செவ்வாய், 3 ஜூன், 2025

கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா

 

கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா மலரை தமிழர் தலைவர் வெளியிட்டார் : பேரக் குழந்தைகள் இயக்கத்திற்கு நன்கொடை

விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா மலரை அவருடைய பெயரன்கள், பெயர்த்திகளான வியன், அகரன், மகிழன், ஆருத்ரா, யாழினி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். மேலும் விழா மலரினை நடிகர் நாசர், விஜயா தாயன்பன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.   நிகழ்வின் மகிழ்வாக பெயரன்கள், பெயர்த்திகள் இணைந்து பெரியார் உலக நிதியாக ரூ.10,000த்தை வழங்கினர்.

சுயமரியாதைச் சுடரொளி’ பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழா

 

புதுமை இலக்கியத் தென்றல் 1042ஆவது சிறப்பு நிகழ்வு ‘சுயமரியாதைச் சுடரொளி’ பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழா

விடுதலை நாளேடு
தமிழ்நாடு

தமிழர் தலைவர்
பங்கேற்றுச் சிறப்புரை

சென்னை, மே 27 சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி. சபாபதி நூற்றாண்டு விழா நேற்று மாலை (26.5.2025)  சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

புதுமை இலக்கியத் தென்றல் 1042ஆவது நிகழ்வாக நடைெபற்ற இவ்விழாவில் அவ்வமைப்பின் தலைவர் பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் வரவேற்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இவ்விழாவிற் குத் தலைமை வகித்து உரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.

கழகத் துணைத் தலைவர் உரை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்க உரையில், புதுமை இலக்கியத் தென்றல் நடத்துகின்ற நிகழ்ச்சிகள் வரலாற்று முத்திரை பதிப்பவையாகும். அந்த வகையில் இந்த நூற்றாண்டு விழாவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

தொடக்கத்தில் பி. சபாபதி அஞ்சல் துறையில் போஸ்ட்மேனாகப்  பணி செய்தவர். ஒரு நாள் பணி முடித்துத் திரும்புகையில் தந்தை பெரியார் அவர்களது உரையைக்  கேட்டதால் சிந்தனை வளம் பெற்று இன்றைக்கு அவரது நூற்றாண்டு விழா நடத்துமளவுக்கு உறுதியான கொள்கையாளராக வாழ்ந்தவர். தந்தை பெரியாரது உரையை கேட்டால், படித்து வந்தால் அவர்கள் தெளிவுற்றவர்களாக மாறுவார்கள் என்பதற்கு சபாபதி  நல்ல உதாரணம் ஆவார்.

தமிழ்நாடு

கல்வியில் சிறந்தவர்கள்

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பார்கள். 5 பெண் மக்கள், 2 ஆண்கள் என அத்தனைப் பேரையும் உயர் கல்வி படிக்க வைத்து சிறந்தவர்களாக்கியப் பெருமைக்குரியவர். அவரது பேரப் பிள்ளைகள் உள்பட கல்வியில் சிறந்தவர்களாக  உள்ளனர். கல்வியறிவு ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பதை உணர்ந்தவர் சபாபதி. கல்விக் கண்ணைத் திறந்தவர் காமராசர் என்பதால்தான் அவரைத் தந்தை பெரியார் உயர்த்திப் பிடித்தார்.

பி.சபாபதி மறைவுக்குப் பின்பும்கூட அவரது வாழ்விணையர் இந்திராணி பெரியார் திடலுக்குத் தொடர்ந்து வந்தவர். தந்தை பெரியார் வழியில் நடந்ததால் வெற்றி பெற்ற குடும்பம் இந்தக் குடும்பம். அத்தகைய சிறப்புக்கு இந்திராணி அவர்களது சலியா உழைப்பும் முக்கிய காரணமாகும்.  தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடிப்படையில் வாழ்ந்து வழிகாட்டியாய், ஒளியாய்த் திகழுகின்ற கொள்கையாளருக்கு வீர வணக்கம் செலுத்துவோம் என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு

மிழர் தலைவர் சிறப்புரை

கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

சுயமரியதைச் சுடரொளி, எடுத்துக்காட்டான கொள்கை யாளர் சபாபதி அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் பிறந்தவர். காஞ்சிபுரம் என்றாலே நல்லதும் உள்ளது, கெட்டதும் உள்ளது. சங்கராச்சாரியார் களது புகலிடமாக உள்ள அதே காஞ்சிபுரத்தில்தான் அறிஞர் அண்ணா அவர்களும் பிறந்தார்கள்.

குறிக்கோளோடு வாழ்ந்தவர்

தந்தை பெரியாரது கொள்கைகளை ஏற்று வாழ்ந்த சபாபதி அவர்கள் குறிக்கோளோடு வாழ்ந்து – பிள்ளைகள் அனைவரையும் நல்ல முறையில் படிக்க வைத்து எடுத்துக்காட்டான  முறையில் வாழ்ந்தவர். பக்தர்களை எடுத்துக் கொண்டால் நீண்ட பல ஆண்டுகள் – 100ஆண்டுகள் வாழ்ந்தாலும்கூட ‘அவன் விட்ட வழி’ என்று கடவுளின்மீது பழி போட்டு தங்களது பொறுப்பினை உணராதவர்களாக இருப்பார்கள்.

சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து – பெரியார் கொள்கையை ஏற்று கெட்டுப் போனேன் என்று எவராலும் சொல்ல முடியுமா? தந்தைபெரியாரது தொண்டால் நேரடியாக – மறைமுகமாகப் பயன் பெறாத குடும்பம் என்று இந்தத் தமிழ்நாட்டில் எந்தவொரு குடும்பமாவது இருக்க முடியுமா?

திராவிட மாடல் ஆட்சியில்….

இன்றைக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பார்ப்பனர்கள்கூட பாதுகாப்போடு பத்திரமாக உள்ளார்கள். மகளிர் – பார்ப்பன பெண்கள் உள்பட  அனைவருக்கும் இந்த ஆட்சி  பாதுகாப்பாக உள்ளது. 50– 60 ஆண்டுகளுக்கு முன்பு தனித்தனியே இருந்த அக்கிரகாரங்களில் வெள்ளைச் சேலை அணிந்து – மொட்டைத் தலையோடு பார்ப்பனப் பெண்கள் ஏராளமாக இருந்ததுண்டு. இந்த சுயமரியாதை இயக்கத்தின்  வீரியமான பணிகளால் அந்த நிலை மாறியது. இன்றைக்கு ‘மொட்டைப் பாப்பாத்திகள்‘ எனப்பட்டவர்களைக் காண முடிகிறதா?

‘சாபம்’ குறித்துக் கலைஞர்

தருமபுரியில் தந்தை பெரியார் சிலை சிறப்பு விழா நடைபெற்றது. அறிஞர் அண்ணா அவர்கள் திறப்பதாக இருந்த சிலையை அவர் மறைவுற்றதால்– தான் திறக்க நேரிட்டதை நினைத்து மன நெகிழ்ச்சியோடு முதலமைச்சர் கலைஞர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உரையாற்றுகையில்,

‘நான் மாணவப் பருவத்தில் தந்தை பெரியார் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து பணியாற்றிய அந்தக் கால கட்டத்தில் பலரும் என்னைப் பார்த்து ‘நீ உருப்படுவியா’ என்று ‘சாபம்’ விட்டார்கள். ஆனால் இன்றைக்கு நான் உருப்பட்டிருக்கின்றேனா இல்லையா – என்பதை அவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்’’ என்று குறிப்பிட்டார்.

கொள்கைக் குடும்பமாக…

அதே போன்று கொள்கைக் குடும்பமாக, நல்லதொரு பல்கலைக் கழகமாக மேம்பட்டுத் திகழ்வது சபாபதி  அவர்களது குடும்பமாகும். தந்தை பெரியார் உரையைக் கேட்டது ஒன்றே அவரை சிந்தனையாளராக, சாதனையாளராக மாற்றியது. எழுதப் – படிக்கத் தெரியாத தம் வாழ்விணையர் இந்திராணி அவர்களுக்கு எழுதவும் – படிக்கவும் கற்றுக் கொடுத்தவர் சபாபதி அவர்கள்.

இன்னுஞ் சொல்வதென்றால், சபாபதியைவிட அதிகமாகப் பாராட்டப்பட வேண்டியவர் இந்திராணி அம்மையார் ஆவார். சபாபதி மறைவுக்குப் பின்பும் கூட, கழக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு, கழக ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று, போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர்.

ச. முகிலரசை இழந்த இந்தக் குடும்பத்தினர், தொடர் இழப்புக்கு ஆளான போதும்கூட அவற்றைத் தாங்கிக் கொண்டு அனைவருமே கொள்கைக் குடும்பத்தினராக வாழ்ந்து வருவது சிறப்புக்கும், பாராட்டுக்குமுரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது. பி. சபாபதியின் மகள் பொறியாளர் ச. இன்பக்கனிக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டுத் ெதரிவித்தார்.

பங்கேற்றோர்

இந்நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், மாநில கழக மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, மோகனா வீரமணி, பொதுக் குழு உறுப்பினர்கள் சி. வெற்றிச்செல்வி, தங்க. தனலட்சுமி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வட சென்னை மாவட்ட செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, மாநில கழக இளைஞரணி துணைச்செயலாளர் சோ. சுரேஷ், புதுமை இலக்கியத் தென்றல் நெறியாளர் புலவர் வெற்றியழகன், செயலாளர் வை. கலையரசன், பொருளாளர் மு. இரா. மாணிக்கம் மற்றும் பி. சபாபதி – இந்திராணி குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் அரங்கம் நிறைய பங்கேற்றனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

நிறைவாக பொறியாளர் ச. இன்பக்கனி நன்றி கூறினார்.

வெள்ளி, 16 மே, 2025

 

புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் அனைத்து ஆங்கில நூல்களிலும் சமஸ்கிருத– ஹிந்தி பெயர்கள்!

விடுதலை நாளேடு


பெங்களுரு, ஏப்.21 புதிய கல்வி கொள்கையில் கீழ் வரும் அனைத்து ஆங்கில நூல்களிலும் சமஸ்கிருத ஹிந்தி பெயர்கள்! பாரம்பரியத்தைக் காப்பதற்காக மாணவர்களுக்கு எளிதில் புரிவதற்காக இந்த முடிவாம்.

