செவ்வாய், 28 அக்டோபர், 2025

பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்த மூவருக்கு நோபல் பரிசுகள்!



 உலகின் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மனித குல வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு துறைகளில் பங்களிப்பாற்றிய சாதனையாளர்கள் மற்றும் முன்னோடிகளை சிறப்பிப்பதே இந்த நோபல் பரிசின் நோக்கமாகும்.

அதன்படி 1901ஆம் ஆண்டு முதல் இந்த நோபல் பரிசானது மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் பெரும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக, அக்டோபர் மாதம் இந்த நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். 2025ஆம் ஆண்டுக்கான இயற்பியல், மருத்துவம், வேதியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசுகள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன. கடைசியாக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று (13.10.2025) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோயல் மோகிர், பீட்டர் ஹோவிட் மற்றும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிலிப் அகியோன் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமையான கண்டுபிடிப்புகள் எவ்வாறு பொருளாதார வளர்ச்சியை நிகழ்த்துகிறது என்பதை இவர்கள் ஆய்வு செய்து விளக்கியதற்காக மூவருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் நீட்டித்த பொருளாதார வளர்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்ததற்காக ஜோயல் மோகிருக்கும், ஆக்கப்பூர்வமான அழிவு அதாவது தேவையற்ற பழைய அம்சங்கள் அழிந்து புதியவை உருவாகி வளர்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது என்ற கோட்பாட்டை உருவாக்கியதற்காக பீட்டர் ஹோவிட் பிலிப் அகியோன் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு வெற்றியாளர்களுக்கு 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரவுன்கள் (அதாவது $1.2 மில்லியன்) பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இந்தாண்டு பரிசு வென்ற அனைத்துத் துறை வெற்றியாளர்களுக்கும் வரும் டிசம்பர் 10ஆம் தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

-விடுதலை நாளேடு, 14.10.25

ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’

 


வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்! ஜாதி ஒழிப்புக்கான முக்கிய மைல்கல்!
ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

ஆணவக் கொலை தடுப்புக்கான  சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதல மைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’   என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (17.10.2025) காலை தமிழ்நாடு சட்டப்பேர வையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டமொன்றை இயற்றிட, ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் கே.எம்.பாஷா அவர்கள் தலைமையில் ஒரு தனி ஆணையம் அமையும். அதன் வழிகாட்டுதலையொட்டி, அடுத்து ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டம் உருவாகும்’’ என்று விடுத்துள்ள இந்த அறிவிப்பு, இந்தியாவிற்கே வழி காட்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் ஆகும்!

இதுபற்றி சட்டப்பேரவையில் அவர் உரை யாற்றும்போது, (அண்மையில் 13 நாள்களுக்கு முன்பு)செங்கல்பட்டு – மறைமலை நகரில் நடைபெற்ற நமது சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஜாதி ஒழிப்புக்கான முக்கிய நடவடிக்கையாக ஆணவக் கொலையைத் தடுக்கச் சட்டம் நிறைவேற்றக் கோரும் தீர்மானத்தை முக்கியமாகக் குறிப்பிட்டு, இச்சட்டத்தின் தேவைபற்றிக் கூறியது நம்மை மெய்சிலிர்க்கச் செய்தது. 1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டின் தீர்மானங்களைச் சட்டமாக்கிட 40 முதல் 60 ஆண்டுகள் ஆயின.

4.10.2025 செங்கல்பட்டு மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுத் தீர்மானங்கள் அடுத்த 13 நாள்களில் செயல்பாட்டுக்கு வர ஏற்பாடுகள் தொடக்கம்!

என்னே வேகம்! என்னே விவேகம்!!

இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சி!

கருஞ்சட்டையினருக்கு ‘முதல் சல்யூட்’ அளித்த எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களே,

இந்த ஜாதி ஒழிப்பு முயற்சிக்கான ஆணவப் படுகொலை தடுப்புச் சட்ட ஏற்பாட்டுக்கான முன்னெடுப்புக்கு எங்களது ‘டபுள் சல்யூட்’ – வாழ்த்துகள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

17.10.2025          

ஆணவப் படுகொலையைத் தடுக்க உயர்நீதிமன்ற– ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம்! பரிந்துரைகளை ஏற்று சட்டம் இயற்றப்படும்!

 

பரிந்துரைகளை ஏற்று சட்டம் இயற்றப்படும்! சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு!


மறைமலைநகரில் (செங்கல்பட்டு) திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுத் தீர்மானத்தைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் சங்கநாதம்!
ஆணவப் படுகொலையைத் தடுக்க
உயர்நீதிமன்ற– ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம்!
பரிந்துரைகளை ஏற்று சட்டம் இயற்றப்படும்!
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு!

சென்னை, அக்.17  செங்கல்பட்டு – மறைமலைநகரில் கடந்த 4 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எடுத்துக்காட்டி, ஆணவப் படுகொலையைத் தடுக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற  நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜாதி ஆணவப் படுகொலையைத் தடுக்கும் உரிய சட்டம் நிறைவேற்றப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை இன்றைய தினம் (17.10.1025) சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அவரது அறிவிப்பு வருமாறு:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கெல்லாம் மிகத்தெளிவாக, துல்லியாக பதிலளித்து நம்முடைய நிதி அமைச்சர் அவர்கள் சிறப்பாக இங்கே பேசியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும், நேற்றைய விவாதத்தில் மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர், ஆணவப் படுகொலை குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்கு நான் இப்பேரவைக்குத் தங்கள் வாயிலாக பதிலளிக்க விரும்புகிறேன்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ – என்ற அறநெறியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண், இந்தத் தமிழ் மண்!

