வெள்ளி, 16 மே, 2025

 

புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் அனைத்து ஆங்கில நூல்களிலும் சமஸ்கிருத– ஹிந்தி பெயர்கள்!

விடுதலை நாளேடு


பெங்களுரு, ஏப்.21 புதிய கல்வி கொள்கையில் கீழ் வரும் அனைத்து ஆங்கில நூல்களிலும் சமஸ்கிருத ஹிந்தி பெயர்கள்! பாரம்பரியத்தைக் காப்பதற்காக மாணவர்களுக்கு எளிதில் புரிவதற்காக இந்த முடிவாம்.

புதிய கல்விகொள்கையின் கீழ் இந்த ஆண்டு முதல் ஒன்றிய கல்வி அமைச்சரகம் ஒன்றிய அரசால் நடத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் பாடநூல்களை சமஸ்கிருத ஹிந்தி மயமாக்கி உள்ளது. அதிலும் ஆங்கிலத்தில் உள்ள சொற்களை தவிர்த்து ஹிந்தி சமஸ்கிருத சொற்களை ஆங்கிலத்தில் எழுதி உள்ளது,

சமஸ்கிருதத்தை ஹிந்தியைத் திணிக்கும் மோசமான நடவடிக்கை ஆகும், மேலும் தமிழ்நாட்டின் வழி காட்டுதலின் பேரில் பல மாநிலங்கள் மூன்று மொழிக் கொள்கையை எதிர்த்துப் போராடும் நேரத்தில் வெளிவந்துள்ளது.

ஹிந்தி அல்லாத மாநிலங்களில் ஹிந்தியை திணிக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

இதுவரை, ஒன்றிய அரசின் மொழி நூல்கள் எப்போதும் அதே மொழியில் தலைப்புகளைக் கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு வரை 6 மற்றும் 7ஆம் வகுப்புக்கான பழைய ஆங்கில பாடப்புத்தகங்கள் முறையே ஹனிசக்கிள் மற்றும் ஹனிகோம் என்று தலைப்பிடப்பட்டிருந்தன.

இரண்டு வகுப்புகளுக்கான புதிய ஆங்கில மொழி பாடப்புத்தகங்களின் தலைப்பு பூர்வி, இது ஹிந்தி சொல் “கிழக்கு” என்ற பொருளுடன், சமஸ்கிருத சொற்களில் வரும் ராகத்தில் ராகத்தின் பெயரும் ஆகும்.

1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கான ஆங்கில மொழி பாடப்புத்தகங்கள் மிருதங்க் என்றும், 3 மற்றும் 4ஆம் வகுப்புகளுக்கானவை சந்தூர் என்றும் மறுபெயரிடப்பட்டு உள்ளன. இரண்டுமே இசைக் கருவிகளின் பெயர்கள்.

கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி போன்ற பாடங்களுக்கு, முன்னணி பாடப்புத்தக தயாரிப்பு அமைப்பு தனது புத்தகங்களை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது பதிப்புகளில் வெளியிட்டது.

இதுதொடர்பாக ஒன்றிய கல்வி பாடநூல் தயாரிப்பு குழு வில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் கூறுகையில், இந்த புத்தகங்கள் பாரம்பரியமாக அவை வெளியிடப்பட்ட மொழிக்கு ஏற்ப ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் தலைப்புகளைக் கொண்டிருந்தன.

6ஆம் வகுப்புக்கான முந்தைய கணித புத்தகம் ஆங்கில பதிப்பிற்கு Mathematics என்றும், ஹிந்தி பதிப்பிற்கு Ganit என்றும், உருது பதிப்பிற்கு Riyazi என்றும் தலைப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், கடந்த ஆண்டு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு பதிப்புகளுக்கும் தலைப்பை கணித பிரகாஷ் என மாற்றியது.

அவர்கள் என்ன சாதிக்க விரும்பு கிறார்கள் என்பது தெளிவாக இல்லை’’ என்று ஓய்வுபெற்ற பேராசிரியர் கூறினார்.

6ஆம் வகுப்பு ஆங்கில மொழி பாடப்புத்தகத்தின் முன்னுரையில் அதன் இயக்குநர் தினேஷ் பிர சாத் சக்லானி மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி கபூர் போன்றோர் ‘‘புத்தகத்தைப் பற்றி’’ என்ற அறி முகப் பகுதி, ஏன் அது பூர்வி என்ற ஹிந்தி தலைப்பைக் கொண்டுள்ளது என்பது பற்றி குறிப்பிடவில்லை.

