கலி.பூங்குன்றன்
1957 நவம்பர் 26 - தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்கப்படவே முடியாத வைர வரிகளால் அணிய செய்யப்படவேண்டிய நாள்!
ஆம், அந்நாளில்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதிகளைத் (13(2), 25(1), 26, 29(1),(2), 368) தீயிட்டுக் கொளுத்திய நாள்.
அதற்கான தீர்மானம் 1957 நவம்பர் 3 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சாவூரில் கூட்டப்பட்ட ஜாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாட்டில் முடிவு எடுக்கப் பட்டது. நான்கு இலட்சம் பேர் கூடிய அந்த மாநாட்டில் தான் தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்கள் அளித்து தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்த நன்றித் திருநாள் (அதன் மதிப்பு அன்றைய நிலையில் ரூ.7,704).
அந்த மாநாட்டில் வரலாற்றில் அதற்குமுன் கேட்டி ராத, படித்திராத ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

''அரசியல் சட்டத்தில் கண்டுள்ள மதப் பாதுகாப்பு, மத உரிமை என்பதில் இந்து மதம் என்பதை எடுத்துக் கொண்டால் அது வரு ணாசிரம தர்மம் என்கிற பிறவியில் மக்களை ஜாதிகளாகப் பிரித்து அவரவர்களுக்குத் தொழிலையும் கற்பித்து, ஒரு பிறவி உயர்ந்தது முதன்மையானது, மற்றொரு பிறவி தாழ்ந்தது, இழிவானது என்பதான கருத்துகளை அமைத்து, அந்த அமைப்பைக் காப்பதுதான். மத சுதந்திரம் என்பதாகச் சாஸ்திரங்களிலும் மற்றும் மத ஆதாரங்களிலும் கூறுவதைக் கொள்கையாகவும், நம்பிக்கையாகவும் கொள்வதை உரிமையாக்கு வதாகிறது. இந்த உரிமையானது - இந்நாட்டு இந்து பொதுமக்களில் நூற்றுக்கு மூன்று பேர்களை மேல்ஜாதி உயர்ந்தபிறவி உடல் உழைப்பில்லாமல் இருந்து கொண்டு மற்றவர் உழைப்பில் சுகவாசிகளாக வாழ்வதென்றும், நூற்றுக்குத் தொண்ணூற்றுஏழு பேர்களான மக்களைக் கீழ்ஜாதி இழிமக்களென்றும், உடல் உழைப்பு வேலைசெய்து கொண்டு அடிமையாய், பாட்டாளியாய் வாழ வேண்டியவர்கள் என்றும், பின் சொல்லப்பட்ட மக்கள் கல்வியறிவுக்கும், நீதி நிர்வாக உத்தியோகங்கள், பதவிகளுக்கும் தகுதியற்றவர்கள் என்றும் ஆக்குவதாக இருப்ப தால், இந்த மதக்காப்பாற்று உரிமை கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும் என்பது அவசியம் என்றும் இம்மாநாடு கருதுகிறது.
இந்தக் காரியங்கள் சாதாரணமான தன்மையில் மாற்றப்படாவிட்டால் எந்தவிதமான முறையைக் கண்டாவது மாற்றித்தரும்படிச் செய்யவேண்டியது பொதுமக்களின் இன்றியமையாத கடமை என்று இம்மாநாடு கருதுகிறது.
வோட்டுரிமை இல்லாமலும், மற்றும் இந்த அரசியல் சட்டமானது பொதுஜன சரியான தேர்தல் முறை இல்லாமலும் பொறுக்கி எடுத்துக் கொள்ளப்பட்டவர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையினால் வகுக்கப்பட்ட சட்டமாத லாலும்,
இந்தச் சட்டத்தைத் தயாரித்த ஆறு பேர்களில் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனர்கள் ஆத லாலும் பார்ப்பனர், முஸ்லீம், பஞ்சமர் ஆகியவர் களைத் தவிர்த்த பொதுஜனத் தொகையில் நூற்றுக்கு எழுபத்தைந்து பேர்களாயுள்ள சூத்திரரென்று ஆக்கப்பட்டிருந்த பெருங்குடி மக்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு சட்டம் செய்யும் குழுவைக் கொண்டு இச்சட்டம் வகுக்கப்பட்டிருந்ததாலும்
இந்தச் சட்டமானது நான்காம் ஜாதி என்றும் கூறப்படுகின்ற மக்களைக் கட்டுப்படுத்தத்தக்கதாக ஆகாது என்று இம்மாநாடு கருதுகிறது.
