இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவர்
பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் புகழைக் குறைக்கும் ஆரிய முயற்சி!
தவறான தகவல் பரப்பும் ‘விஷமச் செடியை’ முளையிலேயே கெல்லி எறியவேண்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவர் பாபா சாகேப் டாக்டர்
பி.ஆர்.அம்பேத்கரின் புகழைக் குறைக்கும் ஆரிய முயற்சி – தவறான தகவல் பரப்பும் விஷமச் செடியை முளையிலேயே கெல்லி எறியவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
புரட்சியாளர் பி.ஆர்.அம்பேத்கரின் ஆற்றல் உலகப் புகழ் பெற்றதாகும்!
இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக பிரபல சட்ட மேதை, புரட்சியாளர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களது ஒப்புவமையற்ற ஒத்து ழைப்பிலும், சட்ட அறிவாலும், குழுவில் உள்ள பலரது கருத்துகளை அலட்சியம் செய்யாமலும், அவற்ைற உள்வாங்கியும், தனது லட்சியங்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாத வண்ணமும், ஒரு சர்க்கஸ் வித்தை வித்தகர் புலி வாயில் தலையை விட்டு மீளுதல், கூண்டுக்குள் விரைந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் மூலம் மக்களை வியக்க வைக்கும் திறனாளியாக இருப்பதுபோன்று செயல்பட்டு, அவருக்கு வரைவுக் குழுவில் இருந்த உயர்ஜாதி உணர்வாளர்கள் முதல் பல் வகையாளர்களின் எதிர்ப்பு இருந்த நிலையிலும், அவர் ஆற்றிய பணியின் சிறப்பு, ஆற்றல் உலகப் புகழ் பெற்றதாகும்!
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் புகழ் உலகளாவி, வரலாற்றில் வைர வரிகளாக ஓளிவீசுகின்ற நிலையில், பொறுக்குமா ஆரியம்?
‘அணைத்து அழிக்கும்’ மகா வித்தையாளர்களின் ‘விதைக்காது விளையும் கழனி’ அல்லவா ஆரியம் – அண்ணா சொன்னதுபோல!
பி.என்.ராவ் அய்.சி.எஸ்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம்பற்றிய விளக்கக் குறிப்புரையாளர் (Commentators) என்ற பெயரில், வியாக்கியானம் செய்வோர் சிலர், புதுவகைப் பிரச்சா ரத்தினைச் செய்து அம்பேத்கர் புகழை மறைக்க, ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை அவர் எழுதி முடிக்கவில்லை. அதற்கு முன்பே, பி.என்.ராவ்
அய்.சி.எஸ். (இவர் கொங்கணி மொழி பேசும் சரஸ்வதி பார்ப்பனர் என்பது குறிப்பிடத்தக்கது) என்ற சட்ட நிபுணர்; அரசியலமைப்புச் சட்ட வரைவு ஆலோசகராக பிரிட்டிஷ் அரசுக் காலத்திலேயே 1946 இல் நியமிக்கப்பட்டு, அதனைத் தயாரிக்கும் பணியை ஏற்றுச் செய்தார்’’ என்று தொடங்கி, இந்த விஷமப் பிரச்சாரத்திற்கு சன்னமான முறையில் தொடக்கம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சட்ட நிபுணர் பி.என்.ராவ் (பெனகல் நரசிங் ராவ்) அவர்கள் சிவில் அதிகாரியாகத்தான் இந்திய அரசாங்கத்தில் பணிபுரிந்தவர்.
அவரிடம் அப்போது இந்தப் பணியை அந்நாளைய பிரிட்டிஷ் அரசு விட்டதற்கு முக்கிய காரணம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னோடியான 1935 சட்டம் (India Act of 1935) எழுதுவதற்கு அமைக்கப்பட்ட அலுவலகத்தில் அந்நாளில், உதவிய வர் என்பதால்தான்!
நாம் மறைக்கவோ,
மறுக்கவோ இல்லை!
அந்த அடிப்படையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு 1946 இல் அரசியல் நிர்ணய சபை மூலம் உருவாகும் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்கு மூளையாகப் பயன்படும் ஒரு வரைவை (Working Draft) தயாரித்துக் கொடுத்தார் என்பதை நாம் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை. அது ஒரு பொதுக் குறிப்பான வரைவு (Rough Draft).
