புதன், 21 ஜனவரி, 2026

தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை!

 

‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு –‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ அவர் என்பதை உலகறியச் செய்யும் எடுத்துக்காட்டு

துணைவேந்தர் நியமனம்முதல் கலை, மொழி, இலக்கியம், வரலாறு

அனைத்தையும் காவி மயமாக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. அரசு!
குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளிவரும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை!

துணைவேந்தர் நியமனம் முதல், கலை, மொழி, இலக்கியம், வரலாறு உள்ளிட்ட பண்பாட்டுத் தளத்தை எல்லாம் ஒன்றிய பி.ஜே.பி. அரசு காவி மயமாக்கிவரும் நிலையில், இந்திய அளவில் குறிப்பிட்ட மொழிகளில் வெளிவரும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருதும்’, தலா 5 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என்ற ‘திராவிட மாடல்’ அரசின் நாயகரின் அறிவிப்பு – ‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் என்பதற்கான எடுத்துக்காட்டு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி, வரவேற்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்களது அண்மை அறிவிப்பு  – இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் பாராட்டி வரவேற்கும் மிக அருமையானதொரு திட்டமாகும்!

‘‘குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் “செம்மொழி இலக்கிய விருது” என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும். விருதுடன், தலா 5 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

படைப்புகளின் இலக்கியத் தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். புரவலர் பணியை தமிழ்நாடு அரசு மனநிறைவோடு மேற்கொள்ளும்.

காதுகளில் தேன் பாய்ந்த மகிழ்ச்சியை
உருவாக்கும் என்பது நிச்சயம்!

அடுத்து அமையப்போவதும் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சிதான்! அப்போது, இதைவிடப் பெரிய அளவில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்தப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை நடத்துவோம்!’’ என்று கூறியுள்ளது இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் காதுகளில் மட்டுமல்ல, இலக்கிய ரசனை உள்ள அந்தந்த மொழிப் பற்றாளர்களின் காதுகளில் தேன் பாய்ந்த மகிழ்ச்சியை உருவாக்கும் என்பது நிச்சயம்!

அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். – காவிமயம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க., ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்தே – அரசின் பொது வள சுதந்திரத்துடன் இயங்கி வந்த வரலாற்று ஆய்வு அமைப்பு, கலாச்சாரப் பாதுகாப்பு அமைப்புக் குழு அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். – காவிமயம் ஆக்கப்பட்டு வருகின்றன!

இதை, நாடாளுமன்றத்தில்கூட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சுட்டிக்காட்டி, கண்டனம் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

துணைவேந்தர்கள் நியமனம் தொடங்கி, அரசின் கலை, இலக்கிய, மொழி அமைப்புகள், வரலாறு, அறிவியல் அமைப்புகள் எல்லாவற்றையும் காவி மயமாக்கி வரும் நிலையில், சுதந்திரமாக இதுவரை தலையீடு இன்றி நடந்து வந்த இலக்கிய பீடமான ‘‘சாகித்ய அகாடமி’யின்  விருதையே – அது தகுதி மிக்க ஒருவருக்குச் செல்லக்கூடாது – காரணம், அவர் இடதுசாரி கருத்தாளர் என்பதால், அப்பரிசை நிறுத்தி வைத்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசு. இது ஏற்கத்தக்கதா? நியாயமா?

இதற்கு சரியான ஆக்கப்பூர்வமான பதிலடிதான் ‘திராவிட மாடல்’ முதலமைச்சரின் வரவேற்கத்தக்க மேற்கண்ட அறிவிப்பு!

‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்!’

‘திராவிட மாடல்’ அரசு, வெறுப்பு அரசியல் நடத்தாத ஒன்று; எந்த மொழி மீதும் வெறுப்பு இல்லை. பண்பாட்டுப் படையெடுப்பு, மொழித் திணிப்பை ஒரு வழிமுறையாகக் கொள்ள திட்டமி்ட்டு செயல்படுவதை எதிர்ப்பதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று நமது முதலமைச்சர் இந்தப் புதிய ஏற்பாட்டினை அறிவித்துள்ளார், தக்க நேரத்தி்ல்!

‘‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’’ அவர் என்பதை உலகறிய இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை
19.1.2026

இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924)



 இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924)

சோவியத் யூனியனின் தந்தை என்று அழைக்கப்படும் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் அவருடைய 102-ஆவது நினைவு நாள் இன்று (21.1.1924)

புரட்சியின் நாயகன்: 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற புகழ்பெற்ற அக்டோபர் புரட்சியை முன்னின்று நடத்தியவர். ஜார் மன்னர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, உலகில் முதன்முதலாக ஒரு ‘தொழிலாளர் அரசை’ உருவாக்கினார்.

சோவியத் ஒன்றியம்: நவீன ரஷ்யாவின் சிற்பியாகக் கருதப்படும் இவர், சோவியத் யூனியன் உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். அதன் முதல் தலைவ ராகவும் பணியாற்றினார்.

மார்க்சியச் சிந்தனையாளர்: கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை ரஷ்யாவின் சூழலுக்கு ஏற்ப மாற் றியமைத்தார். இது பிற்காலத்தில் ‘லெனினிசம்’ என்று அழைக்கப்பட்டது. “அதிகாரம் அனைத்தும் சோவியத் துகளுக்கே” என்பது இவரது புகழ்பெற்ற முழக்கமாகும்.

எளியவர்களுக்கான தலைவர்: நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து, நிலங்களை விவசாயிகளுக்கும், தொழிற் சாலைகளைத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப் பாடுபட்டார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங் களில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

புரட்சியாளர் லெனின்   இளைஞர்களுக்கு லெனின் வழங்கிய மிக முக்கியமான அறிவுரை படி மேலும் படி, ‘‘எப்போதும் படிப்பை கைவிடாதே’’ ( ஹுஸிசா, ஹுஸிசா, ஈ யோஷோ ராஸ் ஹுஸிசா)  என்ற முழக்கம் கம்யுனிஸ்ட்களை விரும்பாத முதலாளித்ததுவ நாடுகளில் உள்ள இளைஞர்களையும் ஈர்த்தது.  அவருடைய உடல் இன்றும் மாஸ்கோவில் உள்ள லெனின் நினைவகத்தில்  பொதுமக்கள் பார்வைக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-விடுதலை நாளேடு, 21.01.26

செவ்வாய், 20 ஜனவரி, 2026

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

9806f786-ea7e-4066-b8fb-d912d288568f
நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மாயமானது அம்பலமானது. -
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

சபரிமலையில் சுமார் ஆறாண்டுகளுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கோவில் கருவறை முன்பு இருந்த துவார பாலகர்கள் சிலைகள், கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கக் கவசங்களைப் புதுப்பிப்பதற்காக கோவில் நிர்வாகத்தினர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மாயமானது அம்பலமானது.

