திங்கள், 21 ஜூலை, 2025

இதுதான் பார்ப்பன பக்தி! மது குடித்துவிட்டு ஆபாச நடனமாடிய நான்கு அர்ச்சகர் பார்ப்பனர்கள்-அறநிலையத் துறை நடவடிக்கை



சிறீவில்லிபுத்தூர், ஜூன் 26 விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரி யம்மன் கோயிலில் ஜூலை 2 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16 ஆம் தேதிமுகூர்த்தக்கால் நடப்பட்டு, குடமுழுக்குப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு

சமூக வலை தளங்களிலும் வைரலாகப் பரவியது

இக்கோயிலில் உதவி அர்ச்சக ராகப் பணி புரிபவர் கோமதிவிநாயகம் (30). இவரது வீட்டில், குடமுழுக்கு பணிக்கு வந்த அர்ச்சகர்கள் சிலர் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக நடனமாடியதாகக் கூறப்படுகிறது. இதை காட்சிப் பதிவு செய்த  எடுத்த கோயில் மேனாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன், அதை அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகக் குழுவினருக்கு அனுப்பிவைத்து, புகார் தெரிவித்தார். இந்த காட்சிப் பதிவு  சமூக வலை தளங்களிலும் வைரலாகப் பரவியது.

இதுதவிர, கோயில் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது விபூதி அடித்து அர்ச்சகர்கள் விளையாடும் காட்சிப் பதிவும் வெளியாகி உள்ளது. இதையடுத்து, தங்களை பற்றி அவதூறாக காட்சிப் பதிவு  வெளியிட்டதாக சபரிநாதன் மீது காவல் நிலையத்தில் கோமதி விநாயகம் புகார் அளித்தார். அதேநேரம், ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தக்காரிடம் புகார் அளிக்கப்பட்டது.

மருத்துவப்
பரிசோதனை மூலம் உறுதியானது!

கடந்த 15 ஆம் தேதி பெரிய மாரி யம்மன் கோயில் அர்ச்சகர் சுந்தர் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டதும் மருத்துவப் பரிசோதனை மூலம் உறுதியானது. மேலும், கோயில் அலுவலகத்தில் அறநிலையத் துறை ஊழியர் கார்த்திக், மது பாட்டிலுடன் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் காட்சிபரவுகிறது. அர்ச்சகர்கள் மது போதையில் ஆபாச நடனமாடும் காட்சிப் பதிவு பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்ப டுத்தியது. இதையடுத்து, பெரிய மாரியம்மன் கோயில் தக்காரும், ஆண்டாள் கோயில்செயல் அலுவ லருமான சக்கரையம் மாள், செயல் அலுவலர் ஜோதிலட்சுமி ஆகியோர், சர்ச்சையில் சிக்கிய அர்ச்சகர்களிடம் நேற்று (25.6.2025) விசாரணை மேற்கொண்டனர்.

துறை ரீதியிலான விசாரணை!

இதுகுறித்து தக்கார் சக்கரை யம்மாள் மதி கூறும்போது, “உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகம் உள்ளிட்ட 4 பேரும் கோயிலில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். அவர்கள் கோயில் பூஜைகளில் தலை யிட தடை விதிக்கப்பட் டுள்ளது. அர்ச்சகர் சுந்தர் மீது குடமுழுக்குக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். துறை ரீதியிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’’ என்றார்.

 - விடுதலை நாளேடு, 26.6.25

ஞாயிறு, 20 ஜூலை, 2025

சூத்திரன்’ – பகவத் கதை பாராயணம் செய்யக் கூடாதாம்!

 


மொட்டை அடித்து பார்ப்பனப் பெண்களின் சிறுநீரைக் குடிக்கவைத்து எச்சிலை நக்க வைத்த கொடூரம்

அகிலேஷ் கடும் கண்டனம்

வட மாநிலங்களில் பகவத்கதை கதை சொல்லும் நிகழ்வு பிரபலமானது ஒவ்வோரு கிராமமாக சென்று பகவத் கீதை சொல்லி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்பவர்கள் பலர் உள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் இட்டாவா மாவட்டத்தில்  தரதாபூர் என்ற கிராமத்தில் பகவத்கதை சொல்லும் நபர்கள் வந்து கதை சொல்ல தயாரானார்கள்

அப்போது சிலர் இவர்கள் பார்ப்பனர் அல்ல இவர்கள் எப்படி பகவத் கதை சொல்ல முடியும் என்று கூறி அவர்களை தாக்கி, மொட்டை அடித்தனர்.

மேலும் பார்ப்பனப் பெண் ஒருவர் சிறுநீரைப் பிடித்து அவர்களைக் குடிக்கவைத்து அவர்கள் மீது ஊற்றிய கொடூர நிகழ்வும் நடந்துள்ளது. மேலும் தரையில் எச்சிலை துப்பி அவர்களை நக்க வைத்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர்

இந்தக்காணொலி சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு பார்ப்பனர் அல்லாதோர் பகவத் கதை சொல்ல முன்வரவேண்டாம் அபப்டி வந்தால் இதைவிட கொடுமையாக நடத்தப்படுவார்கள் என்று எழுதியுள்ளனர்

இக்காணொலி 2025 ஜூன் 23 இட்டாவா மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது

உடனடியாக கண்காணிப்பாளர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  இட்டாவா காவல்துறைக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. விசாரணையில், இச்சம்பவம் ஜூன் 21 அன்று, பகேவர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதர்பூர் கிராமத்தில் நடந்தது தெரியவந்தது. அங்கு பாகவத கதை நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. இட்டாவாவின் சிவில் லைன் பகுதியைச் சேர்ந்த முகுந்த் மணி யாதவ், கதை கூறியிருந்தார்.

கிராமவாசிகள், முகுந்த் மணி தன்னை பிராமணர் எனக் கூறி கதையைத் தொடங்கியதாகவும், ஆனால் அவர் யாதவ் ஜாதியைச் சேர்ந்தவர் எனவும் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, கிராமவாசிகள் முகுந்த் மணி யாதவ் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் யாதவ்  ஆகியோரை கொடூரமாக தாக்கினர், அவர்களில் ஒருவர் எலக்ட்ராணிக் சேவிங் கருவியால் தலைமுடியைச் சிதைத்தனர்.

