வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

திராவிடர் கழகத் தலைவர் அறிக்கைக்குப் பதில் கூறுவதாகக் கூறி திரிபு வேலை செய்யும் பி.ஜே.பி.யின் திருப்பதி நாராயணன்! -கவிஞர் கலி.பூங்குன்றன்

 

விடுதலை நாளேடு

கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

‘இந்து அறநிலையத் துறை என்பது கோவில் நிர்வாகப் பணிகளைக் கண்காணிப்பது, நிதிநிலை வரவு – செலவுகளைக் கண்காணிப்பதுதானே தவிர, பக்தியைப் பரப்புவதற்கான துறை அல்ல’ என்று சட்ட ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் நின்று கருத்துகளைப் பதிவிட்ட தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கையை நாலாப் பக்கங்களிலிருந்தும் பாராட்டியும், வரவேற்றும் கருத்துகள் மிகப்பெரிய அளவில் வந்து கொண்டுள்ளன.
‘திராவிட மாடல்’ அரசான தி.மு.க. ஆட்சியைக் கட்டிக் காப்பதில் திராவிடர் கழகத்தைவிட அக்கறையும், கவலையும் கொண்டவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
அதேநேரத்தில், தாய்க் கழகமான திராவிடர் கழகம் சுட்டிக்காட்டி வழிகாட்டவேண்டிய பொறுப்பும் திராவிடர் கழகத்திற்கு உண்டு என்ற முறையில் தலைவர் ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட அறிக்கைதான் நேற்று (27.8.2024) ‘விடுதலை‘யில் வந்த அறிக்கையின் சாரம்.‘‘நேற்றும், இன்றும், நாளையும் சரி எங்களை வழிநடத்து வது பெரியார் திடல்தான்’’ என்று சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பட்டாங்கமாய் கூறியதுண்டு.

வேண்டாம், சிண்டு முடியும் வேலை!
உண்மை நிலை இவ்வாறு இருக்க, திராவிடர் கழகத்திற்கும், தி.மு.க.விற்கும் இடையில் நுழைந்து சிண்டு முடியும் ஒரு வேலையில் பி.ஜே.பி.யின் மாநிலத் துணைத் தலைவர் என்று கூறப்படும் திரு.திருப்பதி நாராயணன் என்பவர் ஈடுபட்டுள்ளார்.
அதைப் படித்துப் பார்த்தால் ‘‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’’ என்பதுதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
‘‘இந்து அறநிலையத் துறை என்பது கோவில் பாதுகாப்பு, நிதி வரவு – செலவுகளைப் பார்ப்பது மான துறையே தவிர, பக்தியைப் பரப்புவதற்கான ஒன்றல்ல.’’ –கி.வீரமணி
‘‘அட இதைத்தான் நாங்கள் 50 வருடங்களாகச் சொல்லி வருகிறோம்’’ என்று தமிழ்நாடு
பி.ஜே.பி. துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் கூறிவிட்டார்.
ஆக, திராவிடர் கழகத் தலைவரின் கருத்தை பி.ஜே.பி. துணைத் தலைவர் ஒப்புக்கொண்டு விட்டார். இதனைத் தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.