தங்கம் திருடப்பட்டது தொடர்பாக 11 பேர் அடுத்தடுத்து கைதாகினர்‌‌. புனரமைப்புப் பணிக்குத் தலைமை தாங்கிய உன்னி கிருஷ்ணன், கோவில் நிர்வாக அதிகாரி, ஊழியர்கள் எனப் பலர் கைதான நிலையில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) கேரளா, கர்நாடகா, தமிழகம் என மூன்று மாநிலங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கேரளாவில் உள்ள உன்னி கிருஷ்ணன் வீடு, திருவனந்தபுரத்தில் உள்ள கோவில் முன்னாள் வாரியத் தலைவர் பத்ம குமார் ஆகிய இருவரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தங்க முலாம் பூசும் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டதாகவும் மொத்தம் 21 இடங்களை குறிவைத்து அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை பல மணிநேரம் நீடித்ததாகவும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- தமிழ் முரசு நாளேடு இணைய பக்கம், 20.01.26

வியாழன், 8 ஜனவரி, 2026

டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அளித்த பேட்டி

 

இன்றைய நிலையில், பெரியாரின் பொருத்தப்பாடு என்ன? பார்ப்பனீய எதிர்ப்பு ஏன் என்பது உள்பட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டுக்கு விடையளித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். தமிழ்நாட்டில் பெரியார் இருக்கும்போது என்னிடம் ஏன் வருகிறீர்கள்? என்று கேட்டவர் அம்பேத்கர் என்ற தகவல் உள்பட அடங்கிய பேட்டி வருமாறு:

கடந்த டிசம்பர் 24 அன்று வெளிவந்துள்ள அப் பேட்டியின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு இப்போது 93 வயது ஆகிறது. ஆனாலும், ஓர் இளம் அரசியல்வாதியைப் போலவே அவர் சுறுசுறுப்பாக வாழ்கிறார். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியிலாவது அவர் கலந்து கொள்ளாமல் இருப்பதே இல்லை. பல சமயங்களில் இயக்கம் சார்ந்த நூல் வெளியீடு, வீர வணக்கக் கூட்டங்கள், திருமண விழாக்கள் என்று ஒரே நாளில் மூன்று மாவட்டங்களில் கூட அவர் பரப்புரைப் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 24 ஆம் நாள் திராவிடர் கழகத்தின் வழிகாட்டி தந்தை பெரியாரின் 52 ஆவது நினைவு நாள் என்பதால் அதற்கான பணிகளில் திராவிடர் கழகம் மும்முரமாக ஈடுபட்டு வரும் சூழலில், பெரியாரியலின் மாண்பு, நிலைத் தன்மை குறித்தும், அதை உயிர்ப்புடன் வைத்திருக்கத் திராவிடர் இயக்கம் எதிர்கொள்ளும் போராட்டங்கள்பற்றியும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்காக ஜெயா மேனன் உடனான பேட்டியில் கி.வீரமணி உரையாடினார். அப்பேட்டி வருமாறு:

பெரியார் பல அவதூறுகளைச் சந்தித்தவர்!

செய்தியாளர்: திராவிடர் கழகம் மேலும் வளர்ந்து செழித்தோங்க தாங்கள் எப்படி திட்டமிட்டுள்ளீர்கள்?

ஆசிரியரின் பதில்: பெரியாரின் தொண்டர்களுக்கு இது ஓர் எளிமையான பணி. ஒரு யுத்தத்தில் பல போர்கள் நிகழும். எத்தனை சோதனைகள் வந்தாலும், இடையூறுகள் ஏற்பட்டாலும் நாங்கள் அயராமல் போராடி பல போர்களில் வெற்றி பெற்று வருகிறோம். இன்னும் யுத்தம் முடியவில்லை. அதிலும் வெல்வோம். அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

பெரியார் பல அவதூறுகளைச் சந்தித்தவர். அவர் மீது சுமத்தப்பட்ட ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகளைச் சந்தித்தவர். அவரது இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்கள் ஏவிவிட்ட அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும், எதேச்சாதிகாரப் போக்கையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக அவற்றை முறியடித்தவர் பெரியார்.

அனுபவம் தானே மிகச்சிறந்த ஆசான்!

எமர்ஜென்சி காலகட்டத்தில் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தார். எமர்ஜென்சியை எதிர்த்ததாலேயே கலைஞருடைய ஆட்சி கலைக்கப்பட்டது. எத்தனை இன்னல்கள் வந்தாலும் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம். இன்றைய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், அன்று இளைஞர். திருமணமான ஒரே மாதத்தில் அவரும் கைது செய்யப்பட்டார். ரத்தக்கறை படிந்த ஆடையுடன் நான் இருந்த சிறைக்கூடத்தில் தள்ளப்பட்டார். எட்டடி நீளமும் எட்டடி அகலமுமாக இருந்த அந்தக் கொட்டடியில் எட்டு நபர்கள் அடைக்கப்பட்டிருந்தோம். சிறுநீர் கழிக்க ஒரு மண்பா னையும், குடிநீருக்காக ஒரு மண்பானையும் மட்டுமே அந்த அறையில் இருந்தன. எல்லாவிதமான கொடுமைகளையும், சகித்துக்கொள்ளும் மனஉறுதியும், பயிற்சியும் பெற்றவர்கள் நாங்கள். அனுபவம் தானே மிகச்சிறந்த ஆசான்! அதுதான் எங்களுக்கு விவேகம் தந்தது. அதையே நாங்கள் எங்கள் தொண்டர்களுக்கும் போதித்து வருகிறோம்.

செய்தியாளர்: அய்ம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று சமூகத்தின் மீது பெரியாரியத்தின் பொருத்தப்பாடு எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு மக்களின் வாழ்வும், அரசியலும் அதையும் கடந்து வளர்ந்துள்ளனவா?

பெரியாருடைய
கொள்கை வாரிசுகள் நாங்கள்!

ஆசிரியரின் பதில்: இன்றைய காலகட்டத்திற்குத் தான் பெரியாரும், அவருடைய கொள்கைகளும் மிக அவசிய மாகத் தேவைப்படுகின்றன. கடந்த காலங்களில் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பாலின சமத்துவம், மகளிர் உரிமை போன்ற எங்கள் கொள்கைகளை எதிர்த்த எதிரிகள் குறைந்தபட்ச அறிவு நேர்மை உடையவர்களாக இருந்தனர். ஆனால், இன்றைய ஆரியக் கூட்டம் ஸநாதனம் என்ற பெயரில், வருணாஸ்ரம தர்மத்தையும், ஜாதியையும் நிலை நாட்ட நினைக்கிறது. அது சமத்துவத்தை விரும்பவில்லை.

இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு பெரியார் தான். ஏனெனில் அவர் ஒரு சமுதாய விஞ்ஞானி. பொய்யும், புரட்டும் நிறைந்த வேஷதாரி சாமியார்கள் போல் வாழ்ந்தவர் அல்ல அவர்! எதற்காகவும் அவர் ஆசைப்பட்டதுமில்லை, ஏங்கியதுமில்லை. அவருடைய கொள்கை வாரிசுகள் நாங்கள்.