அவ்வூரின் உள்ள ஒரு பார்ப்பனப்பெண் தனது, சிறுநீரைக் குடிக்கவைத்தும் எச்சிலைத்துப்பி அதை நக்கவைத்த கொடுமைகள் குறித்து  காவல்துறை ஆணையரிடம் புகாராக முகுந்த் மணி நேரில் சென்று கூறினார்

பதிலடிப் பக்கம்

காவல்துறை நடவடிக்கை

ஜூன் 23 அன்று, சட்டவிதி (BNSS) பிரிவுகள் 115(2), 309(2), 351(2), 352 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காணொலி மற்றும் உள்ளூர் விசாரணையின் அடிப்படையில், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, நான்கு குற்றவாளிகளை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள்:

ஆஷிஷ் திவாரி (21 வயது)

உத்தம் அவஸ்தி (19 வயது)

பிரதம் துபே (24 வயது)

நிக்கி அவஸ்தி (30 வயது)

காவல்துறையின் கூற்றுப்படி, நிக்கி அவஸ்தி என்பவர் காணொலியில் முடி வெட்டுபவராக தெரிகிறார். நான்கு குற்றவாளிகளும் ஜூன் 24 அன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

பதிலடிப் பக்கம்

இட்டாவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “பகேவர் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட தாதர்பூர் கிராமத்தில், கிராமவாசிகள் இரு நபர்களை அநாகரிகமாக நடத்தி, அவர்களின் முடியை வெட்டிய காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த காணொலியை உடனடியாக கவனத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர். பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.

இக்கொடூர நிகழ்வு தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறும் போது இது மிகவும் கொடூரமான நிகழ்வே! முகுந்த் மணி யாதவ் பல அரசியல் பிரமுகர்களின் முன்பாக பகவத் கதை சொல்பவர், அவரது குரலும் அவர் கதை சொல்லும் நளினமும் அனைவரையும் ஈர்க்கும், இதற்கான அவர் அரித்துவாரில் பாரட்டுப்பத்திரமும் பெற்றுள்ளார்.

ஆனால் அவரை இவ்வாறு இழிவுபடுத்தியது மிகவும் மோசமான நடவடிக்கை ஆகும்.

பகவத் கதை இன்னார் தான் சொல்லவேண்டும் என்று எங்கும் எழுதவில்லை. இந்த விவகாரத்தில் காவல்துறை கடுமையான நடவடவடிக்கை எடுக்கவேண்டும் முகுந்த்மணியாதவிற்கு நீதிகிடைக்க சமாஜ்வாடி கட்சி துணை நிற்கும் என்று கூறினார்.

– – – – –

பதிலடிப் பக்கம்

மத்திய பிரதேசத்திலும் இதே கதைதான்!

மத்தியப் பிரதேசம் ஜபல்பூரின் பனாகர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ரைபுரா பகுதியில் உள்ள கல்மாபதி தேவி கோயிலில் ‘‘சிறீமத் பாகவத பிரசங்கம்’’ நடத்தப்பட்டது.

2025 பிப்ரவரி 24 முதல் தொடங்கிய இந்தக் காலட்சேபம் நிகழ்ச்சியில், மறுநாள் (25.02.2025) கல்லூரி மாணவியும், புராணக்கதைகளை சொல் நயத்துடன் கூறும் ராதா ஸ்வரூப் தேவிகா கிஷோரி என்ற பெயரில் அறியப்படும் தேவிகா படேலை காலட்சேபம் நடத்திட அழைத்திருந்தனர்.

இதுவரை எல்லா அழைப்பிதழ்களிலும் அவர் ராதாஸ்வரூப் கிஷோரி என்றே இருந்ததால் எல்லோரும் அவரைப் பார்ப்பனர் என்றே நினைத்து பகவத் கதையைப் படிக்க அவரை அனுமதித்தனர்

இந்த நிலையில் அவரது கோவில் பிரசங்கத்தின் இந்த நிகழ்ச்சிக்கு தேவிகா படேல் என்று ஜாதிப்பெயரோடு அழைப்பிதழ் அச்சடிக்கப் பட்டது.

இதனை அடுத்து அன்று மாலை அவர் பிரசங்கம் செய்ய மேடை ஏறியபோது, அங்கிருந்த பார்ப்பனர்கள் ‘‘நீ சூத்திரப் பெண், எப்படி மேடை ஏறலாம்?’’ என்று கேட்டு அவரைத் தள்ளிவிட்டனர். அவர் அமர்ந்திருந்த இருக்கையில் எண்ணெய் ஊற்றிவிட்டனர்.

மேலும், அந்தக் கும்பல் ‘‘காலட்சேபம் நடந்த வேண்டு மெனில், பிராமணர் குடும்பத்தில் பிறந்திருக்கவேண்டும் அவர்கள்தான் மேடை ஏறி இருக்கையில் அமர்ந்து பிரசங்கம் செய்யமுடியும்

உன்னைப் போன்ற சூத்திரப் பெண் தரையில் உட்கார்ந்து கேட்கவேண்டுமே தவிர, பிராமணர்கள் அடங்கிய மேடையில் ஏறி தீட்டாக்கக்கூடாது’’ என்று கூறி அவரை அவமானப்படுத்தி விரட்டினர்

ஸநாதன தர்மத்தின்படி இருக்கையில் அமர்ந்து காலட்சேபம் செய்ய புராணங்களின் அறிவு மட்டுமின்றி ‘‘பிராமண’’ ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று கூறினர். கோவில் நிர்வாகம் இது தொடர்பாக எந்தக் கருத்தும் கூறவில்லை.