‘‘ஹிந்து அறநிலையத் துறை மதச் சார்பு பிரச்சாரத்திற்கானதல்ல; அதாவது அன்றாட பூஜைகளில், வழிபாடுகளில், ஆகம விதிகளில் ஹிந்து அறநிலையத் துறை தலையிடக்கூடாது. வீரமணி சொல்வதுபோல், இதுநாள் வரை ஹிந்து அறநிலையத் துறைதான் கோவில்களை கட்டுப்படுத்தியது என்றால், கருவறையில் சமத்துவம் இல்லாது போனதற்குக் காரணம் ஹிந்து அறநிலையத் துறைதானே? தமிழக அரசு தானே?’’ என்ற கேள்வியை எழுப்புகிறார் திருவாளர் நாராயணன்.
இதன்மூலம் கோவில் கருவறையில் சமத்துவம் இல்லை என்பதைத் திருப்பதி நாராயணன் ஒப்புக்கொண்டுள்ளார்.
அப்படி என்றால், கோவில் கருவறையில் சமத்துவும் நிலவுவதற்காக, பயிற்சி அளிக்கப்பட்ட அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகராக உரிமை உண்டு என்று முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் சட்டம் கொண்டு வந்தபோது, அதனை எதிர்த்து 13 பார்ப்பனர்கள் நேரடியாகவே உச்சநீதிமன்றம் சென்றபோது, திருப்பதி நாராயணன் போன்றவர்களோ, அவர் அமைப்பைச் சேர்ந்தவர்களோ அந்த வழக்கை எதிர்த்து மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
நடவடிக்கைகூட வேண்டாம்; எதிர்த்து ஒரே ஒரு வார்த்தையாவது ‘திருவாய்’ மலர்ந்ததுண்டா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டத்தை ஆதரித்தார்களா?
காஞ்சி சங்கராச்சாரியாரின் சிபாரிசோடு பிரபல வழக்கு ரைஞர் பல்கிவாலா ஒரு பைசா பெற்றுக்கொள்ளாமல், முத்தமி ழறிஞர் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்து வழக்காடியபோது இவர்கள் எல்லாம் எங்கு போனார்களாம்?
‘‘கோவில் சொத்து விவகாரங்களில் தலை யிடுவதோ, ஆறு மரக்கால் அரிசியை எப்படிப் போடுவது என்று முடிவு செய்வதோ ஹிந்து அறநிலையத் துறையின் பணி அல்ல; அப்பணி கோவில் நிர்வாகத்தினுடையது. அதை விடுத்து, கும்பாபிஷேகம் செய்கிறேன், குடமுழுக்கு நடத்துகிறேன் என்பது ஆகம விதிகளை மாற்றுகி றேன் என்பதெல்லாம் அறநிலையத் துறையின், அமைச்சரின் பணியல்ல என்று வீரமணி சொல்வது சரிதான்’’ என்கிறார் திருப்பதி நாராயணன்.

கோவில் சொத்து விவகாரங்களில் தலையிடு வது அறநிலையத் துறையின் பணியல்ல என்று ஆசிரியர் வீரமணி எங்கே சொல்லியிருக்கிறார்? கோவில் சொத்துகளை பார்ப்பனக் கும்பல் கொள்ளையடிப்பதைத் தடுப்பதற்குக் கொண்டு வரப்பட்டதுதானே இந்து அறநிலையத் துறை. கோவில் சொத்து விவகாரங்களில் அரசின் இந்து சமய அறநிலையத் துறை தலையிடுவதில், கொள்ளையர்களுக்குப் பிரச்சினை இருக்கலாம். திருப்பதி நாராயணனுக்கு என்ன பிரச்சினை?
‘‘ஆறு மரக்கால் அரிசியை அளவுப்படி போடுவது ஹிந்து அறநிலையத் துறையின் வேலை’’ என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னதற்கு நேர் எதிராக, ‘‘அது ஹிந்து அறநிலையத் துறையின் வேலையல்ல’’ என்று ஆசிரியர் அவர்கள் சொன்னதாகத் திரித்துக் கூறுவது திருப்பதி நாராயணன் கூட்டத்தின் அறிவு நாணயக் கேட்டிற்கு நூறு விழுக்காடு எடுத்துக்காட்டாகும்.
‘‘கும்பாபிசேகம் செய்கிறேன், குடமுழுக்கு நடத்துகிறேன் என்பது, ஆகம விதிகளை மாற்றுகிறேன் என்பதெல்லாம் அறநிலையத் துறையின், அமைச்சரின் பணியல்ல என்று வீரமணி சொல்வது சரிதான்’’ என்கிறார் திருப்பதி நாராயணன்.

ஆசிரியரின் நேற்றைய (27.8.2024) அறிக்கையில் எந்த இடத்தில் இப்படி ஒரு வாசகம் உள்ளது? கோவில் நிர்வாகத்தில் அந்தந்த காலகட்டங்களில் நடக்க வேண்டியவை சரியாக நடக்கிறதா? என்று பார்க்கவேண்டியதுதான் அறநிலையத் துறையின் வேலை என்பதுதானே நமது கருத்து. ஆனால், ஆசிரியர் சொல்லாததை, அவர் சொன்னதாகச் சொல்வது, இவர்கள் எத்தகைய பொய்யர்கள் என்பதற்கும், எதையும் திரிப்பதற்குத் தயங்காதவர்கள் என்பதற்கும் சான்று அல்லவா! ஆகமங்களை மாற்றக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் எங்கே சொல்லியிருக்கிறார்?
ஆகம விதிகள் மாற்றப்படவே இல்லையா?
தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைவரும் கோவிலில் நுழையலாம் என்ற நடைமுறை ஆகம விதிகளுக்கு எதிரானதுதானே! ஹிந்து அறநிலையத் துறையின் தலையீடு இல்லாமல், அரசின் தலையீடு இல்லாமல் கோவில் நுழைவு உரிமை ஆகாயத்திலிருந்து குதித்ததா?
கோவில் உள்விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்கிறாரோ திருப்பதி நாராயணன்.

