ஞாயிறு, 28 ஜூலை, 2024

9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு! சுரங்கங்கள் – கனிம நிலங்கள் – குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம்!

 

9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு! சுரங்கங்கள் – கனிம நிலங்கள் – குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம்!

விடுதலை நாளேடு

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, ஜூலை 26 சுரங்கங்கள், கனிம நிலங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற அரச மைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சுரங்கம் மற்றும் கனிம நிலங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், அரசுக்கு செலுத்தும் ராயல்டி தொகை என்பது வரி அல்ல. அது குத்தகைக் கட்டணம்தான் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சுரங்கத்தை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தது. அதற்காக, தமிழ்நாடு அரசுக்கு அந்த நிறுவனம் ராயல்டி (உரிமைத் தொகை) வழங்கியது. ஆனால், அத்துடன் சேர்த்து தமிழ்நாடு அரசு ‘செஸ்’ வரியும் விதித்தது. இதையடுத்து, ‘சுரங்கங்கள், கனிம நிலங்கள்மீது வரி விதிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே, தமிழ்நாடு அரசு விதித்த வரியை திரும்பப் பெற வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. தங்கள் பகுதிக்கு உட்பட்ட கனிம நிலத்தைப் பயன்படுத்த வரி விதிக்கும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 1989 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு, ‘சுரங்கங்கள், குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது. மாநில அரசுகளுக்கு இல்லை. குத்தகை எடுப்பவர்கள்தரும் ராயல்டியை மட்டுமே மாநில அரசுகள் பெற முடியும். ராயல்டி என்பதே வரிதான்’ என்று தீர்ப்பு வழங்கியது.
ராயல்டி என்பது வரியா, குத்தகைக் கட்டணமா? கனிம நிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசு களுக்கு இருக்கிறதா, இல்லையா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வந்தது.

ஒன்றிய அரசும், பல்வேறு சுரங்க நிறுவனங்களும் மாநில அரசுகளுக்கு வரி விதிக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி மனுக்களை தாக்கல் செய்தன.
இதுதொடர்பாக இதுவரை 80 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2011 ஆம் ஆண்டில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று (25.7.2024) தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி உள்ளிட்ட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர்.


அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சுரங்கங்கள், குவாரிகளை உள்ள டக்கிய நிலங்களுக்கு வரி விதிப்பதை, நாடாளுமன்றத்தின் சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) 1957 சட்டம் (எம்எம்டிஆர்) வரை யறுக்கவில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 246 ஆவது பிரிவின்கீழ் சுரங்கங்கள், குவா ரிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை மாநில சட்டப்பேரவைகள் பெறுகின்றன. எனவே, எம்எம்டிஆர் சட்டத்தின் மூலம், மாநில அரசுகள் தங்கள் வரம்புக்குள் வரக்கூடிய சுரங்கங்கள், குவாரிகளுக்கு வரி விதிப்பதை கட்டுப்படுத்த முடியாது.
‘மாநிலங்கள் பெறும் ராயல்டி என்பது வரிதான்’ என்று கடந்த 1989 இல் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புத் தவறானது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், மாநில அரசுகளுக்கு செலுத்தும் ராயல்டி என்பது வரி அல்ல. அது குத்தகைக் கட்டணம்தான்.
இவ்வாறு தீர்ப்பில்கூறப்பட்டுள்ளது.

ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு
நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். ‘சுரங்கங்கள், கனிம நிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை’ என்று அவர் தீர்ப்பளித்தார். பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பே இறுதி செய்யப்பட்டது.
இதுவரை கனிம நிலங்களை பயன்படுத்தியதற்கான வரி நிலுவையை மாநில அரசுகளுக்கு நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா அல்லது இனி வரும் நாட்களுக்குத்தான் இந்தத் தீர்ப்பு பொருந்துமா என்பது குறித்து வரும் 29 ஆம் தேதி விளக்கம் அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

(இதுபற்றிய ஆசிரியரின் அறிக்கை நாளைய ‘விடுதலை’யில் வெளிவரும்).

புதன், 24 ஜூலை, 2024

அறிவியல் மனப்பான்மையைப் பரப்பவேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமை என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா? (ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் நெரிசல் உத்தர பிரதேசத்தில் 116 பேர் உயிரிழப்பு)



 பக்திப் பைத்தியம் காரணமாக உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சி(?) ஒன்றில் பங்கேற்றவர்களில்

121 பேர் பரிதாபச் சாவு Sஉ.பி. சாமியார் முதலமைச்சர் பொறுப்பு ஏற்பாரா? Sகள்ளக்குறிச்சி சாராய சாவுக்கு சி.பி.அய். விசாரணை கேட்டவர்களெல்லாம் இப்பொழுது எங்கே போனார்கள்?