இப்படிப்பட்ட காரணங்களால் இந்த நாட்டுப் பெருங்குடி மக்களுக்கு அமைப்பு, ஜாதி, மதம் ஆகியவை காரணமாக நீதி சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவை அளிக்கப் படாததாயிருப்பதால் இவைகளை முன்னிட்டு, இந்த அரசியல் சட்டம் இந்நாட்டுப் பெருங்குடி மக்களுக்குக் கேடானது என்று கருதுவதால், இக்கேடுகளுக்கு ஒரு தெளிவான பரிகாரமோ இன்றுமுதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1949 நவம்பர் 26ஆம் தேதி என்ற அரசியல் சட்ட பிறப்பு நாள் வைத்து, இந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று மாலையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத் தக்கது என்று இம்மாநாடு பொது மக்களுக்குத்தெரிவித்துக் கொள்கிறது.''
(‘விடுதலை', 5.11.1957)
இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில்தான் 1957 நவம்பர் 26 ஆம் தேதி 10 ஆயிரம் திராவிடர் கழகத் தோழர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பகுதியைத் தீயிட்டுக் கொளுத்தி, உள்துறை அமைச்சர் பக்தவத்சலத்திற்கு அவற்றின் சாம்பலை அனுப்பி வைத்தனர்.
சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே இடம் இல்லை. அவசர அவசரமாக சென்னை மாநில சட்டப்பேரவையில் ‘‘தேசிய அவமதிப்புத் தடுப்பு மசோதா'' (Prevention of Insult to National Honour - 1957) நிறைவேற்றப்பட்டது.
சட்டத்தைக் கொளுத்தினால் மூன்றாண்டுவரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பதுதான் அந்தச் சட்டம்.
தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்ட போராட்டத் திற்காகவே நிறைவேற்றப்பட்ட அந்த சட்டம் குறித்து தந்தை பெரியார் ‘விடுதலை'யில் வெளியிட்ட அறிக்கை கழகத் தோழர்கள் மத்தியிலே எழுச்சியை ஏற்படுத்தியது.
‘‘நான் மூன்றாண்டுக்கோ, பத்து ஆண்டுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ -
மற்றும் பிரிட்டிஷ்காரன், காங்கிரஸ் கிளர்ச்சி யின்மீது கையாண்ட எந்தவிதமான கொடிய தீவிரமான அடக்குமுறைகளை நம்மீதும், கழகத் தின்மீதும் பிரயோகித்தாலுங்கூட, அவற்றிற்குப் பயப்பட்டு என் லட்சியத்தையோ, திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
கழகத் தோழர்களே!
தீவிர லட்சியவாதிகளே!
நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்துவிடமாட்டீர் கள் - சட்டத்தைப் பார்த்து பயந்துவிட்டதாகப் பேர்வாங்காதீர்கள்.
ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாவட்டத் தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்.''
- ஈ.வெ.ரா.
திராவிட இனத் தானைத் தலைவரின் இத்தகைய அறிக்கையைக் கண்ட நிலையில், கருஞ்சட்டை அரிமாக்கள் வீறுகொண்டு எழமாட்டார்களா?
‘விடுதலை'யில் பட்டியல் வேக வேகமாகக் குவிந்து கொண்டே இருந்தது.
பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கருஞ்சட்டைத் தோழர் கள் குடும்பம் குடும்பமாக எரித்தனர்.
நீதிமன்றத்திலேயே நிறுத்தப்பட்டபோது கூட
தலை தாழாச் சிங்கங்களாகக் கர்ச்சித்தனர் - எதிர்வழக்காடவில்லை.