பழனி முருகன் கோவிலில்
அரசு தலையீடு இல்லையா?
பழனி முருகன் கோவிலில் வாழையடி வாழையாக போகர் என்ற சித்தர் வழிவந்த பண்டாரத்தார் பூஜை செய்து வந்த நிலையில், அவர்களை வெளியேற்றி, பார்ப்பனர்களை அர்ச்சகர்களாக்கியது திருமலை நாயக்கர் ஆட்சியில், சேனாதிபதியாக இருந்த ராமப்பையன் தலையிட்டது ஆட்சி அடிப்படையில்தானே!
தங்களுக்கு வசதியாக இருந்தால், எதிலும் அரசு தலையிடலாம்; தங்கள் ஆதிக்கத்திற்குத் தடையாக இருந்தால், முட்டிப் போட்டுத் தடம் மாறிப் பேசுவதுதான் பார்ப்பனர்களின் நிலைப்பாடு.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வழிபடச் சென்ற அன்றைய ஒன்றிய அமைச்சர் எஸ்.வி.இராமசாமி (காங்கிரஸ்)யிடம் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர் எப்படி நடந்துகொண்டார்? விபூதியைத் தூக்கி எறியவில்லையா? இது எல்லாம் எந்த ஆகமத்தின்கீழ் வருகிறது? இது பார்ப்ப னர்களின் ஆதிக்க ஆணவத் திமிரைக் காட்டவில்லையா?
அமைச்சருக்குத் திருச்செந்தூர் கோவிலில் நடந்த அவமானம் குறித்து தந்தை பெரியார் அவர்கள், ‘விடுதலை‘யில் (27.3.1967) கண்டித்து எழுதியதுண்டே!

காஞ்சிபுரம் மச்சேந்திரநாதர் கோவில் கருவறையில் அர்ச்சகப் பார்ப்பனர் தேவநாதனும், சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறையில் பத்ரிநாத் என்ற அர்ச்சகப் பார்ப்பனரும் செய்த லீலைகள் தொடர்பாக அரசு தலை யிடக்கூடாது என்று கூட சொல்லுவார்களோ!
காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோவிலில், பட்டப் பகலில் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டதும், அதில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சம்பந்தப்பட்டதாக வந்ததெல்லாம் ஆகம நெறிக்குள் வருமா?
கோவில் அர்ச்சகர்களுக்கு மாதச் சம்பளம் கொடுப்பது அரசுதானே! அப்படியானால், கோவில் விஷயங்களில் தலையிடும் அதிகாரம் அந்தத் தருணத்திலேயே ஏற்பட்டு விடவில்லையா?
இன்றைக்கு ஏடுகளில் வந்துள்ள ஒரு செய்தி, திருப்பதி தேவஸ்தானத்தில் ரூ.530 கோடி என்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

தி.மு.க. – அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபுவுக்கும் – திராவிடர் கழகத்துக்கும் இடையே மூக்கை நுழைத்தால், கத்திரிக்கோலுக்கிடையே மாட்டிய நிலைதான் ஏற்படும் – நினைவிருக்கட்டும்!
தான் விரித்த வலையில் தானே சிக்கிக் கொண்ட நாராயணன்களின்
பரிதாப நிலையை என்ன சொல்ல!


ஈழத்தின் (இலங்கை) தமிழ் பத்திரிகைகளின் பார்வையில்… யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழர் உரிமைப்போராளி தலைவர் அமிர்தலிங்கனார் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் – தமிழர் தலைவர் பங்கேற்பு

 


விடுதலை நாளேடு

இலங்கை தமிழ் பத்திரிகைகளின் பார்வையில்…

விடுதலை நாளேடு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் – தமிழர் தலைவர் பங்கேற்பு


வியாழன், 29 ஆகஸ்ட், 2024

ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையைத் தொடக்க முதலே தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது!

 


இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே!

ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுக்கு எதிரான ஒன்றிய பி.ஜே.பி. அரசின் தேசிய கல்விக் கொள்கையை தி.மு.க. அரசு ஏற்காததால், தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்காமல் முடக்குவது தி.மு.க. அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி, மக்களிடம் கெட்ட பெயரை ஏற்படுத்தவேண்டும் என்ற உள்நோக்கம்தானே – இதனைக் கண்டித்து கழக மாவட்டங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய (தேசிய ஜனநாயக – இன்றைய கூட்டணி) அரசு சட்டப்படி தரவேண்டிய கல்வித் தவணை நிதி 367 கோடி ரூபாயைத் தராமல் – வேண்டுமென்றே நிலுவையில் வைத்து இழுத்தடிப்பது, எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும், நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒன்றிய கல்வி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தும், இப்படி பாராமுகமாகவும், அலட்சியமாகவும் இருப்பது, வஞ்சம் தீர்க்கும் வன்ம அரசியல் அல்லாமல் வேறு என்ன?