கடவுள் நம்பிக்கை, பக்தி என்பதெல்லாம் வெறும் புரட்டு என்பதை உணர்ந்திடுக!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மரணமடைந்தனர் என்ற துயரச் செய்தி கேட்டு வருந்துகிறோம். ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், மக்களின் இந்த உயிரிழப்புக்கு உ.பி. சாமியார் முதலமைச்சர் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும், அறிவியல் மனப்பான்மைப் பரப்புவது அடிப்படைக் கடமை என்கிற இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுவது – வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா? என்றும், கடவுள் சக்தி, பக்தி என்பதெல்லாம் மக்களைப் பீடித்த கேடு என்பதை இதுபோன்ற குரூரமான நிகழ்வுகளின்மூலம் அறியவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் நெரிசல்  உத்தர பிரதேசத்தில் 116 பேர் உயிரிழப்பு

‘‘ஹத்ராஸ், ஜூலை 3: உத்தர பிரதேசத்தில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட, 116 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் திறந்தவெளியில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நேற்று நடந்தது.

கடும் வெப்பத்துக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டத்தில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மூச்சுத்திணறல்

போலே பாபா பேசி முடித்ததும், கூட்டத்தில் பங்கேற்ற வர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு வெளியேறினர்.இதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், கடும் வெப்பம் நிலவிய நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக, பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, 116 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், பெண்கள் மற்றும் குழந்தைகள். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காய மடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படு கிறது.
இந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, ஆக்ரா ஏ.டி.ஜி., மற்றும் அலிகார் கமிஷனர் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். மேலும், காய மடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தின ருக்கு, உ.பி., அரசு சார்பில், தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50,000 ரூபாயும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மத்திய அரசு சார்பிலும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என, உ.பி., போலீசார் தெரிவித்தனர். விபத்து நடந்த இடம், அலிகாரிலிருந்து, 40 கி.மீ., தொலை விலும், லக்னோவிலிருந்து, 330 கி.மீ., துாரத்திலும் உள்ளது.

வண்டி வண்டியாக…

ஆன்மிக சொற்பொழிவில் பங்கேற்று கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் மற்றும் மயக்கமடைந்தவர்களை, அவர்களின் உறவினர்கள் லாரி, ஆம்புலன்ஸ், கார் என கிடைத்த வாகனங்களில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைகளுக்கு வந்தனர். ஐந்து ஆறு உடல்கள் கிடத்தப்பட்ட லாரியின் முன் அமர்ந்து பெண் ஒருவர் தன் மகளை மீட்டுத் தரும் படி கதறி அழுத காட்சி நெஞ்சை உலுக்கியது. இறந்தவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். குழந்தைகளும் அதிக அளவில் இறந்துள்ளனர்.

மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இடம் இல்லாததால், காயமடைந்த பலருக்கு மருத்துவமனை வாசலில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காயமடைந்தவர்களை சுற்றி அவர்களின் உறவினர்கள் கவலையுடன் அமர்ந்திருந்தனர். மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மட்டுமே இருந்தார். ‘உயிர் காக்கும் ஆக்சிஜன் வசதியும் மருத்துவமனையில் இல்லை’ எனக் கூறி இளைஞர் ஒருவர், மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினார்.

யார் இந்த போலே பாபா?

போலே பாபா என்றழைக்கப்படும் நாராயண் ஹரி, உ.பி.,யின் எட்டா மாவட்டத்தின் பகதுார் நகரி கிராமத்தில் பிறந்தார். கல்லுாரி படிப்புக்குப் பின், உ.பி., காவல் துறையின் உளவுப்பிரிவில் பணியாற்றிய அவர், ஆன்மிக ஈடுபாடு காரணமாக, 2006 இல், விருப்ப ஓய்வு பெற்றார்.

உ.பி.,யின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மிகத்தை பரப்பிய அவர், தன் சொந்த கிராமத்தில் ஆசிரமத்தை கட்டினார்.

உ.பி.,யின் மேற்கு பகுதியில் மிகவும் பிரபலமான போலே பாபாவின் பேச்சைக் கேட்க, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.

வெள்ளை நிற குர்தா, பேன்ட் அணியும் அவர், தன் மனைவியுடன் அமர்ந்து, சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.”
மேலே காணும் செய்தி – ஸநாதனம், ஆன்மிகம் என்பதை மேலே தூக்கிப் பிடித்து, மனுதர்ம ஆட்சி வராதா என்று ஏங்கும் பார்ப்பன நாளேடான ‘தினமலர்‘ 3.7.2024 சென்னை பதிப்பில் முன்பக்கத்தில் வெளிவந்துள்ள செய்தியை அப்படியே தந்துள்ளோம்.