தேவிகா படேல் பொதுமேடையில் பார்ப்பனர்களால் அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வு மாவட்டம் முழுவதும் பரவிய உடன் மாவட்ட தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது, மேலும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி சமூக அமைப்புகளோடு சேர்ந்து தேவிகா படேலுக்கு ஆதரவாக ஜபல்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக மாவட்ட தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய உறுப்பினரும், வழக்குரைஞருமான இந்திர குமார் படேல் இந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்து, மனுவாதி மனப்பான்மை கொண்டவர்களால் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவமானப்படுத்தப் பட்டதாகவும், அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் மகாசங்கம் மற்றும் எஸ்டி, எஸ்சி, ஓபிசி முன்னணி ஆகியவை பனாகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜபல்பூர் ‘‘பிராமண’’ அமைப்பின் தலைவர் ராம் துபே, தெரிவித்ததாவது, ‘‘ஸநாதன பாரம்பரியம் மற்றும் புராணங்களின்படி,பிரசங்கம் செய்யும் உரிமை ‘‘பிராமணர்’’களுக்கு மட்டுமே உண்டு, அவர்களின் பிறப்பே அதற்குத்தான், இங்கு பிராமணர்கள் அல்லாதோர் ஏன் வரவேண்டும்?

அவர் மேடை ஏறியது தவறு; ஸநாதனவிதிகளை மீறும் போது உண்மையான ஸநாதனிகளுக்குக் கோபம் வரத்தான் செய்யும், தவறு அந்தப்பெண்ணின் மீது குற்றம் இருக்கும் போது, தேவையில்லாமல் ‘‘பிராமணர்’’களை குற்றவாளியாக்க முயல்வது தேவையற்றது’’ என்றார்.

இந்த விவகாரத்தில் ஜபல்பூர் மாவட்ட காவல் நிலைய ஆய்வாளர் கூறும் போது ‘‘பிராமண’’ சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், படேல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் கதை வாசிப்பதை எதிர்த்ததாகவும், அதனால் இந்த சர்ச்சை உருவானதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக இரு சமூகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. மற்றும் சமரசத்துடன் இந்த விவகாரத்தை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.

‘எப்படி இருக்கிறது – ஸநாதனமும் – பார்ப்பனீயமும்?’, ‘‘ஹிந்து ராஜ்ஜியம் அமைக்கப் போகிறோம்!’’ என்று சொல்கிறார்களே, அந்த ஹிந்து ராஜ்ஜியம் இத்தகைய ஸநாதன அடிப்படையில் தானே நடக்கும்? ஹிந்துக்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும், பார்ப்பனரல்லாதார் இதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா? உரிமைக்காக கிளர்ந்து எழ வேண்டாமா?

காவல்துறை அதிகாரி சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், சமாதானம் பேசுவது கட்டப் பஞ்சாயத்து  – வெட்கக் கேடு!

தமிழ்நாட்டில் இது போல் நடந்திருக்க முடியுமா?

காரணம் இது தந்தை பெரியார் மண் – திராவிட இயக்கத்தால் உழுது பக்குவப்படுத்தப்பட்ட மண்!

-விடுதலை நாளேடு, 29.6.25

உ.பி.யிலும் தந்தை பெரியார் பயணம்!


பெட்டி செய்திகள்

உத்தரப் பிரதேசம் இடாவா நகரில் கதாகலாட்சேபம் (பாகவத்கதா) சொல்லவந்த அரித்துவாரில் விருது பெற்ற முகுந்த்மணி யாதவ் மற்றும் அவரது உதவியாளரை சூத்திரன் எப்படி வேதங்களை வாயால் சொல்லாம் என்று அவருக்கு பெண்ணின் சிறுநீரைக் குடிக்கவைத்தும் மொட்டையடித்தும் எச்சில் துப்பி அதனை நக்க வைத்து கொடுமைப்படுத்திய நிகழ்வும் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அகிலேஷ்யாதவ் இந்தக்கொடுமை நடந்த அதே பகுதியில் மேடை அமைத்து முகுந்த்மணி மற்றும் அவரது குழுவினரை கதாகலாட்சேபம் செய்யவைத்து தானும் அமர்ந்து கேட்டார்.
பின்னர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
அவர் கூறும்போது பார்ப்பனர்களுக்கு மட்டுமே நாக்கு உள்ளதா?வேண்டுமென்றால் பார்ப்பனர்கள் அவர்களின் ஆட்களின் முன்பு கதாகலாட்சேபம் நடத்தட்டும்! இனிமேல் பார்ப்பனர்களின் கதாகலாட்சேமத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று நான் கட்டளையிட வெகுநேரம் ஆகாது. மனிதர்களாக மதிக்கப்பாருங்கள் என்று பேசினார்.
ஆம் தந்தை பெரியார் உத்தரப் பிரதேசத்திலும் பயணிக்க ஆரம்பித்து விட்டார்.

-விடுதலை நாளேடு, 29.6.25

மானமிகு கலைஞருடன் – ஒரு நேர்காணல்

 


கேள்வி: வணக்கம்! இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தினுடைய முக்கியத் தலைவராகிய தங்களிடத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய 107ஆவது ஆண்டு பிறந்தநாள் மலருக்காகவும், “விடுதலை” பொன்விழா மலருக்காகவும் ஒரு நேர்முகப் பேட்டிக்காக வந்திருக்கிறோம். இந்த அரிய வாய்ப்பைப் பெற்றதற்காக எங்களுடைய நிறுவனத்தின் சார்பாக அன்பான நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துப் பேட்டியைத் தொடங்குவதற்கு அனுமதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கலைஞர்: வரவேற்கிறேன், பேட்டியைத் தொடருங்கள்.

கேள்வி: தந்தை பெரியாரவர்கள்பால் தாங்கள் ஈர்க்கப்பட்ட நிகழ்ச்சி எது?

பதில்: 1945ஆம் ஆண்டில் ‘நாகை திராவிட நடிகர் கழகம்’ என்ற பெயரால் கொள்கைப் பிரச்சார நாடகங்களை நடத்தி வந்தோம். நாகை கழகச் செயல்வீரர் ஆர்.வி.கோபால் அவர்களால் அது நிறுவப்பட்டது. கொள்கை பிரச்சாரத்திற்காக நானும் கதைகளை எழுதி, உரையாடல்கள் அமைத்து நடிக்கவும் செய்தேன். அப்படி நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் புதுவையில் செட்டியார் பேட்டையில் அநத் நாடகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

புதுவையில் ஒரு நாள்!