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது!
தேசியக் கல்விக் கொள்கை (NEP) என்ற பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு – தி.மு.க. அரசு எடுத்துக்காட்டான முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘திராவிட மாடல்’ அரசின் கொள்கை நிலைப்பாட்டிற்கேற்ப செயல்படுத்த ஒப்புதல் தராததே இந்த நிதித் தவணையைத் தராமல் காலதாமதம் செய்யும் அரசியல் அவலத்திற்கு மூல காரணம் – மறைமுகக் காரணம் என்றும் அவதா னிக்கப்படுகிறது அரசியல் வட்டாரங்களில்!
இந்தியா ஒரு கூட்டாட்சி அரசு – பா.ஜ.க. வாய்மொழி வடிவில் வாய்ப்பறைக் கொட்டுவது ‘‘கூட்டுறவுக் கூட்டாட்சி’’ – ‘‘Co-operative Federalism’’ என்பதாகும்.

அதன் லட்சணம், யோக்கியதை இதுதானா?
ஆர்.எஸ்.எஸ். வகுத்த இந்த ‘‘தேசிய கல்வித் திட்டம்’’ என்பது சமூகநீதிக்கும், பெண்களுக்கான கல்வி பரப்புதலுக்கும், இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் 51–ஏ(எச்) என்ற அறிவியல் மனப்பாங்கினை வளர்ப்பதற்கும் முற்றிலும் முரணான ஒன்று என்பதால், சமதர்ம, சம வாய்ப்பினை வற்புறுத்தும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் கொள்கைத் திட்ட நடை முறைக்கு எதிரானது என்பதால் எதிர்க்கிறது, ஏற்க மறுக்கிறது.

அதிலென்ன தவறு இருக்க முடியும்?
கல்வி என்பது முன்பு மாநிலப் பட்டியலின்கீழ் மட்டுமே இருந்த ஒன்று.
நெருக்கடி நிலையைக் குறைகூறும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு – கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வராதது ஏன்?
அன்றைய நெருக்கடி காலம்பற்றி இன்று வாய்க்கிழி யப் பேசும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்கீழ் நெருக்கடி காலத்தில் ஏற்படுத்தப்பட்டவற்றையெல்லாம் மாற்றினார்களே, அப்போது கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்ற எந்த முயற்சியும் செய்யாமல், தங்களது கலாச்சாரப் படையெடுப்புக்கு ஹிந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு போன்றவற்றிற்கு வசதியாக இருக்கட்டும் என்று கருதியே, இதனை மட்டும் மாற்றாமல் வைத்திருந்தனர்.
இதுகுறித்து கல்வி அறிஞர்கள் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக பாதி விசாரணையோடு நின்று உள்ளது.

அப்படி இருந்தாலும்கூட, கல்வி என்பது இன்றும் ஒத்திசைவுப் பட்டியலில்தான் (Concurrent List) இடம்பெற்றுள்ளது!
அதன்படி மாநில அரசுக்கு அது தனக்கேற்ப கல்வித் திட்டத்தை – மாநில சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டே – அதன் கொள்கைத் தத்துவங்களுக்கு முரண் இல்லாத ஒரு கல்வித் திட்டத்தையே பின்பற்ற முழு உரிமை உண்டே!
அதற்காக இப்படி நமது உரிமைப்படித் தரவேண்டிய பணத்தை நிறுத்திக் கொண்டு, பழைய ஈட்டிக்காரர்களைப் போன்று அடாவடித்தனம் செய்வது எவ்வகையில் நியாயமாகும்?