(உண்மை என்னவென்றால், காவல்துறையில் இவர் பணியாற்றிய நேரத்தில் நடந்த முறைகேடுகள் காரணமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்தான் இந்த நாராயண் ஹரி)

யார் இந்த சாமியார்?

உத்தரப்பிரதேசம் என்ற அந்த மாநிலத்தில் ஒரு காவி சாமியார் ஆட்சிதான்! (அவர் ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை, ஆணைப்படி பதவியேற்று கடந்த சில ஆண்டுகாலமாய் ஆட்சி நடத்தி வருபவர்!)
அங்கே உளவுத் துறையில் அதிகாரியாக வேலை பார்த்த ஒருவர், திடீரென்று விருப்ப ஓய்வு பெற்று டிப் டாப் வெள்ளை உடை (கோட் சூட்) அணிந்து நாராயண் ஹரி போலே பாபாவாகி விட்டார்!
அவர் இந்த நிகழ்விற்குப் பிறகு தலைமறைவாகிவிட்டார்!

பெருங்கூட்டம் கூடியபோது, அவர்கள் திரும்பும்போது இந்தக் கோரம் – பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

(மருத்துவமனைகளில் போதிய மருந்து, மருத்துவர்கள் இல்லை என்று ஒரு சிறு போராட்டமே நடத்தப்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாக உயிர்ப் பலி – மரணங்கள் கூடுதலாகும் நிலையும் உள்ளது என்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன!)

மருத்துவமனையில் இடம் போதாமையால் பிணங்கள் வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
உ.பி. முதலமைச்சர் பொறுப்பேற்கவேண்டும்!

இதற்கெல்லாம் உத்தரப்பிரதேச முதலமைச்சர்தானே முழுப் பொறுப்பேற்கவேண்டும்!
மரணமடைந்துள்ள உ.பி மக்கள் பக்தி போதையில் அங்கு சென்று உயிரை இழந்த பரிதாபத்திற்குள்ளாயினர் என்றாலும், அவர்கள் நம் சக மனிதர்கள். எனவே, நம்முடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால், அதேநேரத்தில், இதற்காக அந்த மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வரவேண்டும் என்று இங்குள்ள பா.ஜ.க.வோ, அதன் கூட்டணி சுற்றுக் கிரகங்களின் கட்சித் தலைவர்களோ கேட்பார்களா?
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சாவு, துன்ப துயரத்தைத் தேர்தல் தோல்வி வெள்ளத்தில் அடித்துச் செல்லும் தம்முடைய கட்சிகளுக்கு ஒரு சிறு கட்டைத் தெப்பமாக்கிக் கொள்ள இப்படி கூச்சல் கிளப்புவோர் பதிலளிக்க முன்வருவார்களா?
அதுமட்டுமா?

கள்ளக்குறிச்சிக்கு ஒரு நீதி – உ.பி.க்கு வேறு ஒரு நீதியா?

இது நெரிசல் மூலம் சாவு என்றாலும், விஷச்சாராய சாவு என்றாலும், சாவு சாவுதான். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இவை போன்ற பல நிகழ்வுகளின்போது எல்லாம் சி.பி.அய். விசாரணைகள்தான் நடந்தனவா?

கள்ளக்குறிச்சி விஷச் சாராய நிகழ்வு ஏற்பட்டவுடன் நமது முதலமைச்சர், அவரது தலைமையில் உள்ள அரசின் மின்னல் வேக செயற்பாடுகளுடன் – ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் உள்பட, சில நொடிகள்கூட தாமதிக்காமல் செய்துள்ளார்களே!

இந்த மாதிரி நிகழ்வுகள் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நடந்தபொழுது, அம்மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளையும் ஒப்பிட்டுப்
பாருங்கள்!

அங்கு சி.பி.அய். விசாரணை வேண்டும் என்று அலகா பாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தால் அதை பா.ஜ.க. அண்ணாமலைகள் ஆமோதிப்பார்களா?

தி.மு.க. ஆட்சிமீது சேற்றை வாரி இறைக்க முயலும் கார்ப்பரேட் முதலாளிகளின் ஊடகங்களும் இதுபற்றி உ.பி. அரசின் சட்டம் – ஒழுங்கு நிலைபற்றி அதே குரலில் பேசுமா? கண்டிக்குமா?
ஏன் இந்த இரட்டை அளவுகோல்?

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மையைப் பரப்பும் அடிப்படைக் கடமை என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?

அரசமைப்புச் சட்டத்தின் அறிவியல் மனப்பான்மை பரப்பும் அடிப்படைக் கடமை என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா? நீர்மேல் எழுத்தா?