அதன் காரணமாக ஸநாதனிகள் – வைதிகர்கள் எதிர்ப்புக்கு நாங்கள் ஆளாக நேரிட்டது. அந்த நேரத்தில் புதுவையில் திராவிடர் கழகத்தினுடைய மாநாடு ஒன்றை நடத்தினோம். அந்த மாநாட்டில் நானும் பங்குகொண்டு பணியாற்றிக்கொண்டிருந்தேன். தந்தை பெரியாரவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அந்த மாநாட்டை முன்னின்று நடத்தினார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த மாநாட்டில் பெரும் கலவரம் ஏற்பட்டு அதன் காரணமாக நாங்களெல்லாம் விரட்டப்பட்டு, தாக்கப்பட்டு, நான் இறந்துவிட்டேன் என்று எதிரிகள் கருதி ஒரு சாக்கடையிலே தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

தமிழ்நாடு

என்னைக் காணவில்லையென்று தந்தை பெரியாரவர்கள் இரவெல்லாம் தேடி, -இறுதியாக ஒரு வீட்டில் நான் பிரக்ஞையற்ற நிலையிலேயிருந்ததைக் கண்டுபிடித்தார்கள். அங்கேயிருந்து என்னை அழைத்து வந்து, என்னுடைய நெற்றியிலிருந்த காயங்களுக்கெல்லாம் அவர் தன்னுடைய கையால் மருந்து தடவினார்.

அப்படி மருந்து தடவுகிற பொழுது அய்யா அவர்கள் சொன்னார்கள், “யார் யார் பெற்ற பிள்ளைகளோ என்னுடைய கொள்கைகளுக்காக இப்படிக் கஷ்டப்படுகிறார்கள்” என்று சொன்னார்கள்.

தமிழ்நாடு

நான் மாநாட்டிலே தாக்கப்பட்டு, சாக்கடையிலே தூக்கி வீசப்பட்டு அதன் காரணமாகப் பெற்ற வலியெல்லாம் மறந்து போயிற்று.

அப்போது தந்தை பெரியாரவர்களிடத்தில் ஒரு தந்தை பாசத்தை, தாயின் அன்பை நான் உணர்ந்தேன்.

கேள்வி: ‘குடிஅரசி’ல் பணியாற்ற தந்தை பெரியார் குருகுலத்தில் இருந்தபோது தங்கள் வயது என்ன? அந்தக் காலத்தில் ‘குடிஅரசி’ல் எழுதியதில் இப்போதும் உங்கள் மனத்தில் நீங்காமல் இருக்கும் படைப்பு எது?

தமிழ்நாடு

“தீட்டாயிடுத்து” –“அண்ணாமலைக்கு அரோகரா!”

பதில்: நான் என்னுடைய 22ஆவது வயதில் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் தந்தை பெரியாரவர் களிடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நான் முதலில் குறிப்பிட்டது. புதுவை நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை ஒட்டி அய்யா அவர்கள் ‘என்னோடு வந்து இரு’ என்று ஈரோட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ‘குடிஅரசு’ அலுவலகத்தில் துணை ஆசிரியனாகப் பணிபுரியுமாறு பணித்தார்கள்.

நான் தொடர்ந்து ‘குடிஅரசு’ இதழில் கட்டுரை எழுதினேன் “குண்டுவீச்சு” என்ற தலைப்பில் ‘விமானி’ என்ற புனை பெயரோடு சிறுசிறு துண்டுச் செய்திகளையும் எழுதி வந்தேன். பெரியாரவர்கள் அவைகளையெல்லாம் பாராட்டுவார்கள்.

ஒரு சமயம் அய்யா அவர்களே என்னை அழைத்து ஒரு துணைத் தலையங்கம் எழுதச் சொன்னார்கள்.

அது என்னுடைய வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான நாளாகும்.

தமிழ்நாடு

திருவையாறில் தியாகய்யர் உற்சவம் நடைபெற்றதும் அதில் தமிழில் பாடிய காரணத்தால் மேடை தீட்டாகிவிட்ட தென்று அடுத்துப் பாடவந்த ஒரு வைதீக பிராமண சங்கீத வித்வான் – தண்டபாணி தேசிகர் பாடிய அந்த மேடையைக் கழுவிவிட்டு, தோஷம் கழித்து அதற்கப்பிறகுதான் பாடுவதாகச் சொல்லி அந்த மேடையில் பாடினார் என்று செய்தி வந்தது.

நான் அந்தச் செய்தியை மிகுந்த கவலையோடும், வேதனையோடும் படித்துவிட்டு- அய்யா அவர்கள் சொன்ன ஆணையை ஏற்று ‘தீட்டாயிடுத்து’ என்ற தலைப்பில் ‘குடிஅரசு’ப் பத்திரிகைக்கு நான் துணைத்தலையங்கம் எழுதினேன்.

நான் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். திருவண்ணாமலை தீபத்தைப்பற்றி “அண்ணாமலைக்கு அரோகரா” என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். தீபாவளி பற்றியெல்லாம் எழுதியிருக்கின்றேன். மனதில் நிலைத்து நிற்பது இந்த ‘தீட்டாயிடுத்து’ என்ற கட்டுரைதான். காரணம், பெரியார் அவர்கள் இதைப் படித்துப் பார்த்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள். என்னைத் தட்டிக் கொடுத்தார்கள். அதனால் அது பசுமையாக உள்ளது.

கேள்வி: தந்தை பெரியாரவர்களைப் பிரிந்திருந்த காலகட்டத்தில்- பெரியாரவர்களின் கொள்கைகளில், இலட்சியத்தில் தங்களுக்குப் பிடிப்புக் குறைந்ததுண்டா?

கன்னத்தைத் தடவினார் பெரியார்

பதில்: என்றைக்குமே அப்படிப்பட்ட பிடிப்புக் குறைந்ததே இல்லை. தந்தை பெரியாரவர்களைப் பிரிந்திருந்த காலகட்டத்திலே கூட- ஹிந்தியை அழிப்பதற்காக தந்தை பெரியாரவர்கள் தமிழ்நாட்டிலே- உள்ள இரயில் நிலையங்களிலெல்லாம் ஒரு பெரும் போராட்டத்தை அறிவித்தார்கள். அதையொட்டி அண்ணா அவர்களும், “திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கி” என்று துவக்கத்திலேயே குறிப்பிட்டதற்கிணங்க- அதே நாளில் ஹிந்தியை அழிப்பதற்கு அண்ணாவும் ஆணையிட்டார்.

