் ‘சூத்திர, பஞ்சம, பெண்ணடிமை ஒழிந்த ஒரு புது சமுதாயம் – சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முனையும்’ கொள்கையுடன் செயல்படும் தி.மு.க. அரசு அதற்கு நேர் முரணான மனுதர்ம, வர்ண தர்மத் திணிப்பு, ‘அசுரர் அரக்கர்’ என்று திராவிடர்களை இழிவுபடுத்திய கதைகளைப் பரப்பும் நிகழ்வுகளுக்கு எப்படி வாழ்த்துக் கூற முடியும்?
மல்லாந்து படுத்துத் தன் மார்புமீதே எச்சில் துப்பும் வேலை ஆகாதா அது? அதை உணர்ந்த பகுத்தறிவுத் தெளிவுதான் நம் அரசுக்கு உரிய தனிச் சிறப்பாகும்!
தனிப்பட்ட வெறுப்பு அல்ல – அதன் அடிப்படை!

அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும்
‘திராவிட மாடல்’ அரசு ஹிந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூற முடியுமா?
ஜாதி, வருணம் ஒழிந்த, சமத்துவ, சமதர்ம, சமூக நீதிக் கொள்கை உடைய ஓர் அரசு – அறிவியல் மனப்பான்மைக்கும், மனிதநேயத்திற்கும் தடை ஏற்படுத்தி, கேள்வி கேட்கும் தன்மையைக் குழிதோண்டிப் புதைத்திடும் வெறும் மூடநம்பிக்கைகளை எப்படி அரசு வளர்க்கும்?
வாழ்த்துச் சொல்லவில்லையே என்று வகைகெட்டுக் கேட்போர், சிந்திக்கவேண்டும்!
அப்படி கேள்வி கேட்கும் ‘சீலர்கள்!’ சீறிப் பாய்வ தற்குப் பதிலாக – ‘அசுரர்களைக்’ கொல்லாத ஹிந்துப் பண்டிகை ஒன்று உண்டா? விரலை மடக்க முடியுமா? பதில் சொல்லுங்கள், ‘‘சதுர்த்தி’’ தமிழ்ச் சொல்லா?
‘நவமி’ தமிழ்ச் சொல்லா? ‘சஷ்டி’, ‘தீபாவளி’ தமிழ்ச் சொற்களா?
அடையாளம் போதாதா?

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
7.9.2024

வியாழன், 5 செப்டம்பர், 2024

வெக்கை குறைந்து தென்றல் தவழட்டும் ஈழத்தில்! - (4)


வரலாற்றில் இடம் பெறப் போகும் திருப்புமுனைப் பயணம் (இலங்கை) - (3)


எரியும் நினைவுகளைச் சுமக்கும் (யாழ்ப்பாணம்)நூலகம்!-நமது சிறப்புச் செய்தியாளர் -(2)