‘‘நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை. அச் சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால், என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன்.
இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. அதனால், நான் குற்றவாளி அல்ல.
இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் கலந்து கொள்ள விரும்வில்லை. நான் எதிர்வழக்காட விரும்பவில்லை.
நான் குற்றவாளி என்று கூறப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்!''
- (‘விடுதலை, 21.11.1957)
என்று ஒவ்வொரு கருஞ்சட்டை வீரனும், வீராங்கனையும் நீதிமன்றத்தில் முழங்கினர்.
இப்படி ஓர் இயக்கத்தை இந்தத் தரணியில் கண்டதுண்டா?
சிறையிலே கொடுமை, கொடுமை! பலரும் மாண் டனர் - பட்டுக்கோட்டை இராமசாமியின் உடலை சிறைச்சாலைக்குள்ளேயே புதைத்துவிட்டனர். என்ன கொடுமையடா!
அன்னை மணியம்மையார் திருச்சியிலிருந்து சென்னை சென்று, முதலமைச்சர் காமராசர் வீட்டுக் கதவைத் தட்டி, அவர்தம் ஆணையின் பெயரில் புதைக்கப்பட்ட ஜாதி ஒழிப்புத் தீரன் பட்டுக்கோட்டை இராமசாமியின் அழுகிய உடலையும், சிறையில் வீர மரணமடைந்த தீரன் மணல்மேடு வெள்ளைச்சாமியின் உடலையும் திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து பல்லா யிரக்கணக்கான மக்கள் சூழ ஊர்வமலாக எடுத்துச் சென்று காவிரிக் கரை நகராட்சி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சிறைக்குள்ளும், சிறையில் நோய் வாய்ப்பட்டு, விடுதலையாகி சில நாட்களில் உயிர்நீத்த தோழர்களின் எண்ணிக்கை பெருகியது.
சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெற்று 65 ஆண்டு கள் ஓடிவிட்டன என்றாலும், ஜாதியைப் பாதுகாக்கும் பகுதி அரசமைப்புச் சட்டத்திலிருந்து இன்னும் அகற்றப்படவில்லை.
நேற்று (26.11.2021) காணொலிமூலம் சட்ட எரிப்பு நாள் - ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கமாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கழகத் தலைவர், தந்தை பெரியார் அவர்களின் ஜாதி ஒழிப்புப் போராட்டம், காங்கிரசில் இருந்தபோதே தொடங்கப்பட்டதை எடுத்துக் கூறினார். 1924 இல் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் - தொடர்ந்து 1925 வைக்கம் போராட்டம்பற்றி எல்லாம் கூறினார்.
1924 இல் அவர் தொடங்கிய ஜாதி ஒழிப்புப் போர், 1973 டிசம்பர் 24 வரை கடைசி மூச்சு அடங்கும்வரை தொடர்ந்ததை நினைவூட்டினார்.
தனது மரண சாசன உரையில்கூட, (19.12.1973, சென்னை தியாகராயர் நகர் உரை) உங்களையெல்லாம் சூத்திரர்களாக விட்டுவிட்டுச் சாகப் போகிறேனே என்று சொன்னதை நினைத்துப் பார்ப்போம்.
தந்தை பெரியார் எழுப்பிய வினா குறித்து கழகத் தலைவர் சிலாகித்தார். ‘‘சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மகன் சூத்திரனாக முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படு வார்களா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டவர்களை அடிமைகள் என்றும், நீசர்கள் என்றும், இழிமக்கள் என்றும், கருதும் மதங்களும், புராணங்களும், சட்டங்களும் இருக்க முடியுமா? சிந்தித்துப் பார்த்துச் செயலாற்றுங்கள்!''
என்று தந்தை பெரியாரின் அறைகூவலை எடுத்துக் காட்டினார் தமிழர் தலைவர் தனது உரையில்.
மூல பலத்தோடு போர் புரிவதுதான் தந்தை பெரியாரின் போர் முறை என்றார் அறிஞர் அண்ணா.