நிதி நெருக்கடியைத் தந்து தி.மு.க. ஆட்சிக்கு
நெருக்கடி கொடுக்கும் திட்டமா?
நிதி நெருக்கடியைத் தந்தால் – தேர்தல் வாக்குறுதி களை செய்யாமல் தடுத்து, தி.மு.க.மீது தமிழ் மக்களுக்கு – குறிப்பாக வாக்காளர்களுக்கு வெறுப்பு ஏற்படும் என்று ஒரு தப்புக் கணக்குப் போட்டுத்தானே இந்த மாதிரி நிதி மறுப்பு வியூகங்களின்மூலம் வினையாற்றுகிறது!
அதையும் தாண்டி நிதி ஆலோசனைப் பெற்று Fiscal Management – சிறப்பாக முதலமைச்சர் செய்து, மக்களுக்குச் சொன்னதைத் தாண்டி, சொல்லாததையும் செய்து வரலாறு படைத்து வான்புகழ் கொள்வது – இந்த வயிற்றெரிச்சல்காரர்களால் செரிமானம் செய்ய முடியாதபடி இப்படி ‘கீழறுப்பு‘ வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
இதனை மக்களுக்கு விளக்கவும், இந்த அற்பத்தன அடாவடித்தனத்தைக் கண்டிக்கவும் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் வருகிற 3.9.2024 அன்று சென்னை மாவட்டத் தலைநகர் மற்றும் அனைத்துக் கழக மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட அறிவிப்புச் செய்துள்ளோம்!

சென்னை மற்றும் கழக மாவட்டங்களில்
கண்டன ஆர்ப்பாட்டம்!
உடனடியாக இதனை வெற்றிகரமாக – மக்களிடம் அநீதியின் கொடுமையை விளக்கி, காவிகளின் ஓரவஞ்சனையை அம்பலப்படுத்த – அனைத்து அமைப்புகளும் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகரமாக நடத்திடவேண்டும் என்பது அவசர அவசியமாகும்!

 

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
29.8.2024

சனி, 24 ஆகஸ்ட், 2024

பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை | சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு உடற்கொடை வழங்கப்பட்டது

 

விடுதலை நாளேடு

சென்னை, ஆக. 23- சென்னை பெரியார் திடல் பெரியார் புத்தக நிலைய மேலாளரும், திராவிடன் நிதி மேனாள் தலைவரும், இயக்குநரும், பெரியார் மணியம்மை அறக்கட்டளை உறுப்பினருமான பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் (வயது 87) நேற்று (22.8.2024) இரவு மறைவுற்றார். தகவல் அறிந்த தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று (23.8.2024) காலை அவரது இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அவரது உடல் சென்னை பெரியார் திடலில் இன்று (23.8.2024) வைக்கப்பட்டு, கழகப்பொறுப்பாளர்கள், பெரியார் திடல் பணியாளர்கள் மரியாதை செலுத்தினர்.

பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் விழிகள் கொடையாக கண் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது. அவரது உடல் கொடையாக சென்னை அரசு மருத்துவக்கல்லூரி ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.அவர் மகன் கண்ணுதுரை மற்றும் குடும்பத்தின ருக்கு கழகப்பொறுப்பாளர்கள் ஆறுதல் கூறி னார்கள்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மோகனா வீரமணி, பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், ஆடிட்டர் இராமச்சந்திரன், மருத்துவர் மீனாம்பாள், கழகப்பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, சுதா அன்புராஜ், சி.வெற்றிச்செல்வி, தங்க.தனலட்சுமி, பசும்பொன், மெர்சி, மஞ்சை வசந்தன், ச.இராஜசேகரன், பழனி ராஜன், காரைக்குடி சாமி. சமதர்மம், மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன், அமுதா சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள், தலைமைக்கழக அமைப்பாளர் தே.செ.கோபால், கழக மாவட்டத் தலைவர்கள் தாம் பரம் ப.முத்தையன், தென்சென்னை இரா.வில்வநாதன், வடசென்னை வழக்குரைஞர் தளபதிபாண்டியன், சோழிங்கநல்லூர் வே.பாண்டு மற்றும் பொறுப்பாளர்கள் கோ.நாத்திகன், செ.ர.பார்த்தசாரதி, புரசை சு.அன்புச்செல்வன், அரும்பாக்கம் சா.தாமோதரன், மயிலை சேதுராமன், தி.செ.கணேசன், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பெரியார் திடல் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.

இரங்கல்
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் இரங்கலுரையில், பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் ஆற்றிய தொண்டறப்பணிகளை எடுத்துக்காட்டி, விழிக்கொடை அளித்து, மருத்துவக்கல்லலூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில், உடற்கொடை அளித்துள்ளதன்மூலம் பெரியார் வழிகாட்டிய நெறிகளின்படி இறுதிவரை வாழ்ந் துள்ளார் என்பதை நெகிழ்வுடன் குறிப்பிட்டார். 2.9.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நினைவேந்தல் நிகழ்வில் பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் படத்தைத் திறந்துவைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரங்கலுரை ஆற்றுகிறார். த.க.நடராசன் உடல் மறைந்தாலும், உணர்வாக நம்முடன் இருப்பார் என்று குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையை கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி வாசித்தளித்தார்.
அதன்பின்னர், கழகத்துணைத்தலைவர் ’வீரவணக்கம்‘ முழக்கமிட அனைவரும் தொடர்ந்து முழக்கமிட்டனர். தனி வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அரசு பொதுமருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

---------------------------------------------------------------------------------------------------------------------------




யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு! இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா வரவேற்றார்!