ஆனால், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அதற்கு தமது ஆளுமை, ஆற்றல்மூலம் சதை, ரத்தம் எல்லாம் தந்து, அதில் அரசியல் உரிமைகளை மக்கள் தங்களுக்குத் தாங்களே தந்து, நாட்டின் மக்களாட்சி, இறையாண்மை மக்களிடையே உள்ளது என்பதையும், சமதர்ம ஆட்சி யாக, ஜனநாயகக் குடியரசாகவே நீடிக்கும் என்றும் பதிவு செய்து, பீடிகை என்ற முகப்புரையைச் (Preamble) சிறந்த அடிக்கட்டுமானமாக்கிவிட்டார்!
நாடாளுமன்றத்தில்
பதிவும் செய்துள்ளார்!
அவர் முழுச் சுதந்திரத்துடன் இயங்க முடியாதபோது, இவற்றைச் சாதித்ததுபற்றியும், பலவற்றை அவர் செய்ய எண்ணியபோதும், முழுமையாக இயற்ற முடியாத நிலை இருந்ததைக் குறித்தும், நாடாளுமன்றத்திலேயே பிறகு 1954 இல் பதிவும் செய்துள்ளார்!
அவர் பி.என்.ராவ் அவர்களது பங்களிப்பைக் குறைக்கவோ, மறக்கவோ இல்லை. உரிய முறையில் அதனைக் குறிப்பிட்டு, அவரது உதவிக்குப் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
ஒரு புதுவகை விஷமப் பிரச்சாரத்தைத்
தொடங்கி உள்ளனர்
ஆனால், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை, ஏதோ அரசியலமைப்புச் சட்ட வரைவுப் பணியின் இடையில் வந்துவிட்டுச் செல்லும் ஒரு கதாபாத்தி ரம்போல சித்தரித்து, எல்லாமே பி.என்.ராவ்தான் செய்தார் என்று இப்போது ஒரு புதுவகை விஷமப் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளனர்.
இந்த விஷமச் செடியைச் (Disinformation), திட்ட மிட்டே பரப்பப்படும் பொய்த் தகவல் பரிமாற்றத்தினை முளையிலேயே கெல்லி எறிந்து, உண்மை வர லாற்றை உலகத்தாருக்கு எடுத்துரைப்பது முக்கிய பெருங்கட மையாகும்!
இதற்கு முக்கிய காரணி யார் என்பதை எவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
அரசியலமைப்புச் சட்டம் தேவைப்படும்போது
ஓர் அம்பேத்கர் தேவைப்படுகிறார்
ஒருமுறை, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரித்து முடித்த பிறகு, எப்படி ‘அரசியல் கறிவேப்பிலை’யாக்கப்படும் வேதனைப்படும் நிலை தனக்கு ஏற்பட்டது என்பதை மிகுந்த விரக்தி கலந்த வருத்தத்துடன்,
‘‘இந்த நாட்டில் ஒரே ஒரு கூட்டம் அறவே தங்களது ஏகபோகத்தைக் காட்டினாலும்கூட, அவர்களுக்கு ஒரு பாரதம் தேவைப்படும்போது, வியாசர்தான் (அவர்களால் கீழ்ஜாதி என்று கூறப்பட்ட) தேவைப்பட்டார். அதே போல, இராமாயணம் தேவைப்பட்டது. வால்மீகி என்ற வேடர் தேவைப்பட்டார். அரசியலமைப்புச் சட்டம் தேவைப்படும்போது ஓர் அம்பேத்கர் தேவைப்படுகிறார்’’ என்றார்.
‘‘என்றாலும், அறிவுடைமை தங்களுக்குத்தான் என்று கூறுகிறார்களே’’ என மனம் நொந்து, வெந்து கூறியதை மறக்க முடியுமா?
பாதுகாப்பு அரணைப் பலப்படுத்த முன்வரவேண்டும்!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் பணியில் மிகக் கடுமையாக உழைப்பை வழங்கியதன் காரணமாகத் தன் உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ளும் அளவிற்கு உழைத்தவரைத்தான், இன்று குறைத்து மதிப்பிடத் துணிகிறார்கள். அதுதானே ஆரியத்தின் வழமை!