மக்கள் அறியாமைக்கு உ.பி.யில் 120–க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளது வேதனையும், வெட்கமும் அல்லவா?
கடவுள் நம்பிக்கை, பக்தி என்பதெல்லாம் கேடே தவிர, நன்மை பயக்காது என்பதை உணர்வார்களா?

சென்னை   
3.7.2024 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

நூற்றாண்டு கண்ட தலைவர்களின் அரசியல், நனி நாகரிகம், பண்பாடுகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து பின்பற்ற வேண்டும் சென்னை மணவழகர் மன்றத்தின் 68ஆவது ஆண்டு முத்தமிழ் விழாவில் தமிழர் தலைவர்

 

Published July 21, 2024

சென்னை, ஜூலை 21- சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மணவழகர் மன்றத்தின் 68ஆவது ஆண்டு முத்தமிழ் விழா 19.7.2024 அன்று மாலை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மூத்த வழக்குரைஞர் ல.சுந்தரேசன் முன்னிலையில் மணவழகர் மன்ற செயலாளர் கே.கன்னியப்பன் அனைவரையும் வரவேற்று உரையாற்றி னார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மணவழகர் மன்ற செயலாளர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழாவில் தொடக்க உரையாற்றினார்.
கடந்த சில நாள்களாக தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதால் தொண்டை வலி, நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாது. தொண்டுக்கு ஓய்வு கூடாது. மருத்துவர்கள் தொண்டைக்கு ஓய்வு கொடுக்குமாறு (voice rest) கூறியுள்ளனர்.
முத்திரை பதிக்கின்ற அமைச்சர் மா.சு. என்கிற மாசிலாத மா.சுப்பிரமணியன் அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கே உள்ள தமிழ் அமைப்புகளின் FETNA நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அமெரிக்காவிலுள்ள பிரபலமான மருத்துவமனைகளில் பேசி யுள்ளார். தமிழ்நாடு மருத்துவத்துறையின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பேசியுள்ளார்.
ரயில்வேத்துறையில் லாலு பிரசாத் அமைச்சராக இருந்தபோது கட்டண உயர்வே இல்லாமல் சாதனைகளை செய்தார். அவரை அழைத்துப் பாராட் டினார்கள், நம்முடைய அமைச்சர் மா.சு.வை பாராட்டியுள்ளனர். இவர்கள் பிற் படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து சாதனைகள் செய்தார்கள் என்று பாராட்டியுள்ளனர்.
நம்முடைய அமைச்சர் தகுதி, திறமை என்பது மோசடி என்பதற்கு உதாரணம் ஆவார். இங்கே பேராசிரியர் காதர் மொய்தீன் உள்ளார். மதம் வேறாக இருந்தாலும் மனம் ஒன்றுபட்டு இருப்பதுதான் இந்த இயக்கத்தின் சிறப்பு. யாவரும் கேளிர் என்பதுதான் தத்துவம். திரு.வி.க. அவர்கள் உலகம் ஓர் குலம் என்ற மிகப்பெரிய தத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் இராஜா முத்தையா செட்டியார் அவர்கள் – மணவழகர் மன்றத்துக்கு அடித்தளமாக விளங்கியவர். அறக்கட்டளைகள் அறைக் கட்டளைகளாகக் கூட பல இடங்களில் இல்லை.
அண்ணா, கலைஞர் என்று இங்கு பேசாத தலைவர்களே இல்லை.
தந்தைபெரியாரைப்போல், பாதை போட்ட தலைவர் திரு.வி.க. ஆவார்.
மணவழகர் மன்றத்தின் அறக்கட்டளை பொறுப்பேற்று மேனாள் நீதிபதி பு.இரா.கோகுலகிருஷ்ணன் பணியாற்றினார். அரு.இலட்சுமணன் மகன் சுந்தரேசன் என்று உயிரோட்டமுள்ளதாக தொடர்ந்து இயங்கிவருகிறது இந்த அமைப்பு. நூற்றாண்டைக் கடந்த தலைவர் திரு.வி.க. பெயரால் உள்ள அமைப்பு மணவழகர் மன்றம்.
கலைஞர் நூறறாண்டு, சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று சர் ஜான் மார்ஷல்அறிக்கை வெளியிட்டதன் நூற்றாண்டு, தவத்திரு தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு, தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற் றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு என நூற்றாண்டுகளைக் கொண்டாடி வருகிறோம்.
சுயமரியாதை இயக்கத்துடன் தொடர்புடையவர் திரு.வி.க.
தந்தைபெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார் என்று சொன்னாலும், அதற்கு முன்னதாகவே நாயுடு, நாயக்கர், முதலியார் என்று ஜாதி பட்டத்தை துறந்தவர்கள் நம் தலைவர்கள். வரதராஜூலு, பெரியார் ஈ.வெ.ராமசாமி, திரு.வி.க. என தலைவர்கள் தொண்டாற்றினார்கள்.
காஞ்சிபுரத்தில் காங்கிரசு மாநாட்டிலிருந்து தந்தைபெரியார் வெளியேறினார். இருவேறு கருத்துகள், கொள்கைகள் கொண்டிருந்தாலும் பண்பாடு காத்தனர். திரு.வி.க. ஆழ்ந்த சைவப்பற்றாளர்.
சுயமரியாதை இயக்கம் 1925 இல் தொடங்கப்பட்டது. 36.11.1933இல் ஈரோட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் கலந்துகொண்டு திரு.வி.க. பேசினார். “சுயமரியாதை இயக்கத்துக்கு பெரியார் தந்தை. நான் தாய். அந்த குழந்தை தாயுடன் வளராது, தந்தையுடன் வளர்கிறது” என்று திரு.வி.க. பேசினார். இனமானப்பேராசிரியர் தவறாமல் இதனைக் குறிப்பிட்டுப் பேசுவார்.
மனிதன் சுயமரியாதையோடு வாழ வேண்டும்.
பிறவி பேதம் அழித்தல், ஒழித்தல், ஆண், பெண் பேதமும் பிறவி பேதம்தான். பெண்ணின் பெருமை பற்றி சொன்னவர் திரு.வி.க.
சுயமரியாதை இயக்கத்தில் திரு.வி.க., தந்தைபெரியார் உழைத்த உழைப்பு-எல்லோருக்கும் கல்வி, சொத்துரிமைக்காக பாடுபட்ட இயக்கம் இந்த இயக்கம்.
அரசியல் பயில வேண்டுமென்றால், இன்றைய தலைமுறையினர் திரு.வி.க. எழுதிய திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் நூலைப்படிக்க வேண்டும். அதிலே அத்துணைத் தலைவர்கள் பற்றியும் அவருடைய நடையில் அழகான தமிழில் எழுதியுள்ளார்.
இரண்டு தத்துவங்கள், மாறுபட்ட கொள்கைகள் உடையவர்களாக இருந்தாலும், பண்பாடு, அரசியல் நனி நாகரிகம் காத்தவர்கள்.
– இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் தனது உரையில் குறிப்பிட்டார்.
விழாவில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
விழா நிறைவாக மணவழகர் மன்ற துணைச் செயலாளர் சு.கருணாநிதி நன்றியுரையாற்றினார்.
திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தமிழ்நாடு மூதறிஞர் குழு பொருளாளர் த.கு.திவாகரன், உடுமலை வடிவேல், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, க.கலைமணி, சிவக்குமார், பெரியார் நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள், மணவழகர் மன்ற பொறுப்பாளர்கள் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.