விடுதலை நாளேடு

 யாழ்ப்பாணம், ஆக.24 இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று (24.08.2024) நடைபெறவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவர் அப்பாப் பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக, நேற்று (23.08.2024) யாழ்ப்பாணம் சென்றடைந்த திராவி டர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், இலங்கையின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா அவர்கள் தலைமையில் முக்கியப் பொறுப்பாளர்கள் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றனர்.

தமிழர் தலைவர் அவர்களுக்கு மாவை சேனாதி ராஜா அவர்கள் மாலையும், சால்வையும் அணிவித்து வரவேற்றதுடன், தங்களின் அழைப்பை ஏற்று 45 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இலங்கை வருகை தந்தமைக்குத் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.

தமிழர் தலைவருடன் தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்களுக்கு, அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை அறங்காவலரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரு மான நவாலியூர் க.கவுரிகாந்தன் அவர்களும், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாருக்கு, மறைந்த தலைவர் அமிர்தலிங்கத்தின் தனிச் செயலாளர் ஆர்.பேரின்பநாயகம் அவர்களும் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். உடன் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் தங்க.முகுந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதி இளைஞரணி தலைவரும், மாவை சேனாதிராஜா அவர்களின் மைந்தருமான கலை அமுதன் ஆகியோரும் வந்து வரவேற்றனர்.

நேற்று (23.8.2024) மாலை இலங்கையிலும் மேற்குலக நாடுகளிலும் ஒளிபரப்பாகும் ‘டேன் டிவி’ ஸ்பாட்டிலைட் நிகழ்ச்சிக்காக தமிழர் தலைவர் அவர்களின் நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. அதன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் புலேந்திரன் சுலக்சன் மற்றும் ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரியர் தேவராஜ் ஆகியோர் தமிழர் தலைவரை நேர்காணல் செய்தனர். நாளை (25.08.2024) இரவு 7 மணிக்கு இந்த நேர்காணல் ‘டேன் டிவி’யில் ஒளிபரப்பாகவுள்ளது.
இன்று (24.8.2024) மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அமைந்துள்ள ரிம்மர் மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் தென்னிந்திய திருச்சபை ஆயர் அதிவண கலாநிதி வி.பத்மதயாளன் அவர்கள் சிறப்புரையாற்ற, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவுப் பேருரை ஆற்றவிருக்கிறார்.

தெருப் பெயரில்கூட அரசு ஆணைப்படி ஜாதி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாட்டில், இதனை அனுமதிக்கலாமா?

 

தெருப் பெயரில்கூட அரசு ஆணைப்படி ஜாதி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாட்டில், இதனை அனுமதிக்கலாமா? தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை


தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு!

மீண்டும் பழைய சம்பிரதாயங்களைக் காத்திட பூர்வீக அக்ரஹாரங்களை உருவாக்கத் திட்டம்!
‘தினமலரில்’ வெளிவந்த விளம்பரத்தைப் பாரீர்!