‘ஜாதி யிரண்டொழிய வேறில்லை,

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்’  என்கிறார் அவ்வை மூதாட்டி.

இடையில் புகுந்தவர்களால்…

இதுதான் தமிழர் தம் நெறியாகும். தமிழர் போற்றி வந்த பண்பாடு!  இடைக்காலத்தில் புகுந்தவர்களால் தொழில் வேற்றுமையானது; ஜாதி வேற்றுமையாக மாற்றப்பட்டது; உயர்வு-தாழ்வு கற்பிக்கப்பட்டது; மேல்-கீழ் என்ற வேற்றுமை விதைக்கப்பட்டது. வேற்றுமை விதைக்கப்பட்ட உடனேயே ஒற்றுமைக்கான குரல்களும் தமிழ் மண்ணில் உரக்க ஒலித்ததைக் காண்கிறோம். பல சீர்திருத்தக் கருத்துகள் இயக்கமாகவே உருவெடுத்துள்ளன. அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா ஆகியோர் இந்தச் சீர்திருத்த சிந்தனைகளை தமிழ் மண்ணில் விதைத்தார்கள்.

கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதவிகள், அனைவருக்கும் சமவாய்ப்பு, சம அதிகாரம் ஆகியவற்றை தருவதன் மூலமாக யாவரும் ஒருவரே என்பதை உருவாக்கவே இந்த இயக்கங்கள் போராடின; வாதாடின; மன மாற்றங்களை செய்தன. ஜாதிக்கு, மதத்துக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்துக்கு தரும் சிந்தனையை திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கங்கள் விதைத்தன. இனமும், மொழியும் நமது அடையாளங்களாக மாற்றியது இதன் சாதனைகள்.

சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புரை செய்து வந்த அதே காலகட்டத்தில் அதற்கான சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வந்து, சமூக சீர்திருத்த ஆட்சியை தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தினார்கள். அதன் வழித்தடத்தில்

‘திராவிட மாடல்’ ஆட்சியை நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி நடத்தி வருகிறோம்.

‘காலனி’ என்ற சொல் நீக்கம்!

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறோம். பெரியார் பிறந்த நாளிலும், அம்பேத்கர் பிறந்த நாளிலும் இந்த நாடே உறுதிமொழி எடுக்கிறது. இவர்கள் பிறந்த நாளில் அனைவரும் சமூகநீதி, சமநீதி உறுதிமொழி எடுப்பது சாதாரணமான சாதனையல்ல.  தமிழ்நாடு சட்டப்பேரவை, இதே அவையில் 29.04.2025 அன்று  உரையாற்றிய போது, ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் இருக்கும் “காலனி” என்ற சொல்லை நீக்குவோம் என்று அறிவித்தேன்.  பள்ளி, கல்லூரி விடுதிகளில் ஜாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக, அவற்றை “சமூக நீதி” விடுதிகளாகப் பெயர் மாற்றியிருக்கிறோம்.

மாண்புமிகு  பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய பிரதமர் அவர்களை சமீபத்தில் நேரில் சந்தித்து, முக்கியமான ஒரு கோரிக்கையை வைத்தேன். “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள ஜாதிப் பெயரில், இறுதி எழுத்தில் முடிவடையும் ‘இன்’ என்பதற்குப் பதிலாக ‘இர்’ என விகுதி மாற்றம் செய்து, அந்தச் சமூக மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வழி செய்யும்வண்ணம் ஒன்றிய அரசு உரிய சட்டம் இயற்ற விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்பதுதான் அந்தக் கோரிக்கை.

சமூகநீதி – சமத்துவம் – சகோதரத்துவம் – பொதுவுைடமை – பொது உரிமை – கல்வி உரிமை – அதிகார உரிமை ஆகிய கொள்கைகள்தான் வேற்றுமையை, பகைமையை விரட்டும்.  அதனைத் தான் நாங்கள் செய்து வருகிறோம்.  இதன் மூலமாகத் தான் சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும்.

ஆனால், இத்தகைய சூழலில் நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் நமது மனதை வேதனையடைய வைத்துள்ளன.  இதற்காகவா நமது தலைவர்கள் போராடினார்கள், நாம் போராடி வருகிறோம் என்ற வேதனை ஏற்படுகிறது. உலகம் அறிவுமயமாகி வருகிறது.  “ஆனால் அன்புமயம் ஆவதை எது தடுக்கிறது?” என்பதுதான் இன்று சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களை வாட்டி வருகிறது. உலகம் முழுக்க பரவி, அறிவினால் மதிக்கப்பட்டு வரும் நம் தமிழ்ச் சமுதாயம், உள்ளூரில் சண்டை போட்டுக்கொள்வது என்ன நியாயம்? என்பதுதான் நம்மை வருத்தும் கேள்வி யாக அமைந்திருக்கிறது. எதன் காரணமாகவும் ஒருவரை மற்றவர் கொல்வதை நாகரிக சமுதாயத்தால் ஏற்க இயலாது.  கொல்வதை மட்டுமல்ல – பகைப்பதை, சண்டை போட்டுக்கொள்வதை, அவமானப்படுத்துவதை என எதையும் பண்பட்ட, வளர்ச்சியுற்ற ஒரு சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆணவப் படுகொலைகள் எப்படியாவது
தடுக்கப்பட வேண்டும்!