‘‘நோய் வந்த பின் நோய்க்கு மருந்து கொடுத்து வைத்தியர்கள் குணமாக்குகிறார்கள். ஆனால், அந்த நோய் அடுத்தடுத்து வராமல் இருக்க அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை ஒழிக்க வேண்டாமா? நோய் வந்துகொண்டே இருப்பதும், அவ்வப்போது மருந்து கொடுத்துக் கொண்டே இருப்பதும் பயனுள்ள செயலாகுமா? அதுபோலத்தான் சமுதாயத்தை நாசப்படுத்தி வரும் ஜாதி நோய்க்கான மூல காரணங்களைக் கண்டறிந்து ஒழிக்கவேண்டாமா?''
(‘விடுதலை', 25.7.1962)
என்பதுதான் தந்தை பெரியாரின் அணுகுமுறை.
‘ஜாதி பிரம்மா என்னும் கடவுளால் உண்டாக்கப் பட்டதா? பகவான் கிருஷ்ணன் படைத்தானா? முதலில் இந்தக் கடவுள்கள்மீது கை வை!
ஜாதிக்கு மதம்தான் காரணமா? அதனையும் மண்ணுக்குள் புதை! வேதங்களும், சாஸ்திரங்களும், இதிகாசங்களும், புராணங்களும் காரணமா? அவற்றைத் தீ வைத்துக் கொளுத்து! ஏன் அரசியல் சட்டமே பாதுகாக்கிறதா? கொளுத்து - சாம்பலாக்கு - சட்டத்தைத் திருத்த முன்வராத அமைச்சர்களுக்கே அந்த சாம்பலை அனுப்பி வை!' இதுதான் தந்தை பெரியாரின் அறிவியல் ரீதியான அணுகுமுறை.
உலகெங்கும் கடவுள் நம்பிக்கை உண்டு, மதங்கள் உண்டு. அங்கெல்லாம் பிறப்பின் அடிப்படையிலான ஜாதி உண்டா? பிறப்பின் அடிப்படையை வைத்து கல்வி மறுக்கப்படுவது உண்டா? என்ற வினாக்களை எழுப்பினார் ‘விடுதலை' ஆசிரியர்.
விவேகானந்தரைப் பற்றி வெகுவாகப் பேசுகி றார்களே - பெரிய சீர்திருத்தவாதி என்று தோற்றம் கொடுக்கிறார்களே! அந்த விவேகானந்தர் என்ன சொல்லுகிறார்? ஜாதியைக் கேவலமாகப் பேசியதால்தான் வீழ்ச்சி அடைந்தோம் என்று விவேகானந்தர் கூறியிருப்பதை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டினார் (The Complete Works of Vivekananda).
அடுத்து ஆசிரியர் எழுப்பிய வினா மிகவும் முக்கியமானது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறுகிறார்களே, ஒரே ஜாதி என்று கூறாதது ஏன்? ஏன்? என்று சவுக்கால் அடித்தது மாதிரி, பொறி தட்டுகிற மாதிரியான வினாவைத் தொடர்ந்து எழுப்பிவரும் கழகத் தலைவர் நேற்று நிகழ்ச்சியிலும் பொருத்தமாக எழுப்பினார்.
சமரசம் உலவும் இடம் என்று பாடினால் மட்டும் போதுமா? சுடுகாட்டிலும், இடுகாட்டிலும் கூட ஜாதி பேதம் இருக்கிறதே!
மயானத்துக்குப் பிணத்தை எடுத்துச் செல்லும் பாதையில்கூடக் கலவரம் நடக்கிறதே - மயானத்துக்குச் செல்ல ஒழுங்கான பாதைகள் உண்டா? என்ற அறி வார்ந்த வினாவையும் எழுப்பத் தவறவில்லை ஆசிரியர்.
அம்பேத்கர்தானே சட்டத்தை இயற்றியவர். அவர் இயற்றிய சட்டத்தை எரிக்கலாமா? என்று சிலர் கேட்கின்றனர்.