புதிய கல்விகொள்கையின் கீழ் இந்த ஆண்டு முதல் ஒன்றிய கல்வி அமைச்சரகம் ஒன்றிய அரசால் நடத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் பாடநூல்களை சமஸ்கிருத ஹிந்தி மயமாக்கி உள்ளது. அதிலும் ஆங்கிலத்தில் உள்ள சொற்களை தவிர்த்து ஹிந்தி சமஸ்கிருத சொற்களை ஆங்கிலத்தில் எழுதி உள்ளது,

சமஸ்கிருதத்தை ஹிந்தியைத் திணிக்கும் மோசமான நடவடிக்கை ஆகும், மேலும் தமிழ்நாட்டின் வழி காட்டுதலின் பேரில் பல மாநிலங்கள் மூன்று மொழிக் கொள்கையை எதிர்த்துப் போராடும் நேரத்தில் வெளிவந்துள்ளது.

ஹிந்தி அல்லாத மாநிலங்களில் ஹிந்தியை திணிக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

இதுவரை, ஒன்றிய அரசின் மொழி நூல்கள் எப்போதும் அதே மொழியில் தலைப்புகளைக் கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு வரை 6 மற்றும் 7ஆம் வகுப்புக்கான பழைய ஆங்கில பாடப்புத்தகங்கள் முறையே ஹனிசக்கிள் மற்றும் ஹனிகோம் என்று தலைப்பிடப்பட்டிருந்தன.

இரண்டு வகுப்புகளுக்கான புதிய ஆங்கில மொழி பாடப்புத்தகங்களின் தலைப்பு பூர்வி, இது ஹிந்தி சொல் “கிழக்கு” என்ற பொருளுடன், சமஸ்கிருத சொற்களில் வரும் ராகத்தில் ராகத்தின் பெயரும் ஆகும்.

1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கான ஆங்கில மொழி பாடப்புத்தகங்கள் மிருதங்க் என்றும், 3 மற்றும் 4ஆம் வகுப்புகளுக்கானவை சந்தூர் என்றும் மறுபெயரிடப்பட்டு உள்ளன. இரண்டுமே இசைக் கருவிகளின் பெயர்கள்.

கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி போன்ற பாடங்களுக்கு, முன்னணி பாடப்புத்தக தயாரிப்பு அமைப்பு தனது புத்தகங்களை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது பதிப்புகளில் வெளியிட்டது.

இதுதொடர்பாக ஒன்றிய கல்வி பாடநூல் தயாரிப்பு குழு வில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் கூறுகையில், இந்த புத்தகங்கள் பாரம்பரியமாக அவை வெளியிடப்பட்ட மொழிக்கு ஏற்ப ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் தலைப்புகளைக் கொண்டிருந்தன.

6ஆம் வகுப்புக்கான முந்தைய கணித புத்தகம் ஆங்கில பதிப்பிற்கு Mathematics என்றும், ஹிந்தி பதிப்பிற்கு Ganit என்றும், உருது பதிப்பிற்கு Riyazi என்றும் தலைப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், கடந்த ஆண்டு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு பதிப்புகளுக்கும் தலைப்பை கணித பிரகாஷ் என மாற்றியது.

அவர்கள் என்ன சாதிக்க விரும்பு கிறார்கள் என்பது தெளிவாக இல்லை’’ என்று ஓய்வுபெற்ற பேராசிரியர் கூறினார்.

6ஆம் வகுப்பு ஆங்கில மொழி பாடப்புத்தகத்தின் முன்னுரையில் அதன் இயக்குநர் தினேஷ் பிர சாத் சக்லானி மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி கபூர் போன்றோர் ‘‘புத்தகத்தைப் பற்றி’’ என்ற அறி முகப் பகுதி, ஏன் அது பூர்வி என்ற ஹிந்தி தலைப்பைக் கொண்டுள்ளது என்பது பற்றி குறிப்பிடவில்லை.

‘‘பூர்வி தனது உள்ளடக்கங்களில் இந்திய அறிவு அமைப்புகளின் பெரும் கருவூலத்திலிருந்து துணுக்குகளை, இந்தியாவின் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை இணைத்து, சுற்றுச்சூழல் உணர்திறன், பாலின சமத்துவம், டிஜிட்டல் திறன்கள் போன்ற மதிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது’’ என முன்னுரை கூறுகிறது. சில ஆங்கில வழி புத்தகங்கள் ஹிந்தி படையெடுப்பிலிருந்து விடு பட்டுள்ளன. 6ஆம் வகுப்புக்கான சயின்ஸ் என்ற அறிவியல் நூல்களின் பெயர்களும்  இப்போது கியூரி யாசிட்டி என்ற புதிய ஆங்கில தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது,

6ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறி வியல் பாடப்புத்தகத்தின் ஆங்கில பதிப்பு ‘‘எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியான்ட்’’ என்ற தலைப்புடன் வருகிறது, அதே நேரம் ஹிந்தி பதிப்பு ‘‘சமாஜ் கா அத்யயன்: பாரத் அவுர் உஸ்கே ஆகே’’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

2006இல் என்.சி.ஆர்.டி. பாடப்புத்தக மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக இருந்த டில்லி பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் அபூர்வானந்த், ஆங்கில மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு ஹிந்தி தலைப்புகளை வழங்கும் நடைமுறையை கேள்விக்குள்ளாக்கி னார்.