அவ்வப்போது ஏதேனும் ஒரு பகுதியில் நடந்துவிடும் ஒரு  துயரமான சம்பவம் நம் நெஞ்சை உலுக்கி விடுகிறது. நம் சமுதாயத்தையே தலைகுனியச் செய்து விடுகிறது. பெண்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் உரிமையைப் பறிக்கும் ஆணாதிக்கமும் இந்தக் குற்றச் செயல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது.  இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இந்த வேதனையைத்தான் நேற்றைய தினம் (16.10.2025) நமது உறுப்பினர்கள் பலரும் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறீர்கள்.  ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வேண்டும், எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள்.

திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தீர்மானமாக நிறைவேற்றி என்னிடத்தில் கொடுத்திருக்கிறார்கள். ஆணவப் படுகொலை களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இந்த அநீதியைத் தடுக்க வேண்டும் என்பது நம் அனைவரது ஆதங்கமாக இருக்கிறது.

ஆணவப் படுகொலை நடைபெறும்போது, அது தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்படுகொலைகளுக்கு ஜாதி மட்டுமே காரணமல்ல, இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன.  எதன்பொருட்டு நடந்தாலும், கொலை – கொலை தான்.  அதற்கான தண்டனைகள் மிக, மிகக் கடுமையாகவே தரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

யாரும் – எவரும் – எதன்பொருட்டும், செய்த குற்றத்தில் இருந்து தண்டனை இல்லாமல் தப்பிவிடக் கூடாது என்பதை காவல் துறைக்கு உத்தரவாகப் போட்டுள்ளோம்.  எனவே, சட்டம் அதன் கடமையைச் செய்கிறது.

அதே நேரத்தில், இக்கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல; அரசியல் இயக்கங்களும், பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.  நாகரிக சமுதாயத்தின் அடையாளம் என்பது பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல, சமூகச் சிந்தனையில் மேம்பாடு என்பதை உணர்த்துவதாக இப்பரப்புரைகள் இருக்க வேண்டும். சமுதாயத்தில் ஜாதி வேற்றுமைக்கு எதிராக, ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை; அனைவரும் சமம்; பாலின சமத்துவமும், வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்திற்கு ஓர் அடையாளம் என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.

அனைத்துவிதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும் – சமத்துவ சிந்தனையும் கொண்ட  சுயமரியாதையும் – அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை!  சீர்திருத்தப் பரப்புரையும் – குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

நீதிபதி கே.என்.பாஷா (ஓய்வு) தலைமையில் ஓர் ஆணையம்

இது குறித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக  உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு. கே.என்.பாஷா அவர்கள் தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்படும் என்பதை என்னுடைய முக்கியமான அறிவிப்பாக இம்மாமன்றத்தில் அறிவிக்கிறேன்.

இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், ச‌‌ட்ட வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.   அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளித்து அமைகிறேன்.

– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 17.10.25

பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் புகழைக் குறைக்கும் ஆரிய முயற்சி!

 


இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவர்
பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் புகழைக் குறைக்கும் ஆரிய முயற்சி!
தவறான தகவல் பரப்பும் ‘விஷமச் செடியை’ முளையிலேயே கெல்லி எறியவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

மற்றவை

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவர் பாபா சாகேப் டாக்டர்
பி.ஆர்.அம்பேத்கரின் புகழைக் குறைக்கும் ஆரிய முயற்சி – தவறான தகவல் பரப்பும் விஷமச் செடியை முளையிலேயே கெல்லி எறியவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

புரட்சியாளர் பி.ஆர்.அம்பேத்கரின் ஆற்றல் உலகப் புகழ் பெற்றதாகும்!

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக பிரபல சட்ட மேதை, புரட்சியாளர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களது ஒப்புவமையற்ற ஒத்து ழைப்பிலும், சட்ட அறிவாலும், குழுவில் உள்ள பலரது கருத்துகளை அலட்சியம் செய்யாமலும், அவற்ைற உள்வாங்கியும், தனது லட்சியங்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாத வண்ணமும், ஒரு சர்க்கஸ் வித்தை வித்தகர் புலி வாயில் தலையை விட்டு மீளுதல், கூண்டுக்குள் விரைந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் மூலம் மக்களை வியக்க வைக்கும் திறனாளியாக இருப்பதுபோன்று செயல்பட்டு, அவருக்கு வரைவுக் குழுவில் இருந்த உயர்ஜாதி உணர்வாளர்கள் முதல் பல் வகையாளர்களின் எதிர்ப்பு இருந்த நிலையிலும், அவர் ஆற்றிய பணியின் சிறப்பு, ஆற்றல் உலகப் புகழ் பெற்றதாகும்!

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் புகழ் உலகளாவி, வரலாற்றில் வைர வரிகளாக ஓளிவீசுகின்ற நிலையில், பொறுக்குமா ஆரியம்?

‘அணைத்து அழிக்கும்’ மகா வித்தையாளர்களின் ‘விதைக்காது விளையும் கழனி’ அல்லவா ஆரியம் – அண்ணா சொன்னதுபோல!