பெரியாரியம் தனித்தன்மையுடன்
சுதந்திரமாகவே என்றும் செயல்படும்!

செய்தியாளர்: பெரியாரியல் உயிர்ப்புடன் இருக்கப் போராடி வருவதாக நீங்கள் கூறுகிறீர்கள். தற்போது இந்தப் போராட்டத்தை திராவிடர் கழகத்திற்குப் பதிலாக தி.மு.க. முன்னெடுத்து நடத்துவதாகக் கருதலாமா?

ஆசிரியரின் பதில்: தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள். நாங்கள் போர்க்களத்தில் பணி யாற்றும் தூசிப் படையினர் போன்றவர்கள். நாங்கள் தி.மு.க.வுக்குப் பக்கபலமாக, பாதுகாப்பு அரணாக சென்ட்ரி கடமையாற்றுவோம்.

அரசியல் களம் ஓர் எல்லைக்கு உட்பட்டே உள்ளது. இன்றைய தி.மு.க. தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசின் நிர்வாகத்திறன் அற்புதமானது. ஆற்றல் மிக்க ஒரு மக்கள் நல ஆட்சி இது. ஆனால், எந்த ஒரு சிறிய மாற்றத்திற்கும் அது தன்னிடம் கையேந்தி நிற்கவேண்டும் என்றே ஒன்றிய அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், மாநில அரசின் அதிகாரங்களைப் பொறுத்தவரை எந்தவிதமான சமரசத்திற்கும் தி.மு.க. உடன்படாது; அடிபணியாது.

பெரியாரும், அவருடைய கொள்கைகளும், கோட்பாடு களும் மட்டுமே ஒரே மருந்து. எனவே தான், நாங்கள் பெரியாரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். எங்கள் இயக்கம் என்றும் கலையாது. வேறு எவருடனும் இணையாது. பெரியாரியம் தனித்தன்மையுடன் சுதந்திரமாகவே என்றும் செயல்படும்.

பெரியாரின் அடிச்சுவடுகளைப்
பின்பற்றிவரும் கழகம் தி.மு.க.

செய்தியாளர்: பெரியாரின் கொள்கைகளுடன் ஒருங்கி ணைந்து இருப்பது யார்? தி.மு.க.வா, அ.தி.மு.க.வா?

ஆசிரியரின் பதில்: உங்கள் கேள்வி ‘கருப்பா – வெள்ளையா? எது பளிச்சென்று தெரியும்?’ என்று கேட்பது போல் உள்ளது. பெரியாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வரும் கழகம் தி.மு.க.

ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சிக்கு எப்போதுமே அரசியல் சார்ந்த சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனாலும், சமூகக் கொள்கைகளில் அது ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள இயலாது. எனவே, பரப்புரைகள், அமைதியான போராட்டங்கள் போன்ற சீரிய அணுகுமுறைகளுடன் சமூகக் களத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, திராவிடர் கழகம் பணியாற்றும். அவற்றை சட்டமாக்கும் பணிகளை இயன்றவரை தி.மு.க. நிறைவேற்றும்.

செய்தியாளர்: பெரியார் ஏன் தமிழ்நாட்டிற்குள் மட்டும் சுருங்கிவிட்டார்? அம்பேத்கரியம் உலகம் முழுவதும் பரவிப் படர்ந்துள்ளது போல், பெரியாரியம் ஏன் பரவலாக அறியப்ப டாமல் உள்ளது?

வரலாற்றையும், உண்மையையும்
புறக்கணிக்கும் செயலாகும்!

ஆசிரியரின் பதில்: பெரியாரின் தாக்கத்தை ஒரு மாநில அளவிலோ, தேசிய அளவிலோ குறுக்கிவிட முடியாது. அவர் வாழ்ந்த காலத்திலேயே, மொழி – புவியியல் எல்லை களைக் கடந்தவர் பெரியார். அவரை வடநாட்டிற்கு வரு மாறு அம்பேத்கர் மட்டுமல்ல, எம்.என்.ராய் போன்ற பல சிந்தனை யாளர்களும், தேசியத் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

பெரியார் சிந்தனையின் தாக்கத்தால் தான் சமூகநீதி பற்றிய புரிதல் இந்தியா முழுவதும் அரசியல் களத்தில் ஏற்பட்டது. பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டங்கள் இந்தியாவிலும், உலக நாடுகள் பலவற்றிலும் இன்று உருவாகியுள்ளன. நம் நாட்டின் எல்லா மாநிலங்களிலும், எல்லா மொழிகளிலும் பெரியாரின் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் நிறைந்த மொழியாக்க நூல்கள் விரும்பிப் படிக்கப்பட்டு வருகின்றன.

பெரியார் – அம்பேத்கர் படைப்புகளும், பரவலாக இந்தியாவிலும், பல உலக நாடுகளிலும் முக்கியமாக இளைய தலைமுறையினரால் படிக்கப்படுகின்றன; விவாதிக்கப்படுகின்றன. குறுகிய எல்லைகளுக்குள் பெரியாரை அடைக்க முயலுவது வரலாற்றையும், உண்மை யையும் புறக்கணிக்கும் செயலாகும்.

தமிழ் தேசியம் என்பதன் பொருள் என்ன என்று தெரியுமா அவர்களுக்கு?

செய்தியாளர்: பெரியாரியம் தலித், தமிழ்த் தேசிய அமைப்புகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறதா?

ஆசிரியரின் பதில்: அவர்கள் தமிழர்களும் அல்ல, தேசியவாதிகளும் அல்ல. தமிழ் தேசியம் என்பதன் பொருள் என்ன என்று தெரியுமா அவர்களுக்கு? இது ஒரு ஏமாற்று அரசியல். சில தலித் அறிவுஜீவிகளின் அணுகுமுறை சரி என்றும் கூற முடியாது. “பெரியார் இங்கு இருக்கும்போது என்னிடம் ஏன் வருகிறீர்கள்?” என்று அம்பேத்கரே ஒரு முறை அவர்களைக் கேட்டிருக்கிறார். அந்த அறிவு ஜீவிகளுக்கு அவர் கேட்ட கேள்வியே மிகச் சரியான பதில்.

சுயமரியாதை உணர்வுள்ள எவருமே
பெரியாரியச் சுடரை ஏந்தியவர் தான்!