அதே அண்ணல் அம்பேத்கர்தான், நாடாளுமன்றத் திலேயே கூறினார். தான் ஒரு வாடகைக் குதிரையாக இருந்ததைக் குறிப்பிட்ட அவர், சட்டத்தைக் கொளுத் துவதிலும் நான் முதல் நபராக இருப்பேன் என்று சொல்லவில்லையா?
(இதே கருத்தை எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவனும், பேராசிரியர் சுப.வீ.யும் குறிப்பிட்டனர்).
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒன்றிய அமைச்சராக இருந்தபோது, இந்து (Hindu Code Bill) திருத்தச் சட்டம் கொண்டு வந்தபோது, பெண்களுக்கும் சொத்துரிமை தேவை என்று சொன்னபொழுது, சனா தனிகள் எதிர்த்த காரணத்தால், அதனை நிறைவேற்ற இயலாத நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கம்பீரமாக வெளியில் வந்தவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டம் முகப்பில் உரிமை (Liberty), சமத்துவம் (Equality), சகோதரத்துவம் (Fraternity)பற்றிக் கட்டியம் கூறி என்ன பயன்? ஜாதியை ஒருபக்கத்தில் தூக்கிப் பிடித்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் இப்படிப் பேசுவது சரியா? என்ற கழகத் தலைவரின் வினாவும் முக்கியமானதே!
இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது காலாவதியான சில பகுதிகளும் உண்டு. ஆனால், ‘ஹிந்துலா' என்று வரும்போது மனுதர்மம் மட்டும் தொடர்ந்தது ஏன்? என்ற கழகத் தலைவரின் வினாவுக்கு விடை எங்கே?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்ற 17 ஆம் பிரிவு இருக்கிறது. தந்தை பெரியார் இறுதியாக சென்னையில் 1973 டிசம்பர் 8, 9 ஆகிய நாள்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரால் கூட்டப்பட்ட தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானம் என்ன கூறுகிறது என்பதை எடுத்துரைத்தார். (அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த வரே ஆசிரியர் வீரமணி அவர்கள்தாம்).
அரசமைப்புச் சட்டம் 17 ஆம் பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது (Untouchablity) என்ற சொல்லுக்குப் பதில், ஜாதி (Caste) ஒழிக்கப்படுகிறது என்று மாற்ற வேண்டும் என்பதுதான் தந்தை பெரியார் வலியுறுத்திய அந்தத் தீர்மானமாகும்.
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கலாமா? என்று கூடக் கேட்கிறார்கள். நாளைக்கே ஜாதியை ஒழிக்கச் சட்டம் கொண்டு வரட்டும் - இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுக்கத் தயார் என்றார் தமிழர் தலைவர்.
தந்தை பெரியார் அவர்களுக்கு உரிய தனித் தன்மையைப்பற்றிச் சொல்லும்போது, வெறும் பேச்சு - எழுத்தோடு பெரியார் நிற்கவில்லை. களத்திலும் நின்று போராடிய தலைவர் தந்தை பெரியாரே என்றார்.
கடினமாக உழைப்பவர்கள் இங்கு கீழ்மக்கள்; உழைக்காத சோம்பேறிகள் மேன்மக்களா? எல்லா உரி மைகளும், வாய்ப்புகளும் இவர்களுக்கு மட்டும்தானா? என்ற ஆசிரியரின் கேள்வி சிந்தனைக்குரியது.
தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புக் கருத்துகள், போராட்டங்களை குறைந்தபட்சம் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் பாடத் திட்டங்களில் இடம்பெற வேண்டும். ஜாதி ஒழிப்பு வீரர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
(இதே கருத்தினை, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., அவர்களும் கூறினார். அதனை சொல்லவேண்டிய இடத்தில் சொல்லுவேன் என்றும் உறுதி அளித்தார்).
இப்பொழுது நடப்பது திராவிட மாடல் ஆட்சி- முதற்கட்டமாக சுடுகாட்டில் இருக்கும் பேதம் ஒழிந்து பொது சுடுகாடு என்ற நிலை உருவாக்கப்படவேண்டும் என்று வற்புறுத்தினார்.