பி.என்.ராவ் அய்.சி.எஸ்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்பற்றிய விளக்கக் குறிப்புரையாளர் (Commentators) என்ற பெயரில், வியாக்கியானம் செய்வோர் சிலர், புதுவகைப் பிரச்சா ரத்தினைச் செய்து அம்பேத்கர் புகழை மறைக்க, ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை அவர் எழுதி முடிக்கவில்லை. அதற்கு முன்பே, பி.என்.ராவ்
அய்.சி.எஸ். (இவர் கொங்கணி மொழி பேசும் சரஸ்வதி பார்ப்பனர் என்பது குறிப்பிடத்தக்கது) என்ற சட்ட நிபுணர்; அரசியலமைப்புச் சட்ட வரைவு ஆலோசகராக பிரிட்டிஷ் அரசுக் காலத்திலேயே 1946 இல் நியமிக்கப்பட்டு, அதனைத் தயாரிக்கும் பணியை ஏற்றுச் செய்தார்’’ என்று தொடங்கி, இந்த விஷமப் பிரச்சாரத்திற்கு சன்னமான முறையில் தொடக்கம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சட்ட நிபுணர் பி.என்.ராவ் (பெனகல் நரசிங் ராவ்) அவர்கள் சிவில் அதிகாரியாகத்தான் இந்திய அரசாங்கத்தில் பணிபுரிந்தவர்.

அவரிடம் அப்போது இந்தப் பணியை அந்நாளைய பிரிட்டிஷ் அரசு விட்டதற்கு முக்கிய காரணம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னோடியான 1935 சட்டம் (India Act of 1935) எழுதுவதற்கு அமைக்கப்பட்ட அலுவலகத்தில் அந்நாளில், உதவிய வர் என்பதால்தான்!

நாம் மறைக்கவோ,
மறுக்கவோ இல்லை!

அந்த அடிப்படையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு 1946 இல் அரசியல் நிர்ணய சபை மூலம் உருவாகும் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்கு மூளையாகப் பயன்படும் ஒரு வரைவை (Working Draft) தயாரித்துக் கொடுத்தார் என்பதை நாம் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை. அது ஒரு பொதுக் குறிப்பான வரைவு (Rough Draft).

ஆனால், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அதற்கு தமது ஆளுமை, ஆற்றல்மூலம் சதை, ரத்தம் எல்லாம் தந்து, அதில் அரசியல் உரிமைகளை மக்கள் தங்களுக்குத் தாங்களே தந்து, நாட்டின் மக்களாட்சி, இறையாண்மை மக்களிடையே உள்ளது என்பதையும், சமதர்ம ஆட்சி யாக, ஜனநாயகக் குடியரசாகவே நீடிக்கும் என்றும் பதிவு செய்து, பீடிகை என்ற முகப்புரையைச் (Preamble) சிறந்த அடிக்கட்டுமானமாக்கிவிட்டார்!

நாடாளுமன்றத்தில்
பதிவும் செய்துள்ளார்!

அவர் முழுச் சுதந்திரத்துடன் இயங்க முடியாதபோது, இவற்றைச் சாதித்ததுபற்றியும், பலவற்றை அவர் செய்ய எண்ணியபோதும், முழுமையாக இயற்ற முடியாத நிலை இருந்ததைக் குறித்தும், நாடாளுமன்றத்திலேயே பிறகு 1954 இல் பதிவும் செய்துள்ளார்!

அவர் பி.என்.ராவ் அவர்களது பங்களிப்பைக் குறைக்கவோ, மறக்கவோ இல்லை. உரிய முறையில் அதனைக் குறிப்பிட்டு, அவரது உதவிக்குப் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

ஒரு புதுவகை விஷமப் பிரச்சாரத்தைத்
தொடங்கி உள்ளனர்

ஆனால், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை, ஏதோ அரசியலமைப்புச் சட்ட வரைவுப் பணியின் இடையில் வந்துவிட்டுச் செல்லும் ஒரு கதாபாத்தி ரம்போல சித்தரித்து, எல்லாமே பி.என்.ராவ்தான் செய்தார் என்று இப்போது ஒரு புதுவகை விஷமப் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளனர்.

இந்த விஷமச் செடியைச் (Disinformation), திட்ட மிட்டே பரப்பப்படும் பொய்த் தகவல் பரிமாற்றத்தினை முளையிலேயே கெல்லி எறிந்து, உண்மை வர லாற்றை உலகத்தாருக்கு எடுத்துரைப்பது முக்கிய பெருங்கட மையாகும்!

இதற்கு முக்கிய காரணி யார் என்பதை எவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

அரசியலமைப்புச் சட்டம் தேவைப்படும்போது
ஓர் அம்பேத்கர் தேவைப்படுகிறார்

ஒருமுறை, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரித்து முடித்த பிறகு, எப்படி ‘அரசியல் கறிவேப்பிலை’யாக்கப்படும் வேதனைப்படும் நிலை தனக்கு ஏற்பட்டது என்பதை மிகுந்த விரக்தி கலந்த வருத்தத்துடன்,

‘‘இந்த நாட்டில் ஒரே ஒரு கூட்டம் அறவே தங்களது ஏகபோகத்தைக் காட்டினாலும்கூட, அவர்களுக்கு ஒரு பாரதம் தேவைப்படும்போது, வியாசர்தான் (அவர்களால் கீழ்ஜாதி என்று கூறப்பட்ட) தேவைப்பட்டார். அதே போல, இராமாயணம் தேவைப்பட்டது. வால்மீகி என்ற வேடர் தேவைப்பட்டார். அரசியலமைப்புச் சட்டம் தேவைப்படும்போது ஓர் அம்பேத்கர் தேவைப்படுகிறார்’’ என்றார்.

‘‘என்றாலும், அறிவுடைமை தங்களுக்குத்தான் என்று கூறுகிறார்களே’’ என மனம் நொந்து, வெந்து கூறியதை மறக்க முடியுமா?