உலகப் புகழ் பெறுகிறார் – ஆனால், உள்ளூரில் ஆரிய இருட்டடிப்புக்கு ஆளாகினார். ஒப்புக்கு முக படாம் காட்டி, வாக்கு வங்கிக்கான ஒரு தலை என்பது போலக் காட்டினார்கள். அவரது புகழை, பெருமையை மெதுவாகப் பெயர்த்தெடுக்கத் தொடங்கி விட்டனர் என்பதை அனைவரும் புரிந்து, பாதுகாப்பு அரணைப் பலப்படுத்த முன்வரவேண்டும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.10.2025
குறிப்பு: இதுகுறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சஞ்சய் ெஹக்டே அவர்கள் விரிவான விளக்கங்களுடன் ‘ஹிந்து’ ஆங்கில நாளேட்டின் (17.10.2025) நடுப்பக்கத்தில் எழுதிய ஓர் அருமையான கட்டுரையின் தமிழாக்கத்தை, 3 ஆம் பக்கத்தில் படிக்கவும்.
3 ஆம் பக்கம்
அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு பிற்போக்கு திரிபுவாதம்
– சஞ்சய் ஹெக்டே
(உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்)
இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருபவர் பாபா சாகேப் அம்பேத்கர். அவரால் தான் அது உருவக்கப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவு. ஆனால் ஏதேனும் ஒரு பிரச்சினையைக் கிளப்பியே ஆக வேண்டும் என்று துடிக்கும் சிலர் அம்பேத்கர் அதை உருவாக்கவில்லை – சர் பெனகல் நரசிங் ராவ் என்ற அதிகாரிதான் அதை உருவாக்கியவர் என்று விதண்டாவாதம் செய்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவருக்கு அந்தப் பெருமை கிடைத்ததை பொறுத்துக் கொள்வார்களா இவர்கள்? வரலாற்றைத் திரிக்கவும், திருத்தவும் புதிதாக சிலவற்றை அதில் திணிக்கவும் துடிப்பவர்கள் இவர்கள்.
உண்மையில் நடந்தது என்ன?
ஓர் ஓவியத்திற்கான வடிவத்தை திரு.பி.என்.ராவ் அமைத்துத் தந்தார். ஆனால் அதை அழகுற வரைந்து எழிலோவியமாக மாற்றியவர் அம்பேத்கர். ஒரு திறன்மிக்க பொறியாளர் போல் கட்டிடத்திற்கான மாதிரி வரைப்படத்தை மட்டுமே பி.என்.ராவ் கொடுத்தார். கல் சுமந்து, மண் சுமந்து ஒவ்வொரு அங்குலமாக சீர்படுத்தி எழில் மிக்க மாபெரும் கட்டடமாக உருவாக்கும் பணியாளர்களைப்போல் அதை முழுமையாக்கி நமக்குத் தந்தவர் அம்பேத்கர்.
அரசமைப்புச் சட்டக் குழுவில் ஓர் ஆலோசகராக இருந்தவர் பி.என்.ராவ். அவர்தான் முழுக்க முழுக்க அரசமைப்புச் சட்டத்தைத் தயாரித்ததாகவும், அம்பேத்கர் ஆங்காங்கே சில திருத்தங்களை மட்டுமே செய்ததாகவும் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது. இந்தியாவின் அடித்தளமான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பெருமை தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துவிட்டதால் ஏற்படும் காழ்ப்புணர்வுதான் இது. அம்பேத்கரைச் சிறுமைப்படுத்தும் விஷமத்தனமான முயற்சி இது.