செய்தியாளர்: பெரியாரியம் என்ற சுடரை ஏந்தி, சமூக நீதிக்காகப் போராட புதிதாக எவரேனும் முன்வந்திருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

ஆசிரியரின் பதில்: எந்த அரசியல் அமைப்புடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும் எல்லோருமே பகுத்தறிவாளர்களாக இருக்கவே விரும்புகிறார்கள். அவர்கள் சமூக அநீதியை அடியோடு அழித்து சமூகநீதியை நிலைநாட்டுபவர்களாக இருக்க விரும்புகிறார்கள். சுயமரியாதை உணர்வுள்ள எவருமே பெரியாரியச் சுடரை ஏந்தியவர் தான். மானுட உயர்வுக்காகப் போராடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெரியார் என்ற சுடரை ஏந்தியவர்கள் தான். பெரியாரை எங்கள் ஏகபோக உரிமை என்று எப்போதும் நாங்கள் சொந்தம் கொண்டாடுவதில்லை.

செய்தியாளர்: பார்ப்பனியத்தை பெரியார் தீவிரமாக எதிர்த்தார் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. பார்ப்பன எதிர்ப்பு என்பது இன்றும் தேவைப்படுகிறதா?

ஆசிரியரின் பதில்: மானுட இழிவும், பாகுபாடுகளும் தான் பார்ப்பனியம். மனித் தன்மை இழந்தவர்களை மீண்டும் மானுடர்களாக மாற்றுவதே எங்கள் பணி. எனவே தான், நாங்கள் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம். பெரியார் இயக்கம் வன்முறையை நாடாத, மனிதநேய இயக்கம். ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பைத் தீவிரமாக எதிர்க்கும் இயக்கம்.

நடிகர் விஜய்யின் அரசியல் முன்னெடுப்பை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

செய்தியாளர்:  நடிகர் விஜய்யின் அரசியல் முன்னெடுப்பை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? பெரியாரைத் தங்கள் கொள்கை வழிகாட்டி என்கிறாரே அவர்?

ஆசிரியரின் பதில்: முதல் பொதுத் தேர்தலிலிருந்து அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் வரை எத்தனையோ பேர் வந்ததையும், போனதையும் பார்த்து, அரசியலில் அனுபவம் உள்ளவர்களுக்கு இது மற்றுமொரு சுவாராஸ்யமான அத்தி யாயம். அவ்வளவே!  எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வெறும் திரைப்பட நடிகர்களாக மட்டுமே இருக்காமல், திராவிடக் கொள்கைகளை முன்னிறுத்தினார்கள். எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தில் இணைந்திருந்தார்; பரப்புரையாளராகவும் இருந்தார். ஜெயலலிதாவும் அவரைப் பின்பற்றியே செய லாற்றி வந்தார்.

த.வெ.க.வின் கொள்கையல்ல அது!

செய்தியாளர்:   வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜர், அம்பேத்கர் மட்டுமின்றி பெரியாரும் தங்களின் வழிகாட்டித் தலைவர்கள் என்றெல்லாம் சொல்கிறாரே நடிகர் விஜய்?

ஆசிரியரின் பதில்: இது ஒரு ஃபார்முலா. அவருடைய கொள்கையல்ல.

செய்தியாளர்: தமிழ்த் தேசியம், பெரியார் எதிர்ப்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அரசியல் செய்து வரும் சீமானின் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆசிரியரின் பதில்:தெளிவான மனநிலையும், மானுடப் பண்பும் நிறைவந்தவர்கள் பற்றி மட்டும் தான் நான் பதில் சொல்வேன். நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.

தமிழுக்குப் பெரியார் ஆற்றிய தொண்டு

செய்தியாளர்: தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் இகழ்ந்ததாக நிர்மலா சீதாராமன் விமர்சித்து வருகிறாரே?

ஆசிரியரின் பதில்: பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி அவருடையது. இது ஒரு திரிபுவாதம். ஆயிரம் நிர்மலாக்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் பெரியாரின் பிம்பத்தை ஒழித்துவிட முடியாது. தமிழ் மொழிக்கு அவர் ஏகபோக உரிமையாளர் அல்ல. தமிழ் மொழி மீது உண்மை யான பற்றுள்ளவர்கள் அவருடைய விமர்சனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள். தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்தவர் பெரியார். அவர் அறிமுகம் செய்த மாற்றங்களை அகில உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. மொழி என்பது போர்க்கருவி போல் இருக்கவேண்டும். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வார்த்தைகளுக்கு மாறுபட்ட பொருள் கொள்ளப்படுவது உண்டு. பெரியார் சொன்ன பொருள் வேறு. இதுதான் உண்மை.

பெரியார் சிந்தனைப் பற்றுள்ள எந்த இயக்கமும், கட்சியும் தோல்வியடையாது!

செய்தியாளர்: உங்களுக்கு வாரிசாக இயக்கத்தில் எவரை யேனும் உருவாக்கி வருகிறீர்களா அல்லது உங்களுக்குப் பின் பெரியாரியத்தைத் தொடர்ந்து தி.மு.க.வே போற்றிப் பாதுகாத்துவரும் என்று கருதுகிறீர்களா?

ஆசிரியரின் பதில்: மனிதநேயமும், சுயமரியாதையும் நிறைந்த ஒரு மக்களாட்சிக்கு, ஒரு நல்ல அரசு அமைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்குப் பெரியாரியம் அவசியமான அரசியல். பெரியார் என்றென்றும் தேவைப்படுபவர். பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவின் அடிச்சுவட்டில் இயங்கும் தி.மு.க. என்றுமே மக்களின் நலனுக்காகப் பாடுபடும். பெரியாரின் இயக்கம் ஒரு சமூக இயக்கம்; அறிவியல் இயக்கமும் கூட. அறிவியல் என்றுமே தோல்வியடையாது. பெரியார் சிந்தனைப் பற்றுள்ள எந்த இயக்கமும், கட்சியும் தோல்வியடையாது.

நன்றி. ‘தி டைம்ஸ் ஆஃப் இண்டியா’ – 24.12.2025

மொழியாக்கம்: எம்.ஆர்.மனோகர்

உதவி: சமா

- விடுதலை நாளேடு,28.12.25



வெள்ளி, 2 ஜனவரி, 2026

பெரியார் களம் நடத்திய சட்ட விழிப்புணர்வு பயிலரங்கத்தில் கழகத் தலைவர் ‘‘ஜனநாயகம்” எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்!

 

ஜனநாயக முறையில் சர்வாதிகாரி ஆனவர்தான் ஹிட்லர்
இந்தியாவும் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது

ஆசிரியர் உரை

சென்னை.டிச.28. ‘‘சட்டப் பயிலரங்கம் என்பது அகல உழுவதை விட ஆழமாக உழுவதாக அமைய வேண்டும்” என பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

சட்ட விளக்க வகுப்புகள்

சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் குளுமை அரங்கில், 27.12.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், பெரியார் களம் சார்பில் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஒரு நாள் சட்ட விழிப்புணர்வு பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை ஏற்று உரையாற்றினார். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்க உரை நிகழ்த்தினார். முதல் வகுப்பாக, “சமூக மாற்றமும் – பெண்ணுரிமைக்கான சட்டங்களும்” எனும் தலைப்பில், கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, இரண்டாம் வகுப்பாக, ”சமூகநீதி – சட்டமும், போராட்டமும்” எனும் தலைப்பில், கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மூன்றாம் வகுப்பாக, “மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமை – அரசியல் அமைப்புச் சட்டம்” எனும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நான்காம் வகுப்பாக, “இந்துசமய அறநிலையத்துறை சட்டமும் – கோயில் உரிமைகளும்” எனும் தலைப்பில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, அய்ந்தாம் வகுப்பாக, “தீண்டாமை ஒழிப்பும் முக்கிய வழக்குகளும்” எனும் தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை பாடம் நடத்தினர். ஊடகவியலாளர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை மேடை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

டாக்டர் அம்பேத்கரின் கணிப்பு!