பாதுகாப்பு அரணைப் பலப்படுத்த முன்வரவேண்டும்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் பணியில் மிகக் கடுமையாக உழைப்பை வழங்கியதன் காரணமாகத் தன் உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ளும் அளவிற்கு உழைத்தவரைத்தான், இன்று குறைத்து மதிப்பிடத் துணிகிறார்கள். அதுதானே ஆரியத்தின் வழமை!

உலகப் புகழ் பெறுகிறார் – ஆனால், உள்ளூரில் ஆரிய இருட்டடிப்புக்கு ஆளாகினார். ஒப்புக்கு முக படாம் காட்டி, வாக்கு வங்கிக்கான ஒரு தலை என்பது போலக் காட்டினார்கள். அவரது புகழை, பெருமையை மெதுவாகப் பெயர்த்தெடுக்கத் தொடங்கி விட்டனர் என்பதை அனைவரும் புரிந்து, பாதுகாப்பு அரணைப் பலப்படுத்த முன்வரவேண்டும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

20.10.2025  

குறிப்பு: இதுகுறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சஞ்சய் ெஹக்டே அவர்கள் விரிவான விளக்கங்களுடன் ‘ஹிந்து’ ஆங்கில  நாளேட்டின் (17.10.2025) நடுப்பக்கத்தில் எழுதிய ஓர் அருமையான கட்டுரையின் தமிழாக்கத்தை, 3 ஆம் பக்கத்தில் படிக்கவும்.

3 ஆம் பக்கம்

 அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு பிற்போக்கு திரிபுவாதம்

– சஞ்சய் ஹெக்டே
(உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்)

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருபவர் பாபா சாகேப் அம்பேத்கர். அவரால் தான் அது உருவக்கப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவு. ஆனால் ஏதேனும் ஒரு பிரச்சினையைக் கிளப்பியே ஆக வேண்டும் என்று துடிக்கும் சிலர் அம்பேத்கர் அதை உருவாக்கவில்லை – சர் பெனகல் நரசிங் ராவ் என்ற அதிகாரிதான் அதை உருவாக்கியவர் என்று விதண்டாவாதம் செய்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவருக்கு அந்தப் பெருமை கிடைத்ததை பொறுத்துக் கொள்வார்களா இவர்கள்? வரலாற்றைத் திரிக்கவும், திருத்தவும் புதிதாக சிலவற்றை அதில் திணிக்கவும் துடிப்பவர்கள் இவர்கள்.

உண்மையில் நடந்தது என்ன?

ஓர் ஓவியத்திற்கான வடிவத்தை திரு.பி.என்.ராவ் அமைத்துத் தந்தார். ஆனால் அதை அழகுற வரைந்து எழிலோவியமாக மாற்றியவர் அம்பேத்கர். ஒரு திறன்மிக்க பொறியாளர் போல் கட்டிடத்திற்கான மாதிரி வரைப்படத்தை மட்டுமே பி.என்.ராவ் கொடுத்தார். கல் சுமந்து, மண் சுமந்து ஒவ்வொரு அங்குலமாக சீர்படுத்தி எழில் மிக்க மாபெரும் கட்டடமாக உருவாக்கும் பணியாளர்களைப்போல் அதை முழுமையாக்கி நமக்குத் தந்தவர் அம்பேத்கர்.

அரசமைப்புச் சட்டக் குழுவில் ஓர் ஆலோசகராக இருந்தவர் பி.என்.ராவ். அவர்தான் முழுக்க முழுக்க அரசமைப்புச் சட்டத்தைத் தயாரித்ததாகவும், அம்பேத்கர் ஆங்காங்கே சில திருத்தங்களை மட்டுமே செய்ததாகவும் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது. இந்தியாவின் அடித்தளமான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பெருமை தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துவிட்டதால் ஏற்படும் காழ்ப்புணர்வுதான் இது. அம்பேத்கரைச் சிறுமைப்படுத்தும் விஷமத்தனமான முயற்சி இது.

ஒன்றிணைந்த பணி – போட்டியிட்ட பணியல்ல

அரசியலமைப்புச் சட்டம் உருவானதில் இருவருக் குமே தவிர்க்கமுடியாத பங்களிப்பு இருந்துள்ளது. அவர்கள் செயலாற்றிய விதம் மட்டுமே வெவ்வேறாக இருந்தது. திரு.பி.என்.ராவ் அரசியலமைப்புச் சட்டக் குழுவின் ஆலோசகராக 1946 ஜூலையில் நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ‘இந்திய அரசுச் சட்டம் 1935’ – தயாரிப்பில் உதவி புரிந்தவர் அவர். பதினொரு ஆண்டுகளுக்குப் பின் 1946இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் பணியில் அவருடைய ஆற்றலும், அறிவும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களைத் தெரிந்து கொண்டு  தரவுகளைச் சேகரித்து வைத்திருந்தார் அவர். எனவே முதல் கட்டப் பணியில் அவர் ஓர் ஆலோசகராக மட்டுமே இருந்து தொடக்கப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். 1947 அக்டோபரில் பி.என். ராவ் தன் அறிக்கையைச் சமர்ப்பித்தார். 243 பிரிவுகளும் 13 பட்டியல்களும் அதில் இருந்தன. அவருடைய அறிக்கை அரசியலமைப்புச் சட்ட உருவாக்கப் பணியை தொடக்கி வைத்தது என்று மட்டும் சொல்லலாம். அந்தக் குழுவில் அவர் உறுப்பினராக இருக்கவில்லை. ஆலோசகராக மட்டுமே இருந்தார். ஒரு சட்ட வல்லுநர் என்ற வகையில் மட்டுமே அவர் சேர்க்கப்பட்டிருந்தார். எவருக்கும் எதற்கும் அவர் பிரதிநிதித்துவம் வகிக்கவில்லை.