ஒன்றிணைந்த பணி – போட்டியிட்ட பணியல்ல
அரசியலமைப்புச் சட்டம் உருவானதில் இருவருக் குமே தவிர்க்கமுடியாத பங்களிப்பு இருந்துள்ளது. அவர்கள் செயலாற்றிய விதம் மட்டுமே வெவ்வேறாக இருந்தது. திரு.பி.என்.ராவ் அரசியலமைப்புச் சட்டக் குழுவின் ஆலோசகராக 1946 ஜூலையில் நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ‘இந்திய அரசுச் சட்டம் 1935’ – தயாரிப்பில் உதவி புரிந்தவர் அவர். பதினொரு ஆண்டுகளுக்குப் பின் 1946இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் பணியில் அவருடைய ஆற்றலும், அறிவும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களைத் தெரிந்து கொண்டு தரவுகளைச் சேகரித்து வைத்திருந்தார் அவர். எனவே முதல் கட்டப் பணியில் அவர் ஓர் ஆலோசகராக மட்டுமே இருந்து தொடக்கப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். 1947 அக்டோபரில் பி.என். ராவ் தன் அறிக்கையைச் சமர்ப்பித்தார். 243 பிரிவுகளும் 13 பட்டியல்களும் அதில் இருந்தன. அவருடைய அறிக்கை அரசியலமைப்புச் சட்ட உருவாக்கப் பணியை தொடக்கி வைத்தது என்று மட்டும் சொல்லலாம். அந்தக் குழுவில் அவர் உறுப்பினராக இருக்கவில்லை. ஆலோசகராக மட்டுமே இருந்தார். ஒரு சட்ட வல்லுநர் என்ற வகையில் மட்டுமே அவர் சேர்க்கப்பட்டிருந்தார். எவருக்கும் எதற்கும் அவர் பிரதிநிதித்துவம் வகிக்கவில்லை.
அம்பேத்கரின் பணி மாறுபட்டிருந்தது
வரைவுக் குழுவின் தலைவர் என்ற முறையில் சட்ட வரைவாக மட்டுமே இருந்த ஆவணத்தை ஓர் அரசியல் உடன்படிக்கையாக (covenant) மாற்றவேண்டிய பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நாடு பிரிக்கப்பட்டு கொந்தளிப்பு ஏற்பட்டிருந்த காலக்கட்டம் அது. காந்தியார் கொல்லப்பட்டதால் நாடே புரட்டிப் போடப்பட்டிருந்த பரபரப்பான சூழ்நிலை. அப்படிப்பட்ட கலவரங்கள் பெருகிய ஒரு காலக்கட்டத்தில், அம்பேத்கர் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுச் சட்டப்பிரிவுகளையும், விதிகளையும் உன்னிப்பாகக் கவனித்து எழுதிக் கொண்டிருந்தார். விவரிக்க இயலாத பணிச்சுமை அது. எளிதான காரியமே அல்ல அது. எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளும்படியும் எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையிலும் இருக்கும்படி அரசியலமைப்புச் சட்டத்தை மிகவும் கவனமாக உருவாக்கினார் அவர்.
புள்ளிகளை மட்டுமே வைத்துவிட்டுப் போனவர் பி.என். ராவ். அவற்றைக் கொண்டு கண்கவரும் கோலத்தை வரைந்தவர் அம்பேத்கர். ஓர் உருவத்திற்கேற்ற ஆளுயரப் பளிங்குக் கல்லை வைத்துவிட்டு அவர் நகர்ந்து விட்டார். வியர்வை சிந்தி, உளி பிடித்துச் செதுக்கி ஓர் அழகுச் சிலையை உருவாக்கிய சிற்பி போல் அல்லவா அம்பேத்கர், பி.என்.ராவின் வடிவத்திற்கு உயிர் கொடுத்து அரசியலமைப்புச் சட்ட உயிரோவியத்தை இந்தியக் குடியரசுக்கு அளித்தார்? பெருமைக்குரியவர் அவரல்லவா? அவரை நாம் பெருமைப்படுவதால் பி.என். ராவைச் சிறுமைப்படுத்துவதாக ஒரு நாளும் ஆகிவிடாது. இருவருமே போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து நமக்கில்லை.
நீதியை நிலைநாட்டும் கருவியாக அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் மாற்றியமைத்தார். பி.என்.ராவ் அழகான கட்டமைப்புச் சட்டம் தந்தார். அதற்குள் அற்புதமான ஒரு சித்திரத்தைப் பொருத்தியவர் அம்பேத்கர் அல்லவா? வெறும் கல்லாக இருந்ததை அற்புதச் சிலையாகச் செதுக்கிய சிற்பியல்லவா அவர்?
பி.என்.ராவின் பங்களிப்பை அம்பேத்கர் ஒரு நாளும் மறுத்ததில்லை. பி.என்.ராவும் அது முழுக்க முழுக்க தன் சாதனைதான் என்று என்றுமே பெருமைப்பட்டுக் கொண்டதில்லை. தேவையின்றி, சம்பந்தமில்லாத சிலர் உள்நோக்கத்துடன் வரலாற்றைத் திரித்துக் கொண்டிருக் கிறார்கள் என்பதே உண்மை. ஓர் அரசியல் சார்ந்த உள்நோக்கம் கொண்ட விஷமம் இது.