தமிழ்நாடு

அந்த ஆணையை ஏற்று நான் திருச்சியிலே புகைவண்டி நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழிப்பதற்காகச் சென்றேன்.

அன்று திருச்சி நிலையத்திலேயே பெரியாரவர்கள் ஹிந்தி எழுத்துகளை அழிப்பதற்காக வந்தார். அவர் ஹிந்தி எழுத்துகளை அழித்துவிட்டு வந்தபிறகு- நான் வேறொரு இடத்தில் சென்று ஹிந்தி எழுத்துகளை அழித்துவிட்டு வந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. தெப்பக்குளத்திற்கு அருகாமையில் அய்யா அவர்களுடைய வேன் வந்த பொழுது- நான் என்னுடைய காரை விட்டு இறங்கி, பிரிந்த பல ஆண்டு காலத்துக்குப் பிறகு அய்யா அவர்களிடத்தில் சென்று வணக்கம் தெரிவித்தேன்.

அய்யா அவர்களும் என்னுடைய கன்னத்தைத் தடவிக் கொடுத்தார்கள். பிறகு நான் திரும்பி வந்தேன்.

ஆகவே, எந்த நேரத்திலும் மொழிப் பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை, பகுத்தறிவுப் பிரச்சினை ஆகியவற்றில் பெரியாரவர்கள் சொல்லிய எந்தக் கருத்துகளிலிருந்தும் நாங்கள் நழுவியதில்லை.

கேள்வி: சாதாரண நிலையில் இருக்கும்போதும் அய்யாவுடன் இருந்திருக்கின்றீர்கள். அமைச்சராகவும், முதலமைச்சராகவும் அவருடன் தொடர்புகொண்டும் இருந்திருக்கின்றீர்கள். அவரிடம் நீங்கள் எந்த மாற்றத்தையாவது கண்டதுண்டா?

பெரியார் என்றைக்கும் பெரியார்தான்

பதில்: ஒருவேளை, பெரியாரவர்கள் எங்களிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டிருக்கக்கூடும். நான் எந்த மாற்றத்தையும் அவரிடத்திலே காணவில்லை. எப்படித் தன்னுடைய மாணவனாக என்னை ஏற்றுக் கொண்டு ஆளாக்கினாரோ- அதைப்போலவே நான் அமைச்சராக இருந்தபொழுதும், முதலமைச்சராக இருந்தபொழுதும் அதே பாசத்தோடு அவர்கள் பழகினார்கள்.

பெரியாரிடத்திலே ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால் வயதில் சிறியவர்களாக இருந்தால்கூட அவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் பெரியார் என்றைக்கும் பெரியார்தான்.

தமிழ்நாடு

கேள்வி: தாங்கள் பெரியாரவர்களைப் பலமுறை, பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறீர்கள். அப்படிப்பட்ட சந்திப்பின்போது தங்கள் நெஞ்சை நெகிழ வைத்த சில நிகழ்ச்சிகளைக் கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நெஞ்சை நெகிழவைத்த அந்த நிகழ்ச்சி

பதில்: ஒரு நிகழ்ச்சியைச் சொன்னால் போதுமானது. கிட்டத்தட்ட 16, 17 ஆண்டுகாலம் தந்தை பெரியாரை விட்டு நாங்கள் பிரிந்திருந்து- 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 138 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெற்றி பெற்றவுடன் நான் இப்போது பெருமையாகச் சொல்வதாகக் கருதக் கூடாது- அறிஞர் அண்ணா அவர்களிடத்தில் தந்தை பெரியாரவர்களைச் சென்று பார்த்து வரலாம் என்று சொன்னேன்.

உடனே, அண்ணா அவர்கள் அட்டியின்றி “இங்கிருக்கிறாரா? கேள்” என்று சொன்னார்.

இங்கே இல்லை, திருச்சியில் இருக்கிறார் என்று சொன்னவுடன்- அன்பில் தருமலிங்கத்திடம் தொடர்புகொண்டு அய்யா அவர்களைப் பார்க்க வருவதாக அண்ணா அவர்கள் தெரிவித்தார்கள்.

அண்ணாவும், நானும், நாவலர் நெடுஞ்செழியனும் அன்பில் தர்மலிங்கமும் பெரியாரவர்களைத் திருச்சியிலே சென்று அவரது மாளிகையில் சந்தித்தோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றிக் கனியை பெரியாரவர்களுடைய காலடியிலே வைத்தபோது- அவர்கள் எங்களைப் பார்த்து தழுதழுத்த குரலில் கட்டிப் பிடித்துக் கொண்டு “மகிழ்ச்சி! மகிழ்ச்சி!” என்று சொன்னார்கள். பெரியாரால் பல ஆண்டுகாலம் தாங்கள் எதிர்க்கப்பட்டு இருந்தாலும் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஒரு தந்தையின் பாசத்தோடு அரவணைத்தார்கள். அவரே எங்களைப் பார்த்து “வெட்கப்படுறேங்க! வெட்கப்படுறேங்க!” என்று சொன்னதும் நெஞ்சை நெகிழவைத்த நிகழ்ச்சியாகும்.

இலட்சியத்தில் வெற்றி பெற்றீர்களா?

கேள்வி: திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அறிஞர் அண்ணா அவர்களின் வழிகாட்டுதலோடு அரசியல் கட்சியைத் தொடங்கினீர்கள். அரசியலில் சாதிக்க முடியும் என்று கருதிய இலட்சியத்தில் நாங்கள் வெற்றியைப் பெற்று விட்டதாகக் கருதுகின்றீர்களா?

பதில்: முழுமையான வெற்றி பெற்றுவிட்டதாக நான் கருத முடியாது. அரசியலில் வெற்றி பெறுவது என்பது ஆட்சிப் பொறுப்பிலே சென்று அமர்வது என்று மாத்திரம் கருதிக் கொள்ள முடியாது.