‘‘மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமை – அரசியல் அமைப்புச் சட்டம்” எனும் தலைப்பில் வகுப்பெடுத்த திராவிடர் கழகத் தலைவர், சட்டம் தொடர்பான ஆழமான கருத்துகளை முன் வைத்துப் பேசினார். முதலில் இது போன்ற பயிலரங்குகள் நடத்துவதை வரவேற்ற அவர், “அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி, ” அதிகமான தலைப்புகளில் வகுப்புகளை ஏற்பாடு செய்வதைத் தவிர்த்து, ஆழமான கருத்துகளை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அதிகம் பகிரப்படாத கருத்தை மாணவர்கள் முன்வைத்தார். அதாவது, “Even though i bounded by the supreme court judgment. But, i’m not respect to the same” என்று ஆழமாக சொன்னதை நினைவுபடுத்தினார். மேலும் அவர், Secularism, Socialism ஆகிய சொற்கள் பற்றி அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு விவாதங்களில் வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசிய முக்கியமான, ஆழமான கருத்துகளை, புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு கற்பித்தார்.

சட்டப்படி நடக்க வேண்டியவர்கள் அதனை மீறலாமா?

மதச்சார்பற்ற சட்டத்தின் அடிப்படையில் நடக்க வேண்டியவர்கள், ”என் மதம் தான் – இந்து மதம் தான் ஆளவேண்டும்” என்று வெளிப்படையாகப் பேசுவதைக் சுட்டிக்காட்டினார். Secularism, Socialism ஆகிய இரண்டும் இடைச்செருகல் என்று, ஒன்றிய அரசின் விளம்பரத்தில் அந்த இரண்டும் சொற்கள் இல்லாமல் வெளியிட்டதை நினைவுபடுத்தி, ”இடைச்செருகலாக இருந்தாலும், அந்த சட்டத்தின் மீதுதானே பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவி ஏற்றனர். அதை எப்படி மீற முடியும்?” என்ற ஆழமான கேள்வியை  மாணவர்களின் உள்ளத்தில் பதிய வைத்தார். தொடர்ந்து, அதைவிட மோசமான ஒரு தகவலை சுட்டிக்காட்டிப் பேசினார். அதாவது, “இந்தியா என்றாலே இந்து நாடுதான். இதை அரசியலமைப்புச் சட்டம் ஒப்புக்கொண்டால் என்ன? ஒப்புக் கொள்ளாவிட்டால் தான் என்ன?” என்று இதுவரை மறைமுகமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் வெளிப்படையாக பேசுவதை நினைவூட்டி, இதே சிந்தனைப் போக்கில், “ஜனநாயக முறையில் தேர்வாகித்தான் ஹிட்லர் சர்வாதிகாரி ஆனார். அந்த திசையில்தான் இந்தியாவும் சென்றுகொண்டிருக்கிறது” என்று சட்டக் கல்வி மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நிலைமையை புரியவைத்து தமது வகுப்பை நிறைவு செய்தார்.

சான்றிதழ் வழங்கல்!

நிகழ்வில் சட்டம் பயிலும் மாணவர்கள் உள்பட 50 மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் கேள்வி பதில் பகுதி நடைபெற்றது. சட்டக் கல்வி பயிலும் மாணவர்களும் மற்றவர்களும் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இறுதியாக அனைத்து மாணவர்களும் நடைபெற்ற பயிலரங்கம் பற்றி தங்களது கருத்துகளை மேடையில் பகிர்ந்துகொண்டனர். கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் ”பெரியார் களம்” அமைப்பு சார்பில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பங்கேற்றோர்

கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, திராவிடர் கழகத்தின் வழக்குரைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் துரை.அருண், கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்; வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தனர்.  பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன்  வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் நா.பார்த்திபன், க, கலைமணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் குறிப்பேடு, எழுதுகோல் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் குழு ஒளிப்படம் எடுத்து கொண்டனர். இறுதியில் உடுமலை வடிவேல் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

-விடுதலை நாளேடு, 28.12.25


வியாழன், 18 டிசம்பர், 2025

அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மையினர் உள்பட இணைத்து, சமூகநீதிக்கான அறப்போரை, தொடர் போராட்டமாக நடத்துவோம்! 2026 ஆம் ஆண்டின் முக்கிய தீவிர வேலைத் திட்டம் இதுவே!

 


இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூகநீதிக்கே முதலிடம், முன்னுரிமையாகும்! நீதித்துறையில், கடந்த 75 ஆண்டுகளாக சமூகநீதி வெறும் ‘கானல் நீராக’வே உள்ளது!

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூகநீதிக்கே முதலிடம், முன்னுரிமையாகும். ஆனால், நீதித்துறையைப் பொறுத்தவரையில், கடந்த 75 ஆண்டுகளாக சமூகநீதி வெறும் ‘கானல் நீராக’வும் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினருக்கு இதுவரை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் மறுக்கப்பட்டே வந்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் முக்கிய தீவிர வேலைத் திட்டமாக இதனை எடுத்துக்கொண்டு, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மையினர் உள்பட இணைத்து, ஒரு முக்கிய சமூக நீதிக்கான அறப்போரை, தொடர் போராட்டமாக நடத்துவோம்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நாடாளுமன்றத்தின், மக்களவையில் தி.மு.க.  பொருளாளரான டி.ஆர்.பாலு அவர்கள் 11.12.2025 அன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, ஒன்றிய சமூக நலத்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே  எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், இந்திய அரசிய லமைப்புச் சட்டம் 124, 217, 224 பிரிவின்கீழ் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாகவும், இதில் இட ஒதுக்கீடு முறை இல்லை எனவும் தெரிவித்துள்ளதோடு, கூடுதலாகத் தெரிவித்த தகவல்படி,

உயர்ஜாதி பிரிவினர் மட்டும்
76.45 சதவிகிதத்தினர்!

2018 முதல் 2025 நவம்பர்வரை 841 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 32 பேர் எஸ்.சி. (தாழ்த்தப்பட்டோர்) பிரிவினர், 17 பேர்  எஸ்.டி. (பழங்குடி யினர்) என்றும், ‘பொதுப் பிரிவினர்’ என்ற முகமூடி பெயரில், உயர்ஜாதி (பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினர் – Forward Community) பிரிவினர் மட்டும் 76.45 சதவிகிதத்தினர் ஆவர்.