1949 நவம்பர் 25 ஆம் நாளன்று தனக்கு அளிக்கப்பட்ட பணிப் பொறுப்பினை நிறைவு செய்து அம்பேத்கர் அரசமைப்புச் சட்டக்குழு கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்:
“இந்தப் பணி முழுக்க முழுக்க என் சாதனை அல்ல. இதில் ஒரு பகுதி பி.என்.ராவுடையது. அவர் அளித்த வரைபடத்தை வைத்து நான் என் பணியை முடித்துள்ளேன். 141 நாட்கள் என்னுடன் உழைத்த வரைவுக்குழு உறுப்பினர்களுக்கும் இதில் பங்கு உண்டு. பேருதவி புரிந்த எஸ்.என்.முகர்ஜி அவர்களும் போற்றுதலுக்குரியவர்.”
அம்பேத்கரால் முழுமை பெற்ற அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னடக்கம் நிறைந்த பி.என்.ராவ் “இது என் சாதனை” என்று சொன்னதாக எந்தச் சான்றும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. “அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை” என்று பி.என்.ராவை இன்று சிலர் போற்றுவது வரலாற்றுப் பிற்போக்கான திரிபு மட்டுமல்ல; பி.என்.ராவின் தன்னடக்கத்தையே இழிவுபடுத்தும் செயலும் ஆகும் என்றால் அது மிகையாகாது.
அரசியல் நோக்கம்:
அரசியலமைப்புச் சட்டம் வெறும் ஒரு சட்ட ரீதியான ஆவணம் மட்டுமல்ல, சமூக அறிக்கையுமாகும். தனி மனிதனின் சுயமரியாதையை அங்கீகரிக்கும் ஆவணம் அது. பல போராட்டங்களிலிருந்து உருவான ஆவணம் அது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், அதிகாரப் பங்களிப்பு உறுதி செய்யப்பட்ட வேண்டும் என்று முழங்கும் சங்கு அந்த ஆவணம்! அம்பேத்கரை அதிலிருந்து பிரித்துப் போடுவது அதன் உயிரோட்டத்தையே அழிப்பதற்குச் சமமான இழிச்செயலாகும்.
அம்பேத்கரை அரசியலமைப்புச் சட்டக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் பரிந்துரைத்தவர் காந்தியார்தான். அவர்களுக்கிடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டக்குழுவில் பங்குபெற்றே ஆகவேண்டும் என்பதில் காந்தியார் உறுதியாக இருந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு இல்லாமல் உருவாக்கப்படும் எந்த அரசியலமைப்புச் சட்டமும் ஏற்புடையதாகாது என்றாராம் காந்தியார். அவருடைய இந்த முன்யோசனை நற்பயன் விளைவித்தது.
1947இல் மதவெறிப் போராட்டங்களால் நாடே பிளவுப்பட்டுக் கிடந்த காலக்கட்டத்தில் இந்த அரசியலமைப்புச் சட்ட உருவாக்கப் பணியில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அம்பேத்கர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் ஒரு நன்மைக்கே! அவர் தவிர்க்கப்பட்டிருந்தால் நாட்டில் மேலும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கக்கூடும். அம்பேத்கரை அந்தக் குழுவில் சேர்த்ததால் காந்தியார் அதை முன்யோசனையுடன் தவிர்த்தார் என்றே கூறலாம். இல்லாவிட்டால் குடிஅரசின் துவக்கமே பாதிக்கப்பட்டிருக்கும். அம்பேத்கரின் சிறந்த பங்களிப்பால் நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டது. அவரால் உருவாகி முடிந்த அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டபின் அமைதி ஏற்பட்டு நாடு ஒன்றுபட்டது.
பி.என்.ராவ் வடிவமைத்த சட்டத்திற்கு ஒரு தார்மீக அலங்காரம் தந்தார் அம்பேத்கர். அடிப்படை உரிமைகள் சார்ந்த சட்டப்பிரிவுகளுக்கு அவரே நன்றிக்குரியவர். பல கோட்பாடுகளும், விதிமுறைகளும் அம்பேத்கரின் அறிவால் பதிவு செய்யப்பட்டவை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு உரிமைகள் யாவுமே அவருடைய அறிவாற்றலிலிருந்து பிறந்தவை. அவருடைய உரைகள் அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு நிரந்தர தார்மீகத் தத்துவமாகவே மாற்றி விட்டன.