ஹிந்துக் கடையா, முஸ்லிம் கடையா என்று தெரிந்துகொள்ளும் ஏற்பாடு! இந்த ஆபத்தான மதவாதத்தை முறியடிக்க இந்தியா கூட்டணி முன்வரட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை



குஜராத்தையடுத்து உ.பி., உத்தரகாண்டிலும் ஹிந்துத்துவாவின் பரிசோதனைக் கூடமா?

கடைகளில் உரிமையாளர் பெயர் போடவேண்டும் என்று உ.பி., உத்தரகாண்ட் மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின் பின்னணி என்ன?

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வியாபார நிறுவனங்களில் உரிமையாளர்களின் பெயர்களைப் போடவேண்டும் என்று பி.ஜே.பி. அரசுகள் உத்தரவு என்பது உரிமையாளர் ஹிந்துவா? முஸ்லீமா? என்று தெரிந்துகொள்ளவே! இந்த ஆபத்தான மதவாத வெறியை, இந்தியா கூட்டணி ஒருமித்த முறையில் இணைந்து முறியடிக்க முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

‘ஹிந்துத்துவா’ என்று ஒரு நூற்றாண்டுக்குமுன் உருவாக்கப்பட்ட, ஹிந்து ராஜ்ஜிய – வருணதர்ம தத்துவத்தின் அரசியல் கோட்பாட்டை, செயல்முறைக்குக் கொண்டுவரும் ‘‘அரசியல் பரிசோதனைக் கூடமாக” சுமார் 25 ஆண்டுகளுக்குமுன், மோடி முதலமைச்சராக ஆட்சி செய்த குஜராத் என்ற காந்தி மண்ைணயே தேர்ந்தெடுத்தது, சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவகை உளவியல், உடலியல் தாக்குதல் – இரண்டு துறைகளிலும் நடத்தப் பெற்றது. அது எல்லை தாண்டிய மதவெறித்தனத்தின் மதோன்மத நடனமாகி, ஆடியதன் தாங்கொணா கொடுமை கண்டு அன்றைய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பிரதமரான அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள் அன்று இராணுவத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களை நேரில் குஜராத்திற்கு அனுப்பி, வழிந்தோடிய இரத்தக் கண்ணீரைத் தடுக்க ஓரளவு முயற்சித்தார். அன்றைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்களுக்கு ‘‘ராஜதர்மம்” என்று ஒன்று உள்ளது; அதனைக் கடைப்பிடித்து நடவுங்கள்” என்று அறிவுரை – அறவுரை, ஆணையையும் வழங்கினார்!‘‘எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாடு செல்லுவேன்” என்று பிரதமர் வாஜ்பேயி புலம்பினார்!