‘‘இது ஹிந்தி காலனியாதிக்கம். என்.சி.ஆர்.டி. இதை மிகவும் கீழ்த்தர மான முறையில் செய்கிறது,’’ என்று அவர் கூறினார். என்.சி.ஆர்.டி. தலைப்பு களை வழங்கும் விதம் தமிழ்நாட்டின் மொழி கொள்கைக்கான போராட்டம் சரியென நிரூபித்துள்ளது.

இது ஹிந்தி பேசாதமக்களுக்கு குறுக்கு வழியில் ஹிந்தியை திணிக்கிறது

அய்.என்.யூ.விலிருந்து ஓய்வு பெற்ற மொழியியல் பேராசிரியர் அன்விதா அப்பி கூறுகையில்: ‘‘ஒரு புத்தகத்தின் தலைப்பு அதன் உள்ளடக்கத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டும். பூர்வி அல்லது சந்தூர் போன்ற தலைப்புகள் ஏன் கொடுக்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை. கிழக்கு அல்லது சமஸ்கிருத ராகம் என்பதை ஆங்கில மொழிப்பாட நூலில் தலைப்பாக கொடுத்து என்ன கூறவருகிறார்கள்?’’

‘‘மேலும், கற்பித்தல் மொழி ஆங்கிலம் எனும்போது, தலைப்பு ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.’’

கணித பிரகாஷ் என்பதில் உள்ள ‘கணித’ போன்ற சில ஹிந்தி வார்த்தைகளின் சரியான உச்சரிப்புகளை ஆங்கில புத்தகங்க ளின் ஹிந்தி தலைப்புகள் ரோமன் எழுத்துமுறையில் எழுதப்பட்டுள்ளன. ‘‘ரோமன் எழுத்து முறை பல்  அண்ண ஒலி (dental nasal) மற்றும் பின்வளைவு அண்ண ஒலி (retroflex nasal) ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டுவதில்லை. இது  ‘ண’ (கணிதத்தில்) என்பதற்கு தவறான உச்சரிப்பை தருகிறது,” என்று அவர் கூறினார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு ஹிந்தி தலைப்பு களை வழங்குவதற்கான கார ணங்களை கேட்டு என்.சி.
ஆர்.டி. இயக்குநருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அவரது பதில் எதிர்பார்க்கப்படுகிறது. என்.சி.ஆர்.டி. 2020ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப 2023 முதல் புதிய பாடப்புத்தகங்களின் தொடரை வெளியிட்டு வருகிறது.

2023 இல் 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்த கங்களை வெளியிட்டது, 3 மற்றும் 6ஆம் வகுப்புகள் 2024இல் புதிய புத்தகங்களைப் பெற்றன. இப்போது 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான புதிய புத்த கங்களை வெளியிடுகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை முழுமையாக சமஸ்கி ருத ஹிந்தி மயமாக்கம் நடந்துள்ளது

எடுத்துகாட்டாக  குடும்பச் சங்கிலி (பரம்பரை) என்ற ஆங்கில நூலில் பர் தாதா, பர் தாதி, போத்தா, போத்தி, பர் போத்தா, பர்போத்தி, தாதா, தாதி, நானா நானி, என்று எழுதி பின்னர் பாதர் மதர் என்று பெயரளவிற்கு ஆங்கிலத்தில் பெயர் கொடுத்துள்ளது. பிறகு பேட்டா பேட்டி என்று மீண்டும் ஹிந்தியிலேயே கொடுத்துள்ளது.

மேலும் உடற்கல்வி ஆங்கில நூலுக்கு கேல் யோகா (விளையாட்டு யோகா) என்றும் தொழிற்கல்வி நூலான வெகேசனல் ஆங்கில பாடநூலுக்கு கவுசால் போத்(துடிப்பான கல்வி) என்று ஓவியம் இதர கைவினை கலைப்பொருள் தயாரிக்கும் பாட நூலிற்கு பன்சுரீ(புல்லாங்குழல்) என்றும் பெயர் வைத்துள்ளனர்

ஆங்கில நூல் முழுவதுமே ஹிந்தி மற்றும் சமஸ்கிருத சொற்கள் 60 விழுக்காடு ஹிந்தியிலேயே எழுதப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர்ப் பலகை தமிழ்நாடு எம்.பி.க்கள் கண்டனம் பலகை உடனடியாக அகற்றம்


விடுதலை நாளேடு


 சென்னை, ஏப்.23- ரயில்வே அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர் வைத்திருப்பதற்கு தமிழ்நாடு எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் 21.4.2025 அன்று, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட
எம்.பி.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை தாங்கினார். இதில்
எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி சோமு, சசிகாந்த் செந்தில், கதிர் ஆனந்த், கிரிராஜன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எம்.பி.க்கள், தங்கள் பகுதிகளில் ரயில்வே சார்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திட்டங்கள், புதிய திட்டப் பணிகள், பயணிகள் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பி பேசினார்கள். மேலும், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலகங்களுக்கு தமிழில் பெயர் வைக்காமல் ஹிந்தியில் பெயர் வைத்திருப்பது ஏன்? என்று கேட்டு அதற்கு தங்களது கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

கண்டனம்

பின்னர், டி.ஆர்.பாலு எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தாம்பரம் ரயில் நிலையம் ஒரு முனையமாக இருக்கிறது. ஆனாலும் அங்கு 7 விரைவு ரயில்கள் நிற்காமல் செல்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுத்து தாம்பரத்தில் ரயில்கள் நிறுத்தப்பட வேண்டும். அம்பத்தூர் ரயில் நிலையத்திலும் விரைவு ரயில்களை நிறுத்தி செல்ல வேண்டும். ரயில் ஓட்டுநர்களுக்கு என்ஜின் பகுதியிலேயே கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்.