‘‘பூர்வி தனது உள்ளடக்கங்களில் இந்திய அறிவு அமைப்புகளின் பெரும் கருவூலத்திலிருந்து துணுக்குகளை, இந்தியாவின் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை இணைத்து, சுற்றுச்சூழல் உணர்திறன், பாலின சமத்துவம், டிஜிட்டல் திறன்கள் போன்ற மதிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது’’ என முன்னுரை கூறுகிறது. சில ஆங்கில வழி புத்தகங்கள் ஹிந்தி படையெடுப்பிலிருந்து விடு பட்டுள்ளன. 6ஆம் வகுப்புக்கான சயின்ஸ் என்ற அறிவியல் நூல்களின் பெயர்களும்  இப்போது கியூரி யாசிட்டி என்ற புதிய ஆங்கில தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது,

6ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறி வியல் பாடப்புத்தகத்தின் ஆங்கில பதிப்பு ‘‘எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியான்ட்’’ என்ற தலைப்புடன் வருகிறது, அதே நேரம் ஹிந்தி பதிப்பு ‘‘சமாஜ் கா அத்யயன்: பாரத் அவுர் உஸ்கே ஆகே’’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

2006இல் என்.சி.ஆர்.டி. பாடப்புத்தக மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக இருந்த டில்லி பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் அபூர்வானந்த், ஆங்கில மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு ஹிந்தி தலைப்புகளை வழங்கும் நடைமுறையை கேள்விக்குள்ளாக்கி னார்.

‘‘இது ஹிந்தி காலனியாதிக்கம். என்.சி.ஆர்.டி. இதை மிகவும் கீழ்த்தர மான முறையில் செய்கிறது,’’ என்று அவர் கூறினார். என்.சி.ஆர்.டி. தலைப்பு களை வழங்கும் விதம் தமிழ்நாட்டின் மொழி கொள்கைக்கான போராட்டம் சரியென நிரூபித்துள்ளது.

இது ஹிந்தி பேசாதமக்களுக்கு குறுக்கு வழியில் ஹிந்தியை திணிக்கிறது

அய்.என்.யூ.விலிருந்து ஓய்வு பெற்ற மொழியியல் பேராசிரியர் அன்விதா அப்பி கூறுகையில்: ‘‘ஒரு புத்தகத்தின் தலைப்பு அதன் உள்ளடக்கத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டும். பூர்வி அல்லது சந்தூர் போன்ற தலைப்புகள் ஏன் கொடுக்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை. கிழக்கு அல்லது சமஸ்கிருத ராகம் என்பதை ஆங்கில மொழிப்பாட நூலில் தலைப்பாக கொடுத்து என்ன கூறவருகிறார்கள்?’’

‘‘மேலும், கற்பித்தல் மொழி ஆங்கிலம் எனும்போது, தலைப்பு ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.’’

கணித பிரகாஷ் என்பதில் உள்ள ‘கணித’ போன்ற சில ஹிந்தி வார்த்தைகளின் சரியான உச்சரிப்புகளை ஆங்கில புத்தகங்க ளின் ஹிந்தி தலைப்புகள் ரோமன் எழுத்துமுறையில் எழுதப்பட்டுள்ளன. ‘‘ரோமன் எழுத்து முறை பல்  அண்ண ஒலி (dental nasal) மற்றும் பின்வளைவு அண்ண ஒலி (retroflex nasal) ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டுவதில்லை. இது  ‘ண’ (கணிதத்தில்) என்பதற்கு தவறான உச்சரிப்பை தருகிறது,” என்று அவர் கூறினார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு ஹிந்தி தலைப்பு களை வழங்குவதற்கான கார ணங்களை கேட்டு என்.சி.
ஆர்.டி. இயக்குநருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அவரது பதில் எதிர்பார்க்கப்படுகிறது. என்.சி.ஆர்.டி. 2020ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப 2023 முதல் புதிய பாடப்புத்தகங்களின் தொடரை வெளியிட்டு வருகிறது.

2023 இல் 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்த கங்களை வெளியிட்டது, 3 மற்றும் 6ஆம் வகுப்புகள் 2024இல் புதிய புத்தகங்களைப் பெற்றன. இப்போது 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான புதிய புத்த கங்களை வெளியிடுகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை முழுமையாக சமஸ்கி ருத ஹிந்தி மயமாக்கம் நடந்துள்ளது

எடுத்துகாட்டாக  குடும்பச் சங்கிலி (பரம்பரை) என்ற ஆங்கில நூலில் பர் தாதா, பர் தாதி, போத்தா, போத்தி, பர் போத்தா, பர்போத்தி, தாதா, தாதி, நானா நானி, என்று எழுதி பின்னர் பாதர் மதர் என்று பெயரளவிற்கு ஆங்கிலத்தில் பெயர் கொடுத்துள்ளது. பிறகு பேட்டா பேட்டி என்று மீண்டும் ஹிந்தியிலேயே கொடுத்துள்ளது.