பழைய ஜாதி – வருண சம்பிரதாயங்களை மீண்டும் கொண்டுவர ‘‘Bringing Back Brahmana Sampradhaya Agraharams‘‘ என்று பார்ப்பனர்கள் திட்டமிட்டுள்ளதைத் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கக் கூடாது – தடுக்கவேண்டும்! அமைதிப்பூங்காவை அமளிக்காடாக்கக் கூடாது என்று அறிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாடெங்கும் தங்களது பூர்வீக சம்பிரதாயத்தைக் கட்டிக்காக்க பார்ப்பனர்களுக்கென்று ‘‘தமிழகமெங்கும் நமது பூர்வீக அக்ரஹாரம் – வீட்டுமனைகள் மற்றும் கட்டிய இல்லங்கள்’’ என்று பட்டியலிட்டு ‘தினமலரில்‘ (11.8.2024) அரைப்பக்கம் செய்தி – விளம்பரம் வந்துள்ளது. (அருகே காண்க)
பார்ப்பனர்கள் மாறிவிட்டார்களா?
இதனைப் படிக்கும் எவருக்கும் ஒன்று மட்டும் தெளிவாக திட்டவட்டமாக பார்ப்பனர்கள் யார்? அவர்களின் ஜீவசுபாவம் எத்தகையது என்பது விளங்காமற் போகாது!
‘பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்கள் – மாறிவிட்டார்கள் – இப்பொழுதெல்லாம் எதற்குப் பார்ப்பனர்பற்றிப் பேச்சு?’ என்று ‘மேதாவிலாசமாக‘ப் பேசும் அன்பர்களுக்கு, பார்ப்பனர்களின் இந்த விளம்பரத்தைப் பார்த்த பிறகாவது – தந்தை பெரியார் சொன்னதும், திராவிடர் கழகம் சொல்லிக் கொண்டு இருப்பதும் எத்தகைய மலை போன்ற உண்மை என்பது விளங்காமல் போகாது!
பழைய சம்பிரதாயங்களைப் புதுப்பிக்கப் போகிறார்களாம்!
அதுவும் எந்தக் காரணத்துக்காக இந்த ஏற்பாடாம்?
‘‘Bringing Back Brahmana Sampradhaya Agraharams‘‘
அதாவது தங்களது உயர்ஜாதி பிராமணத்துவ சம்பிரதாயங்களை பழையபடி மீண்டும் கொண்டுவர நிர்மாணிக்கத்தான் இந்தத் திட்டமாம்.
இதன் பொருள் என்ன?
அவர்களின் அந்தப் பழைய சம்பிரதாயம் என்பது என்ன?
மீண்டும் மனுதர்மமா?
பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன் – இந்த உலகத்தை பிரம்மாவானவர் பிராமணர்களுக்காகவே படைத்தார். நான்காம் வருணத்தவனான சூத்திரன், பிரம்மாவின் காலில் பிறந்தவன் – விபச்சாரி மகன் – கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அவனை வேலை வாங்கலாம் என்கிற மனுதர்மம்தானே அவர்கள் கூறும் அந்த சம்பிரதாயம்!
மீண்டும் அந்த சம்பிரதாயம் என்றால், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு காணும் இந்தக் காலகட்டத்தில் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்ல தொடை தட்டுகிறார்களா?
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுகூட,அமைதித் தென்றல் வீசிய தமிழ்நாட்டில், வேதபுரத்தார் வீண் வம்பு விஷ விதையை விதைக்கிறார்களா?
காந்தியார் படுகொலை செய்யப்பட்டபோதுகூட, வானொலி மூலம் தமிழ்நாட்டில் எந்தவித வன்முறைக்கும் இடமில்லாத ஒரு சூழ்நிலையை மிகவும் பொறுப்புடன் பாதுகாத்த பெருமை தந்தை பெரியாருக்கு உண்டு.
அதேநேரத்தில், மும்பையில் அக்ரஹாரத்தில் வீடுகள் எரிக்கப்பட்டதும் உண்டு.
கடலைத் தாண்டிச் செல்லமாட்டார்களா?
பழைய சம்பிரதாயம் என்றால், பார்ப்பனர்கள் உச்சிக் குடுமியோடு, திறந்த பூணூல் மேனியோடு திரிவார்களா? பஞ்சகச்சம் கட்டுவார்களா? கடலைத் தாண்டக் கூடாது என்ற பழைய சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பார்களா?
‘‘பழைய நாளில் பிராமணன்தான் பிச்சை எடுப்பான். மற்ற ஜாதிக்காரர்கள் நாமாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளமாட்டார்கள். ‘‘பிச்சைக்காரப் பார்ப்பான் தெரு’’ என்று கும்பகோணத்தில் ஒரு தெருகூட இருக்கிறது!’’ என்கிறாரே காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (‘‘காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் உபந்நியா சங்கள்’’முதற்பகுதி‘கலைமகள்‘ 1957–1958 பக்கம் 28).
பிச்சை எடுக்கும் அந்தப் பழைய சம்பிரதாயத்தை மீண்டும் கடைப்பிடிக்கப் போகிறார்களா அக்கிரகார ‘திருமேனிகள்!‘
தெருக்களின் ஜாதிப் பெயரை நீக்கி 
ஆணை பிறப்பித்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி 1978 இல் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராகவிருந்தபோது, சாலைகள் மற்றும் தெருக்களுக்கு இருந்த ஜாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட்டார்.
ஜாதி ஒழிப்புக்குக் கலைஞரின் பங்கு