வந்தே பாரத் ரயிலில் உள்ள சில குறைபாடுகளை தீர்ப்பதாக ஏற்கனவே ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் ஹிந்தியில் எழுதியிருக்கிறார்கள். இது கண்டனத்துக்குறியது.

இதை நேரடியாக கண்டித் துள்ளோம். ஆளுநருக்கு உச்சநீதி மன்றமே தீர்ப்பு கொடுத்தும் துணை வேந்தர்கள் மாநாடு நடத்துகிறார். நியாயமாக இருப்பவர்கள் இப்படி நிச்சயம் செய்ய மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் கட்டாயம்

தொடர்ந்து, தயாநிதி மாறன் எம்.பி. கூறுகையில், ‘தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர் இருப்பது தொடர் பிரச்சினையாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். எங்களின் கோரிக்கை மீது கண்டிப்பாக பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்’ என்றார்.

பெயர்ப் பலகை பார்த்து கொந்தளிப்பு

ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க. எம். பி. கிரிராஜன் வந்தார். அப்போது, நுழைவு வாயில் பகுதி யில் ‘சுலையா, சுபாஷ், சுபோஜ்’ என்று வார்த்தைகள் இடம்பெற்றபலகை இருந்தது.

தமிழில் பெயர் வைக்காமல் ஹிந்தியில் இருப்பதை கண்டு கிரிராஜன் கொந்தளித்தார். அதை அகற்றும்படி அறிவுறுத்தினார்.இதனால், அந்தபெயர் பலகை உடனடியாக அகற்றப்பட்டது. பின்னர், அந்தப் பெயர் பலகையை கிரிராஜன் தன்னுடன் எடுத்துச் சென்று ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கிடம் காண்பித்து கண்டனத்தை பதிவு செய்தார்.

இந்திய இராணுவத்திற்கு துணை நிற்கும் பேரணி


விடுதலை நாளேடு


தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இந்திய இராணுவத்திற்கு துணை நிற்கும் பேரணி, சென்னையிலுள்ள காவல் துறை  தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து காமராசர் சாலையில் உள்ள போர் நினைவுச்சின்னம் வரை நடைபெற்றது. இப்பேரணியில்,   திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  தலைவர் செல்வபெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன்,  நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி,  துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்,  நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல் துறை உயர் அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள், அனைத்து மத தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். (சென்னை, 10.5.2025)



வியாழன், 20 மார்ச், 2025

போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்


விடுதலை நாளேடு
தமிழ்நாடு

பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் 23.2.2025 அன்று பொள்ளாச்சி ரயில் நிலைய பல கையில் இருந்த ஹிந்தி எழுத்தை தி.மு.க. வினர் தார்பூசி அழித்தனர்.

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த ஒன்றிய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இருமொழிக் கொள்கையே தமிழ் நாட்டில் கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

திணிப்பு

இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதில் ஒன்றிய அரசு முழுமையாக ஈடுபட்டு வரு வதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கூட்டணி கட்சித் தலை வர்கள் பங்கேற்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் முழுவதும் வீடுகளுக்கு முன் ஹிந்தி எதிர்ப்பு வாசகம் மற்றும் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கோலமிட்டு பெண்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த விவகாரம் பேருரு எடுத்து வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் ஹிந்தி எழுத்தை தி.மு.க.வினர் தார்பூசி அழித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சட்டத்திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணி மாறன் தென்றல், மேனாள் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தனம் தங்கதுரை, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் அவினாஷ் கார்த்திக், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பைக் பாபு, ஸ்ரீரங்கன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராகவும், மும் மொழிக் கொள்கைக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

வெள்ளி, 7 மார்ச், 2025

ஹிந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்

விடுதலை நாளேடு

இந்தியா

புதுடில்லி, மார்ச் 7 தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழக்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹிந்தியை விட நடைமுறை பயன்கள் அதிகம் உள்ள ஆங்கிலம், இந்தியாவின் இணைப்பு மொழியாக நீடிக்கலாம் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த குளோபல் டேட்டா லேப் (Global Data Lab) என்னும் நிறுவனம், மொழிகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஹிந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் கூடுதல் மொழிகளைக் கற்க அதிக விருப்பம் உள்ளவர்களாக இருப்பதாகவும், அதே நேரத்தில் ஹிந்தி பேசுபவர்கள் கூடுதல் மொழியை கற்பதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991-இல் தமிழ்நாட்டில் 14.5 சதவீத மக்கள் தமிழுடன் கூடுதலாக ஒரு மொழியை பேசுபவர்களாக இருந்தனர் என்றும், இது 2011-ல் 22 சதவீதமாக அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல ஒடிசாவில், ஒடியா மொழியை மட்டும் பேசுபவர்களின் விகிதம் 86 சதவீதத்தில் இருந்து 74.5 சதவீதமாக குறைந்தது என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

திங்கள், 24 பிப்ரவரி, 2025

புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!

 புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!!

ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை!
திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!

இந்தியா

புதுடில்லி, பிப்.7 பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் 2024 & 2025 ஆண்டு வரைவு அறிக்கைகளை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என புதுடில்லியில் திமுக மாணவரணியினர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மாணவர் அமைப்புகளும், இந்தியா கூட்டணித் தலைவர்களும் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
மாநில சுயாட்சிக்கு எதிராக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கும் வகையிலும், கல்வியாளர்கள் அல்லாதோரையும் நியமிக்கும் வகையிலும் பல்கலைக்கழக மானியக்குழு வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஒன்றிய அரசின் கல்வி அமைச்சருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியிருந்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தும் வண்ணம் 6.2.2025 அன்று காலை 10 மணியளவில் புதுடில்லி யில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தி.மு.க. மாண வரணியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வுக்கு திமுக மாணவரணியின் மாநிலச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையேற்றார். திராவிட மாணவர் கழகம் (DSF), இந்திய மாணவர் சங்கம் (SFI), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), திராவிட மாணவர் கூட்டமைப்பு (SFD), சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI), இந்திய தேசியக் காங்கிரசின் மாணவர் அமைப்பு (NSUI), முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) போன்ற தமிழ்நாட்டில் உள்ள மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ராகுல்காந்தி கண்டன உரை!
ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு,
” “இந்திய நாட்டின் வரலாற்றை அழிப்பதே ஆர்.எஸ்.எஸ்.-இன் இலக்கு. அனைத்து மாநிலங்களின் மொழிகளும் இணைந்துதான் இந்தியா என்ற நாடு உருவாகிறது. 3000-4000 ஆண்டு வரலாற்றை கொண்டுள்ளனர் தமிழ் மக்கள். மாநிலத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழிக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் நோக்கம்.
அரசமைப்பை சிதைக்க முயற்சிக்கிறது மோடி அரசு. கல்வி நிலையங்களை ஆர்எஸ்எஸ் மயமாக மாற்ற ஒன்றிய அரசு முயற்சி மேற்கொள்கிறது. ஒரே நாடு, ஒரே மொழியை கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. பல மொழிகள் ஒன்றிணைந்ததுதான் நம் இந்திய தேசம்.. அனைத்து மாநிலங்களின் மொழி, கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்,”” என்று எடுத்துரைத்தார்.
புதுடில்லிக்கு வந்து போராடுவதற்கு முன்வந்த திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியைப் பாராட்டிய ராகுல், தமிழ்நாட்டைப் பின்பற்றி பிற மாநிலங்களிலிருந்தும், டில்லியை நோக்கி மாண வர்கள் திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
உத்தரப்பிரதேச மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், “இந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்காக மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆனது. மாநில உரிமைகளை பறிப்பதில் ஒன்றிய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். புதிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் திமுக உடன் சமாஜ்வாதி கட்சி ஆதரவாக இருக்கும்” என்று வலியுறுத்தினார்.

கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
முன்னதாக இந்நிகழ்வில் சி.பி.எம். ஜான்பிரிட்டோ, சி.பி.அய். செல்வராஜ், ராஷ்டிரிய ஜனதா தளம் மனோஜ்குமார் ஜா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கேரள சோசலிஸ்ட் பார்ட்டி பிரேமச்சந்திரன், திமுக மாநிலங்களவைத் தலை வர் திருச்சி சிவா, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற திமுக தலைவர் கனிமொழி கருணாநிதி, திமுக பொருளாளரும், மக்களவை திமுக தலைவருமான டி.ஆர்.பாலு, எம்.எம்.அப்துல்லா, ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு, முரசொலி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மலையரசன், தங்க தமிழ்ச்செல்வன், கே.இ.பிரகாஷ், டாக்டர் ராணி ஆகியோரும் மதிமுக துரை வைகோ, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக் தாகூர், விஜய் வசந்த் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திராவிட மாணவர் கழகம்
திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாணவர் கழகச் செயலாளர் செந்தூர்பாண்டியன், முகமது அப்ரிடி ஆகியோர் கலந்துகொண்டனர். திராவிட மாணவர் கூட்டமைப்பு-டில்லியின் சார்பில் இளையகுமார், விமல், அமீர், ரஞ்சித் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்நாசர், கோவை ரிது, சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் கோவை அம்ஜத் உள்ளிட்ட தோழர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆய்ஷே, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தேசியப் பொதுச் செயலாளர் தினேஷ் உள்ளிட்ட ஏராளமான முதன்மைப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவரின் வழிகாட்டுதல்!
திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கையின் நகல்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மேடையிலும் கூட்டத்திலும் விநியோகம் செய்யப்பட்டன. அதில் யுஜிசி மாநில அதிகாரத்தில் தலையிடுவது பற்றியும், தமிழ்நாடு முதலமைச்சர் மிகச்சரியான நடவடிக்கை எடுத்துள்ளதையும், எப்போதும் போல தமிழ்நாடு இதிலும் வழிகாட்டியாக இருப்பதையும் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து போராடினால் வெற்றி பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.