மேலும் உடற்கல்வி ஆங்கில நூலுக்கு கேல் யோகா (விளையாட்டு யோகா) என்றும் தொழிற்கல்வி நூலான வெகேசனல் ஆங்கில பாடநூலுக்கு கவுசால் போத்(துடிப்பான கல்வி) என்று ஓவியம் இதர கைவினை கலைப்பொருள் தயாரிக்கும் பாட நூலிற்கு பன்சுரீ(புல்லாங்குழல்) என்றும் பெயர் வைத்துள்ளனர்

ஆங்கில நூல் முழுவதுமே ஹிந்தி மற்றும் சமஸ்கிருத சொற்கள் 60 விழுக்காடு ஹிந்தியிலேயே எழுதப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர்ப் பலகை தமிழ்நாடு எம்.பி.க்கள் கண்டனம் பலகை உடனடியாக அகற்றம்


விடுதலை நாளேடு


 சென்னை, ஏப்.23- ரயில்வே அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர் வைத்திருப்பதற்கு தமிழ்நாடு எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் 21.4.2025 அன்று, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட
எம்.பி.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை தாங்கினார். இதில்
எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி சோமு, சசிகாந்த் செந்தில், கதிர் ஆனந்த், கிரிராஜன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எம்.பி.க்கள், தங்கள் பகுதிகளில் ரயில்வே சார்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திட்டங்கள், புதிய திட்டப் பணிகள், பயணிகள் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பி பேசினார்கள். மேலும், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலகங்களுக்கு தமிழில் பெயர் வைக்காமல் ஹிந்தியில் பெயர் வைத்திருப்பது ஏன்? என்று கேட்டு அதற்கு தங்களது கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

கண்டனம்

பின்னர், டி.ஆர்.பாலு எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தாம்பரம் ரயில் நிலையம் ஒரு முனையமாக இருக்கிறது. ஆனாலும் அங்கு 7 விரைவு ரயில்கள் நிற்காமல் செல்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுத்து தாம்பரத்தில் ரயில்கள் நிறுத்தப்பட வேண்டும். அம்பத்தூர் ரயில் நிலையத்திலும் விரைவு ரயில்களை நிறுத்தி செல்ல வேண்டும். ரயில் ஓட்டுநர்களுக்கு என்ஜின் பகுதியிலேயே கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்.

வந்தே பாரத் ரயிலில் உள்ள சில குறைபாடுகளை தீர்ப்பதாக ஏற்கனவே ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் ஹிந்தியில் எழுதியிருக்கிறார்கள். இது கண்டனத்துக்குறியது.

இதை நேரடியாக கண்டித் துள்ளோம். ஆளுநருக்கு உச்சநீதி மன்றமே தீர்ப்பு கொடுத்தும் துணை வேந்தர்கள் மாநாடு நடத்துகிறார். நியாயமாக இருப்பவர்கள் இப்படி நிச்சயம் செய்ய மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் கட்டாயம்

தொடர்ந்து, தயாநிதி மாறன் எம்.பி. கூறுகையில், ‘தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர் இருப்பது தொடர் பிரச்சினையாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். எங்களின் கோரிக்கை மீது கண்டிப்பாக பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்’ என்றார்.

பெயர்ப் பலகை பார்த்து கொந்தளிப்பு

ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க. எம். பி. கிரிராஜன் வந்தார். அப்போது, நுழைவு வாயில் பகுதி யில் ‘சுலையா, சுபாஷ், சுபோஜ்’ என்று வார்த்தைகள் இடம்பெற்றபலகை இருந்தது.

தமிழில் பெயர் வைக்காமல் ஹிந்தியில் இருப்பதை கண்டு கிரிராஜன் கொந்தளித்தார். அதை அகற்றும்படி அறிவுறுத்தினார்.இதனால், அந்தபெயர் பலகை உடனடியாக அகற்றப்பட்டது. பின்னர், அந்தப் பெயர் பலகையை கிரிராஜன் தன்னுடன் எடுத்துச் சென்று ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கிடம் காண்பித்து கண்டனத்தை பதிவு செய்தார்.

இந்திய இராணுவத்திற்கு துணை நிற்கும் பேரணி


விடுதலை நாளேடு


தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இந்திய இராணுவத்திற்கு துணை நிற்கும் பேரணி, சென்னையிலுள்ள காவல் துறை  தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து காமராசர் சாலையில் உள்ள போர் நினைவுச்சின்னம் வரை நடைபெற்றது. இப்பேரணியில்,   திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  தலைவர் செல்வபெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன்,  நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி,  துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்,  நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல் துறை உயர் அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள், அனைத்து மத தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். (சென்னை, 10.5.2025)