இருட்டறையில் உள்ளதடா உலகம்
ஜாதி இருக்கிறது என்பானும்
இருக்கின்றானே என்றார் புரட்சிக்கவிஞர். அதன் உணர்வை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
பெரியார் என்னும் எழுச்சிச் சுடரை ஏந்தவேண்டும். ஒரு மெழுகுவத்தி ஆயிரம் மெழுகுவத்திகளுக்கு ஒளியை ஏற்றும். ஆயிரம் மெழுகுவத்தி 10 ஆயிரம் மெழுகுவத்திகளை ஏற்றட்டும்.
பெரியார் பணி முடிப்போம்!
ஜாதியற்ற சமுதாயம் படைப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.
வெளியில் குளிர் - உள்ளத்தில் தீ!
இணைப்புரை வழங்கிய வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் இப்பொழுது வெளியில் மழை பொழிந்து குளிராக இருக்கிறது என்று குறிப்பிட்டு, சட்ட எரிப்புப் போ£ட்ட வீரர்களை நினைவு கூர்ந்தால் அவர்களின் தியாக நெருப்பு நம் உள்ளங்களைச் சுடுகிறது என்றார்.
கழகப் பொருளாளர் வீ.குமரேசன்
தொடக்கத்தில் வரவேற்புரையாற்றிய கழகப் பொருளாளர் வீ.குமரேசன் குறிப்பிட்டதாவது:
நவம்பர் 26 - அரசமைப்புச் சட்ட நாள். இந்த நாளில், தந்தை பெரியார் 64 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாடு தழுவிய அளவில் போராட்டத்தை அறிவித்தார். 1957 ஆம் ஆண்டில் கடந்த கால வரலாற்றில் யாருமே, எந்த நாட்டிலும் செய்திடாத -வருங்காலத்தில் தொடர்ந்து பேசக்கூடிய வகையில், அந்தப் போராட்டத்தை அறிவித்து நடத்தினார். அதுதான் அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம். ‘சட்ட எரிப்பு' என்பது அரசமைப்புச் சட்டத்தை அவமானப்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. நம்மை இழிந்த மக்களாகக் கருதும் ‘ஜாதி முறையை' காப்பாற்றிடும் வகையில் உள்ள சட்டப் பிரிவுகள் நம்மை அவமானப்படுத்துவதை எதிர்த்து ஓர் அடையாளமாக அந்தப் போராட்டத்தை தந்தை பெரியார் நடத்தினார்.
போராட்டத்தில் நிச்சயம் கைது ஆகக்கூடிய நிலைமை வரும். அதற்குத் தயாராக இருப்பவர்கள் மட்டும் கலந்துகொள்ளுங்கள் என இயக்கத் தோழர்களுக்கு முன்னறிவிப்பு செய்தார் பெரியார். எதையும் எதிர்நோக்கும், எத்தகைய இன்னலையும் மேற்கொள்ளும் வல்லமை பெற்ற தோழர்கள் என்பதால், தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் என 3 ஆயிரம் தோழர்கள் கைதாகி, மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை சென்றனர்.
தோழர்கள் பலர் சிறையிலேயே உயிரிழந்தனர். விடுதலையாகி வெளியில் வந்து சிறை வாழ்க்கை நலிவால் பலர் உயிரிழந்தனர். அப்படிப்பட்ட போராட்டம் உலகில் எந்த நாட்டிலும் நடைபெறவில்லை. போராட்டம் நடத்தியதன் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. ஜாதி ஒழிப்பின் அவசியம், தீண்டாமை ஒழிப்பின் கட்டாயம் இன்றும் தொடர்கிறது. அந்தப் போராட்டம் நவம்பர் 26 ஆம் நாள் ஜாதி ஒழிப்புப் போராட்ட நாளாக தந்தை பெரியார் உருவாக்கிய கொள்கைத் தடத்தில் திராவிடர் கழகம் தொடர்ந்து நடத்தி வருகின்றது.
பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி
ஒரு இயக்கத்தின் தீரம் எத்தகையது என்பதற்கு சட்ட எரிப்புப் போராட்டம் ஓர் எடுத்துக்காட்டு என்றார். ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரிக்கும் போராட்டம்பற்றி ‘அது ஒரு தியாகக் காவியம்!' என்று கழகத் தலைவர் எழுதியதை நினைவுப்படுத்தினார்.
அண்ணல் அம்பேத்கரால் இயற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அந்த இடத்தில் அதனைக் காக்கவேண்டும் என்று நாம் கூறுகிறோம். அதேநேரத்தில், ஜாதி ஒழிப்புக்காக சில பகுதிகளை எரிக்கவேண்டும் என்றும் கூறுகிறோம். இருமுனைகளில் இந்தப் பிரச்சினயை அணுகவேண்டியுள்ளது என்று நுணுக்கமாகக் கூறிய பிரச்சார செயலாளர் அருள்மொழி,
தாலி கூடாது என்று சொல்கிற நாம் தேவதாசிகள் அத்தொழிலில் இருந்து விடுபட்டு, தாலி கட்டிக் குடும்ப வாழ்வுக்கு வரவேண்டும் என்று சொல்லுவதும் இதுபோன்றதே என்றும் நயமாகக் கூறினார்.
பேராசிரியர் சுப.வீ.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தன் உரையில், மணிக்கணக்கில் பேசவேண்டிய போராட்டம்பற்றி, சுருக்கமாகப் பேச வேண்டியுள்ளது.
தந்தை பெரியார் நடத்திய சட்ட எரிப்பு என்பது, சட்டத்தை அவமதிக்க அல்ல - சட்டம் நம்மை அவமதிக்கிறதே என்பதால்தான் என்று அழகாகச் சொன்னார்.
திராவிடர் கழக வரலாறு என்பது தியாகத்தால் வார்க்கப்பட்ட ஒன்று.
எதையும் ஓங்கி சொல்லுவது தந்தை பெரியாரின் அணுகுமுறை.அப்பொழுதுதான் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும்.
தந்தை பெரியாரின் சட்ட எரிப்புப் போராட்டத்துக்காகவே கொண்டுவரப்பட்ட மசோதாவின்மீது பேசிய அறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியார் அறிவித்த போராட்டத்தின் நோக்கத்தைப் பாருங்கள் என்று சொன்னதை எடுத்துக் கூறினார்.
சிறைக்குள் உயிர்நீத்த ஜாதி ஒழிப்பு வீரர்களின் உடல் சிறைக்குள் புதைக்கப்பட்ட நிலையில், போராடி அன்னை மணியம்மையார் அவர்கள் உடல்களைப் பெற்று, பெரும் ஊர்வலம் நடத்தியதை வியந்து கூறினார்.
கழக வரலாற்றில் மட்டுமல்ல - தமிழக வரலாற்றிலேயே மறக்க முடியாத - மறைக்கவும் முடியாத சட்ட எரிப்புப் போராட்டம் என்று புகழாரம் சூட்டினார் மானமிகு சுப.வீ. அவர்கள்.
டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.,
மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.க. செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் தன் உரையில் முத்தாய்ப்பாக கூறியதாவது:
என்னோடு என் பணி முடிந்துவிடாது - எனக்குப் பிறகும் தொடரும் என்றார் தந்தை பெரியார்.
ஆசிரியர் அவர்கள் அந்தப் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்.
இன்னும் ஒரு கூட்டம் மனுதர்மத்தைக் காப்பாற்றும் வேலையில் இருப்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது என்றார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்படக் கூடாதா? இதுவரை 103 திருத்தங்கள் வந்துள்ளனவே - ஜாதி ஒழிப்புக்காக ஏன் திருத்தக் கூடாது என்ற நியாயமான வினாவை எழுப்பினார்.
குழந்தையும், மனைவியும் இறந்த செய்தி கேட்டும்கூட பிணையில் வெளிவராத வீர மறவர்கள் கழகத்தின் ஜாதி ஒழிப்பு வீரர்கள் என்று கூறி வியந்தார்.