எஸ்.சி.  பிரிவினர் 3.8 சதவிகிதம்

எஸ்.டி. பிரிவினர் 2 சதவிகிதம்

பிற்படுத்தப்பட்டோர் 12.2 சதவிகிதம் (103 பேர்)

சிறுபான்மையினர் 5.5 சதவிகிதம்

பெண்கள் (நீதிபதிகள்) 14 சதவிகிதம் என்று கூறியுள்ளார்.

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூக நீதிக்கே முதலிடம், முன்னுரிமையாகும்.

நீதித்துறையில் சமூகநீதி ‘கானல் நீராகவே’ உள்ளது!

முன்னுரிமை என்பது அச்சட்டத்தின் முகப்புரை (Preamble)யிலேயே வலியுறுத்தப்பட்டிருந்தும் கூட, நிர்வாகத் துறையில் (executive) உயர்ஜாதி, குறிப்பாக பார்ப்பனர்கள் மற்றும் முன்னேறிய ஜாதியினரின் அதிகார, ஆதிக்கச் சூழ்ச்சியில், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் வெறும் ‘ஏட்டுச் சுரைக்காய்’ ஆக்கப்பட்டு, செயலற்றவைகளாக ஆக்கப்பட்டுள்ளதோடு, உச்ச நீதிமன்றத்  தீர்ப்புகள், உயர்ஜாதி நீதிபதிகளால் வியாக்கியானம் செய்யப்பட்டு, தடைக்கற்களை ஏற்படுத்தியதால், சமூகநீதி வெறும் ‘கானல் நீராக’ – நீதித்துறையைப் பொறுத்து, கடந்த 75 ஆண்டுகளாக, ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினருக்கு இதுவரை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் மறுக்கப்பட்டே வந்துள்ளது!

நீதித் துறையில் பார்ப்பன மயம் – காவி மயம் ஆக்கும் முயற்சிகளின் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தமிழ்நாட்டிலும் நீதித் துறையின் மூலமாக மறைமுகமாக காவி ஆட்சியை நடத்திட ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். ‍ – பா.ஜ.க. அரசு தீவிரமாக முயன்று வருவதை அண்மைக்காலச் செய்திகள் சொல்லுகின்றன.

முன்பே ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியுள்ளோம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே அள வுக்கு மிக அதிகமாகப் பார்ப்பனர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது என்பதுடன், ஒரே முறையில் நிறையப் பார்ப்பனர்கள் நீதிபதிகளாக்கப்பட்டால், அது பெரும் கவனத்திற்குரியதாகவும், எதிர்ப்புக்குரிய தாகவும் மாறும் என்பதால், நீதிபதிகள் நியமனத்திற்கான பட்டியலை இரண்டு, மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு முறையும் அதில் பார்ப்பனர்களை இணைக்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதை முன்பே ஆதாரத்து டன் எடுத்துக் காட்டியதுடன், அதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளோம். மக்கள் மன்றத்தில் எடுத்துக்காட்டி, நீதித் துறையில் சமூக நீதியின் அவசியத்தை முன்வைத்துள்ளோம். வழக்குரைஞர்களும், வழக்குரைஞர் சங்கங்களும் இதற்காகப் போராடியுள்ளனர் – போராட்டம் இன்னமும் தேவைப்படுகிறது!

ஆனாலும், இந் நிலை தொடர்ந்து வருகிறது. தற்போது  பார்ப்பனர்களை மட்டுமல்லாமல், ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க.வின் வழக்குரைஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்கும் வகையில் மூன்று கட்டமாகப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பட்டியலை எப்படியேனும் நீதிபதிகள் நியமனத்தில் இடம்பெறச் செய்துவிட பல பின்னணியுடன் நடை பெற்றுவருகின்றன என்றும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

அவசர அவசரமாக மாற்றுவது ஏன்?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெ டுத்துப் பரிந்துரைப்பதற்கான குழுவில், மூத்த நீதிபதி கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த நீதிபதி நிஷா பானு அவர்களும் இடம்பெற்றிருந்தார். ஆனால், அவர் திடீரென கேரள உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு 8 ஆம் இடம் தான் கிடைக்கும். இங்கு மூன்றாம் இடத்தில் இருப்பவரை இன்னொரு உயர்நீதிமன்றத்திற்கு அவசர அவசரமாக மாற்றுவது ஏன்?

அவர், அந்த இட மாறுதலை ஏற்று, கேரள உயர்நீதி மன்ற நீதிபதியாக இன்னும் பொறுப்பேற்காத நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவே தொடரு கிறார். ஆனால், அதற்கு முன்னதாகவே, மூன்றாம் இடத்தில் இருக்கும் அவருக்குப் பதிலாக, நான்காம் இடத்தில் இருக்கும் நீதிபதி திரு.எம்.எஸ்.ரமேஷ் அவர்களைப் பரிந்துரை குழுவில் சேர்த்து, அவரது ஒப்புதலுடன் மாவட்ட நீதிபதிகளிலிருந்து ஆறு பேரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்க பரிந்துரைப் பட்டியலை அனுப்பினார்கள்.

அந்தப் பட்டியல் குறித்து மாற்றுக் கருத்தைச் சொல்லாத தமிழ்நாடு அரசு,   கொலீஜியத்தில் இதுவரை இல்லாத நடைமுறை (மூன்றாம் இடத்தில் நீதிபதி நிஷா பானு இருக்கும்போது, நான்காமிடத்தில் உள்ள நீதிபதி திரு.எம்.எஸ்.ரமேஷ் அவர்களை பரிந்துரைக் குழுவில் இடம்பெறச் செய்தது) பின்பற்றப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்தப் பரிந்துரைப் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்காமல், திருப்பி அனுப்பியது.

இது இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன் முறை என்று சொல்லப்படுகிறது.

ஆனால், அதற்குப் பின்பும், தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டிய பிரச்சினை குறித்து எந்தவித பதிலையும் சொல்லாத சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் இடம்பெற்றுள்ள அதே கொலீஜியத்தைப் பயன்படுத்தி, வழக்குரைஞர்களிலிருந்து (பார்) 9 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாகப் பரிந்துரைத்து, அடுத்த பட்டியலை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து நேற்றைய (12.12.2025) ‘இந்து’ ஏட்டில்,  சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி எழுதியுள்ள கட்டுரையிலும் இப்பிரச்சினையை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டுள்ளார்.

அவசர கொலீஜிய மாற்றம் ஏன்?

இட மாறுதலை ஏற்றுக்கொண்டு நீதிபதி நிஷா பானு அவர்கள், கேரள உயர்நீதிமன்றத்திற்குச் செல்லும் முன்பே, ஏன் இந்த அவசர  கொலீஜிய மாற்றம் என்ற கேள்வி எழுவது இயல்பானதே!