சமூகச் சமத்துவமும், பொருளாதாரச் சமத்துவமும் இல்லாவிட்டால் வெறும் அரசியல் சமத்துவத்தால் எந்தப் பயனும் இல்லை என்று எச்சரித்தவர் அம்பேத்கர்.
“எத்தனை காலம்தான் நாம் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவத்தை மக்களுக்கு அளிக்காமல் இருக்க முடியும்? சமூகத்திலும், பொருளாதாரத்திலும் சமத்துவம் ஏற்படுத்த நாம் தவறினால் அரசியல் ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்பட்டு விடும்” என்று எச்சரித்தார் அம்பேத்கர்.
இந்த முரண்பாடு விரைவில் நீங்க வேண்டும் என்றார் அவர். இதை நாம் நீக்கத் தவறினால் சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொதித்தெழுந்து அரசியல் ஜனநாயகத்தையே தரைமட்டமாக்கி விடுவார்கள் என்றும் கூறினார் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில் இன்றும் அம்பேத்கரின் மேற்கண்ட எச்சரிக்கைகள் வலிமைமிக்க தார்மீக அறிக்கைகளாக நிலைத்துள்ளன.
மறதியின் ஆபத்து
ஒவ்வொரு குடியரசும் கடந்த கால நிகழ்வுகளை மறக்காமல் இருக்க வேண்டும். மறதி என்பதே அபாயகரமான ஒன்று. அம்பேத்கருக்கு மேல் பி.என்.ராவை உயர்த்திப் பிடித்துக் காட்டுவது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே முரணான செயல். ஜாதி பாகுபாட்டை எதிர்க்கும் அரசியலமைப்புச் சட்டத்தையே அது சிறுமைப்படுத்தும் செயலாகி விடும். அம்பேத்கரைக் கவுரவிப்பது பி.என்.ராவை குறைத்து மதிப்பிடுவதாகி விடாது. இருவருமே குடியரசுக்காக மனசாட்சிக்கு விரோதமின்றி பணியாற்றியவர்கள்.
அரசியலமைப்புச் சட்டம் வெறும் ஒரு சட்டப் புத்தகம் போன்றதல்ல. அது தேசிய நோக்கம் உள்ள ஓர் உன்னத அறிக்கை. ஒரு சட்ட வல்லுநரின் அறிவுக் கூர்மையும், ஆற்றலும் அதற்குத் தேவைப்பட்டது. ஒரு சீர்திருத்தவாதியின் கொள்கைப் பற்றும் அதற்குத் தேவைப்பட்டது. ஒன்றை பி.என்.ராவ் அளித்தார். மற்றொன்றை அம்பேத்கர் வழங்கினார்.
அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது நேரு, பட்டேல், ராஜேந்திர பிரசாத் உட்பட அனைவரும் அம்பேத்கரின் முக்கிய பங்களிப்பைப் போற்றிப் புகழ்ந்தனர். பி.என்.ராவின் பங்களிப்பையும் பாராட்டினர். பாரபட்சமான முறையில் எவரும் எதையும் கூறவில்லை. பி.என்.ராவ் சிறந்த ஆலோசகராக விளங்கினார். அம்பேத்கர் தார்மீக சட்டக் கட்டமைப்புக் கலைஞராக விளங்கினார். இருவருமே போற்றப்பட வேண்டியவர்கள். இருவருமே நன்றிக்குரியவர்கள். ஒரு பொறியாளர் போல் செயல்பட்டவர் பி.என்.ராவ். ஈடு இணையற்ற சட்டக்கலை கட்டமைப்பு நிபுணர் போல் பணியாற்றியவர் அம்பேத்கர். இதை எவரேனும் ஏற்க மறுத்தால் குடியரசையே ஏற்க மறுத்தது போலாகும்.
(திரு. சஞ்சய் ஹெக்டே அவர்கள் எழுதி ‘தி இந்து’ (17.10.2025) ஆங்கில நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் மய்யக்கருத்து)
நன்றி. ‘தி இந்து’ – 17.10.2025
மொழியாக்கம் : எம்.ஆர். மனோகர்.
- விடுதலை நாளேடு,20.10.25