ஆட்சிப் பொறுப்பு, பதவி இவைகளெல்லாம் நாம் கொண்டுள்ள இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையவேண்டுமே தவிர, அவைகளே குறிக்கோளாக இருக்க முடியாது.

ஆட்சிப் பொறுப்பு, பதவி இவைகளெல்லாம் நாம் கொண்டுள்ள இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையவேண்டுமே தவிர, அவைகளே குறிக்கோளாக இருக்க முடியாது.

ஆனால், அரசியலைப் பொறுத்த வரையில் ‘மாநில சுயாட்சி இலட்சியத்தை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துச் சொன்ன காரணத்தால்- தமிழ்நாட்டிலே மாத்திரம் அல்லாமல், இந்தியா முழுமையும் “விவாதத்திற்குரிய பிரச்சினையாக” மாநில சுயாட்சிப் பிரச்சினை இன்றைக்கு ஆகியிருக்கின்றது.

அதற்குக் காரணம், இந்தியாவிலேயே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையிலே ‘மாநில சுயாட்சி’த் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றோம். இது அரசியல் கட்சியாலான வெற்றி என்று சொல்ல வேண்டும்.

கேள்வி: பெரும் சக்தியாக இருந்து சமுதாயத் தொண்டு புரிந்து எந்த திராவிடர் கழகத்திலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்து பெரும்பாலும் அரசியல் பிரச்சினைகளிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபட்டதால் இளைஞர்களிடையே சமுதாய உணர்வு மங்கிவிட்டது என்ற ஒரு கருத்துப் பரவலாக இருப்பதுபற்றி தங்கள் கருத்து என்ன?

ஏற்றுக் கொள்கிறேன்… ஆனால்…

பதில்: இந்தக் கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் கூட, நாங்கள் தொடர்ந்து செய்ய இயலாமல் போய்விட்ட அந்தப் பணியை திராவிடர் கழகத்தினுடைய பொதுச் செயலாளர், என்னுடைய இளவல், தளபதி வீரமணி அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்.

ஆங்காங்கே ‘இளைஞர் பயிற்சி முகாம்’களை நடத்தி அதன் மூலமாகச் சமுதாய அறிவைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யுமளவிற்குப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.

திராவிட முன்னேற்றம் கழகத்தின் சார்பிலும் இளைஞர் பாசறைகள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுச் சமுதாயத்துறையில், அறிவுத் துறையில் எதிர்காலச் சமுதாயம் ஒரு முன்னேற்றமான சமுதாயமாக அமைவதற்குத் தகுந்த வாய்ப்புக் கூறுகளை முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

கேள்வி: “என்னைப் பொறுத்தவரை நாத்திகன். ஆனால், எங்கள் கட்சியைப் பொறுத்தவரை அத்தனைப் பேரையும் அவ்வாறாகக் கூறமுடியாது” என்று சென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டிலே நீங்கள் குறிப்பிட்டீர்கள். அரசியலோடு சமுதாயக் கொள்கையை முக்கியமாகக் கொண்டுள்ள ஒரு கட்சியில் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையில் ‘‘இத்தகைய இடைவெளி’ தேவைதானா? இந்த இடைவெளியைப் போக்கத் திட்டம் உள்ளதா?

பதில்: திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் சமுதாயப் புரட்சி இயக்கம் என்கின்ற அளவிலே நிறுவப்பட்டிருக்குமேயானால் நாத்திகப் பிரச்சாரத்தை நாங்களும் செய்து கொண்டிருக்க முடியும். இது ஒரு அரசியல் கட்சியாக இயங்க வேண்டும் என்கின்ற காரணத்தினால் நாங்கள் நாத்திகப் பிரச்சாரத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற அளவிற்கு பிரச்சாரம் செய்ய இயலாதவர்களாக இருக்கின்றோம்.

இனவுணர்வா? –நாத்திகமா?

உதாரணம் சொல்லவேண்டுமேயானால், பண்டிதர் ஜவஹர்லால் நேருகூட நாத்திகர்தான். ஆனால், காங்கிரஸ் கட்சி அரசியல் கட்சி என்ற காரணத்தினால் நாத்திகக் கருத்தை அவரால் பரப்ப இயலவில்லை. பகவத்சிங் நாத்திகர்தான். அவரும் தன்னளவில் நாத்திகராக இருந்தாரேயல்லாமல் அதைப் பரப்பிட முனையவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் இனவுணர்வு பரவவேண்டும் என்பதிலே ஆழமான, அழுத்தமான எண்ணம் உடையவர்கள்.

இனவுணர்வா? நாத்திகமா? என்ற வருகிற நேரத்தில் இனவுணர்வு அடிப்படையில் நாத்திகர், ஆத்திகர் என்ற வேறுபாட்டை நாம் பார்க்க முடியாது. மதுரை மடாதிபதி அவர்களை நாம் அப்படித்தான் பார்க்கின்றோம். அந்த இடத்தில் இனவுணர்வா, நாத்திகமா என்கின்ற கேள்வி எழுகின்றபொழுது முதலில் இனவுணர்வு! இனவுணர்வு என்ற அடித்தளம் சரியாக  அமைக்கப்படுமானால் அதன் பிறகு நம்மிடத்தில் உள்ள ஆத்திகர்களையும் பக்குவப்படுத்தி நாத்திகர்களாக மாற்றமுடியும்.

தமிழர்கள் ஏமாளிகளாக இருப்பது ஏன்?

கேள்வி: தமிழர்கள் ஏமாளிகளாகவே ஆகி விட்டதற்கு என்ன காரணமென்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்: தமிழர்களாக இருப்பதுதான் என்று கருதுகிறேன். (சிரிப்பு)

கேள்வி: தமிழர்களிடத்தில் இனமானமும், இனவுணர்வும் தழைத்தோங்க என்னென்ன காரியங்களை நாம் செய்ய வேண்டுமென்று தாங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்: தமிழர்களுடைய வரலாறு, மரபு, பண்பாடு, இலக்கியக் கருத்து இவைகளையெல்லாம் தமிழ் இளைஞர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

அத்தகைய கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள் நாள்தோறும் நடைபெற வேண்டும். மிகக் குறிப்பாக பல்வேறு ஜாதிகளாகப் பிளவுபட்டுக் கிடக்கின்ற தமிழ் சமுதாயத்தில்- முக்குலத்தோர், வன்னியர், முதலியார், செட்டியார் என்பது போன்ற பல்வேறு ஜாதிப் பிரிவுகளையெல்லாம் அகற்றி, எந்த ஜாதிக்காரராக இருந்தாலும் எல்லோரும் தமிழ் ஜாதிதான் என்கின்ற அந்த உணர்வை உருவாக்கவேண்டும்.