 அம்பேத்கரின் பணி மாறுபட்டிருந்தது

வரைவுக் குழுவின் தலைவர் என்ற முறையில் சட்ட வரைவாக மட்டுமே இருந்த ஆவணத்தை ஓர் அரசியல் உடன்படிக்கையாக  (covenant) மாற்றவேண்டிய பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நாடு பிரிக்கப்பட்டு கொந்தளிப்பு ஏற்பட்டிருந்த காலக்கட்டம் அது. காந்தியார் கொல்லப்பட்டதால் நாடே புரட்டிப் போடப்பட்டிருந்த பரபரப்பான சூழ்நிலை. அப்படிப்பட்ட கலவரங்கள் பெருகிய ஒரு காலக்கட்டத்தில், அம்பேத்கர் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுச் சட்டப்பிரிவுகளையும், விதிகளையும் உன்னிப்பாகக் கவனித்து எழுதிக் கொண்டிருந்தார். விவரிக்க இயலாத பணிச்சுமை அது. எளிதான காரியமே அல்ல அது. எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளும்படியும் எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையிலும் இருக்கும்படி அரசியலமைப்புச் சட்டத்தை மிகவும் கவனமாக உருவாக்கினார் அவர்.

புள்ளிகளை மட்டுமே வைத்துவிட்டுப் போனவர் பி.என். ராவ். அவற்றைக் கொண்டு கண்கவரும் கோலத்தை வரைந்தவர் அம்பேத்கர். ஓர் உருவத்திற்கேற்ற ஆளுயரப் பளிங்குக் கல்லை வைத்துவிட்டு அவர் நகர்ந்து விட்டார். வியர்வை சிந்தி, உளி பிடித்துச் செதுக்கி ஓர் அழகுச் சிலையை உருவாக்கிய சிற்பி போல் அல்லவா அம்பேத்கர், பி.என்.ராவின் வடிவத்திற்கு உயிர் கொடுத்து அரசியலமைப்புச் சட்ட உயிரோவியத்தை இந்தியக் குடியரசுக்கு அளித்தார்? பெருமைக்குரியவர் அவரல்லவா? அவரை நாம் பெருமைப்படுவதால் பி.என். ராவைச் சிறுமைப்படுத்துவதாக ஒரு நாளும் ஆகிவிடாது. இருவருமே போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து நமக்கில்லை.

நீதியை நிலைநாட்டும் கருவியாக அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் மாற்றியமைத்தார். பி.என்.ராவ் அழகான கட்டமைப்புச் சட்டம் தந்தார். அதற்குள் அற்புதமான ஒரு சித்திரத்தைப் பொருத்தியவர் அம்பேத்கர் அல்லவா? வெறும் கல்லாக இருந்ததை அற்புதச் சிலையாகச் செதுக்கிய சிற்பியல்லவா அவர்?

பி.என்.ராவின் பங்களிப்பை அம்பேத்கர் ஒரு நாளும் மறுத்ததில்லை. பி.என்.ராவும் அது முழுக்க முழுக்க தன் சாதனைதான் என்று என்றுமே பெருமைப்பட்டுக் கொண்டதில்லை. தேவையின்றி, சம்பந்தமில்லாத சிலர் உள்நோக்கத்துடன் வரலாற்றைத் திரித்துக் கொண்டிருக் கிறார்கள் என்பதே உண்மை. ஓர் அரசியல் சார்ந்த உள்நோக்கம் கொண்ட விஷமம் இது.

1949 நவம்பர் 25 ஆம் நாளன்று தனக்கு அளிக்கப்பட்ட பணிப் பொறுப்பினை நிறைவு செய்து அம்பேத்கர் அரசமைப்புச் சட்டக்குழு கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்:

“இந்தப் பணி முழுக்க முழுக்க என் சாதனை அல்ல. இதில் ஒரு பகுதி பி.என்.ராவுடையது. அவர் அளித்த வரைபடத்தை வைத்து நான் என் பணியை முடித்துள்ளேன். 141 நாட்கள் என்னுடன் உழைத்த வரைவுக்குழு உறுப்பினர்களுக்கும் இதில் பங்கு உண்டு. பேருதவி புரிந்த எஸ்.என்.முகர்ஜி அவர்களும் போற்றுதலுக்குரியவர்.”

அம்பேத்கரால் முழுமை பெற்ற அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னடக்கம் நிறைந்த பி.என்.ராவ் “இது என் சாதனை” என்று சொன்னதாக எந்தச் சான்றும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. “அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை” என்று பி.என்.ராவை இன்று சிலர் போற்றுவது வரலாற்றுப் பிற்போக்கான  திரிபு மட்டுமல்ல; பி.என்.ராவின் தன்னடக்கத்தையே இழிவுபடுத்தும் செயலும் ஆகும் என்றால் அது மிகையாகாது.

அரசியல் நோக்கம்:

அரசியலமைப்புச் சட்டம் வெறும் ஒரு சட்ட ரீதியான ஆவணம் மட்டுமல்ல, சமூக அறிக்கையுமாகும். தனி மனிதனின் சுயமரியாதையை அங்கீகரிக்கும் ஆவணம் அது. பல போராட்டங்களிலிருந்து உருவான ஆவணம் அது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், அதிகாரப் பங்களிப்பு உறுதி செய்யப்பட்ட வேண்டும் என்று முழங்கும் சங்கு அந்த ஆவணம்! அம்பேத்கரை அதிலிருந்து பிரித்துப் போடுவது அதன் உயிரோட்டத்தையே அழிப்பதற்குச் சமமான இழிச்செயலாகும்.