நீதிபதி திரு.எம்.எஸ்.ரமேஷ் அவர்கள், இம்மாதம் ஓய்வு பெறக்கூடியவர். அவர் ஓய்வு பெற்றுவிட்டால், அடுத்த இடத்தில் (அய்ந்தாவது) இருக்கும் நீதிபதி திரு.எஸ்.எம்.சுப்பிரமணியம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைக் குழுவில் இடம்பெறுவார். அது தங்களுக்குச் சாதகமாக இருக்காது என்பதால், அதற்கு முன்னதாகவே அவசர அவசரமாக நீதிபதிகளுக்கான பரிந்துரைப் பட்டியலை அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

குடியரசுத் தலைவர் மூலம்
அழுத்தம் தரும் நடவடிக்கைகள்!

அடுத்தடுத்த பட்டியல்களில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆதரவாளர்களையும், அவர்களது வழக்குரைஞர்களையும் நீதிபதிகள் ஆக்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அப் பட்டியலை ஏற்கக் கூடியவர் அந்த இடத்தில் இடம்பெற வேண்டும் என்பதாலேயே இந்த அவசரம் காட்டப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. நீதிபதி நிஷா பானு அவர்கள் கேரள உயர்நீதிமன்றத்திற்குச் செல்ல மறுத்துவரும் நிலையில், நேற்று (12.12.2025) குடியரசுத் தலைவர் மூலம் அழுத்தம் தரும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாக மக்கள் ஆதரவைப் பெற்று ஒரு நாளும் தங்களால் ஆட்சி நடத்த முடி யாது என்பதைப் புரிந்து கொண்டு தான், ஒரு மாநிலமே ஸநாதனத்திற்கு எதிராக உள்ளது என்று வெளிப்படையாகவே அவர்களுக்குத் தெரிகிறது. அதைத்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர் அனுராக் தாக்கூரின் நேற்றைய பேச்சு நமக்குக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் இன்னும் பல ‘‘சுவாமி–நாதன்களை’’ உருவாக்கச் சதி செய்கிறார்கள்!

எனவே தான், ஆளுநர் மூலமாக தமிழ்நாட்டில் ஒரு ‘‘போட்டி அரசாங்கம்’’ நடத்த முயற்சிக்கிறார்கள்; கல்வித் துறையை நாசமாக்கத் துடிக்கிறார்கள். ஆனால், அவை எதுவும் பலிக்கவில்லை என்றதும், நீதித்துறையைக் காவி மயமாக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துகிறார்கள். இந்தத் ‘‘தந்திர மூர்த்திகள்’’, தமிழ்நாட்டில் இன்னும் பல ‘‘சுவாமி–நாதன்களை’’ உருவாக்கச் சதி செய்கிறார்கள்.

75 நீதிபதிகள் இடம்பெற வேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தில், தற்போது 55 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். மேலும் சிலர் ஓய்வு பெறக்கூடும் என்ற சூழலில், மொத்தமாக தங்களுக்கு ஆதரவானவர்களை நீதிபதிகளாக்கவே இத்தகைய கடும் பிரயத்தனத்தில் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

உயர்நீதித் துறையில் இடஒதுக்கீடு இல்லை என்று அமைச்சர் சொல்கிறார். ஆனால், உயர்நீதித் துறையில் சமூகநீதி இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றக் கொலீஜியம் முன்பே வழிகாட்டியுள்ளதே!

இது சம்பந்தமாக அகில இந்திய அளவில் இதை மட்டுமே மய்யப்படுத்தி, ஓர் அறப்போராட்டத்தினை திராவிடர் கழகம் ஒருங்கிணைத்து, முந்தைய மண்டல் குழுப் பரிந்தரை செயலாக்கம் நடந்ததைப்போல, நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் சார்பில் அறப்போராட்டம்!

இடையில், மாநில சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாடு உள்பட குறுக்கிடுவதால், முதல் கட்டப் பிரச்சாரம் தொடங்கி, 2026 ஆம் ஆண்டின் முக்கிய தீவிர வேலைத் திட்டமாக எடுத்துக்கொண்டு, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மையினர் உள்பட இணைத்து, ஒரு முக்கிய சமூக அறப்போரை, தொடர் போராட்டமாக நடத்த, ஒத்தக் கருத்துடையவர்களை ஒருங்கிணைத்து, உரிமைப் போராட்டத்தினை நடத்திட விழைவோம் என்பது உறுதி!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
13.12.2025

செவ்வாய், 18 நவம்பர், 2025

நாடு பழைய பார்ப்பனீய – வருணாசிரம திசைநோக்கித் தள்ளப்படுகிறதா?


ஆசிரியர் அறிக்கை
*இந்தியாவின் நவீன தொழிலாளர் கொள்கை பாரம்பரிய, மனுஸ்மிருதி முதலியவற்றின் சாரமாம்!

* பிறவியிலேயே தொழிலாளர்களாகவும், சம்பளமின்றி ‘‘பிராமணனுக்குப்’’ பணி செய்யவேண்டும் என்பதுதான் நவீன தொழிலாளர் கொள்கையா  தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

‘‘நவீன தொழிலாளர் கொள்கை’’ என்பது, பழம்பெரும் சாஸ்திரங்களையொட்டி உருவாக்கப்படுவதாக ஒன்றிய அரசு கூறுவது – நாட்டை பழைய பார்ப்பனீய வருணாசிரம திசை நோக்கித் தள்ளப்படுவதாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எச்சரித்து அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

வன்மையான கண்டனத்திற்குரியதாகும்!

ஒன்றியத்தில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.– பா.ஜ.க. அரசு – தாங்கள் பதவியேற்றபோது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி எடுத்த வாக்கு றுதிக்கு எதிர் முரணாக, நாளும் தங்களது  ‘ஹிந்துத்துவா’ கொள்கைகளை அனைவருக்கும் பொதுவான அரசின் நடைமுறை சட்டத் திட்டங்களாக்கி, நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமும் செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றிய அரசையும், அதே கட்சி – கூட்டணியைச் சார்ந்த மாநில (ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.) அரசுகளையும் ஹிந்துராஷ்டிர அரசுகளாகவே கருதி, நடத்தி வருவது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரி யதாகும்!

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு போன்ற நடவடிக்கை களுக்குப் பிரதமர், நிதியமைச்சர் போன்ற வர்கள் ‘தீபாவளிப் பரிசு’ என்று கூறி, ஹிந்துத்துவா கொள்கைத் திணிப்புகளைச் செய்கின்றனர்.

‘தீபாவளி என்பது ஒரு மதப் பண்டிகை. மற்ற மதக்காரர்களும் மதங்களை ஏற்காதவர்களும்கூட நாட்டில் உள்ள குடிமக்கள் என்கிறபோது, ஒரே மதம் (ஹிந்து மதம்), ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கலாச்சாரம் (ஆரிய, வேத ஸநாதன கலாச்சாரம்) என்பதைத்தான் ‘ஆரிய ஆட்சியாகவே’ நடைமுறைப்படுத்தி வருகின்றனர்!