இந்த ஆட்சியைப் பற்றி…

கேள்வி: நிர்வாகச் சீர்கேடுகள் மிக மலிந்திருந்தும், மக்கள் வளர்ச்சித் திட்டம் என்பது இந்த ஆட்சியில் அறவே இல்லாத நிலையிலும்- மக்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அசைவற்ற நிலையில் இருப்பதாகத் தோற்றமளிக்கிறதே! இந்த நிலைக்குக் காரணமென்ன? இந்த நிலையை மாற்றிட நாம் என்ன செய்யவேண்டும்?

பதில்: இதை மக்களும் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதைப் பற்றி நாம் ஏன் வாய் திறக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். ஏனென்றால் வாய் திறந்தும் பயனில்லை; வாய்திறந்து பதில் சொல்வதற்கு ஆட்சியிலும் தலைவர்கள் இல்லை.

கேள்வி: திராவிடர் இயக்கம் ஒரு பக்கம் பிளவுபட்டுக் கிடப்பதோடு மட்டுமல்லாமல்- திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களாகச் சொல்லிக் கொள்பவர்களே- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கொள்கைகளுக்கு மாறாகத் திரிபுவாதம் பேசும் ஆபத்து தலைதூக்கி நிற்பதை முறியடிப்பதற்கு தாங்கள் கூறும் பரிந்துரைகள் என்ன?

பச்சைப் பாம்பும் – பச்சைக் கொடியும்!

பதில்: பல்வேறு நிகழ்ச்சிகளில் குறிப்பிட் டிருக்கிறேன். பச்சைப் பாம்பு, பச்சைக்கொடி இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் தமிழர்கள் ஏமாந்து போகிறார்கள். இரண்டும் பச்சையாக இருக்கிற காரணத்தால் வித்தியாசம் தெரியாது.

பெரியார், அண்ணா என்கின்ற பெயரை மாத்திரம் பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய கொள்கைகளைக் காற்றிலே பறக்கவிடுகிறார்கள்.

ஆனால், பெரியார், அண்ணா பெயர்களைத் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வைத்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு வீட்டிலே கொள்ளைக்காரன் புகுந்துவிடுகிறான், வீட்டுக்காரன் விழித்துக்கொண்டு துப்பாக்கியைத் தூக்குகிறான். அந்தக் கொள்ளைக்காரனோ ஏணையிலே தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு நிற்கிறான்.

கொள்கைக்காரன் எப்படி அந்தக் குழந்தையைக் காட்டி தப்பிக்கிறானோ, அதைப் போல தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியவரைப் பயன்படுத்தித் தப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கேள்வி: இந்தத் திரிபு வாதத்தைப் போக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்.

பதில்: நிலைமை ஒன்றும் முற்றவில்லை. அப்படிச் செய்கின்ற அமைச்சர்களுக்குத்தான் பைத்தியம் முற்றியிருக்கின்றது.

ஒற்றுமைக்கு உலை வைத்தது யார்?

கேள்வி: திராவிடர் இயக்கம் பிளவுபட்டதால் இன எதிரிகளும் தமிழர் அல்லாதாரும் ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை மாறவேண்டுமானால், திராவிடர் இயக்கம் ஒன்றுபட்ட சக்தியுடன் விளங்கத் தாங்கள் எடுக்க விரும்பும் முயற்சி என்ன?

பதில்: ஒன்றுபட்ட சக்தியாகத் திராவிடர் இயக்கம் ஆகவேண்டும் என்கின்ற முயற்சி எடுக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டில் அதற்கு நானும் ஒப்புக் கொண்டேன். பிஜுபட்நாயக்  எனப்படுகின்ற மத்திய அரசினுடைய அமைச்சர் அந்த முயற்சியிலே ஈடுபட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

அவர் என்னையும் அ.தி.மு.க.வின் தலைவர் எம்.ஜி.ஆரையும் சந்தித்து இரண்டு கட்சிகளும் இணைந்து உடன்பாடு கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்.

நான் அப்போது அவரிடத்திலே சொன்னேன்

(1) எம்.ஜி.ஆரே முதலமைச்சராக நீடிக்கட்டும்.

(2) கட்சியினுடைய தலைவர், பொதுச் செயலாளர் யார் என்பதைப் பிறகு பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.

(3) எங்களுடைய ஆட்சி எம்.எல்.ஏக்கள் யாருக்கும் அமைச்சர் பதவி தேவையில்லை.

(4) 9 ஆயிரம் ரூபாய் வருமான உச்சவரம்பு பிற்பட்ட சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீட்டில்
எம்.ஜி.ஆர். அரசு கொண்டு வந்ததை நீக்கவேண்டும். (5) கொடியிலே அண்ணா படம் போட்டிருப்பதும் அப்படியே இருக்கட்டும்.

(6) அண்ணா ஆரம்பித்த பெயரான தி.மு.க.வை ஏற்றுக்கொள்ளட்டும்.

இவைகளை பிஜுபட்நாயக் கேட்டுக்கொண்டு எம்.ஜி.ஆரையும் அழைத்து இரண்டு பேரையும் நேராக வைத்துப்பேசி இருவரும் ஒப்புக்கொண்ட பிறகு- அன்று மாலையே வேலூர் பொதுக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். நான் இவைகளையெல்லாம் ஒப்புக்கொள்ளவில்லையென்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.

அது அந்தக் காலத்தில்! இப்போது சேர்வது பற்றி வாய்ப்புக் கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், அவர்கள் மிக மிகப் பின்னோக்கிப் போய்விட்டார்கள். திராவிடர் இயக்கத்தை விட்டு, பெரியார், அண்ணா கொள்கைகளை விட்டு மிகவும் பின்னோக்கிப் போய்விட்டார்கள்.