குஜராத்தையடுத்து, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்டிலும் ஹிந்துத்துவாவின் பரிசோதனைக் கூடமா?
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குஜராத்தின் பழைய ஹிந்துத்துவ நடவடிக்கைகளுக்குப் பரிசோத னைக் கூடமாக உத்தரப்பிரதேசத்தினை ஆக்கிட, யோகி ஆதித்யநாத் என்னும் சாமியார் ஆட்சி பீடத்தில் அமர்ந்து ஹிந்துத்துவா தாண்டவம் தலைதெறிக்க ஆடிவரும் நிலைதான் இன்றைய நிலை!
சம்பூகனைக் கொன்ற இராமனது செயல் அன்று; இன்று இரண்டாவது பரிசோதனைக் கூடமாக (Political Laboratory) ஹிந்துத்துவாவுக்கு, பசுப் பாதுகாப்புப் படை தொடங்கினர். இப்போது கன்வார் யாத்திரை செல்லும் வழியில் உள்ள சிறு சிறு உணவுக் கடைகள் – தட்டிக் கடைகள் போன்று தள்ளுவண்டி கடைகளில் அதன் உரிமையாளர் யார்? என்று பெயர்ப் பலகை வைப்பது கட்டாயம் என்று உ.பி., உத்தரகாண்ட் மாநில அரசுகள் சட்ட ஆணைகளை வெளியிட்டுள்ளன!
இதன் உள்நோக்கம் என்ன தெரியுமா?


ஹிந்துக் கடையா? முஸ்லிம் கடையா? என்று தெரிந்துகொள்வதற்கான சூழ்ச்சி!
அது ஹிந்து கடையா? அல்லது முஸ்லீம்கள் மற்றும் சிறுபான்மையினர் கடையா என்று புரிந்துகொண்டு, ஹிந்துக்கள் அல்லாத முஸ்லீம்களின் கடைகளைப் புறக்கணித்துவிட்டு, ஹிந்துக்களின் கடைகளில் மட்டுமே வாணிபம் செய்ய வழிவகுக்கும் வெறுப்பு அரசியலின் விரிந்த – இழிந்த செயலின் மறைமுக ஏற்பாடு என்று பல முற்போக்காளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இது ஹிந்துத்துவா வெறித்தனத்தின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது!
அரசமைப்புச் சட்டம் கூறும் மதச்சார்பின்மை, ஜீவாதார உரிமைகள் எல்லாம் எங்கே, எங்கே? புதைக்கப் பட்டு விட்டதா?
நீரில் கரைந்தவையாகி வருகின்றனவா?

கூட்டணிக் கட்சிகளே எதிர்க்கின்றனவே!
மற்ற எதிர்க்கட்சிகளின் கண்டனம் ஒருபுறம் என்றா லும், அவர்களது சொந்தக் கட்சியான பா.ஜ.க.வினரும், இன்றுள்ள மைனாரிட்டி பா.ஜ.க. அரசினைத் தாங்கிப் பிடித்துவரும் தேசிய ஜனநாயக முன்னணி கட்சிகளான அய்க்கிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வான் கட்சியான லோக் ஜனசக்தி கட்சி, சிராக் பஸ்வான் கட்சிகளும்,பா.ஜ.க.வின் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் தலைவர் மேனாள் அமைச்சர் சையத் நக்வி போன்றவர்களும்கூட எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அரசமைப்புச் சட்டத்தை முன்பு மோடி, தலை கவிழ்ந்து வணங்கியதெல்லாம் இப்படி ஆளுமை செய்வதற்குத்தானா? என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது!