ஜாதி ஒழிப்புப் போராட்டம் என்பது மனிதநேயத்துக்கான போராட்டம். தன் வாழ்நாளில் எல்லாம் போராட்டக் களத்தில் நின்ற உலகின் ஒரே தலைவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியாரின் கருத்துகள், போராட்ட வரலாறுகள் பாடத் திட்டத்தில் இடம்பெறவேண்டும். இதனை உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பேன் என்றார்!
எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி.,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தன் சுருக்க உரையில் குறிப்பிட்டதாவது. (வேறு பல நிகழ்ச்சிகள் அவருக்கு இருந்தன).
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் நாளை ஜாதி- தீண்டாமை ஒழிப்பு நாளாக திராவிடர் கழகம் கடைப்பிடித்து வருகிறது.
இப்பணியில் ஒற்றை இயக்கமாக, துணிச்சல் மிக்க இயக்கமாக தமிழர் தலைவர் தலைமையில் திராவிடர் கழகம் ஈடுபட்டு வருகிறது.
திராவிடர் கழகத்தின் ஜாதி ஒழிப்பு, சமூகநீதிப் போராட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது - இந்தப் பணியில் விடுதலைச் சிறுத்தைகள் என்றென்றும் பங்கு பெறுபவர்கள்தாம்.
தமிழர் தலைவர் சொன்னதுபோல, மூன்றாவது குழலாக செயல்படுவோம் என்று கூறினார்.
கலி.பூங்குன்றன்
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தன் உரையில்,
திராவிடர் கழகத் தோழர்களின் உறுதிகுலையா கொள்கைப் பிடிப்பும், இலட்சியத்திற்குரிய விலையைக் கொடுக்கத் தயங்கா துணிவும் எத்தகையது என்பதை எடுத்துக் கூறினார்.
கர்ப்பிணியாக சிறைக்குள் சென்று, பிறந்த குழந்தைக்குப் ‘‘சிறைப் பறவை'' என்றும், ‘‘சிறைவாணி'' என்றும் பெயர் சூட்டப்பட்ட தியாக அத்தியாயத்தை வெளிப்படுத்தினார்.
இடையாத்துமங்கலம் தோழர் நாகமுத்து ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை ஏற்று, உடல்நிலை பாதிக்கப்பட்ட சூழலில், திடீரென்று விடுதலை செய்யப்பட்டு,வீட்டில் மருத்துவம் பார்த்த நிலையில் மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 53. வழக்கு ஒன்றுக்காக மதுரை சென்று சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்த அன்னை மணியம்மையாரும், ஆசிரியர் வீரமணியும் தகவல் அறிந்து இடையாத்துமங்கலம் விரைந்தனர்.
5000 மக்கள் புடைசூழ அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 6.30 மணிக்கு அந்நிகழ்ச்சி முடிந்தது. அன்னையாரும், ஆசிரியரும் இரவு 7 மணிக்குத்தான் வர நேர்ந்தது. நேராக அவர் வீட்டுக்குச் சென்று, ஜாதி ஒழிப்பு வீரர் நாகமுத்து அவர்களின் இணையர் சீனியம்மாளுக்கும், 18 வயதடைந்த மகனுக்கும் ஆறுதல் சொன்னபோது, அந்த வீரத்தாய் சொன்ன சொற்கள் - திராவிடர் கழகத்தின் வீரஞ்செறிந்த தியாகத்தைப் பறைசாற்றியது.
‘‘நான் கலங்கவில்லை. என் மகன் இருக்கிறான், அய்யாவின் அடுத்த போராட்டத்திற்கு அவனையும்அனுப்பி, நானும் வந்து பலியாகத் தயாராகவே உள்ளேன்'' என்று கூறியதைக் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் எடுத்துக் கூறி, இவர் அல்லவோ புறநானூற்றுத் தாய் என்று புகழ்ந்தார்.
கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
1957 நவம்பர் 26இல் ஜாதியை ஒழிக்க அரசியல் சட்ட எரிப்பு - அப்போது கழகம் வெளியிட்ட சிறு வெளியீடு இதோ:
November 27, 2021 • Viduthalai