இனி அவர்களோடு சேர்ந்ததுதான் திராவிடர் இயக்கம் என்று கூறுவது சற்றும் பொருத்தமில்லாதது.

பார்ப்பனர் எதிர்ப்பு ஏன்?

கேள்வி: ஒரு குறிப்பிட்ட இனத்தின்மீது கொண்ட வெறுப்பாகக் கட்டப்பட்டதுதான் பெரியார் இயக்கம் என்று தங்களை முற்போக்குவாதிகள் என்று கூறிக் கொள்கின்ற அமைப்பைச் சேர்ந்தவர்களே சொல்வது பற்றி தங்கள் கருத்தென்ன?

பதில்: அது தவறு. ஒரு குறிப்பிட்ட இனம் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட இனத்தின் மீது வெறுப்புக் காட்டுகின்ற காரணத்தினாலேதான் இந்த இயக்கமே உருவாயிற்று.

கேள்வி: ஈழத்தமிழர் பிரச்சினைக்கு இறுதித் தீர்ப்பு என்று எதைக் கருதுகின்றீர்கள்?

பதில்: ‘தனித்தமிழ் ஈழம்’ ஒன்றுதான் இறுதித் தீர்ப்பாக இருக்க முடியும். இடைக் காலத்தில் ஏற்படுகின்ற எந்த முடிவும் தற்காலிகமான முடிவாகத்தான் இருக்கக் கூடும்.

ஆங்கில ஏடு துவக்கப்படுமா?

கேள்வி: 1971இல் பொதுத் தேர்தல் முடிவுற்ற சமயத்தில் பார்ப்பனரல்லாதார் நலக் கண்ணோட்டத்தில் ஆங்கில நாளேடு துவக்கப்பட வேண்டுமென்று தந்தை பெரியாரவர்கள் பெரிதும் அக்கறை செலுத்தினார்கள்.

அந்தச் சந்தர்ப்பத்திலே, அத்தகைய ஏடு ஒன்று துவக்கப்படுவதற்கு தாங்களும் ஆர்வம் காட்டினீர்கள். ஆனால் இதுவரையில் அத்தகைய ஏடு துவக்கப்படவில்லை. இனியேனும் துவக்கப்படுவதறகு முயற்சி எடுக்கப்படுமா?

பதில்: இந்தியாவினுடைய இன்றைய நிலை என்ன வென்றால் மிகப்பெரிய முதலாளிகளால் நடத்தப்படுகின்ற பத்திரிகைகள்தான் வியாபாரி ரீதியாக இலாபகரமாக நடத்தப்பட முடிகின்றது. சிறு பத்திரிகைகள்- கொள்கைரீதியாக நடத்தப் படுகின்ற இந்தப் பத்திரிகைகள்- இலாபம் அடைய முடியாவிட்டாலும், நட்டத்திலேயே நடடத்தப்பட வேண்டியுள்ளது. கொள்கை ரீதியாக நடத்தப்படும் பத்திரிகைகளை ஒழித்துவிட வேண்டும் என்பதற்காகவே பத்தரிகைக் காகித விலையை அடிக்கடி ஏற்றி விடுகிறார்கள். இந்தக் காரணத்தால் தமிழ் பத்திரிகைகளை நடத்துவதே இந்தக் காலத்தில் பெரிய கடினமான காரியமாக இருந்து வருகின்றது. ஆங்கிலப் பத்திரிகைகளை நடத்துவது இயலாததாக இருக்கின்றது. அதனால் நாம் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டோம் என்று பொருளல்ல. தக்கவர்களோடு கலந்து பேசி முயற்சிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பெரியார் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகம் எப்படி?

கேள்வி: தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகமே இருக்காது என்று கணக்குப் போட்டவர்களும் ஆருடம் கூறியவர்களும் உண்டு.இன்று திராவிடர் கழகத்தினுடைய செயல்பாடுகள் பற்றி தங்களுடைய மதிப்பீடு என்ன?

பதில்: ஆருடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதுபோலவே இந்த ஆருடமும் பொய்த்துவிட்டது. அதற்கு அடையாளமாக தந்தை பெரியாரவர்கள் விட்டுச் சென்ற கொள்கைகளை அவர்களது மறைவிற்குப் பிறகும் தளபதி வீரமணி அவர்கள் செம்மையாகச் செயல்படுத்திவருகிறார். எனது இளவல் தளபதி வீரமணி தமக்கே உரித்தான ஊக்கம், உழைப்பு, விடாமுயற்சி, தியாகம், பிரச்சினைகளில் தீவிரமாக ஈடுபடும் துடிப்பு, இவற்றுடன் எழுச்சியாக அவர் செயல்பட்டு வருகின்ற காரணத்தால் தந்தை பெரியார் அவர்களின் இலட்சியங்களை தளபதி வீரமணி நிறைவேற்றித் தீருவார் என்பதிலே எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

தமிழ் மக்களுக்கு வேண்டுகோள்

கேள்வி: தந்தை பெரியாரின் 107ஆவது ஆண்டு பிறந்தநாளிலும், விடுதலைப் பொன்விழா ஆண்டிலும், “அறிஞர் அண்ணாவினுடைய பிறந்த நாளிலும் தமிழினப் பெருமக்களுக்குத் தங்களுடைய வேண்டுகோள் யாது?

பதில்: தந்தை பெரியாருடைய 107ஆவது ஆண்டு பிறந்த நாளில் ‘பெரியாரைத் துணைக்கொளல்’ என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றை நினைவுபடுத்தவேண்டும்.

‘விடுதலை’ இதழின் பொன்விழாவில் ‘தனித்தமிழ் ஈழம் விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வினை கூட்டுவோம்.

அண்ணா பிறந்தநாள் விழாவில் அண்ணா வழியில்.

கேள்வி கேட்பவர்: மிக்க நன்றி!

கலைஞர்: நன்றி!

பேட்டி கண்ட நாள்: 26.8.1985

பேட்டி கண்டவர்: கவிஞர் கலி.பூங்குன்றன். உடன் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் இருந்தார்கள்.

இடம்: சென்னை கோபாலபுரம் – கலைஞர் இல்லம்.

-விடுதலை நாளேடு, 2.6.25