இந்தியா கூட்டணியின் மகத்தான பொறுப்பு!
இத்தகைய ஹிந்துத்துவ மதவெறியின் கோர முகத்தை மாற்றிட, கட்சி, ஜாதி, மதம், மாநிலம் என்று ஒருங்கிணைந்து போராடி, அது புறமுதுகிட்டு ஒடும் நிலையை உருவாக்கவேண்டியது எதிர்க்கட்சியாகிய இந்தியா கூட்டணியின் பொறுப்பு மாத்திரமல்ல – அனைத்து மனிதநேயர்களின் இன்றியமையாப் பெருங்கடமையாகும்!
வெறுப்பு அரசியலை விரட்டியடியுங்கள் –
பொறுப்பு கூட்டு சமூக எழுச்சியே அதற்குரிய சரியான கருவியாகும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
20.7.2024

திங்கள், 22 ஜூலை, 2024

அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதிக்காகப் போராடிய புரட்சித் துறவி!- கி.வீரமணி

 

‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதிக்காகப் போராடிய புரட்சித் துறவி!- கி.வீரமணி

2024 ஜுலை 16-31

11.7.2024 அன்று மஹாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களது நூற்றாண்டு தொடங்குகிறது.
அவர் குன்றக்குடி திருமடத்தின் ஆதீனகர்த்தர்!

தனித்தன்மையுடன் குன்றக்குடி ஆதீனத்தின் பொற்காலத்தை உருவாக்கிய புதுமைப் புரட்சியாளர்!
மதம், சொர்க்கம் போகும் மார்க்கமல்ல; மாறாக, மனிதகுலத்தைச் சீர் செய்ய, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதியை வற்புறுத்த ஒரு வழி என்பது புரட்சித் துறவியான அவரது தத்துவம்!

துறவுத் துறையில் இருட்டை வெளிச்சமாக்கி, எல்லோரையும் இன்ப வாழ்வு வாழ தனது இறுதி மூச்சுவரை உழைத்த போற்றுதலுக்குரிய எம்பெருமான்!

தந்தை பெரியார் அவர்களுக்கு சமயத் துறையில் கிடைத்த ஒரு பகுத்தறிவு – சமதர்மப் புதையல்!
பெரியார் என்ற கலங்கரை வெளிச்சத்தின்படியே தனது கடல் பயணத்தை, சுழன்றடித்த சூறாவளிக்கும் இடையே – சுயமரியாதையுடன் தனது மதக் கப்பலை ஓட்டிய அறிவின் ஊற்று!
‘‘சொலன் வல்லார்; சோர்விலாத” தொண்டறம் புரிந்து சாதனைச் சிகரமேறிய சீரார் அவர்!
அய்யா, அம்மாவிடம் அவர் காட்டிய மரியாதை கலந்த அன்பு அடைக்கும்தாழ் இல்லாதது!

குன்றக்குடி அடிகளாரின் பெட்டிச் செய்தி!

1971 தேர்தலில் அரசியல் குழப்பப்பட்டது- திட்டமிட்டே. அப்போது நான்கு வரிகளில் தி.மு.க.வை வெற்றி பெற வைக்கவேண்டிய அவசியம்பற்றி ஒரு பெட்டிச் செய்தி அறிக்கை:

‘‘எது வேண்டும்?
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
– இது உண்மைச் சமயம்
இன்று ‘‘ஆஸ்திகம்” என்பது உயர் ஜாதியினரின் நலம்.
இன்று ‘‘நாஸ்திகம்” என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம்.
உங்களுக்கு இதில் எது வேண்டும்?”

– ‘விடுதலை’, 18.2.1971

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கும், மார்க்சியத்தின் பொதுவுடைமை இயக்கத்திற்கும் துணை நின்று மேடைகளில் முழங்கிய பெருஞ்சொற்கோ அவர்!

அறிஞர் அண்ணா, செம்மொழிச் சிற்பி கலைஞர் மற்றும் அனைத்து முற்போக்கு இயக்கத் தலைவர்களையும் வற்றாத அன்பினால் வளைத்தவர்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு ஆதரவு தந்தவர்; மதக்கலவரம், ஜாதி ஒழிப்பு, ஹிந்தித் திணிப்பு சமரில் களங்கண்ட அறப்போர் தளபதி!

நம்மை ஒரு ‘செல்லப்பிள்ளை’யாகவே வரித்து
வாழ்ந்து, கட்டி அணைத்த ஒரு மூத்த முதிர்ச்சியாளர்!

சென்னை பெரியார் திடலில் ‘விடுதலை‘ப் பணிமனையைத் திறந்து வைத்தவர் (31.10.1965).
‘தமிழர் இல்லம்‘ என்பதற்கு அடையாளம் ‘விடுதலை‘ ஏடே என்ற முத்தான இனமான முத்திரை வரிகளை ‘விடுதலை‘ப் பணிமனை திறப்பு விழாவில் பொறித்தவர்!

தமக்குப் பிறகு தமது தொண்டறம், தமிழ்த் தொண்டு தனித்தன்மையுடன் நடக்க தவத்திரு பொன்னம்பல அடிகளார் என்ற தமிழ் நாற்றை நற்பயிராக்கிச் செழிக்க வைத்த செம்மையும், செறிவும், முன்னோக்கும் படைத்தவர்!
காரைக்குடியில் நூற்றாண்டு விழா!