வியாழன், 30 ஜனவரி, 2025

இந்நாள் – அந்நாள் (30.1.1948) காந்தியார் படுகொலை தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சே!


திங்கள், 27 ஜனவரி, 2025

சி.பி.அய்.யிடம் வழக்கை ஒப்படைக்கக் கூறுவது சரியானதல்ல சாத்தான்குளம் வழக்கு 5 ஆண்டுகள் ஆகியும் முடிவுக்கு வந்ததா?



விடுதலை நாளேடு
Published January 26, 2025
ஆசிரியர் அறிக்கை

வேங்கை வயல் பிரச்சினையில் தமிழ்நாடு காவல்துறை தொழில் நுட்ப முறைகளை எல்லாம் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிந்துள்ளது
மிக நுட்பமான – மக்களிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் அரசியலாக்கிக் குளிர்காயக் கூடாது
அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளியாக்க வேண்டாம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

வேங்கைவயல் தொடர்பான பிரச்சினையில் தமிழ்நாடு காவல்துறை அனைத்துத் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி முறையாகப் புலனாய்வு செய்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதனை அரசியலாக்குவது உகந்ததல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல் நிலைக் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு 2022 டிசம்பரில் கலக்கப்பட்டதான கடைந்தெடுத்த இழிசெயல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்தப் பிரச்சினையை மய்யமாக வைத்து வதந்திகளைப் பரப்பிட வேண்டாம் என்றும், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும் தமிழ்நாடு அரசு கீழ்க்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளது.

வேங்கைவயல் சம்பவம்: வதந்திகளைப் பரப்பிட வேண்டாம்!
தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
‘‘புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன. இக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிப் பார்த்ததில், மேல்நிலை நீர்த்தேக்க நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளானூர் காவல் நிலைய Cr.No.239/2022-இல் 26.12.2022 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டின் தீவிரத்தையும், சமூக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் இவ்வழக்கின் புலன் விசாரணையை 14.01.2023 அன்று தமிழ்நாடு குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றினார். அதைத் தொடர்ந்து, கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை புலனாய்வு அதிகாரியாக நியமித்து, புதுக்கோட்டை குற்ற எண்.01/2023-இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதோடு, ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதைத் தவிர, பல நபர்களின் அலைபேசி எண்கள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப் பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டது. மேலும், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள்எடுக்கப்பட்டு, விரிவான டி.என்.ஏ பகுப்பாய்வும் செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், பின்வரும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன:

*சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 02.10.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிபராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா என்பவர் கிராம சபைக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு காவல் துறை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவாநந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது.

* மேலும், இச்சம்பவத்தில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவற்றில் இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது.

* இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சி களின் அறிக்கைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில், புலன் விசாரணை முடிக்கப்பட்டு

(i) முரளிராஜா, த/பெ. ஜீவாநந்தம், 32/23, வேங்கைவயல், (ii) சுதர்ஷன் 20/23, த/பெ. பாஸ்கரன், வேங்கைவயல் மற்றும் (iii) முத்துகிருஷ்ணன் 22/23, த/பெ. கருப்பையா, வேங்கைவயல் ஆகியோரின் மீது, 20.01.2025 அன்று நீதிமன்றத்தில் சிபிசிஅய்டி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.’’

397 பேர்களிடம் விசாரணை
இந்த நுட்பமான ‘எளிதில் தீப்பற்றும்’ பிரச்சினைமீது யாராக இருந்தாலும் தீரமாக சிந்தித்துப் பொறுப்புடன் கருத்துகளை வெளியிடுவது அவசியமாகும்.
அரசு வெளியிட்ட அறிக்கையில், எவ்வளவு அக்கறையுடன் அனைத்து வகைத் தொழில் நுட்பங்களையும், தடய அறிவியல்
களையும் பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகவே தெரிய வருகிறது.
397 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 87 செல்போன் டவர்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
ஒரு லட்சம் செல்போன் பயன்பாட்டை ஆய்வு செய்து துப்புத் துலக்கப்பட்டுள்ளது.
ஒரு காவல்துறை எதை எதை எல்லாம் அதிகபட்சம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் துல்லியமாக செய்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

‘திராவிட மாடல்’ அரசின் கொள்கை எத்தகையது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்து செயல்படும் அரசு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே!
அரசியல் குளிர் காய்வது சரியல்ல!
இதனை அரசியல் பிரச்சினையாக்கிக் குளிர் காய்வது என்பது சரியானதல்ல. குறிப்பாகக் கூட்டணி கட்சிகளுக்குப் பொறுப்பு அதிகமாகவே உண்டு.
தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத் தூசு கிடைத்தாலும் தூணாகப் பெரிதுப்படுத்தும் பிஜேபி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூக்குரலைப் புரிந்து கொள்ள முடியும்.