ஒன்றிய தொழிலாளர் நலத் துறையின் அதிர்ச்சியூட்டக்கூடிய ஆணை!

இப்போது ஓர் அதிர்ச்சியூட்டக்கூடிய ஆணை – திட்டம் – ஒன்றிய தொழிலாளர் நலத் துறையில் வெளியிடப்பட்டுள்ளது!

‘‘பழைமை ஆவணங்களான மனுஸ்மிருதி, யக்ஞ வல்கிய ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி, சுக்ர நீதி, அர்த்த சாஸ்திரம் ஆகியவை அரசு நீதி குறித்து வலுவாகக் கூறியுள்ளன.

நீதி, நியாயமான ஊதியம், சுரண்டலிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை உத்தரவாதப்படுத்துவதில், ஆள்வோரின் கடமை என்னவென்பதுபற்றி அவற்றில் கூறப்பட்டுள்ளன.

நவீன தொழிலாளர் சட்டங்கள் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, உழைப்பை நிர்வகிக்கும் இத்தகைய கோட்பாடுகள் இந்திய நாகரிகத்தின் உருவாக்கத்தில் வலுவான அடிப்படை அம்சங்கள் உள்ளன.

இந்தியாவின் பாரம்பரிய புரிதல் என்னவெனில், ‘‘உழைப்பு என்பது வாழ்வாதாரத் தேவை மட்டுமல்ல; சமூக ஒற்றுமையையும், கூட்டு முன்னேற்றத்தையும் நிலை நிறுத்த உதவும் ‘புனிதமான’ மற்றும் தார்மீக அம்சமும் கொண்டது’’ என்று கூறும் இந்த வரைவுக் கொள்கை, இத்தகைய பாரம்பரிய ஆவணங்களிலிருந்து உத்வேகம் பெறுவதாகவும், இத்தகைய கொள்கைகள் முற்றிலும் நவீன தொழிலாளர் கொள்கைகளுடன் இசைந்துள்ளதாகவும் கூறுகின்றது.

‘சூத்திரர்கள்’ என்பதற்கு ஏழு வகைப் பிரிவு மனுஸ்மிருதியில்!

‘‘தார்மீகம்’’, ‘‘புனிதம்’’ போன்ற வார்த்தைகள் – மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் முதலிய வர்ணாஸ்ரம தரும – பிறவி ஜாதி அடிப்படையில் உழைக்கும் வர்க்கமான மக்களைக் ‘‘கீழ்ஜாதி’’யாக்கி, அவர்களைப் பிறவி ‘‘அடிமை வகுப்புகளாக’’ – டாக்டர் அம்பேத்கர் மொழியில் கூறவேண்டுமானால் Servile Classes என்று தாழ்வுபடுத்தி, அதிலிருந்து மீள முடியாதவர்களாக, படிக்கும் உரிமை, திருமண உரிமை, சொத்துரிமை, சுதந்திர வாழ்வுரிமை அற்றவர்களாக்கி வைத்ததோடு, ‘சூத்திரர்கள்’ என்பதற்கு ஏழு வகைப் பிரிவு என்று மனுஸ்மிருதி சுலோகம் 410, அத்தியாயம் 8 கூறுவது என்ன?

‘‘அரசன் வைசியனை வர்த்தகம் வட்டி வாங்கு தல், பயிரிடுதல், பசுவைக் காப்பாற்றல் இவை களையும், சூத்திரனை துவிஜாதிகளுக்குப் பணி விடையுஞ் செய்யச் சொல்லவேண்டியது. அப்படிச் செய்யாவிடில் அவர்களைத் தண்டிக்க’’

என்று கூறியுள்ளது.

அசல் மனுதர்மத்தின் மற்ற சுலோகங்கள் இதோ!

இதுவே அப்படியே, ‘‘அர்த்தசாஸ்திரம்’’ என்ற ஆரிய நூலிலும்!

இந்தக் கொள்கையை நாட்டில் உள்ள தொழிலாளர் வர்க்கம் தனது சட்டத் திட்டங்களாக ஏற்றால் என்ன நிலை ஏற்படும்?

சுலோகம் 413, அத்தியாயம் 8

‘‘பிராமணன் சம்பளங்கொடுத்தேனும் கொடாம லேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். ஏனெனில், அவன் பிராமணன் வேலைக்காகவே பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான் அல்லவா!’’

சுலோகம் 414, அத்தியாயம் 8

‘‘சூத்திரன் யஜமானானால், வேலையினின்று நீக்கப்பட்டிருந்தாலும், அந்த வேலையானது அவனை விட்டு நீங்காது. இம்மைக்கும், மறு மைக்கும் உபயோகமாக அவனுடன் பிறந்த அந்த வேலையை எவன் தான் நீக்குவன். ஆதலால், அவன் மறுமைக்காகவும், பிராமண சிசுருைஷ செய்யவேண்டியது.’’

சுலோகம் 415, அத்தியாயம் 8

‘‘யுத்தத்தில் ஜெயித்துக்கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன், என தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.’’

சுலோகம் 416, அத்தியாயம் 8

‘‘மனையாள், பிள்ளை, வேலைக்காரன் இவர்க ளுக்குப் பொருளில் சுவாதீநமில்லை. இவர்கள் எப்பொருளைச் சம்பாதித்தாலும் அவைகள் அவர்களின் எஜமாநனையே சாரும். அதாவது யஜமான் உத்தரவின்றி தரும விஷயத்திற்கும் தங்கள் பொருளை செலவழிக்கக் கூடாதென்று கருத்து.’’

சுலோகம் 417, அத்தியாயம் 8

‘‘பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை  வலிமையாலும் எடுத்துக் கொள்ள லாம். யஜமாநனெடுத்துக் கொள்ளத்தக்க பொரு ளையுடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரரல்ல.’’

இதுதான் இனி ஒன்றிய அரசின் தொழிலாளர் துறை கொள்கையாக அமையப் போகிறதா? (இதுபற்றி நேற்று (16.11.2025) மார்க்சிஸ்ட் நாளேடான ‘தீக்கதிர்’ ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது).

நாடு பழைய பார்ப்பனீய வருணாசிரம திசை நோக்கி தள்ளப்படுகிறதா?

கடுமையாக எதிர்க்க முன்வருவது
அவசர, அவசியமாகும்!

இதனை முளையிலேயே கிள்ளி எறிய முன்வர வேண்டும்.

நாடெங்கும் அனைவரும் தக்க விழிப்புணர்வுடன் இருந்து, தமிழ்நாடு அரசும், அதன் தொழிலாளர் அமைப்புகளும் கடுமையாக எதிர்க்க முன்வருவது அவசர, அவசியமாகும்!

 கி.வீரமணி
  தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
17.11.2025