அவரது நூற்றாண்டினை திராவிடர் கழகம் தனியே ஒரு பெருவிழாவாக – திருவிழாவாக – காரைக்குடி மாநகரில் ஆகஸ்டில் நடத்தி நன்றி தெரிவிக்கும்!

வாழ்க நம் மஹாசந்நிதானம் தவத்திரு அடிகளார்!
எழுக அவர் காண விரும்பிய புதுமைச் சமுதாயம்!!

-‘விடுதலை’, 11.7.2024

சனி, 20 ஜூலை, 2024

சேலம் பள்ளியில் மாணவர்கள் புலால் உணவு கொண்டுவரக் கூடாதாம்!

 

சேலம் பள்ளியில் மாணவர்கள் புலால் உணவு கொண்டுவரக் கூடாதாம்!

கருஞ்சட்டை

சேலத்தில் உள்ள செந்தில் பப்ளிக் ஸ்கூல் முதல்வர், பெற்றோருக்கு அனுப்பிய ஆணை வருமாறு:
‘‘துவக்கப் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு – எங்கள் பள்ளிக்கான உணவுக் கொள்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சில மாணவர்கள் எடுத்துவரும் இறைச்சி வகை உணவு சிலரின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது. ஆகவே, அனைவரின் உணர்வுகளையும் மதிக்கும் சூழலை உருவாக்கும் விதத்தில் புதிய உணவுக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது,
அனைத்து மாணவர்களும் உணவு இடை வேளையின் போது ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். ஆகவே, பள்ளிக்கு இறைச்சி உணவு வகைகளைக் கொண்டுவருவதைத் தடை செய்கிறோம்.
எங்களின் இந்த புதிய உணவுக் கொள்கை அனைவருக்கும் ஒத்துப்போகும் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
ஆகவே, இனிமேல் புலால்வகை உணவை மாணவர்களுக்குக் கொடுத்து அனுப்புவதை கட்டாயம் பெற்றோர்கள் தவிர்த்துவிட வேண்டும்.
இப்படிக்கு
மனோகரன்
பள்ளி முதல்வர்
தமிழ்நாட்டில் உள்ள ஒரு பள்ளிகளில் இப்படியும் ஒரு பள்ளி இருக்கிறது. அதற்கென்று ஒரு முதல்வர் இருக்கிறார். பெற்றோருக்கு இப்படி ஒரு ஆணையை அனுப்புகிறார் என்றால், அது எப்படி?
பள்ளிக் கல்வித் துறை இப்படி ஒரு ஆணையைப் பிறப்பிக்கவில்லை. பெற்றோர்கள் எல்லோரும் நீண்ட வரிசையில் நின்று இப்படி ஓர் கோரிக்கையை முன்வைக்கவில்லை.
இந்த நிலையில், இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது எப்படி?
இதன் பின்னணி என்ன?
சங்கிகள் ஊடுருவலா?

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை
உரிய நடவடிக்கை எடுக்குமா?

வியாழன், 18 ஜூலை, 2024

அஞ்சலகங்களில் குறைந்த பிரீமியத்தில் – விபத்து காப்பீட்டுத் திட்டம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிமுகம்

 

விடுதலை நாளேடு

சென்னை, ஜூலை 17 அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங் களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520/ ரூ.555/ ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம்/ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

சாமானிய மக்களுக்கும் விபத்துக் காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலகங்கள் (அஞ்சல்காரர்/கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம், மிகக் குறைந்த பிரீமியத் தொகையுடன் கூடிய இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.
விண்ணப்பப் படிவம், அடை யாள/முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகிதப் பயன்பாடுமின்றி, அஞ்சல்காரர் கொண்டு வரும் திறன்பேசி (ஸ்மார்ட் போன்) மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி, வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்தப் பாலிசி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
ரூ.10 லட்சம்/ 15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு/நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம்)
ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதி
விபத்தினால் ஏற்படும் மருத்து வச் செலவுகள் (உள்நோயாளி செல வுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை)
விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமண செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை
விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, நாள்தோறும் தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.1000/- வீதம் 15 நாட்களுக்கு ( 2 நாட்கள் கழிக்கப்படும்)
விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5000 வரை.

ஆண்டிற்கு வெறும் ரூ.555இல்/ரூ.755இல் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்துக் காப்பீட்டுப் பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும்/ நிதி நெருக்கடிகளையும்/ உயிரிழப் புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால், பொது மக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள்/அஞ்சல்காரர்கள் மூலம் இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன் பெறுமாறு சென்னை வடகோட் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கி.லட்சுமணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.