தென் மாவட்டங்களில் 1997 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தையடுத்து மாவட்டங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதுடன், அரசுப் போக்குவரத்துக் கழகங்க ளுக்குச் சூட்டப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களை யும் நீக்கி ஆணை பிறப்பித்தவர் முத்தமிழறிஞர்  முதலமைச்சர் கலைஞர்.
அரசுத் துறை ஆவணங்களில் தாழ்த்தப்பட்டோர் வகுப்பில் உள்ள ஜாதிகளைக் குறிப்பிடும்போது, ஜாதிப் பெயர்களில் குறிப்பிடாமல் மொத்தமாக ‘ஆதிதிராவிடர் வகுப்பினர்’ எனக் குறிப்பிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை 24.2.2007 இல் அரசாணை பிறப்பித்ததுண்டே!
சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் தெருக்களில் இருந்த ஜாதிப் பெயர்களை ஒழித்தவர் 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு பள்ளிப் பாடப் புத்தகங்களில் தலை வர்களின் பெயர்களின் பின்னால் இருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு (5.8.2021 இல்) புதிதாக அச்சிடப்பட்ட ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு அண்மையில் தமிழ்நாடு அரசினால் புதிய பாடப் புத்தகங்கள் விநியோ கிக்கப்பட்டிருந்தன. அந்தப் புத்தகங்களில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றை குறிப்பிடும் பகுதிகளில் தலைவர்களின் பெயர்களோடு இடம்பெற்றிருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில், ‘பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்‘ என்ற தலைப்பில் உள்ள பகுதியில், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பெயரை (உ.வே.சாமிநாதய்யர் என்பதை) தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது.
ரூ.500 கோடி செலவில் சிங்கார சென்னை 2.O திட்டத்தின்கீழ் (2021 ஜூன்) சென்னையில் இருக்கும் தெருக்களில் இருந்த ஜாதிப் பெயர்களை நீக்கியவர் நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
சென்னையைப் பொறுத்தவரை 33 ஆயிரத்து 834 தெருக்கள் உள்ளன. இதில் ஜாதி ரீதியாகக் கிட்டத்தட்ட 50–க்கும் மேற்பட்ட ஜாதிப் பெயர்கள் உள்ளன.
எடுத்துக்காட்டாக, அடையாறில் அப்பாவு கிராமணி என்ற பெயரில் ஜாதிப் பெயரான கிராமணி நீக்கப்பட்டு உள்ளது. மாற்றாக அப்பாவு (கி) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. புதிய பெயர் பலகைகளில் தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீடு ஆகியவை இடம்பெறுகின்றன. மொத்தமாக பெயர் பலகைகளை மாற்ற சென்னையில்  8.43 கோடி ரூபாய் இன்றைய தி.மு.க. ஆட்சியில் செலவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது – தடுத்தாகவேண்டும்!
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், காலகட்டத்தில் பழைய ஜாதி – வருண சம்பிரதாயங்களை மீண்டும் கொண்டுவர ‘‘Bringing Back Brahmana Sampradhaya Agraharams‘‘ திட்டமிடப்பட்டுள்ளதைத் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கக் கூடாது – தடுக்கவேண்டும்! அமைதிப்பூங்காவை அமளிகாடாக்கும் நிலைப்பாட்டை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் ‘திராவிட மாடல்’ அரசு!
பார்ப்பனர்களால் நடத்தப்பட்டு வந்த சென்னை இராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் (5.1.1953) பேசிய தந்தை பெரியார் அவர்கள், ஜாதி மனப்பான்மையைத் தூக்கி எறிந்து, மனிதர்களாக வாழ்வோம் என்று பார்ப்பனர்களுக்குக் கூறிய அறிவுரையை நினைவுப்படுத்துகிறோம்.
மீண்டும் பழைய சம்பிரதாய ஜாதித்துவ வீராப்பைக் காட்டலாம் என்று நினைத்தால், அதன் பலன் யாரைச் சேரும் என்பது மட்டும் நினைவிருக்கட்டும்!
தமிழ்நாடு அரசு இதனை அலட்சியமாகக் கருதாது என்றும் எதிர்பார்க்கிறோம்.
பெரியார் நினைவு சமத்துவபுரத்தை உருவாக்கி, ‘‘நாடே சமத்துவபுரமாக ஒளிரவேண்டும்‘‘ என்று முழங்கியவர் முதலமைச்சர் முத்தமிழறிஞர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள். பெரியார் நினைவு சமத்துவபுரத்தைப் பெரும்பாலும் திறந்து வைத்தவர் அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சரும், இன்றைய முதலமைச்சருமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் என்பது வரலாறு.
அதற்கு நேர் எதிரான ஜாதித்துவத்தை, வருண தருமத்தை நிலைநாட்ட ஆழம் பார்க்கிறார்கள், எச்சரிக்கை!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
23.8.2024