தனிப்பட்ட பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக்கி ஜாதி முலாம் பூசுவது மிகப் பெரிய ஆபத்தாகும்.
விமர்சனம் செய்யலாம்; அப்படி விமர்சிக்கும் போது காவல் துறையின் செயல்பாட்டில் என்ன குறைபாடு என்பதைச் சுட்டிக் காட்டலாம். அதைப் புறந்தள்ளி பிரச்சிைனயை வேறு கண்ணோட்டத்தில் விமர்சிப்பது, அரசியல் லாபத்துக்காக பிஜேபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாட்டும் குற்றச்சாட்டு நெருப்புக்குத் தெரிந்தோ தெரியாமலோ நெய் ஊற்றுவதாக அமைந்து விடாதா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் பிரச்சினை, தீண்டாமை – இவற்றில் பிஜேபி, சங்பரிவார்களின் பார்வை என்ன என்பது தெரியாத ஒன்றா?
தாழ்த்தப்பட்ட தோழர் மீசை வைத்துள்ளார் என்பதற் காகவும், குதிரை மேல் வந்தார் என்பதற்காகவும், கோயில் திருவிழாவை வேடிக்கை பார்த்தார் என்பதற்காகவும் தாக்கப்படவில்லையா? ஏன் கொல்லப்பட்டதும்கூட உண்டு.

குடியரசுத் தலைவரை
அவமதித்தவர்கள்மீது நடவடிக்கை உண்டா?
இந்தியாவின் முதல் குடிமகனும், முப்படைகளின் தலைவரும், அரசமைப்புச் சட்டத்தின் பிதாமகனுமான மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குள்ளும், ராஜஸ்தான் அஜ்மீர் – பிரம்மா கோயிலுக்குள்ளும் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதைவிட பெருங் குற்றம் வேறொன்று இருக்க முடியுமா?
குடியரசுத் தலைவரையும், அவர் குடும்பத்தையும் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்களின்மீது பிஜேபி அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
புதிய நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கும், திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் குறைந்தபட்சம் அழைப்பைக்கூட இன்றைய குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தவர் என்ற காரணத்துக்காக அளிக்காதவர்கள் வேங்கைவயலைப் பற்றிப் பேச அருகதை உடையவர்களா?

வருணாசிரமத்தைத் தூக்கிப் பிடிக்கும் கொள்கையைக் கொண்ட கட்சியினர் ஆட்சிதானே இந்தியாவில் நடக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பெரியார் நினைவு சமத்துவபுரமும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டமும் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்றால், இந்த அரசின்தூய்மையான ஜாதி ஒழிப்பு – தீண்டாமை ஒழிப்பு – சமூகநீதி சமத்துவக் கொள்கை எத்தகையது என்பது வெள்ளி மலையாகும்.
எதையும் ஒரு சார்புக் கண்ணோட்டத்தில் காண்பது – அணுகுவது, யூகிப்பது பகுத்தறிவுக்கு அழகல்ல!
எங்காவது ஒரு பேருந்து நடத்துநர் எந்தக் காரணத்துக்காகத் தாக்கப்பட்டாலும் பேருந்து நடத்துநர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து போராடுவது, வழக்குரைஞர் ஒருவர் எங்காவது தாக்கப்பட்டால் (என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல்) வழக்குரைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தைப் புறக்கணிப்பது.. இத்தியாதி இத்தியாதி முறைகள் ஏற்கத்தக்கதுதானா? இது எங்கு கொண்டு போய் விடும் என்பதைப் பொறுப்புமிக்க தலைவர்கள் உணர்ந்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

எதற்கெடுத்தாலும் சி.பி.அய். விசாரணை தேவை என்பது வாடிக்கையான வழமையான குரலாக இருப்பது வேடிக்கையானது – வினோதமானது! மாநிலக் காவல்துறை மீது நம்பிக்கையற்ற தன்மை சரியானதல்ல.
சாத்தான்குளம் வழக்கு சி.பி.அய்யிடம் தானே ஒப்படைக்கப்பட்டது – அதன் நிலை என்ன?
எடுத்துக்காட்டுக்கு ஒன்றைக் குறிப்பிடலாம். சாத்தான் குளத்தில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு சி.பி.அய். வசம்தான் ஒப்படைக்கப்பட்டது
2020 ஜூனில் நடந்த நிகழ்வு இது. 5 ஆண்டுகள் ஓடி விட்டன.
13.12.2021 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது – மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்று கேட்டதுண்டே! அதற்குப் பிறகும் நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. விசாரணை முடிவுக்கு வரவில்லை. தீர்ப்பும் கிடைக்கப் பெறவில்லை.

சி.பி.அய்.யிடம் ஒப்படைத்தால் விசாரணை விரைவாக நடைபெறும் என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான்.
வேங்கைவயல் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு அரசு நேரியமுறையில் அரிய தொழில் நுட்ப முறைகளை எல்லாம் பயன்படுத்தி விசாரணையை மிகவும் சிறப்பாகவே நேர்மையாகவே நடத்தி வருகிறது.
இதனைப் பயன்படுத்தி அரசியல் செய்வது நியாயமல்ல – பொறுப்பான செயலும் அல்ல.

இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக
இருப்பது தமிழ்நாடே!
இந்தியாவிலேயே ஜாதிக் கலவரம், மதக் கலவரம் இல்லாமல் அமைதிப் பூங்காவாக மணம் வீசும் மாநிலத்தை அமளிக்காடாக்க முயலும் சக்திகளை அடையாளம் காட்டும் பொறுப்பு, நாட்டு நலனில் அக்கறை கொண்ட நம் அனைவரின் கடமை என்பதை மிகுந்த சமூகப் பொறுப்புணர்வோடு சுட்டிக் காட்டுகிறோம்.

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
26.1.2025