அம்பேத்கரை அரசியலமைப்புச் சட்டக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் பரிந்துரைத்தவர் காந்தியார்தான். அவர்களுக்கிடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டக்குழுவில் பங்குபெற்றே ஆகவேண்டும் என்பதில் காந்தியார் உறுதியாக இருந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு இல்லாமல் உருவாக்கப்படும் எந்த அரசியலமைப்புச் சட்டமும் ஏற்புடையதாகாது என்றாராம் காந்தியார். அவருடைய இந்த முன்யோசனை நற்பயன் விளைவித்தது.

1947இல் மதவெறிப் போராட்டங்களால் நாடே பிளவுப்பட்டுக் கிடந்த காலக்கட்டத்தில் இந்த அரசியலமைப்புச் சட்ட உருவாக்கப் பணியில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அம்பேத்கர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் ஒரு நன்மைக்கே! அவர் தவிர்க்கப்பட்டிருந்தால் நாட்டில் மேலும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கக்கூடும். அம்பேத்கரை அந்தக் குழுவில் சேர்த்ததால் காந்தியார் அதை முன்யோசனையுடன் தவிர்த்தார் என்றே கூறலாம். இல்லாவிட்டால் குடிஅரசின் துவக்கமே பாதிக்கப்பட்டிருக்கும். அம்பேத்கரின் சிறந்த பங்களிப்பால் நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டது. அவரால் உருவாகி முடிந்த அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டபின் அமைதி ஏற்பட்டு நாடு ஒன்றுபட்டது.

பி.என்.ராவ் வடிவமைத்த சட்டத்திற்கு ஒரு தார்மீக அலங்காரம் தந்தார் அம்பேத்கர். அடிப்படை உரிமைகள் சார்ந்த சட்டப்பிரிவுகளுக்கு அவரே நன்றிக்குரியவர். பல கோட்பாடுகளும், விதிமுறைகளும் அம்பேத்கரின் அறிவால் பதிவு செய்யப்பட்டவை.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு உரிமைகள் யாவுமே அவருடைய அறிவாற்றலிலிருந்து பிறந்தவை. அவருடைய உரைகள் அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு நிரந்தர தார்மீகத் தத்துவமாகவே மாற்றி விட்டன.

சமூகச் சமத்துவமும், பொருளாதாரச் சமத்துவமும் இல்லாவிட்டால் வெறும் அரசியல் சமத்துவத்தால் எந்தப் பயனும் இல்லை என்று எச்சரித்தவர் அம்பேத்கர்.

“எத்தனை காலம்தான் நாம் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவத்தை மக்களுக்கு அளிக்காமல் இருக்க முடியும்? சமூகத்திலும், பொருளாதாரத்திலும் சமத்துவம் ஏற்படுத்த நாம் தவறினால் அரசியல் ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்பட்டு விடும்” என்று எச்சரித்தார் அம்பேத்கர்.

இந்த முரண்பாடு விரைவில் நீங்க வேண்டும் என்றார் அவர். இதை நாம் நீக்கத் தவறினால் சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொதித்தெழுந்து அரசியல் ஜனநாயகத்தையே தரைமட்டமாக்கி விடுவார்கள் என்றும் கூறினார் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில் இன்றும் அம்பேத்கரின் மேற்கண்ட எச்சரிக்கைகள் வலிமைமிக்க தார்மீக அறிக்கைகளாக நிலைத்துள்ளன.

மறதியின் ஆபத்து

ஒவ்வொரு குடியரசும் கடந்த கால நிகழ்வுகளை மறக்காமல் இருக்க வேண்டும். மறதி என்பதே அபாயகரமான ஒன்று. அம்பேத்கருக்கு மேல் பி.என்.ராவை உயர்த்திப் பிடித்துக் காட்டுவது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே முரணான செயல். ஜாதி பாகுபாட்டை எதிர்க்கும் அரசியலமைப்புச் சட்டத்தையே அது சிறுமைப்படுத்தும் செயலாகி விடும். அம்பேத்கரைக் கவுரவிப்பது பி.என்.ராவை குறைத்து மதிப்பிடுவதாகி விடாது. இருவருமே குடியரசுக்காக மனசாட்சிக்கு விரோதமின்றி பணியாற்றியவர்கள்.

அரசியலமைப்புச் சட்டம் வெறும் ஒரு சட்டப் புத்தகம் போன்றதல்ல. அது தேசிய நோக்கம் உள்ள ஓர் உன்னத அறிக்கை. ஒரு சட்ட வல்லுநரின் அறிவுக் கூர்மையும், ஆற்றலும் அதற்குத் தேவைப்பட்டது. ஒரு சீர்திருத்தவாதியின் கொள்கைப் பற்றும் அதற்குத் தேவைப்பட்டது. ஒன்றை பி.என்.ராவ் அளித்தார். மற்றொன்றை அம்பேத்கர் வழங்கினார்.

அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது நேரு, பட்டேல், ராஜேந்திர பிரசாத் உட்பட அனைவரும் அம்பேத்கரின் முக்கிய பங்களிப்பைப் போற்றிப் புகழ்ந்தனர். பி.என்.ராவின் பங்களிப்பையும் பாராட்டினர். பாரபட்சமான முறையில் எவரும் எதையும் கூறவில்லை. பி.என்.ராவ் சிறந்த ஆலோசகராக விளங்கினார். அம்பேத்கர் தார்மீக சட்டக் கட்டமைப்புக் கலைஞராக விளங்கினார். இருவருமே போற்றப்பட வேண்டியவர்கள். இருவருமே நன்றிக்குரியவர்கள். ஒரு பொறியாளர் போல் செயல்பட்டவர் பி.என்.ராவ்.  ஈடு இணையற்ற சட்டக்கலை கட்டமைப்பு நிபுணர் போல் பணியாற்றியவர் அம்பேத்கர். இதை எவரேனும் ஏற்க மறுத்தால் குடியரசையே ஏற்க மறுத்தது போலாகும்.

(திரு. சஞ்சய் ஹெக்டே அவர்கள் எழுதி ‘தி இந்து’ (17.10.2025) ஆங்கில நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் மய்யக்கருத்து)

              நன்றி. ‘தி இந்து’ – 17.10.2025

 மொழியாக்கம் : எம்.ஆர். மனோகர்.

- விடுதலை நாளேடு,20.10.25

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’

 


வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்! ஜாதி ஒழிப்புக்கான முக்கிய மைல்கல்!
ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

ஆணவக் கொலை தடுப்புக்கான  சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதல மைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’   என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (17.10.2025) காலை தமிழ்நாடு சட்டப்பேர வையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டமொன்றை இயற்றிட, ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் கே.எம்.பாஷா அவர்கள் தலைமையில் ஒரு தனி ஆணையம் அமையும். அதன் வழிகாட்டுதலையொட்டி, அடுத்து ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டம் உருவாகும்’’ என்று விடுத்துள்ள இந்த அறிவிப்பு, இந்தியாவிற்கே வழி காட்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் ஆகும்!

இதுபற்றி சட்டப்பேரவையில் அவர் உரை யாற்றும்போது, (அண்மையில் 13 நாள்களுக்கு முன்பு)செங்கல்பட்டு – மறைமலை நகரில் நடைபெற்ற நமது சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஜாதி ஒழிப்புக்கான முக்கிய நடவடிக்கையாக ஆணவக் கொலையைத் தடுக்கச் சட்டம் நிறைவேற்றக் கோரும் தீர்மானத்தை முக்கியமாகக் குறிப்பிட்டு, இச்சட்டத்தின் தேவைபற்றிக் கூறியது நம்மை மெய்சிலிர்க்கச் செய்தது. 1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டின் தீர்மானங்களைச் சட்டமாக்கிட 40 முதல் 60 ஆண்டுகள் ஆயின.

4.10.2025 செங்கல்பட்டு மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுத் தீர்மானங்கள் அடுத்த 13 நாள்களில் செயல்பாட்டுக்கு வர ஏற்பாடுகள் தொடக்கம்!

என்னே வேகம்! என்னே விவேகம்!!

இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சி!

கருஞ்சட்டையினருக்கு ‘முதல் சல்யூட்’ அளித்த எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களே,

இந்த ஜாதி ஒழிப்பு முயற்சிக்கான ஆணவப் படுகொலை தடுப்புச் சட்ட ஏற்பாட்டுக்கான முன்னெடுப்புக்கு எங்களது ‘டபுள் சல்யூட்’ – வாழ்த்துகள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

17.10.2025          

பெரியார் உலகத்திற்கான நன்கொடையை, பெரியார் திடலுக்குத் தி.மு.க.வின் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களுடன் வருகை தந்து முதல்வர் அளிப்பு

 

எமது ஆழமான அன்புமிகு நன்றிகள்!



தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி அறிக்கை!

கடந்த 4.10.2025 அன்று செங்கல்பட்டு – மறைமலைநகரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவுரை நிகழ்த்திய நமது 'திராவிட மாடல்' ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், திருச்சி சிறுகனூரில் பல கோடி ரூபாய் திட்டமான பெரியார் உலகத்திற்கு, தமது அரசின் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தைப் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக அளிப்போம் என்று அறிவித்து, மக்களை வியப்பு, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

அந்த அறிவிப்பின்படி இன்று (18.10.2025) காலை 10.30 மணிக்குப் பெரியார் திடலுக்குத் தி.மு.க.வின் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களுடன் வருகை தந்து, அறிவித்தார் . ரூபாய் ஒரு கோடியே 50 லட்சத்திற்கும் கூடுதலாக, மொத்தம் ஒரு கோடியே 70 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையை அளித்து, சிறிது நேரம் உரையாடி விட்டுச் சென்றது, அவரது தலைமைப் பண்பு, மற்றவர்களுக்கு எவ்வளவு எடுத்துக்காட்டப்பட்டது என்பதற்கான முக்கியச் சான்று நடவடிக்கையாகும்.

''சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம் – சொல்லாததையும் செய்வோம்!''

பெரியார் திடலுக்கு நேரில் வந்து அளித்தது எவ்வளவு பெரும் பண்பு என்பதோடு, அறிவித்து
14 நாட்களிலேயே அதை அத்தனை பேரிடமிருந்தும் திரட்டி, ''சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம் – சொல்லாததையும் செய்வோம்'' என்று நிரூபிக்கும் ஓர் எடுத்துக்காட்டு அல்லவா?

தாய்க்கழகம், உச்சிமோந்து வரவேற்று, வாழ்த்தி, தனது பெருநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது!

நம் நன்றி – பெரு நன்றி!

''உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்!''

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை 

18.10.2025